Thursday, October 30, 2008

கந்த சஷ்டி 2: சிந்தனை செய் மனமே! திருத்தணிகை!

அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே!
இது அம்பிகாபதியின் 100-வது பாட்டு; ஆனால் மற்றவர்க்கு இது 99-வது பாட்டு!

ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!

செந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,
செந்தில் கந்த-னை,
வானவர் காவல-னை,
குக-னை, சிந்த-னை......
செய் மனமே!

படம்: அம்பிகாபதி
குரல்: டி எம் எஸ்
இசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)
வரிகள்: பாபனாசம் சிவன் ? / KD சந்தானம் ?
ராகம்: கல்யாணி


பாடலை இங்கு கேளுங்கள்!

சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!


செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!



அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று பாடுகிறான் அம்பிகாபதி். ஆனால் அவன் காதலுக்கும் உயிருக்கும் உலை வைக்க, அதோ அந்தகன் வரப் போகிறான் என்று அறியாது பாடுகிறான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் இந்தப் பாட்டுக்கு! ஆரம்பத்தில் மெல்லிதாகத் தொடங்கும் பாடல், இறுதியில் உச்சத்துக்குச் செல்லும் போது, அவரும் நரம்பு புடைக்கப் பாடுவது போல், அப்படியே வாயசைப்பார்.

காதலியான அமராவதி, பாடல் முடிந்ததும் எழுந்து ஓடோடி வர,
பக்திப் பாடல் ஒரே நிமிடத்தில் காதலாகி விடும்! :)

சரவண பவ குகனை, சிந்தனை செய் மனமே என்பது மாறி, சற்றே சரிந்த குழலே அசைய-ன்னு பப்ளிக்கா அமராவதி வர்ணனை ஆகிவிடும்.
பொறுக்குமா ஆசார சீலர், கவிப் பேரேறு, ஒட்டக் கூத்தருக்கு? ஏற்கனவே கம்பன் என்றாலே அவருக்கு ஆகவே ஆகாது! போதாதா?
கம்பன்-ஒட்டக் கூத்தர் பிணக்கு பற்றி தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்கின்றன? உம்.... படிக்க வேண்டும்!
இருவர் சமயமும் வேறு! கொள்கைகளும் வேறு! ஆனால் தமிழால் ஒன்றுபட முடியாதா? சமயம் வேறானால் நட்பும் வேறாமோ? கொள்கை மாறானால் நட்பும் மாறாமோ?

இத்தனைக்கும் ஒட்டக் கூத்தர் சாதாரணமானவர் அல்ல! பெரும் புலவர்!
வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண் பாவிற்கு கம்பன் என்றால், உலாவுக்கு ஒரு கூத்தன்! தேவியின் அருள் பெற்றவர். சைவச் செம்மல். குலோத்துங்கனின் அந்தரங்க மதிப்புக்கு ஆளானவர்! ஆனால் பொது மக்கள் மதிப்பில் குறைந்தது ஏன் என்று தான் தெரியவில்லை!

கம்பனைத் தாண்டி, அவர் மகன் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான காதல் மீதும், வெறுப்பு கொள்ளும் அளவிற்கு என்ன அப்படியொரு பகையுணர்ச்சி?
ஹூம்...தமிழ் வளரவாவது, தமிழன் தமிழனோடு ஒற்றுமை கொள்ளும் நாள் எந்நாளோ? தமிழ்க் கடவுளே! முருகா!

சரி, நாம் முருகனுக்கு வருவோம்! சிந்தனை செய் மனமே அருமையான கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது! ஜனனீ ஜனனீ-யும் அதே ராகம் தான்! அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே-வும் கல்யாணி தான்!

பாட்டிலிருந்து சில கேள்விகள், வாசகர்களுக்கு!
1. முருகனை தேசிகன் என்று ஏன் அழைக்க வேண்டும்?
2. சந்ததம் மூவாசை என்றால் என்ன?
3. இராமாயணத்தில் குகன் இருக்கான். முருகனைக் குகன் என்பதன் பொருள் என்ன?



இன்றைய படைவீட்டுத் தகவல்கள் - திருத்தணிகை!

* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.
இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!

அந்தக் குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை!
திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
"பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!


ஆனால் உபன்னியாசகர்களும், மற்ற புலவர் பெருமக்களும், சினம் தணிந்த கதையின் காரணமாகத், தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர். நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்! குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்! ஆனா நாம் தான் வாய்மையை விட்டுவிட்டு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொள்வோமே! எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)

திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)

குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :)
பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!


* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்!
ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே!
ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(

அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,
இங்கு வந்து தான்,
நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,
வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!

களவு மணமாவது? கற்பு மணமாவது?
களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!

வாரியார் சுவாமிகள் பின்னாளில் தன் பேருரைகளில் எல்லாம் இதைத் தொட்டுச் செல்வார். இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!

வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்!
சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!


* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே! தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா! இங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது! சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர்! ஆனால் தணிகையே தனித்து நின்றது! வென்றது! :)

இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று சொல்வது தணிகை ஸ்தல புராணம்!

* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்! உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!

* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்!
முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!

அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி!
அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! தியாகராஜர் கீர்த்தனைகளில் எளிமையும் உணர்ச்சியும் இருக்கும் என்றால், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளில் சொற்செட்டும், சந்தமும் மின்னும்!

சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல!

* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!

* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது! மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு!
சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்!
ஆனால் முடியவில்லை! ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!

* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!

* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:
- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,
- எத்தனை கலாதி,
- சினத்தவர் முடிக்கும்,
- அதிரும் கழல் (குன்று தோறாடல்)

திருத்தணி முருகப் பெருமானும்-தேவியரும்! (மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)


புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே!
- முருகா!


* பதிவர் தி.ரா.ச அவர்கள் திருத்தணி முருகன் மீது அன்பு கொண்டவர்!
இன்று (Oct-31,2008) அவர் மகளுக்குச் சென்னையில் திருமண விழா!
மணமக்களை, நீங்காத செல்வம் நிறைந்தேலோ என்று வாழ்த்தி,
திருத்தணிகை முருகப் பெருமானை வேண்டுவோம்!

Wednesday, October 29, 2008

கந்த சஷ்டி 1: வருவான்டி தருவான்டி மலையாண்டி! பழமுதிர்சோலை!

இந்த ஆண்டு கந்த சஷ்டியின் போது, முருகனருள் வலைப்பூவில் என்ன பார்க்கலாம்? வெறும் பாடல்கள் மட்டும் தானா? ஒவ்வொரு படைவீட்டிலும் மறைமுகமான சில ரகசியங்களைக் கூடவே பார்க்கலாமா? தீபாவளிப் பட்டாசு வெடித்த கையோடு, இப்படி எல்லாம் ஒரு ரகசியமா? தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு மக்கா?

ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி-அமாவாசை முடிந்து முதல் நாள் அன்று துவங்குவது கந்த சஷ்டி! மொத்தம் ஆறு நாட்கள்!
* ஆறு படை வீடுகளில் படையுடன் தங்குகிறான் முருகன்!
* பின்னர் ஆறு நாட்கள் கடும் போர்!
* இறுதி நாள் சூரசங்காரம்!
தீமையை அழித்து நல்லன காத்தல்! வெறும் இவ்வளவு தானா இந்த சஷ்டி?

ஆற்றுப்படை கேள்விப்பட்டு இருப்பீங்க! நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் கேள்விப்பட்டு இருப்பீங்க! ஆறு=வழி! வழி காட்டி உதவுதலை ஆற்றுப்படை-ன்னு சொல்லுவது மரபு. வறுமையில் வாடும் புலவர்களுக்கு, ஏற்கனவே பரிசில் பெற்ற புலவர்கள், நல்ல வழி சொல்வது போல் இருக்கும் ஆற்றுப்படைப் பாடல்களின் அமைப்பு.

இந்த ஊர் மன்னன் நல்ல வள்ளல், அந்த ஊர் மன்னன் கலைகளின் ரசிகன் என்றெல்லாம் சொல்லி வழிகாட்டுதல் ஆற்றுப்படை.
இந்தப் பதிவர் ரொம்ப நல்லவரு! அவரு எவ்வளவு அடிச்சாலும் அழுவ மாட்டாரு, இவரு பின்னூட்ட வள்ளல்-ன்னு எல்லாம் நாம ஆற்றுப்படுத்தறோம் இல்லையா? சுட்டி கொடுத்து வலைச்சரம் எல்லாம் கட்டுறோம் இல்லையா? அது போல-ன்னு வச்சுக்குங்களேன்! :)

தான் மட்டுமே நல்லா இருக்கணும் என்று நினைக்காது, அடுத்தவருக்கும் செல்வம் பெறும் வழியைக் காட்டிக் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவினார்கள் தமிழ்ப் புலவர்கள்! பொருநர் ஆற்றுப்படை, சிற்பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எல்லாம் சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்கள்.

பழமுதிர் சோலை நாவல் மரம்


சரி, முருகு-ஆற்றுப்படை எதற்கு?
நக்கீரர் தமிழ் இலக்கியப் புரட்சியாளர். ஒரு நல்ல ஆன்மீகப் பதிவர் :)
எல்லாரும் அரசன், வள்ளல் என்று தான் ஆற்றுப்படை நூற்களைச் செய்தார்கள். தான் மட்டும் வித்தியாசமாகச் செய்ய நினைத்தார்.

அகம்-புறம் என்பது தான் அப்போதைய தமிழ் இலக்கிய முறை! இறை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வந்து போகுமே தவிர, முழு நூலும் இறையருள் பாற்பட்டதாய் இருக்காது!
எல்லாரும் சினிமா, கலை, கதை, காதல், போர்-ன்னு எழுதும் போது, இவர் மட்டும் ஆன்மீகத்தை நுழைத்தால்? :)

என்னைப் பொறுத்தவரை முதல் ஆன்மீகப் பதிவர் என்பது எங்கள் ஆசான் நக்கீரரே! :)
முருகு ஆற்றுப் படை என்று தைரியமாகப் பதிந்து, புதிய வழி காட்டினார் பதிவுலகிற்கு!

எதுக்கு வழி காட்டணும்? = செல்வத்துக்கு வழி காட்டணும்!
செல்வம் இருக்கும் இடத்துக்கு மட்டும் வழிகாட்டினால் போதுமா?
அங்கே கஷ்டப்பட்டு, அலைந்து திரிந்து, போன பின்பு, செல்வம் தர முடியாது போ-என்று அந்த மன்னன் சொல்லி விட்டால்? இல்லை...ஒப்புக்கு ஏதோ ஒரு சிறு செல்வத்தை மட்டும் அவன் அளித்து விட்டால்?

தேவியருடன், பழமுதிர் சோலை முருகப் பெருமான்


செல்வத்துள் செல்வம் அருட் செல்வம்!
அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும்
செல்வச் செவிலியால் உண்டு
- என்பது குறள்.
* அருள்பவன் யார்? = யாரையும் அழிக்க நினைக்காதவன். கருணையால் ஆட்கொள்பவன்!
* அழிவில்லாத செல்வம் எது? = தெய்வத்-திரு-அருள்
* எந்தவொரு சூழ்நிலையிலும் தரமாட்டேன் என்று சொல்லாதவன் யார்? = வள்ளியின் வள்ளல்! முருகப் பெருமான்!

அவனிடம் நம்மை ஆற்றுப்படுத்துகிறார் நக்கீரர்! அவன் இருக்கும் ஒவ்வொரு படைவீடாகச் சொல்லி, நம்மைச் சென்று சேர்பிக்கிறார் நக்கீரர்!
அட, நம்மைச் சேர்ப்பிக்க இவர் யாருங்க நடுவுல? நல்ல கேள்வி!

ஆற்றுப்படையின் இலக்கணம் என்ன? ஏற்கனவே பரிசு பெற்றவன், இன்னொருவனுக்கு அந்த அரசனைக் காட்டி வழி சொல்லுவது! நக்கீரர் ஏற்கனவே பரிசு பெற்றவர்! அதான் அதை நமக்கும் சொல்லி நம்மையும் அவனிடம் ஆற்றுப்படுத்துகிறார்!
நக்கீரரும் முருகனும்


கார்க்கிமுகி என்னும் கொடும் பூதம் ஏற்கனவே 999 புலவர்களைப் பிடித்து அடைத்து வைத்தது; ஆயிரமாவது ஆளாக நக்கீரரையும் பிடித்துக் கொண்டது!
ஆலமரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்த நக்கீரர் முன்னால், வித்தியாசமான இலை ஒன்று விழுகிறது! அதுவும் பாதி இலை நீரில், மீதி மண்ணில்!

நீரின் இலை மீனாகவும், மண்ணின் இலை பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்க, இது என்ன அதிசயம் என்ற ஆவலில், பார்க்கிறார் நக்கீரர்! தவம் கலையும் சமயமாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டது பூதம்!
உள்ளே இருக்கும் ஏனைய 999 பேர்களும், ஆயிரமாவது ஆளும் மாட்டிக் கொண்டாரே, இனி மொத்தமாக அழிந்தோம் என்று பயத்தில் நடு நடுங்க, அவர்களை ஆற்றுப்படுத்தி முருகனை நோக்கிப் பாடுகிறார் நக்கீரர்.

தன்னுயிர் காப்பதற்காக இல்லாது, இவர்களை ஆற்றுப்படுத்தவாவது உன்னை நிலைநாட்டிக் கொள் முருகா என்று இறைவனை வேண்ட, முருகனும் பூதத்தை அழித்து அனைவரையும் விடுவித்து அருள்கிறான்.

கந்த சஷ்டியின் போது, ஆறு நாட்களும், ஒவ்வொரு படைவீட்டின் சில ரகசியங்களைப் பார்ப்போமா? இன்று பழமுதிர்சோலை! அதுக்கு முன்னால் இன்றைய பாட்டு!


பழமுதிர் சோலை ஆலய ஓவியம்


வருவான்டி தருவான்டி மலையாண்டி...
ஒவ்வொரு வரியும், டி,டி என்றே முடியும்! டகு டகு டிகு டிகு என்று மணியோசை போலவே! எல்லாம் கண்ணதாசன் கைவண்ணம்!
பாடலை இங்கு கேளுங்கள்! கீழே காணுங்கள்! பாடலின் நடுவே (செட் போட்டு எடுக்கப்பட்ட) பழனியாண்டவர் அபிடேகக் காட்சியும் காணத் தவறாதீர்கள்!


* சூலமங்கலம் ராஜலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகளுள் ஒருவர். கந்த சஷ்டி கவசம் ஒலிப் பேழைகள் எத்தனையோ வந்த போதும், முதலில் வந்த சூலமங்கலம் பாட்டு போல வருமா? திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்று பாடுவதும் இவரே, சுசீலாம்மாவோடு!

* M.R விஜயா திரைப்படப் பின்னணிப் பாடகி என்பதை விட, தெய்வீக இசைப் பாடகி என்பதே பொருத்தம். பட்டீஸ்வரம் துர்கை மீது இவர் பாடும் தொகுப்பு, மணமாகாத பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்! மதுரை அரசாளும் மீனாட்சி என்று பாடுவதும் இவரே!

படம்: தெய்வம்
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி - M.R விஜயா


வருவான்டி தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி - அவன்
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி - அவன் தான்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சிவனாண்டி மகனாகப் பிறந்தான்டி - அன்று
சினம் கொண்டு மலை மீது அமர்ந்தான்டி
நவலோக மணியாக நின்றான்டி - என்றும்
நடமாடும் துணையாக அமைந்தான்டி - அவன் தான்டி,
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

பாலபி ஷேகங்கள் கேட்பான்டி - சுவை
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி
காலாற மலை ஏற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று - சொல்லி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சித்தர்கள் சீடர்கள் பல கோடி - அவன்
செல்வாக்கு எவற்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப் புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!


பழமுதிர் சோலை ஆலயம்


படைவீட்டின் சில ரகசியங்களைப் பார்ப்போமா? இன்று பழமுதிர் சோலை!

* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார்.

* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!

* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்கள் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!

* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!

* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!

* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!

* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே! மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!
சோலைமலை, அழகர் கோயில்!


* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்! இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?

* அகரமும் ஆகி அதிபனும் ஆகி, சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் = போன்ற புகழ்மிக்க திருப்புகழ்கள், பழமுதிர்சோலை மீதே!

இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே!
திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!
இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!

முருகா!

Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்:

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!



கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

திருப்பரங்குன்ற வேலா........

திருத்தணி முருகனுக்கு அரோஹரா ஆறுபடை முருகனுக்கு அரோஹரா


இன்று கிருத்திகைத் திருநாள். முருகனை வணங்க வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி.ஆறுபடை வீடுகளையும் விருத்தத்திலும் பாட்டிலும் கொண்ட அருமையாண பாடல்.ஹிந்தோள ராகத்தில் திருமதி. அருணா சாயிராமின் குரலில் ஒலிக்கிறது.எத்தனை கிருத்திகை வந்தாலும் எத்தனை பாடல்கள் முருகன் மீது இட்டாலும் எனக்கு அலுக்கவே இல்லை படிப்போருக்கும் கேட்பவருக்கும் அப்படித்தான் இருக்கும் எண்ணத்தில் இடுகிறேன்.அடுத்தது ஸ்கந்த ஷஷ்டியில் பார்க்கலாம்.முருகன் அருள் முன்னிற்கும்

ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி

விருத்தம்

திருச்செந்தூர் சீரலை வாழ் தேவா போற்றி
திருப்பழனியிலிருக்கும் தேவா போற்றி
திருவேரகத்து சாமிநாதா போற்றி
திருத்தணி முதல் மலைகள் திகழ்வாய் போற்றி
தேன்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி
திருப்பொலிய உலகாளும் செம்மா போற்றி
செந்தமிழ் தெய்வமே போற்றி
ஆறுபடைகொண்ட திரு முருகா போற்றி போற்றி.

பல்லவி

திருப்பரங்குன்ற வேலா... சீர்மிகும்
திருஆலவாய் பரசிவனோடு அங்கயற்கண்ணி கொஞ்சி முத்தாடும் பாலா...(திரு....)

அனுபல்லவி

விருப்புடன் விண்ணோர்க்கும் கிடைத்தரும் தீந்தமிழ் திருப்புகழ்
தமிழ் திருப்புகழ் நின் திருப்புகழ் பாட திருவருள் தா பாலா(திரு....)

சரணம்

அமரர் முனிவரும் மெய்யடியவரும் வணங்கி
வாராய் குமரா குமரா என்று துதிக்க
கோயில் கொண்ட (திரு....)



-

Saturday, September 20, 2008

தாமதம் தகாதய்யா தமியேனைக் காக்க

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

இன்று கிருத்திகைத் திருநாள்.முருகனுக்கு உகந்த நாள். போனமாதம் ஊரில் இல்லாததால் விட்டுப்போய் விட்டது. அவன் அருள் இல்லாமல் அவனை வணங்கமுடியுமா என்ன? தமாதம் தகாதைய்யா என்றஒரு அருமையான் தமிழ்ப்பாடல் முருகன் மீது உண்டு. இதனை இயற்றியவர் திரு.லால்குடி ஜெயராமனின் தந்தை திரு. லால்குடி கோபலய்யர் அவர்கள்.இன்று இந்த மோஹன கல்யாணி ராகப் பாடல் திருமதி. மும்பை ஜெயஸ்ரீயின் குரலில் பார்த்து கேட்டு ரசிக்கலாம்.பாடலைக்கேட்கும் /பார்க்கும் போதே முருகனுக்கு நடக்கும் அபிஷேகம், அலங்காரம்,மற்றும் தீபராதனையும் கண்டு வணங்கலாம் வாருங்கள்
ராகம் : மோஹன கல்யாணி
பல்லவி
தாமதம் தகாதைய்யா
தயாபரா துணை முருகய்யா (தாமதம்...)
அனுபல்லவி
தாமச குண தீனனான
தமியேனை ஆள தருணமீதைய்யா ( தாமதம்.....)
சரணம்
மாலும் அயனும் காணா மஹாதேவன்மைந்தா
மாது வள்ளி தேவமாது மகிழ் கந்தா
வேலும் மயிலும் எந்நாளும் என்னைக் காக்கவே
வேவேகமாகவே வரும் வரம் தாரும் (தாமதம்.....)




Sunday, September 14, 2008

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி


இந்தப் பாடல் திரைப்படத்தில் வந்த பாடலாம். எழுதியவர் யாரென்று தெரியவில்லை. இசையமைத்தவரும் பாடியவர்களும் நன்கு செய்திருக்கிறார்கள். கேட்டுப் பாருங்கள்.








கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை (கண்ட)

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை (கண்ட)

நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரர் மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்
குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டிவிட்டார் (கண்ட)



திரைப்படம்: கண்ட நாள் முதல்
வெளிவந்த வருடம்: 2005
பாடியவர்கள்: பூஜா, சுபிக்ஷா
இசை: யுவன் சங்கர் ராஜா

Wednesday, September 03, 2008

எனக்கும் இடம் உண்டு



c
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

எனக்கும் இடம் உண்டு

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்
அருள் கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

எனக்கும் இடம் உண்டு

ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

எனக்கும் இடம் உண்டு

Monday, September 01, 2008

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்....!



கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
- கற்பனை என்றாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்

பாடியவர்: டி.எம்.எஸ்

Saturday, August 09, 2008

கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு

வலையுலகின் சண்மதச் செல்வரும் வைணவ வாரியாருமாகிய திரு கே.ஆர்.எஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆகையால் நாம் அனைவரும் கூடி அவரை வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். முருகனருள் இனிதே அமைய வணங்குவோம்.

முன்பொருமுறை காவடிச் சிந்து எழுதி அதை அன்பர்களைப் பாடித்தரச் சொல்லிக் கேட்டிருந்த போது கே.ஆர்.எஸ் பாடியனுப்பியிருந்தார். அந்தப் பாடலை இப்பொழுது அவருடைய பிறந்தநாள் அன்று முருகனருள் வலைப்பூவில் ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கே.ஆர்.எஸ்.

பாடலும் வரிகளும் கீழே.

Valliyai Thottu - Kannabiran Ravishankar

வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்

புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்

அன்புடன்,
ஜிரா(எ) கோ.இராகவன்

Tuesday, July 29, 2008

தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்


தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே (2)


எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே ... முருகய்யா...
அங்கம் மணக்கவில்லையே (2)

சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே ... குமரய்யா ...
சீர் மணம் வேறு இல்லையே

முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற் பொருளாகவில்லையே ... முருகய்யா ...
முதற் பொருளாகவில்லையே

சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே ... குமரய்யா ...
மெய்ப் பொருள் வேறு இல்லையே

எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆட வில்லையே ... முருகய்யா...
எண்ணத்தில் ஆட வில்லையே

மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே ... குமரய்யா ...
மற்றொரு தெய்வமில்லையே


தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே

டி.எம்.எஸ் அவர்கள் பாடிய இப்பாடலைக் கேட்டு மகிழ

Saturday, July 26, 2008

செந்தில்நகராதிபனை சிந்தை செய்வாய் மனமே தினமே.

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா



இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்








பக்தர் கூட்டமெல்லாம்"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.











ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி

பல்லவி

திருத்தணி முருகன் திருவருள் புரிவான்

திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)

அனுபல்லவி

அறுபடை வீட்டின் நாயகனே

குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)

சரணம்

குறுநகை புரிந்திடும் அருள்முகமும்

பரிவுடன் உதவும் பன்னிருகரமும்

வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்

என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)



இன்று கிருத்திகை(27/07/08). வழக்கம்போல் பதிவு முருகன் அருளால்.இன்று கேட்கப் போகும் பாடல் திரு. பாபநாசம் சிவன் அவர்களுடையது.இதைப் பாடியிருப்பவர் சிவன் அவர்களுடன் நெடுநாட்கள் வாழ்ந்து அவர்பாடல்களை எழுத்துவடிவில் வெளியிடக் காரணமானவர், அவரின் சிஷ்யருமானவர். அவர்தான் திரு செதலபதி. பாலசுப்ரமணியன்.

அப்பா முருகா உன் சோதனை சுமை விளையாட்டுக்கு இந்தா ஏழைதான் கிடைத்தேனா.உன்னுடைய பாதகமலம் மறவாத என்னுடைய பாதக மலத்தை போக்கமாட்டாயா. பதகமலம் என்ற வார்த்தையில் சொல் விளையாட்டு அபாரம்.என்னுடைய வினை உன்னுடைய அருளைக்காட்டிலும் வலிமை கொண்டதா? இரக்கமேஇல்லயா உனக்கு? வா குமரா, பலா,வேலா வந்து காப்பாய்.



ராகம்:- காபி தாளம்:- ஆதி




பல்லவி



சோதனைச் சுமைக்கிவ் வேழை ஆளா



ஸ¤ப்ரம் மண்ய தாளாச் (சோதனை)



சரணம்



பாத கமலம் மறவாத அடிமை என்பாதக மலம் அகலாதா வாதா (சோதனை)



உனதருளினும் என் வினைவலி பெரிதோ



உனக்கிரக்க மில்லையோ கந்தா வந்தாள் (சோதனை)



காம ஸம்ஹார சிவகுமரா குருபரா

ராமதாஸன் பணியும் பாலா வேலா (சோதனை)





<"திருமதி மும்பை ஜெயச்ரீ குரலில் இங்கே கேளுங்கள்">">



திரு. பாலுவின் குரலில்">

Tuesday, July 15, 2008

100ஆம் பதிவு! பதிவர்கள் எடுக்கும் ஆறுபடைக் காவடிச் சிந்து!

முருகனருள் வலைப்பூவின் நூறாவது பதிவிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி முருகனருள் வலைப்பூக் குழுவின் சார்பில் வரவேற்கிறேன்.

என்றைக்குமே தமிழ் என்றாலே முன்னால் நிற்பது முருகனே. பிரெஞ்சு லாத்தீன் மொழிகளை விடுங்கள். ஏன் கன்னடக் கடவுள் என்றோ தெலுங்கு தேவுடு என்றோ பெங்காலி பகவான் என்றோ அஸ்ஸாமி ஆண்டவன் என்றோ இல்லையென்று யோசித்தீர்களா? அவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கையே இல்லையென்றா பொருள்? இல்லையே. அப்படியிருக்க முருகனை மட்டும் ஏன் தமிழ்க் கடவுள் என்று சிறப்பு அடைமொழி கொடுத்து தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கின்றார்கள்?

வெறுமனே தமிழர் வணங்கும் கடவுளாக மட்டும் இல்லாமல் தமிழாக நின்ற தனிப்பெருங்கருணை முருகப் பெருமான். அதாவது தமிழன் தான் வணங்கும் கடவுளை மொழியின் வடிவமாகவே கண்டதன் விளைவு முருகப்பெருமானுக்குத் தமிழ்க் கடவுள் பட்டத்தைத் தந்துள்ளது. அது பெயரிலேயே தெரியும். முருகு என்று மூன்றெழுத்து. அதில் மகரம் என்ற மெல்லினத்தில் தொடங்கி ரகரம் என்ற இடையினத்தை நடுவில் வைத்து ககரம் என்ற வல்லினத்தில் முடிகின்றது பெயர். இப்படி எழுத்துக்களின் மூன்று இனத்தை வைத்துச் சொன்ன பெயருக்குப் பொருள் "குன்றாத இளமை".

அப்படியிருக்கும் பொழுது... தமிழில் வலைப்பூக்கள் எழுதத் தொடங்கிய வேளையில் முன்னின்றது எதுவாக இருந்திருக்கும்? முருகனருள் முன்னிற்கும். ஆம். முதன்முதலில் தமிழில் எழுந்தது முருகனருள் வலைப்பூவே.

வாரியார் சுவாமிகள் சொன்ன கதையொன்று நினைவிற்கு வருகிறது. அறுவை சிகிச்சையில் நிபுணர் அவர். மகப்பேறு மருத்துவத்தில் சிறந்தவர் அவரது மனைவி. இருவருக்கும் பிறந்தது ஒரு குழந்தை. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியைக் கொஞ்சிக் கொண்டாடுவதில் பொழுது பறந்தது. அப்பொழுது மகளை மடியில் வைத்து அப்பா கேட்டார். "செல்லம். கண்ணெங்கே?" சிரித்துக் கொண்டே கண்ணைத் தொட்டுக் காட்டியது குழந்தை. இப்பொழுது அம்மா கேட்டாள். "தங்கம்...மூக்கெங்கே?" கிணிகிணியென்று சிரித்து விட்டு மூக்கைத் தொட்டுக் காட்டியது மகளின் பிஞ்சுக் கை. மறுபடியும் அப்பா கேட்டார். "வைரம். வாய் எங்க இருக்கு?" பறக்கும் முத்தம் கொடுப்பது போல வாயைத் தொட்டுக் காட்டினாள் மகள். உடலைத் திறந்து மூடிச் சரி செய்யும் அறுவை சிகிச்சையாளருக்காத் தெரியாது சிமிட்டும் கண்ணெங்கே என்று! குழந்தை கருவாகி அதன் ஒவ்வொரு அங்கங்களும் உருவாகி..நல்லதொரு பொழுதாகிப் பிறப்பது எப்படியென்று தெரிந்து அதற்கு மருத்துவமும் பார்க்கும் அம்மைக்கா தெரியாது நாசி எதென்று! அனைத்தும் அறிந்தும் மகவின் வாயில் அதைச் சொல்லிக் கேட்பதில் எத்தனையெத்தனை ஆனந்தம். மகிழ்ச்சி. "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கட் மழலை சொல் கேளாதவர்" என்றாரே வள்ளுவர்.

இந்த நிலை அருணகிரிக்கும் வந்தது. கணிகையரைக் கட்டிலில் கூடும் பணியே பணி என்றிருந்த நிலை மாறி முருகனருள் கிட்டிய பிறது பாடச் சொல்கிறார் முருகன். முத்துமுத்தாகப் பாடச் சொல்கிறார். திருப்புகழ் பிறக்கிறது. அப்படி அருணகிரி வாயில் திருப்புகழ் கேட்டு மகிழ்ந்த முருகன் எங்கள் வழியாகப் பதிவுகள் காண விரும்பினான் போலும். எது எப்படியானாலும் "யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

இந்த முயற்சியை முன்னின்று தொடங்கிய சிறப்பு நாமக்கல் சிபியையே சேரும். 9-12-2006ல் மூன்று பாடல்களைப் பதிந்து முருகனருள் வலைப்பூ முருகன் பாடல்களை தமிழன்பர்களிடன் கொண்டு செல்லத் தொடங்கியது. விநாயகனை வணங்கிய சிபி, சொல்லாத நாளில்லைச் சுடர்மிகு வடிவேலா என்று பதிந்தார். பின்னாலேயே தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி. அதைத் தருவதுதான் முருகா உன் சந்நதி என்று ஜிரா தொடர்ந்தார். ஊர் கூடித்தானே தேர் இழுபடும். குமரன், கே.ஆர்.எஸ், தி.ரா.ச, சுப்பையா ஐயா, வி.எஸ்.கே என்று ஊரும் கூடியது. தேரும் ஓடியது.

நூறு பதிவுதான் இலக்கா? இந்தக் கேள்விக்கு விடை "இல்லை". எண்ணிக் கைகூடிச் செய்யும் இந்தச் செயலில் எண்ணிக்கை கூடுவதில் மகிழ்ச்சியே என்றாலும் எல்லாப் பதிவுகளும் ஒரே தரத்தில்தான் எண்ணப்படுகின்றன. ஆனாலும் ஏன் இந்தப் பதிவு? எல்லா நாளும் நல்லநாள் என்றாலும் நடுநடுவே திருநாள் என்றால் கொண்டாட்டம் தானே. அதற்காகத்தான். (எல்லாம் ஒரு வெளம்பரந்தான்)

சரி. நூறாவது பதிவு. அதற்கு என்ன செய்ய வேண்டும்... அட.. என்ன செய்தோம் என்பதைக் கே.ஆர்.எஸ் தொடர்வார்.



நன்றி ராகவா!...

காவடி-ன்னா என்னாங்க? அட, காவடி பல பேருக்குத் தெரியும்! ஆனால் எத்தனை பேர் காவடி எடுத்திருக்கீங்க? உம்...ஹூம்...ஹூஹூம்....

சரி, பரவாயில்லை! இவ்வளவு நாள் முருகனருளை வாயினால் மட்டுமே பேசி மகிழ்ந்தோம்! முருகனருள்-100ஆம் இடுகையில், பதிவர்கள் அத்தனை பேரும் ஒன்றாய்ச் சேர்ந்து காவடி எடுப்போம் வாரீகளா?

முருகனருள் குழு-வலைப்பூவின் அன்புப் பதிவர்கள் பலர். இன்று அவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு காவடிச் சிந்தினைப் பாடித் துதிக்கப் போகிறார்கள்!

முருகனருள்-100 மகிழ்ச்சியில், ஆறுபடை முருகன்களும் ஒரே வரைபடத்தில் கிடைப்பார்களா? என்று கூகுள் இமேஜில் தேடத் துவங்கினேன்!
"ஆறு படைக்கு ஒரே படம் எதற்கு? ஒரே பாட்டாய் வரட்டுமே!
ஒரு படைக்கு ஒரு சிந்தாக, அறு படைச் சிந்து - எனக்குப் பாட்டாய் எழுதிக் கொடுடா கேஆரெஸ்!" - என்று கேட்டான் போலும்!

வேலன் மருங்கே இருக்க, ஒருங்கே வந்து விழுந்தன வரிகள்!
மருகன் முத்தமிழ் கொடுக்க, காவடிச் சிந்தை என் சிந்தையில் வைத்தான்!
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில், முற்பட எழுதிய முதல்வோன் தந்திடக் காவடிச் சந்தம்! அதைப் பயிலவே வேண்டாம்! பாட்டில் தானே அமைந்து விடும்!

நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள்! கால்கள் தானே ஆடுகிறாதா என்றும் பார்த்து விடுங்கள்! :-)


வாழ்க்கையின் பாரத்தை இன்முகத்துடன், பாட்டமும், ஆட்டமுமாய்ச் சுமந்து விட்டால்.....பாரம் தெரியாது! பாசம் தெரிந்து விடும்! = இது தான் காவடி!
எளிய மக்கள், மெத்தப் படித்த நமக்கு உணர்த்தும் பாடக் காவடியே பால் காவடி!

பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்! ஆண்கள்-பெண்கள் என்று பேதமில்லாமல் எல்லாரும் எடுக்கும் காவடி!
(கிராமத்தில் எடுக்கும் காவடி நிகழ்ச்சியை அப்படியே வார்த்தைகளில் தந்துள்ளேன்! அசைபடம் முயன்றோம்; உடனே கிட்டவில்லை; காவடியின் வகையைப் பொறுத்தும், அலகு குத்தல் போன்ற நேர்ச்சைகளைப் பொறுத்தும் ஊருக்கு ஊர் காவடி பூசை வேறுபடும்!)

முந்தி முந்தி வினாயகரே! முப்பத்து முக்கோடி தேவர்களே!
வந்து வந்தனஞ் சொன்னோமைய்யா! கந்தக் காவடி கொண்டோமைய்யா!


* அரசரடிப் பிள்ளையாரையும், நாக கன்னிகைகளையும், பச்சையம்மனையும், அவள் அண்ணன் மாயோன் எனும் மாயாண்டித் தேவரையும், வாமுனி-செம்முனி எனும் முனீஸ்வரனையும், சுடலைமாட சாமியையும், கம்பத்து ஆஞ்சநேயரையும், ஊர் முன்னோர்களையும் பறை அறைந்து, தீபம் காட்டிக் கும்பிட்டு...

* விரதம் இருந்து, விபூதி பூசி, செவ்வாடை-மஞ்சளாடை கட்டிக் கொண்டு, எலுமிச்சை-செவ்வரளி மாலை சூட்டிக் கொண்டு,

* நேர்ச்சை கொண்டோர் மட்டும் முருகாஆஆஆ என்று அலறி அலகு குத்திக் கொள்ள,
* மணமாகாத விடலைப் பெண்களும் விடலைப் பையன்களும், ஆடுவோர் கால்களில் சதங்கைகளைக் கட்ட,

* ஊரிலேயே பெரிய தாயி-தகப்பன் மற்றும் மணியக்காரர், பூசையில் வைத்த மயில் காவடிகளை ஆண்களுக்கும், பால் காவடிகளைப் பெண்களுக்குமாய் எடுத்துக் கொடுக்க,

* தவில் கொட்ட, நாதசுரம் முழங்க.....ரெண்டும் சேர்ந்து ஒரு சந்தத்தை மெள்ளமாய் உருவாக்க,

* எங்கள் ஆயா, கடைசிக் காவடியை எடுத்துக் கொடுத்து, அரோகரா என்று கூவ....வயதானாலும் தன் கணீர்க் குரலில் பாட்டெடுக்க.....
பச்சைக் கலைமயில் ஆட்டம் - புகழ் பாடும் அடியவர் கூட்டம்
ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா! என வருவார்
பல கோடி அருள் தேடி....

* வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தலையினால் வந்தித்து, கையினால் சுற்றி, தோளினால் ஏற்றி, காலினால் ஆடி, சுழன்றுச் சுழன்று, காவடி ஆடுவோம், வாருங்கள் நண்பர்களே! - இதோ ஆறுபடை வீட்டுக்கும் பொதுவான காவடிச் சிந்து! அருமை நண்பர்களின் குரலில்!

* என் வாசகம் - ஜீவாவின் குரலில்!
kavadi_jeeva.mp3

* ஆத்திகம் VSK ஐயா இசைப்பது!
kavadi1.mp3

* கெளசிகம் திராச ஐயாவின் சிந்திசை!
Voice recording from 07 13, 2008 12:38:42
Voice recording fr...
Hosted by eSnips

* நம் ஜிராவின் குரலில்
kavadi_ragavan.mp3

* கூடல் குமரனின் குரலில்
kavadi_kumaran_1.m...

* அடியேன், கேஆரெஸ் குரலில்....
kavadi_murugan_krs...




ஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து!

முருகன் அருளினை ஆக்கி - வலைப்
பூவினில் காவடி தூக்கி - நல்ல
அடியார் மனம் மகிழ்வா கிட, ஆசைத் தமிழ்ப் பதிவா கிட
வாராய் அருள் தாராய்!


மன்றத்தில் மாலையைச் சூடி - பரங்
குன்றத்தில்
பாவையைக் கூடி - என்றன்
மனமே அதில் மணமே புரி, வனவே டவன் வருவான் அவன்
மயிலே பூங் குயிலே!


செந்திலில் பொங்கிடும் அலைகள் - திருச்
செந்தூர்
முருகனின் கலைகள் - கந்த
வேலா னது சூரா திபன், மேலா னதைக் கூறாக் கிய
வீரா அதி தீரா!


பழனி மலைச் சிவ பாலன் - தமிழ்க்
கழனி உழும் வய லாளன் - எங்கள்
சீவனைத் திரு ஆவினன் குடி, மேவிடு மலை மாமகள் மகன்
ஆண்டி அவன் தான்டி!

சாமி மலை எனும் வீடு - பொன்னி
தாவி வரும் வயற் காடு - அங்கே
தப்பா தொரு மறையின் பொருள், அப்பா விடம் செவி ஓதிய
வேதன் சாமீ நாதன்!

வில்லிய மான் மகள் வள்ளி - அவள்
மெல்லிய தேன் இதழ்க் கிள்ளி - மங்கை
கரம் பற்றிடக் கலி கொட்டிட, மணம் உற்றிடச் சினம் விட்டிட
பணிகை திருத் தணிகை!

மாமனின் சோலையின் மீதில் - மட
மங்கையர் காதலை ஓதில் - நாவல்
படுமா மரம் அதன்மீ தினில், சுடுமோ பழம் விடுமோ என
மாலை உதிர் சோலை!

ஆறு படை களில் வீடு - அங்கு
ஆறு முகங் களில் கூடு - அந்தச்
சேவடி மயில் சேவல் கொடி, சேந்தன் தரும் சேல் காவடி
ஆடு சிந்து பாடு!
காவடி யாடு சிந்து பாடு! காவடி யாடு சிந்து பாடு!


வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரகரோகரா!



கதை இல்லாமல் நூறாம் பதிவா?

இடும்பன்! முருகனிடம் பக்தி பூண்டவன்! அகத்தியரின் மாணாக்கன்! ஆனால் குருவால் முருகனைக் காண முடிந்து, சீடனால் முருகனைக் காணவே முடியவில்லை!

அகத்தியரோ சிவகிரி-சக்திகிரி என்னும் இரு குன்றுகளைத் பொதிகையில் கொண்டு போய் தம் இருப்பிடத்தில் வைக்குமாறு அவனைப் பணித்து விட்டார்! நெடுங் கோலின் இரு முனைகளிலும் கட்டினான் குன்றுகளை! தோன்றிற்று காவடி! வந்தான் ஆவினன்குடிக்கு!

அந்த நேரம் பார்த்து அங்கேயே வருகிறான் பழத்துக்குச் சினங் கொண்ட ஆண்டி!.....வந்தவன், சொல்லாமல் கொள்ளாமல், பாரம் இறக்கியவனின் மலையில் போய் நின்று கொண்டான்!

பாரத்தை மீண்டும் தூக்கியவனுக்குப் பாலனையும் சேர்த்து, தூக்கிச் செல்லும் உரிமை இல்லையே! பிள்ளை பிடிக்கிறான் என்று யாராவது சொல்லிவிட்டால்?.....எவ்வளவு சொல்லியும் இறங்கிச் செல்ல மாட்டேன் என்கிறான் பாலகன்! அவன் தான் கயிலை மலைக் கோபத்தில் உள்ளானே!

அந்த மலை தான் இல்லை! இந்த மலையுமா எனக்கு இல்லை?
அந்த மலை, இந்த மலை எனாது, எந்த மலையும் கந்தன் சொந்த மலை அல்லவா?
இடும்பனின் பந்த மலையைத் தனக்குச் சொந்தமாக்க வந்த மலை! அந்தக் கந்த மலை! மனம் உந்த மலை! அருள் தந்த மலை!

மாணாக்கனின் நெடுநாள் வேட்கையைத் தீர்த்து வைக்க இதுவே தக்க சமயம்! பாரம் தூக்குவோனுக்குக் கோபத்தை உண்டாக்கித் தாபத்தைத் தீர்த்து வைத்தான் வடிவேலவன்!
இன்றும் சிவ கிரியில் சிறுவன் ஆண்டியாய் நிற்கிறான்!
சற்றுத் தள்ளி சக்தி கிரியிலும் ஓர் ஆலயம் நிற்கிறது!!

அந்தப் பழனியில் தோன்றிய காவடி,
ஈழம், சிங்கை, மலேயா, பர்மா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் ராச்செஸ்டர், லண்டன், பாரீஸ்...இன்னும் பாரெல்லாம் பரவி ஆடுகிறது!


பதிவர் ஜீவா-வின் வாழ்த்துச் செய்தி
Muruganarul-vAzhth...

"சரி, நூறாம் இடுகையை நிறைக்கும் முன்னர் ஒரு கேள்வி! - முருகனுக்கு மொத்தம் எத்தனை முகம் நண்பர்களே?"

"என்ன கேஆரெஸ் இது விளையாட்டு? பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் முருகனுக்கு ஆறுமுகம்-னு! உனக்குத் தெரியாதா?"

"ஓ! அடியேனுக்குத் தெரியாதே! எங்க ஆறுமுகனுக்கு ஆறு முகமா?
ஆறு முகம் இல்லீங்க! இன்னிக்கி செல்லக் குழந்தைக்கு நூறு முகம்!

முருகனருள் வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையும் அவன் சிங்காரத் திருமுகம் தானே!
ஆறுமுகம் ஆன பொருள், நூறு பதிவருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


இந்த நூறாம் இடுகை பல்கிப் பெருகி, ஆயிரம் முகங்களாக மலர்ந்து, பல கோடி நூறாயிரம் முகங்களாகப் படர்ந்தோங்கி,
ஒவ்வொரு பதிவும் அவன் திருமுகத்தையே காட்டி அருள் புரியுமாறு அருள் புரிவானாக!
சரணம் சரணம் சரவண பவ ஓம்! சரணம் சரணம் சண்முகா சரணம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரோகரா!

Sunday, June 01, 2008

ஓம் முருகா

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா


இன்று கிருத்திகை நாள். முருகனுக்கு உகந்த நாள். இந்நாளில் குமரனின் படத்தையும் பார்த்து, மற்றும் அவன் மீது உள்ள ஒரு பாடலையும் கேட்டு அவனை நினைப்போம்.தணிக்கை விஷயமாக சுற்றுப்பயணத்தில் இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை

.ராகம்: ஷண்முகப்பிரியா

விருத்தம்

ஓம் முருகா

ஒரு முகம் சலித்தால்
மருவு ஷண்முகத்தில் ஒரு முகம் இரங்குவது இல்லையோ

நின் ஒருசெவி மறுத்தால் பன்னிரு செவியில் ஒருசெவி கேட்பதுமில்லையோ...முருகா

ராகம்:ஸஹாணா

ஒருகரம்(நின்) அடித்தால் பன்னிருகரத்துள் ஒருகரம் அணைப்பதில்லையோ முருகா
ஓம் முருகாவென நான் ஓலமிட்டழைக்க ஓடிவந்து அருள்புரிந்தவனே...முருகா

ராகம் :-ஹம்ஸநாதம்

ஓராறு முகமும பன்னிருகையும் ஓங்காரமாய் வந்த குஹனே
திருத்தணி மணிவிளக்கே முருகா நான் ஓலமிட்டழைக்க
நீ ஏன் எனாதிருக்க ஓஹோ ஈது என்ன சோதனையோ...முருகா



-

Saturday, May 24, 2008

What more can I ask My Dear Muruga!!!



Thanks: myrachi, Youtube

Thursday, May 22, 2008

"ஜி.ரா.வின் காவடிச் சிந்து"

நண்பர் 'ஜி.ரா.' எழுதிய காவடிச் சிந்தை இங்கு பாடியிருக்கிறேன்!
எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே!


Get this widget Track details eSnips Social DNA

Sunday, May 18, 2008

Happy Birthday முருகா! - ஆறு முருகன்களின் காட்சி!

வைகாசி பொறந்தாச்சு! மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?
இன்று வைகாசி விசாகம் (May 19, 2008)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு? - சைவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! வைணவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! இப்படி ஒரு இனிய சைவ-வைணவ ஒற்றுமை!

வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்! இறைவன் திருவடிகளின் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்! அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் இன்னொரு அழகன். அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாருமே அழகா இருப்பாங்களா-ன்னு கேக்கறீங்களா? ஜோதிட விற்பன்னர்கள் யாராச்சும் சொல்லுங்கப்பா!)

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வு அருள் பெருமாளே!

என்று அருணகிரியும் இவனை "விசாகன்" என்றே கொண்டாடுகிறார்! அவன் தான் விசாகன் என்னும் முருகன்! அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!

So....
Happy Birthday, Dear Muruga! :-)
முருகா, உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
என்று முருகனுக்கு பிறப்பிறப்புகள் கிடையாது என்று சொல்லுவார்கள்!

பொதுவாகவே கந்தக் கடவுளுக்கு மட்டுமில்லை, எந்தக் கடவுளுக்குமே பிறப்பிறப்புகள் கிடையாது! - இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுவது எல்லாம் மனிதனாய் கீழறங்கி வரும் அவதாரங்களுக்கு மட்டுமே! கிறிஸ்துமஸும் அப்படியே! மத்தபடி ஆதியும் அந்தமும் இல்லா இறைவனுக்கு ஏது பிறப்பும் இறப்பும்?

பிறவான்-னு என்ன தான் அருணகிரியார் சொன்னாலும், நாம அன்பா Happy Birthday-ன்னு முருகனுக்குச் சொல்லுறதை அவரும் தடுப்பாரா என்ன?
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! அதனால் பிறந்தநாள் பரிசு வைத்தேன்! :-)



கந்தன் கருணை படத்தில் மிக அழகான ஒரு காட்சி! ஒரு முருகனைப் பார்த்தாலே அழகு கொஞ்சும்! ஒரு சேர, ஆறு முருகன்களைப் பார்த்தால்?
கள்ளமில்லாச் சிரிப்பு சிரிக்கும் ஆறு முருகன்களைக் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்க்கும் காட்சி!

ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே!

என்பது தான் திருப்புகழ்...
அதைத் திரைப்படத்துக்காகச் சற்றே மாற்றி...மிக அழகாக இசை அமைத்திருக்காங்க! சூலமங்கலம் சகோதரிகள், மற்றும் ஜமுனாராணி போன்ற மற்ற பாடகிகள் சேர்ந்து பாடறாங்க!
(கந்த சஷ்டிக் கவசம்-னா சூலமங்கலம் பாடித் தான் கேட்கணும் என்ற அளவுக்கு, சூலமங்கலம் சகோதரிகள் புகழல்லவா!)
பாடலை இங்கு கேளுங்க! வீடியோவில் ஆறு முருகன்களையும் ஒரு சேரப் பார்த்து மகிழுங்க!



ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்


காலமகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க!
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க!
(ஆறுமுகமான)

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தண் நிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று


பால் மனமும் பூ மனமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று


வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று

(ஆறுமுகமான)

படம்: கந்தன் கருணை
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்

வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து

எந்தவேளையும் கந்தவேளைத் தொழுவோர்க்கும் சொந்தவேளை என்ற ஒன்றே இல்லாதவர்க்கும் நாளும் கிழமையும் ஒன்றே. அப்படியிருப்பினும் ஒருவேளையாவது இறைவனின் திருவேளை என்றுண்ணி வாழ்கின்ற பேர்களுக்கு அவ்வேளையும் செவ்வேளையாக வாழ்த்துவோமாக. அவ்வகையில் வைகாசி விசாகத் திருநாளாகிய இன்று தமிழ்வேளைத் தொழுது இவ்வேளையைத் தமிழ் வேளை என்று ஆக்கும் பெருமையை வேண்டுவதே சிறப்பாகும்.

கண்டோரும் விண்டோரும் சொல்லில் பொருளில் இறைவனைப் பாடிய வேளையில் அன்புண்டோரும் பாடலாம். இறைவன் அருளினைக் கூடலாம் என்ற கருத்தினை ஒப்புக் கொண்டு செம்மொழியும் நல்லன்பும் மட்டுமே உளத்தில் நிறுத்தி முருகன் அருளால் செய்த பாடல் இது. காவடிச் சிந்து மெட்டில். பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த இந்த விளையாட்டுச் சிந்தினைச் செந்திலை நினைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்

புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்


இந்தப் பாடலை அன்பர்களோ நண்பர்களோ பாடித் தந்தால் மிகவும் மகிழ்வேன்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Friday, May 16, 2008

சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்....


சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்
ஒருமுகமாய் தரும் அருள் ஒன்றே (சண்முக)

சிவனார் கண்பொறியில் வந்துதித்த சரவணன்
சிக்கல் சிங்கார வேலனாம் ஆறுமுகன்
சிறைதனில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணன்
சின்னிக் கிருஷ்ணனாய் தோன்றும் குருவாயூரப்பன் (மோகன)

வேலினை ஏந்திடும் வண்ண மயில் வாகனன்
வள்ளி தெய்வானையை மணந்த வேல்முருகன்
சூரசம்ஹாரம் செய்த சக்திவடிவேலன்
பிரணவம் எடுத்துரைத்த சுவாமிநாதன்




வேய்ங்குழல் ஊதிடும் வேணுகோபாலன்
பாங்குடனே பாமை ருக்மிணியை மணந்த மாயவன்
கம்சனை வதம் செய்த கார்மேக வண்ணன்
கீதோபதேசம் செய்த சாரங்கன்

சரவணன் நின்ற மலையது பழமுதிர்ச்சோலை
அரங்கன் உறையும் எழில்வனமது மாலிருஞ்சோலை
அருணகிரிக்கருளி திருப்புகழைப் பாடவைத்த குகன்
ஆழ்வார் திவ்யப்ரபந்தமதில் எழுந்தருளிய நம்பி

ஷடாக்ஷரம் கொண்டவன் சரவணபவ குகனாம்
அஷ்டாக்ஷரம் கொண்டவன் ஓம் நமோ நாராயணனாம்
குன்றாடிய குருபரா வேங்கட மலையின் எழிலுருவே
பழனி நின்ற பழமே கோகுல பாலா கோபாலா (மோகன)


***

முருகன் திருவுருவப்படம் பெற்றது திரு.கானா பிரபாவின் பதிவிலிருந்து. பெருமாள் திருவுருவப்படம் பெற்றது திரு.கைலாஷி பதிவிலிருந்து. இருவருக்கும் எனது நன்றிகள்.

Monday, May 05, 2008

எனது உயிர் நீ முருகாஏழைக்கருள்



தென் பழனி வாழ் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா

கிருத்திகை முருகனுக்கு உகந்தநாள்.அதுவும் முருகனுக்குரிய செவ்வாயன்று வரும் சிறப்புநாள் முருகனை பணிந்து அவன் பாடலைக் கேட்டு பார்த்து ரசிப்போம். அலுவல் நிமித்தமாக சுற்றுபயணத்தில் இருப்பதால் இருக்கும் வசதியைக் கொண்டு இடப்பட்ட பதிவு.குறை பொறுத்து நிறையை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ராகம்:- கல்யாணி தாளம்:-
ஆதி
பல்லவி

எனது உயிர் நீ முருகாஏழைக்கருள் செய்ய வா

அனுபல்லவி

இணையடி வேண்டி தினம் தொழும் அடிமை நான்

சரணம்

அழகு வடியும் ஆறுமுகனே

அன்னை உமையவளின் அருமை மகனே

கழனி மலர்காசுல் கந்த மறைஒதும்

பழனிமலை மீதமர் கந்தா பரிசோதனை போதும்

இந்தப்பாடல் மறைந்த பாடகர் திரு. கல்யாணராமன் இயற்றி மெட்டமைத்து பாடியது





-

Thursday, May 01, 2008

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன்!


அம்மையார் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் முன்னும் பின்னும் பொருத்தமான சொற்களைக் கூட்டிக் குறைத்துப் பாடும் போது 'ஆகா. அது தரும் ஆனந்தமே ஆனந்தம்'. இந்தப் பாடலும் அப்படியே. அம்மையார் கே.பி.சுந்தராம்பாள் பாடுவதைக் கேட்டுப் பாருங்கள்.

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன் - என்னைக்
காப்பதுன் கடமையையா பழனிக் (கந்தா)

சிந்தையில் விளையாடும் தேவாதிதேவனே
இந்தா என்று நல்வரம் ஈந்தருளும் கருணைக் (கந்தா)



பந்த பாசங்களில் என் சிந்தனை செல்லாமல்
பக்குவ நிலை அருள் சொக்கநாதன் மகனே
சந்தோசம் தந்திடும் சண்முகனே குகனே
தந்தைக்குபதேசம் செய்த சுவாமிநாதனே (கந்தா)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP