Thursday, August 08, 2013

வாவா!



ஆறுமுக வேலவனே வாவா – ஓர்
ஆறுபடை வீடுடையாய் வாவா
ஆனைமுகன் சோதரனே வாவா – எமை
ஆளும் சிவ பாலகனே வாவா!

கோல மயில் வாகனனே வாவா – எழில்
கொஞ்சும் வடி வேலவனே வாவா
கொண்டைச் சேவற் கொடியசைய வாவா – சின்னத்
தண்டைக் கால்கள் ஒலியெழுப்ப வாவா!

தேவர்களைக் காத்தவனே வாவா – உன்
தேவயானை வள்ளியுடன் வாவா
ப்ரணவப் பொருள் சொன்னவனே வாவா – எங்கள்
சரவணனே ஷண்முகனே வாவா!

கண்மணியே கதிர்வேலா வாவா – எங்கள்
அன்புமீற உனையழைத்தோம் வாவா
இனியதமிழ்ப் பாடல் கேட்டு வாவா – எங்கள்
இன்பமெல்லாம் நீதானே வாவா!


--கவிநயா

படத்திற்கு நன்றி: http://kandans.com/

Tuesday, August 06, 2013

அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!

முருகன் அடிமை -ங்கிற படம்!
கே.ஆர்.விஜயா - முத்துராமன்; தேவர் பிலிம்ஸ்!

இந்தப் படத்தில் வரும் "கால்சட்டைப் பையன்" ஒருவன்... என் தோழன் போலவே இருப்பான்!
சிறு வயது புகைப்படம்; அதுக்காகவே, இந்தப் படத்தைப் பலமுறை பார்த்தது:)))




நாகேஷ், தேங்காய் சீனிவாசன், AVM ராஜன், விஜயகுமார், ஜெய்கணேஷ் -ன்னு இன்னும் ஏகப்பட்ட நடிகர்கள்!
* கே.ஆர்.விஜயா = முருக பக்தை;
* முத்துராமன் = திருடன் (ஆகிய) முருக பக்தன்

கோட்-சூட் போட்டுக்கிட்டு, திருநீறு பூசத் தயங்கியதால், ஒரு மாப்பிள்ளையை வேண்டாம் -ன்னு சொல்லும் கே.ஆர்.விஜயா:)
பண்டாரம் ஆனாலும் முருக பக்தனா இருந்தாப் போதும்-ன்னு நினைக்குற பொண்ணு! omg! same as you, my heart - loosu:))

அவளிடமே, அவன் வழிப்பறி செய்ய...
காதலாகி, கசிந்து.. எப்படியோ திருமணம் நிகழ்ந்து விடுகிறது;

அறிவுள்ள ஒரு பையன் பொறக்கிறான்; ஆனால் அல்பாயுசு;
அம்மா-அப்பாவைப் பிரிந்து, சிறுவனே, முருகனிடம் நியாயம் கேக்கக் போறான்!
நியாயம் கிடைத்ததா? = ஒங்க முருகன் ரொம்ப "நியாயஸ்தன்" பாருங்க:)



நடுவில் காரைக்காட்டு நங்கை, பொய்யாமொழிப் புலவர் கதையெல்லாம் கூட வரும்! அன்றாட வாழ்க்கைக் கதையில், புராணக் கதைகளின் flashback:)

முருக விரதத்துக்காக, பெற்ற பிள்ளையையே கொல்லும் தாய் - இது போன்றவையெல்லாம் எனக்கு இசைவில்லாத "கதை"கள்:))
மார்க்கண்டேயன், சிறுத்தொண்டர் கதைகளையெல்லாம், முருகன் பேரில் "உல்ட்டா" பண்ணி இருப்பாங்க:)

கடைசியில், மாமனையே மிஞ்சும் அளவுக்கு, மால் மருகன் முருகன், "விஸ்வரூபம்" எடுப்பான்!:)
அப்போ, மூக்கு மேல கோவம் பாருங்க முருகனுக்கு! அந்த "மூக்கு" எனக்கு ரொம்பப் பிடிக்கும்:))

இருந்தாலும், பல அருமையான பாடல்கள் கொண்ட படம்! சிறுவனின் over acting இல்லாத இயல்பான நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
"அம்மையானவன் எமக்கு அப்பனானவன்" என்று TMS கணீர்க் குரலில் உருகும் முருகப் பாடல், இன்னிக்கி!


அம்மையானவன் எமக்கு அப்பனானவன்!
நன்மையானவன் உலகில் உண்மையானவன்!
(அம்மையானவன்)

தாய்மை வென்றது - பிள்ளை தவமும் வென்றது
வாய்மை வென்றது - பக்தி வலிமை வென்றது
நேர்மை வென்றது - முருக நீதி வென்றது
சுவாமி சக்தியால் - எங்கள் தருமம் வென்றது
(அம்மையானவன்)

அச்சம் தீர்ந்தது - எங்கள் அன்பும் வென்றது
ஐயம் தீர்ந்தது - ஐயன் அருளும் வென்றது
கவலை தீர்ந்தது - எங்கள் காலம் வென்றது
காலம் காலமாய் - செய்த சேவை வென்றது
(அம்மையானவன்)

படம்: முருகன் அடிமை
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: TMS
வரி: கண்ணதாசன்

இது போன்ற பல சினிமாக்கள்!
தமிழ்ச் சினிமாவிலே முருகன் சினிமாக்கள் = பதிவு இங்கே..

Wednesday, July 31, 2013

ஆடிக் கிருத்திகை - வாரியார் குரலில்!

இன்று ஆடிக் கிருத்திகை! (Jul 31, 2013)

ஓர் ஆண்டில் மொத்தம் 12-13 கிருத்திகை வந்தாலும், 3 கிருத்திகைகள் சிறப்பாகப் பேசப்படும்
= தைக் கிருத்திகை, ஆடிக் கிருத்திகை, கார்த்திகையில் கிருத்திகை!

முருகனின் சிறப்பு நாளான இந்த நாளில், எளிய பாட்டு ஒன்னைப் பாக்கலாமா?
* பாட்டு எளிது!
* ஆனால் பாடுபவர் பெரிது! = திருமுருக. வாரியார் குரலிலே..

முருகா முருகா
முருகா முருகா

வேல் வேல் முருகா
வெற்றி வேல் முருகா

வா வா முருகா
வடிவேல் முருகா



துணைவன் என்ற சினிமாவில், துவக்கக் காட்சியாக, இந்தப் பாடல்!

(இதன் பின்னர், படத்தின் நாயகன் AVM ராஜன், வாரியாரிடமே விவாதம் செய்வார்:))) - முருகன் -ன்னு ஒருத்தன் இருக்கானா? என்று...)

படம்: துணைவன்
குரல்: வாரியார்
வரி: வாரியார்
இசை: கே.வி.மகாதேவன்

Tuesday, July 30, 2013

கந்தன் காலடியை வணங்கினால்?

இந்தச் செவ்வாயும், தேவரின், "திருவருள்" படத்திலிருந்தே:) AVM ராஜன் வாயசைக்க, TMS கணீர்க் குரலில்!
தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள் = இங்கு வாசிக்கலாம்!:)

பாட்டுக்குப் போவோம்!
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்!! 
- இந்த வரியில், வீடியோவில் நிறுத்திப் பாருங்க! சுவையான காட்சி!

- என் அப்பா திருமாலும், என்னவன் முருகனும்.. அழகோ அழகு!:)


கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே..
(கந்தன் காலடியை..)



தந்தை பரமனுக்குச் - சிவகுரு நாதன்
தாயார் பார்வதியின் - சக்தி தானே வேலன்
அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்!!
(கந்தன் காலடியை..)

உமையவள் தன் வடிவம் - மதுரையில் மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் - காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் - காசி விசாலாட்சி
அன்னையர்கள் பலருண்டு - அவனுக்கு இணை எவனுண்டு?
(கந்தன் காலடியை..)

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்

கந்தனிடம் செல்லுங்கள் - என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும் - மற்றவற்றைத் தள்ளுங்கள்
(கந்தன் காலடியை..)

படம்: திருவருள்
குரல்: TMS
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்

Love u Muruga:)
Be nice with my Father:))

Tuesday, July 23, 2013

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

இன்றைய பாடல் = "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே"!

திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
தேவரின் மருதமலையைச் சிறப்பித்து என்றே வந்த படம்!

தேவர் பிலிம்ஸ்! குன்னக்குடி இசை..
சீர்காழி-குன்னக்குடி இருவருமே படத்தில் தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் தோன்றி, மருதமலை முருகனைப் பற்றிப் பேச ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! "முருக வெறியர்" -ன்னு கூடச் சொல்லலாம்! :)
நல்ல குரல் வளம் அவருக்கு!
அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, அவருக்குத் தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க...
வெறும் பாடகர் AVM ராஜன், பெரும் பாடகர் ஆகி விடுகிறார்!

ஒன்று வந்தால் -> இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்!
ஆனால் முருக அன்பர்கள்??

AVM ராஜன் "முருகக் காதலை" விடவே இல்லை!
பழசை மறக்கவில்லை! ஆனால் அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்! முன்பு, கோவிலில் பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி!
பூக்காரி -> புதுக்காரி ஆகி விட்டாள்!
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!
முருகன் Vs ஆசை -ன்னு வந்துட்டா, முருகனா முக்கியம்? தத்தம் ஆசை தானே முக்கியம்?:)

* முருகனையே எண்ணிக் கைப் பற்றியவன்
* பண முதலின் எண்ணிக்கை பற்றுபவள்
இவர்கள் உறவு முறிந்ததா? = முருகன் "முறிப்பானா" என்ன?

அவன் மனது வைத்தால்....
நடவாதனவும் நடந்திடாதா?
இசையாதனவும் இசைந்திடாதா? = பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
-ன்னு அத்தனையும் TMS-இன் கணீர்ச் சொத்து!

சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை -ன்னு பாடி இருப்பாங்க!
சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்!
= முத்துத் திருப்புகழைச் செப்பி விட்ட அருணகிரி முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை -ன்னு கம்பீரமாக இழுப்பார்!

இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
= ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என் உடம்புக்கும் உள்ளத்துக்கும் "அதிகாரம்" = அவனுக்கே!



உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு - மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர் - மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை - பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு - ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே! 
உந்தன் வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி - அவன் மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் - பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள் - வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!

படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

Friday, July 19, 2013

முருக "வாலி" - அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே!

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!


அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அதென்ன "வாழ்ந்தவர்"?
...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!


பொன்னுடலுக்கு மட்டும், நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!



All Young - MSV, Vaali, P Susheela, TMS

வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்"...
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;

* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...

(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே: 
சில திருப்புகழ்ப் பாடல்களை விட..வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்... ஏனோ என் உள்ளத்தை... ரொம்ப உருக்கி எடுக்கும்!)

அதுவே இன்று... முருகனருள் வலைப்பூவில் = "வாலி அஞ்சலி!"



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி



இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;

என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அவன் கையும் கோத்துக்கிட்டு..
அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!
= வாலி (வலி) வரி!

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

கருணையே இல்லையாடா முருகா? = (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..

* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும்  நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!

இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!

Monday, July 15, 2013

வருவான் வடிவேலன்!

வருவான் வடிவேலன் -ங்கிற படம்!
ஈழம், சிங்கை, மலேசியா, பெனாங்கு -ன்னு பல நாடுகளில் போய்ப் படம் புடிச்சாங்க! பல நல்ல பாடல்கள்...
TMS, சுசீலாம்மா, சீர்காழி, வாணி ஜெயராம், LR ஈஸ்வரி, LR அஞ்சலி -ன்னு ஒரு இசைப் பட்டாளமே பட்டாசு கெளப்பிய படம்!


அதில் இந்தப் பாட்டும் ஒன்னு; படத்தின் ஆரம்பப் பாட்டே இதான்!
திருத்தணி மண்டபத்தில்... இந்தக் காட்சி!

என்னடா இது, கடந்த சில பதிவுகள்-ல்லாம் ஒரே திருத்தணியா வருதே-ன்னு பாக்காதீக:)
பாட்டின் இரண்டாம் பத்தியைக் கவனிங்க..
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்

"வாய் இதழை நனைத்தல்" -ன்னா என்னடா முருகா? கொஞ்சம் சொல்லேன், தெரிஞ்சிக்குறேன்:)



வருவான் வடிவேலன் - தணிகை
வள்ளல் அவன் - 
அழகு 
மன்னன் அவன் - நினைத்தால்
வருவான் வடிவேலன்!


சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்
இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன்
(வருவான் வடிவேலன்)

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் - என்றும்
அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் - சேவல்
கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
(வருவான் வடிவேலன்)

திருமுருகாற்றுப்படை நான் பாடவா - இல்லை
திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா - கந்தர்
சட்டிக் கவசக் கதை பாடவா - அவன் முன்
கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா?
(வருவான் வடிவேலன்)

குரல்: வாணி ஜெயராம்
வரி: கண்ணதாசன்
இசை: MSV
படம் : வருவான் வடிவேலன்



தணிகை = வள்ளி-முருகன் திருமணத் தலம்!
அதனாலேயே, என் மனசுக்கு மிகவும் பிடிச்ச தலம்!

வெறும் வாய்-இதழை மட்டும் நனைக்கவில்லை முருகன்!
வள்ளியின் காலையே, இங்கு பிடிச்சானாம்!
= குறமகள் பாதம் வருடிய மணவாளா
தனக்காகவே, காத்துக் கெடந்து, கால் போன போக்கில் நடையா நடந்தவ = அவ மன வலிக்கு/ கால் வலிக்கு - பாதம் வருடிய மணவாளா!
------

வருவான் வடிவேலன் = இந்தப் படத்தில், ஒரு பெண்ணை அவள் காதல் கணவன் தள்ளி வைக்கிறான்;
காரணம்: தன் கருத்தை / தொழிலை முன்பு எதிர்த்தவள்... என்பதால்!
Former Competitor; So show love 1st & then completely destroy her life:)

ஆனால், அவளோ, "அவனே" -ன்னு வாழ்கிறாள்;
அவன் மூலமாவே ஒரு பால முருகனைப் பெத்துக்குவேன் -ங்கிற நிலையில் நிக்குறா!

நடக்கக் கூடிய காரியமா இது?
அவன் வெறுப்பெங்கே? இவள் விருப்பெங்கே?

நடந்ததா? படத்தில் பாத்துக்கோங்க!:) = வருவான் வடிவேலன்!


Monday, July 08, 2013

Can Murugan Dance? சிந்தனையில் மேடை கட்டி!

ஈசன் நடனம் ஆடுவாரு! முருகன் நடனம் ஆடிப் பாத்து இருக்கீங்களா?

Dance of Murugan! Very Rare!
ஆனா, செந்தூரில், அருணகிரிக்காக ஆடி இருக்கான்!

எவ்ளோ "சுகித்து" வாழ்ந்த அருணகிரிக்கு, ஒரு "பிள்ளைத்தனமான" ஆசை; முருகனை ஆட வச்சிப் பாக்கணும்-ன்னு.. :))
திருச்செந்தூரில், வாய் விட்டுக் கேட்டேபுட்டாரு!


Haiyo, இப்பிடித் திடீர்-ன்னு கேட்டுப்புட்டாரே; அவனுக்கு ஆடத் தெரியுமா?
= பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, டிஸ்கோ... :)

டேய் முருகா, நானும் உன் "தய்யா தக்கா"-வைப் பாக்கணும்டா; பாத்துட்டு ஒன்னைய காதோரமா கேலி பண்ண, எனக்கு ரொம்ப ஆசை!:)

Hey, என்ன தான் இருந்தாலும், மாமா ஈசனைப் போல ஒன்னால ஆட முடியுமாடா?
sorry sorry; He 8 ft, You 16 ft:)
ஆடுறா முருகா, ஆடுறா!  Please da... love u da!


முருகனை, நம்ம விருப்பத்துக்கெல்லாம், "ஆடுறா, ஆடுறா" -ன்னு ஆட வைக்கலாமா?
= அது சரியா? தப்பா?

* சரி-ன்னா, எப்படி ஆட வைக்கலாம்?
= சிந்தனையில் மேடை கட்டி, கந்தனையே ஆட வைத்தேன்

* தப்பா?
= இல்லவே இல்லை! அவன் விருப்பமும் அது தான்!

ஆனா, நம்ம சுயநலத்துக்கெல்லாம் ஆட மாட்டான்; அவனே அவனே-ன்னு காதலிக்கும் போது, அவன் காதலிக்கு ஆடும் காதலன்!

செந்தமிழில் சொல்லெடுத்து, எந்தனையே பாட வைப்பான்..
நான் பாட, அவன் ஆட
என்- சிந்தனையில் மேடை கட்டி, கந்தனையே ஆட வைத்தேன்


திருமலை-தென்குமரி -ன்னு ஒரு படம்;
வடவேங்கடம் to தென்குமரி = Bus Tour!

என் அபிமான இயக்குநர் ஏ.பி. நாகராஜன்; நம்ம குன்னக்குடி தான் படத்துக்கு இசை!
படத்தில், பல சுவையான (இன்றைய பசங்களுக்கு மொக்கையான) காட்சிகள்:)

பல தலங்களையும் காட்டுவார்கள்;
பல தரப்பு (மொழி-இனம்-பணம்) குடும்பங்கள், ஒரே பேருந்தில், ஒன்றாகச் செய்யும் தல தரிசனம்!
Of course, சுருளிராஜன் & மனோரமா the best! ...and young Sivakumar, like today's Suriya:)

திருத்தணியில், இந்தப் பாடல் படமாக்கப்பட்டது...



சிந்தனையில் மேடைகட்டி
கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து
எந்தனையே பாட வைத்தான்..
(சிந்தனையில்)

தணிகைமலை மேல் அமர்ந்தான்
தத்துவமே பேசு கின்றான்
பழனிமலை தேடி வந்தான்
பரம்பொருளாய்க் காட்சி தந்தான்..
(சிந்தனையில்)

செந்தூரில் கோயில் கொண்டான்
சிங்கார வேலைக் கண்டான்
அழகர்மலை சோலை நின்றான்
ஆடும்மயில் ஏறி வந்தான்..
(சிந்தனையில்)

பரங்குன்றில் ஆட்சி செய்தான்
பாமாலை சூடிக் கொண்டான்
சாமிமலை வாசல் வந்தான்
காவடிகள் கோடி கண்டான்..
(சிந்தனையில்)

இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்:  சீர்காழி கோவிந்தராஜன்
படம்:   திருமலை தென்குமரி

வரிகள்: தென்கச்சி பாரதிசாமி
(அதிகம் அறிந்திராத கவிஞர்; அம்மன் மேல் பல பாடல்கள் எழுதியவர்; Album (இசைத்தொகை) -யாக வெளி வந்திருக்கு;

Monday, July 01, 2013

கலைக்கோவில் MSV: தேவியர் இருவர் முருகனுக்கு!

ஒரு இசையமைப்பாளர் -> தயாரிப்பாளர் ஆகின்றார்!
= எதற்கு?
= கம்பீரமான வீணை இசையை, படம் முழுக்க ஓட விட!




திரையிசைச் சக்கரவர்த்தி, MSV இசையமைத்து + தயாரித்த படம் = கலைக் கோவில்!
சீர்மிகு-சீரழி இசைக் கலைஞனே = கதா நாயகன்! (முத்துராமன்)

பின்னாளில்.. இதே போன்று கதையமைப்பில், பல வெற்றிப் படங்கள் வந்தன; (சிந்து பைரவி)
ஆனா அந்நாளில்?.. முதலில் வந்த படம், தோல்வியில் தான் முடிந்தது!

Box Office Hit, என்பதற்குப் பதிலாக, Box Hit Office -ன்னு சொன்னாராம், கையைச் சுட்டுக் கொண்ட MSV!
*இது MSV- க்கு வேண்டுமானால் = தோல்விப் படம்;
*ஆனால் வீணை இசைக்கு = வெற்றிப் படமே!

சிட்டிபாபு = பிரபல சம்பிரதாயக் கலைஞர்; ஆனால் புது முயற்சிகளை ஆதரிப்பவர்; அவரே படம் முழுதும் வீணை வாசிக்கிறார்;
படத்தின் கதாநாயகன் = முத்துராமன் அல்ல! வீணையே!



இந்தப் படம், மலையாளத்தில் வந்திருந்தால் வெற்றி அடைந்திருக்கும்; Art + Commercial Cinema!
ஆனால், மலையாள மண்ணில் தோன்றிய MSV, தமிழுக்கே தன் ஆத்ம அர்ப்பணிப்பை வழங்கினார்!

*படத்தின் Mega Hit பாடல் = LR Eswari பாடும், "வரவேண்டும் ஒரு பொழுது"; Full in Jazz & Exploding Instrument Medley!
*ஆனாலும், இந்த முருகன் பாடல், என் மனசுக்கு மிகவும் புடிச்ச பாட்டு; ஏஏஏஏனடி தோழி அறிவாயோ? சுசீலாம்மா "திருமாஆஆஆல்" -ன்னு இழுப்பாங்க வீணையைப் போலவே!

போட்டி: வீணைக்கும் சுசீலாம்மாவுக்கும் தான்:)

இவள்: எனக்கோர் இடம் நீ தருவாயோ?
அவன்: என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்!


படம்: கலைக் கோவில்
குரல்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன் (உதவி: பஞ்சு அருணாசலம்)

வீணை: சிட்டிபாபு
ராகம்: ஸ்ரீ ராகம் (எந்தரோ மகானுபாவுலு என்னும் அதே ராகம்)



தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ?

கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்!
(தேவியர் இருவர் முருகனுக்கு)

ஒருமுகம் அவனை உணர்ந்ததடி
இருமுகம் ஒன்றாய்க் கலந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி!
(தேவியர் இருவர் முருகனுக்கு)


என்னவன், எந்தை

என் காதல் முருகனை, என் தந்தை திருமாலுக்கு இணையாக வைத்துப் பேசும் போது, மனசு என்னமோ பண்ணும்!
புகுந்த வீட்டிலும், அன்பில் தோய், தாய்-தந்தையை நினைச்சி வாழும் ஒரு பெண்ணின் நிலைமை...

*முருகனுக்கு எத்தனையோ பேர்கள்! = வெகு கோடி நாம, சம்பு குமாரா நமோ நம!
*ஆனாலும், அந்த ஒரு பேர் = மால் மருகன்!

"திருமால் அழகன் மருகனுக்கு" 
-ன்னு சொல்லும் போது மட்டும்.. என்னமோ பண்ணுது; தொன்மையான சங்கத் தமிழ் மாயோன்-சேயோன்; உம்ம்ம்.. எனக்கு சரியாச் சொல்ல வரலீங்க.. அடைக்குது.. பதிவை முடிச்சிக்கறேன்;

மருகவா முருகவா..
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

Tuesday, June 25, 2013

தணிகை மலை "தர்ம துரையே" - வா வா வா!

கல்லூரி Placement-க்கு வந்த முதல் நிறுவனம்; Hurrah எனக்கு வேலை கிடைச்சாச்சி!:)

எனக்கும், உற்ற நண்பனுக்கும் - ஒரே நிறுவனத்தில் வேலை; கூடவே ஒரு பொண்ணுக்கும்;
எல்லாரும் மும்பை சலோ!:) - Dadar Express!


வழியில், அரக்கோணம் தாண்டும் போது, நான் மட்டும் "திடும்"-ன்னு எழுந்து சென்று விடுகிறேன்!
அந்தப் பொண்ணு, "ஏய் ரவி, எங்கே தனியா போற? நானும் ஒன் கூட வரேன்" -ன்னு சொல்ல...

அந்த நண்பன், "ரவி எங்கயோ சைட் அடிக்கப் போறான்; நீ எதுக்கு எப்பமே அவன் பின்னாலயே சுத்துற?" -ன்னு கொஞ்சம் எரிச்சலாக் கேக்குறான்:)
He used to be kinda possessive abt me, being a close friend:) His name ராஜி = Reverse of ஜிரா:) Life became Full Circle!

அப்படி யாரைப் பாக்கப் போனேன்? -ன்னு பொறவு தெரிஞ்சிக்கிட்டு, அந்தப் பொண்ணு விழுந்து விழுந்து சிரிக்குறா:)
Hey Ravi, Sometimes, you think like a baby -ன்னு அவ சொல்ல...
அந்த நண்பன், என்னைய ஒரு மொறை மொறைச்சது இன்னும் நினைவு இருக்கு:)

அப்படி, யாரைத் தான் பாக்கப் போனேன்?
= Train, அரக்கோணம் தாண்டிய பின்...  திருத்தணி மலை தெரியும்!
= "ஓம் முருகா" -ன்னு எழுதியுள்ள பேரெழுத்தும் நன்கு தெரியும்!!
= கதவோரம் தனியா நின்னுக்கிட்டு, அந்த லூசு முருகன் கிட்ட Hai சொல்வதில், எனக்கொரு தனி இன்பம்...



திருத்தணி மலை = 5ஆம் படை வீடு அல்ல!

"குன்று தோறாடல்" என்பதே 5ஆம் படைவீடு; அந்தப் பல குன்றுகளில், திருத்தணியும் ஒன்று!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே! என்பது திருப்புகழ்;

திருத்தணி -ன்னாலே = முருகனுக்கு, மாம்பழக் கோவம் "தணி"ஞ்ச இடம் -ன்னு புராணக் கதை உருவாக்கிட்டாங்க; உண்மை அதுவல்ல!

* கோபம் தணிஞ்ச இடமல்ல!
* காமம் "தணி"ஞ்ச இடம் = திருத்-தணி!

தண்ணீர் -> தண் -> தணி;
* அனல் = தண்ணீரில் தணியும்!
* அனல் போன்ற காமம் = வள்ளி என்னும் பெண்ணீரில் தணியும்!

சங்கத் தமிழ்த் தொன்மமான, குறிஞ்சி நிலத்துக் காதல் பறவைகள்: முருகன் - வள்ளிக்கு, திருமணம் நிகழ்ந்த இடம் = திருத்தணி!
முருகக் காதல், வள்ளியிடம் தணிந்த மலை = தணிகை மலை!

இதுவே புராணம் கலவாத தமிழ்ப் பழங்குடியியல்!

ஏனோ... இன்னிக்கி, திருத்தணியைத் "திருமணத் தலம்" என்றே பலரும் நினைச்சிப் பார்ப்பதில்லை!
அடுத்த முறை போனீங்க-ன்னா, மறக்காம ஞாபகம் வச்சிக்கோங்க: அங்கு இருப்பது மாப்பிள்ளை முருகன் - மணப் பொண்ணு வள்ளி!

திருத்தணிக்கு அருகில் தான், வள்ளி பிறந்து வாழ்ந்த = வள்ளி மலை!
எங்க வடார்க்காடு மாவட்டம் என்பதாலோ என்னவோ... I have a deep fantasy abt vaLLi malai & thaNigai malai;

இன்றைய பாடலும் திருத்தணிப் பாட்டே!
முருகனை = "தர்ம துரை" -ன்னு கூப்புடுறாங்க, பாடகி ரமணியம்மாள்; Super Star Movie is Dharma Durai:)

"துரை" என்பது தமிழ்ச் சொல் அன்று!
ஆயினும் பல துரைகள் தமிழ்நாட்டில் உண்டு:) செல்வ துரை, அண்ணாதுரை, தம்பிதுரை, தர்மதுரை, துரைக்கண்ணன், பொன்னுதுரை, ராஜதுரை etc etc etc
துரைசாமி = எங்க தாத்தா பேரு:) (அம்மா வழித் தாத்தா)

Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்.. இன்னும் கூர்ந்தால், ஜெர்மானியச் சொல்
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல், Durer - துரே - துரை!

கனவான்களை, நம்ம மக்களும் "துரை துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின் வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும்,
நம்ம மக்களின் வெள்ளந்தியான "துரை" நாமகரணமே நின்று விட்டது:)

ஆனால் முருகன் எப்படி "துரை" ஆனான்?
ஆங்கிலப் புத்தாண்டு அன்று, துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப..
வள்ளிமலை சுவாமிகள், திருத்தணிப் படி உற்சவத்தை, வேண்டுமென்றே Jan 1st நடத்தத் துவங்கினார்; முருகனும் "துரை" ஆனான்:)

Hey Honey, Muruga Durer, I aime ous.. I love you da:))




தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா

அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா
ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா

பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா
ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா

என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா
பாவி என்னை மறந்திடாதே - வா வா வா
--------------

வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா
வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா

என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா

திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப்
பெருந் துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
--------------

சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சல் ஆரம்ப மாயன்

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா
சம்ப்ரம-ஆ னந்த மாயன்

மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால்
வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே
வந்துநீ அன்பில் ஆள்வாய்
--------------

கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா

கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா
கண்டலே சன்சொல்-வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்று-மோ தும் ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே!



வரிகள் & குரல்: பெங்களூர் ரமணியம்மாள்

அம்மாளின் குரல் = ஆண்மைக் குரல்; முடவனையும் துள்ளி ஆட வைக்கும்;
குரல் மட்டுமல்ல, தானே பாட்டு எழுதவும் செய்வார்கள்;

இந்தப் பாட்டு, மகாகவி பாரதியின், "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா" மெட்டில் எழுதியது; (முன் இரு பத்திகள்)
பின் இரு பத்திகள் - திருச்செந்தூர் திருப்புகழ் - தன் பாட்டில் பயன்படுத்திக்கிட்டாங்க;
அம்மாளைப் பற்றி மேலும் அறிய = இங்கே (old kathirgamam post)

திருக் கேதாரம் (எ) கேதார்நாத் -இல்,
மலை வெள்ளத்தில் திடும்-என உயிர் துறந்த உள்ளங்களுக்கு, இவ்வமயத்தில் அஞ்சலி!

முருகா, எனக்கும்...
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா;

Monday, June 17, 2013

கேபி சுந்தராம்பாள்: எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!

சில சமயங்களில் முருகன் கொடியவன் - சேவல் கொடி-யவன்!
அவன் மனம் = இளகவே இளகாத பாறை!
ஆனால் அந்தப் பாறையிலும் = முளை விடும் செடிகள் சில உண்டு;


பசிக்கு நீர் கிடைக்காது, பாறையில்!
எதுக்க்க்க்க்கு, அப்படி, பாறையில் போய் வாழணும்?

இடம் மாற்றிப் பாருங்கள் செடியை? = வாடி வதங்கி விடும்!
அதன் உணவே = அந்தப் பாறைச் சத்து தான்! முருகச் சத்து தான்!

என்ன ஆனாலும்,
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!
வாழ்வே போனாலும்
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!

அந்த அடியவர் செடிகள், அவனைக் காட்டிலும் உயர்ந்தவை!
அதிலொரு செடி = கே.பி. சுந்தராம்பாள் (எ) KBS
அம்மாவின் வாழ்வியல் = இங்கே, http://murugan.org/tamil/sundarambal-2.tamil.htm
KBS அம்மாவைப் பூவும் பொட்டுமாய்க் காண்பதில்,
ஏனோ, எனக்கொரு இனம் புரியாத மகிழ்வு

இன்றைய பாடல்
= KBS அம்மாவின் முருகத் திரை வாழ்விலே இறுதிப் பாடல்!(1969)

பின்பு, காரைக்கால் அம்மையார் (எ) தோழி புனிதாவின் கதை!
பின்பு, திருமலைத் தெய்வம் = அதுவே கடைசி!
ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை? -ன்னு மனக்கவலையோடவே பாட வைத்தனையோ எந்தையே?

இது....முருகன் திரைப்பாடலில் இறுதிப் பாடல்!



துணைவன் -ன்னு ஒரு படம் வந்துச்சி; (தேவர் எடுத்த படம், எம்.ஏ. திருமுகம் இயக்குநர்)
இதில் தான் வாரியார், மிக நீண்ட நேரம் நடிச்ச படம்!

வாரியார் படங்கள்: சிவகவி (வசனம்), தெய்வம், கந்தர் அலங்காரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, நவகிரக நாயகி -ன்னு சில படங்கள்!
எல்லாவற்றிலும், ஆரம்பக் காட்சிகள் (அ) சிறிது நேரம் தான்; துணைவன் படத்தில் தான், பல இடங்களிலும் வந்து போவார்!

பிறக்கும் போதே உணர்வற்றுப் போன ஒரு குழந்தை (மாறன் நம்மாழ்வார் போலவோ என்னமோ?)
அதைக் கோயில் கோயிலாகச் சுற்றி எடுத்துக்கிட்டு வேண்டும் பெற்றோர்; வழித்துணைக்கு KBS அம்மாவை அழைக்கிறார்கள்;

மொத்தம் 28 முருகன் ஆலயங்கள்!
படைவீட்டின் உள் முகப்புகளையெல்லாம் இந்தப் படத்தில் காணலாம்;

முருக உள்ளங்கள் துடிதுடிக்க...
திருச்செந்தூரிலே, கொடி-யவன் உள்ளக் கதவு திறக்கிறது;
என் செல்லக் கொடியவா,
வா வா வா! - எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா! 





ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும்,
நம்பினோர்க்கு அருளும் முருகா...
நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை
நான் கண்டு மகிழவேண்டும்....

ஊமைக் குழந்தையாம் குமர குருபரன் நாவில்
உயர்ந்த வேல் கொண்டு எழுதி
உணர்வினில் அமுதூறும் கந்தர் கலி வெண்பாவை
உவந்து அளித்த தமிழ்க் கடவுளே!

நக்கீரன் நாவிலே ஆற்றுப்படை பாட
நல்ல தமிழ் தந்த முருகா
நாள்தோறும் உன்புகழைப் பாடிட பாடிட, அதை
நீ கேட்டு மகிழ்ந்த முருகா!

இன்று தாய் இவள் கண்ணீரும் தந்தையின் ரத்தமும்
தன் நெஞ்சம் காண விலையோ?
இங்கு தவழாத பிள்ளையைத் தவழ வைத்தால்..
நீ தந்த தமிழுக்குப் பெருமை முருகா!

வேலோடும் மயிலோடும் விரைந்தோடி வா
விளையாடும் இளம்பிள்ளை பிணி தீர்க்க வா
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
எந்தவுரு கொண்டேனும் குறை தீர்க்க வா!

விரைந்தோடி வா வா வா
பிணி தீர்க்க வா வா வா!
செந்தூரில் வா வா வா!
குறை தீர்க்க வா வா வா!

படம்: துணைவன்
குரல்: கே.பி. சுந்தராம்பாள்
வரிகள்: மருதகாசி
இசை: கே.வி. மகாதேவன்


பெண்ணுக்குப் பெற்றோர் வீடு = சொர்க்கம் என்றாலும்,
உள்ளத்தின் ஆழத்தில் அடைய விரும்புவது = கொண்டவன் வீடே! கொடி-யவன் வீடே!

என் உயிர் போக உகந்த இடம் = செந்தூர்;
செந்தூர்... வாசல் படியாய்க் கிடந்து, உன் வசந்த வாய் காண்பேனே!

எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
(முருகவா! வா! வா!)

Monday, June 10, 2013

முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?

இன்னிக்கி.... மறுபடியும் TMS பாட்டு தான்!
டேய் முருகா - TMS குரலைக் கேட்பதை விட ஒனக்கு என்ன பெருசா வேலை?


ஒனக்கு = ஒரு பேரு வச்சா போதாதா?
அதென்ன = "வெகு கோடி நாம"?
பாரு, இந்தப் பாட்டுல, ஒன்னைய எந்தப் பேரு சொல்லிக் கூப்புடறது-ன்னு இவருக்கு அத்தனை குழப்பமும் ஏக்கமும்?

= முருகாவா? முத்துக் குமராவா? 
= வேலாவா? கோகோ கோலாவா?

நீயே பாட்டைக் கேட்டுட்டுச் சொல்லுடா... என் செல்லப் பொற்க்கீ:)
Avantree Jogger Waterproof headset-ல்ல, குளிச்சிக்கிட்டே கேப்போமா? வா! A song in the shower:)


இந்தப் பாடல், முருகனருள் வலைப்பூவில், எப்படி இத்தனை நாள் வராம இருந்தது? -ன்னு தான் எனக்கு வியப்பு!
ஏன்-ன்னா, பாட்டு முழுக்கவே துள்ளலா Tabla இசை; ஒரு தெம்மாங்கு போலக் கொட்டிக்கிட்டே இருக்கும்!

மூன்று அடியவர் கதைகளும், பாட்டில் லேசா இருக்கு பாருங்க; யார் யாரு? என்ன கதை?
1) அருணகிரி, 2) நக்கீரர், 3) குமரகுருபரர்



முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா?

எப்படி அழைப்பேன்? 
உன்னை எங்கு காண்பேன்?

ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது - நீ
அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா!
(உன்னை... முருகா என்றழைக்கவா?)

நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா - அந்தப்
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா - உலகுக்குப்
பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)

முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க - நீ 
முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா - நீ 
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)

நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா - முருகா
நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா
என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)


வரிகள்: தமிழ்நம்பி
குரல்: ஏழிசை மன்னர், TMS
இசை:
இதே பாடலை, வீணை இசையில் கேட்க: இதோ சுட்டி

பாட்டை இன்னொருகா வாசிங்க...

எப்படி அழைப்பேன்? உன்னை எங்கு காண்பேன்?
உன்னைத் தேட, எனக்குச் சக்தி இல்லடா; நானே ரொம்ப இளைச்சிப் போயிட்டேனாம்;
இன்னிக்கி oppiceல்ல ரொம்ப நாள் கழிச்சிப் பார்த்த பார்வைல எல்லாருமே சொல்லுறாங்க; இதுல, உன்னை எங்கு போயிக் காண்பேன்???

முருகா என்று அழைக்க, வா!
முத்துக் குமரா என்று அழைக்க, வா!

வந்துருடா! அழைக்க வா
எத்தனை நாள் தான் நீ இல்லாம... நானு?
முருகா என்று அழைக்க - வா - டா! please da!

Tuesday, June 04, 2013

TMS: வடிவேலும் மயிலும் துணை!

சில நினைவுகள்:  மறக்க(வே) முடியாதவை!

சென்ற ஒரு வாரம் முழுக்க...,
1000 TMS பாடல்கள் கேட்டிருப்பேனோ? = தெரியாது; Never been non stop like this;

சினிமாப் பாடல்கள் தான் நிறைய; எப்படித் தான் சதா கேட்டுக்கிட்டு இருந்தேனோ? எனக்கே வியப்பா இருக்கு;

ஆனால், இன்பத்தை விட,  இன்ப நினைப்புகள்.... இன்பமா இருக்கும்;
ஆண்டாள் போல ஆயிருச்சோ, என் நெலமையும்?
கற்பனை என்றாலும், கந்தனே... நான் உன் சொந்தனே....



அத்தனை பாட்டு கேட்டாலும், இந்த ஒரு பாட்டு மட்டும்,
இன்னும் ரீங்காரம் இட்டுக்கிட்டே இருக்கு; ஏன்?-ன்னு தெரியல!



படம்: அம்பிகாபதி
குரல்: ஏழிசை மன்னர், TMS
வரிகள்: KD சந்தானம்
இசை: ஜிரா (எ) ஜி. ராமநாதன்



வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் - சந்ததமும் - கந்தனைப் பாட
(வடிவேலும் மயிலும் துணை)

நடராஜன் அருள்பாலன் - நான்மறை தொழும் சீலன்
தட மேவும் பொழில் சூழும் 
தணிகை வாழும் - பரம ஞான - குருபரன்
(வடிவேலும் மயிலும் துணை)

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை  மலர்மாலை - ஜெபமாலையுடன் - சந்தத்
(தமிழ்மாலை தனைச் சூடுவான்)
---------------

தாபமிகு வெப்பு - வாதமொடு பித்த
மான பிணி மொய்த்து உடம்போடு...
சாரும் உயிர் துன்ப - சாகரம் உழன்று
சாதனை இழந்து வருந்தா உன்

தாளை அளித்திட - வேணுமெனத் துதி
பாடருணை கிரி - நாதன் அழைத்திட
தயவுடன் விரைந்து - அருள்மழை பொழிந்து

முத்தைத் தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த - தழைத்த கருணையை
நினைந்து நினைந்து - கவிமலர் தொடுத்த
(தமிழ்மாலை தனைச் சூடுவான்)
----------------

சற்றே சரிந்த குழலே துவளத் - தரளவடம்
குற்றே அசையக் - குழை ஊசலாட - துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக - நடன சிங்கார நடையழகின்
பொற்றேர் இழுக்கத் - தலையலங்காரம் புறப்பட்டதே!!!



TMS in a cheeval advt.

99 or 100?
= அந்த "ஒன்னுல" தான் அவன் வாழ்க்கை விதி, ஒத்த நூலில் ஊசல் ஆடிக் கொண்டு இருக்காம்!
*அம்பிகாபதி 100 பாடல்கள் பாடினால் = காதல் - கை வரும்;
*இல்லையேல் = சாதல் - தலை போகும்!

அருணை கிரி - நாதன் அழைத்திட
முத்தைத் தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த - தழைத்த கருணையை
-ன்னு வருவதால் தானோ, இந்தப் பாட்டு இன்னும் எனக்குள் ரீங்காரம் இட்டுக்கிட்டே இருக்கு?

*கடவுள் வாழ்த்தோடு சேர்த்து நூறா?
*(இல்லை) கடவுளைச் சேர்க்காமல் நூறா?

எது எப்படியோ, முருகனைச் சேர்த்துத் தான் என் நூறும், பேரும், ஊரும், உயிரும்!
முருகனால், தலை போகும் என்றால்... போய் விடட்டுமே!
அவன் இதழ்க் கோட்டோரம், அவன் புன் சிரிப்பே தலை;  என் தலை தலையல்ல!

முருகனுக்கும்-எனக்கும்,
for both of us...
வடிவேலும் மயிலும் துணை

Monday, May 27, 2013

100) சொல்லாத நாளில்லை (காவடிச் சிந்து)

முருகனருள் வலைப்பூவில், இது என் 100ஆம் பதிவு;

(May 27) இன்று, தோழன் இராகவனின் பிறந்த நாளும் கூட!

"பிறந்த நாள் வாழ்த்து" - என்பதாகத் தான், ரெண்டு நாளுக்கு முன்னாடி, இந்தக் காவடிச் சிந்தை, முருகன் மேல் எழுதி வைச்சேன்;
ஆனால்... TMS அவர்களின் இறுதிச் சேதி கேட்ட பின், "சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா"- என்றே சொல்லத் துடிக்கிறேன்!

TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....

முருகா!


"முருகனருள்" = இந்தக் குழு வலைப்பூவில் மட்டுமே = 100 பதிவுகள் இட முடியும் -ன்னு, நான் நினைச்சிக் கூடப் பார்த்தது இல்லை;
என்னையும் ஒரு பொருட்டாய், இங்கே இருக்க வைத்த, "முருகனருள்" சக உறுப்பினர்களுக்கு நன்றி!

இது நாள் வரை, என் எழுத்தையும் ஒரு பொருட்டாய் வாசித்த வாசகர்களுக்கு நன்றி!
உங்களுக்கு, அடியேன், சொல்லால் செய்த பிழைகள் ஏதாச்சும் இருந்தா, என்னை மன்னித்து அருள்க!

முருக வாசகம் = இதய வாசகம்!
*இதயத்தில் இருந்து வந்த சொற்களை,
*இதயத்தில் இருந்தே அணுகுமாறு கேட்டுக்கறேன்;
(சமயத்தில் இருந்தோ, சார்பில் இருந்தோ அணுகினாலும் பரவாயில்லை; என் தலை தாழ்ந்த மன்னிப்பையும் ஏத்துக்குமாறு கேட்டுக்கறேன்)

இந்தப் பாட்டைக், காவடிச் சிந்து மெட்டில் பாட முடியும்;
ஆனா, பாட எனக்கு வலுவில்லை இன்று! முருகனே பாடிக் கொள்ளட்டும்;

(ஆறுபடை வீட்டையும், ஒரே வரியில் அடக்க ஆசை; ஆனா முடியலை; இரண்டு வரி ஆயிருச்சி...)


"சொல்லாத நாளில்லை"  முருகா - உன்போல்
பொல்லாத ஆளில்லை முருகா - ஐயா
சொல்லாத சொல்லுள்ளும், சொல்லிய சொல்லுள்ளும்
தள்ளாது நிப்பவன் நீயே - என்னைத்
தள்ளாது நிப்பவன் நீயே!   (1)

உலகெலாம் உள்ளவன் ஒருவன் - எந்தன்
உளமெலாம் உள்ளவன் ஒருவன் - ஐயன்
உருவாயும் அருவாயும், உளதாயும் இலதாயும்
கருவினில் வரும்கந்தக் காரன் - என்
கனவினில் வரும்சொந்தக் காரன்!   (2)

குறிஞ்சி நிலத்திலே குரவன் - குன்றக்
குரவையின் கூத்துக்கு மறவன் - அவன்
பரங்குன்றச் செந்தூரன் , பழனிச்சாமி மலையன்
தணிகை-யன் சோலையில் சிலையன் - தமிழ்ப்
பசிக்கு-அவன் பால்தரும் முலையன்!    (3)

இராகவன் மனசில்வாழ் பிள்ளை - உமைப்
பாகவன் பெற்றசெங் கிள்ளை - தமிழ்த்
தாகவன் மோகவன், நட்புக்கு வாகவன்
இராகவன் கூப்பிட்டால் வருவான் - எனக்குச்
சேகவன் முருகனைத் தருவான்!   (4)

(end of kavadi chinthu)
Happy Birthday Ragava!


"சொல்லாத நாளில்லை" - சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே - செந்தமிழாலே!

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலா நின்திருப் புகழினை நான் பாட
அரகர - சிவசுத - மால்மருகா என
அனுதினம் - ஒருதர - மாகிலும் உன்னைச்...........
(சொல்லாத நாளில்லை)

 

தொகுப்பு (Album): முருகா, நீ வர வேண்டும்
வரிகள்: கோவைக் கூத்தன்
குரல்: ஏழிசை மன்னர், TMS (எ) Thoguluva Meenatchi Soundararajan 
Link: All songs of TMS, in this Muruganarul Blog!

Wednesday, April 24, 2013

லால்குடி ஜெயராமன்: செந்தில் நகர் மேவும் தேவா

நேற்று (Apr 22, 2013) காலமான வயலின் இசைக் கலைஞர், திரு. லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு அஞ்சலி;
லால்குடியாரின் ஆன்மா, இறைத் திரு நீழலில், இளைப்பாற வேண்டுதல்!


சற்றே "ஆச்சாரமான" இசைக் கலைஞர் எனினும், அவருடைய இசை என்னைப் பெரிதும் கவர்ந்த ஒன்று;

"பெண்களுக்கு வாசிக்க மாட்டேன்; ஆண்களுக்கு மட்டுமே வயலின் பக்க இசை" - போன்ற அவரின் அபிமானங்கள்... எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடே இல்லை!
என்றாலும், அவர் என்னைக் கவர்ந்தது வியப்பே! அவரின் இசை அப்படி;
("கருத்து வேறு; மனிதம் வேறு" - என்றே என்னைச் சற்றே மாற்றிப் படைத்து விட்டான் முருகன்;
அதனால் விளையும் துன்பமும் இன்பமும் = வாழ்க்கை அவனுடன் தான்!)

லால்குடியின் இசை = மரபில் ஊறித் திளைக்கும் இசை;
ஆனால், அந்த மரபு = மிகச் சுத்தமான மரபு
தியாகராஜரின் மோட்சமு கலதா... அப்படியே லால்குடியின் வயலின், கண்ணீரிலே கரையும்!

இப்படிப்பட்டவரு, "சிருங்காரம்" என்னும் சினிமாப் படத்துக்கும் இசை அமைச்சாரு:)
அந்தப் படமே, ஒரு மரபிசைப் படம் தான் = கோயில் தேவதாசியின் கதை;

தேவதாசி = நித்ய சுமங்கலியா? பெண்ணடிமையா? சாதிக் கொடுமையா?
எதுன்னாலும்...
விடுதலையோ/ அடிமையோ = அவளின் "காமம்"; அதுவே நிரந்தரம்!
* அந்தப் படத்தின் பாடல்கள் = இங்கே
* படத்தின் வலைத்தளம் = இங்கே

வயலினை, இரும்புக் கம்பியால் மீட்டாமல், தேன் கம்பியால் மீட்டியவர் லால்குடி ஜெயராமன்;
அவர் இல்லாத இந்த வேளையில்...
"திருமுருகன்" மீது, அவரே எழுதி, இசையமைத்த பாடல் ஒன்று... இன்று!


செந்தில் நகர் மேவும் தேவா - சிவபாலா, நீ
சிந்தை இரங்கி எனை ஆளவா - வேலவா!

எந்த வேளையும் உன்னை அன்றி - வேறோர் எண்ணம் உண்டோ?
எந்தன் உள்ளமும் நீ அறியாயோ? - ஏன் இந்த மாயம்?

 (சிட்டை ஸ்வரம்)
இது தகுமோ? தருமம் தானோ?
வாராதிருக்க மருமம் ஏனோ?

கனிந்து வந்திடா விடில், யான் என் செய்குவேன்?
ஏதும் புகலிடம் அறியேன்; ஒரு கணமேனும் மறந்தறியேன்;
இவ்விளம் பேதை..
மகிழ - முழு மதி - முகம் அதில் - குறுநகை யொடு
கருணை - பொழிய வா - அருளே தருக வா - திரு மால் மருகா!

(முடிப்பு)
வா வா, ஆடும் மயில் மீது வா!
அழகா முருகா நீ...
உன் வடிவழகைக் காண, என் முன் நீ
(வா வா, ஆடும் மயில் மீது வா!)

என் முறை கேட்டிலையோ? வர மனமிலையோ?
செவி புகவிலையோ? இனியாகிலும்
(வா வா, ஆடும் மயில் மீது வா!)

உருகி உருகி, உளம், ஊண் உறக்கம் இன்றிப்
பெருகிப் பெருகி, விழி உடலது சோர்ந்திட
ஆவலோடு உனை நாடி எங்கும் தேடினேன்
மனம் வாடினேன் - துயர் ஓடிடவே
(வா வா, ஆடும் மயில் மீது வா!)

அன்றே ஒரு நாளும் உனைக் கை விடேன் - என அன்புடனே 
ஆதரவைச் சொன்னதும், மகிழ்ந்துளம் கலந்ததும் - சிறிதும் நினைவிலையோ?

பரம தயையும் - பரிவும் உறவும் - மறையுமோ இன்று?
இனித் தாளேன்!
தணிகை வளரும் அரு மணியே, என் கண் மணியே,
என் உயிரின் துணையே!
(வா வா, ஆடும் மயில் மீது வா!)

ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
எழுதி/இசை: லால்குடி ஜெயராமன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP