Tuesday, May 27, 2025

ஏவினை நேர்விழி | திருச்செந்தூர் - முருகன் கோட்டமா? வள்ளிக் கோட்டமா?

திருச்செந்தூர், முருகனின் ஆற்றுப்படை வீடுகளில் ஒன்று என்று பலருக்கும் தெரியும். 
ஆனால் அதே திருச்செந்தூர், வள்ளியின் சிறப்பு பெற்ற தலம் என்பதும் தெரியுமா?
சொல்லப் போனால், திருச்செந்தூரின் தொன்மையில், இன்றைய முருகனை விடவும், வள்ளிக்கு ஏற்றம்! 
முருகனருள் அன்பர்களுக்கு ஆண்டுதோறுமான வணக்கம்!

இன்று (May 27), ஜி.ரா. என்கின்ற தோழன் இராகவனின் பிறந்தநாள்.
வாழ்த்துவோம், வாழ்த்தினில் ஆழ்த்துவோம், 
மகிழ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு இராகவா.
உடல் நலனும் உள்ள நலனும் உறவேலோர் எம்பாவாய்!



திருச்செந்தூர் என்பது இன்றைய பெயர்.
செந்தில் என்பதே மிகப் பழமையான பெயர். செந்து+இல் = செந்தில்.

*வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் (புறநானூறு)
*சீர் கெழு செந்திலும் செங்கோடும் (சிலப்பதிகாரம்)

செந்து என்பது செம்மை குறித்த சொல். நலம்/சிறப்பு என்பது பொருள்.
செம்மை என்ற சொல்லை.. நல்ல/சிறப்பான என்ற பொருள் வரும்படித் தமிழில் பயன்படுத்துகிறோம்.
இன்றளவும், பேச்சுத் தமிழில் கூடச் ”செம்மையா இருக்கு” என்ற பழந்தமிழ்ப் பயன்பாடு உள்ளதே?

ஒன்றைச் சிறப்பிக்க, அதன் கூடவே ”செம்” சேர்த்தால் போதும்; 
செந்தமிழ், செம்மாப்பு, செவ்வழி.. இப்படிப் பல செம்மைகள்!
அவ்வகையில், நலம் மிக்க முருகனின் ஊர், சிறப்பான ஊர் ஆதலால், செந்து+ஊர் = செந்தூர் ஆனது.

அதிகம் அலைகள் ஆர்ப்பரிக்காது, சீரான அலைகள் மோதுவதால், சீர்+அலை+வாய் என்றும் பெயர்.
ஊரின் வடக்கே (மேலே), முகவை (இராமநாதபுரம்) வளைந்த குடா அமைந்துள்ளதாலும்,
ஊரின் கிழக்கே, ஈழத்தின் புத்தளம் பகுதியில், மன்னார் வளைகுடா அமைந்துள்ளதாலும்,
திருச்செந்தூரில், அலைகள் அதிகம் மோதுவதில்லை; ஆழிப் பேரலையின் (Tsunami) போது கூட, அதிகமான தாக்கம் இல்லை.


எப்போதும் சீரான அலைகளே மோதும் நிலத்தின் வாய்ப்புறத்தில் செந்தூர் அமைந்துள்ளதால், 
சீரலைவாய் என்று சங்கத் தமிழின் தொல்பழங் காலத்திலேயே, இயற்கையாகப் பெயர் வைத்தனர்.

*உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்
சீர்-அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே (திருமுருகாற்றுப்படை)
*திரு மணி விளக்கின் அலைவாய்
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே (அகநானூறு)

செந்து+ஊர் = செம்மை மிக்க சிறப்பான ஊர், செந்தூர்.
செந்து என்றொரு பண் (ராகம்) உள்ளது. அதுவும் சிறப்பான பெரும்பண்.

பின்னாளில், தமிழில் சம்ஸ்கிருதம் மிகுதியாகக் கலக்கப்பட்ட போது,
செம்மை என்ற தமிழ்ப் பொருள் விலகி,
ஜந்து (जन्तु)  -> செந்து ஆனதாகப் பொருத்தமே இல்லாமல் பொருள் திரித்து,
உலகிலுள்ள ஜந்துக்களுக்கு அருள் பாலிக்கும் சுப்ரமண்யக் கடவுளாகப்
பெயர் மாற்றம் செய்தார்கள்;  ஜெயந்திபுரம் என்ற ஊர்ப்பேரும் சேர்த்தார்கள்.
இன்றும், கோயில் உற்சவரின் பெயர் ஜெயந்திநாதர் என்றே உள்ளது.

ஆனால், செம்மை மிக்க செந்தூரின் பெயரை அழிக்க முடியவில்லை!
இன்றளவும், மக்களிடையே செந்தில்/செந்தூர் தான் வழக்காடுகிறது.



இன்றைய திருச்செந்தூரை, மதம்/அதீத தன்னலமான பக்தி கலவாமல்,
இயற்கையாகப் பார்த்தால், பல புவியியல் உண்மைகள் தெரிய வரும்!
தமிழாகப் பார்த்தால், வரலாற்றுத் தொல்லியல் உண்மைகள் தெரிய வரும்!

செந்தூரின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சிறிய மலைப் பகுதி போன்ற மணற்பாறையில், இயற்கையான குடைவரை ஒன்று அமைந்துள்ளது. ’வள்ளி குகை’ என்று அதற்குப் பெயர். 
அங்கே சிறிய குடைவரைக் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. தொன்மையானது தான். (இன்று Concrete மண்டபம் முதலான பகுதிகள் கட்டப்பட்டு, குடைவரையின் இயற்கை அழகை மறைக்கின்றன).

எப்படி, கடல் மட்டத்தின் சற்றுக் கீழ் அமைந்துள்ள செந்தூர்க் கருவறையான முருகனின் கோட்டம் குறுகலானதோ,
அதே போல், இந்த வள்ளிக் குகையும் குறுகலானது தான். செந்தூர் முருகன் கோட்டத்துக்கு இணையாகச் செந்தூர் வள்ளிக் குகையும் உள்ளது.

இந்த வள்ளிக் குகையில், முதலாம் வரகுணனின் கல்வெட்டு (7th Century CE) காணப்படுகிறது. இவன் இடைக்காலப் பாண்டிய அரசன்.
குடைவரையின் கருவறையைச் சுற்றி வலம் வர, குறுகலான பாதை இவன் காலத்தில்  குடையப்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
ஆனால் அதற்கும் முன்பே, வள்ளி பழமையானவள்! செந்தூர் முருகனைப் போலவே, செந்தூர் வள்ளி பழமையானவள்.



சங்கத் தமிழின் பத்துப்பாட்டு நூல் தொகுப்புகளுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில்,
சம்ஸ்கிருத மொழிக் கலப்பு காணப்பட்டாலும், அதில் கூட...
தேவஸேனா (தெய்வயானை) என்ற பெயரைச் சொல்லாது,
முருகனோடு வள்ளியை மட்டுமே பெயரிட்டுக் குறிப்பிடுகிறார், 
அதுவும் திருச்செந்தூரைப் பற்றிப் பாடும் பகுதியில்.

ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
...
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே. (திருமுருகாற்றுப்படை)

இப்படி வள்ளியோடு மட்டும் கூடிய முருகனைத் தான்
திருச்செந்தூரில் படம் பிடித்துக் காட்டுகிறது, சங்கத் தமிழ்! 
இந்த வள்ளி-முருகன், குறிஞ்சி நில மக்களின் தொன்மம்.
குடி காத்த மூதாதையர்களையே, வள்ளி-முருகனாக வணங்கி வந்தனர்.

முல்லை/குறிஞ்சி (காடு/மலை) நாகரிகத்தை விட்டு,
*ஆற்றுநீர் பாயும் வயல்வெளி நாகரிகத்துக்கு இடம்பெயர்ந்த போதும்
*ஆற்றோரமாகவே ஊர் அமைத்து, வேளாண்மை (மருதம்) பழகிய போதும்
*பின்பு, அதே ஆறுடன் பயணித்து, கடல் நாகரிகம் (நெய்தல்) கண்ட போதும்,
தங்களின் மூதாதைத் தொன்மங்களான - வள்ளி முருகனையும்
இந்தப் புதிய நாகரிக நிலப்பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றார்கள் மக்கள்!

அப்படி வழிவந்ததே குறிஞ்சி வள்ளி-முருகன், நெய்தல் நிலச் செந்தூருக்கு!
சீரலைவாய்க் குடைவரையின் தாழ்வரையில் இன்றும் காட்சி தருகிறார்கள்.

சொல்லப் போனால், முருகன் சிலை பல முறை மாற்றப்பட்டுள்ளது.
இயற்கையான இரண்டு கை முருகன், நான்கு கை முருகன் ஆகிவிட்டான்.
பழமையான வேல்வழிபாடு, இன்று அடையாளமின்றி ஒழிந்து போனது.
காஞ்சி மடத்து மஹா பெரியவா, புதிய சிலைகளை நிறுவியுள்ளார்.

ஆனால், வள்ளி மட்டும், இயற்கையாக அப்படியே நிற்கிறாள்!
இரண்டு கைகள் மட்டுமே, இயற்கையான பழங்குடிப் பெண்ணாக..
குடைவரையில், பாறையோடு ஒட்டியுள்ளமையால்,
முருகனை மாற்றியது போல், வள்ளியை மாற்றமுடியவில்லை போலும்!
 

வள்ளிக் குகை - வள்ளி மூலவர்

செந்தூர்க் கோட்டம் - முருகன் மூலவர்



நெடிய வரலாறு விடுத்து, இனிய பாடலுக்கு வருவோம்.
அதுவே இன்றைய பிறந்தநாள் பாடல்.
சினிமாப் பாடல் என்றாலும், திருப்புகழ்ப் பாடலும் கூட!

காவியத் தலைவன் என்றொரு படம் வந்தது, 2014-இல்.
படம், 19-20ஆம் நூற்றாண்டு நாடகப் பாணியில் அமைந்தாலும்,
நடித்தது என்னவோ, இக்காலக் கலைஞர்கள் தாம்.
ஆனாலும், படம் சரியாக ஓடவில்லை; பெரிய வரவேற்பு இல்லை.
மக்கள் ஆர்வம் (ரசனை) மாறி விட்டது போல? 
பாகுபலி படத்தின் பெருவீச்சு (பிரம்மாண்டம்) இதில் இல்லை.

எனினும், சில சுவையான பகுதிகள், இப்படத்தில் அரங்கேறின.
அதில் ஒன்று தான், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் திருப்புகழ்!
அமரர் வாணி ஜெயராம் அம்மாவின் தீம்பால் தெவிட்டாத குரலில்,
மிகச் சுருக்கமாக, ஒரு 15th century CE பாடலை மீளுருவாக்கம் செய்தார்கள்.
அக் காட்சியையும், பாடலையும் ஒருசேரத் துய்த்து மகிழுங்கள்.



ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை - நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழுதா முழு
ஏழையை மோழையை - அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மை இலாதனை - இகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவதும் ஒருநாளே!

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் - குறமாதை
நாடிய கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் உடையோனே

தேவி மனோன்மணி ஆயி பராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையில் நீழலிலே திகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.

வரி: அருணகிரிநாதர் (திருப்புகழ் - 36 | தலம்: திருச்செந்தூர்)
குரல்: வாணி ஜெயராம்
இசை: ஏ.ஆர். ரகுமான்
படம்: காவியத் தலைவன்

பாடலின் சுருக்கமான பொருள்:

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை - நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழுதா முழு
ஏழையை மோழையை - அகலாநீள்

(அம்பு போல் கூர்விழிப் பெண்களைக் கூடுவதையே கொண்ட
குற்றம் மிக்க மூடனை, நன்னெறி பேணாதவனை
ஈனத்தனம் மிக்க வீணனை, கல்விச் செல்வத்தில் கவனம் செல்லாத
ஏழையை, தற்காக்கத் திறமில்லாத வீரமற்ற கோழையை...)

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மை இலாதனை - இகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவதும் ஒருநாளே!

(அகலாத நீண்ட வினைப்பயன் மூடிய நோய்பிணி கொண்டவனை,
வாய்மை இல்லாதவனான என்னை இகழ்ந்து ஒதுக்காமல்
மணிகள் ஒலிக்கும் சிலம்பு பூட்டிய குளிர்ந்த பாதங்களைத் தந்து
என்றாவது ஒரு நாள், எனக்கு நல்வாழ்வு அருள்வாயே!)

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் - குறமாதை
நாடிய கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் உடையோனே

(நாவில் திறம் கொண்டு பாடும் இசைநூல் வல்லுநர்கள் அடியொற்றி
நாரதமுனி வந்து ஆற்றுப்படுத்திய குறமகள் வள்ளியைக்
காட்டில் விரும்பிச் சென்று காதலித்த சேவகநாயகனே, முருகா!
அழகிய மயிலை உடைய குறிஞ்சித் தலைவனே...)

தேவி மனோன்மணி ஆயி பராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையில் நீழலிலே திகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.

(தேவியாகிய கொற்றவைத் தாயான குடிமூத்தவள்
தேன் போல் இனிமையாகப் பேசும் அவள் பெற்று வளர்த்த இளைஞனே!
நீண்ட உயரமான சோலையின் நிழலில் திகழ்கின்ற
சீர்+அலை+வாய் எனும் திருச்செந்தூரில் வருகின்ற முருகப் பெருமானே!)




பாடலின் விரிவான பொருள்:

பொதுவாக, அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் பலவும், பயணப் பாடல்கள். ஒவ்வொரு தலமாகச் சென்று பாடிய பாடல்களே! பயணக் கட்டுரைகள் போல், பயணப் பாடல்கள். ஆனால், சந்தம் மிக்கவை.

அதிலும், அவை யாவும் ஒரு வகையான Confession (குற்ற ஒப்புகை) பாடல்கள். கவிதையின் முதல் பகுதியில் தன் கடந்த கால வாழ்க்கைத் தவறுகளை ஒப்புக் கொண்டும், கவிதையின் இரண்டாம் பகுதியில், அத் தவறுகளுக்கான கழுவாயாக முருகனின் அருளை வேண்டி நிற்பதும் என்று இந்த Theme-இல் (கருப்பொருள்) தான் மிகுதியாக இருக்கும். நடுநடுவே, சில புராணச் செய்திகளும் வரவி வரும். 

ஒரு சிலருக்கு, இது Repetition (கூறுவது கூறல்) போல் தோன்றலாம்; ஆனால், சந்தம் பயின்று வரும் அழகில், அதெல்லாம் மறந்து, முருகனின் அழகைப் போலவே பாடலின் அழகில் சொக்கிப் போய் விடுவர்.

திருப்புகழ் அல்லாத பிற பாடல்களில், அருணகிரி இப்படிச் செய்ய மாட்டார். அவற்றில் தத்துவம் (மெய்ப்பொருள்) தெறிக்கும். இயற்றமிழ் இயலும். நாம் இந்தப் பயணப் பாடலின் பொருளைக் காண்போம். திருச்செந்தூரில் பாடியது.

ஏவினை நேர்விழி மாதரை மேவிய

ஏவு = பாய்ந்து செல்லும் போர்க் கருவி; இக் காலத்தில் ஏவுகணை; அக் காலத்தில் அம்பு; ஏவுவதால், ஏவு - காரணப் பெயர்; வினையே பெயராகவும் நின்றதொரு தொழிற்பெயர்; விகுதி குன்றிய தொழிற்பெயர்.
ஓர் அம்பை எப்படி எதிர்கொள்வது? இன்னோர் அம்பால் எதிர்கொள்ளலாம்; அந்த அம்பு, பெண்ணின் கண்கள்:) ஏவினை -> நேர் <- விழி!
ஆசை என்னும் ஏவினை எதிர்கொள்ளும் அம்பு போல் கண்கள்; இப்படிக் கண்ணழகு வாய்ந்த பெண்கள் பலரிடமும் மயங்கிக் கிடந்தேன் என்ற Confession (குற்ற ஒப்புகை) செய்கிறார் அருணகிரி.

ஏதனை மூடனை - நெறிபேணா

ஏதம் = அயல்; ”ஏதிலார் குற்றம் போல் தன் குற்றமும் காண்க” என்று ஐயன் வள்ளுவனும் சொல்வார்.
தன்னோடு பொருந்தாத எதுவுமே அயல் தான்; அதனால் பொருத்தமே இல்லாத Defect (குற்றம்-குறை) யையும், ஏதம் என்றனர். ஏதம்=குற்றம்.
மூடம் = வலிந்த அறிவின்மை. இயல்பான அறிவு இருந்தாலும், அதையும் மீறி ஆசையால் முட்டாள் ஆவது தான் மூடம்.
இப்படி, குற்றங் குறையுமாய், மூடம் வளர்த்துக் கொண்டு, ஒழுக்க நெறிகள் எதுவும் பேணாமல் திரிந்த அருணகிரி.

ஈனனை வீணனை ஏடெழுதா 

ஈனம் = கீழ்மை; கீழான குணங்களோடு வீணாய்ப் போன ஒருவனை; ஏடு எழுதா = ஏட்டில் எழுதிப் பயிலாமல், கண்டதே காட்சி என்று இழிந்து போய்..

முழு ஏழையை மோழையை - 

மோழை = கொம்பு இல்லாத விலங்கு (பொதுவாக மாடு); தற்காத்துக் கொள்ள இயற்கையான ஒரு பொருள் தான் கொம்பு. அது இல்லாத மாட்டை மோழை என்றனர். “மூத்தது மோழை, இளையது காளை” என்ற பழமொழியும் அதையொட்டியே! ஏழையாக இருந்தாலும், மோழையாக இருக்கக் கூடாது.
ஆனால், அருணகிரியோ, பொருளெல்லாம் பெண்களிடம் இழந்து, கல்வி நெறி இழந்து, தன்னைக் காத்துக் கொள்ளக் கூட முடியாத நிலைக்குச் சென்று விட்டார்; ஏழையாகவும் மோழையாகவும் ஒருசேரச் சோர்ந்து விட்டார்.

அகலா நீள் மா வினை மூடிய 

மா வினை = பெரும் வினைப்பயன் (கர்மா); அகலா நீள் வினை = என்ன கழுவாய் (பரிகாரம்) செய்தாலும் போகாத நீண்ட வினைப்பயன் (செய்த தீச்செயல்களின் விளைவு); அது வந்து, வாழ்வினை மூடிக் கொண்டது.

நோய்பிணி யாளனை

நோய் வேறு, பிணி வேறு!
*நோய் = ஓரளவு குணப்படுத்தி விடலாம்; (நோவதால் -> நோய்/நோவு)
*பிணி = குணப்படுத்துவது சற்றுக் கடினம் ( பிணிப்பதால் -> பிணி)

நோய் என்பது காய்ச்சல், வீக்கம், வயிற்று வலி போன்றது. நோவு (வலி) இருக்கும்; ஆனால், குணப்படுத்தி விடலாம்.
பிணி என்பது Cancer, Alzheimer's, Liver Disease போன்றது. பிணித்துக் கொள்ளும்; விலக்குவது கடினம், கட்டுக்குள் சிலநாள் வைக்கலாம்.
இப்படிக் குணப்படுத்த முடிந்தும் முடியாமலும், தவிக்கும் அருணகிரியார்.

வாய்மை இலாதனை - 

*வாய்மை = வாயால் மட்டுமே சொல்வது
*மெய்ம்மை = உடலாலும் நடந்து காட்டுவது
*உண்மை = உள்ளத்தாலும் நெறியுடன் நிற்பது

வாயாலும், மெய்யாலும் மற்றவர்கள் முன்னிலையில் நெறியுடன் நடப்பது வேறு; ஆனால், பிறர் அறிய முடியாவிட்டாலும் கூட,  நம் உள்ளத்துக்குள் நெறியுடன் நிற்பது என்பது வேறு!

அதான், வள்ளுவனும் “பொய்ம்மையும் வாய்மை இடத்த” என்று மட்டுமே சொன்னார். “பொய்ம்மையும் உண்மை இடத்த” என்று சொல்லலை. சில நேரங்களில் சில நன்மைக்காகப் பொய் சொல்லும் சூழல் வந்தாலும், அதை வாயோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உள்ளத்துக்கு உள்ளே கொண்டு சென்று விடக் கூடாது!
இப்படிக் கூர்மையாக அறம் செப்பியது தமிழ் - 3 வெவ்வேறு சொற்களாக! வாய்-மை, மெய்-ம்மை & உள்-மை!

இகழாதே - மாமணி நூபுர சீதள தாள்
தனி 
வாழ்வுற ஈவதும் ஒருநாளே!

இப்படியெல்லாம் நெறி மறந்து, வாய்மை இல்லாது போன அருணகிரியை இகழாமல், முருகன் அரவணைத்துக் கொண்டான்.
பெரிய மணிகள் ஒலிக்கும் சிலம்பு (நூபுரம்) அணிந்துள்ள முருகன், அவன் குளிர்ச்சியான திருவடிகளைக் காட்டி அருள் தந்து, 
தனி வாழ்வான (கைவல்ய நிலை) வீடு பேற்றை, என்றாவது ஒருநாள் எனக்குத் தருவாயா? என்று உருகிக் கேட்கிறார்.

நாவலர் பாடிய நூலிசை யால்வரு

நா+வலர்= நாவலர்; நாவால் படைப்பதில் வல்லவர்; அது பேச்சோ, பாடலோ, இசையோ.. நாவால் படைக்கும் திறன்.
அதில் ஒன்று பாடல்/இசை. அந்த இசை நூல் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், தமிழிசையை வளம் செய்தனர்.
ஆதி தமிழிசையில் இருந்து தான், பின்னாளில் கர்நாடக இசை முதலான இசைப்பிரிவுகள் கிளை விட்டன.

நாரத னார்புகல் - குறமாதை 

அத் தமிழிசையால் வந்த, பிற இசைக்காரரான வடமொழி நாரத முனிவர், முருகனிடம் சென்று குறமகள் வள்ளி பற்றிக் கூறினார் என்பது புராணம்.

நாடிய கானிடை கூடிய 

முல்லைத் தமிழ் மகள் வள்ளியை, குறிஞ்சித் தமிழ் மகன் முருகன், அவளின் காட்டுப் பகுதிக்குச் சென்று, காதலித்துக் கூடினான். 

சேவக நாயக மாமயில் உடையோனே

நாயகி வள்ளிக்குப் பணி செய்து காதல் வாழ்வை நடத்துவதில், நாயகன் முருகன் எந்தப் போலிப் பெருமையும் பார்க்கவில்லை. சேவக நாயகனாய், குறிஞ்சிப் பறவையான மயிலைக் கருப்பொருளாய் உடைய முருகன்!

தேவி மனோன்மணி ஆயி பராபரை

ஆயி = அம்மா; ஆவதால்/ஆக்குவதால் ஆயி.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ (குறுந்தொகை)
இரவுக்கு ஆயி = இராக்கு ஆயி, ராக்காயி.
இவை யாவும், காரணம் பொதிந்த அழகான தமிழ்ப் பெயர்கள்!

தேவி என்பதும் தமிழ்ப் பெயரே! தேவு, தேவன், தேவி, தெய்வம்.
தீ வடிவிலான செம்மை நிறத்தால், தீ -> தே -> தேவு.
மனத்தாலேயே மணி போல் ஒளிர்வதால், மனோன்மணி;
பரன் என்ற ஆண்பால் பெயர்; பரை என்ற பெண்பால் பெயர்.


தேன்மொழி யாள்தரு சிறியோனே

தந்தையாகவும் தாயாகவும் ஒருசேர விளங்கும் பரா-பரை, கொற்றவை!
அவள் தேன் போல் இனிய மொழி (தமிழ்) பேசுபவள்.
அந்தக் கொற்றவை மைந்தனாக விளங்கும் இளைஞன் முருகனே!


சேணுயர் சோலையில் நீழலிலே திகழ்

சேய்மை (தொலைவு) மிக்க, உயரமான மரங்கள் கொண்ட சோலையின் நிழலிலே திகழ்கின்ற முருகனே

சீரலை வாய்வரு பெருமாளே.

சீரான அலைகள் மோதும், சீரலைவாய் எனும் திருச்செந்தூரில் 
வந்து நிற்கும் வள்ளியுடன் கூடிய முருகப் பெருமானே!
வாழ்வுற ஈவதும் ஒருநாளே.. நல்ல வாழ்வினை (இராகவனுக்கு) அருள்வாயே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா!


Monday, May 27, 2024

ஈழத்து வேல்! வெல் எனும் வேல்!

முருகனருள் அன்பர்களுக்கு ஆண்டுதோறுமான வணக்கம்!

இன்று தோழன் ஜி.ரா (எனும்) கோ. இராகவனின் பிறந்தநாள்! (May 27).
வாழ்த்துவோம், முருகனருளில் ஊழ்த்துவோம், ஆழ்த்துவோம்!
மகிழ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா.
உடல் நலனும் உள்ள நலனும் உறவேலோ ரெம்பாவாய்!




வேல் என்பது ஓர் ஆயுதம், போர்க்கருவி.
அதை வைத்துக் கொண்டு யாரேனும் விளையாடுவார்களா?

ஆனால், முருகன் விளையாடுவதாகப் பாடல்கள் உள்ளன.
திருப்புகழ் முதலான பழம் பாடல் மட்டுமல்ல..
சினிமாப் பாடலில் கூட, வேலோடு விளையாடுவதாகவே வருகிறது!
வேலோடு விளையாடும் முருகைய்யா - என் 
வாழ்வோடும் விளையாட வந்தனையா?

’வெல்’ என்பதே... ’வேல்’ என்ற ஆதிநீடல்.
  • ’வெல்’ எனும் வினைச்சொல்லே, 
  • ’வேல்’ எனும் பெயர்ச்சொல் ஆகிறது!

தமிழில் பல பெயர்ச் சொற்களும், வினை புறத்துப் பிறந்தவையே.
தமிழர் பண்பாட்டில், வினையே ஆடவர்க்கு (பெண்டிர்க்கும்) உயிரே!
அப்படி, வினை வழியாகவே தோன்றிய அன்றாடப் பெயர்கள் பலப்பல.
  • உண்பதால் உணவு (உண்)
  • வடுப்பதால் வடை (வடு)
  • பொரிப்பதால் பொரியல் (பொரி)
  • வறுப்பதால் வறுவல் (வறு)
  • கூட்டுவதால் கூட்டு (கூட்டு)
  • மசிப்பதால் மசியல் (மசி)
  • தொகைப்பதால் தொகையல் (தொகு)
  • துவைப்பதால் துவையல் (துவை)
இப்படிச் செயல் செய்யும் வினையடிகளை வைத்தே,
தமிழ்ப் பெயருருவாக்கத்தில், 
பல பெயர்கள் உருவாகின, உருவாக்கப்படுகின்றன, உருவாக்கப்படும்.
இவ் வினைகள் தான் தமிழ் இலக்கண அடிப்படையான வினையடிகள்.


வேலும் வினையடியும்:

சில வினையடிகளை (வினை+அடி) எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். சான்று: படிப்பு (படி+ப்+பு), படிப்பதால் படிப்பு.
ஆனால் சில வினையடிகளைக் கண்டுபிடிப்பது கடினம். 
சான்று: விற்றல் (வில்+தல்), கற்றல் (கல்+தல்).

ஏனெனில், இன்று யாரும் ’வில்’ என்ற அடிப்படை வினையால் பேசுவதில்லை;
* ’வாங்கு’ என்று சொல்கிறோம், 
* ஆனால் ’வில்’ என்று சொல்வது அரிதிலும் அரிது. 
’வித்துரு’ என்று பேச்சு நடையாகவோ, 
’விற்பனை செய்’ என்று தொழிற்பெயராகவோ தான் பேசுகிறோம்.
இதனால், ’வில்’ என்ற அடிப்படை வினையடியே மறந்து போய் விட்டது.



போலவே, ’கல்’ என்ற அடிப்படை வினையும்.
’இளமையில் கல்’ என்றால் ஓரளவு புரிந்து கொள்வார்கள்.
ஆனால் ’கணிதம் கல்’, ’தமிழ் கல்’ என்று யாரும் பேசுவதில்லை.
’கணிதம் படி’, ’தமிழ் படி’ என்று பேச்சு வழக்கு மாறி விட்டது.

அதே போல் தான், ’வெல்’ என்ற வினையடியும்.
இன்று ’வெற்றி பெறுக’, ’வென்று வருக’ என்றெல்லாம் சொல்கிறோம்.
ஒரு சிலர் ‘வெல்க’ என்று வியங்கோள் வினையாகப் பேசுகிறார்கள்.
ஆனால் ’வெல்’ என்று நேரடியாக, ஏவல் வினையாகப் பேசுவதில்லை.
இந்த ‘வெல்’ என்ற வினை தான், ஆதி நீண்டு, ‘வேல்’ என்று பெயர் ஆகிறது.

வெற்றிவேல் என்பது ஒரு வகை மிகைச்சொல்/இரட்டைச் சொல். 
வேல் என்றாலே வெற்றி தான். 
வேலுக்கு முன் தனியாக வெற்றி என்பதே தேவையில்லை.

இப்படி வெற்றியைக் குறிக்கும் ஒன்றோடு விளையாடுதல்,
நம் ஆதிகுடி முன்னோர்களான, நிலத் தலைவர்கட்கு இயல்பு தானே!
குறிஞ்சிக் குன்றக் குறவனான முருகனின் கையாயுதம் வேல்.
வீர விளையாட்டு, வெற்றி விளையாட்டு குறிப்பதே வெல் எனும் வேல்.

முருகனுக்கும் மூத்தது வேல்!
முருகனுக்கும் முன்பே வழிபாடு பெற்றது வேல்!


ஒரு காலத்தில், சிலை வழிபாடு தோன்றியிராத போது..
சங்கத் தமிழின் ஆதிகுடி நடுகல் வழிபாட்டில்
வேல் தான் முதன்மை பெற்று, வழிபாட்டைப் பெற்றது.

நிலத்தின் தலைவர்களான, ஆதிகுடி முன்னோர்கள் நினைவாக
நடுகல் எழுப்பிய போது, சுற்றிலும் வேல்படைகளும் எழுப்பப்பட்டன.
முன்னோன் பயன்படுத்திய வேல், பூசனைப் பொருள் ஆகிற்று.
”நீத்த கணவன் தீர்த்த வேலின்” என்பது தொல்காப்பிய வரி.

கற்சிலை, உலோகச் சிலை செய்யும் தொழில்நுட்பம் உருவாகாத காலத்தில்
முருகனைக் குறிக்க/வழிபட - நடுகல் & வேலையே பயன்படுத்தினார்கள்.
பின்பு, நடுகல்லில் முருக முன்னோனின் ஓவியம்/உருவம் எழுதப்பட்டது.
அதுவே பின்னாளில் படிப்படியாக, உருவ வழிபாடு எனும் நிலை அடைந்தது.

அப்போது கூட, முருகனுக்கு இயற்கையான மனித உருவம் மட்டுமே.
ஆறு முகம், பன்னிரண்டு கை, பதினெட்டு கண்ணெல்லாம் கிடையாது.

இன்றும் வேல் வழிபாட்டைச் சில தொன்மையான தலங்களில் காணலாம்.
தமிழ்நாட்டை விடவும், ஈழத்தில்.. வேல் வழிபாடு என்பது சற்று அதிகம்!

செல்வச் சந்நிதிக் கருவறை (வேல்வழிபாடு)

அன்னதானக் கந்தன் என்ற மனிதநேயம் மிக்க ஊர் ஒன்று ஈழத்தில் உளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆற்றங்கரைத் தலமான செல்வச் சந்நிதி.
அங்கு, முருகன் உருவ வழிபாடே கிடையாது. வேல் வழிபாடு தான்.


போலவே, இன்றைய பணம் கொழிக்கும் ஈழத்து நல்லூர்க் கோயிலிலும்,
ஆதியில் வேல்வழிபாடு தான் இருந்தது; எளிமை மிக்க ஆதிகுடிப் பூசை.

பின்னாளில் தான் ஆறுமுக நாவலர், சம்ஸ்கிருத ஆச்சாரங்களைச் சேர்த்து,
ஷண்முகம் போன்ற பூநூல் உருவங்களை வடித்து, கோயிலுள் புகுத்தினார்.
விநாயகர், தெய்வயானை/தேவஸேனா போன்ற யாவும் பிற்சேர்க்கையே.

எனினும் நல்லூர் முருகனின் ஆதிக் கருவறையில், வேல் மட்டுமே மூலநிலை!

இன்று ஆரியம்/சம்ஸ்கிருதமாய்ப் பலதும் உள்நுழைந்து விட்டாலும் கூட,
நல்லூர் உலாவின் ஒரு நாளில் மட்டும்,
வேலை வீதி வெளிக் கொண்டு வருவர்.
அப்போது, வேலின் இரு பக்கமும் சிலை உருவங்களை வைத்தாலும் கூட,
நடுவில் முருகன் மட்டும், உருவம் இல்லாமல், வேல் வடிவில் காணலாம்!

நல்லூர்க் கருவறை (மூலத்தானம்)
நல்லூர்க் கந்த வேல் - தமிழ் வழி
நல்லூர் ஷண்முகன் - ஆரிய வழி

அதே போல் மலேசியப் பத்துமலையிலும், வேல் வழிபாடு தான் முதலில்.
இன்று தான், சம்ஸ்கிருத/பிராமணீய மயமாக மாறிப் போய் விட்டது.
தமிழ் வழிபாடு நீங்கி, சம்ஸ்கிருத பூஜைகள் பெருகிப் போய் விட்டன.
தொடர்பே இன்றி, அனுமன்/ராமன் சிலைகள் பத்துமலையில் வந்து விட்டன.

தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் என்னும் தலமும்
ஆதிகுடி நடுகல் மற்றும் வேல் வழிபாடு தான்.
உருவமே சரியாகத் தெரியாமல், நடுகல் அடையாளங்கள் தான் இருக்கும்.
ஆனால், அலங்காரம் செய்து, உருவம் போல் ’ஜோடி’த்து இருப்பர்.
அடுத்த முறை திருப்போரூர் செல்லும் போது, உற்றுக் கவனித்துப் பாருங்கள்.


இப்படித், தொன்மம் மிக்க வேல் வழிபாடு, இன்று அருகி விட்டது.
மக்களும் தமிழ்த் தொன்மம் அறியாததால், 
அலங்கார ஆடம்பர ஆரிய ஜோடனைகளில் மயங்கிப் போய் நிற்கிறார்கள்.
தமிழ் இறையியலில், சம்ஸ்கிருத/ஆரியம் அதீதமாய்க் கலந்து விட்டது.
இது போல் பதிவுகள் வாயிலாகத் தான், சற்றேனும் உண்மை சொல்ல முடியும்.
மதம் கடந்து, முருகனைத் தமிழாய்க் காண்போம்!


குறிஞ்சிக் குறவன் முருகனைப் போலவே,
முல்லை ஆயன் திருமாலுக்கும் வேல் உண்டு!

வெட்சி x கரந்தை ஆநிரைப் போரில், வேல் கொண்டு வெல்வதே மாயோன்.
இது முல்லைநில வாழ்வியல். குறிஞ்சி/முல்லை - இரண்டுக்குமே வேலுண்டு!

“வெட்சி தானே குறிஞ்சியது புறனே” என்பார் தொல்காப்பியர்.
”கானத்து நீள்வேல் மறவர், வெட்சி” என்பது புறப்பொருள் வெண்பா மாலை.
”கூர் வேல் கொடுந்தொழிலன்” என்றும்
”வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்றும்
அதான் ஆண்டாளும், ஆயன் திருமால் கையில் வேல் தந்து பாடுகிறாள்.

ஆதிகுடித் தமிழ் மக்களின் புறத்திணை அடையாளம், வேல்!
வெல் என்பதே வேல்; வெற்றியைக் குறிக்க வந்ததே வேல்.
வீர விளையாட்டு, வெற்றி விளையாட்டு குறிப்பதே தமிழினத்தின் வேல்.

அந்த வெற்றியைப் பேரிலேயே வைத்துள்ள வெல்/வேல்/வேலவன், முருகன்.
அவன் வேலோடு விளையாடுவதில் வியப்பில்லை தானே!
வாருங்கள், பிறந்தநாள் பாடலுக்குள் சொல்வோம்.. ”வேலோடு விளையாடும்”.


குரல்: பி. சுசீலா
வரிகள்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: வேதா
படம்: சித்ராங்கி

பாடல், ஆபேரி ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளது.
வாராய் நீ வாராய் என்ற பழைய பாடலும்,
எங்கேயோ பார்த்த மயக்கம் என்ற தனுஷ்-நயந்தரா புதிய பாடலும்
இதே ராகமான ஆபேரியில் தான் அமைந்துள்ளன.

மன்னனின் தம்பியான இளவரசனை 
ஒரு நேர்ச்சியில் (விபத்தில்) இருந்து காப்பாற்றும் இளம்பெண், 
அவன் இளவரசன் என்றே அறியாமல், 
அவன் மீது காதல் கொண்டு கனிவு காட்ட, 
கனிவை மட்டும் பெற்றுக் கொண்டு, 
அவன் அவளை முதலிரவுக்கு முன்பே நீங்கி விடுகிறான். 

வெறுமையில் வாடும் அவள், 
முருகனிடம் முறையிட்டுக் கொண்டு, 
சிக்கல்கள் தீர்ந்து, அவனை மீள அடைவதே இக் கதை.

AVM ராஜன் & புஷ்பலதா நடிப்பில் இணையர்கள், 
வாழ்விலும் இணைந்து வாழ்விணையர் ஆனார்கள். 
அப்படி ஆன பின் நடித்த படம் இது.



வேலோடு விளையாடும் முருகைய்யா - என் 
வாழ்வோடும் விளையாட வந்தனையா?

குறவள்ளி மணமாலை தனைச் சூடினாய் - தேவ 
குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய் - என்ன 
குறைகண்டு எனக்கிந்த நிலை காட்டினாய்? - நீ 
குடிகொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய்?

(வேலோடு விளையாடும் முருகையா)

உறவு தந்த நீ,
பிரிவு தந்து மனம்
உருகச் செய்தல் சரியா? - இரு

உயிர் கலந்த பின், 
துணை இழந்த பெண்
உலகில் வாழ்தல் முறையா? - நான்

மணந்த நாதனை
அடைந்து இல்லறம்
மகிழும் காலம் வருமா? - வாழ்வு 
மலரும் நாளும் வருமா? வருமா?

முருகா!


வேலோடு விளையாடும் தமிழ் ஆதிகுடி முருகன்
மகிழும் காலத்தை மனமகிழ்ந்து அருளட்டும்.
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி, இப்பதிவு அமைவோம்.
வேலோடு விளையாடும் முருகைய்யன் வாழியே!

Saturday, May 27, 2023

கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? ’துணை’ வந்தது! தமிழ் வந்தது!


முருகனருள் பாடல்-வலைப்பூ அன்பர்கட்கு, வணக்கம்! 

இன்று முருகனருளில், ’கூப்பிட்ட குரலுக்கு’ என்றொரு சினிமாப் பாடல்!
’துணைவன்’ என்ற படத்தில், KBS Amma எனும் கே.பி. சுந்தராம்பாள் பாடியது!

இது போல், பாடல் ஒரு துணை. ”விழிக்குத் துணை” என்பார் அருணகிரி.
’துணை’ என்ற தமிழ்ச் சொல்லின், உண்மையான பொருள் என்ன?

இவ்வாண்டும், தோழன் கோ. இராகவன் பிறந்தநாளை ஒட்டி (May 27),
ஓர் அழகிய தமிழ்ப் பாடல் நடை பயில்கின்றது. துணை பயில்கிறது.
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா!
உடல்நலமும் உள்ளநலமும் தழைத்தேலோ ரெம்பாவாய்!



கூப்பிட்ட குரலுக்கு யார் வருவார்கள்? துணைவன் தான் வருவான்.
நமக்கு என்றுமே துணையாக வருவோர் தாம், துணைவன்/துணைவி!

’துணை’ என்பதே மிக அழகான ஒரு தமிழ்ச் சொல்!
ஆண்/பெண் பேதமில்லாத பொதுச்சொல்!
’வாழ்க்கைத் துணை நலம்’ என ஐயன் வள்ளுவன் சொல்வது பொதுச்சொல்!

* ’துண்’ என்பதே வேர்ச்சொல்; துணவு/துண்ணுதல் = விரைந்து வருதல்.
* யார், நமக்காக விரைந்து வருகிறார்களோ, அவரே துணைவர்!

துணை இருத்தல் என்றால்.. எப்போதும் அருகிலேயே இருத்தல் அல்ல!
அப்படி இருக்கவும் முடியாது! அது மனித இயற்கையும் அல்ல.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழல்கள், பணிகள், குணங்கள், கணங்கள்.

ஆனால், மெய்யான தேவை என்று வரும் போது, விரைந்தோடி வரும் குணம்.
அதுவே துணைக் குணம், துணையிருக்கும் குணம், துணைவர்களின் குணம்.

விரைந்தோடி வருதல் என்பது..
நேரிலும் இருக்கலாம், அல்லது மனத்திலும் இருக்கலாம்.
துணைவர், நேரடியாக விரைந்து வருவது ஒரு வகை ஆறுதல் எனில்,
அத் துணைவர், துன்பச் சூழலில், நேரடியாக வருவதற்கு முன்பே..
நம் மனசுக்குள் விரைந்து வந்து விடுகிறாரே! அது இன்னொரு வகை ஆறுதல்!

இன்னல் மிக்க சூழலில், நம் மனம்.. 
நம்மையறியாமலேயே, அத் துணைவரைத் தானே நினைக்கிறது?
நேரடியாக வரும் முன்பே, அவர் மனத்தளவில் வந்து விடுகிறாரே?
அப்படி விரைந்து வருவதே துணை!
துணை வந்து விட்டால்,  துன்பம் குறைந்துவிடும், தெம்பு பிறந்துவிடும்!

இப்போது தெரிகிறதா, 
ஏன் முருகன் ’துணை’ (அ) தெய்வம் ’துணை’ என்று எழுதுகிறார்கள் என்று?
பகுத்தறிவாளருக்கும், அவர்களின் தலைவன் ’துணை’ (அ) நண்பன் ’துணை’.
நம் மெய்யான தேவையின் போது, மனத்தின் துணை!
மனசுக்குள் உடனே ஓடி வரும் ’துணை’! அதுவே  துணை-வன்!

*பொன்றுங்கால் பொன்றாத் துணை
*நல்லாற்றின் நின்ற துணை
*இல்வாழ்வான் என்பான் துணை
*வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
*மறத்திற்கும் அஃதே துணை
*தேரினும் அஃதே துணை
*ஒற்கத்தின் ஊற்றாந் துணை
என்று ஐயன் வள்ளுவன், ’துணை துணை’ என்று தமிழால் அடுக்கும் அழகு!



துணைவன் என்றொரு படம் வந்தது!
இன்றைய திகதிக்கு அது பழைய படம் தான்:) ஆனாலும் பார்க்கலாம்.
கே.பி.சுந்தராம்பாள் அம்மா பாடும் உணர்ச்சிப் பாடல்கள்!
வாரியார் சுவாமிகளும், இந்தப் படத்தில் நடிச்சி இருப்பாரு.

*சிவகவி (வாரியார் கதை வசனம் மட்டுமே)
*தெய்வம்
*சண்முகப்ரியா
*கந்தர் அலங்காரம்
*மிருதங்கச் சக்கரவர்த்தி
*நவகிரக நாயகி...
எனப் பல படங்களில் வாரியார் நடித்திருப்பினும், அவை சிறுசிறு காட்சிகளே!
*துணைவன்
*திருவருள்
இவ்விரு படங்களில் தான், வாரியார் காட்சிகள் நீளமானவை:)

படம் முழுதும், பல காட்சிகளில், வாரியார் வந்து வந்து போவாரு.
வாரியார், முருகன் “பெருமை” பேசுவது போல துவக்கக் காட்சி இருக்கும்;
ஆனால் அதெல்லாம்.. “பொய், பொய், யாரும் நம்பாதீங்க”-ன்னு
நாயகன், AVM Rajan வெள்ளித் திரைக்குள் உள்ளே நுழைவாரு:)

பிறக்கும் போதே உணர்வற்றுப் போன ஒரு குழந்தை.
அதைக் கோயில் கோயிலாகச் சுற்றி எடுத்துக்கிட்டு வேண்டும் பெற்றோர்;
வழித்துணைக்கு KBS அம்மாவை அழைக்கிறார்கள்;

அறிவியல்/மருத்துவத்துக்கு மாறாகச் சில காட்சிகள் அமைந்து உறுத்தினும்,
அவற்றைக் கடந்து விட்டு, கற்பனை என்றெண்ணிப் படத்தைப் பார்க்கலாம்.
குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனில்,
மருத்துவ உதவியைத் தான் முதலில் நாட வேண்டும்!
கடவுள் பார்த்துக் கொள்வார் என்று மருத்துவத்தைப் புறக்கணிக்கலாகாது!


*ஆழ்வார்கள்: 108 திருத்தலம் (திவ்யதேசம்)
*நாயன்மார்கள் (குரவர்கள்): 274 பாடல் பெற்ற தலம் என்பன போல்
*அருணகிரிநாதர் பாடிய கோயில்கள் மொத்தம் 168.
இவையே திருப்புகழ்த் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. 
காண்க: முன்பு Murugan.org தளத்தில், நான் செய்தளித்த Thirupugazh Atlas.
ஈழம் & தமிழ்நாடு - இரண்டிலுமே உள்ள திருப்புகழ்த் தலங்கள்.

இந்தப் படத்தில், மொத்தம் 28 முருகன் ஆலயங்கள் வரும்.
படைவீட்டின் உள் முகப்புகளையெல்லாம் இந்தப் படத்தில் காணலாம்;

வாருங்கள், பாடலைச் சுவைத்துக் கொண்டே காணுங்கள்.
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? துணைவன் தான் வருவான்!



கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?
குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது? - என்
நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது?

யார் வந்தது? யார் வந்தது?

அன்று நீ வேலூன்றி, 
நீரெடுத்த நாழிக் கிணறு தான்
இன்று நின் மணி விழுந்து, 
நீராகக் கருணை வெள்ளம் தான் வந்ததோ?

கண்ணீரும் கவலையும், 
கந்தா நீ ஊற்றெடுத்த தண்ணீரால் மறையக் கண்டோம்!
கை அசைய, கால் அசைய,
வாய் பேசப் பிள்ளைக்குக் கருணை செய் செந்தில் வேலா!

படம்: துணைவன்
வரி: கவிஞர் கண்ணதாசன் ?
(அதே படத்தில், கவிஞர். அ.மருதகாசி-யாகவும் இருக்கலாம்)
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
இசை: கே.வி. மகாதேவன்


’துணை’ என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் அறிந்தது போல்,
’துணைவன்’ என்ற படத்தின் பாடலைச் சுவைத்தது போல்,
தோழன் இராகவனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழ்வோம்!

விழிக்குத் துணை, மொழிக்குத் துணை!

*விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள்.
*மொழிக்குத் துணை, முருகா எனும் திருப்பெயர்கள்.

Friday, May 27, 2022

முருகன் மாலைகள் மொத்தம் எத்தனை?

முருகனருள் அன்பர்கட்கு வணக்கம்!

பெருந்தொற்றுக் காலம் முடிந்து,
பெரும்பழகும் காலம் வந்தமை, மகிழ்ச்சியே!
இதற்கு உறுதுணையாய் இருந்த அறிவியல் வளர்ச்சிக்கும்,
நம்மோடு உற்ற உளவியல் துணையாய், 
நம்மை நீங்காது நின்ற சுற்றம் நட்புக்கு & முருகனுக்கு நன்றி!
இன்று முருகனருளில் ஒரு மாலைப் பாடல்!
தோழன். கோ. இராகவன் பிறந்தநாளை ஒட்டி (May 27);

வழமை போல், இவ்வாண்டும்..
ஒரு பாடல் மாலை! மாலைப் பாடல்!

மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா!
உடல்நலமும் உள்ளநலமும் தழைத்தேலோ ரெம்பாவாய்!
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவ ரெம்பாவாய்!


மாலை என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு,
மயக்கும் அழகு என்று பொருள்! மால் + ஐ = மாலை!
மாலுதல் என்றாலே, தமிழில் மயங்குதல் தான்!

ஒளி, இருளோடு மயங்கும் காலம்= மால்+ஐ= மாலை.
*மாலை, யாமம், வைகறை= இருளை ஒட்டிய சிறுபொழுதுகள்.
*காலை, பகல், எற்பாடு= ஒளியை ஒட்டிய சிறுபொழுதுகள்.

சங்கத் தமிழில், முதல் பொழுதே.. மாலை தான்! காலை அல்ல!:)
காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)

அவ்வண்ணமே, கழுத்தில் சூடும் மாலையும்,
அழகால் மயக்கும் பொருளிலேயே வருவது!
எத்தனை நகைகள் சூடிக் கொண்டாலும்,
மாலை சூடிய கழுத்து என்பது, தனி மயக்கம் தானே?:)

ஏனெனில், பூமாலை இயற்கை ததும்பும் மயக்க அழகு!
மணம் மட்டுமல்ல, குணமும் உண்டு மாலைக்கு!
1) கண்டு, 2) உண்டு, 3) உயிர்த்து, 4) உற்று.. என நான்கு உணர்ச்சியும்
ஒருசேரக் கொண்டது பூமாலையின் இன்பம்!
மாலை பேசாது என்பதால், 5) கேட்டு என்ற உணர்ச்சி மட்டும் இல்லை!
ஐந்து உணர்ச்சியும் அமைவது காதலன்/காதலியிடம் மட்டுமே என்பது குறள்!
தார்       -     மாலை

மாலை என்றாலே பெண்கள் சூடுவது தான்!:)
ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் அச்சொல்லையே புழங்குகிறோம்.
பல வகை மாலைகள், நம் அழகுத் தமிழில் உண்டு!
  1. தார்= ஆண்கள் அணிவது (இரு புறமும் தொங்கும்)
  2. மாலை= பெண்கள் அணிவது (தொங்காது இணைக்கும்)
  3. கோதை= ஆண்/பெண் இருவரும் அணிவது (கோத்த தொகுப்பு)
  4. கண்ணி= தலையில் சூடுவது
  5. தெரியல்= தெரியப்படுத்தச் சூடுவது (அடையாளம்)
  6. தொடையல்= தொடுத்துச் சூடுவது
  7. ஒலியல்= வளைத்துச் சூடுவது
  8. தாமம்= நாரினால் அமைத்துச் சூடுவது
  9. படலை
  10. அலங்கல்
  11. அணியல்
  12. பிணையல்
  13. வாசிகை
  14. சிகழிகை
  15. கத்திகை
  16. சுருக்கை
  17. சூட்டு
  18. இலம்பகம்
என்று இத்தனை வகை மாலைகள், தமிழில் உண்டு! ஒவ்வொன்றுமே ஓர் அழகு!
ஒலியல்


திருவருள் என்றொரு படம் வந்தது, 1975-இல்!
தேவரின் திருவருள் என்று தான் விளம்பரம் செய்வார்கள்.
ஏனெனில், தயாரிப்பு: சாண்டோ சின்னப்பா (தேவர்).

அப்போதெல்லாம் பல சாமிப் படங்கள் வந்தவொரு காலம்; இப்போது இல்லை!:)
சில வடமொழிப் புராணம், சில மூட நம்பிக்கை, சில உண்மையான பக்தி..
என்று கலவையாகப் பக்திப் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது!

அப்படி வந்த ஒரு முருகன் படம் திருவருள்.
அக்கால இதழொன்று எழுதிய விமர்சனம் (மதிப்புரை), இதோ வாசித்துப் பாருங்கள்!
கதையைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!:) ஆனால் சுருக்கமாக..

இது ஒரு கணவன் - மனைவிக் கதை!
கணவனோ, பெரும் முருக பக்தன்; மனைவியோ, பெரும் பண பக்தை!:)
அவள் உழைத்த பணம் அல்ல! அவன் உழைத்த பணம் தான்!
ஆனாலும், சில பெண்களுக்கு, பிறர் உழைப்பும், தங்களுக்கே!..
என்ற பேராசை (அ) அறியாமை, எப்படியோ மேலோங்கி விடுகிறது!

சிறந்த பாடகனான அவனுக்குக் குவியும் பணமே..
அவர்களின் குடும்ப வாழ்வைப் பிரித்துப் போடுகிறது!
முருகன் பணிக்கு அவன் ஒதுக்கும் பணத்தில், நேரத்தில், பணிகளில் தலையிட்டு
ஒரு கட்டத்தில், முருகனின் வேலுக்கான தங்கம்/ வைரத்தையே 
திருடும் அளவுக்குப் போய் விடுகிறாள், அந்தப் பேராசை மிக்க பெண்!
அவனின் உற்ற தோழனே, அப்பழியை ஏற்றுக் கொண்டு
அவர்கள் குடும்பம் சிதையாது காக்க முயல்கிறான்!

ஆனால், வாரியார், வாரியாராகவே திரையில் தோன்றி
வீடு தேடி வந்து, அவர்களிடம் நன்கொடை கேட்கும் போது
அவரையே அவமதிப்பு செய்து திருப்பி அனுப்பி விடுகிறாள்!:(
இதனால், மனைவியையும் வீட்டையும் உதறிச் செல்கின்றான் அவன்!
மீண்டும் எப்படிச் சேர்கிறார்கள்? வாரியார் தோன்றிச் சேர்த்து வைப்பதே கதை!

”தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்ற பெரிய புராணக் காட்சியெல்லாம் கூட
இந்தப் படத்தில் சோடிக்கப்பட்டு இருக்கும்:)
படத்தில், மயில் தத்தித் தாழப் பறக்கும் காட்சிகள் சுவையாக இருக்கும்!
இது வரை காணாவிட்டால், கட்டாயம் காண்க! கண்டிருந்தாலும், மீள்காணுங்கள்!


அருள்மொழி அரசு, திருமுருக கிருபானந்த வாரியார்,
பல படங்களில் தோன்றி நடித்துள்ளார்!
சில படங்களுக்கு, உரையாடல் (வசனம்), கதையும் எழுதியுள்ளார்!
  1. சிவகவி – கதை வசனம் மட்டுமே
  2. தெய்வம்
  3. துணைவன்
  4. திருவருள்
  5. சண்முகப்ரியா
  6. கந்தர் அலங்காரம்
  7. மிருதங்கச் சக்கரவர்த்தி
  8. நவகிரக நாயகி
ஆனால், துணைவன் & திருவருள் படங்களில் மட்டும்,
வாரியார் வரும் காட்சிகள் மிக நீளமானவை!

இன்று, சில காட்சிகள் பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம்.
குறிப்பாக, மருத்துவத்தை ஒதுக்கும் பக்திக் காட்சிகள்.
ஆனால், அந்நாளில் அது மக்களுக்கு ஏற்புடையதாகவே இருந்தது!:)
வாரியாருக்கு, சினிமா நடிப்பு என்று தனியாகச் சொல்லித் தரத் தேவையில்லை!
ஏனெனில், அவரின் ஓவ்வொரு பேருரையுமே, நாடகம் போல் தான் இருக்கும்!

குரலின் தனிக் கம்பீரம் (வீறு), இசை, உரையாடல், பாடல்கள், கையசைவுகள்..
என்று ஒரு மேடை நாடகத்தையே, அவர் மேடைக் கச்சேரிகளில் காணலாம்!
அதனால் ஈர்க்கப்பட்ட சிறுவர்/சிறுமியர் முதல், அகவை மூத்த வயசாளிகள் வரை,
வாரியார் கச்சேரிக்கு, மயங்காதவர்களே இல்லை எனலாம், நாத்திகர்கள் உட்பட!:)

ஆச்சாரம் மிக்கவர்களின் Bore அடிக்கும் உபந்நியாசங்களை விட
வாரியார் போன்றோரின் பேருரைகள் தான், சமயத்தைக் கூடக் காப்பாற்றின!
மதம் பரவச் செய்ததில், மஹா பெரியவர்களின் பங்கை விட, வாரியார் பங்கு அதிகம்!

வாருங்கள், இன்றைய பாடலுக்குள் செல்வோம்!
பிறந்தநாள் பையன், கோ. இராகவனையும் வாழ்த்துவோம்! முருகனருள் முன்னிற்க!


படம்: திருவருள்
வரி: கவிஞர் கண்ணதாசன்
குரல்: இசையரசி பி.சுசீலா 
இசை: குன்னக்குடி வைத்தியனாதன் 

மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திருநிறை செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை
(மாலை வண்ண மாலை)

ஆயிரம் பொன்பெறும் அருட்பா மாலை
ஆண்டவன் அடியார்க்கு செபமணி மாலை
கவிஞர்கள் சூடும் கவிமணி மாலை
காதலர் சூடிட தினம் வரும் மாலை

அந்த மாலை.. அந்தி மாலை
(மாலை வண்ண மாலை)

கலைமகள் தருவது கல்வி மாலை
திருமகள் தருவது செல்வ மாலை
அறுமுகன் சொன்னது பிரணவ மாலை
அது தான் அவனது திருவருள் மாலை

அது தான் முருகனின் திருவருள் மாலை
(மாலை வண்ண மாலை)


Thursday, May 27, 2021

முந்து தமிழ்! வேலைக்கார முருகன்! நாதசுரத் திருப்புகழ்!

முருகனருள் அன்பர்கட்கு வணக்கம்!



Corona பெருந்தொற்றுக் காலப் பாதுகாப்போடு, நலமே விளைக யாவருக்கும்!


முதியோர்/இளையோர் என்றில்லாமல்,
முடிந்தால் அனைவருமே Vaccine/தடுப்பூசி போட்டுக் கொள்க!
அஃதொன்றே Corona-வை வெல்லும் வழி!
இல்லத்து முதியோரைத் தடுப்பூசிக்குத் தனியே அனுப்பாது, உடன் செல்க!


இன்று, தோழன் கோ. இராகவன் (ஜிரா) பிறந்தநாள் (May 27).
இந்தப் பாடலை இங்கே இட்டு, ஆசி/வாழ்த்து வேண்டுகிறேன்!

Happy Birthday Ragava!
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

*நல்ல உணவும், நளி மிகு உடையும்,
*இசை தவழும் உறையுளும்,
*வெற்றி மிகு பணியும்,
*நீடு உடல் நல வாழ்வும்,
*மாறிலா உறவும், திருப் புகழும்,
நின்னைச் சேர்ந்தேலோர் எம் பாவாய்!



ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில்,
முருகனருளில் ஒரு சினிமாப் பாடல் இடம்பெறும்.
இன்றோ, நாதசுரம் ஒலிக்க, திருப்புகழ் இசைப் பாடல்.

இந்தப் பாடல், இசைக்கு மட்டும் பரவல் (பிரபலம்) அல்ல!
அதன் மாறுபட்ட, ”முருக விளி”-க்கும் மிகப் பரவலானது!

பொதுவாகச் சில காதலிகள், தங்கள் காதலனை அன்புச் சினத்தால்
வசைப்பது போல் இசைப்பதுண்டு!
அப்படியே அருணகிரியும், இத் திருப்புகழில், செய்கிறார்!
எத்துணை நேரம் தான் காத்திருப்பது? எப்போது வருவாயோ?
*அடேய், மாயக் காரா, வேலைக்காரா.. என்று திட்டுவது போல்
*அன்புமிகு நேயக் காரா, என் ஆண்மைக் காரா.. என்று ஒருவிதக் கொஞ்சல்!

-காரன் என்பது, தமிழ் வழக்கில் இன்று ஏனோ, வசை போலாகி விட்டது!
அத்துணை மதிப்பு (மரியாதை) மிக்க விளி அல்ல!
தையல் காரன், Paper காரன், வேலைக் காரன்  என்று சொல்லாது,
தையலாளர், இதழாளர், பணியாளர் என்று சமூகநீதிக்கு மாறி விட்டோம்!
குறைந்த அளவேனும், -காரன் விட்டு, -காரர் எ. சொல்லுக்கு மாறலே நலம்!

ஆனால், காதலர் இருவருக்கிடையே செல்லமான கொஞ்சல்களில் ஏது சமூகநீதி?:)
அங்கெல்லாம்.. வாடா, போடீ, -காரன், -காரி தான், நெருக்கம் கூட்டும்!
காதல் கணவனையும், வீட்டுக்’காரர்’ என்பது தானே வழக்கம்?:)
அதே போல், வரிசையாக முருகனைக் -கார விளி, விளிக்கிறார் அருணகிரி!

-காரா, -காரா.. என்று ’கார’மான அருச்சனை!:)
என்னென்ன -காரன், முருகன்? நீங்களே பாருங்கள்!

  1. காவல் காரன்
  2. மாலைக் காரன்
  3. சேவல் காரன்
  4. நேயக் காரன்
  5. வேலைக் காரன்
  6. ரூபக் காரன்
  7. போகக் காரன்
  8. வேளைக் காரன்
  9. வாரக் காரன்
  10. மாயக் காரன்
  11. சூறைக் காரன்
  12. ஆண்மைக் காரன்!

என்ன, போதுமா, -காரன்கள்?:) முருகனுக்கு, ’கார’ அருச்சனை இதுவே!:))



இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! ”முந்து தமிழ் மாலை கோடி கோடி”!
வடசொல் ஆங்காங்கு இருப்பினும், தமிழை ’முந்துதமிழ்’ என்று போற்றுவது!
குண்டும்-ஒல்லியும் இல்லாத அளவான இளமை மொழி தானே முந்தி ஓடும்?


தமிழ் மொழிக்கு 247 எழுத்துக்கள் அல்ல!
புதிதாகக் கற்றுக் கொள்வோர்/ குழந்தைகளுக்கு,
பெரிய எண்ணிக்கை சொல்லி, எடுத்த எடுப்பிலேயே அச்சமூட்டாதீர்!

தமிழில், 30 எழுத்துக்கள் மட்டுமே!
உயிர் எழுத்து= 12; மெய் எழுத்து= 18
எழுத்து எனப்படுப
அகர முதல ... னகர இறுவாய்,
முப்பஃது என்ப (தொல்காப்பியம்)

*தனி எழுத்துரு பெற்று விட்டதாலேயே (ஃ, கொம்பு, கால், பிற..)
*தனி எழுத்துரு பெறாததாலேயே (குற்றியலுகரம், லிகரம், ஐ-ஒள-மகரக் குறு.)
அவை எழுத்து வரிசையில் (Alphabet) சேராது!
அவை யாவும் சார்பெழுத்துக்களே! உலகம் முழுதும் உள்ள முறை இது தான்!

Worldwide, Derived Letters are NOT counted!
French Alphabet has so many Ligatures, Diacritics, Digraphs & Trigraphs.
œ and æ, ë, ï, ü, ÿ, â, ê, î, ô, û
None of them are counted in the Alphabet, because they are all derived!
French Alphabet has only 26 Letters (Base).

இடைக்கால வாத்திகள், தமிழ் இலக்கணத்தில் செய்த குளறுபடிகள் பல!
அதன் விளைவே, தமிழுக்கு 30 அல்ல; 247 எழுத்து எ. அச்சமூட்டும் பரப்பல்:(
எனில் சம்ஸ்கிருதத்துக்கு மட்டும் ஏன் 48 எழுத்து?
15*33 = 495 எழுத்துக்கள் எ. சொல்லலாமே? சொல்ல மாட்டார்கள்!

தமிழில், க் எனும் அடிப்படை எழுத்தோடு
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கெள சார்பு எழுத்து எண்ணுவோர்
சம்ஸ்கிருதத்தில், क அக்ஷரத்தோடு
का कि की कु कू कृ कॄ कॢ कॣ कॅ के कै कॉ को कौ कं कँ कः அக்ஷரங்களை எண்ணாதது ஏன்?

இவர்களுக்கு வெறும் 48! தமிழுக்கு மட்டும் அச்சமூட்டும் 247ஆ?
தமிழ் எழுத்துக்கள்= 30 தான்!
*உயிர்=12
*மெய்= 18
அவ்வளவே! அடிப்படை எழுத்துக்களே எண்ணிக்கை!
247 எழுத்து இருக்கு என்று போலியாகப் பெருமை பேசாதீர்!:)

216 உயிர்மெய்= சார்பு/ வரிவடிவங்களே!
(ா, ி, ீ, ு, ூ, ெ, ே, ை, ொ, ோ, ெள)

ஃ ஆய்தமும்= சார்பு/ ஓசை நுணுக்கம் மட்டுமே!
குற்றியலுகரம்/ லிகரம்/ ஐகார/ ஒளகார/ மகரக் குறுக்கங்களுக்கு,
எழுத்து இல்லை! வெறும் ஓசை/ஒலிப்பு மட்டுமே!

உலகில் பலப்பல ஓசை உண்டு!
ஒவ்வோர் ஓசைக்கும், ஒவ்வோர் எழுத்து வைத்தால்? மொழி.. மிகவும் குண்டு ஆகி விடும்!:)
அடிப்படை ஓசை எழுத்தைக் குறைத்தால்? மொழி.. மிகவும் நோஞ்சான் ஆகிவிடும்!
அதான், அடிப்படை ஓசைக்கு மட்டும் எழுத்து வைத்து, பிற ஓசைக்கு, வைத்தும் (ஃ), வைக்காமலும் (Ja)
Context Sensitive மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது!

  • ச= சொல் முதலில் Cha (சொல், Chol)
  • ச= சொல் இடையில் sa (இசை, Isai)
  • ச= மெய்யெழுத்தோடு Cha (இச்சை, Ichchai)
  • ச= இன எழுத்தோடு, Ja (மஞ்சள், Manjal)

இப்படி Context-க்கு ஏற்றவாறு ஒலிப்பு மாறும் நுட்பமே,
*தமிழ் ஒல்லியாகவும் இல்லாமல்,
*தமிழ் குண்டாகவும் இல்லாமல்
இளமையாக, வளமையாக உள்ளது!

क ख ग घ ङ (ka kha ga gha ṅa); च छ ज झ ञ (ca cha ja jha na)
என்று ஒவ்வொரு ஓசைக்கும் ஓர் எழுத்து வைத்து
மொழியை மிகவும் குண்டாக்கி விடாது..
ச என்ற ஒரே எழுத்தே, சூழலுக்கு ஏற்றாற் போல் (Context based Phonology)
cha (chol), sa (isai), ja (manjaL) என்று ஒலிக்கவல்ல ஒயிலான மென்மொழி, தமிழ்!

குண்டு மொழியால் ஓட முடியாது!
தமிழ்மொழி முந்தி ஓடும்! வெல்லும்!
"முந்து தமிழ்" மாலை கோடி கோடி!



நாதசுரத்தில் பாடலைக் கேட்டு மகிழுங்கள்:
MPN சேதுராமன் - பொன்னுசாமி அய்யாக்களின் உருக்கமான வாசிப்பு!
நாதசுரம் என்றாலே.. எந்தவொரு பாடலுக்கும் பெருவீறு (கம்பீரம்) வந்து விடும்!


அதே பாடலை, சேலம் செயலட்சுமி அம்மாவின் தீங்குரலில் கேட்டு மகிழ்க!
Salem S Jayalakshmi, மிகச் சிறந்த மரபிசை & மக்களிசைப் பாடகர்!
அம்மாவின் அரிய ஒலிப்பேழை (1976) தன்னில் கிட்டிய இப் பாடல்!




முந்துதமிழ் மாலை கோடிகோடி
சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி - உழலாதே

முந்தை வினையே வராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத்து ஏக
முந்து அடிமையேனை ஆளத் தானும் - முனைமீதே


திந்தி திமி தோதி தீதித் தீதி
தந்த தன தான தானத் தான
செஞ்செ ணகு சேகு தாளத் தோடு - நடமாடும்

செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அநு கூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது - வருவாயே?
-----------------------------------------------------------
அந்தண் மறைவேள்வி காவல் கார
செந்தமிழ்ச் சொல் பாவின் மாலைக் கார
அண்டர் உபகார சேவற் கார - முடிமேலே


அஞ்சலி செய் வோர்கள் நேயக் கார
குன்று உருவ ஏவும் வேலைக் கார
அந்தம் வெகுவான ரூபக் கார - எழிலான

சிந்துரம் இன் மேவு போகக் கார
விந்தை குற மாது வேளைக் கார
செஞ்சொல் அடியார்கள் வாரக் கார - எதிரான



செஞ் சமரை மாயும் மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார - பெருமாளே!



(பாடலின் பொருளின் எளிதே; சில அரிய சொற்களுக்கு மட்டும் பொருள்:

*முஞ்சர்= அழிவுப் பாதையில் செல்வோர்
*முனை மீதே= என் முன்னிலையில்
*செஞ் சிறிய கால்= சிவப்பான சிறிய காலுள்ள மயில்
*துங்க அநுகூலம் (வடமொழி)= தூய்மையான பலன்கள்
*அந்தண்= தமிழ்ச் சான்றோர் (பிராமணர் என்ற பொருளல்ல)
*அண்டர்= வானவர்
*ரூபம் (வடமொழி)= உருவம்
*சிந்துரம்= செந்நிற மணப் பொடி
*வேளைக்காரன்= காவலன்
*வாரக்காரன்= அன்புள்ளவன்
*செஞ்சமர்= குருதி மிகு போர்
*துங்கரண சூர= போர்வெறி மிக்க சூரன்
*சூறை= பெருங்காற்று
*செந்தில் நகர்= திருச் செந்தூர்)

Wednesday, January 13, 2021

வங்கக் கடல்மேவு | முருகன் திருப்பாவை - 30

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனை...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-30

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


30/30 | வாழைப்பந்தல் மாதவிச்சொல்! 

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனைப்
பொங்கல் திருநாளில், பொங்குதமிழ்ப் புத்தாண்டில்
நங்கள் திருப்பாவை நோன்புகள் தாம்கழிந்து,
நுங்கு இதழ்ப்பெண்கள், நுண்ணிய அன்பாலே

அங்கப் பறைகொண்ட ஆற்றுப் படைதன்னைத்
தெங்கு வயல்வாழைப் பந்தலின் மாதவிசொல்
சங்கத் தமிழ்வாழ்த்தி இங்கு-இப் பரிசுரைப்பார்
எங்கும் முருகருள்பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!   (30)


இத்துடன், முருகன் திருப்பாவை (நிறைவு) !
முப்பது நாளும் முருகன் திருப்பாவை வாசித்தமைக்கு நன்றி.


மகிழ் திகழ் பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழ்ப் புத்தாண்டு - புத்தொளி வாழ்த்துக்கள்!



Tuesday, January 12, 2021

சிற்றஞ் சிறுகாலே | முருகன் திருப்பாவை - 29

சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்து...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-29

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


29/30 | முருகா, எனக்கு நீயேநீ!

சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்துக்
கற்றாபோல் நாங்கள் கசிந்துருகி நிற்கின்றோம்!
பெற்றாய், பெரியாய், பெருவாழ்வே, பெம்மானே,
மற்றேதும் வேண்டாம் முருகாநீ போதும்வா!
(மற்றே-எம் கொங்கை உனக்கே திருமுருகா)

இற்றைப் பறைமேலே கோவிந்தக் கந்தா-உன்
உற்ற உறவுக்குள் மூச்சாகிப் பேச்சாகி,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயேநீ!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!   (29)


முருகன் திருப்பாவை தொடரும்..

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP