Tuesday, December 15, 2020

மார்கழித் திங்கள் | முருகன் திருப்பாவை - 01

தமிழ் திகழ் வணக்கம், முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்கு!

மார்கழி பிறந்து விட்டது!
தமிழ் திகழும் கோதை ஆண்டாளும், அதிகாலையே வீதிக்கு வந்து விட்டாள்!


சுற்றத் தோழிமாரெல்லாம் முற்றம் புகுந்து..
*முகில்வண்ணன் - திருமால் பேர் பாடத் துவங்குகிறார்கள்!
*முருகன் பேரையும், தோழிகள் பாடலாம் அல்லவா?:)

திருப்பாவை, திருவெம்பாவை.. போன்ற பாவைப் பாடல்கள் யாவும்,
பாலை நிலக் கொற்றவை அன்னையைப் பாவை உருவத்தில் எழுதி,
தம் நெஞ்சுநேர் காதலனோடு
தானும் அவன் வாழ்வியல் கூடலில் கூட..
அருள் புரிய வேண்டுகின்ற அழகுத் தமிழ்ப் பாடல்களே!

அவை, திருமால் மேல் மட்டுமே பாட வேண்டும் என்றில்லை!
அவை, முருகன் மீதும் பாடலாம்!
அவ்வளவு ஏன்.. தந்தை பெரியார் மீது கூடப் பாடலாம்:)

சமூகச் சேதிகளும் உள்ளடக்கியவையே பாவைப் பாடல்கள்!
சாதி மறுத்துச் சமூகநீதிக் காதல் திருமணம் கைக்கூட..
பெரியாரையும் நாயகராக வைத்து, பாவைப்பாடல் பாட முடியும்!
அது, திராவிடத் திருப்பாவை ஆகும்!

தமிழ்நில ஆதிகுடி முன்னோர்களின் நடுகல் மரபாகத் தோன்றி விரிந்துள்ள
திருமால், முருகன், மாரித்தாய்..
மாயோன், சேயோன், கொற்றவை - மூவரும் தமிழ்க் கடவுள்களே!
*அதில், மாயோனுக்குப் பாவைப் பாடல் உள்ளது!
*ஆனால், சேயோனுக்குப் பாவைப் பாடல் இல்லாத குறையைப் போக்க..

முன்பு கீச்சுலகில் (Twitter) நானே எழுதிப் பகிர்ந்த
முருகன் திருப்பாவையை, 
இங்கே முருகனருள் வலைப்பூவிலும் பதித்து வைக்கிறேன்!
இப்போதைக்கு, அப்போதே சொல்லி வைத்தேன்!

முப்பது நாளும் முப்பது முருகன் பாவைகள்!
சுவைத்து மகிழ்க!
சமூகநீதி மிக்க அருள்மரபுத் தமிழ் வாழ்க!
இதோ, தொடங்குவோம்.. வைகறை முதல் நாள்,, முதற் பாடல்!

மார்கழித் திங்கள், பனிநிறைந்த நன்னாளால்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)
முருகன் திருப்பாவை-01

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



01/30 | அனைவரையும் நோன்புக்கு அழைத்தல்!

மார்கழித் திங்கள், பனிநிறைந்த நன்னாளால்
நீராடச் செல்லுவீர், செல்வியரே சென்றிடுவோம்!

ஏர்தமிழ்க் குன்றம் குறிஞ்சித் தலைவன்-அவன்
கூர்வேல் விழியுடைய வில்புருவக் கூர்மூக்கன்!

சீராரும் செம்முகத்தில் சின்னநகைப் பூத்திடுவான்
கார்மேனி அண்ணல் கருமாயோன் மாமகளாம்

பேராரும் வள்ளி, முருகன் பறைதருவான்!
பாரோர் மகிழ-நீர் ஆடேலோ ரெம்பாவாய்!   (01)


திருப்பாவை, தமிழ்ப் பாவை!
பாவை நோன்பினை நோற்பார் நெஞ்சகம் குளிர,
முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP