ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...
அண்மைக்காலம் வரை இந்தப் பாடலைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. இராகவன் எங்கோ ஒரு பின்னூட்டத்தில் இந்தத் திருப்புகழ் பாடலைப் பற்றி சொல்லியிருந்தார். மிக அருமையான பாடல். பொருளும் தந்திருக்கிறேன்.
இயற்றியவர்: அருணகிரிநாதர்
நூல்: திருப்புகழ்
பாடல் பெற்ற தலம்: பழனி
பாடியவர்: எஸ்.பி. இராம்
இராகம்: குந்தவராளி
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்
ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா
சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி - ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுமுகனின் திருப்பெயரை ஆறுமுறை பக்தியுடன் சொல்லி விபூதியாகிய திருநீறை
ஆகம் அணி மாதவர்கள் - தன் உடலில் (ஆகம் - உடல்) அணியும் பெருந்தவம் செய்தவர்கள் (மாதவர் - மாபெரும் தவத்தைச் செய்தவர்கள்)
பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) என்றுநாளும் - மாதவர்களின் பாதமலர்களை தன் தலையில் சூடும் அடியார்களின் பாதமே துணையது என்று நாள்தோறும் (அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்கிறார்)
ஏறுமயில்வாகன குகா சரவணா எனது ஈச - மயிலை வாகனமாக உடையவனே; குகனே (இதயக்குகையில் வாழ்பவனே), சரவணா, எனது ஈசனே
என மான முன(து) என்று ஓதும் - என்னுடைய மானம் (பெருமை, சிறுமை எல்லாமே) உனது என்று எப்போதும் ஓதுகின்ற
ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் - உன் அடியவர்கள் குறைகள் நீ கண்டுகொள்ளாமல் இருந்தால்
உனை ஏவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ - உன்னை யார் புகழ்வார்கள்? வேதங்களும் 'என்ன இது? உனக்குத் தகுமா?' என்று கேட்காதா?
நீறுபடு மாழைபொரு மேனியவ வேல - திருநீற்றினை அணிந்து பொன் போன்ற மேனியுடையவனே வேலவா
அணி நீலமயில் வாக உமை தந்தவேளே - அழகான நீலமயிலை வாகனமாக உடையவனே; உமையவள் தந்த தலைவனே
நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய - கீழானவர்களுடன் சேர்ந்து நான் செய்த என் தீவினைகள் எல்லாம் அழிய (அ) கீழானவர்களான அசுரர்களுடன் நான் செய்த தீவினைகளும் அழிய (அசுரர்கள், தீவினைகள் இரண்டும் அழிய)
நீடுதனி வேல்விடும் மடங்கல்வேலா - நீண்ட பெருமைவாய்ந்த வேலினை விடும் சிங்கம் போன்ற வேலவா
சீறி வரும் மாறவுணன் ஆவி உணும் - சீறி வரும் யானைமுகம் கொண்ட மாற்றானான கஜமுகாசுரனின் உயிரை எடுத்த
ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)
சிகரி அண்டகூடஞ் சேரும் அழகார் பழநிவாழ் குமரனே - அழகிய சிகரத்துடன் கூடி அண்டங்களை எல்லாம் மூடி நிற்கும் அண்ட கூடத்தினைத் தட்டும்படி உயரமான அழகு மிகுந்த பழனியின் வாழ் குமரனே
பிரம தேவர் வரதா முருக தம்பிரானே - பிரம்மதேவருக்கு அருளியவா; முருகனே; என் பிரானே!
***
அண்டகூடம் - எல்லா உலகங்களுக்கும் மேலே கூரையாக அண்டகூடம் என்ற ஒன்று உண்டு என்பது புராணங்கள் சொல்லுவது; பழனிமலையின் உயரத்தை உயர்வு நவிற்சியாக அண்டகூடம் சேரும் அழகார் பழனி என்று சொல்லுகிறார் அருணகிரியார்.
***
இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது.