Thursday, October 30, 2008

கந்த சஷ்டி 2: சிந்தனை செய் மனமே! திருத்தணிகை!

அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே!
இது அம்பிகாபதியின் 100-வது பாட்டு; ஆனால் மற்றவர்க்கு இது 99-வது பாட்டு!

ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!

செந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,
செந்தில் கந்த-னை,
வானவர் காவல-னை,
குக-னை, சிந்த-னை......
செய் மனமே!

படம்: அம்பிகாபதி
குரல்: டி எம் எஸ்
இசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)
வரிகள்: பாபனாசம் சிவன் ? / KD சந்தானம் ?
ராகம்: கல்யாணி


பாடலை இங்கு கேளுங்கள்!

சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!


செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!



அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று பாடுகிறான் அம்பிகாபதி். ஆனால் அவன் காதலுக்கும் உயிருக்கும் உலை வைக்க, அதோ அந்தகன் வரப் போகிறான் என்று அறியாது பாடுகிறான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் இந்தப் பாட்டுக்கு! ஆரம்பத்தில் மெல்லிதாகத் தொடங்கும் பாடல், இறுதியில் உச்சத்துக்குச் செல்லும் போது, அவரும் நரம்பு புடைக்கப் பாடுவது போல், அப்படியே வாயசைப்பார்.

காதலியான அமராவதி, பாடல் முடிந்ததும் எழுந்து ஓடோடி வர,
பக்திப் பாடல் ஒரே நிமிடத்தில் காதலாகி விடும்! :)

சரவண பவ குகனை, சிந்தனை செய் மனமே என்பது மாறி, சற்றே சரிந்த குழலே அசைய-ன்னு பப்ளிக்கா அமராவதி வர்ணனை ஆகிவிடும்.
பொறுக்குமா ஆசார சீலர், கவிப் பேரேறு, ஒட்டக் கூத்தருக்கு? ஏற்கனவே கம்பன் என்றாலே அவருக்கு ஆகவே ஆகாது! போதாதா?
கம்பன்-ஒட்டக் கூத்தர் பிணக்கு பற்றி தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்கின்றன? உம்.... படிக்க வேண்டும்!
இருவர் சமயமும் வேறு! கொள்கைகளும் வேறு! ஆனால் தமிழால் ஒன்றுபட முடியாதா? சமயம் வேறானால் நட்பும் வேறாமோ? கொள்கை மாறானால் நட்பும் மாறாமோ?

இத்தனைக்கும் ஒட்டக் கூத்தர் சாதாரணமானவர் அல்ல! பெரும் புலவர்!
வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண் பாவிற்கு கம்பன் என்றால், உலாவுக்கு ஒரு கூத்தன்! தேவியின் அருள் பெற்றவர். சைவச் செம்மல். குலோத்துங்கனின் அந்தரங்க மதிப்புக்கு ஆளானவர்! ஆனால் பொது மக்கள் மதிப்பில் குறைந்தது ஏன் என்று தான் தெரியவில்லை!

கம்பனைத் தாண்டி, அவர் மகன் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான காதல் மீதும், வெறுப்பு கொள்ளும் அளவிற்கு என்ன அப்படியொரு பகையுணர்ச்சி?
ஹூம்...தமிழ் வளரவாவது, தமிழன் தமிழனோடு ஒற்றுமை கொள்ளும் நாள் எந்நாளோ? தமிழ்க் கடவுளே! முருகா!

சரி, நாம் முருகனுக்கு வருவோம்! சிந்தனை செய் மனமே அருமையான கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது! ஜனனீ ஜனனீ-யும் அதே ராகம் தான்! அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே-வும் கல்யாணி தான்!

பாட்டிலிருந்து சில கேள்விகள், வாசகர்களுக்கு!
1. முருகனை தேசிகன் என்று ஏன் அழைக்க வேண்டும்?
2. சந்ததம் மூவாசை என்றால் என்ன?
3. இராமாயணத்தில் குகன் இருக்கான். முருகனைக் குகன் என்பதன் பொருள் என்ன?



இன்றைய படைவீட்டுத் தகவல்கள் - திருத்தணிகை!

* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.
இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!

அந்தக் குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை!
திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
"பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!


ஆனால் உபன்னியாசகர்களும், மற்ற புலவர் பெருமக்களும், சினம் தணிந்த கதையின் காரணமாகத், தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர். நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்! குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்! ஆனா நாம் தான் வாய்மையை விட்டுவிட்டு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொள்வோமே! எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)

திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)

குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :)
பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!


* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்!
ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே!
ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(

அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,
இங்கு வந்து தான்,
நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,
வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!

களவு மணமாவது? கற்பு மணமாவது?
களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!

வாரியார் சுவாமிகள் பின்னாளில் தன் பேருரைகளில் எல்லாம் இதைத் தொட்டுச் செல்வார். இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!

வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்!
சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!


* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே! தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா! இங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது! சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர்! ஆனால் தணிகையே தனித்து நின்றது! வென்றது! :)

இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று சொல்வது தணிகை ஸ்தல புராணம்!

* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்! உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!

* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்!
முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!

அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி!
அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! தியாகராஜர் கீர்த்தனைகளில் எளிமையும் உணர்ச்சியும் இருக்கும் என்றால், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளில் சொற்செட்டும், சந்தமும் மின்னும்!

சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல!

* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!

* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது! மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு!
சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்!
ஆனால் முடியவில்லை! ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!

* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!

* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:
- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,
- எத்தனை கலாதி,
- சினத்தவர் முடிக்கும்,
- அதிரும் கழல் (குன்று தோறாடல்)

திருத்தணி முருகப் பெருமானும்-தேவியரும்! (மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)


புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே!
- முருகா!


* பதிவர் தி.ரா.ச அவர்கள் திருத்தணி முருகன் மீது அன்பு கொண்டவர்!
இன்று (Oct-31,2008) அவர் மகளுக்குச் சென்னையில் திருமண விழா!
மணமக்களை, நீங்காத செல்வம் நிறைந்தேலோ என்று வாழ்த்தி,
திருத்தணிகை முருகப் பெருமானை வேண்டுவோம்!

66 comments:

Kavinaya October 30, 2008 8:39 PM  

மீண்டும் அருமையான பாடல்.

சந்ததமும் - தினமும்
மூவாசை - மண்,பெண், பொன்?

ஒரு கேள்விக்கு சொன்னதே போதும் :)

தி.ரா.ச அவர்களின் மகள் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 12:29 AM  

//கவிநயா said...
மீண்டும் அருமையான பாடல்//

நன்றி-க்கா! சுட்டி வேலை செய்கிறதா? சிலருக்குச் செய்யவில்லையாமே?

//சந்ததமும் - தினமும்
மூவாசை - மண்,பெண், பொன்?//

சூப்பர்!
மூவாசை வைத்தால் மூவா முதல்வன் ஆசை எப்படி வரும்? என்று கேட்கிறார்.

//ஒரு கேள்விக்கு சொன்னதே போதும் :)//

சாரி! நோ எஸ்கேப்பு! எல்லாத்துக்கும் பதில் சொல்லி எங்களுக்கு அறிவு வெளிச்சம் ஊட்டுங்க-க்கா! :)

Raghav October 31, 2008 7:36 AM  

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. அதுலயும் எக்கச்சக்கமான விஷயங்கள்.

தேசிகன் என்றால் ஆச்சார்யன் என்று நினைக்கிறேன். கொஞ்சம் பாத்து சொல்லுங்க.. மத்த கேள்விக்கெல்லாம் கூடல் குமரனார் பதில் அளிப்பார்னு எதிர்பார்க்கிறேன்.

தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்தப்போ, மறுநாள் சஷ்டி விழா தொடக்கத்திற்காக பழனி செல்லலாம் என்று நினைத்தேன், ஆனால் ஒரு வருடம் மலை ஏறக்கூடாது என்பதால் செல்ல முடியவில்லை.. என்று ஒரு வருடம் முடியும் என்று என் அப்பனையும், அவன் மருகனையும் தரிசிப்பேனோ.. :(

குமரன் (Kumaran) October 31, 2008 9:22 AM  

பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய பாடலா இது. அது தான் இவ்வளவு இனிமையாக இருக்கிறது. :-)

செந்தமிழ்க்கு அருள் ஞான தேசிகனைனு எழுதியிருக்கீங்க. அது 'செந்தமிழ் தரும் ஞான தேசிகனை'னு இருக்கணும். டி.எம்.எஸ். பாடியுமே இந்த இடத்துல குழப்பமா இருக்குதா? வியப்பாகத் தான் இருக்கிறது. :-)

ஒட்டக்கூத்தர், கம்பர் இருவரின் சமயங்களும் வேறு என்று சொல்கிறீர்களே?! எந்த வகையில்? கம்பர் இராமாவதாரம் எழுதினாலும் அவர் வைணவர் என்று சொல்லிவிட முடியுமா? தில்லையில் சென்று மூவாயிரவர் முன்னிலையில் தன் காவியத்தை அரங்கேற்ற முயன்றாரே. அங்கு அவர்கள் ஒப்புதல் பெற்ற பின்னர் தானே திருவரங்கம் வந்து தன் காவியத்தை அரங்கேற்றினார். சோழன் சைவனாக இருந்திருக்கலாம் என்பதால் ஒட்டக்கூத்தரும் சைவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் தரவுண்டோ? அவர் தானே இராமாயணத்தின் உத்தர காண்டத்தை எழுதியது?

குமரன் (Kumaran) October 31, 2008 9:23 AM  

தமிழ்ப்பண்பாட்டில் ஒரு அங்கமான காதல் - இங்கே ஒட்டி கூறுவதற்கும் வெட்டி கூறுவதற்கும் கருத்துகள் உண்டு.

தமிழ்ப்பண்பாட்டில் காதல் ஒரு பெரும் அங்கம் தான் - அதில் ஒட்டக்கூத்தருக்கு மறுப்பு இருந்திருக்காது என்று எண்ணுகிறேன்.

ஆனால் தமிழ்ப்பண்பாடு கூறும் காதல் எல்லாம் ஒத்த கிழவன் ஒத்த கிழத்தியைக் கூடுவதையே பேசுகிறது. தரத்திலோ குலத்திலோ மேலும் கீழுமாக இருப்பவர்கள் காதல் செய்வது ஏற்கப்படவில்லை. தலைமகள் தலைவனைக் காதலிப்பதைத் தான் சங்க இலக்கியத்தில் காண முடியும். எங்காவது தலைமகள் அல்லாதவள் தலைவனையோ தலைவன் அல்லாதவன் தலைமகளையோ தோழியைத் தலைவனோ தோழனை/பாங்கனைத் தலைவியோ காதலித்ததாகப் படித்திருக்கிறீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். அந்தப் பாடலின் திணை துறைகளைப் பார்த்தால் அப்படிப்பட்ட காதல் நடந்திருக்கிறது; ஆனால் ஏற்கப்படவில்லை என்பது தெரியும். :-)

இங்கே பாண்டியனோ சேரனோ அன்றி ஏதேனும் குறுநில மன்னவனோ இளவலோ சோழன் மகளைக் காதலித்திருந்தால் ஒட்டக்கூத்தரும் சோழனும் அதனை மறுத்திருக்க மாட்டார்கள். ஒரு புலவன் மகன் மன்னன் மகளைக் காதலிப்பதா? அதனை இலக்கியமும் ஏற்றுக் கொள்ளாது; இலக்கியங்களைப் படைக்கும் ஒட்டக்கூத்தரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

ஆனால் பொது மக்கள் நடுவில் அப்படிப்பட்ட காதலே பெரும்பான்மையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆளும் வர்க்கத்தினர் என்ன தான் இலக்கியத்திலும் நடைமுறையிலும் அப்படிப்பட்ட காதலைத் தடை செய்திருந்தாலும் இயற்கையாக நிகழும் அந்த நிகழ்ச்சியை நிறுத்த இயலுமா? நிறைய அம்பிகாபதிகளும் அமராவதிகளும் இருந்திருப்பார்கள். ஆனால் பெரும்புலவன் மகனும் அரசன் மகளும் என்பதால் இவர்கள் கதை மக்கள் நடுவே நிலை நின்று விட்டது. இப்படி மக்கள் ஆதரவு கொண்ட ஒன்றை மறுத்ததாலேயே மன்னனை எதிர்க்க வலுவும் துணிவும் இல்லாத மக்கள் புலவரான் ஒட்டக்கூத்தரை மட்டும் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

புலவர்கள் இடையே ஒற்றுமை இருந்தால் தான் தமிழ் வளரும் என்று யார் சொன்னது? புலவர்களும் சச்சரவுகளும் உடன்பிறந்தவர்கள் என்று ஏதோ ஒரு திரைப்படத்தில் கூட சொல்லுவார்களே. :-)

குமரன் (Kumaran) October 31, 2008 9:23 AM  

திருத்தணிகை ஒரு படைவீடு கிடையாது; குன்றுதோறாடல் தான் படைவீடு என்பதை திருமுருகாற்றுப்படையின் அடிப்படையில் சொல்கிறீர்களா?

வள்ளியம்மை முருகனுடன் 'உடன் போகிய' பின்னரே தன்னுடைய உண்மை உருவத்தைக் காட்டி நம்பிராசன் தர மணம் கொண்டான் என்று நினைக்கிறேன். உடன் போன வகையில் அது களவு மணம். காலப்போக்கில் அது கற்பு மணமாக ஆக்கப்பட்டிருக்கலாம். (தரவு இல்லை. போகிற போக்கில் சொல்லும் ஒரு கருத்து தான். வலுவான கருத்து இல்லை) :-)

திருத்தணிகை என்ற பெயரின் பொருள் சொல்லும் போது முருகன் சினம் தணிந்த இடம் என்று சொல்லுவார்கள். மற்றபடி இங்கு தான் வள்ளியம்மையை மணந்தான் என்று நன்றாகத் தெரியுமே. பலரும் மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டிருக்கிறேனே.

குமரன் (Kumaran) October 31, 2008 9:23 AM  

//சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!
//

பெருமாள் கோவில்களில் தாயாருக்குத் தரும் முதன்மை என்று சொல்லாமல் விட்டீர்களே - நீங்கள் தப்பித்தீர்கள். :-)

குமரன் (Kumaran) October 31, 2008 9:23 AM  

ஜெயந்திபுரம் மாதிரி சாந்திபுரியா? சரி தான். இன்று தான் கேள்விபடுகிறேன். :-)

இராமன் தணிகை மலைக்கு வந்து முருகனை வணங்கிய தலபுராணச் செய்தி புதிது இரவிசங்கர். நன்றி.

தியாகையர் நிறைய தெலுங்கு கீர்த்தனைகளையே பாடியிருப்பதால் எனக்குப் புரிவதில்லை. தீட்சிதரின் கிருதிகள் வடமொழியில் அமைந்தாலும் கொஞ்சம் கடினமாக இருக்கும்; சில நேரங்களில் புரிவதில்லை.

சினத்தவர் முடிக்கும், அதிரும் கழல் இரண்டு திருப்புகழ்களும் மனப்பாடமாகத் தெரியும். மற்ற இரண்டையும் இனிமேல் தான் படிக்க வேண்டும்.

குமரன் (Kumaran) October 31, 2008 9:24 AM  

நல்ல வேளை நினைவுபடுத்தினீர்கள் இரவிசங்கர். தி.ரா.ச. ஐயா அழைப்பிதழை அனுப்பியிருந்தார். உடனே பதில் அனுப்பினேன். ஆனால் எந்த நாளில் திருமணம் என்பதை மறந்துவிட்டிருந்தேன்.

முருகனருளில் திருத்தணிகையைப் பற்றி எழுதி அவர் திருமகளின் திருமணத்திற்கு வாழ்த்து சொன்னது மிகவும் பொருத்தம். நானும் வாழ்த்துகிறேன். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 10:00 AM  

//Raghav said...
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. அதுலயும் எக்கச்சக்கமான விஷயங்கள்//

உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னாலே அதுல எக்கச்சக்கமான விஷயம் இருக்கு-ன்னு தானே அர்த்தம், ராகவ்? :)

//தேசிகன் என்றால் ஆச்சார்யன் என்று நினைக்கிறேன்//

உண்மை!
ஆனால் இதன் சொல்லாராய்ச்சி பற்றி யாராச்சும் அறியத் தாருங்கள்.
ஆசு+இரியன்=ஆசிரியன்=ஆச்சார்யனா?

அது போல் தேசிகன் என்பது தமிழ்ச் சொல்லா? ஏன் பெரும்பாலும் தேசிகன் என்பது வைணவச் சொல்லாக உள்ளது? (தமிழ்ச் சைவ மடம் ஒன்றில் மட்டும் தேசிகன் என்று புழங்குகிறார்கள் - அவர்கள் நாராயணா என்றும் சொல்பவர்கள்)

//என் அப்பனையும், அவன் மருகனையும் தரிசிப்பேனோ.. :(//

நொடியில் ஓடி விடும்! கவலைப்படாதீங்க! அது வரை பதிவுகளில் தன்னொப்பார் இல் அப்பனைச் சேவித்துக் கொள்ளுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 10:13 AM  

//குமரன் (Kumaran) said...
டி.எம்.எஸ். பாடியுமே இந்த இடத்துல குழப்பமா இருக்குதா? வியப்பாகத் தான் இருக்கிறது. :-)//

ஹா ஹா ஹா!
பாடுவது தமிழறிந்த டி.எம்.எஸ்! ஆனாக் கேட்பது அடியேன் ஆயிற்றே! அதான் குமரன்! :)
ராகங்களில் சொல் குழைந்து போவது பற்றி விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!

//கம்பர் இராமாவதாரம் எழுதினாலும் அவர் வைணவர் என்று சொல்லிவிட முடியுமா?//

நெத்தியில் நாமம் இல்லை!
ஆனால் புத்தியில் நாமம் இருக்கே! :)

சடகோபர் (நம்மாழ்வார்) அந்தாதி எழுதியதும் கம்பன் தானே! அதை எழுதினவரு, ஏன் சிவன் பதிவு, முருகன் பதிவு-ல்லாம் போடலை? அதுனால அவரு வைணவரு தான்! :))

//சோழன் சைவனாக இருந்திருக்கலாம் என்பதால் ஒட்டக்கூத்தரும் சைவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் தரவுண்டோ?//

ஒட்டக் கூத்தரின் குலோத்துங்கன் உலாவே தரவு! அதில் சில விடயங்கள் அப்பட்டமாகத் தெரியும்! :)

//அவர் தானே இராமாயணத்தின் உத்தர காண்டத்தை எழுதியது?//

போட்டிக்காக எழுதியது என்றும் சிலர் சொல்வார்கள்!

Raghav October 31, 2008 10:42 AM  

ஆச்சார்யன் பொருள் விளக்கத்தை நீங்க தான் சொல்லனும்.. இல்ல குமரன் சொல்றாரன்னு எதிர்பாக்குறேன்..

Raghav October 31, 2008 10:50 AM  

// (தமிழ்ச் சைவ மடம் ஒன்றில் மட்டும் தேசிகன் என்று புழங்குகிறார்கள் - அவர்கள் நாராயணா என்றும் சொல்பவர்கள்)
//

இன்னொன்று.. சைவர்களும் சந்தியாவந்தனம் பண்ணும் போதோ அல்லது ஹோமம் போன்றவை பண்ணும் முன் செய்யும் சங்கல்பத்தின் போது, கிருஷ்ணாய ஸ்வாஹா, கேசவாய ஸ்வாஹா, கோவிந்தாய ஸ்வாஹா என்றே சொல்லி தீர்த்தம் அருந்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். சரியா என்னன்னு நீங்க தான் சொல்லனும்.

Raghav October 31, 2008 10:54 AM  

//சடகோபர் (நம்மாழ்வார்) அந்தாதி எழுதியதும் கம்பன் தானே! அதை எழுதினவரு, ஏன் சிவன் பதிவு, முருகன் பதிவு-ல்லாம் போடலை? அதுனால அவரு வைணவரு தான்! :)) //

ஆனா அம்பிகாபதி படத்துல கம்பரின் புதல்வர் முருகனை குறித்து 100 பாடல்கள் (99ன்னு ஒட்டக்கூத்தர் சொல்றாரு) பாடுறாரே.. அப்போ அவர் வைணவர் இல்லையா :)

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 11:11 AM  

//குமரன் (Kumaran) said...
தலைமகள் தலைவனைக் காதலிப்பதைத் தான் சங்க இலக்கியத்தில் காண முடியும்.//

இங்கே தலைமகன் என்பதைத் தலைவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் குமரன். குலத்தில்/செல்வத்தில் தலையாய மகன் என்று கொள்ளுதல் சரி வராது-ன்னு நினைக்கிறேன்.

ஒத்த கிழவன் ஒத்த கிழத்தியைக் கூடுவது என்பது, அந்தந்த குடும்பங்களுக்கு ஒத்த-வா? இல்லை குணத்தால் காதலர்க்கு ஒத்தவா?

அகநானூற்றில் சொல்லப்படும் தலைவன்-தலைவிக்குப் பேரு, ஊரு, குலம், கோத்திரம் கிடையாது! காதலர்கள் அவ்வளவே!

புறத்தில், சிலம்பில், பின் வந்த இலக்கியங்களில் வேண்டுமானால் குடும்பத்துக்கு ஒத்த என்று தோன்றி இருக்கலாம். கண்ணகி-கோவலன் கூடக் காதல் திருமணம் அல்லவே!

அகநானூற்றுக் காலத்தில் இது போன்ற வரையறுக்கப்பட்ட காதல் இருந்ததாகத் தெரியவில்லை! வள்ளுவரும் ஒத்த குடி அல்லாத காதலுக்கு எதிர்ப்பு ஒன்றும் சொல்லவில்லையே!

வள்ளுவர் குடி பிறப்பு பற்றி பேசுகிறார் என்னும் போது, வாரிசு முறையை ஊக்குவித்தார் என்று பொருள் எடுத்துக் கொள்ள முடியுமா? அவர் சொல்லும் குடிப் பிறப்பு வேறு! அதே போல் தான் சங்கத் தமிழ்க் காதலும்!

ஒத்து இல்லாத காதலுக்கு பெற்றோர்/உற்றார் எதிர்ப்பு இருந்திருக்கலாம்!
ஆனாலும் அந்தக் காதல் சிறப்பித்தே பாடப்பட்டிருக்கு அல்லவா? அதை ஒப்புக் கொள்கிறீர்கள் தானே?

//ஏதேனும் குறுநில மன்னவனோ இளவலோ சோழன் மகளைக் காதலித்திருந்தால் ஒட்டக்கூத்தரும் சோழனும் அதனை மறுத்திருக்க மாட்டார்கள்//

ஹிஹி!
மன்னன் என்றால் கூட, தான் வெறுக்கும் எதிரி மன்னனாய் இருக்கக் கூடாது என்றும் இன்னொரு கண்டிஷனும் போடப்படலாம்! :)

//ஒரு புலவன் மகன் மன்னன் மகளைக் காதலிப்பதா? அதனை இலக்கியமும் ஏற்றுக் கொள்ளாது; இலக்கியங்களைப் படைக்கும் ஒட்டக்கூத்தரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்//


நண்பர்களே! தமிழிலக்கியம் பயின்றோரே...
சாதாரணத் தலைவனும், (ஸோ கால்ட்) உயர்குடித் தலைவியும், காதலித்து வென்றதாக, தமிழ் இலக்கியத்தில் ஒரு நடப்பு கூட இல்லையா?

யாராச்சும் அறியத் தாருங்கள்!


//ஆனால் பெரும்புலவன் மகனும் அரசன் மகளும் என்பதால் இவர்கள் கதை மக்கள் நடுவே நிலை நின்று விட்டது//

இது என்னவோ சரி தான்!

//இப்படி மக்கள் ஆதரவு கொண்ட ஒன்றை மறுத்ததாலேயே மன்னனை எதிர்க்க வலுவும் துணிவும் இல்லாத மக்கள் புலவரான் ஒட்டக்கூத்தரை மட்டும் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது//

இருக்கலாம்!
ஆனால், ஒட்டக் கூத்தரை அவர் காதல் நிலைப்பாட்டை வைத்துக் கிண்டல் செய்யவில்லையே!
கம்பனை வைத்து, கூத்தன் பாட்டைத் தானே கிண்டல் செய்தார்கள்?
கம்பனுக்கு அவர் கொடுத்த தொல்லைகள் தானே காரணம்?

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 11:24 AM  

//தமிழ்ப் புலவர்கள் இடையே ஒற்றுமை இருந்தால் தான் தமிழ் வளரும் என்று யார் சொன்னது? புலவர்களும் சச்சரவுகளும் உடன்பிறந்தவர்கள் என்று ஏதோ ஒரு திரைப்படத்தில் கூட சொல்லுவார்களே. :-)//

ஒற்றுமை என்றால் கருத்து ஒற்றுமையைச் சொல்லவில்லை குமரன்! எதிரி மனோபாவம் கூடாது என்று தான் சொல்ல வந்தேன்!

கம்பரையும், அவர் குடும்ப அமைதியையும் கெடுக்கும் அளவுக்கு வேற்றுமை வருதல் நியாயமா?
கூத்தரைக் கம்பர் மதித்தாரே? இன்னல் விளைவிக்கவில்லையே!
குறைந்த பட்சம், கம்பரை அவர் தமிழுக்காகவாவது மதிக்கலாம் இல்லையா?

தமிழை மதிக்காதவர் எப்படித் தமிழுக்குத் தொண்டு செய்ய முடியும்?

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 12:04 PM  

//குமரன் (Kumaran) said...
//சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
//
பெருமாள் கோவில்களில் தாயாருக்குத் தரும் முதன்மை என்று சொல்லாமல் விட்டீர்களே - நீங்கள் தப்பித்தீர்கள். :-)//

ஹா ஹா ஹா! தப்பிக்கவில்லை! இதோ சொ.செ.சூ :)

பெருமாள் கோயில்களில் தாயாருக்குத் தரும் முதன்மையை வேறு வெளிநாட்டுப் பண்பாடுகளில் கூடக் காண முடியாது!

பெண்ணுரிமையைப் போற்றிப் போற்றி வளர்த்தது வைணவம் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்!

எவனும் பெண்டாட்டி இனிஷியலைத் தனக்குப் போட்டுக்கலை! தன்னோட இனிஷியலைத் தான் அவளுக்குக் கொடுத்தான்.
எம்பெருமான் கண்ணன் மட்டுமே ஸ்ரீ-நிவாசன், திரு-நாராயணன், ஸ்ரீ-யப்பதி என்று அவளை முன் வைத்துத் தன்னைப் பின் வைத்தான்!

குரு பரம்பரைக்கு ஒரு பெண்ணை முன்னே வைத்தான்; லக்ஷ்மீ நாத சமாரம்பாம்...என்று மொத்த பரம்பரைக்கும் அவளே குரு!

பெண் பிரிந்து சென்றால், சாபம் கொடுக்காது, அவளைத் தேடி அலைவதும், பின்னாலேயே ஓடி வருவதும் திருவேங்கடமுடையான் இயல்பு!

மனைவியிடம் மொத்து வாங்குவதை விழாவாக நடத்திக் காட்ட அரங்கனால் மட்டுமே முடியும்!

ஆழ்வார்கள் அத்தனை பேரையும் ஆண்டாள் விஞ்சி நிற்கிறாள் என்று பாட வேறு எங்கு முடியும்?

ஆண்கள் மட்டுமே மென்முலை அது இதுன்னு பாடிக்கிட்டு இருந்த போது, அவன் மேனி நாற்றம்,
அவன் வாய்ச்சுவை,
அவன் இதழ்க் கனி அமுது,
அவனுக்காகவே உன்னித்து எழுந்தன என் தட முலைகள்....
என்று ஒரு பெண் "வெட்கமில்லாமல்" துணிந்து பாடுவது வேறு எங்கே நடக்கும்? அப்படிப் பாடியதை மற்ற ஆண்கள் எல்லாம் மதிப்பளித்து ஓதி மகிழ்வது வேறு எங்கே நடக்கும்?

காட்டுங்களேன் பார்க்கலாம்!

கோவி அண்ணன் வந்து, சினிமாவை மட்டும் பாத்துப்போட்டு, இலக்குமி காலைப் புடிச்சி விடுறா-ன்னு கப்சா அடிப்பாரு! :)

இறைவனின் திருவடிகள் இதோ, என்று அடியவர்க்குத் தனக்குவமை இல்லாதான் தாளினை, திருவடி சம்பந்தம் பண்ணி வைக்கிறாள் இறைவி என்று சொன்னாலும் புரியுமோ?

இல்லை இலக்குமியுடன் கூடிய பாதங்களை தன் தலை மேலேயே (நெற்றியில்) வைத்துக் கொள்கிறான் என்று சொன்னால் தான் ஏறுமோ? :))

பெண்கள் சமயப் பணி செய்ததும், பொன்னாச்சி, பருத்திக் கொல்லை நாச்சி, அத்துழாய், அம்மங்கை-ன்னு ஒரு பெரிய மகளிர் அணியே இராமானுஜ கோஷ்டியில் இருந்தது-ன்னு எல்லாம் சொன்னா...

முத்திரைகள் என் மேல் படக் படக்-ன்னு விழும்! ஆனா அதுக்கெல்லாம் கவலைப்படற ஆளா நானு? :))

என்னமோ போங்க குமரன்!
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 2:16 PM  

//குமரன் (Kumaran) said...
திருத்தணிகை ஒரு படைவீடு கிடையாது; குன்றுதோறாடல் தான் படைவீடு என்பதை திருமுருகாற்றுப்படையின் அடிப்படையில் சொல்கிறீர்களா?//

ஆமாம் குமரன்! அது மட்டுமல்ல! பின் வந்த கச்சியப்பர், அருணகிரி, பாம்பன் சுவாமிகள், வாரியார் என்று பலரும் சொல்வதும் இதுவே!

//வள்ளியம்மை முருகனுடன் 'உடன் போகிய' பின்னரே தன்னுடைய உண்மை உருவத்தைக் காட்டி நம்பிராசன் தர மணம் கொண்டான் என்று நினைக்கிறேன்//

காதலிக்கும் போது, தினைப்புனத்துக்கு "உடன் போக" வில்லையா? இந்த உடன் போகினால் களவு, வீட்டுல சொன்னா கற்பு என்பதெல்லாம் சும்மா!

ஒரே மனம் தான்-ஒரே மணம் தான்-அது திரு மணம் தான்!
காதலில் கற்பும் இருக்கு!
கல்யாணத்தில் களவும் இருக்கு!

கற்பு என்று தேவானையை மட்டும் குறிப்பதில் அடியேனுக்கு உடன்பாடு இல்லை! முருகன் மனமாச்சும் இருவருக்கும் உண்டு! ஆனால் வள்ளியின் மனம் முருகனுக்கு மட்டுமே! அவளைக் கற்பு என்று குறிக்கத் தயங்குவதற்கு நாம் யார்? நமக்கு என்ன கற்பு இருக்கு?

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 2:24 PM  

//குமரன் (Kumaran) said...
இராமன் தணிகை மலைக்கு வந்து முருகனை வணங்கிய தலபுராணச் செய்தி புதிது இரவிசங்கர். நன்றி//

தல புராணம் என்றாலே கட்டுக் கதை என்று பதிவுலகில் இப்போது கட்டி விட்டார்கள்! இது தான் வேதனை!

//தியாகையர் நிறைய தெலுங்கு கீர்த்தனைகளையே பாடியிருப்பதால் எனக்குப் புரிவதில்லை.//

தியாகராஜர் தெலுங்கு எளிமையான ரோட்டோரத் தெலுங்கு! இலக்கியத் தெலுங்கு இல்லை! கொஞ்சம் பழகினால் புரிந்து விடும் குமரன். சங்க இலக்கியத்தை உரை வைத்துப் படிப்பது போலத் தான்!

பாட்டில் ஒன்னுமே இல்லை. அவரை விட நானே நல்லா எழுதுவேனே-ன்னு நண்பர் ஒருவர் சொல்லுவாரு! :)
ஆனா அந்த எளிமையின் நாடகமில்லாத வார்த்தையின் முன் சொற்செட்டுகள் நிற்க முடியாது!

மேலும் அவை இசைப் பாடல்கள்; இயற் பாக்கள் அல்ல! அருணகிரியார் சந்தம் பல இடங்களில் ரிப்பீட்டே ஆகும்! ஆனால் தியாகராஜர் புதிது புதிதாகக் கண்டுபிடித்த ராகங்கள் கணக்கில் அடங்கா!

அருணையார் செஞ்சொற் சந்தக் கவி என்றால்
தியாகராசர் எளியசொற் இசைக் கவி!

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 2:26 PM  

//குமரன் (Kumaran) said...
முருகனருளில் திருத்தணிகையைப் பற்றி எழுதி அவர் திருமகளின் திருமணத்திற்கு வாழ்த்து சொன்னது மிகவும் பொருத்தம்//

முருகனருள் கிருத்திகை காலண்டர் நம்ம திராச தானே! :)

//நானும் வாழ்த்துகிறேன். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக//

ததாஸ்து! அப்படியே ஆகட்டும்!
மங்கலமாய் வாழ்க!

கோவி.கண்ணன் October 31, 2008 2:31 PM  

பல தகவல்கள், எப்படி நினைவு வைத்து எழுதினீர்கள் என்பது வியப்பானது பாராட்டத்தக்கது. கலக்கல் !

//இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்பது தணிகைத் தல புராணம்!//

தலத்துக்கு ஒரு புராணம், புராணம் என்றால் பழைய கதை, அதாவது தலத்தைக் காட்டிலும் அந்த புராணம் பழையது என்பதாலேயே தல புராணம் என்று வந்திருக்க வேண்டும் :)

இராமேஷ்வரமாக இருக்கட்டும், திருத்தனியாக இருக்கட்டும் இந்த கோவில்கள் 6 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் ஏற்பட்டவைதானே, இராமன் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவன் என்று சொல்கின்றனர். பின்பு எப்படி இராமேஷ்வரத்திற்கோ, திருத்தனிக்கோ சென்றி இருக்க முடியும் ? சைவக் கடவுளை இராமன் வணங்கினான் என்று சொல்வதற்கான சைவர்களின் இடைச் சொருகலாக இருக்குமோ ?

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 2:46 PM  

//Raghav said...
ஆச்சார்யன் பொருள் விளக்கத்தை நீங்க தான் சொல்லனும்.. இல்ல குமரன் சொல்றாரன்னு எதிர்பாக்குறேன்..//

கீதாம்மாவும் சொல்லலாம்! வாங்கம்மா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 3:21 PM  

//Raghav said...
ஆனா அம்பிகாபதி படத்துல கம்பரின் புதல்வர் முருகனை குறித்து 100 பாடல்கள் (99ன்னு ஒட்டக்கூத்தர் சொல்றாரு) பாடுறாரே.. அப்போ அவர் வைணவர் இல்லையா :)//

ஹிஹி
100 பாடல்களும் முருகன் மேல மட்டுமே இருந்தா அப்போ நீங்க சொல்லுறது சரி!
ஒன்னு கொறைஞ்சாலும் ஒட்டக் கூத்தரு சொல்வதே சரி! :))

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 3:24 PM  

அன்பர்கள் மன்னிக்கணும்! பாடலை எழுதியது பாபநாசம் சிவன் இல்லையாம்!

KD சந்தானம் என்று சிலர் சொல்கிறார்கள்; சிலர் பாபநாசம் சிவன் தான் என்று சொல்கிறார்கள்! இருவர் பேரையும் குறித்து வைக்கிறேன்! யாராச்சும் தமிழ்த் திரையிசை வல்லுநர்கள் ஹெல்ப் ப்ளீஸ்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 3:32 PM  

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
(தமிழ்ச் சைவ மடம் ஒன்றில் மட்டும் தேசிகன் என்று புழங்குகிறார்கள் - அவர்கள் நாராயணா என்றும் சொல்பவர்கள்)
//

மன்னிக்கவும்.
தேசிகன் என்பது வைணவப் பரிபாஷை மட்டுமல்ல. சைவத்திலும் தேசிகன் உண்டு என்று குமரன் கூகுள் செய்து மடல் அனுப்பி இருந்தார்! இதோ:

திருவோத்தூர் சிவஞான தேசிகன், சிவக்கொழுந்து தேசிகர், தண்டபாணி தேசிகர், ஈசான்ய ஞான தேசிகர், சுப்ரமணிய தேசிகர், சுவாமிநாத தேசிகர், குமாரசுவாமி தேசிகர், வைத்தியநாத தேசிகர், முருகையா தேசிகர், குருபத தேசிகர், சோமசுந்தர தேசிகர், மாணிக்கவாசக தேசிகர்!

வைணவ மடங்கள் பலவற்றில் வாழையடி வாழையாக தேசிகன் வரும்! சைவ மடங்களில் அப்படி அல்ல! அதனால் அப்படிச் சொல்லி விட்டேன்! தனிப்பட்ட தேசிகர்கள் சைவத்திலும் உண்டு!

தகவற் பிழைக்கு வருந்துகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 3:56 PM  

//Raghav said...
இன்னொன்று.. சைவர்களும் சந்தியாவந்தனம் பண்ணும் போதோ அல்லது ஹோமம் போன்றவை பண்ணும் முன் செய்யும் சங்கல்பத்தின் போது, கிருஷ்ணாய ஸ்வாஹா, கேசவாய ஸ்வாஹா, கோவிந்தாய ஸ்வாஹா என்றே சொல்லி தீர்த்தம் அருந்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். சரியா என்னன்னு நீங்க தான் சொல்லனும்//

ஹா ஹா ஹா!
எனக்குச் சந்தியா வந்தனமே தெரியாது! அந்த நற்பேறும் கிட்டவில்லை! வேள்வி செய்யும் போது கூட இருந்து பார்த்து இருக்கேன்! அம்புட்டு தான்!

சைவரோ, வைணவரோ, சாக்தரோ, எவராயினும் வேதங்கள் குறிக்கும் பரப்பிரம்மம் = நாராயணன் என்பது தான் அனைத்து ஆசார்யர்களின் கருத்து! சங்கரர் பரப்பிரம்மம் நிர்குணமாய் = உருவம் கடந்தவன், சகுணமாய் = நாராயணன் என்று பாஷ்யத்தில் சொல்லுவார்.

நாராயணன் என்றால் நாமம், சங்கு, சக்கரம் என்று மட்டும் பார்க்கும் போது, என்ன சங்கரரே இப்படிச் சொல்லிட்டாரே-ன்னு சிலர் சஞ்சலப்படலாம்! ஆனால் அதுவல்ல!

நாராயணன் என்பது
வேதமும், தமிழ் மறையும் இயம்பிய பரவஸ்து, பரம்பொருள்!

விஷ்ணு என்று அதைக் கொள்ள வேண்டாம்! அதற்கும் மேலானவர் என்று தெளிந்தால் இந்தச் சஞ்சலம் வராது!
நாராயணன் கரங்களில் மானும், மழுவும், வேலும், கொடியும், சங்கும், சக்கரமும் எல்லாம் உண்டு!

நாராயணன் என்ற பெயர் விளக்கத்தைச் சுப்ரபாதப் பதிவில் அடியேன் சொல்லி இருப்பேன்.
நாராயணன் = நீரான்!
நீர் கலத்துக்கு ஏற்றவாறு எவ்வடிவமும் கொள்ளும்! அம்புட்டு தான்!

//கிருஷ்ணாய ஸ்வாஹா, கேசவாய ஸ்வாஹா, கோவிந்தாய ஸ்வாஹா என்றே சொல்லி தீர்த்தம் அருந்துவார்கள்//

அதான் நீ்ரான் என்று சொன்னேன் அல்லவா? அதனால் தான்!

நீர் தனித்தே ஒரு உணவு! மற்ற பொருட்களுடன் சேரும் போதும் உணவு!
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித், துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை (நீர்).
மேலும் அறிய இங்கு செல்லுங்கள்!
http://verygoodmorning.blogspot.com/2007/11/25.html

சந்தியாவந்தனத்தில் சைவ/வைணவ/சாக்த/இன்ன பிற பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஏகமனதாகச் சொல்வது:
அச்சுதாய நம!
அனந்தாய நம!
கோவிந்தாய நம!

சைவ மடாதிபதிகள் பலரும் கையொப்பம் இடுவது நாராயண ஸ்மிருதி! ஆசி வழங்கும் நாராயண என்ற முன்னொட்டுடன் தான்! பேதமே இல்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) October 31, 2008 4:08 PM  

//கோவி.கண்ணன் said...
பல தகவல்கள், எப்படி நினைவு வைத்து எழுதினீர்கள் என்பது வியப்பானது பாராட்டத்தக்கது. கலக்கல் !//

திட்டறீங்களா-ண்ணா! :)
சரி, சிங்கையில் நாளைக்கு ஏதோ ஒரு பெரிய ஹோட்டல்-ல மதிய விருந்தாமே! ஏமி சேதி? :)

//தலத்துக்கு ஒரு புராணம், புராணம் என்றால் பழைய கதை, அதாவது தலத்தைக் காட்டிலும் அந்த புராணம் பழையது என்பதாலேயே தல புராணம் என்று வந்திருக்க வேண்டும் :)//

லொள்ளா?
புராணம்=புரா+நவம்=பழசு+புதுசு!
தலம்=புரா! கதை=நவம்!
போதுமா? :))

//இந்த கோவில்கள் 6 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் ஏற்பட்டவைதானே இராமன் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவன் என்று சொல்கின்றனர். பின்பு எப்படி இராமேஷ்வரத்திற்கோ, திருத்தனிக்கோ சென்றி இருக்க முடியும் ?//

சூப்பர் கேள்வி! எப்படி-ண்ணே இப்படி எல்லாம்! நீங்க மனிதருள் புனிதர்-ண்ணே! இப்படி எல்லாம் கேள்வி கேட்டே, ஆன்மீகம் வளர்க்கும் புத்த அவதாரம் தான் கோவி! :)

Jokes apart,
இராமன் தணிகைக்கு வந்தான் என்றால் இப்ப இருக்குற கோயிலுக்கு வந்தான் என்பது ஆகாது! அவன் மலைக்கு வந்தான் என்பதே பொருள்! ஆலயங்களில் பின்னாளில் எழுந்து, அழிந்து, மீண்டும் எழுந்து இருக்கலாம்! ஆனால் தல புராணம் சொல்வது மையமான நிகழ்வை மட்டுமே!

திருப்பெரும்பூதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில், 1991 ஆம் ஆண்டு மலரஞ்சலி செலுத்தினார் என்றால்...அந்த இடத்தில் செலுத்தினார் என்று தானே கொள்கிறோம்; நினைவகம் அப்ப வரவேயில்ல! பத்து வருஷமாச்சு! இது என்ன டுபாக்கூர் என்றா கேட்கிறோம்! அதே தான்!

//சைவக் கடவுளை இராமன் வணங்கினான் என்று சொல்வதற்கான சைவர்களின் இடைச் சொருகலாக இருக்குமோ ?//

எனக்கு இடையில சொருகற புடைவையைத் தான் தெரியும்! வேறெந்த இடைச் செருகலும் தெரியாதுங்கோவ்! :))

கோவி.கண்ணன் November 01, 2008 1:12 AM  

//பரப்பிரம்மம் = நாராயணன் என்பது தான் அனைத்து ஆசார்யர்களின் கருத்து!
//

:)

பரமசிவன் (பரம உலகத்தில் இருக்கும் சிவன்) என்ற ஒற்றைச் சொல்லாகவே சிவன் குறித்து சொல்லப்படுவதான் சிவனே பரமஆத்மா = பரமாத்மா என்று சைவ சிந்த்தாந்தங்கள் சொல்கின்றன. எனக்கு(ம்) சரியெனப் படுகிறது.

கிருஷ்ணனுக்கு வலியச் சொன்னால்தான் பின்னொட்டாக
கிருஷ்ண பரமாத்மா என்று சொல்லமுடியும், அதுவும் கூட ஒற்றைச் சொல்லாக இல்லாமல் கிருஷ்ணன் + பரமாத்மா என்ற இருவர் சேர்ந்த ஒரு பொருள் சொல் (அப்பத்தா என்பது போல்) ஆக தெரிகிறது.

பரம ஆத்மாவுக்கு பிறப்பு இறப்புக் கிடையாது, கிருஷ்ணனுக்கு உண்டு. கிருஷ்ணனை பரமாத்மா என்று சொல்ல முடியாது, ஆனால் பரமாத்மாவுக்கு ஒப்பானவர் என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன் (குமரனுக்கும் உங்களுக்கும் ஒப்புதல் இருக்காது, எனது கருத்தைத் தான் சொன்னேன்)

பரம்ஆத்மா (ஆன்மாக்களில் உயர்ந்தது, மற்ற ஆன்மாக்களை உய்விப்பது) தவிர்த்து,

பரப்பிரம்மம் (அத்வைதம்) என்கிற எல்லாமாகி இருப்பதிலும், சூனியம் (புத்தரின் சூனியவாதம்) என்கிற ஏதுமற்ற நிலையிலும் எனக்கு நம்பிக்கைக் கிடையாது, அவை வெறும் சித்தாந்தங்களே, தத்துவம் என்கிற பெயரில் கிறுக்கியதெல்லாம் சேர்த்து இழுத்துவருவது போலவே அவைகள் இழுத்து வரப்படுகின்றன என்றே நினைக்கிறேன். நல்ல வேளை சவுச்சாலயம் என்றால் என்ன வென்று தசவதாரம் பார்க்கவில்லை என்றால் தெரிந்திருக்காது, எதோ ஒரு ஆலயம் என்று தான் நினைத்திருப்பேன் :)

Kannabiran, Ravi Shankar (KRS) November 02, 2008 12:49 AM  

//நல்ல வேளை சவுச்சாலயம் என்றால் என்ன வென்று தசவதாரம் பார்க்கவில்லை என்றால் தெரிந்திருக்காது, எதோ ஒரு ஆலயம் என்று தான் நினைத்திருப்பேன் :)//

ஹிஹி! உரக்கச் சொல்லாதீங்க! அப்புறம் அதுக்கும் ஒரு ஆலயம் கட்டிறப் போறாங்க! போட்டியா செறிவாலயம் ஒன்னும் வந்துருப் போவது! :))

Kannabiran, Ravi Shankar (KRS) November 02, 2008 1:18 AM  

//கோவி.கண்ணன் said...
//பரப்பிரம்மம் = நாராயணன் என்பது தான் அனைத்து ஆசார்யர்களின் கருத்து!
//

:)//

இதுக்கு நானும் ஒரு சிரிப்பான் போட்டுக்கறேன்!
:)

//பரமசிவன் (பரம உலகத்தில் இருக்கும் சிவன்) என்ற ஒற்றைச் சொல்லாகவே சிவன் குறித்து சொல்லப்படுவதான் சிவனே//

அது ஒற்றைச் சொல் அல்ல கோவி அண்ணா! இரட்டைச் சொல்! அதுக்குக் கூடவா தரவு கொடுத்து தாவு தீரணும்? பாத்தாலே தெரியுதே! :)

கிருஷ்ண பரமாத்மா-வில், பரமாத்மா பின்னொட்டு!
பரம சிவனில், பரம முன்னொட்டு!
அம்புடு தேன்!

//பரம ஆத்மாவுக்கு பிறப்பு இறப்புக் கிடையாது, கிருஷ்ணனுக்கு உண்டு. கிருஷ்ணனை பரமாத்மா என்று சொல்ல முடியாது, ஆனால் பரமாத்மாவுக்கு ஒப்பானவர் என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன்//

அதைக் கூடச் சொல்லக் கூடாது! கண்ணன் பரந்தாமன்! அவ்வளவே! பரமாத்மா என்பது பின்னொட்டு தான்!

காந்தியை மகாத்மா என்பது போல, கிருஷ்ணனை பரமாத்மா என்று வழங்கி வருகின்றனர், அவன் சொன்ன தத்துவங்களுக்காக! மற்றபடி கண்ணன் ஒரு மானுடன் தான்! (தெய்வமே அவதாரம் எடுத்து வந்தாலும், அதான் வந்தாச்சு அல்லவா? மானுடன் தான் :)

//(குமரனுக்கும் உங்களுக்கும் ஒப்புதல் இருக்காது, எனது கருத்தைத் தான் சொன்னேன்)//

அடியேனுக்கு ஒப்புதலே!
கிருஷ்ணன் பிரப்பிரும்மம் அல்ல!

பரமாத்மா, பரப்பிரும்மம் என்று சைவ, வைணவ ஆன்றோர்களும், ஆசாரியர்களும், வேறு யாருக்குமே சொல்லவில்லை! நாராயணன் என்ற "பதத்துக்கு" மட்டுமே பரப்பிரம்ம வாசகம் சொல்லப்படுகிறது!

அனைத்து வேதங்களும், தமிழ் மறைகளும், ஆதிசங்கரர், குமரகுருபரர் உட்பட சைவப் பெரியார்கள் பலரும், இதை ஒப்புக் கொள்கின்றனர். அருணகிரியும் மறைபொருளாக ஒப்புகிறார் என்பதைத் தரவோடு இன்னொரு சமயம் சொல்கிறேன்! வேதங்களில் தேடித் தேடிப் பார்த்தாலும், வேறு எவர்க்க்கும் இந்தப் பரப்பிரும்ம வாசகம் சொல்லப்படவில்லை!

அந்த நாராயணன் என்ற பதம், சைவமா, வைணவமா, பெளத்தமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது! அடியேனைப் பொறுத்தவரை, வள்ளுவர் கூறும் ஆதிபகவன் போன்ற பொதுச் சொல் தான், அந்த நாராயணன் என்னும் பதமும்!

//தத்துவம் என்கிற பெயரில் கிறுக்கியதெல்லாம் சேர்த்து இழுத்துவருவது போலவே அவைகள் இழுத்து வரப்படுகின்றன என்றே நினைக்கிறேன்//

புத்தரையும் சங்கரரையும் கிறுக்கல் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை! நீங்கள் சொல்லலாம்! ஞானம் இருக்கு! :)

சூரியன் சூரியக் குடும்பத்துக்கு மூலமானவன். அவன் இரவில் இருப்பதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நேரத்தில், வேறு வேறு மாதிரி பிரதிபலிக்கிறான். அது போலத் தான் தத்துவங்கள்!

ஆனால் ஊரில் இருந்து எழும்பி, விண்வெளியில் இருந்து கொண்டோ, ஆகாச வெளியில் இருந்து கொண்டோ பார்க்கும் போது, சூரியன் என்ற மூலகாரணம் தென்படும்!

அதே போலத் தான் பரப்பிரம்மம் என்பதும்; ஜகத் காரணமஸ்து என்று சிலர் சொல்கிறார்கள்! முதற்றே உலகு என்றும் சொல்கிறார்கள்! அதுவே பரப்பிரும்மம்!

கோவி.கண்ணன் November 02, 2008 11:12 AM  

//அது ஒற்றைச் சொல் அல்ல கோவி அண்ணா! இரட்டைச் சொல்! அதுக்குக் கூடவா தரவு கொடுத்து தாவு தீரணும்? பாத்தாலே தெரியுதே! :)//

ஒப்புக் கொள்ள மாட்டேன், சிவலோகம் பரமலோகம் இரண்டுமே ஒன்றுதான், சிவலோகத்தின் அதிபதி நாராயணனாக எப்படி இருக்க முடியும் ?

அவதாராம் எடுப்பதெல்லாம் ஆன்மாக்களே அதில் நாராயணன் உயர்ந்த ஆன்மா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, சிவனுக்கு பிறவிகள் கிடையாது.

விஷ்ணு தேவதாய நமக !
பிரம்மா தேவதாய நமக !
சிவ பரமாத்மாய நமக !
தான் :)

கோவி.கண்ணன் November 02, 2008 11:21 AM  

இயேசு அவதாரமா ? இறைவனா ? என்ற குழப்பம் கிறித்துவத்திலும் உண்டு ஒருசாரர் தூதர் மட்டுமே என்பார்கள், இதுவே இஸ்லாமியர்களின் கருத்தும், முகமது நபி போல், ஏசுவும் தூதர் மட்டுமே என்பார்கள், கத்தோலிக்கப் பிரிவு ஏசுவை இறைவனாக ஒப்புக் கொள்ளும் ப்ராட்டஸ்டாண்ட் திரித்துவத்தை நம்பும் (பிதா - சுதன் - பரிசுத்த ஆவி) அவர்களுக்கு ஏசு இறைவனின் மகன் தான், இறைவன் அல்ல.

அல்லாவும் சிவனும் ஒன்று என்பவர்கள் கூட அல்லாவும் விஷ்ணுவும் ஒன்று என்றோ, நாரயணனும் அல்லாவும் ஒன்று என்றோ சொன்னதில்லை.

நல்லா புரிந்து கொள்ளுங்கள் நான் கிருஷ்ணனைக் குறைத்துச் சொல்லவில்லை, ஆத்மாக்களின் தலைவன் பரம ஆத்மா (ஆன்மாவைப் போலவே உருவமற்றவன், பாலற்றவன்) என்றால், மனித பிறவிகளின் தலைவன் கிருஷ்ணன் தான். இந்த இருவரும் இல்லாது இந்திய சமய தத்துவங்கள் எதுவுமே கிடையாது.

Kannabiran, Ravi Shankar (KRS) November 02, 2008 12:52 PM  

//கோவி.கண்ணன் said...
ஒப்புக் கொள்ள மாட்டேன், சிவலோகம் பரமலோகம் இரண்டுமே ஒன்றுதான்//

பரமலோகமா? அது எங்கே இருக்கு? கூகுள் மேப் வேணாம்! பரமலோகம்-ன்னு வரும் ஒரு குறிப்பை ஆச்சும் காட்டுங்களேன்!
வர வர சம்பந்தா சம்பந்தம் இல்லாமப் பேசறது ஒங்களுக்கு வழக்கமாப் போச்சுது! :)

பரமலோகம், சிவலோகம்-ன்னு நாம பேசவேயில்லை! எங்கிருந்தோ தொபுக்கடீர்-ன்னு பரமலோகத்தை நீங்களே சிருஷ்டி பண்ணிக் கொண்டாறீங்க! குமரன் சொன்னது சரி தானோ? :)

//சிவலோகத்தின் அதிபதி நாராயணனாக எப்படி இருக்க முடியும் ?//

அப்படி நான் சொல்லவே இல்லையே! எதுக்கும், யாருக்கும் அதிபதி-ன்னே சொல்லலையே! மறைகளில் அனைத்துக்கும் மூலமாகச் சொல்லப்பட்டிருக்கும் பரப்பிரம்மம் பற்றித் தானே பேச்சு!

//அவதாராம் எடுப்பதெல்லாம் ஆன்மாக்களே! அதில் நாராயணன் உயர்ந்த ஆன்மா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, சிவனுக்கு பிறவிகள் கிடையாது//

அவதாரம் எடுப்பதால் அது ஜீவாத்மா என்று ஆகி விடாது!
சூரியன் பிளவுண்டு கோள்கள் உருவானால், உடனே சூரியன் கோள் ஆகாது! சூரியன் நட்சத்திரமே!


சிவனுக்குப் பிறவி கிடையாது! நாரணன் என்று சொல்லப்படுபனுக்கும் பிறவி கிடையாது!

பிறவான், இறவான்-ன்னு பின்னால் வந்த பாட்டைக் காட்டினா, நானும் பிறப்பிறப்பில்லாப் பெரியோன்-ன்னு பாட்டைக் காட்ட முடியும்! :)

நாரணனுக்கு அவதாரம் உண்டு! அது பிறவி அல்ல!
சிவனுக்கும் அவதாரம் உண்டு! அது தெரியுமா? :)
காபாலி, பிங்கள, விரூபாக்ஷ முதலான பதினோரு அவதாரங்கள்!

நாரணனுக்குப் பத்து அவதாரம் என்று பொதுவாகப் பேசப்படுகிறதே தவிர இன்னும் எக்கச் சக்கமா இருக்கு! மோகினி அவதாரம், தன்வந்திரி், ஹயக்ரீவர் என்று பல!

தசாவதாரம் என்பது சிறப்பான பத்து! அது போக குணாவதாரங்கள், புருஷாவதாரங்கள், மன்வந்திர அவதாரங்கள் நிறைய இருக்கு!

அவதாரம் என்றால் என்ன அவதானித்துப் பேசினால் புரியும்! அவதாரம் என்றால் இறங்கி வருதல்! அவ்வளவு தான்! சிவனும் இறங்கி வந்துள்ளார். விஷ்ணுவும் இறங்கி வந்துள்ளார். அம்புட்டு தான்!

//விஷ்ணு தேவதாய நமக !
பிரம்மா தேவதாய நமக !
சிவ பரமாத்மாய நமக !
தான் :)//

ஜூப்பரு! வடை மொழியில எல்லாம் ஜோரா வடை தட்டறீங்க! வாங்கண்ணா, நாங்களும் உங்களைத் தட்டறோம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) November 02, 2008 1:37 PM  

//கோவி.கண்ணன் said...
இயேசு அவதாரமா ? இறைவனா ? என்ற குழப்பம் கிறித்துவத்திலும் உண்டு ஒரு சாரர் தூதர் மட்டுமே என்பார்கள், இதுவே இஸ்லாமியர்களின் கருத்தும்//

ஆனால் இங்கு அப்படி எந்தக் குழப்பமும் இல்லை! :))

//அல்லாவும் சிவனும் ஒன்று என்பவர்கள் கூட அல்லாவும் விஷ்ணுவும் ஒன்று என்றோ, நாரயணனும் அல்லாவும் ஒன்று என்றோ சொன்னதில்லை.//

இதுவும் உங்க டுபாக்கூரா? :)
ராம், ரஹீம்-ன்னு சொல்வது இல்லையா? ஈஸ்வர, அல்லா தேரே நாம் கேட்டிருக்கீங்க தானே? ஈஸ்வர என்பது விசிட்டாத்வைதப் பெயரும் கூட!
கபீர் தாசர், சைதன்யர், இராமானுசர் எல்லாம் அல்லாவையும் நாரணனையும் ஒப்பிட்டுப் பேசியிருக்காங்களே! துலக்கா நாச்சியார் பதிவைப் படிச்சிருப்பீங்களே! :)

//நல்லா புரிந்து கொள்ளுங்கள் நான் கிருஷ்ணனைக் குறைத்துச் சொல்லவில்லை//

நீங்களும் நல்லாப் புரிந்து கொள்ளுங்கள் அண்ணா! நான் நீங்க கொறைச்சிச் சொன்னதா எடுத்துக்கவே இல்லை! அதான் நானே சொல்லிவிட்டேனே! கிருஷ்ணன் என்ற அவதாரம் பரப்பிரம்மம் அல்ல-ன்னு! அப்புறம் என்ன?

//ஆத்மாக்களின் தலைவன் பரம ஆத்மா (ஆன்மாவைப் போலவே உருவமற்றவன், பாலற்றவன்)//

உண்மை!
ஆத்மாக்களின் ஆத்மாவாக இருப்பவன் பரமாத்மா! பரப்பிரும்மம்!
இது பற்றிய சங்கரர்-மிஸ்ரர், இராமானுசர்-யக்ஞமூர்த்தி பட்டி மன்றத்தை அப்படியே மாதவிப் பந்தலில் போடலாமா-ன்னு இப்ப ஒரு யோசனை வருது! :)

//மனித பிறவிகளின் தலைவன் கிருஷ்ணன் தான்//

இல்லை! மனிதப் பிறவிகளின் தலையாயவர்கள் பல பேர்! அதில் கிருஷ்ணனும் ஒருவன்! அந்தக் கிருஷ்ணன் உட்பட அனைவரும் பரப்பிரம்ம சொரூபத்தில் அடக்கம்!

கோவி.கண்ணன் November 02, 2008 7:37 PM  

//மனித பிறவிகளின் தலைவன் கிருஷ்ணன் தான்//

ஆதி நாரயணன் ஆதி லட்சுமி என்ற பெயரை வைத்துத் தான் சொன்னேன், ஆதி என்றால் முதல் என்பது தங்களுக்குத் தெரியும்.

நாராயணனுக்கு இன்னொரு பெயரும் உண்டு அது முன்னொட்டு சேர்த்த

நர நாராயணன், லெட்சுமிக்குக்கு அதே போல்

நாரி லெட்சுமி, நர, நாரி என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தேவைப்படாது.

கோவி.கண்ணன் November 02, 2008 7:54 PM  

//புத்தரையும் சங்கரரையும் கிறுக்கல் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை! நீங்கள் சொல்லலாம்! ஞானம் இருக்கு! :)//

இதில் வியப்படைய என்ன இருக்கு, இவர்களுடையது ஒரு சித்தாந்ததம் அவ்வளவு தானே, இவர்களும் அவர்களுக்கு முன்பு இருந்தவையை மறுத்து, அல்லது புதிய தொன்றை அமைத்தார்கள். புத்தருக்கு பிறகு ஒரு புத்தரோ, சங்கரரருக்கு பிறகு ஒரு சங்கரரோ வரவில்லை, (பெரியாருக்கு பிறகு ஒரு பெரியாரோ வரவில்லை, இதைச் சொல்லவில்லை என்றால் நீங்கள் சொல்லிவிடுங்க, சொல்லி இருக்கிங்க). புத்தர் பரிநிர்வான நிலையை அடைந்தார், சங்கரர் பரப்பரம்மத்தை அடைந்தார் என்று சொல்லப் படுகிறது. பக்திமார்க்கத்தில் திருவடியை அடைவது என்பார்கள்,
பரிநிர்வாணம், பரபிரம்மம், திருவடி, முக்தி, மோட்சம் இவற்றில் எதாவது ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும் ?

புத்தர் மற்றும் சங்கரரை மறுக்க வேறு என்ன காரணம் வேண்டும் ?

எரிச்சல் படுத்துவதாக நினைக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். இறை மறுப்பு என்ற நோக்கில் நான் இதுவரை எதையும் எழுதியதில்லை.

இறை இருக்கிறது என்று நம்பினால், நம்பிக்கையைத் தாண்டி என்னால் அதை பிறருக்கு புரிய வைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் என் நம்பிக்கையை பிறருக்கு திணிப்பது என்றாகிவிடும், என்னால் அது முடியாது அதனால் நான் இறை இருக்கிறது என்று சொல்வதும் இல்லை.

அதே போல் இறை இல்லை என்று சொன்னால் அதைப் பற்றி நன்கு தேடி அதன் பிறகே இல்லை என்று முடிவு சொல்ல வேண்டும், அப்படி செய்யாமல் இறை இல்லை என்றால் இறைமறுப்பும் கூட கேலிக் கூத்துதான், அறியாமலேயே அறிந்தது போல் இறை உண்டு என்று சொல்வது போலத்தான் இல்லை என்று அறியாமல் சொல்வதும், எனவே இறை இல்லை என்றும் நான் துணிந்து சொல்ல மாட்டேன்.
:)

கோவி.கண்ணன் November 02, 2008 7:58 PM  

//ஜூப்பரு! வடை மொழியில எல்லாம் ஜோரா வடை தட்டறீங்க! வாங்கண்ணா, நாங்களும் உங்களைத் தட்டறோம்! :)

12:52 PM
//

வடைமொழி தெரியவே தெரியாது என்றால் தமிழ் சொல்லுக்கும் வடைசொல்லுக்கும் எனக்கு வேறுபாடு தெரிந்திருக்காது அல்லவா ?
:)
கேள்வி ஞானம் உண்டு, புலமை இல்லை அம்புட்டுதான்.

Kannabiran, Ravi Shankar (KRS) November 03, 2008 4:28 PM  

//கோவி.கண்ணன் said...
//மனித பிறவிகளின் தலைவன் கிருஷ்ணன் தான்//
ஆதி நாரயணன் ஆதி லட்சுமி என்ற பெயரை வைத்துத் தான் சொன்னேன்//

கோவி அண்ணா
ரொம்ப தப்பு பண்றீங்க-ண்ணா!
பேரை வைத்து எல்லாம் கண்ட கருத்தையும் வீசுவதா? :(
ஒழுங்கா, நிறைந்த தரவுகளோடு பேச வேணாமா?

ஆதி விநாயகர், ஆதி சிவன்-ன்னு கூடத் தான் நிறைய பேர்-ல கோயில் இருக்கு! ஆதி-ன்னு பேரு இருந்தா மனிதப் பிறவிகளின் தலைவனா? என்ன பேத்தல் இது? :)

உங்களுக்கு ஒன்னு சொல்லிக் கொள்கிறேன்:
நாராயணன் என்று சொல்லப்படும் பொருள் வேறு! கிருஷ்ணாவதாரம் வேறு!


//நர நாராயணன், லெட்சுமிக்குக்கு அதே போல் நாரி லெட்சுமி//

மறுபடியும் பேத்தல் :)
நர-நாராயணன் என்பவர் இருவர்! சரி அதுக்கும், பரப்பிரம்மத்துக்கும் என்ன சம்பந்தம்? அங்கொன்னு படிச்சி இருக்கீங்க! இங்கொன்னு படிச்சி இருக்கீங்க! ரெண்டையும் கனெக்ட் பண்ண முடியாம ரொம்பவே கஷ்டப்படறீங்க! :))

சிவ அவதாரங்கள் லிஸ்ட் கொடுத்தேனே! அதுக்குப் பதிலே காணோம்! அதுக்குள்ள ஆதி, நாரி-ன்னு ஓடிட்டீங்க!

எனக்குத் தெரிஞ்ச ஒரே ஆதி, சன் டிவி-யில் கோலங்கள்-ல்ல வர ஆதி தான்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) November 03, 2008 5:23 PM  

//கோவி.கண்ணன் said...
பரி நிர்வாணம், பரபிரம்மம், திருவடி, முக்தி, மோட்சம் இவற்றில் எதாவது ஒன்று தானே உண்மையாக இருக்க முடியும் ?//

அது எப்படி ஒன்னு மட்டுமே உண்மை? அதுக்கு என்ன துணிபு/தரவு இருக்கு உங்களிடம்?

யாரு சொன்னா பக்தி மார்க்கத்துல திருவடி வேற, பரப்பிரம்மம் வேற-ன்னு? திருவடி நீழலே-ன்னு அப்பர் சுவாமிகள் குறிப்பது இறை நிலையைத் தானே? திருவடியை அடைந்தார்-ன்னா இறைவனை அடைந்தார்-ன்னு தான் அர்த்தம்!

திருவடி தனியா அடைதல், திரு மூக்கு தனியா அடைதல்-ன்னு எல்லாம் இருக்கா என்ன? :)

//எரிச்சல் படுத்துவதாக நினைக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். இறை மறுப்பு என்ற நோக்கில் நான் இதுவரை எதையும் எழுதியதில்லை//

சேச்சே! எரிச்சலும் இல்லை! பொரிச்சலும் இல்லை! அதெல்லாம் சிங்கை வந்தா அண்ணி கையால சாப்டுக்கறேன்! :)

இறை மறுப்பும் எழுதலாம்! தவறே இல்லை! ஆனா வாதங்களில் நீங்க தத்துவங்களில் இருந்து "as-is" வைக்கணும்! வைச்சி அதை மறுக்கணும்! ஆதி, மீதி-ன்னு எல்லாம் பேரை மட்டூமே வச்சி குத்துமதிப்பு செய்யலாகாது! :)

//திணிப்பது என்றாகிவிடும், என்னால் அது முடியாது//

I really appreciate this!

//அதனால் நான் இறை இருக்கிறது என்று சொல்வதும் இல்லை.
இறை இல்லை என்றும் நான் துணிந்து சொல்ல மாட்டேன்.
:)//

Ha Ha Ha!
You are being classified as AGNOSTIC in western terminology! :)
ஆத்திகமும் இல்லாமல், நாத்திகமும் இல்லாமல் இருப்பவர்க்கு இந்திய இறையியலில் பேரு என்ன தெரியுமா?

//அறியாமலேயே அறிந்தது போல் இறை உண்டு என்று சொல்வது போலத்தான் இல்லை என்று அறியாமல் சொல்வதும்//

சூப்பரு!
அறிவது = அதுக்குத் தான் தேடலும், விசாரணையும் தேவை!
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் ஐயன்.

அதே சமயம் தேடல், சுயநலத் தேடலாய் இல்லாமல், பொதுநலத் தேடலாகவும் அமைந்தால் சிறப்பு! வறட்டுத் தத்துவத் தேடலாய் மட்டும் இருக்கக் கூடாது!

"அறிவினான்" ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை - என்று மறுபடியும் கேட்கிறார் ஐயன்! இதைத் தான் இராமானுசரும் வழி மொழிந்து நடத்தியும் காட்டினார். உலகம் மாயை அல்ல! உலகம் உண்மை என்று உரைத்தார்!

உங்கள் தேடலுக்கான முயற்சிகளை நான் பெரிதும் மதிக்கிறேன் அண்ணா! நீங்களே பார்த்து இருப்பீங்க! உங்க கேள்விகளை நான் எப்பமே புறந் தள்ளியது கிடையாது! தொடர்ந்து வரவேற்பேன்!

பகுத்தறிவுப் பாசறையில் நானும் இருந்திருக்கேன்! இருந்து கிட்டும் இருக்கேன்! உமக்கு இந்த ஜென்மாவில் மோட்சம் இல்லை-ன்னு எல்லாம் உங்கள் நண்பரைப் போலச் சொல்ல மாட்டேன்! :))

ஆனா, உங்களுக்குச் சொல்ல விரும்புவது இது தான்:
தத்துவ விவாதங்களில் நீங்கள் Focus இழந்து விடறீங்க!
சட் சட்-ன்னு இன்னொரு புலனம் போகக் கூடாது. எடுத்த புலனம் முடிச்சிட்டு அடுத்ததுக்குப் போனா, அப்போ, உங்களுக்கு முழுமையான புரிதல் கிடைக்கும்!

அதே போல தேடும் இடமும், தேடும் பொருளை அடைய ஏதுவாக்கும். தங்கத்தைச் சுரங்கதில் தான் தேடணும். கடலில் தேடக் கூடாது! (மாமனார் கிட்ட தேடறாங்க சில பேரு :))

அதே போல உங்கள் தரவுகளை நீங்கள் மூலமான ஆதாரங்களில் தேடணும்! சங்க இலக்கியம், மறைகள், திருமந்திரம், அருளிச்செயல்கள்-ன்னு தேடினா, அப்போ புரியும்! புரிஞ்சி ஆதரிக்கலாம்/மறுக்கலாம்!

ஆனா மறைமலை அடிகளின் ஒரே கட்டுரையோடு நிறுத்திக்கறீங்க! இல்லை எங்காச்சும் பதிவில் வேதம் பற்றிப் படிச்சிட்டு நிறுத்திக்கறீங்க! அடிகளார் வாசிப்பு வேணாம்-னு சொல்லலை! அத்தோட நிறுத்திக்கிட்டு கருத்து உருவாக்கிக்காதீங்க-ன்னு தான் சொல்லுறேன்!

தொட்டனைத்துறும் மணற்கேணியா இருந்தா, தேடுவது கெட்டிப்படும்!

சின்னப் பையன் ஏதோ உரிமையில் சொல்லிட்டேன்! அறிவுறத்தலா இல்லை! அன்புறுத்தலா தான்! பெரிய மனுஷத்தனமா பேசி இருந்தா என்னை மன்னிச்சிக்குங்க-ண்ணா! :)

கோவி.கண்ணன் November 03, 2008 8:04 PM  

//அதே போல உங்கள் தரவுகளை நீங்கள் மூலமான ஆதாரங்களில் தேடணும்! சங்க இலக்கியம், மறைகள், திருமந்திரம், அருளிச்செயல்கள்-ன்னு தேடினா, அப்போ புரியும்! புரிஞ்சி ஆதரிக்கலாம்/மறுக்கலாம்!//

நீங்களும் சரி குமரனும் சரி, தரவுகள் பற்றி மிகுதியாக பேசுகிறீர்கள், தரவு என்றால் என்ன ? இறைவன் அருளியதா ? எல்லாமும் முன்னோர்கள் எழுதியவைதானே ? அவையெல்லாம் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களாகவும் இருக்கலாம் அல்லவா ? முன்னோர்கள் சொன்னவையாவும் மெய்யாகவே இருக்கும் என்பதற்கு யாதொரு சான்றும் கிடையாது. நான் சாரங்களை வைத்துதான் பேசுவன், சான்றுகளுக்கும் எனக்கும் வெகு தொலைவு.

சான்றுகள் எப்போது தேவைப்படும் ?
சங்க காலத்தில் முருகன் வழிபாடு இருந்ததா ? என்று கேட்கும் போது, ஒரு பாடலைச் சுட்டி இதில் முருகன் பற்றி பேசப்பட்டு இருக்கிறது என்று சுட்டினால் அதுதான் சான்று. மற்றபடி சங்க இலக்கியங்களிலோ வேறெந்த இலக்கியங்களிலோ இறைவனுக்கு கொடுக்கப்பட்ட உருவகங்களை வைத்து இவைதான் உண்மை என்பது போல் சுட்டிக் காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவையெல்லாம் அவர்களுடைய தனி அனுபவம் மட்டுமே அவற்றையெல்லாம் சான்றாகக் கொள்ள முடியுமா ? இதுவரையில் இதுதான் இறை என்று எவரும் அறுதி இட்டுக் கூறி இருந்தால் அடுத்தவர் அதுபற்றி எழுத தேவையே இருந்திருக்காது. நீங்கள் சொல்லும் திருமூலரோ, ஞான சம்பந்தரோ ஏன் அண்மைய வள்ளலாரோ எல்லோரும் இறை பற்றிய வரையறுத்தல் என்ற 'முயற்சி' யை மட்டுமே செய்திருக்கிறார்கள், யாரும் வரையரை செய்தி அறுதி இடவும் இல்லை.

கோவி.கண்ணன் November 03, 2008 8:15 PM  

//உங்கள் தேடலுக்கான முயற்சிகளை நான் பெரிதும் மதிக்கிறேன் அண்ணா! //

தேடல் ? அதெல்லாம் முடிந்ததாலேயே என்னால் எதையும் விமர்சிக்க முடிகிறது. :) இதை ஆணவத்துடன் சொல்லவில்லை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

எதாவது பக்தி புத்தகங்களில், அல்லது சாமியாரின் ஆசியினால் எல்லாம் கிடைப்பதாக நினைப்பவன் நான் அல்ல. இறைத் தேடலுக்கான வழியை இறைவனே காட்டினால் தான் உண்டு என்ற நம்பிக்கை இருப்பவர்கள் மிக மிகக் குறைவே.
பறவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் தாய்பறவை இறக்கை முளைத்த தன் குஞ்சு பறவைகளை அடையாளம் கண்டு கொள்ளும்.

தேடுதல் பற்றி சொல்லி இருக்கிங்க, நம்மிடம் இருந்த ஒன்றை தொலைத்த இடத்தில் தான் தேடினால் தான் கிடைக்கும் வெறெங்கும் தேடினாலும் கிடைக்காது. அதற்கு முன் என்ன தொலைந்தது என்ற உணர்தலும், அறிதலும் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் என்ன தேடுகிறோம், அதை எங்கே தொலைத்தோம் என்பதெல்லாம் நினைவுக்கு வரும்.

வழக்கம் போல் தெளிவாக குழப்பிச் செல்கிறேன். :)

கோவி.கண்ணன் November 03, 2008 8:41 PM  

//மறுபடியும் பேத்தல் :)
நர-நாராயணன் என்பவர் இருவர்! சரி அதுக்கும், பரப்பிரம்மத்துக்கும் என்ன சம்பந்தம்? அங்கொன்னு படிச்சி இருக்கீங்க! இங்கொன்னு படிச்சி இருக்கீங்க! ரெண்டையும் கனெக்ட் பண்ண முடியாம ரொம்பவே கஷ்டப்படறீங்க! :))//

காலம் உங்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள், அதுவரை பக்தி இலக்கியங்களைப் பிடித்துத்து தொங்குங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

எது ஒன்றை மறுக்கவும் ஆதாரம் என்பதைவிட பலமான நம்பிக்கை ஊட்டப்பட்டு இருக்கவேண்டும், அந்த நம்பிக்கை தெளிவானதாகவும் இருக்க வேண்டும். நான் ஆதாரம் வைத்துப் பேசுவதில்லை. உங்களுக்கெல்லாம் புத்தகங்கள் மட்டும் தானே ஆதாரம் ? அவையெல்லாம் மனிதர்கள் எழுதியவையே ! :)


//சிவ அவதாரங்கள் லிஸ்ட் கொடுத்தேனே! அதுக்குப் பதிலே காணோம்! அதுக்குள்ள ஆதி, நாரி-ன்னு ஓடிட்டீங்க!//

கந்தப் புராணம் போன்று அவை புளுகுகள் அவற்றைப் பற்றி பேச என்ன இருக்கிறது என்றே பேசவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) November 04, 2008 11:55 AM  

//கோவி.கண்ணன் said...
நீங்களும் சரி குமரனும் சரி, தரவுகள் பற்றி மிகுதியாக பேசுகிறீர்கள், தரவு என்றால் என்ன ? இறைவன் அருளியதா ? எல்லாமும் முன்னோர்கள் எழுதியவைதானே ? அவையெல்லாம் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களாகவும் இருக்கலாம் அல்லவா ?//

சூப்பரு! புடிச்சீங்க பாயிண்ட்டை! அப்படி வாங்க வழிக்கு!
தரவு எதுக்கு வைக்கிறோம்? கேட்கிறோம்? தத்துவங்களுக்கா? இல்லையே!

வள்ளி இங்க தான் இருக்கா! அங்க அவளைக் கண்டுக்கிட மாட்டாங்க! என்று நீங்கள் சொல்லும் போது தான் தரவு வைக்கிறோம், கேட்கிறோம்!

அதாச்சும்
Tharavu is to demonstrate a fact not a concept!
புரிஞ்சுதா?

பரப்பிரம்மம் என்பதற்கு இங்க யாரும் தரவு கொடுக்கலை!
அத்வைத, சைவ சித்தாந்தங்களுக்கு...யாரும் இங்க தரவு கொடுக்கலை!

திருமூலர் நாராயணைப் பற்றி பரப்பிரம்மமாய் சொல்லி இருக்காரா-ன்னு கேட்டா, அப்போ தரவு!
அவர் சொல்லி இருக்காரு! ஆனால் அது பரப்பிரும்மம் தானா என்று கேட்டால் அப்போ தரவு இல்லை! புரிதல் மட்டுமே!

புரிஞ்சுதா? :)

//மற்றபடி சங்க இலக்கியங்களிலோ வேறெந்த இலக்கியங்களிலோ இறைவனுக்கு கொடுக்கப்பட்ட உருவகங்களை வைத்து இவைதான் உண்மை என்பது போல் சுட்டிக் காட்டுவதை//

அப்படி யாரும் காட்டவே இல்லையே!

//ஏன் அண்மைய வள்ளலாரோ எல்லோரும் இறை பற்றிய வரையறுத்தல் என்ற 'முயற்சி' யை மட்டுமே செய்திருக்கிறார்கள், யாரும் வரையரை செய்தி அறுதி இடவும் இல்லை//

அதான் நானே அடிக்கடி பதிவில் சொல்லுவேனே!
**வையம் அளந்தானை அளக்க முடியாது!
கொள்ளத் தான் முடியும்!**

நீங்களும் சூப்பர்-ன்னு சொல்லி இருக்கீங்களே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) November 04, 2008 12:25 PM  

//தேடல் ? அதெல்லாம் முடிந்ததாலேயே என்னால் எதையும் விமர்சிக்க முடிகிறது. :)//

கோவி-ந்தா! கோவி-ந்தா! :)))

//எதாவது பக்தி புத்தகங்களில், அல்லது சாமியாரின் ஆசியினால் எல்லாம் கிடைப்பதாக நினைப்பவன் நான் அல்ல//

அடியேனும் அப்படியே!

//இறைத் தேடலுக்கான வழியை இறைவனே காட்டினால் தான் உண்டு என்ற நம்பிக்கை இருப்பவர்கள் மிக மிகக் குறைவே//

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

//தேடுதல் பற்றி சொல்லி இருக்கிங்க, நம்மிடம் இருந்த ஒன்றை தொலைத்த இடத்தில் தான் தேடினால் தான் கிடைக்கும் வெறெங்கும் தேடினாலும் கிடைக்காது//

சறுக்கல்!

நீங்க எதையும் தொலைக்கவில்லை! தொலைத்ததால் தான் தேடுகிறேன் என்று சொன்னால்...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற உங்கள் நிலையை நீங்களே முரண்படுகிறீர்கள்!

கட்டிப் பசும் பொன்னை நீங்கள் தொலைக்கவே இல்லையே! ஆனாலும் தேடுகிறீர்கள் அல்லவா?

அது போலத் தான் அடையத் தக்க பொருளைத் தேடுதலும்!

சுரங்கங்களில் தேடுகிறீர்கள்!
கடலில் பொன் கிடைக்காது என்று தெளிந்து தெரிந்து மண்ணில் தேடுகிறீர்கள்!
கடலிலும் தேடலாம்! ஆனால் கிடைப்பது முத்து! கடலில் பொன் கிடைக்காது!

அது போல் பல தத்துவங்களில் தேடலாம்! முத்து கிடைக்கும்!
ஆனால் இறைவனிடத்திலேயே தேடினால் பொன்னும் கிடைக்கும்!
பொன்-கழலில் முத்தும் கிடைக்கும்!
பொன்-பாத-கமலங்களும் கிடைக்கும்!

தத்துவத்தை மூலாதாரமாக வைத்து, இறைவனைப் பொருள் ஆதாரமாக வைத்தால் தேடல் என்பது வழக்கில் போய் முடியும்!

இறைவனை மூலாதாரமாக "வைத்துத்"
தத்துவத்தை வெறும் பொருளாதாரமாக "வைத்தால்"
தேடல் என்பது சுகமாகும்!


(குறிப்பு:
"வைத்தல்" என்று சொன்னது வெறும் வார்த்தையிலும் பதிவிலும் அல்ல!
உள்ளத்திலும் வாழ்விலும் "வைத்தல்"!
அதான் "வைத்த" மா நிதி!)

Kannabiran, Ravi Shankar (KRS) November 04, 2008 12:25 PM  

//வழக்கம் போல் தெளிவாக குழப்பிச் செல்கிறேன். :)//

குழம்புவதும் தவறில்லை!
குழப்புவதும் தவறில்லை!

ஆனால் ஒன்றில் தெளிந்த பின்னும்,
குழம்பிக் கொண்டே இருப்பதும், குழப்பிக் கொண்டே இருப்பதும் தான் தவறு!:)

Kannabiran, Ravi Shankar (KRS) November 04, 2008 12:32 PM  

நல்ல சத்சங்கத்துக்கு நன்றி கோவி அண்ணா!

முருகனருளால், முருகனருளில்
உங்களை முன்னிட்டு சிலது "வைத்தாகி" விட்டது! :)

அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி "வைத்தேன்"
அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

கோவி.கண்ணன் November 04, 2008 7:46 PM  
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் November 04, 2008 7:50 PM  

//சறுக்கல்!
//

இருக்கட்டுமே....

நான் இங்கே எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எனது கருத்தை வைக்காவிட்டாலும், நீங்கள் அதையெல்லாம் மறுக்கும் நோக்கில் நன்றாகவே சொல்கிறீர்கள், செய்கிறீர்கள், தெளிவான சொல்லாடல்களுக்கு முன்பே, உண்மைகள் ஊமையாகும். வெறொன்றும் சொல்வதற்கு இல்லை
:)

இறைநம்பிக்கை, இறை குறித்தும், இங்கும் ஆன்மிகம் எழுதும் பலரைக் காட்டிலும், குறிப்பாக உங்களைக் காட்டிலும் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பது எனக்குத்தான் தெரியும். என்னை நினைத்துப் பார்த்து, எனக்கு கிடைத்தவற்றையெல்லாம் நினைத்துப் பூரிப்பில் தான் சொல்கிறேன். உளறலோ, தற்பொருமையோ இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) November 05, 2008 4:59 PM  

//கோவி.கண்ணன் said...
//சறுக்கல்!//
இருக்கட்டுமே....//

:))

//நான் இங்கே எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எனது கருத்தை வைக்காவிட்டாலும்//

யானும் அவ்வண்ணமே!
கருத்துக்கள் வைப்பது ஏற்றுக் கொள்ள அல்ல! பரிசீலிக்க! தெரிந்து தெளிய! உண்மை தானே அண்ணா?

//நீங்கள் அதையெல்லாம் மறுக்கும் நோக்கில் நன்றாகவே சொல்கிறீர்கள், செய்கிறீர்கள், தெளிவான சொல்லாடல்களுக்கு முன்பே, உண்மைகள் ஊமையாகும்.//

ஹா ஹா ஹா!
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, "தெளிவான"-சொல்-ன்னு! உண்மை தான் எப்பமே தெளிவா இருக்கும்-ண்ணா! :)

எந்த அல்லதைக் கலந்து வச்சாலும், கொஞ்ச நேரம் நின்றாலே, தானாத் தெளியும் சக்தி உண்மை நீருக்கு உண்டு!

//குறிப்பாக உங்களைக் காட்டிலும் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பது எனக்குத்தான் தெரியும்//

உங்கள் நல்லூழ் கண்டு இன்பம் கொள்பவர்களில் அடியேன் முதல் ஆளா இருப்பேன்!

//என்னை நினைத்துப் பார்த்து, எனக்கு கிடைத்தவற்றையெல்லாம் நினைத்துப் பூரிப்பில் தான் சொல்கிறேன். உளறலோ, தற்பொருமையோ இல்லை//

I fully understand anna.
நாயனாரும் இதே தான் சொல்றாரு! நின் நாமம் பேசிட பேறு என் செய்தேன் யானே பெரியவனே!

கோவி.கண்ணன் November 05, 2008 7:36 PM  

//ஆதி விநாயகர், ஆதி சிவன்-ன்னு கூடத் தான் நிறைய பேர்-ல கோயில் இருக்கு! ஆதி-ன்னு பேரு இருந்தா மனிதப் பிறவிகளின் தலைவனா? என்ன பேத்தல் இது? :)//

ஆதி என்றால் முதல் என்றுதானே பொருள் ?

ஆதி விநாயகர், ஆதி முருகன் கூட நான் கேள்விப்பட்டது இல்லை, ஆதி நாராயணன், ஆதி சக்தி, ஆதி சிவன் கூடச் சொல்லுவார்கள்.

ஆனால் சதாசிவன் என்பதில் இருக்கும் 'சதா' சொல் சிவனுக்கு மட்டுமே உண்டு. (நடிகையைச் சொல்லாதிங்க) சதா என்றால் எப்போதும் என்றே பொருள். சாதநாரயணன், சாதாகிருஷ்ணன் கேள்விப்பட்டது இல்லை. முழுமுதல் இறைவனை மட்டும் தான் சாதா அடைமொழியுடன் சொல்ல முடியும்.

:)

குமரன் (Kumaran) November 05, 2008 9:08 PM  

சதா அப்படியென்றால் எப்பொழுதும் என்ற பொருள் சரியென்று தான் தோன்றுகிறது கோவி.கண்ணன். ஆனால் எந்த மொழியில்? அந்த மொழியில் சிவ என்பதற்கு என்ன பொருள்?

சாதா என்றால் என்ன? ஏன் முழுமுதற்கடவுளுக்கு மட்டும் தான் சாதா அடைமொழியுடன் சொல்ல முடியும் என்பதையும் சொல்லுங்கள்.

சதாசிவன் கேள்விபட்டிருக்கிறேன். சாப்பாட்டு இராமன் போல் சாத நாராயணனையும் சாதா தோசையைப் போல் சாதா கிருஷ்ணனையும் தேடுகிறீர்கள் போலும்.

சதாசவித்ரு என்றொரு தெய்வத்தைப் பற்றி சதா என்றால் எப்பொழுதும் என்று பொருள் தரும் மொழியில் வருகிறது. அந்த தெய்வம் முழுமுதற்கடவுளா இல்லையா?

சதாசிவன் முழுமுதற்கடவுள் என்ற கருத்துடன் நான் ஒத்துப் போவேன். ஏனெனில் தரவை நானே தரமுடியும். ஆனால் சதா என்ற அடைமொழியை முழுமுதற்கடவுளுக்கு மட்டுமே சொல்லமுடியும் என்பதற்குத் தரவு கேட்பேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) November 05, 2008 9:12 PM  

//கோவி.கண்ணன் said...
//ஆதி விநாயகர், ஆதி முருகன் கூட நான் கேள்விப்பட்டது இல்லை//

ஆதி விநாயகர் கோயில்!
http://www.hindu.com/fr/2003/10/10/stories/2003101001411200.htm

//ஆனால் சதாசிவன் என்பதில் இருக்கும் 'சதா' சொல் சிவனுக்கு மட்டுமே உண்டு. (நடிகையைச் சொல்லாதிங்க)//

ஹா ஹா ஹா!
சதாவுக்குக் கல்யாணம் ஆயிரிச்சா? அவங்க புருசன் பேரா பின்னாடி? :)

சதானந்தப் பெருமாள் கேள்விப்பட்டு இருக்கீங்களா?
அச்சுதன், அனந்தன், சதானந்தன் சதானனன் ன்னு நிறைய சதா-வைச் சொல்லட்டுமா விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இருந்து? :)

//முழுமுதல் இறைவனை மட்டும் தான் சாதா அடைமொழியுடன் சொல்ல முடியும்//

ஐ லைக் திஸ் ஜல்லி! :)

சத்யம்-னு கேள்விப்பட்டிருக்கீங்களா? காலங்களைக் கடந்து, என்றுமே "சத்யமாய் (உண்மையாய்)" நிலைபெற்று இருக்கும், முழுமுதல் இறைவனை மட்டும் தானே "சத்ய" அடைமொழியுடன் சொல்ல முடியும்?

சத்யநாராயணன் தெரியும் தானே?
சத்யசிவன், சத்யஸ்கந்தன்-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? :)

எப்படி இருக்கு ஜல்லி? :)
சதா, சத்ய-ன்னு வார்த்தை விளையாட்டு விளையாடலாம்!
ஆனா சொல்ல வந்தது என்னான்னா:

வேதங்களில் எல்லாவற்றுக்கும் மூலமாகச் சொல்லப்பட்டிருக்கும் பரம்பொருளைப் பரப்பிரம்மம்-ன்னு குறிக்கிறது வேதங்களும், மறைகளும்!
அந்தப் பரப்பிரம்மம் யாரு, என்ன பேரு-ன்னு வரும் போது, சமய பேதம் பிரிவு எல்லாம் கடந்து, நாராயணஹ பரஹ, நாராயண பரோ தேவம், நாராயண பரோ வக்யாத்-ன்னு எல்லாப் பிரிவுகளும் சொல்கின்றன. பரப்பிரும்ம வாசகத்தை வேறு எந்தத் திருநாமத்துக்கும் சொல்லவில்லை!

உரை எழுதின ஆதி சங்கரரும், இராமானுசரும், மாத்வரும், இன்னும் வந்த பல ஆசார்யர்களும் அப்படியே சொல்கிறார்கள்-ன்னு சொல்ல வந்தேன்!

மத்தபடி அவர் தான் ஒசத்தி, இவர் எல்லாம் தாழ்த்தி-ன்னு சொல்ல வரலை! It was just a direct inference from the scripts. புரிஞ்சிப்பீங்க-ன்னு நினைக்கிறேன்!

கோவி.கண்ணன் November 05, 2008 10:00 PM  

//சதாசிவன் முழுமுதற்கடவுள் என்ற கருத்துடன் நான் ஒத்துப் போவேன். ஏனெனில் தரவை நானே தரமுடியும். //

குமரன்,
நான் அதே கருத்தைக் கொண்டிருப்பதால் எனக்கு அந்த தரவுகள் தேவைப்படாது.

//பரப்பிரும்ம வாசகத்தை வேறு எந்தத் திருநாமத்துக்கும் சொல்லவில்லை!
உரை எழுதின ஆதி சங்கரரும், இராமானுசரும், மாத்வரும், இன்னும் வந்த பல ஆசார்யர்களும் அப்படியே சொல்கிறார்கள்-ன்னு சொல்ல வந்தேன்!
//

பரப்பிரம்மம் என்று ஒன்று இருப்பதாக நான் நினைப்பதில்லை. எனவே நீங்கள் சொல்வதை நான் மறுக்கப் போவதும் இல்லை.

நான் குறிப்பிட்டது பரப்பிரம்மம் அல்ல...பரமாத்மா...பரமனின் ஆன்மா...எது என்பது பற்றித்தான்

//மத்தபடி அவர் தான் ஒசத்தி, இவர் எல்லாம் தாழ்த்தி-ன்னு சொல்ல வரலை! It was just a direct inference from the scripts. புரிஞ்சிப்பீங்க-ன்னு நினைக்கிறேன்!//

நானும் உசத்தி எது என்று சொல்லவில்லையே.

மிஸ்டர் கேஆர்எஸ், இந்த மதத்திலும், எவரும் இறைவன் குறித்து புகழ் பாடப்பட்டாலும், அது தன்னுடைய (மேலான) பெற்றோர்களைத் தான் போற்றி பாடுகிறார்கள் என்ற உணர்வு இருந்தால் இறை(பெயர்) பேதங்களே இருக்காது. அப்படி இருப்பவர்கள் உயர்த்திச் சொல்வதாகவோ, தாழ்த்திச் சொல்வதாகவோ நினைக்கமாட்டார்கள்.

அல்லாஹூ அக்பர்........என்று முழக்கத்தில் இறைவனைத் தான் பாடுகிறார்கள் என்று நினைத்தால் அல்லா உயர்வா ? சிவன் உயர்வா ? என்றெல்லாம் நினைப்பு வருமா ?

சிவனில்லையே நாராயணன் இல்லை, நாரயணன் இல்லையே சிவன் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்களா ? சிவனும் நாரயணும் தந்தை தாய் என்றால், சிவனை ஏன் தந்தை என்று உயர்வு படுத்துகிறாய் என்றெல்லாம் கேட்டால்...பேதம் எங்கிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளவேண்டும்.

நானும் சைவம் வைணவம் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. நான் சைவ சித்தாந்தம் மட்டுமே போற்றுபவனும் அல்ல, அது ஒரு கோட்பாடு என்ற அளவில் அதில் உள்ளவற்றையும் படிப்பேன் அவ்வளவுதான். சைவ சித்தாந்தவாதிகள் சிவ வணக்கத்தைவிட சிவனுக்கு உரிமை கொண்டாடுப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்ற வருத்தம் எனக்கும் உண்டு.

குமரன் (Kumaran) November 05, 2008 10:47 PM  

//ஆனால் சதா என்ற அடைமொழியை முழுமுதற்கடவுளுக்கு மட்டுமே சொல்லமுடியும் என்பதற்குத் தரவு கேட்பேன்//

For this, where is the answer Mr. Govi.Kannan? :-)

கோவி.கண்ணன் November 05, 2008 11:04 PM  

// குமரன் (Kumaran) said...
//ஆனால் சதா என்ற அடைமொழியை முழுமுதற்கடவுளுக்கு மட்டுமே சொல்லமுடியும் என்பதற்குத் தரவு கேட்பேன்//

For this, where is the answer Mr. Govi.Kannan? :-)
//


பாபநாசம் சிவன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. :)

சதாசிவனுக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா ?

:)

குமரன் (Kumaran) November 06, 2008 6:56 AM  

தரவு தர முயற்சியாவது செய்கிறீர்களே. மகிழ்ச்சி கண்ணன்.

'சதாசிவனுக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமோ?' என்ற பாடல் வரி எந்த வகையில் 'சதா' என்ற அடைமொழியை முழுமுதற்கடவுளுக்கு மட்டுமே சொல்லமுடியும் என்று காட்டுகிறது?

முருகனருளில் இதற்கு முன் இந்தப் பாடல் வந்திருக்காவிட்டால் உங்களுக்காக இந்தப் பாடலை இடவேண்டும் என்று நினைக்கிறேன். தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே என்று தொடங்கும் பாடல். அந்தப் பாடலில் வரும் ஒரு வரி 'எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே; மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே'. ஆனால் உங்களின் போகூழ் இந்தப் பாடல் வரியில் முருகனுக்கு சதாமுருகன் என்ற பெயர் சொல்லப்படவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2008 4:24 PM  

//மிஸ்டர் கேஆர்எஸ்,//

அண்ணே...இன்னிக்கி தான்-ணே என்னைய நீங்க மொத மொதலா மரியாதையா கூப்புடறது! :))

//இந்த மதத்திலும், எவரும் இறைவன் குறித்து புகழ் பாடப்பட்டாலும், அது தன்னுடைய (மேலான) பெற்றோர்களைத் தான் போற்றி பாடுகிறார்கள் என்ற உணர்வு இருந்தால் இறை(பெயர்) பேதங்களே இருக்காது.//

உண்மை தான்-ண்ணே! ஆனா பலருக்கும் இது வாயளவில் தான் இருக்கு. மனத்தளவில் என்பது ரொம்பவும் கம்மி!
காலத்தின் கட்டாயத்தால், பெரியாரைப் பப்ளிக்கா திட்ட முடியாது என்பது போல், அரியும் சிவனும் ஒன்னு என்று சொல்ல வேண்டிய நிலை! :))

இதுல இன்னொரு காமெடி என்னான்னா...
அரியும் சிவனும் ஒன்னு-ன்னு அரியை ஏன் மொதல்-ல சொல்லுறீங்க? சிவனும் அரியும் ஒன்னு-ன்னு சொல்றது தானே-ன்னும் கேட்டிருக்காங்க :)

அத விட சூப்பரு, அரியும் சிவனும் ஒன்னுன்னு மட்டும் சொல்றீங்களே? முருகனை ஏன் இதுல சொல்லலை-ன்னும் கேட்டிருக்காங்க :)

நாளைக்கு பிள்ளையாரைச் சொல்லல, அம்பாளைச் சொல்லலை-ன்னு அடுக்கிட்டே போகலாம்!
ஆனா இரு பெரும் தத்துவங்களிடையே ஒற்றுமை காணத் தான், ரெண்டு பேரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னாங்க-ன்னு புரிஞ்சிக்கிட்டா பிரச்சனையே வராது!

ஆனாப் பிரச்சனையே புரிதல் என்பது தானே? :))

போதாக்குறைக்கு, கண்ட பசங்களுக்கும் பூனூல் மாட்டி விட்டுட்டாரு, ஓப்பனா மந்திரம் எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டாரு, போன்ற எரிச்சல் எல்லாம் கொஞ்சம் உள்ளே இருக்கத் தான் செய்யும்! அப்பப்போ வெளியே லைட்டா வந்து போகும் :)

தெய்வம் தன்னைக் காக்கும் என்பது போய்,
தான் தான், தன் தெய்வத்தையே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலவரங்கள் தோன்றுகின்றன!

இந்தக் கல-வரம், சிந்தையில் கலவா வரமாக இறைவன் அருளட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2008 4:25 PM  

//சிவனில்லையே நாராயணன் இல்லை, நாரயணன் இல்லையே சிவன் இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்களா ? //

இருக்கிறார்கள்!

அடியேனும் அவர்களுள் ஒருவன் என்பதில் எனக்கு மனநிறைவே!
சிவஸ்ச ஹ்ருதயம் விஷ்ணோர்
விஷ்ணுச ஹ்ருதயம் சிவம்!

முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
அவாவறச் சூழ் அரியை-அயனை-அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன...

மோட்சம் என்னும் வீடு பேறு பெறும் நிலையில், நம்மாழ்வார் சொல்வதைப் பார்த்தீர்களா? யாரை நினைத்துக் கொள்கிறார் பார்த்தீர்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2008 4:27 PM  

//பாபநாசம் சிவன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. :)
சதாசிவனுக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா ?:)//

ஹேஏஏஏஏஏஏ!
கோவி கண்ணன், தரவு கண்ணன் ஆயிட்டாரேஏஏஏஏஏஏ!!!!! :)))

ஆனா தரமான தரவு இல்லைன்னு நக்கீரர் ரிஜெக்ட் பண்ணீட்டாரேஏஏஏஏ :))

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2008 4:30 PM  

//முருகனருளில் இதற்கு முன் இந்தப் பாடல் வந்திருக்காவிட்டால் உங்களுக்காக இந்தப் பாடலை இடவேண்டும் என்று நினைக்கிறேன்//

தேவையில்லை!
இதோ...
http://muruganarul.blogspot.com/2008/07/blog-post.html

:)

குமரன் (Kumaran) November 06, 2008 4:33 PM  

//நக்கீரர்//

இந்தப் பெயர் எல்லா இடத்திலும் தொடர்ந்து வருதே. பணியிடத்திலும் 'குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்'ன்னு சொல்றாங்க. என்ன சிரிச்சுக்கிட்டே சொல்றதால மக்கள் தொடர்ந்து நட்பாவே இருக்காங்க. சண்டை போடறதில்லை. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2008 5:48 PM  

//குமரன் (Kumaran) said...
//நக்கீரர்//
இந்தப் பெயர் எல்லா இடத்திலும் தொடர்ந்து வருதே//

புல்லாகிப் பூண்டாகி-ல்ல இந்தப் பாத்திரத்தை மிஸ் பண்ணிட்டீங்களோ? ஜகன்மோகன் மட்டுமல்ல, இவராவும் இருந்திருக்கீங்களோ? :)

//பணியிடத்திலும் 'குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்'ன்னு சொல்றாங்க//

அங்கேயுமா? அட்றா சக்கை,அட்றா சக்கை!
ஆனா எனக்கு என்னமோ, இங்கு குற்றம் கண்டு புடிச்சது கோவி மாதிரி தானே தெரியுது!
நீண்ட விளக்கம் தானே நீங்க கொடுத்தீங்க! :)

//என்ன சிரிச்சுக்கிட்டே சொல்றதால மக்கள் தொடர்ந்து நட்பாவே இருக்காங்க. சண்டை போடறதில்லை. :-)//

என் கிட்ட சிரிக்காமச் சொன்னாலும் தொடர்ந்து நட்பாவே இருப்பேன். சண்டை எல்லாம் போடவே மாட்டேன் என்று உளமார உறுதிமொழிகிறேன்! :)))

கோவி.கண்ணன் November 06, 2008 8:03 PM  

கேஆர்எஸ், குமரன்

நன்றி !

எழுதி வைத்தவைகள் தான் தரவுகள் அதைக் காட்டவேண்டும் என்று சொன்னால் என்னால் அது முடியவே முடியாது. நான் படிப்பவற்றின் சாரத்தை மட்டும் தான் நினைவு வைத்திருப்பேன். புத்தகத்தின் பெயர் கூட எனக்கு நினைவுக்கு வராது. அவற்றையெல்லாம் தேடி எடுத்து வந்து எனது பின்னூட்டங்கள் சரி என்று சொல்லவைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது.

நூல்கள் காட்டும் தரவுகளே போதுமானவை என்று நினைத்தால்
நானும் முழுக்க முழுக்க ஆன்மிகம் தான் எழுதிக் கொண்டு இருப்பேன். ஆன்மிகம் எழுதும் போது நூல்களின் தரவுகளைத் தாண்டி அது பற்றிய உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பதால் நான் ஆன்மிகம் பற்றி எழுதுவது கிடையாது.

வாதங்களில் வெற்றி பெருவதைவிட அதை முடிவுக்கு கொண்டுவருவதே அயற்சியைப் போக்கும் என்றே நினைப்பதால்,

உங்கள் பொன்னான நேரத்தை தரவுகள் காட்டி விவாதம் செய்யாமல் வீனடித்ததற்கு மனப்பூர்வமான மன்னிப்புக் கோறுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை.
:)

குமரன் (Kumaran) November 06, 2008 8:12 PM  

எழுதி வைத்தவைகளைத் தரவுகள் என்று நாங்கள் சொல்வதில்லை கோவி.கண்ணன். அப்படியென்றால் நீங்கள் பக்கம் பக்கமாக மறைமலையடிகளார் சொன்னதை எடுத்துக் காட்டிய போது ஒத்துக் கொள்ளுவோமே. ஏன் ஏற்கவில்லை?

எழுதி வைத்தவற்றையும் தாண்டித் தான் நாங்களும் சிந்திக்கிறோம். அதனால் தான் உங்களின் எல்லா உளரல்களுக்கும் கேள்விகளைக் கேட்கிறோம். உளரல்களை மறுக்கும் வலுவான சான்றுகளை வைக்கிறோம்.

தரவுகள் என்றால் என்ன? சான்றுகள் என்றால் என்ன? என்றெல்லாம் எங்களால் முடிந்தவரையில் விளக்கிவிட்டோம். உங்களுக்கும் சான்றுகளுக்கும் வெகு தூரம் என்று நீங்களே பல முறை சொல்லிவிட்டீர்கள். அதனை ஏற்றுக் கொண்டு உங்களைத் தரவுகள் கேட்காமல் இனி மேல் இருக்கலாம்; எதற்கு நேரத்தை வீணாக்க வேண்டும் - எப்படியும் உளரல்கள் தொடரத் தானே போகின்றன?! :-)

வெட்கப்படாமல் இனி மேலும் வழக்கம் போல் தொடருங்கள். வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) November 06, 2008 8:36 PM  

ஆனால் ஒரு விதத்தில் உங்களுக்கு என்னுடைய மிக வலுவான பாராட்டுகள் உண்டு கோவி.கண்ணன். யார் என்ன சொன்னாலும் எப்படி யார் அவமதித்தாலும் தாங்கிக் கொள்வதில் அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் போல் இருக்கிறீர்கள் நீங்கள். அந்த தடுமாற்றமின்மையைப் பார்க்கும் போதே தெரிகிறது உங்களின் ஞான நிலையும் மோன நிலையும்.

Kannabiran, Ravi Shankar (KRS) November 06, 2008 9:03 PM  

இந்தப் பதிவிலும் முடித்து வைக்கிறேன், அந்தப் பதிவில் சொன்னது போலவே!
http://muruganarul.blogspot.com/2008/10/1_29.html

இந்தப் பதிவின் பேரும் - சிந்தனை செய் மனமே! :)))

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP