மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-08)!
இன்றைய பாட்டாய் = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் (ஏற்கனவே இட்ட பாடல் தான்; ஆனா ஒவ்வொரு சட்டியின் போதும், இதை இடுவது வழக்கம், அம்புட்டுதேன்:)
ஆனா, அதுக்கு முன்னாடி... சூர சங்காரம் என்று "கதை"; அது எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் "சொல்லப்படுவது" திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சட்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார்.
விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க,
வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!
தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை!
எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான்.
எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது.
முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.
மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார்.
பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து,
தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!
தூது செல்லும் வீரபாகு முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை!
தேவ இளவரசன் "ஜெயந்தனைத்" தான் முதலில் போய்ப் பார்க்கிறான்!
ஜெயந்தனுக்கு ஆறுதல் சொல்கிறான் வீரபாகு!
அவனுடன் இருக்கும் மற்ற அமரர்களுக்கும் படைபலத்தைச் சொல்கிறான்;
பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான்!
ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடா உள்ளத்தால் தூது முறிகிறது.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.
முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார். ஈழத்தில், ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.
பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக,
கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.
கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது.
சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிகிறார்கள்!
முருகனின் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, அசுர குலமே மூழ்கிப் போகிறது;
வெற்றித் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றார்.
இப்படிச் சூரனை அழித்த மனக்கேதம் தீர்க்க, முருகன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் முருகன்.
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க,
சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்! ஆக, "கதைப்படி", சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் தான்! ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!
திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!
இது ஈழத்துக்கும், முருகனுக்குமே உள்ள தொடர்பு....
இன்றைய சட்டிப் பாடல்...
= திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்! கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா? மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
ஹேய்! சஷ்டி முடிந்து என்ன விருந்து கொடுக்கலாம்? இந்தக் கனவு, அவன் கிட்ட இருந்து ஏதோ சேதி வேற கொண்டாந்திருக்கே! என்ன சேதி, என்ன கனவா? சேச்சே! அதையெல்லாம்...வாயால் சொல்ல வெட்கமா இருக்கும்! பாடத் தான் ஈசியா இருக்கும்! So, பாட்டுல படிச்சித் தெரிஞ்சிக்கோங்க! :)
கயல் உண்கண் யான் இரப்ப, துஞ்சிற் கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் மன் - (குறள் 1211 - கனவு நிலை உரைத்தல்); கனவு காண்பதில் உள்ள நிம்மதியை வள்ளுவர் சொல்கிறார் பாருங்கள்... If my fish eating eyes, close in sleep, at my lament... I could fully relate my sufferings to My Beloved... ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கிறேன்! அதன் பெயர் கூடல்...
என் கண்களைத் துணியால் இறுக்க மூடிக் கொண்டேன்! கை நிறைய கோல மாவை எடுத்துக் கொண்டேன்! அவன் வீட்டு முற்றத்தில், ஒரு வட்டம் வரைய ஆரம்பிக்கிறேன், கண்களை மூடிக் கொண்டு!
வட்டம் தொடங்கிய இடத்திலேயே, முடிவும் வர வேண்டும்! அப்படி வட்டம் கூடினால் அவனும் என்னைக் கூடுவான்! ஆகா!
ஐய்யய்யோ! ஒரு வேளை வட்டம் கூடா விட்டால்?
"பயப்படாதே டீ! அவனை எண்ணும் போதெல்லாம் ஏன் உடல் இப்படிப் பதறுகிறது உனக்கு? பத்து முறை அதே போல் வட்டம் போடு! அதில் இரட்டைப் படையாய் வந்து வட்டம் கூடினால், அவனும் உனக்குக் கூடுவான்! என்ன சரியா? வட்டம் போடுகிறாயா?" ஆகா! இது வெறும் விளையாட்டா? அல்ல! விதியின் விளையாட்டு! என்ன விதி? = அவனுக்கு என்னை "விதி"!
அவனுக்கு என்னை "விதி" என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு! என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேராது! சேராது!! இது சத்தியம்!
ஐயோ, யாரடா இது? வட்டம் போட விடாமல் என்னை ஒரு கை தடுக்கிறதே! அப்பா பெருமாளே, ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே! என்னை அவனுக்கென்றே சேர்ப்பித்து விடு! சேர்ப்பித்து விடு!
மீண்டும் வட்டம் போடத் துவங்குகிறேன்! ஐயோ மீண்டும் ஒரு கை தடுத்துப் பிடிக்கிறதே! யார் இது? முருகாஆஆஆ!
"ஹேய்! என்னைத் தெரியலையா உனக்கு? எண்ணிக்கை வட்டம் போடுகிறாயா பேதை நெஞ்சே? என்னை எண்ணிக் கை பற்றி விட்டாயே! எண்ணிக்கை வட்டம் வேறு தேவையா?"
ஆகா! யார் குரல் இது? எனக்கு மிகவும் பழக்கமான குரல் போல் இருக்கே! என் ஏக்கங்களைச் சொல்லக் கூடத் தேவை இல்லாமல்...அவனே வந்து விட்டானோ?
அவனோடு கூட்டமாக இன்னும் பல பேர் வந்து விட்டார்களே! வந்து என் அப்பா கிட்ட என்னென்னமோ பேசறாங்களே! ஒரே கோஷமா இருக்கே! ஏதோ ஓதறாங்களே! டும் டும் டும் என்று சத்தம் கேட்குதே! என்னென்னமோ நடக்குதே!
எங்கு திரும்பினாலும் ஒரே வேலும் மயிலுமா இருக்கே! திடீர்-ன்னு இத்தனை வேல் எங்கிருந்து முளைச்சிது? நான் காண்பதெல்லாம் கனவா? நனவா?
சந்தேகமே இல்லை! நனவே தான்!......என்னை அவன் தொடும் போது கூசுதே! கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்! - தோழீ நான்!
வாரண மாயிரம் சூழ வலம் செய்து ஏரகன் முருகன் ஏகின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(1)
(ஏரகம்=திருவேரகம்=சுவாமிமலை! ஏரக முருகன் தந்தைக்கே பாடம் சொன்னவன் ஆதலாலே, என்னைத் தாய்-தந்தையரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவான்! அதனால் தான் எனக்கு ஏரக முருகன்! *திருப்பரங்குன்றம்=அசடு *திருச்செந்தூர்=உஷ்ணம் *பழனி=முறைப்பு *திருத்தணி=இளைப்பு *பழமுதிர்சோலை=களைப்பு *சுவாமிமலை மட்டுமே சிரிப்பு! சுவாமிமலை முருகன் - அந்த இதழ்க் கோட்டோரம், சந்தனக் காப்பை வழித்தெடுத்தால் தெரியும், கள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே!)
(அரையர்கள், தமிழ் வேதமான திருவாய்மொழியை, மாறன் மறையை - "நல்ல கோட்பாட்டு உலகங்கள் முன்றினுள்ளும் தான் நிறைந்து, நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே" என்று ஓத - நாணல் பரப்பி - அகில் குச்சிகளால் வேள்வி ஓம்பி என் கைப்பிடித்து - இரு மயில்கள் நடந்து வருவது போல், ஒயிலாகத் தீவலம் வர...) இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி முன்னை என் கால்பற்றி முன்றில் அம்மியின் மேல் பொன்மெட்டி பூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(8) வரிசிலை மன்மதன் அண்ணன்மார் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி கரிமுகத்து இளையோன் கைமேல் என் கை வைத்து பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(9)
(உலகம் அத்தனைக்கும் கிளர்ச்சி ஊட்டும் மன்மதனோ, என் சொந்த அண்ணன்; நாரணத் தந்தையின் மானசீக மகன் ஆனால் திருக்கை வேலின் காதல் முன்னால், கரும்பு வில்லின் காமம் நிற்குமோ? தொலைவில் இருந்து அம்பெய்த முடியாமல், அருகில் வந்து, முருகனின் மைத்துனன் ஆனதாலே, பொரி முகம் தட்டி, என்னை யானைமுகத்தான் தம்பியிடம் ஒப்புவிக்க..) குங்குமம் இட்டு குளிர்ச் சாந்தம் எனக்கிட்டு மங்கலக் குடதீபம் கையேந்தி மனைக்குள்ளே அங்கவனோடு நான் உடன்சென்று இல்வாழ முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்! ...(10)
(நித்ய சுமங்கலிப் பொட்டிட்டு, சாந்தும் இட்டு, காமாட்சி அம்மன் விளக்கைக் குடத்தில் வைத்து, பத்திரமாக முருக மனைக்குள் புக...பின்பு முருக நம்பியும் எனக்குள் புக... மருந்தாய் என்றும் மனத்துள்ளே, அவனை வைத்து இருப்பேனே, பெருந்தாள் உடைய முருகனை, பிரியாது என்றும் இருப்பேனே!)
கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை முந்துற மாதவிப் பந்தலின் பேதை சொல் அந்தமும் ஆவியும் நீயே நீயெனச் செந்தூர் முருகனின் சேவடிச் சேர்வரே!
மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-11)!
முருகன் (Sanskrit சுப்ரமண்யன்), சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் சொல்லப்படுவது திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வோர் ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?
இலக்கியங்கள் சொல்வது என்ன?
சூர சங்காரம் எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?சு + பிராமண்யன் = சுப்ரமண்யன்!
(சிறந்த பிராமணத்துவம் பெற்றவன்)
அம்மையப்பனிடம் வேல்/ஆயுதங்கள் வாங்கிய சுப்ரமண்யன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறான்.
விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க, வீரபாஹூத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாஹூவும், சுப்ரமண்யனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!
தாரகன் சுப்ரமண்யனோடு, நேரடியாக மோதவில்லை! எனினும் சுப்ரமண்யன், கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிக்கப் படுகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது. சுப்ரமண்யன் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.
மன்னி ஆற்றங்கரையில், ஈஸ்வரனாகிய சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் சுப்ரமண்யப் பெருமான்.
ஈசனும் சுப்ரமண்யன் முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், சுப்ரமண்யனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் சுப்ரமண்யன். அதன் பின்னரே வீரபாஹூவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!
தூது செல்லும் வீரபாஹூ முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை! சிறைப்பட்ட தேவ இளவரசனான, இந்திரனின் மகன், சுப்ரமண்ய அணுக்கன் ஜெயந்தனைத் தான் முதலில் போய்ப் பார்க்கிறான்!
ஜெயந்தனுக்கும் சுப்ரமண்யனுக்கும் அப்படியென்ன அணுக்கம்? என்று கதையில் சொல்லப்படவில்லை!
பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான் வீரபாஹூ! ஆனால் அசுரனின் மறுப்பால் தூது முறிகிறது.
அப்போது ஏற்பட்ட கைக்கலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாஹூவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாஹூ திருச்செந்தூர் திரும்பி, சுப்ரமண்யனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.
இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார் சுப்ரமண்யன்.
ஈழத்தில், ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.
பானுகோபன் என்னும் சூரனின் மகனை முதலில் சுப்ரமண்யன் முறியடிக்கிறார்.
ஈழத்து வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக, கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.
கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது. சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரன் ஒருவனை மட்டும் அழிக்காமல், சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிக்கப்படுகிறார்கள்!
சுப்ரமண்யன் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும், தூங்கும் குழந்தைகள் உட்பட, கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.
வெற்றித் திருமகனாய், சுப்ரமண்யன் திருச்செந்தூர் திரும்புகின்றார்.
ஆனால் இப்படிச் சூரனின் குடும்பம், குலம், நாட்டு மக்கள் யாவரையும் தாமே அழித்த மனக்கேதம் தீர்க்க, சுப்ரமண்யன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் சுப்ரமண்யன்.
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர்க் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!
ஆக, சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் இருந்து தான்! ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!
திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் (சுப்ரமண்யன்) ஆலயங்களிலும், ஏனைய ஆற்றுப்படை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!
இன்றைய சஷ்டிப் பாடல்... = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!
ஐந்தாம் நாள் சஷ்டிப் பதிவில்...கொஞ்சம் வித்தியாசமாக... சினிமாவில் திருப்புகழ் என்பதற்குப் பதிலாக... சினிமாவில் அருணகிரியின் மற்ற பாடல்கள் என்று பார்க்கலாமா?
சினிமாவில் சில திருப்புகழ்களைப் சென்ற பதிவுகளில் பார்த்தோம் அல்லவா? திருப்புகழ் மட்டும் தானா அருணகிரியார் பாடியது? கந்தர் அலங்காரம்? அனுபூதி? வேல் விருத்தம்? மயில் விருத்தம்? இவை சினிமாவில் வந்துள்ளதா? அருணகிரி அருளிய நூல்கள், ஆறுமுகனைப் போலவே, மொத்தம் ஆறு! 1. திருப்புகழ் 2. கந்தர் அந்தாதி 3. வேல்-மயில்-சேவல் விருத்தம் 4. திருவகுப்பு 5. கந்தர் அனுபூதி 6. கந்தர் அலங்காரம்
இவற்றில் சில வரிகள், அருணகிரிநாதர் படத்திலேயே வந்துள்ளன! ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
நான் பொருள் சொல்லத் துவங்கி, சென்ற Dec-2009இல் பாதியிலேயே நின்று போனது! அதோடு சேர்த்து நானும் நின்று போயிருக்க வேண்டும்! ஆனால் ஏதேதோ நடந்து, எப்படியோ தொடர்ந்து கொண்டிருக்கிறேன்! நான் எங்கே நினைத்தாலும், அங்கே என்முன் வந்து நிற்பான், என் முருகன்!
பாடலை இங்கே கேட்டுக் கொண்டே வாசிக்கவும்! குரல்: TMS இசை: ஜி.ராமனாதன் வரி: அருணகிரி படம்: அருணகிரிநாதர் செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும் பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே
செம்மை நிறக் கோபம் கொண்ட சின வடிவேல்...திருமுகம்... அடியவர்களின் பாரம் தாங்கும் பன்னிரு தோள்... தாமரையில் தேன்துளியும் முத்தும் சிதறும் திருச்செங்கோடு என்னும் ஊர்... அந்த செங்கோட்டுக் குமரன் எப்படித் தெரியுமா? நான் எங்கே நினைப்பினும், அங்கே என் முன் வந்து தோன்றுவானே!
என்னவொரு நம்பிக்கை, பிடிமானம் பாருங்கள்! எங்கே நினைத்தாலும் அங்கே வந்து தோன்றுவானாம் என் முருகன்! அதுவும் எப்படி? சும்மா அசரீரியா குரல் எல்லாம் கொடுக்க மாட்டானாம்! கனவில் தோன்ற மாட்டானாம்! = "முன்" வந்து தோன்றுவான்! முன் "வந்து" தோன்றுவான்!
* நான் பூசை அறையில் நினைப்பேன் = என் முன் வந்து தோன்றுவான்! * நான் படுக்கை அறையில் நினைப்பேன் = என் முன் வந்து கிள்ளிச் சீண்டுவான்! * நான் பாத்ரூமில் கூட நினைப்பேன் = ஹேய், உன் மேல் வாசனையா இருக்கு-ன்னு சொல்லுவான்! * நான் Subway Train-இல் நினைப்பேன் = கம்பி மேல் தாங்குவது போல் என் மேலும் தாங்குவான்! * நான் அலுவலகத்தில் நினைப்பேன் = அவ கூட மொக்கை போட்டது போதும்! என்னை வந்து கவனி-ன்னு சொல்லுவான்! * நான் வீட்டினில் நினைப்பேன் = எல்லாம் நல்லா இருக்குடீ! ஆனா உன் காரம் தான் தூக்கலா இருக்கு-ன்னு சொல்லுவான்! * நான் ஓய்வாக உறங்குவேன்! அப்போ நினைப்பேனா? தெரியாது! ஆனால் அவன் மடி, என் தலையைத் தாங்கிக் கொண்டிருக்கும்! அவன் கரம் என் மார்பைத் தட்டிக் கொண்டிருக்கும்! நான் என்னையும் அறியாமல் அவனுள் கலந்து...முனகி முனகி...முருகா முருகா...
எங்கே நினைப்பினும் அங்கே என் முன்-வந்து எதிர் நிற்பனே செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்!!! இதோ... அலங்காரத்தைத் தொடர்ந்து திரையிசை...முருகன் பாமாலை என்னும் தொகுப்பில் (album) இருந்து... இந்தப் பாட்டை முதன்முதலாகக் கேட்ட போது, எனக்கு-ன்னே சுசீலாம்மா பாடி இருக்காங்களோ-ன்னு நினைச்சிக்கிட்டேன்!
காலைத் தனிமையிலும், இரவுத் தனிமையிலும் = தனி மயில்! அவனொடு நான்! கூடவே இந்தப் பாடல்! ஒரு நாளும் தவறவே தவறாது! கேட்டுப் பாருங்கள்! நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!
எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு! - அதில் எப்போதும் இல்லை ஒரு குறைவு!! முருகா...எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு!
இனிக்கும் சுவைக் கனிக்கும் மேலான உறவு! இதயத்திலே பெருகி எழும் காதல் உறவு! (எனக்கும் உனக்கும்)
வனக்குறத்தி வள்ளியிடம் கள்ள உறவு! தேவ இனத்தவள் குஞ்சரி மண உறவு! தனக்கு உயிர் உடலாகத் தங்கும் உறவு - இந்தத் தாரணியைக் காத்திருக்கும் தேவன் உறவு! (எனக்கும் உனக்கும்)
மனக்கவலை மறக்க வைக்கும் வேலன் உறவு - நல் மகிழ்ச்சி அங்கு இருக்க வைக்கும் கந்தன் உறவு மணமலர் போல் இருக்கும் இன்ப உறவு திரு-மால் மருகன் வேல் முருகன் அன்பின் உறவு!
முருகா... எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு! அதில் எப்போதும் இல்லை ஒரு குறைவு! I Love You Murugaaaaa! Want to be with you, Will be with you.....forever!
திருச்செந்தூர் திருக்கயிலைக்கு ஒப்பானது. முருகவேள் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பும் பின்பும் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்புரியும் இடம்.கடலின் அலைகள் வந்து கோயில் வாயிலில் மோதுமாறு கடலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள திருத்தலம்.பிறவிப் பெருங்கடலுக்குத் துறைமுகமாக விளங்குவது செந்திலம்பதி.அவன் சரணத்தை பற்றுபவர்களுக்கு பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபட்டு முக்தி அளிக்கும் தலம். திருச்செந்தூர் பாடலை ஒன்றைப் பார்ப்போமா?
ராகம்:- தோடி தாளம்- ஆதி பல்லவி கார்த்திகேய காங்கேய கௌரி தனயா கருணாலய அருள் திருக்....... (கார்த்திகேய)
அனுபல்லவி
கீர்த்திமேவு தென்பரங்குன்று திருச்செந்தில் பழனி ஸ்வாமிமலை மேல் வளர்............ (கார்த்திகேய)
கந்தக்கடவுள் உலகம் உய்வதற்காக ஆறுமுகங்களுடன் அவதாரம் செய்த நாள்தான் ஸ்கந்த-ஷஷ்டி.முருகன்பால் அன்புகொண்டு பல அன்பர்கள் பாட்டினால் அவன் புகழைப் பாடி அனுபவித்துள்ளார்கள் சமீபத்தில் நமக்குத் தெரிந்து நம்முடன் வாழ்ந்த அமரர் தமிழ்த் தியகய்யா என்று போற்றப்பட்ட திரு. பாபனாசம் சிவன் அவர்களும் பல பாடல்கள் அழகன் முருகன் மீது பாடியுள்ளார்.அந்த முத்துக்களிலிருந்து திரட்டப்பட்ட ஒரு பாடலை இந்த ஸ்கந்த -ஷஷ்டிதின நன்னாளில் படித்து கந்தனை வணங்குவோம்.
சூரனை வெற்றி கொண்ட கார்த்திகேயா என்று திருச்செந்தூர் முருகனைப் புகழ்ந்து முடிக்கிறார்.அது மட்டுமல்ல கார்த்திகேயன் என்ற பெயருடன் கங்கைக்கும் கௌரிக்கும் மகனாக விளங்குபவர், மால் மருகன் ஷண்முகன் முருகன் குருகுஹன் என்றெல்லாம் பக்தர்களால் அழைக்கபடுபவன் மகபதியான பிரும்மாவும் விதியும் தொழக்கூடியவன்,மாதங்கனான விநாயகனின் சகோதரன்,கையில் வேல்வைத்திருக்கும் அழகன்,குறுநகை தவழும் குழந்தை முகம் கொண்டவன், பக்தர்களைக் காப்பதற்காக மயிலின்மீது விரைவாகக் வரக்கூடியவன் என்றெல்லாம் புகழ்கிறார்.ஆறு படை வீடுகளயும் ஒரே பாட்டில் கொண்டு வந்து விட்டார். இதேமாதிரி அருணகிரிஸ்வாமிகளும் ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே என்ற திருப்புகழில் ஆறுபடை வீடுகளையும் ஒரே பாட்டில் கொண்டுவந்தார்.பாபனாசம் சிவனின் அருமையான மனதைக் கவரும் பாட்டு என்பதில் சந்தேகமே கிடையாது
இனி நெய்வேலி திரு சந்தான கோபலன் பாடிய இந்த பாட்டைக் கேட்க / இங்கே http://www.musicindiaonline.com/album/10-Classical_Carnatic_Vocal/34502-Supreme_Classics/#/
முருகன் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.இதர மதத்தினரும் அவர்பால் அன்பு கொண்டு அவர் அருளுக்கு ஆட்கொள்ளப்பட்டவர்கள். சிங்கை மலேசியா போன்ற நாடுகளில் சீனர்கள் மிகுதியாக முருகனை வணங்குதை கண்டிருக்கிறேன்.அவ்வளவு ஏன் இந்தியாவிலேயே ஒரு சீக்கிய மதத்தைச் சேர்ந்த இஷன் சிங் என்ற சர்தார்ஜி முருகன்மேல் மிகுந்தபக்தி கொண்டவர். கந்தர் அனுபூதியை தமிழ் உச்சரிப்பு சுத்தமாக சொல்லுவார்.நீங்களே பாருங்களேன்
என் பிறந்த வீட்டின் வாழ்வு, கண்ணன் வாழ்வு என்பதால், விஷமங்களும் டகால்ட்டிகளும் இயற்கையே! ஆனால் இது என் புகுந்த வீட்டில் பிடிக்காது! :)
நான் என்ன செய்ய? முருகா முருகா! உன் வீட்டில் எல்லாரும் ஞான பரமா இருக்காங்களேடா! ஒருத்தருக்கும் குறும்பே பிடிக்காதா?
ஏதோ என் மாமா ஈசனார் மட்டும் கொஞ்சம் ஞானம்-கொஞ்சம் குறும்பா அப்பப்போ திருவிளையாடல் பண்ணுவார்! ஆனால் அதுவும் ஞானம் கலந்த விளையாடல் தான்! வெண்ணெய் விளையாட்டு அல்ல! :)
நான்காம் நாள் சஷ்டிப் பதிவில் - சுசீலாம்மாவின் அழகிய முருகன் பாட்டு = அந்தச்சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
யாருங்க சிவகாமி மகன்? = முருகன் தானே? இல்லை! சிவகாமியின் மகன் = பெருந்தலைவர் காமராசரும் கூட! இப்போ பாட்டைப் பாருங்க! * அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி = சிவகாமி அம்மாள் மகன், காமராசரிடம் சொல்லடி! * என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி = என்னைக் கட்சியில் சேர்க்கும் நாள் பார்க்கச் சொல்லடி!
தி.மு.க-வில் முதல் பிளவு! அறிஞர் அண்ணா அவர்களிடம் கோபித்துக் கொண்டு, ஈ.வெ.கி சம்பத் (அட நம்ம EVKS இளங்கோவனின் அப்பா தான்) கட்சியை விட்டுப் போகிறார்!
தமிழ்த் தேசியக் கட்சி-ன்னு புதுசா ஆரம்பிக்கிறார்! அய்யய்ய...கட்சி பேரே நல்லா இல்லையே! கழகம், திராவிட, முக போன்ற குறிச் சொற்கள் இல்லாமல் கட்சி ஆரம்பித்தால் எடுபடுமா? :)
அவருடன் கண்ணதாசனும் தி.மு.க-வை விட்டு விலகுகிறார்! அதான் வனவாசம்-ன்னு எழுதிட்டாரே! கலைஞர் கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் ஒத்து வருமா என்ன? கவிஞர் தான் உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேசும் "உணர்ச்சிகரமான" மனிதர் ஆயிற்றே!
ஆனால் சம்பத் துவங்கிய கட்சி சோபிக்க வில்லை! கலைத்து விட்டு காங்கிரசில் சேர்ந்து விடுகிறார் சம்பத்! கவிஞரின் கதி? அரசியல் நெளிவு சுளிவு அறியாதவர் ஆயிற்றே! முன்பு காமராசரின் கொள்கைகள் சிலவற்றை, திமுக-வில் இருந்த போது எதிர்த்த தாம் எப்படி அங்கே போவது-ன்னு தயக்கம்! :)
அந்த நேரம் பார்த்து வந்த சினிமா தான் பட்டினத்தில் பூதம்! ஜெய்சங்கர், நாகேஷ் கூட ஒரு ஜீ-பூம்-பா பூதம் சுத்துமே! திருப்பதி லட்டு எல்லாம் மேஜிக்-ல்ல வருமே! அதே படம் தான்!
அதில் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாட்டை எழுத, அது காமராசருக்கு மறைமுக ஓலை! * பாட்டுடைத் தலைவன் முருகன் போலவே பாட்டு இருக்கும்! * ஆனால் உள்ளுறையாக, கவிஞர் காமராசருக்கு சொல்ல விரும்புவது போலவும் இருக்கும்!
நமக்கு எதுக்குங்க அரசியல் உள்ளுறை-உள்குத்து எல்லாம்? நாம முருகன்-ன்னே எடுத்துக் கொண்டு மேலே தொடர்வோமா? சிவகாமி மகன் = என் முருகன் தான்! அந்தச் சிவகாமி மகனை சண்முகனை சிந்தனை செய் மனமே... சுசீலாம்மாவின் இன்-குரலில் இதோ... பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!
அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி? (அந்தச் சிவகாமி மகனிடம்)
கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை பெண் எனப் பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறன்ன வேலை? (அந்தச் சிவகாமி மகனிடம்)
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நிழல் ஆடும் விழியோடும் ஆடினானே! அன்று நிழலாடும் விழியோடு ஆடினானே என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி! (அந்தச் சிவகாமி மகனிடம்)
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ?
காலம் மாறினால் காதலும் மாறுமோ? மாறாது மாறாது இறைவன் ஆணை! என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை!
இந்தச் சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி இன்னும் சேரும் நாள் பார்ப்பது என்னடி? வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி? தோகை இல்லாமல் வேலன் ஏதடி?
படம்: பட்டினத்தில் பூதம் குரல்: TMS, பி.சுசீலா இசை: ஆர். கோவர்த்தனம் வரி: கண்ணதாசன் ஊன்-மையான காதல் ஒன்னு! உண்மையான காதல் இன்னொன்னு! ஒன்றில் lust அதிகம்! இன்னொன்றில் love அதிகம்! ரெண்டுமே காதல் தான்! ஆனால் சில அடிப்படைகள் மாறி இருக்கும்!
உண்மையான காதல் எப்படி இருக்கும்? கவிஞரே சொல்கிறார்! * நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ = நிலைமை மாறினாலும் அவன் நினைவு மட்டும் மாறவே மாறாது! * நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ? = நெஞ்சுள்ளே காதல் என்பதால், நெஞ்சு அவனை நெருங்கியே இருக்கும்! அவன் பால் பேதம் தோன்றாது!
காலம் மாறினால் காதலும் மாறுமோ? மாறாது மாறாது இறைவன் ஆணை! என் ஐயா முருகா, உன் மேல் ஆணை! பெரு காதல் உற்ற தமியேனை - நித்தல் பிரியாதே, பட்சம் மறவாதே!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி என்று ஆரம்பித்தவர் தோகை இல்லாமல் வேலன் ஏதடி? என்று மாற்றி முடிக்கிறார்! டேய் முருகா, நான் இல்லாமல் நீயும் இல்லை! உன் வேல் என்னதே, உன் மயில் என்னதே! நீயும் என்னதே! என் ஆவி உன்னதே! முருகாஆஆஆ!
"அருணகிரிநாதர்" என்றொரு தமிழ்ப் படம்! TMS அவர்களே அருணகிரியாக.. முழு நீளத்துக்கும் நடிச்ச படம்!
வாரியார் சுவாமிகள், சீர்காழி, எம்.எஸ்.வி போன்றவர்களும் திரையில் தோன்றியுள்ளார்கள்!
ஆனால் "முழு நீளத்துக்கும்" முருகத் திரையில் தோன்றும் நற்பேறு TMS-க்கு மட்டும் தான் வாய்த்தது!
படத்தில் அருணகிரியின் முழுக் கதையும் "ஒருவாறு" சொல்லி இருப்பார்கள்!
ஆனாலும் இன்னும் செவ்வியாகச் சொல்லி இருக்கலாம் என்பது என் தோழனின் கருத்து!
இன்னொரு படம் எடுத்து அருணகிரியை முழுக்கச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டு!
ஆனால் சுட்டிச் சுட்டி ரோபோ காலத்தில் அருணகிரியெல்லாம் சாத்தியம் ஆகுமா என்ன? :)
ஆகும்! சாத்தியம் ஆகும்!
சத்தியம் என்றுமே சாத்தியம் ஆகும்!
பக்த ராமதாசு என்ற படத்தில், யாருமே எதிர்பாராத நாகார்ஜூனா நடித்துச் சாத்தியப்படவில்லையா என்ன?
அன்னமய்யா என்ற படமும் அதே நாகார்ஜூனாவால் பெரும் வெற்றி பெற்றதே!
மாலவன் சொத்து மருகனுக்கே அல்லவா! வேங்கடவன் வெற்றி போல் வேலவனின் வெற்றியும் என்றும் சாத்தியமே! தேவை: தகுந்த முனைப்பும், வெறுப்பு கலவாது அனைவரும் விரும்புமாறு வழங்கிடும் முறையும், எடுத்துக் கொண்ட பொருளின் நிறையும் மட்டுமே!
அருணகிரிநாதர் படத்தால் ஒரு சில திருப்புகழ்ப் பாடல்கள் மிகவும் பிரபலமாயின!
"முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற முதல் திருப்புகழ்
= அந்தப் படத்தால் தான், தமிழ்நாட்டில் பலரையும் சென்று அடைந்தது!
TMS செய்த முருகத் தொண்டுகளில் இது முக்கியமான ஒன்று!
வாயில் நுழையாத வேகத் தமிழை அனைவர் வாயிலும் நுழைய வைத்துக் காட்டினார் TMS!
அந்தப் படத்தால், எத்தனை பேர் போட்டி போட்டுக் கொண்டு திருப்புகழை மனப்பாடம் செய்தார்கள்!!
அதற்கு முன்பும், அதே பாட்டை ஓதுவார்களும் பாடினார்கள் தான்! ஆனால் மக்களைச் சென்றடையவில்லை!
நீட்டி முழக்கும் இசையாக மட்டுமே அந்தத் திருப்புகழ் முன்பு ஓதப்பட்டு வந்தது! அதைக் கம்பீர இசையாக மாற்றிக் காட்டியது இந்தத் திரைப்படம்!
இன்றும் தமிழ்நாட்டில்.. முருகன் பரவலாக பறந்து வருகிறான் என்றால் = அதற்குத் திரைப்படங்களின் பங்கு மகத்தானது!
ஒரு கட்டத்தில், முருகன் படங்கள் போல், வேறெந்த திரைப்படங்களும், திரைப்படப் பாடல்களும் அப்படி உருவாகவில்லை!
70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்! அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:)
1. கந்தன் கருணை 2. தெய்வம் 3. திருவருள் 4. துணைவன் 5. வருவான் வடிவேலன் 6. யாமிருக்கப் பயமேன் 7. முருகன் அடிமை 8. கந்தர் அலங்காரம் 9. சஷ்டி விரதம் 10. வேலும் மயிலும் துணை 11. மனிதனும் தெய்வமாகலாம் 12. வேலுண்டு வினையில்லை 13. திருவிளையாடல் - partly 14. ஸ்ரீ வள்ளி - old & new 15 ...& அருணகிரிநாதர் - etc etc main movies... & other lil' scenes in so many films!:)
இன்னிக்கும் பலருக்கு... மனத்திலே, முருகன் மாயம் செய்கிறான் என்றால்... = சிறு வயதில் பார்த்த, இந்தச் சினிமாக்களின் பங்கு மிக மிக உண்டு!
கே.பி.சுந்தராம்பாள் அம்மா & சீர்காழி-டி.எம்.எஸ்
ஏ.பி நாகராஜன்-கே.சங்கர்
தேவர் ஃபிலிம்ஸ் என்று அத்தனையும் ஒன்று சேர்ந்த மகத்தான கால கட்டம்! சினிமாவில் பக்திப் பாடல்கள்-ன்னா.. அது முருகன் பாடல்கள் தான் என்ற நிலை அப்போது!:)
இதுவே..
தமிழ்க் கடவுள்-ன்னா = அது முருகன் மட்டுமே...
என்ற "தோற்றத்தையும்" சேர்த்தே உருவாக்கியது= சினிமாவின் சக்தி அப்படி! :)
சொல்லப் போனால் "தமிழ்க் கடவுள்" என்ற பதம் எந்த இலக்கியத்திலும் நேரடியாகச் சொல்லப்படவில்லை!
பண்டைத் தமிழ்ப் பண்பாட்டில் இறையியல் தொன்மத்தைக் காட்ட வந்த சொல் அஃது!
தொல்காப்பிய கால கட்டத்திலேயே திருமாலும் முருகனும் - இருவரும் தமிழ்க் கடவுளே! கொற்றவையும் கூட.. இருவருமே தமிழர்களின் அக-புற வாழ்வில் ஊறி இருந்ததைக் காட்டும் சங்க இலக்கியம் = மொத்த தொகுப்பும் இங்கே!
தமிழ்க் கடவுள்-ன்னா, அது முருகன் மட்டுமே என்ற தோற்றத்தையும் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கியது சினிமாவின் சக்தி! :)
"இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்திலே"...என்று ஏபி நாகராஜனின் "வெறும்" வசனமே "தரவு" ஆகியது! :)
மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்.. தொல்காப்பியத் தமிழ் உலகம்.. *முன்னை மரபின் பெரும்பெயர் முதல்வ= திருமால் *அரும் பெறல் மரபின் பெரும் பெயர் = முருகஇதெல்லாம், சினிமாவின் முன் எம்மாத்திரம்?? அட, தொல்காப்பியம் பெரிதா, சினிமா பெரிதா?? :)
தேவர் பிலிம்ஸ் = இதுக்கு ஒரு முக்கியக் காரணம்!
சிறந்த இயக்குநர்களான (என் அபிமான) ஏ.பி. நாகராஜன் & கே. சங்கர் = மற்றொரு காரணம்! எம்.ஏ. திருமுகம் & ஆர். தியாகராஜன் போன்ற இயக்குநர்களையும் சொல்லி ஆகணும்!
இவர்கள் அனைவரும், ஒரு தலைமுறைக்கே, "முருக அலை" கொண்டு சேர்த்தவர்கள்! சினிமா (எ) மந்திர மயக்கத்தில் நாமும் கட்டுண்டோம்!
இதில் பலவும், "புராணக் கதைகள்" தான் (உண்மை அற்றவை);
தமிழ்க் கடவுளாம் முருகனின்,"தமிழ்த் தன்மையை" உணர்த்தாது= சம்ஸ்கிருத புராணங்களின் அடிப்படையில் அமைந்த "கதைகளே"!
எனினும், காட்சியின் பிரம்மாண்ட விரிவால், சினிமா மூலமாக, முருகனைக் கொண்டு சென்றது!
சினிமா வாகனம், மயில் வாகனத்தை விட வேகம் அல்லவா?:))
நமக்கு, மெய்யான சங்கத் தமிழ்த் தரவுகள், அதிகம் தெரியாது!
முதலாம் ஒளவை= அதியமான் காலம்; 2nd AD
அவ எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
அப்படீன்னா, Jesus க்கு அப்பறம் தான், முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))
இந்த "Logic" எல்லாம் சினிமா முன் = செல்லாது; செல்லாது:)
சங்கத் தமிழ் முருகன் = நடுகல் தொன்மம்! பூர்வ குடிகளின் தொன்மம்! அதுவொரு அரும் பெரும் மரபு; "இயற்கை வழிபாடு"! அவ்வளவே!
இதர "புராணக் கதைகள்" = வடமொழி ஆதிக்கத்தால் வந்தவை; = வீரபாஹூ!
(பாஹூ = தோள்; சுந்தர பாஹூ = அழகிய தோளன்); |
கஜபாஹூ (கயவாகு) -ன்னு ஒரு சிங்கள மன்னனைச் சிலப்பதிகாரம் சுட்டும்;
So..., சங்கப் புலவர்களுக்கே = சம்ஸ்கிருத எழுத்து தான் மூலம்? புரியுதோ?:(
Proof: திகழ்தரு அகார ஆதி , ஹாகாரம் ஈறாச் செப்பிச் புகழ் தரு நாற்பத்து எட்டு, நாற்பத்து எண் புலவர் ஆகி … சங்க மண்டபம் உண்டாக்கித், தகைமை சால் சிறப்பு நல்கி, அங்கு அமர்ந்து இருத்திர் , என்ன இருத்தினான் அறிஞர் தம்மை! (- சங்கப் பலகை கொடுத்த படலம்; தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்)
அடக் கொடுமையே! ஒரு சைவத் "தமிழ் இலக்கியமே", தனக்கு வடசொல்லு தான் மூலம்-ன்னு சொல்லுதே!:(
இங்கு வந்தமர்ந்து, தமிழில் "பாண்டித்யம்" பெற்று, இங்கேயே மாற்றி எழுதும் சில தமிழ் "வாத்திகள்"!
அதை உணராது... "இழிவையே பெருமை" -ன்னு, நாமும் "இலக்கியம்" பேசிக் கொண்டு வாழ்கிறோம்!
Let mythology be mythology! No issues!
But to mix it on living Tamizh Poets & harming Tamizh = A Big NO!
இதே, ஒரு வடமொழி இலக்கியத்திலாச்சும், நம்ம தமிழ் போய் "ஏத்தி" இருக்கா?
அ முதல் -ன் வரை 30 எழுத்து; இந்த முப்பது தான் முப்பது-முக்கோடி தேவர்கள் ஆச்சு!
ஆய்த எழுத்து தான் "ஆயுத மோகினி - விஷ்ணு பகவான்" ஆச்சு -ன்னு நாம ஏத்தி இருக்கோமா?
நாம, இயக்குநர்களைக் குறை சொல்ல முடியாது; So called "தமிழ் இலக்கியத்தில்" உள்ளதைத் தானே, படமாக எடுக்கிறார்கள்?
தமிழ் இலக்கியத்தில், "புராணத்தை" நுழைத்தது, அவர்கள் பிழை அல்லவே!)
நாம சினிமாவில் திருப்புகழ் என்ற பேசுபொருளுக்கு வருவோம்!
= அது தானே இந்த ஆண்டு சஷ்டிப் பதிவுகளின் மையப் பொருள்!
1. TMS = அருணகிரிநாதர் படத்தில், (பலப்பல திருப்புகழ்கள்) 2. வாணி ஜெயராம் = யாமிருக்கப் பயமேன் படத்தில், பாதி மதி நதி (சுவாமிமலைத் திருப்புகழ்)
அருணகிரிநாதர் படத்தில் வந்த ஒரு அழகிய திருப்புகழைப் பார்ப்போமா?
இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! அப்படியே கால்கள் தானாக நடனமிடும் திருப்புகழ்!
இந்தத் திருப்புகழக்கு என் முருகன் கால்களே நடனமாடிய போது, நம் கால்கள் எம்மாத்திரம்?
* திருப்புகழ் முதலில் தோன்றிய தலம் = திருவண்ணாமலை! = முத்தைத் தரு!
* ஆனால் அதோடு அப்படியே நின்று விட்டது! சும்மா இரு, சொல் அற!
* பின்பு வயலூர் சன்னிதியில் தான் முழு மூச்சாகத் துவங்கியது! = கைத்தல நிறை கனி!
* அப்படியே விராலி மலையில் வளர்ந்து, திருச்செந்தூர் வந்து சேர்ந்தது!
செந்தூர் வந்த சேர்ந்த அருணகிரி, அப்போ தான் முதன் முறையாக, அவன் செந்தில் செம்மேனியைச் சேவிக்கிறார்!
ஆளை விழுங்கி விடும் அழகன் அவரையும் விழுங்கி விட்டான்!
சேயோனின் அரவணைப்பில் மனம் துள்ளுகிறது அருணகிரிக்கு! கால்கள் துள்ளுகின்றன! வாயும் துள்ளுகிறது! வாய் மணக்கும் தமிழும் துள்ளுகிறது!
அருணகிரி முன்னழகை மட்டும் தானே பார்த்தார்! உற்சவ மூர்த்தியின் பின்னே வரப் பணிக்கின்றான் முருகன்! = முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்!
புறப்பாட்டில் பின்னே வந்த அருணகிரிக்கு, தன் துள்ளும் நடனக் கோலத்தைக் காட்டி, மகிழ்விக்கின்றான் செந்திலான்! அவர் பாட, அவன் ஆட, அவனுள் நான் ஆட, என் முருகனின் நடனம் இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்....சினிமாவில் திருப்புகழை...
தண்டை அணி வெண்டை, அங் கிண்கிணி சதங்கையும், தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே - நின் தந்தையினை முன் பரிந்து, இன்பவுரி கொண்டு நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே
கால்களில் தண்டை ஒலிக்க...வெண்டை என்னும் வீரக் கழல் ஒலிக்க... சதங்கை, கிண்கிணி ஒலிக்க...சிலம்புகள் ஒலிக்க...
இப்படி தொம் தொம் என்று ஆடும் நடனத்தில், பல ஒலிகளும் கொஞ்சுகின்றன!
உன் அப்பாவாகிய ஈசனை வணங்கும் கோலத்தில் கருவறைக் காட்சி கொடுக்கும் செந்தில்-அம்-பதியானே! நீ இன்பம் பெற்ற மகிழ்ச்சியில் ஆடும் அன்பு....என்னையும் ஆட்டுவிக்கிறதே!
கண்டுற கடம்புடன், சந்த மகுடங்களும், கஞ்ச மலர் செங்கையும், சிந்து வேலும், கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும், கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?
இதைக் கண்டு....
உன் கடம்ப மாலை ஆட....திருமுடி மகுடம் ஆட....தாமரைக் கைகள் ஆட, சிந்து வேல் ஆட....
கண்கள் ஆட, முகம் ஆட...சந்திர நிறம் போல் ஒளிரும் உன் மேனி ஆட...
என் கந்த வேளே.....கண்ணாளா.....என் கண் குளிர....இது அத்தனையும் என்னை வந்து சந்திக்குமா? சந்திக்குமா? சொல்லுடா!
புண்டரிகர் அண்டமும், கொண்ட பகிரண்டமும், பொங்கி எழ, வெங்களம் கொண்ட போது, பொன்கிரி எனச் சிறந்து, எங்கினும் வளர்ந்துமுன், புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்
தாமரையில் தவம் செய்யும் பிரம்மனின் உலகம் ஆட....மற்ற உலகங்களும் சேர்ந்து ஆட....
நீ போருக்குப் புறப்பட்ட போது பொங்கிய மகிழ்ச்சி போல், இன்று ஆட்டமும் மகிழ்ச்சி பொங்க...
பொன் மலை என்னும் செந்தூர் கந்தமாதான பர்வதத்தில் வளரும் வேலா...
உன் ஆட்டத்தை, அதோ அந்த ஆட்ட நாயகன் - குடமாடு கூத்தன் - திருமாலும் (பிரமன் தந்தை) பார்த்து மகிழ...ஆடல் வல்லான் உன் அப்பனும் பார்த்து மகிழ...
கொண்ட நடனம் பதம், செந்திலிலும் என்றன்முன், கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே! கொங்கை குற மங்கையின் சந்தமணம் உண்டிடும், கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!!
நீ ஆடும் இந்த நடனப் பதங்கள்....செந்தூரில் மட்டுமா? என் மனத்திலும் கொஞ்சி நடனம் செய்யும் கந்தவேளே!
குற மங்கையான அந்தப் பேதைப் பெண்ணின் மார்பில் வீசும் சந்தன அழுக்கையும் உண்டவா, எனைக் கொண்டவா!
கும்பமுனி அகத்தியன் கும்பிடும் தமிழ்க் கடவுளே! முருக வேளே!
என் ஆசை தீர ஆடு!
உன் ஆசை தீர ஆடு!
நம் ஆசை தீர ஆடு!
தண்டை அணி வெண்டை அங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே....முருகா!
என்னுள் நீ ஆட, உன்னுள் நான் ஆட, நம்முள் நாம் ஆட....என் முருகவா...ஆடுக ஆடுகவே!
படம்: அருணகிரிநாதர்
வரிகள்: அருணகிரி
இசை: ஜி.ராமனாதன்
குரல்: TMS