Wednesday, March 31, 2010

ஜானகியா? சுசீலாவா? - சிங்கார வேலனே தேவா!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ந்த தொடர்ச்சியாக...
149 - உனக்கும் எனக்கும் கல்யாணமா!
150 - கவிக் காவடி

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு!


இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள்! கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது!
நாதசுரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாசிப்பு அப்படி!

காட்சியை youtube-இல் ஓட்டாமல், மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம், கே.சாரங்கபாணியின் கன ஜோரான பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் ஸ்டைலே தனி!

"சிங்கார வேலனே தேவா" = இதைப் பாடுவது ஜானகியா? சுசீலாம்மாவா?

சந்தேகமே இல்லை! "Melody Queen of the South" எனப்படும் ஜானகியே தான்!
* சரி, இந்தப் பாட்டை ஏன் சுசீலாம்மா பாடவில்லை?
* ஜானகி = "Melody Queen of the South" என்றால், சுசீலாம்மா = "Music Queen of the South" ஆச்சே?
* ஜானகி = "இன்"னிசை அரசி! சுசீலாம்மாவோ = "இசை" அரசி!
* அப்பறம் ஏன் இதைச் சுசீலாம்மா பாடவில்லை?
யார் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்-ன்னு நினைக்கறீங்க? சொல்லுங்க பார்ப்போம்! :)

இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, வாரீகளா? பார்க்கலாமா?



இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்! - "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"!
இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம் நாதசுரத்தில், இப்போதைய மெட்டில்! நம்ப முடியலை-ல்ல? :)
karaikurichi

பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி வரவழைக்கப்பட்டார்!
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!
தகப்பனுக்கு வர வேண்டிய புகழை, தகப்பன்-சாமி தட்டிச் சென்று விட்டான்! :)

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போ? = 1960-களில்! கீ-போர்ட் வந்து கீச் கீச் என்னாத கால கட்டம்! :)


சரி, இவ்வளவு கனமான, கர்நாடக இசை மலிந்த ஒரு பாட்டுக்கு...
அதுவும் ஆபேரி ராகமாம்...(நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்டராபேரி, கையில் எப்பமே இருக்கும் ப்ளாக்பேரி தான்! :)

இப்படி ஒரு நுணுக்கமான மரபு இசைக்கு, எப்படி ஜானகியைத் தேர்வு செய்தார் இசையமைப்பாளர்?
இத்தனைக்கும், இதற்கு முன்பு ஜானகி அவர்கள், அவ்வளவா கனமான பாடல்களைப் பாடியதும் இல்லை! அப்போது தான் அவர்கள் சினிமாப் பயணமே ஆரம்பம்!

கனரக மரபிசைப் பாடல்கள் - அதுவும் வேகமா - சாம்பிளுக்கு இதோ:
* சுசீலாம்மா = மன்னவன் வந்தானடி தோழி, மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன, இரவும் நிலவும் வளரட்டுமே..
* ஜானகி = சிங்கார வேலனே தேவா, சங்கராபரணம்-சாமஜ வர கமனா (கீச் கீச் நிறையவே உண்டு :)
* வாணி ஜெயராம் = ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே!

ஜானகி அவர்கள் பாடிய மரபிசை - சின்னத் தாயவள், சுந்தரன் ஞீயும் சுந்தரி ஞானும்...போன்ற பாடல்கள் எல்லாம் இனிமை தான்! சந்தேகமே இல்லை!
ஆனால் அந்தப் பாடல்கள், மன்னவன் வந்தானடி போல் "கனரகம்" இல்லை!

அப்படி இருக்க, "சிங்கார வேலனே தேவா"-என்னும் கனரகத்துக்கு, ஜானகி எப்படித் தேர்வானார் என்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கிட்டா மலைச்சிப் போயிருவீக! :)


இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, நாதசுரத்துக்கு-ன்னே ஈடு கொடுக்கக் கூடிய குரல்களைப் பல விதமா ஆய்வு பண்ணாராம்!
ஏன்-ன்னா நாதசுரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அம்புட்டு கனம்! அந்த சப்தத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனம் யாருக்கு இருக்கு?

பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்து, ஜானகி தான் நாதசுரத்துக்கென்றே மிகவும் இயைந்து பொருந்தினாராம்!

ஆந்திர அரசின் பி.சுசீலா விருதைப் பெறும் முதல் கலைஞர், எஸ்.ஜானகி


உம்ம்ம்ம்...என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டதோ தெரியாது!
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் பாடலை, "மன்னவன் வந்தானடி" பாடிய சுசீலாம்மா பாடினால் எப்படி இருந்திருக்கும்?-ன்னு கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை! :)
பின்னாளில், நாதசுரத்துக்கும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதைத் தில்லானா மோகனாம்பாளில்...சுசீலாம்மா நிரூபித்துக் காட்டினார் = "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன"?

அதற்காக ஜானகி அவர்களை இந்தப் பாடலுக்கு தோது இல்லை-ன்னு சொல்ல வரலை! நல்லாத் தான் பண்ணி இருக்காங்க!
ஆனா ஜானகிக்கு எப்பமே ஒரு "கிக்"கான மெல்லீலீலீய குரல்! அது நாதசுரத்துக்கு ஈடு கொடுக்க வல்லது-ன்னு "சொல்லப்பட்ட காரணம்" தான், எனக்குச் சட்டு-ன்னு பிடிபடலை!
அப்படிப் பார்த்தா, எல்.ஆர்.ஈஸ்வரி தான் நாதசுரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய Best Choice! :)

மத்தபடி, காதல் பாட்டு-ன்னு வந்துச்சி-ன்னா, எப்பமே நான் ஜானகியின் பரம விசிறி-ன்னு பல பேருக்கு, குறிப்பா கண்ணன் பாட்டு வலைப்பூ வாசிச்சவங்களுக்கு நல்லாவே தெரியும்! Coz of that "kick"! :)

மேகம் கருக்குது, நிலாக் காயும் நேரம், பட்டுப் பூவே மெட்டுப் பாடு, இஞ்சி இடுப்பழகா, கொடியிலே மல்லியப்பூ, தாலாட்டுதே வானம் - இப்படிச் சதா சர்வ காலமும் ஜானகியைக் கேட்ட நான்...உம்ம்ம்...
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But am always so? முருகா!


சரி...சரி...சுசீலாவா?-ஜானகியா? இந்தச் சிக்கல்-ல நுழையும் முன்னாடி, சிக்கல் சந்நிதிக்குள்ளாற நுழைவோம் வாருங்கள்!

முருகன் ஊருலாத் திருமேனி (உற்சவர்) = சிங்கார வேலன்....கொள்ளை அழகு! வடித்த சிற்பி யாரோ?

இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்!
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை! படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்....தெரியும்!
சந்தனக் காப்பை முகத்தில் வழித்து விடும் போது...
அந்த இடது பக்க இதழோரமா.....
Two Lips-My Tulips....அப்படியே குவிச்சி என்னை என்னமோ பண்ணும்! :)

சிக்கல் சிங்கார வேலர்


(பெரு காதல் உற்ற தமியேனை நீ நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
பெருவாழ்வு பற்ற அருள்வாயே! உனக்"கே" என்னை அருள்வாயே!

வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக், கனாக் கண்டேன்!
)

இக்கோவிலின் மூலமூர்த்தி முருகன் அல்ல! சிவனார் தான்!
பல புகழ் பெற்ற முருகன் கோயில்களிலும் இப்படியே - திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உட்பட!
இறைவன் = நவநீத ஈஸ்வரர் (வெண்ணெய்ப் பிரான்)! இறைவி = வேல் நெடுங் கண்ணி! சூர சங்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் காணலாம்! என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது!

சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!
For a change, முதலில் தெலுங்கில் கேட்போமா? :)

பயப்படாதீங்க! சூப்பரா இருக்கு! ஜானகியே தான் பாடறாங்க! - "நீ லீலா பாடித தேவா, மனதே ஆலிஞ்ச வேடக தேவா!"-ன்னு தெலுங்கில் வருது! படம்: முரிப்பிஞ்சே முவ்வாலு! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!


படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா.பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
ராகம்: ஆபேரி

தமிழில்...


சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா!


சரி...நாதசுரத்துக்கு ஈடுகொடுக்க வல்லவர்-ன்னு...ஆய்வு எப்படியோ இருக்கட்டும்....
அப்போது தான் திரைப் பயணத்தை ஆரம்பித்த ஜானகி அவர்களுக்கு,
முருகன் கொடுத்த அழகிய Lift என்றே இதைக் கொள்ள வேணும்!
இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!



படத்தில் ஜெமினி-சாவித்ரி பாடல் காட்சி:


Other Versions:

தவில் - வலையப்பட்டி:


கீ-போர்ட் சத்யா:


புல்லாங்குழலில்..விமல் என்ற இளங்கலைஞர்

மலையாளக் கலைஞர் Stephen Devassy on Keyboard:


மலையாளத் தொலைக்காட்சிப் போட்டி ஒன்றில்...அருணா மேரி:


கடைசீயா....நம்ம சின்மயி :)

Sunday, March 28, 2010

முருகனருள் 150: கவிக் காவடி!

அனைத்து முருகனடியார்களையும் அணைத்து,
இதோ, பங்குனி உத்திரம் அன்று.....முருகனருள் 150ஆம் பதிவு!

முருகனருள் வலைப்பூக் குழுவின் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்!
இங்குள்ள முருகனடியார்கள் மட்டுமன்றி,
அடியவர், அடியவர் அல்லாதார் அனைவரையும் வணங்கி,
இந்தச் சிறப்புக் காவடிப் பதிவைத் துவங்கிடுவோம்!

ஒரு நூறு கடந்து,
இரு நூறு எதிர் கொள்ள,
இரு,நூறு என்று இடுகைகளை எண்ணி,

ஒரு நூறும், இரு நூறும்,
என்னில் அவன், முன் ஊற,
அவனில் நான், நான் ஊற,
ஐ நூறு, துயர் அறு நூறு,

ஒரு நூறும் + அரை நூறும்
திரு முருகன் திரு நீறே!
இன்று அவனின் திரு நூறே!




காவடிகளில் பல காவடிகள் உண்டு!
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடியாம்! சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்!

ஆனால் கவிக் காவடி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
கவிதை எழுதி , இரண்டு பக்கமும் தொங்க விட்டு வரும் காவடியா? :)
இல்லையில்லை! இது கவி-நயா என்ற அக்கா எழுதிய கவி-காவடி!

இந்தக் காவடிச் சிந்தை, பல மாதங்களுக்கு முன்பே எழுதி, இங்கு பதிவிட அனுப்பி இருந்தார்!
ஆனால் என் நிலைமை என்ன நிலைமையோ, அப்போது விட்டுப் போனது!
விட்டுப் போனதை விட்டு விடுவானா என் முருகன்?
விட்டுப் போனதைத் தொட்டுக் கொண்டு விட்டான் இன்று!

இதோ கவிநயா அக்கா எழுதிய காவடிச் சிந்து, முருகனருள் வலைப்பூவின் 150ஆம் பதிவாக...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கவிதை வேல் முருகனுக்கு அரோகரா!



மீனா அவர்களின் குரலில்... கேட்டுக்கிட்டே படிங்க... நன்றி மீனா!

Murugan kavadi son...


குமரன் என்பது-அவன் பேரு - குன்று
தோறும் அவனது ஊரு - தன்னை
மன்றாடிடும் அடியார்களை, கண்போலவே காத்திடும் - அவன்
இறைவன் எங்கள் தலைவன்!

சூரனை வேலால் பிளந்தான் - கொண்டைச்
சேவற் கொடியோனாய்த் திகழ்ந்தான் - சக்தி
வேலன்-சிவ பாலன்-அவன், தேவர்-துயர் தூசாக்கிட
உதித்தான் அவ தரித்தான்!

மயில் மீதினில் ஏறியே வருவான் - அவன்
துயர்களைக் களைந்தெறிந் தருள்வான் - ஆறு
முகங்கொண்ட முருகன்-அவன், அழகன்-என மனங்-குழைந்திட
வருவான் இன்பம் தருவான்!


காவடி தூக்கியே ஆடு - அவன்
காலடி பணிந்தே பாடு - நம்
பாவங்களைக் பொடியாக்கிடும் தூயன்-அவன் திருவடிகளை
நாடு தினம் நாடு!

ஆறு படை வீடு பாரு - அது
ஆறு தலைத் தரும் கேளு - கந்தன்
சரவணபவ எனும்-மந்திரம் வினைகள்-களை திரு-மந்திரம்
கூறு நாளும் கூறு!

செந்தமிழ்க் காவலன் அவனே - நாமும்
சிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன
முருகன்-அவன், அழகன்-அவன், குமரன்-அவன், கந்தன்-பதம்
பணிவோம் பணிந்து மகிழ்வோம்!!




வாழ்க்கையின் பாரத்தை...
இன்முகத்துடன், பாட்டமும், ஆட்டமுமாய்ச் சுமந்து விட்டால்.....பாரம் தெரியாது! பாசம் தெரிந்து விடும்! = இது தான் காவடி! எளிய மக்கள், மெத்தப் படித்த நமக்கு உணர்த்தும் பாடக் காவடியே பால் காவடி!

சரி, முதன் முதல்...காவடி எப்போ எடுத்தாங்க?
அந்தக் கதை........முருகனருள் - 100 ஆம் பதிவில் இருக்கு! இதோ!
முதல் காவடி எடுத்தது இடும்பன் தான்!
இது பற்றி புராணக் குறிப்புகள் தான் இருக்கே தவிர, இலக்கியக் குறிப்புகள் அவ்வளவா இல்லை!

* நாட்டு மக்கள், நம் கந்தனை, காலாற, காவடி எடுத்து வழிபடும் வழக்கம் பற்றி...
சங்க இலக்கியங்களில் காணவில்லை!
* பின் வந்த சிற்றிலக்கியங்களிலும் அவ்வளவாகக் காணவில்லை!
* சந்தம் செய்யவே பிறந்த நம் சொந்தக் கவியான அருணகிரியும், ஏனோ காவடிச் சிந்தில் போட்டாரில்லை!

பிற்கால இலக்கியங்களில் இல்லாவிட்டால், தமிழ்க் கடவுள் தான் இல்லையென்று ஆகி விடுமா? காவடி தான் இல்லையென்று ஆகி விடுமா?

பெரும்பாலும் பண்டைய நாட்களில் தல யாத்திரைக்கு எளிய கிராம மக்கள் நடந்து தான் போவாங்க! இன்னிக்கும் சில பேரு அப்படிப் பாத யாத்திரை போறாங்க!
அப்போ, வழியில் களைப்பு தெரியாம இருக்க பாடப்படும்/ஆடப்படும் பாடல் = வழிநடைச் சிந்து!
காவடியும் சேர்த்து வச்சிக்கிட்டு ஆடினால் = காவடிச் சிந்து!

கிராம மக்களே பாடுவதால், ரொம்ப கடினமான சொற் செட்டு எல்லாம் இல்லாமல் எளிமையாக இருக்கும்!
இதன் துள்ளல், மக்களிடையே மிகவும் பிரபலம் ஆகியது! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியங்களிலும் தலை தூக்க ஆரம்பித்தது! இசைக் கச்சேரிகளிலும் நுழைந்து கொண்டது!

தமிழ் இலக்கியத்துக்கு, எளியோரின் இந்த வழிநடைச் சிந்தை கொண்டு வந்தவர் கலியன் என்னும் திருமங்கை ஆழ்வார்! இது பற்றி இங்கே!
ஆனால், இது வழிநடைச் சிந்தாக இருந்ததே தவிர, காவடி ஆடும் சிந்தாக மாறவில்லை!

கடைசியில்...19ஆம் நூற்றாண்டு, சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்...
தெலுங்குக் குடும்பத்தில் பிறந்து,
தமிழ்க் கடவுளுக்கு உரித்தான காவடியை,
பாட்டுக்கும் மேடைக் கச்சேரிக்கும் கொண்டு வந்தவர்!

சென்னிக்குளம் முருகன், கழுகுமலை முருகன் - இவிங்க ரெண்டு பேர் மேலேயும் இவரு போட்ட காவடிச் சிந்துப் பாட்டுக்கள் எக்கச்சக்கம்! இன்னிக்கும் கச்சேரிகளில் காவடிச் சிந்து-ன்னா இவரு பாட்டு தான்!
அப்படியே ஊத்துக்காடு வேங்கட கவி, பாரதியார், பாபநாசம் சிவன் போன்றோரும் கொஞ்சம் கொஞ்சம் பாடி...இன்று புஷ்பவனம் குப்புசாமி வரை.......காவடி தொடர்கிறது!

ஈழம், சிங்கை, மலேயா, பர்மா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் ராச்செஸ்டர், லண்டன், பாரீஸ்...இன்னும் பாரெல்லாம் பரவி ஆடுகிறது!


முருகனருள் வலைப்பூ...

பாடல்களுக்கான வலைப்பூ என்ற ஆரம்பப் பரிணாமத்தையும் தாண்டி,
* இலக்கியம், சமூகம், ஆய்வுகள்,
* புதிர் விளையாட்டுகள்,
* ஆலய நிகழ்வுகள்/தகவல்கள்,
* பொதுச் சேவைக்கான இடம்...(குழந்தைகள், முதியோர், மருத்துவம், கல்வி முனைப்புகள்-தொடர்புகள்)
என்று பலப்பல முகங் காட்டி இந்த முருகனருள் பரவ வேணும்!
- உங்கள் ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும் தாருங்கள்!

முருகனருள் = பல்கிப் பெருகி, ஆயிரம் முகங்களாக மலர்ந்து, பல்லாண்டு பல்லாண்டு, அவன் அடியார்கள் கூடும் இடமாக இருக்க வேணும்!

இருநிலம் மீதினில்
எளியனும் வாழ
எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ!



Reference: இதர காவடிப் பதிவுகள்:

முருகனருள் வலைப்பூவில்:
தைப்பூசம்: குத்துப் பாட்டு=கிளிக் கண்ணி+காவடிச் சிந்து!
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு
100ஆம் பதிவு! பதிவர்கள் எடுக்கும் ஆறுபடைக் காவடிச் சிந்து!
வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து
காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!
காவடிச் சிந்தின் கதை!

கண்ணன் பாட்டு வலைப்பூவில்:
முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்ணன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!

முருகனருள் 149: உனக்கும் எனக்கும் கல்யாணமா!!!

முருகனருள் வலைப்பூ 150-ஐ தொடும் நல்வேளையிலே...
மங்களகரமாக இங்கு ஒரு திருமணம்!
அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

* பேரழகுப் பெட்டகமான மயிலார், முருக மா பிள்ளையை, முருக மாப்பிள்ளையாக்கி, பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2041, பங்குனித் திங்கள் பதினைந்தாம் நாள் (29-Mar-2010), உத்திர நட்சத்திரம் கூடிய பங்குனி உத்திர நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, செந்தில் மா நகரும் சிறப்புடனே தாம் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,
* எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய்,
* காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்...
* சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு விண்ணப்பம்!




ஆகா! யாருப்பா தம்பதிகள்? யாருக்கும் யாருக்கும் கல்யாணம்? :)

வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து-ன்னு, தோழி கோதையின் கனவு எல்லாருக்கும் தெரியும்! ஆனால்...ஆனால்...இதோ....பின்வரும் பாட்டை எங்காச்சும் படிச்சிருக்கீங்களா-ன்னு பாருங்க? :)

இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்,
நன்மெட்டி நாண் பூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!

இது போல ஒரு பத்து பாசுரம் இருக்கு! அதை முருகனருளான மாதவிப் பந்தலில் அப்பறமா இடுகிறேன்!
இப்போ கல்யாணப் பந்தல்-ல கூடுவோம்!
அப்பறமா மாதவிப் பந்தல்-ல கூடுவோம்! :)



இன்னும் சில மணி நேரத்தில் முருகனருள்-150 உதிக்கப் போகிறது!
இப்போது சிற்றஞ் சிறுகாலே!
உலகம் உவப்ப பலர் புகழ் ஞாயிறு.....பதிவு கண்டாங்கு!

முருகனருள்-150, கவிநயா அக்காவின் காவடிச் சிந்து என்று முன்னமே முடிவாகி விட்டது!
பங்குனி உத்திரம் அன்னிக்கி இட, ஷைலஜா அக்காவும் ஒரு பாட்டு எழுதி அனுப்பி இருந்தார்! சபாஷ் சரியான போட்டி! :)

பங்குனி உத்திரம் = முருகனுக்குத் திருமண நாள் ஆகையாலே...
கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டு,
ஷை-அக்காவின் கவிதையை, கல்யாணக் கவிதையா, மாற்றி விட்டேன்!
அக்காவும், பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிச்சிட்டாங்க! அப்படித் தானே-க்கா? :)

சில வரிகளை மட்டுமே கல்யாணத்துக்கு ஒட்டி வருவது போல் மாற்றம் செஞ்சேன்!
அக்காவின் வைர வரிகளில் எல்லாம் கை வைக்கவில்லை!
மாங்கல்யத் தங்க வரிகளில் மட்டுமே தங்க வைத்தேன்:)

* அப்போ, கண்ணன் பாட்டு-99: அடியேன் எழுதிய கவிதையை, ஷைலஜா அக்கா பாடித் தந்தாங்க!
* இப்போ, முருகனருள்-149: அக்கா எழுதிய கவிதையை, அடியேன் பாடித் தருகிறேன்!

நன்றிக்...கடன் பல தீர்த்து.........கந்தன் என்னை அழைத்துக் கொள்ளட்டும்!
இதோ...பாடலும்...இசையும்...சிறப்புப் பதிவுமாய்...



முருகனருள்-149!



[தடை நீங்கி....திருமண உறுதியும் அறிவிப்பும்]

திருச்செந்தூர் என்ன வெகு தூரமா? - உன்
திருவடி அன்றி வேறு பரிகாரமா?
ஒருச்செந்தூர் அங்கே நம் மனத்தோரமா
உனக்கும் எனக்கும் திருக் கல்யாணமா!!!

[திருமணம் - திருமாங்கல்யம் - அம்மி மிதித்தல்]

வாள்கொண்ட கண்ணுக்கு மை தீட்டினேன் - உன்னை
வரவேற்கச் செவ்வாழைக் கை நீட்டினேன்!
ஆட்கொண்டு மாங்கல்யம் தனைப் பூட்டினாய் - என்னை
கைப்பற்றிக் கால்பற்றிச் சுகம் கூட்டினாய்!

[முதல் இரவு - பாலும் பழமும்]

பால்தந்து உனக்கென்னைத் தேர் ஆக்கினேன்!
பழம்தந்துன் பழந்தோல்வி நேர் ஆக்கினேன்!
தோள்தந்து துயில்காண விரைந்து ஓடினேன்!
தமிழ்தந்துன் திருமார்பில் கரைந்து ஆடினேன்!

[எந்நாளும்...]

காதல்கொண்டார் சொல்லும் சொல் என்னவோ? - என்
வேதமும் நீ அன்றி வேறென்னவோ?
சாதல் வந்தால் கூட கவலை இல்லை! - என்
சங்கீதம் நீயன்றி வேறு இல்லை!!!
முருகா! முருகா! முருகா! முருகா!


உன் கையை நீநீநீட்டி.......என் கையை ஈஈஈட்டிக் கொள்!
தாவிப் படரக் கொழு கொம்பு இல்லை!
கொழு கொம்பு வேண்டேன்! கந்து தனையே வேண்டினேன்!

கந்தா...கை நீநீநீட்டி கையைப் பற்றிக் கொள்!
தனிக் கொடியை, தணி-கைக் கொடியைச் சுற்றிக் கொள்!

உன் கையும் உண்டு, எனக்கொரு மெய்த் துணையே! முருகாஆ!

கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தல் பகர்ந்து என்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் அவனிடம் சென்று சேர்மினே!

Tuesday, March 23, 2010

"ஓரருளே! உடனருளே!"

"ஓரருளே! உடனருளே!"


பேரருளைப் பாடுதலே பெருமகிழ்வு தந்திருக்கும்
பேரருளால் வந்ததெல்லாம் பெருமகிழ்வே தந்திருக்கும்
பெருமகிழ்வு கொண்டிருக்கும் ஓரருளில் கலந்திருந்தால்
பெருமகிழ்வும் குறைவின்றி நாடோறும் வளர்ந்திருக்கும்!

ஆருமில்லை இங்கெனக்கு எனவெண்ணி வருந்தாமல்
ஆருமில்லாப் போழ்தினிலும் தன்னருளைப் பொழிந்திருப்பாய்!
ஓரருளே நினைப்பற்றி ஓராயிரம் உருக்கொண்டால்
ஓரருளாய் ஒன்றிவந்து உலப்பிலா அன்பளிப்பாய்!

தீராத துன்பமெலாம் தினம்வந்து வாட்டுகையில்
தீராது இதுவென்றே மனம்வருந்தி வாடுகையில்
தீராதும் தீர்த்துவைக்கும் ஓரருளே! உடனின்று
தீராத துன்பமெலாம் தான்வெருட்டித் தீர்த்திடுவாய்!

ஓராது யானுன்னை மறந்திங்கே சென்றாலும்
ஓராது எனக்கருளும் ஒருதெய்வம் நீதானே
பாராது யான்செய்யும் பல்வேறு பாவமெல்லாம்
பாராது எனைக்காக்கும் ஓரருளும் நீதானே!

கூரான நாவாலே குத்தியுனைக் கிழித்தாலும்
கூறாது கூடவந்து காக்கின்ற ஓரருளே!
கூறாது யான்செய்யும் பிழையாவும் நீபொறுத்துக்
கூரான வேலுடனே என்முன்னே வரவேணும்!

ஏறாதென் புத்தியிலே என்னவருள் செய்தாலும்
ஏறாதோ எனக்கிங்கு நினையறியும் அருள்ஞானம்
ஏறாத மலைதாண்டி இருக்கின்ற ஓரருளே
ஏறுமயில் மீதேறி எனைக்காக்க வரவேணும்!

சீரான வழியினிலே நான் தினமும் சென்றிடவே
சீராக உடனிருந்து எந்நாளும் அருள்வோனே
சீரோடும் சிறப்போடும் ஓரருளால் செழித்திடவே
சீரான மயிலேறி வேலோடு வரவேணும்!

வேறேதும் பாதையிலே நான்சென்று வீழாமல்
வேராக எனைத்தாங்கி நாடோறும் காப்போனே
வேறான மாயமலம் எனைவிட்டு நீங்கிடவே
வேரறுக்க வேலெடுத்து வினைதீர்க்கும் ஓரருளே!

வாராது போவாயோ வந்துமுகம் காட்டாயோ
வாராது வாடுமிந்த பாலன்முகம் பார்க்கலையோ
வாராது போனாலுன் வல்லமைக்கு அழகாமோ
வாராதிருப்பதேனோ ஓரருளைத் தாராயோ!

காரிருளாய்த் துன்பங்கள் கடிந்தென்னைத் துரத்துதே
காரிருளில் கதிரவனாய்க் கடிதேகி வாமுருகா
பாரினிலே பட்டதெல்லாம் பனிபோல விலகிடவுன்
பார்வையொன்றே ஓரருளே! பரிவுடனே உடனருளே!

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP