சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த, ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே சாந்தா!
பாடு சாந்தா, பாடு!
இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள். கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது.
நாதஸ்வரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சியாரின் வாசிப்பு அப்படி!
அப்படியே காட்சியை மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம்,
பாலைய்யாவின் கன ஜோரான வாசிப்பு பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் அழகே தனி!
இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, தெரியுமா?
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை!
அவர் போட எண்ணிய பாட்டு, தேவாரப் பாடல்.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு...இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம், 'சிங்கார வேலனே தேவா' என்கிற மெட்டில்.
பின்னர் யாரோ ஒருவர், வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, ஜானகியம்மா வரவழைக்கப்பட்டார்.
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது; கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் "சிங்கார வேலனே தேவா" என்று எழுதினார். ஜானகியம்மா பாடினார்.
ஆனால் காருக்குறிச்சியார் ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை.
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்.
ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா? அத்தனை நேர்த்தி.
(ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டது)
சரி, நாம்
சிக்கல் சிங்காரவேலர் சந்நிதிக்குச் செல்வோம் வாருங்கள்!
நாகைப்பட்டினத்தில் இருந்து கூப்பிடு தூரம் தான்.
முருகன் கொள்ளை அழகு. வடித்த சிற்பி யாரோ?
இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்.
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை!
இங்கு உற்சவ மூர்த்தி மட்டும் தான்!
இக்கோவிலின் மூலமூர்த்தி சிவனார், நவநீத ஈஸ்வரர் - வேல் நெடுங் கண்ணி அம்மை.
சூர சம்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, ஒரு அதிசயம் காணலாம். என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது.
சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா
செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா
படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா. பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு