Saturday, May 27, 2023

கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? ’துணை’ வந்தது! தமிழ் வந்தது!


முருகனருள் பாடல்-வலைப்பூ அன்பர்கட்கு, வணக்கம்! 

இன்று முருகனருளில், ’கூப்பிட்ட குரலுக்கு’ என்றொரு சினிமாப் பாடல்!
’துணைவன்’ என்ற படத்தில், KBS Amma எனும் கே.பி. சுந்தராம்பாள் பாடியது!

இது போல், பாடல் ஒரு துணை. ”விழிக்குத் துணை” என்பார் அருணகிரி.
’துணை’ என்ற தமிழ்ச் சொல்லின், உண்மையான பொருள் என்ன?

இவ்வாண்டும், தோழன் கோ. இராகவன் பிறந்தநாளை ஒட்டி (May 27),
ஓர் அழகிய தமிழ்ப் பாடல் நடை பயில்கின்றது. துணை பயில்கிறது.
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா!
உடல்நலமும் உள்ளநலமும் தழைத்தேலோ ரெம்பாவாய்!



கூப்பிட்ட குரலுக்கு யார் வருவார்கள்? துணைவன் தான் வருவான்.
நமக்கு என்றுமே துணையாக வருவோர் தாம், துணைவன்/துணைவி!

’துணை’ என்பதே மிக அழகான ஒரு தமிழ்ச் சொல்!
ஆண்/பெண் பேதமில்லாத பொதுச்சொல்!
’வாழ்க்கைத் துணை நலம்’ என ஐயன் வள்ளுவன் சொல்வது பொதுச்சொல்!

* ’துண்’ என்பதே வேர்ச்சொல்; துணவு/துண்ணுதல் = விரைந்து வருதல்.
* யார், நமக்காக விரைந்து வருகிறார்களோ, அவரே துணைவர்!

துணை இருத்தல் என்றால்.. எப்போதும் அருகிலேயே இருத்தல் அல்ல!
அப்படி இருக்கவும் முடியாது! அது மனித இயற்கையும் அல்ல.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழல்கள், பணிகள், குணங்கள், கணங்கள்.

ஆனால், மெய்யான தேவை என்று வரும் போது, விரைந்தோடி வரும் குணம்.
அதுவே துணைக் குணம், துணையிருக்கும் குணம், துணைவர்களின் குணம்.

விரைந்தோடி வருதல் என்பது..
நேரிலும் இருக்கலாம், அல்லது மனத்திலும் இருக்கலாம்.
துணைவர், நேரடியாக விரைந்து வருவது ஒரு வகை ஆறுதல் எனில்,
அத் துணைவர், துன்பச் சூழலில், நேரடியாக வருவதற்கு முன்பே..
நம் மனசுக்குள் விரைந்து வந்து விடுகிறாரே! அது இன்னொரு வகை ஆறுதல்!

இன்னல் மிக்க சூழலில், நம் மனம்.. 
நம்மையறியாமலேயே, அத் துணைவரைத் தானே நினைக்கிறது?
நேரடியாக வரும் முன்பே, அவர் மனத்தளவில் வந்து விடுகிறாரே?
அப்படி விரைந்து வருவதே துணை!
துணை வந்து விட்டால்,  துன்பம் குறைந்துவிடும், தெம்பு பிறந்துவிடும்!

இப்போது தெரிகிறதா, 
ஏன் முருகன் ’துணை’ (அ) தெய்வம் ’துணை’ என்று எழுதுகிறார்கள் என்று?
பகுத்தறிவாளருக்கும், அவர்களின் தலைவன் ’துணை’ (அ) நண்பன் ’துணை’.
நம் மெய்யான தேவையின் போது, மனத்தின் துணை!
மனசுக்குள் உடனே ஓடி வரும் ’துணை’! அதுவே  துணை-வன்!

*பொன்றுங்கால் பொன்றாத் துணை
*நல்லாற்றின் நின்ற துணை
*இல்வாழ்வான் என்பான் துணை
*வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
*மறத்திற்கும் அஃதே துணை
*தேரினும் அஃதே துணை
*ஒற்கத்தின் ஊற்றாந் துணை
என்று ஐயன் வள்ளுவன், ’துணை துணை’ என்று தமிழால் அடுக்கும் அழகு!



துணைவன் என்றொரு படம் வந்தது!
இன்றைய திகதிக்கு அது பழைய படம் தான்:) ஆனாலும் பார்க்கலாம்.
கே.பி.சுந்தராம்பாள் அம்மா பாடும் உணர்ச்சிப் பாடல்கள்!
வாரியார் சுவாமிகளும், இந்தப் படத்தில் நடிச்சி இருப்பாரு.

*சிவகவி (வாரியார் கதை வசனம் மட்டுமே)
*தெய்வம்
*சண்முகப்ரியா
*கந்தர் அலங்காரம்
*மிருதங்கச் சக்கரவர்த்தி
*நவகிரக நாயகி...
எனப் பல படங்களில் வாரியார் நடித்திருப்பினும், அவை சிறுசிறு காட்சிகளே!
*துணைவன்
*திருவருள்
இவ்விரு படங்களில் தான், வாரியார் காட்சிகள் நீளமானவை:)

படம் முழுதும், பல காட்சிகளில், வாரியார் வந்து வந்து போவாரு.
வாரியார், முருகன் “பெருமை” பேசுவது போல துவக்கக் காட்சி இருக்கும்;
ஆனால் அதெல்லாம்.. “பொய், பொய், யாரும் நம்பாதீங்க”-ன்னு
நாயகன், AVM Rajan வெள்ளித் திரைக்குள் உள்ளே நுழைவாரு:)

பிறக்கும் போதே உணர்வற்றுப் போன ஒரு குழந்தை.
அதைக் கோயில் கோயிலாகச் சுற்றி எடுத்துக்கிட்டு வேண்டும் பெற்றோர்;
வழித்துணைக்கு KBS அம்மாவை அழைக்கிறார்கள்;

அறிவியல்/மருத்துவத்துக்கு மாறாகச் சில காட்சிகள் அமைந்து உறுத்தினும்,
அவற்றைக் கடந்து விட்டு, கற்பனை என்றெண்ணிப் படத்தைப் பார்க்கலாம்.
குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனில்,
மருத்துவ உதவியைத் தான் முதலில் நாட வேண்டும்!
கடவுள் பார்த்துக் கொள்வார் என்று மருத்துவத்தைப் புறக்கணிக்கலாகாது!


*ஆழ்வார்கள்: 108 திருத்தலம் (திவ்யதேசம்)
*நாயன்மார்கள் (குரவர்கள்): 274 பாடல் பெற்ற தலம் என்பன போல்
*அருணகிரிநாதர் பாடிய கோயில்கள் மொத்தம் 168.
இவையே திருப்புகழ்த் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. 
காண்க: முன்பு Murugan.org தளத்தில், நான் செய்தளித்த Thirupugazh Atlas.
ஈழம் & தமிழ்நாடு - இரண்டிலுமே உள்ள திருப்புகழ்த் தலங்கள்.

இந்தப் படத்தில், மொத்தம் 28 முருகன் ஆலயங்கள் வரும்.
படைவீட்டின் உள் முகப்புகளையெல்லாம் இந்தப் படத்தில் காணலாம்;

வாருங்கள், பாடலைச் சுவைத்துக் கொண்டே காணுங்கள்.
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? துணைவன் தான் வருவான்!



கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?
குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது? - என்
நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது?

யார் வந்தது? யார் வந்தது?

அன்று நீ வேலூன்றி, 
நீரெடுத்த நாழிக் கிணறு தான்
இன்று நின் மணி விழுந்து, 
நீராகக் கருணை வெள்ளம் தான் வந்ததோ?

கண்ணீரும் கவலையும், 
கந்தா நீ ஊற்றெடுத்த தண்ணீரால் மறையக் கண்டோம்!
கை அசைய, கால் அசைய,
வாய் பேசப் பிள்ளைக்குக் கருணை செய் செந்தில் வேலா!

படம்: துணைவன்
வரி: கவிஞர் கண்ணதாசன் ?
(அதே படத்தில், கவிஞர். அ.மருதகாசி-யாகவும் இருக்கலாம்)
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
இசை: கே.வி. மகாதேவன்


’துணை’ என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் அறிந்தது போல்,
’துணைவன்’ என்ற படத்தின் பாடலைச் சுவைத்தது போல்,
தோழன் இராகவனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழ்வோம்!

விழிக்குத் துணை, மொழிக்குத் துணை!

*விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள்.
*மொழிக்குத் துணை, முருகா எனும் திருப்பெயர்கள்.

Friday, May 27, 2022

முருகன் மாலைகள் மொத்தம் எத்தனை?

முருகனருள் அன்பர்கட்கு வணக்கம்!

பெருந்தொற்றுக் காலம் முடிந்து,
பெரும்பழகும் காலம் வந்தமை, மகிழ்ச்சியே!
இதற்கு உறுதுணையாய் இருந்த அறிவியல் வளர்ச்சிக்கும்,
நம்மோடு உற்ற உளவியல் துணையாய், 
நம்மை நீங்காது நின்ற சுற்றம் நட்புக்கு & முருகனுக்கு நன்றி!
இன்று முருகனருளில் ஒரு மாலைப் பாடல்!
தோழன். கோ. இராகவன் பிறந்தநாளை ஒட்டி (May 27);

வழமை போல், இவ்வாண்டும்..
ஒரு பாடல் மாலை! மாலைப் பாடல்!

மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா!
உடல்நலமும் உள்ளநலமும் தழைத்தேலோ ரெம்பாவாய்!
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவ ரெம்பாவாய்!


மாலை என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு,
மயக்கும் அழகு என்று பொருள்! மால் + ஐ = மாலை!
மாலுதல் என்றாலே, தமிழில் மயங்குதல் தான்!

ஒளி, இருளோடு மயங்கும் காலம்= மால்+ஐ= மாலை.
*மாலை, யாமம், வைகறை= இருளை ஒட்டிய சிறுபொழுதுகள்.
*காலை, பகல், எற்பாடு= ஒளியை ஒட்டிய சிறுபொழுதுகள்.

சங்கத் தமிழில், முதல் பொழுதே.. மாலை தான்! காலை அல்ல!:)
காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)

அவ்வண்ணமே, கழுத்தில் சூடும் மாலையும்,
அழகால் மயக்கும் பொருளிலேயே வருவது!
எத்தனை நகைகள் சூடிக் கொண்டாலும்,
மாலை சூடிய கழுத்து என்பது, தனி மயக்கம் தானே?:)

ஏனெனில், பூமாலை இயற்கை ததும்பும் மயக்க அழகு!
மணம் மட்டுமல்ல, குணமும் உண்டு மாலைக்கு!
1) கண்டு, 2) உண்டு, 3) உயிர்த்து, 4) உற்று.. என நான்கு உணர்ச்சியும்
ஒருசேரக் கொண்டது பூமாலையின் இன்பம்!
மாலை பேசாது என்பதால், 5) கேட்டு என்ற உணர்ச்சி மட்டும் இல்லை!
ஐந்து உணர்ச்சியும் அமைவது காதலன்/காதலியிடம் மட்டுமே என்பது குறள்!
தார்       -     மாலை

மாலை என்றாலே பெண்கள் சூடுவது தான்!:)
ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் அச்சொல்லையே புழங்குகிறோம்.
பல வகை மாலைகள், நம் அழகுத் தமிழில் உண்டு!
  1. தார்= ஆண்கள் அணிவது (இரு புறமும் தொங்கும்)
  2. மாலை= பெண்கள் அணிவது (தொங்காது இணைக்கும்)
  3. கோதை= ஆண்/பெண் இருவரும் அணிவது (கோத்த தொகுப்பு)
  4. கண்ணி= தலையில் சூடுவது
  5. தெரியல்= தெரியப்படுத்தச் சூடுவது (அடையாளம்)
  6. தொடையல்= தொடுத்துச் சூடுவது
  7. ஒலியல்= வளைத்துச் சூடுவது
  8. தாமம்= நாரினால் அமைத்துச் சூடுவது
  9. படலை
  10. அலங்கல்
  11. அணியல்
  12. பிணையல்
  13. வாசிகை
  14. சிகழிகை
  15. கத்திகை
  16. சுருக்கை
  17. சூட்டு
  18. இலம்பகம்
என்று இத்தனை வகை மாலைகள், தமிழில் உண்டு! ஒவ்வொன்றுமே ஓர் அழகு!
ஒலியல்


திருவருள் என்றொரு படம் வந்தது, 1975-இல்!
தேவரின் திருவருள் என்று தான் விளம்பரம் செய்வார்கள்.
ஏனெனில், தயாரிப்பு: சாண்டோ சின்னப்பா (தேவர்).

அப்போதெல்லாம் பல சாமிப் படங்கள் வந்தவொரு காலம்; இப்போது இல்லை!:)
சில வடமொழிப் புராணம், சில மூட நம்பிக்கை, சில உண்மையான பக்தி..
என்று கலவையாகப் பக்திப் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது!

அப்படி வந்த ஒரு முருகன் படம் திருவருள்.
அக்கால இதழொன்று எழுதிய விமர்சனம் (மதிப்புரை), இதோ வாசித்துப் பாருங்கள்!
கதையைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!:) ஆனால் சுருக்கமாக..

இது ஒரு கணவன் - மனைவிக் கதை!
கணவனோ, பெரும் முருக பக்தன்; மனைவியோ, பெரும் பண பக்தை!:)
அவள் உழைத்த பணம் அல்ல! அவன் உழைத்த பணம் தான்!
ஆனாலும், சில பெண்களுக்கு, பிறர் உழைப்பும், தங்களுக்கே!..
என்ற பேராசை (அ) அறியாமை, எப்படியோ மேலோங்கி விடுகிறது!

சிறந்த பாடகனான அவனுக்குக் குவியும் பணமே..
அவர்களின் குடும்ப வாழ்வைப் பிரித்துப் போடுகிறது!
முருகன் பணிக்கு அவன் ஒதுக்கும் பணத்தில், நேரத்தில், பணிகளில் தலையிட்டு
ஒரு கட்டத்தில், முருகனின் வேலுக்கான தங்கம்/ வைரத்தையே 
திருடும் அளவுக்குப் போய் விடுகிறாள், அந்தப் பேராசை மிக்க பெண்!
அவனின் உற்ற தோழனே, அப்பழியை ஏற்றுக் கொண்டு
அவர்கள் குடும்பம் சிதையாது காக்க முயல்கிறான்!

ஆனால், வாரியார், வாரியாராகவே திரையில் தோன்றி
வீடு தேடி வந்து, அவர்களிடம் நன்கொடை கேட்கும் போது
அவரையே அவமதிப்பு செய்து திருப்பி அனுப்பி விடுகிறாள்!:(
இதனால், மனைவியையும் வீட்டையும் உதறிச் செல்கின்றான் அவன்!
மீண்டும் எப்படிச் சேர்கிறார்கள்? வாரியார் தோன்றிச் சேர்த்து வைப்பதே கதை!

”தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்ற பெரிய புராணக் காட்சியெல்லாம் கூட
இந்தப் படத்தில் சோடிக்கப்பட்டு இருக்கும்:)
படத்தில், மயில் தத்தித் தாழப் பறக்கும் காட்சிகள் சுவையாக இருக்கும்!
இது வரை காணாவிட்டால், கட்டாயம் காண்க! கண்டிருந்தாலும், மீள்காணுங்கள்!


அருள்மொழி அரசு, திருமுருக கிருபானந்த வாரியார்,
பல படங்களில் தோன்றி நடித்துள்ளார்!
சில படங்களுக்கு, உரையாடல் (வசனம்), கதையும் எழுதியுள்ளார்!
  1. சிவகவி – கதை வசனம் மட்டுமே
  2. தெய்வம்
  3. துணைவன்
  4. திருவருள்
  5. சண்முகப்ரியா
  6. கந்தர் அலங்காரம்
  7. மிருதங்கச் சக்கரவர்த்தி
  8. நவகிரக நாயகி
ஆனால், துணைவன் & திருவருள் படங்களில் மட்டும்,
வாரியார் வரும் காட்சிகள் மிக நீளமானவை!

இன்று, சில காட்சிகள் பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம்.
குறிப்பாக, மருத்துவத்தை ஒதுக்கும் பக்திக் காட்சிகள்.
ஆனால், அந்நாளில் அது மக்களுக்கு ஏற்புடையதாகவே இருந்தது!:)
வாரியாருக்கு, சினிமா நடிப்பு என்று தனியாகச் சொல்லித் தரத் தேவையில்லை!
ஏனெனில், அவரின் ஓவ்வொரு பேருரையுமே, நாடகம் போல் தான் இருக்கும்!

குரலின் தனிக் கம்பீரம் (வீறு), இசை, உரையாடல், பாடல்கள், கையசைவுகள்..
என்று ஒரு மேடை நாடகத்தையே, அவர் மேடைக் கச்சேரிகளில் காணலாம்!
அதனால் ஈர்க்கப்பட்ட சிறுவர்/சிறுமியர் முதல், அகவை மூத்த வயசாளிகள் வரை,
வாரியார் கச்சேரிக்கு, மயங்காதவர்களே இல்லை எனலாம், நாத்திகர்கள் உட்பட!:)

ஆச்சாரம் மிக்கவர்களின் Bore அடிக்கும் உபந்நியாசங்களை விட
வாரியார் போன்றோரின் பேருரைகள் தான், சமயத்தைக் கூடக் காப்பாற்றின!
மதம் பரவச் செய்ததில், மஹா பெரியவர்களின் பங்கை விட, வாரியார் பங்கு அதிகம்!

வாருங்கள், இன்றைய பாடலுக்குள் செல்வோம்!
பிறந்தநாள் பையன், கோ. இராகவனையும் வாழ்த்துவோம்! முருகனருள் முன்னிற்க!


படம்: திருவருள்
வரி: கவிஞர் கண்ணதாசன்
குரல்: இசையரசி பி.சுசீலா 
இசை: குன்னக்குடி வைத்தியனாதன் 

மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திருநிறை செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை
(மாலை வண்ண மாலை)

ஆயிரம் பொன்பெறும் அருட்பா மாலை
ஆண்டவன் அடியார்க்கு செபமணி மாலை
கவிஞர்கள் சூடும் கவிமணி மாலை
காதலர் சூடிட தினம் வரும் மாலை

அந்த மாலை.. அந்தி மாலை
(மாலை வண்ண மாலை)

கலைமகள் தருவது கல்வி மாலை
திருமகள் தருவது செல்வ மாலை
அறுமுகன் சொன்னது பிரணவ மாலை
அது தான் அவனது திருவருள் மாலை

அது தான் முருகனின் திருவருள் மாலை
(மாலை வண்ண மாலை)


Thursday, May 27, 2021

முந்து தமிழ்! வேலைக்கார முருகன்! நாதசுரத் திருப்புகழ்!

முருகனருள் அன்பர்கட்கு வணக்கம்!



Corona பெருந்தொற்றுக் காலப் பாதுகாப்போடு, நலமே விளைக யாவருக்கும்!


முதியோர்/இளையோர் என்றில்லாமல்,
முடிந்தால் அனைவருமே Vaccine/தடுப்பூசி போட்டுக் கொள்க!
அஃதொன்றே Corona-வை வெல்லும் வழி!
இல்லத்து முதியோரைத் தடுப்பூசிக்குத் தனியே அனுப்பாது, உடன் செல்க!


இன்று, தோழன் கோ. இராகவன் (ஜிரா) பிறந்தநாள் (May 27).
இந்தப் பாடலை இங்கே இட்டு, ஆசி/வாழ்த்து வேண்டுகிறேன்!

Happy Birthday Ragava!
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

*நல்ல உணவும், நளி மிகு உடையும்,
*இசை தவழும் உறையுளும்,
*வெற்றி மிகு பணியும்,
*நீடு உடல் நல வாழ்வும்,
*மாறிலா உறவும், திருப் புகழும்,
நின்னைச் சேர்ந்தேலோர் எம் பாவாய்!



ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில்,
முருகனருளில் ஒரு சினிமாப் பாடல் இடம்பெறும்.
இன்றோ, நாதசுரம் ஒலிக்க, திருப்புகழ் இசைப் பாடல்.

இந்தப் பாடல், இசைக்கு மட்டும் பரவல் (பிரபலம்) அல்ல!
அதன் மாறுபட்ட, ”முருக விளி”-க்கும் மிகப் பரவலானது!

பொதுவாகச் சில காதலிகள், தங்கள் காதலனை அன்புச் சினத்தால்
வசைப்பது போல் இசைப்பதுண்டு!
அப்படியே அருணகிரியும், இத் திருப்புகழில், செய்கிறார்!
எத்துணை நேரம் தான் காத்திருப்பது? எப்போது வருவாயோ?
*அடேய், மாயக் காரா, வேலைக்காரா.. என்று திட்டுவது போல்
*அன்புமிகு நேயக் காரா, என் ஆண்மைக் காரா.. என்று ஒருவிதக் கொஞ்சல்!

-காரன் என்பது, தமிழ் வழக்கில் இன்று ஏனோ, வசை போலாகி விட்டது!
அத்துணை மதிப்பு (மரியாதை) மிக்க விளி அல்ல!
தையல் காரன், Paper காரன், வேலைக் காரன்  என்று சொல்லாது,
தையலாளர், இதழாளர், பணியாளர் என்று சமூகநீதிக்கு மாறி விட்டோம்!
குறைந்த அளவேனும், -காரன் விட்டு, -காரர் எ. சொல்லுக்கு மாறலே நலம்!

ஆனால், காதலர் இருவருக்கிடையே செல்லமான கொஞ்சல்களில் ஏது சமூகநீதி?:)
அங்கெல்லாம்.. வாடா, போடீ, -காரன், -காரி தான், நெருக்கம் கூட்டும்!
காதல் கணவனையும், வீட்டுக்’காரர்’ என்பது தானே வழக்கம்?:)
அதே போல், வரிசையாக முருகனைக் -கார விளி, விளிக்கிறார் அருணகிரி!

-காரா, -காரா.. என்று ’கார’மான அருச்சனை!:)
என்னென்ன -காரன், முருகன்? நீங்களே பாருங்கள்!

  1. காவல் காரன்
  2. மாலைக் காரன்
  3. சேவல் காரன்
  4. நேயக் காரன்
  5. வேலைக் காரன்
  6. ரூபக் காரன்
  7. போகக் காரன்
  8. வேளைக் காரன்
  9. வாரக் காரன்
  10. மாயக் காரன்
  11. சூறைக் காரன்
  12. ஆண்மைக் காரன்!

என்ன, போதுமா, -காரன்கள்?:) முருகனுக்கு, ’கார’ அருச்சனை இதுவே!:))



இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! ”முந்து தமிழ் மாலை கோடி கோடி”!
வடசொல் ஆங்காங்கு இருப்பினும், தமிழை ’முந்துதமிழ்’ என்று போற்றுவது!
குண்டும்-ஒல்லியும் இல்லாத அளவான இளமை மொழி தானே முந்தி ஓடும்?


தமிழ் மொழிக்கு 247 எழுத்துக்கள் அல்ல!
புதிதாகக் கற்றுக் கொள்வோர்/ குழந்தைகளுக்கு,
பெரிய எண்ணிக்கை சொல்லி, எடுத்த எடுப்பிலேயே அச்சமூட்டாதீர்!

தமிழில், 30 எழுத்துக்கள் மட்டுமே!
உயிர் எழுத்து= 12; மெய் எழுத்து= 18
எழுத்து எனப்படுப
அகர முதல ... னகர இறுவாய்,
முப்பஃது என்ப (தொல்காப்பியம்)

*தனி எழுத்துரு பெற்று விட்டதாலேயே (ஃ, கொம்பு, கால், பிற..)
*தனி எழுத்துரு பெறாததாலேயே (குற்றியலுகரம், லிகரம், ஐ-ஒள-மகரக் குறு.)
அவை எழுத்து வரிசையில் (Alphabet) சேராது!
அவை யாவும் சார்பெழுத்துக்களே! உலகம் முழுதும் உள்ள முறை இது தான்!

Worldwide, Derived Letters are NOT counted!
French Alphabet has so many Ligatures, Diacritics, Digraphs & Trigraphs.
œ and æ, ë, ï, ü, ÿ, â, ê, î, ô, û
None of them are counted in the Alphabet, because they are all derived!
French Alphabet has only 26 Letters (Base).

இடைக்கால வாத்திகள், தமிழ் இலக்கணத்தில் செய்த குளறுபடிகள் பல!
அதன் விளைவே, தமிழுக்கு 30 அல்ல; 247 எழுத்து எ. அச்சமூட்டும் பரப்பல்:(
எனில் சம்ஸ்கிருதத்துக்கு மட்டும் ஏன் 48 எழுத்து?
15*33 = 495 எழுத்துக்கள் எ. சொல்லலாமே? சொல்ல மாட்டார்கள்!

தமிழில், க் எனும் அடிப்படை எழுத்தோடு
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கெள சார்பு எழுத்து எண்ணுவோர்
சம்ஸ்கிருதத்தில், क அக்ஷரத்தோடு
का कि की कु कू कृ कॄ कॢ कॣ कॅ के कै कॉ को कौ कं कँ कः அக்ஷரங்களை எண்ணாதது ஏன்?

இவர்களுக்கு வெறும் 48! தமிழுக்கு மட்டும் அச்சமூட்டும் 247ஆ?
தமிழ் எழுத்துக்கள்= 30 தான்!
*உயிர்=12
*மெய்= 18
அவ்வளவே! அடிப்படை எழுத்துக்களே எண்ணிக்கை!
247 எழுத்து இருக்கு என்று போலியாகப் பெருமை பேசாதீர்!:)

216 உயிர்மெய்= சார்பு/ வரிவடிவங்களே!
(ா, ி, ீ, ு, ூ, ெ, ே, ை, ொ, ோ, ெள)

ஃ ஆய்தமும்= சார்பு/ ஓசை நுணுக்கம் மட்டுமே!
குற்றியலுகரம்/ லிகரம்/ ஐகார/ ஒளகார/ மகரக் குறுக்கங்களுக்கு,
எழுத்து இல்லை! வெறும் ஓசை/ஒலிப்பு மட்டுமே!

உலகில் பலப்பல ஓசை உண்டு!
ஒவ்வோர் ஓசைக்கும், ஒவ்வோர் எழுத்து வைத்தால்? மொழி.. மிகவும் குண்டு ஆகி விடும்!:)
அடிப்படை ஓசை எழுத்தைக் குறைத்தால்? மொழி.. மிகவும் நோஞ்சான் ஆகிவிடும்!
அதான், அடிப்படை ஓசைக்கு மட்டும் எழுத்து வைத்து, பிற ஓசைக்கு, வைத்தும் (ஃ), வைக்காமலும் (Ja)
Context Sensitive மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது!

  • ச= சொல் முதலில் Cha (சொல், Chol)
  • ச= சொல் இடையில் sa (இசை, Isai)
  • ச= மெய்யெழுத்தோடு Cha (இச்சை, Ichchai)
  • ச= இன எழுத்தோடு, Ja (மஞ்சள், Manjal)

இப்படி Context-க்கு ஏற்றவாறு ஒலிப்பு மாறும் நுட்பமே,
*தமிழ் ஒல்லியாகவும் இல்லாமல்,
*தமிழ் குண்டாகவும் இல்லாமல்
இளமையாக, வளமையாக உள்ளது!

क ख ग घ ङ (ka kha ga gha ṅa); च छ ज झ ञ (ca cha ja jha na)
என்று ஒவ்வொரு ஓசைக்கும் ஓர் எழுத்து வைத்து
மொழியை மிகவும் குண்டாக்கி விடாது..
ச என்ற ஒரே எழுத்தே, சூழலுக்கு ஏற்றாற் போல் (Context based Phonology)
cha (chol), sa (isai), ja (manjaL) என்று ஒலிக்கவல்ல ஒயிலான மென்மொழி, தமிழ்!

குண்டு மொழியால் ஓட முடியாது!
தமிழ்மொழி முந்தி ஓடும்! வெல்லும்!
"முந்து தமிழ்" மாலை கோடி கோடி!



நாதசுரத்தில் பாடலைக் கேட்டு மகிழுங்கள்:
MPN சேதுராமன் - பொன்னுசாமி அய்யாக்களின் உருக்கமான வாசிப்பு!
நாதசுரம் என்றாலே.. எந்தவொரு பாடலுக்கும் பெருவீறு (கம்பீரம்) வந்து விடும்!


அதே பாடலை, சேலம் செயலட்சுமி அம்மாவின் தீங்குரலில் கேட்டு மகிழ்க!
Salem S Jayalakshmi, மிகச் சிறந்த மரபிசை & மக்களிசைப் பாடகர்!
அம்மாவின் அரிய ஒலிப்பேழை (1976) தன்னில் கிட்டிய இப் பாடல்!




முந்துதமிழ் மாலை கோடிகோடி
சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி - உழலாதே

முந்தை வினையே வராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத்து ஏக
முந்து அடிமையேனை ஆளத் தானும் - முனைமீதே


திந்தி திமி தோதி தீதித் தீதி
தந்த தன தான தானத் தான
செஞ்செ ணகு சேகு தாளத் தோடு - நடமாடும்

செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அநு கூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது - வருவாயே?
-----------------------------------------------------------
அந்தண் மறைவேள்வி காவல் கார
செந்தமிழ்ச் சொல் பாவின் மாலைக் கார
அண்டர் உபகார சேவற் கார - முடிமேலே


அஞ்சலி செய் வோர்கள் நேயக் கார
குன்று உருவ ஏவும் வேலைக் கார
அந்தம் வெகுவான ரூபக் கார - எழிலான

சிந்துரம் இன் மேவு போகக் கார
விந்தை குற மாது வேளைக் கார
செஞ்சொல் அடியார்கள் வாரக் கார - எதிரான



செஞ் சமரை மாயும் மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார - பெருமாளே!



(பாடலின் பொருளின் எளிதே; சில அரிய சொற்களுக்கு மட்டும் பொருள்:

*முஞ்சர்= அழிவுப் பாதையில் செல்வோர்
*முனை மீதே= என் முன்னிலையில்
*செஞ் சிறிய கால்= சிவப்பான சிறிய காலுள்ள மயில்
*துங்க அநுகூலம் (வடமொழி)= தூய்மையான பலன்கள்
*அந்தண்= தமிழ்ச் சான்றோர் (பிராமணர் என்ற பொருளல்ல)
*அண்டர்= வானவர்
*ரூபம் (வடமொழி)= உருவம்
*சிந்துரம்= செந்நிற மணப் பொடி
*வேளைக்காரன்= காவலன்
*வாரக்காரன்= அன்புள்ளவன்
*செஞ்சமர்= குருதி மிகு போர்
*துங்கரண சூர= போர்வெறி மிக்க சூரன்
*சூறை= பெருங்காற்று
*செந்தில் நகர்= திருச் செந்தூர்)

Wednesday, January 13, 2021

வங்கக் கடல்மேவு | முருகன் திருப்பாவை - 30

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனை...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-30

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


30/30 | வாழைப்பந்தல் மாதவிச்சொல்! 

வங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனைப்
பொங்கல் திருநாளில், பொங்குதமிழ்ப் புத்தாண்டில்
நங்கள் திருப்பாவை நோன்புகள் தாம்கழிந்து,
நுங்கு இதழ்ப்பெண்கள், நுண்ணிய அன்பாலே

அங்கப் பறைகொண்ட ஆற்றுப் படைதன்னைத்
தெங்கு வயல்வாழைப் பந்தலின் மாதவிசொல்
சங்கத் தமிழ்வாழ்த்தி இங்கு-இப் பரிசுரைப்பார்
எங்கும் முருகருள்பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!   (30)


இத்துடன், முருகன் திருப்பாவை (நிறைவு) !
முப்பது நாளும் முருகன் திருப்பாவை வாசித்தமைக்கு நன்றி.


மகிழ் திகழ் பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழ்ப் புத்தாண்டு - புத்தொளி வாழ்த்துக்கள்!



Tuesday, January 12, 2021

சிற்றஞ் சிறுகாலே | முருகன் திருப்பாவை - 29

சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்து...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-29

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


29/30 | முருகா, எனக்கு நீயேநீ!

சிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்துக்
கற்றாபோல் நாங்கள் கசிந்துருகி நிற்கின்றோம்!
பெற்றாய், பெரியாய், பெருவாழ்வே, பெம்மானே,
மற்றேதும் வேண்டாம் முருகாநீ போதும்வா!
(மற்றே-எம் கொங்கை உனக்கே திருமுருகா)

இற்றைப் பறைமேலே கோவிந்தக் கந்தா-உன்
உற்ற உறவுக்குள் மூச்சாகிப் பேச்சாகி,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயேநீ!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!   (29)


முருகன் திருப்பாவை தொடரும்..

Monday, January 11, 2021

கறவைகள் பின்செல்லும் | முருகன் திருப்பாவை - 28

கறவைகள் பின்செல்லும் கான்முல்லை மக்கள்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-28

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


28/30 | ஆதிகுடி மக்கள், இயற்கை வாழ்வு


கறவைகள் பின்செல்லும் கான்முல்லை மக்கள்,
பறவைகள் பின்செல்லும் பார்குறிஞ்சி மக்கள்,
உறவுகள் கொண்டு உயர்ந்தோங்கி வாழ்வார்!
அறிவு-இயற்கை ஆதிகுடிச் செந்தமிழின் செல்வம்!

பிறவிக்கு வித்தாகும் பேர்-ஆசை நீக்கி,
அறத்துக்கு மாயோனும் சேயோனும் ஆகி,
குறையொன்று மில்லாத கோவிந்தக் கந்தா,
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!   (28)


முருகன் திருப்பாவை தொடரும்..

Sunday, January 10, 2021

கூடாரை வெல்லும்சீர் | முருகன் திருப்பாவை - 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்த மாமருகா!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-27

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



27/30 | பாவை நோன்பு நிறைவு - கருப்பட்டிப் பொங்கல்

கூடாரை வெல்லும்சீர் கோவிந்த மாமருகா,
கூடாரைக் கூட்டும்நம் காதல் திருமுருகா!
பாடிப் பறைகொண்டோம் பாருக்கு நன்னலங்கள்,
மூடிப் புதைத்திட்டோம் ஆன்மீகத் தன்னலங்கள்!

தேடி,வனப் புத்தட்டும், தெள்ளிய ராக்கொடியும்,
நாடி நலம்புனைந்து, நல்லாடை தானுடுத்தி,
பாடியே, பொங்கல் கருப்பட்டி தான்கலந்து,
கூடியே உண்போம்; குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!   (27)


முருகன் திருப்பாவை தொடரும்..

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP