Showing posts with label நாமக்கல் கவிஞர். Show all posts
Showing posts with label நாமக்கல் கவிஞர். Show all posts

Sunday, May 27, 2018

முருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்!

முருகனருள் அன்பர்கட்கு முருகுத்தமிழ் வணக்கம்!

திருப்போருர் முருகன் பற்றிச் சிலருக்குத் தெரிஞ்சிருக்கும், குறிப்பா சென்னை மக்களுக்கு! வெறும் போரூர் அல்ல! திருப்போரூர்:)

அவன் 'நீதி முருக'னாம்; முருகன் எப்படிய்யா நீதிபதி ஆவான்? கீழ்க் Courtஆ? மேல் Courtஆ? Supreme Courtஆ? செனீவா International Courtஆ?
எந்த Court ஆனாலும், தீர்ப்பைத் தனி மனிதன் மதிக்கலைன்னா தான் வம்பு; ஒரு மாநிலமே மதிக்கலீன்னா, ஒன்னுஞ் செய்ய முடியாது! கொஞ்சமா மதியுங்களேன்? என்று நீதிமன்றமே கெஞ்ச வேண்டியது தான்:)

நீதி தழைக்கின்ற போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!
- இதான் வெண்பாவின் ஈற்று வரிகள்; முதல் வரிகளையும் பாருங்க!

ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
"நீதி தழைக்கின்ற" போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!

அதென்ன "நீதி தழைக்கின்ற" முருகன்? நான் சொல்லப் போவதில்லை; நீங்களே சொல்லுங்க:)


இன்று May 27!
தோழன் இராகவன் (எ) ஜிரா பிறந்தநாள்  -  Happy Birthday Ragava!
அவன் நலம் வேண்டி..
உங்கள் வாழ்த்து/ஆசி வேண்டிப் பணிகின்றேன்.
வைகாசி மாதத்தில் வந்து உதித்தோன் வாழியே!
வைகைநகர் கொற்கைதனில் வைகுநலன் வாழியே!
செய்காசி நகரைவிடச் செம்புனிதன் வாழியே!
செழுந்தமிழே ஆறோடும் பொருநைமகன் வாழியே!
தைகாசில் புத்தாண்டு தமிழென்றான் வாழியே!
தைத்தருளும் உறவுநலம் கைக்கொண்டான் வாழியே!
மெய்காசில் மனமுருக மணமுருகன் வாழியே!
பெருகுதிகழ் சீராவின் பிறந்ததினம் வாழியே!


பிறந்தநாள் பரிசாக, இந்த அழகு கொஞ்சிடும் பாடல்!
அரிய பாடல்!
நாமக்கல் கவிஞர், நம் முருகன் மேல் எழுதிய பாடல்!
அவருக்கே உரிய இரண்டடி இரண்டடிச் சந்தங்களாய், இதோ!



முருகன் என்ற சிறுவன் வந்து முணுமுணுத்த சொல்லினால்
முன் இருந்த எண்ணம் யாவும் பின்னம் உற்றுப் போனதே!

அருகு வந்து மனம் உவந்தே அவன் உரைத்த ஒன்றினால்
அடிமை என் மனத்து இருந்த அச்சம் அற்றுப் போனதே!

இளமை அந்த முருகன் வந்து என்னோடு என்று சொல்லவே
என்னுளத்து இருந்த பந்தம் ஏதுமற்றுப் போனதே!

வளமை உற்ற இளமை பெற்று வலி மிகுந்தது  என்னவே
வந்ததே சுதந்திரத்தில் வாஞ்சை என்ற ஞானமே!

அழகன் அந்த முருகன் வந்து என் அருகு  இருந்த போதிலே
ஐம்புலன்களுக்கு ஒடுங்கி அஞ்சி அஞ்சி அஞ்சி நான்

பழமை என் உடற்கண் வைத்த பற்று யாவும் அற்றதால்
பாரில் என்னை யாரும் கண்டு பணியுமாறு செய்ததே!

அன்பன் அந்த முருகன் வந்து அழைத்து இருத்தி என்னையே
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று அகம் குழைந்து சொன்னதால்

துன்பம் மிக்க அடிமை வாழ்வில் தோய்ந்து இருந்த என் மனம்
சோகம் விட்டு விடுதலைக்கு மோகம் முற்று விட்டதே!


அன்பன் அந்த முருகன் வந்து
அழைத்து இருத்தி உன்னையே
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று
அகம் குழைந்து சொன்னதால்..
Happy Birthday Ragava! - From முருகன் & வள்ளி!


Tuesday, October 10, 2006

008 : முருகன்மேற் காதல்

"முருகன்மேற் காதல்" என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் இயற்றிய பாடல். ஒலி வடிவம் எனக்கு கிடைக்கவில்லை.

முருக னென்றபெயர் சொன்னால்--தோழி!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர--மனம்
பித்துக் கொள்ளுதுள் ளூர! (முரு)


கந்த னென்றுசொல்லும் முன்னே--என்
சிந்தை துள்ளுவதும் என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி--வாய்
ஊமை யாகுதுளம் குளிர! (முரு)

வேல னென்றபெயர் கேட்டே--ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப்--புதுக்
களிசி றக்குதடி சேடி. (முரு)


குமர னென்றஒரு சத்தம்--கேட்டுக்
குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன்--இனி
அடிமை யார்க்குமிலை நானே! (முரு)


குகனெனச் சொல்வதற் குள்ளெ--நான்
அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி--உடனே
தண்ணென முன்வரல் ஆச்சு! (முரு)


ஆடும் மயிலில்வரக் கண்டேன்--சொல்ல
அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம்--துச்சம்
விட்டு மறந்தனடி நல்லாள்! (முரு)


பச்சைக் குழந்தையவன் மேலே--என்றன்
பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி--நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி! (முரு)


கள்ளங் கபடமற்ற பாலன்--மேலே
காதல் கொண்டஎன்னை ஞாலம்
எள்ளி ஏளனம்செய் தாலும்--நான்
எதற்கும் அஞ்சிலன்எக் காலும்! (முரு)


முருகன் கந்தன்வடி வேலன்--ஞானத்
திருக்கு கன்குமரன் சீலன்
சிறுகு ழந்தையா னாலும்--அவனைத்
திரும ணம்புரிவன் மேலும்! (முரு)


வேறு பெயரைச்சொன் னாலும்--சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்!
தூறு பேசுவதை விட்டே--எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட. (முரு)


நன்றி : மதுரை தமிழ் இலக்கிய மிந்தொகுப்புத் திட்டம்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP