Sunday, February 03, 2013

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 14 - நிறைவு




நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா போற்றி!
இடும்பாயுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி! கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர் கிரி கனகசபைக்கு ஓர் அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

"சஷ்டி கவசத்தின் இறுதிப் பகுதி இது. இறைவன் திருவடிகளே சரணம் என்று போற்றி இந்தத் துதிப்பாடலை நிறைவு செய்கிறார் அடிகளார்.

நல்லவர்களான அடியவர்களின் நினைவில் நின்று என்றும் நடனம் செய்யும் திருவடிகள் எல்லா பகையையும் அழிக்கும் முருகப்பெருமானின் திருவடிகள். அவற்றை அறிந்து எனது உள்ளத்திலும் இருத்தினேன்.

அஷ்ட லக்ஷ்மிகளில் வீர லக்ஷ்மிக்கு விருந்து உணவாக சூரபத்மனைத் துணித்தத் திருக்கைகளால் இருபத்தி ஏழு நட்சத்திர தேவதைகளில் கார்த்திகைக்கு உரிய தேவதைகளிடம் அமுது உண்டு கார்த்திகேயன் என்று பெயர் பெற்று எல்லா நட்சத்திரங்களுக்கும் பெருமை தந்த குருபரனான பழனிக்குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தையின் சிவந்த திருவடிகள் போற்றி!

நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்து ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!

தீய வழிகளில் நான் செல்லாமல் என்னைத் தடுத்து உனது அடியவனாக என்னை ஆட்கொள்வதற்காக நீயாகவே உன் கருணையினால் எனது உள்ளத்தில் நிறைந்த அழகிய வடிவு உடைய வேலவனே போற்றி!

தேவர்களின் சேனைத்தலைவனே போற்றி!

குறவர்களின் திருமகளான வள்ளியம்மையின் மனத்தை மகிழ்விக்கும் தலைவனே போற்றி!

வலிமையுடைய தெய்வீகமான திருவுடலை உடையவனே போற்றி!

எனைத் தடுத்து ஆட்கொள என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
குறமகள் மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா போற்றி!

இடும்பைகள் என்னும் துன்பங்களை ஆயுதமாக உடையவனே! இடும்பைகளை நீக்குபவனே! போற்றி!

கடம்ப மாலை அணிந்தவனே போற்றி! கந்தனே போற்றி!

வெட்சி மாலை அணியும் தலைவனே போற்றி!

இடும்பாயுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி! கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!

மிக உயர்ந்த கந்தகிரியில் இருக்கும் பொற்சபைக்கு ஒப்பில்லாத அரசனே! மயிலில் ஏறி நடனம் இடுபவனே! உனது மலர் போன்ற திருவடிகள் சரணம்! ஆறெழுத்து மந்திரத்திற்குத் தலைவனே சரணம் சரணம்! ஆறுமுகத்தரசே சரணம் சரணம்!

உயர் கிரி கனகசபைக்கு ஓர் அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

இத்துடன் கந்தர் சஷ்டி கவசத்திற்கு பொருள் சொல்லி நிறைவுற்றது நண்பா. முழு நூலுக்கும் பொருள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக என்னுடன் இருந்ததற்கு நன்றி நண்பா. முருகனின் அடியவர்களான நம் இருவர் இடையிலும் எந்தக் காலத்திலும் எந்த பிரிவும் வராமல் முருகன் திருவருள் புரியட்டும். அப்படியே ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தாலும் அவை தானே விலகி ஓட திருமுருகன் திருக்கைவேல் அருளட்டும். வெற்றி வேல்! வீர வேல்!"

***

கந்தர் சஷ்டி கவசம் நூலுக்குப் பொருள் சொல்லப் பணித்த கவிநயா அக்காஇராகவன், இரவிசங்கர் முதலிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பணிச்சுமையாலும் வேறு வேலைகளாலும் தொடர்ந்து எழுத முடியாமல் போனது. பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.

அண்மையில் காலம் சென்ற எனது தாய்வழிப் பாட்டி திருமதி. சந்திரா அவர்களின் நினைவுக்கு இந்த சிறு பணி சமர்ப்பணம்

Saturday, January 26, 2013

தைப்பூசம்: நீராடிப் பட்டுடுத்தி..

அன்பர்களுக்குத் தைப்பூச வாழ்த்துக்கள்!


(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும்
சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா
மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய்
சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
 

உள்ளம் உருகாதா? - எந்தன்
ஊனும் உருகாதா?
அன்னை அழைத்தால் அருகில் வருவாய்
பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)

தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்
அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்

கந்தா.... அழகுத் திருக்குமரா
செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)

நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும்
அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம்
எந்த நோயும் அணுக விடாதே
என்றும் காக்கும் வைத்திய நாதன்

வேலா.... கருணை மழை முகிலே
பாலா.... பழநி மலை அரசே

(கர்த்தர் மேல பாட வேண்டியவளை, கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு தப்பா நினைக்காதே-ம்மா;
= வீணாப் போனவள் வீணை ஏந்தினாலும், வாரானோ அந்த வயலூரான்!)
---------

திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்


Sunday, January 20, 2013

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 13



கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய
அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!
கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!

"கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லும் முறையையும் அதனால் விளையும் பயன்களையும் இங்கே அடிகளார் சொல்கிறார்.

சஷ்டி திதிக்குரிய கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட விரும்பிய சிறுவனாகிய தேவராயன் என்னும் நான் பாடிய இந்த நூலை, தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நல்ல கருத்துடன் ஆசாரத்துடன் உடல் உறுப்புகளின் அழுக்கு எல்லாம் தீரும்படி நன்கு நீராடி, அன்புடன் ஒரே நினைவாகக் கொண்டு, கந்தர் சஷ்டி கவசம் ஆகிய இந்த தோத்திரத்தை சிந்தை கலங்காமல் தியானிப்பவர்கள், ஒரு நாளுக்கு முப்பத்து ஆறு முறை உருவேற்றி ஓதி செபித்து மிகவும் மகிழ்ந்து திருநீறு அணிய

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசம் உடன் ஒரு நினைவு அதுவாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் வாழும் எல்லா மக்களும் நண்பர்கள் ஆவார்கள். அந்த எட்டுத் திசைகளையும் காக்கும் தெய்வங்களான இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்கள் அருள் புரிவார்கள்!

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசை மன்னர் எண்மர் செயலது அருளுவர்!

எதிரிகள் எல்லோரும் வந்து வணங்குவார்கள். நவகிரகங்களும் மகிழ்ந்து நன்மைகள் அளித்திடுவார்கள். புதிதாக வந்த மன்மதன் என்னும்படி அழகு பெறுவார்கள். எந்த நாளும் ஈரெட்டு பதினாறு வயதுடன் இளமையுடன் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்!
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்!
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்!
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்!

கந்தனின் கையில் இருக்கும் வேலைப் போல் அடியவர்களைக் காக்கும் இந்த கந்தர் சஷ்டி கவசத்தின் ஒரு அடியை பொருளுணர்ந்து படித்தால் உண்மைப் பொருள் விளங்கும். இந்த நூலையும் நூலை ஓதியவர்களையும் கண்டால் பேய்கள் பயந்து ஓடும். இந்த நூல் பொல்லாதவர்களைப் பொடிப்பொடியாக்கும்.

கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி ஆக்கும்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா

(தொடர்ந்து பேசுவார்கள்)

Friday, December 28, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 12




"காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்! ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!
அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!

கந்தனின் திருநாமங்களைப் பாடிய அடிகளார் அந்தத் திருப்பெயர்களைப் பாடியதோடு மட்டும் இல்லாமல் அன்பின் மிகுதியால் ஆடியதையும் சொல்கிறார்.

கருமையான தலைமுடியை உடைய கலைமகள் என் நாவில் நன்றாய் வீற்றிருப்பதால் நான் உன்னைத் தொடர்ந்து பாட முடிகின்றது!

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!

என்னை எப்பொழுதும் விடாமல் அருகிலேயே இருக்கும் என் தந்தையான முருகப்பெருமானை நான் பாடினேன்! அந்தப் பரவசத்தில் ஆடினேன் ஆடினேன் ஆடினேன்!

எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்!

திருவாவினன்குடியில் வாழும் குழந்தை வேலாயுதச் சுவாமியான உனது விபூதியை அன்புடன் நான் நெற்றியில் அணிந்து கொள்ள, பாசவினைகளின் பற்றது நீங்கி, உன் திருவடிகளைப் பெற உனது அருள் கிடைக்கும்!

ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!

வேலாயுதனே! அன்னமும் சொர்ணமும் போன்ற பலவித செல்வங்களும் நீ அன்புடன் என்னைக் காத்து அடியேன் சிறப்புடன் வாழும்படி அருள் புரிவாய்!

அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!"

“மயில் வாகனத்தை உடையவனே வாழ்க வாழ்க! வடிவேலை ஏந்தியவனே வாழ்க வாழ்க! மலையில் வாழும் குருவே வாழ்க வாழ்க! மலைக்குறவர் திருமகளான வள்ளியுடன் நீடூழி வாழ்க வாழ்க! சேவற் கொடி வாழ்க வாழ்க! என் வறுமைகள் எல்லாம் நீங்க நீ வாழ்க வாழ்க!

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!

எத்தனை எத்தனையோ குறைகளையும் பிழைகளையும் அடியேன் செய்திருந்தாலும் என்னைப் பெற்றவளான வள்ளியம்மையும், என்னைப் பெற்றவனும் குருவுமான நீயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! அது உங்கள் கடமையும் ஆகும்! பிள்ளை என்று அன்பாய் என் மேல் பிரியம் வைத்து, மைந்தன் இவன் என்று என் மேலும் உன் அடியவர்கள் மேலும் மனம் மகிழ்ந்து அருளி, நீயே தஞ்சம் என்று உன் அடியவர்கள் தழைத்து வாழ அருள் செய்வாய்!

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Sunday, November 04, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 11



ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண் ஆள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்!
சரஹண பவனே! சைலொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவம் ஒளி பவனே!
அரி திரு மருகா! அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா!
தணிகாசலனே! சங்கரன் புதல்வா!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதி வாழ் பாலகுமாரா!
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலை உறும் செங்கல்வராயா!
சமராபுரி வாழ் சண்முகத்தரசே!

"தீமைகளை விலக்கி அருள வேண்டும் என்று வேண்டியதன் பின் உலகத்து நன்மைகளை எல்லாம் தரும் முருகனின் திருநாமங்களைப் பாடிப் பரவுகிறார் அடிகளார்.

பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் என்ற ஏழு மேல் உலகங்களும், அதலலோகம், சுதலலோகம், விதலலோகம், ரசாதலலோகம், தலாதலலோகம், மஹாதலலோகம், பாதாளலோகம் என்ற ஏழு கீழ் உலகங்களும், அவற்றில் இருக்கும் அனைத்தும் எனக்கு நன்மை செய்யும் உறவினர்கள் ஆகவும், ஆண்களும் பெண்களும் அனைவரும் எனக்காக, உலகங்களை ஆளும் அரசர்களும் மகிழ்ந்து எனக்கு உறவாகவும் அருளுகின்ற உன் திருநாமங்களால் உன்னைத் துதிக்க அருள் செய்தாய்.

ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண் ஆள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்!

சரவணப் பொய்கையில் உதித்தவனே சரஹண பவனே!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போற்றும்படி அனைத்து மலைகளுக்கும் ஒளியும் புகழும் தருபவனே! சைல ஒளி பவனே!

தங்கக்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை என்னும் முப்புரங்களை வைத்துக் கொண்டு உலக மக்களுக்குத் துன்பத்தைத் தந்த திரிபுரர்களை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! திரிபுர பவனே!

எங்கும் எப்போதும் விளங்குகின்ற ஒளியை உடையவனே! திகழ் ஒளி பவனே!

பரிபுரம் என்னும் காலணியை அணிந்து விளங்குபவனே! பரிபுர பவனே!

பிறப்பு இறப்பு என்னும் பவச் சுழலிலிருந்து என்னை விடுவித்து பவத்தை ஒளிப்பவனே! பவம் ஒளி பவனே!

சரஹண பவனே! சைலொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவம் ஒளி பவனே!

திருமால் திருமகள் இருவருக்கும் மருகனே! தேவர்களின் தலைநகராகிய அமராபதியை சூரனின் கொடுமையிலிருந்து காத்துத், தேவர்களைச் சூரனின் கடுஞ்சிறையிலிருந்து விடுவித்தவனே!

கந்தனே! அடியவர்களின் மனக்குகையில் இருக்கும் குகனே! கதிரவனைப் போல் ஒளிக் கொண்ட வேலவனே! கார்த்திகைப் பெண்களின் திருமகனே! கடம்ப மாலை அணிந்தவனே! கடம்பனையும் இடும்பனையும் அழித்த இனிய வேல் முருகா!

அரி திரு மருகா! அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா!

திருத்தணிகைமலையில் இருப்பவனே! சங்கரனின் திருமகனே! கதிர்காமத்தில் உறைகின்ற கதிர்வேல் முருகா! பழநிமலையில் வாழ்கின்ற பாலகுமாரா! திருவாவினன்குடியில் வாழும் அழகிய குழந்தைவேலாயுதா! திருக்காளத்தியில் வாழும் செங்கல்வராயா! சமராபுரியெனும் திருப்போரூரில் வாழும் ஆறுமுக அரசே!

தணிகாசலனே! சங்கரன் புதல்வா!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதி வாழ் பாலகுமாரா!
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலை உறும் செங்கல்வராயா!
சமராபுரி வாழ் சண்முகத்தரசே!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Sunday, October 28, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 10

"புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்தோட!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!
ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

“இந்தப் பகுதியில் கொடிய விலங்குகளிடமிருந்தும், விஷப் பூச்சிகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் சுவாமிகள்.

என்னைத் தாக்க வரும் புலிகளும், நரிகளும், சிறிய நரிகளும், நாய்களும், எலிகளும், கரடிகளும் என்னைக் கண்டதும் உன் அருளால் என்னைத் தாக்காமல் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அவை ஓட வேண்டும்!

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்து ஓட!

விஷ ஜந்துகளான தேள்களும் பாம்புகளும் செய்யான் எனப்படும் பெரும்பூரான்களும், சிறுபூரான்களும், கொடிய விஷங்களையுடைய பற்களால் கடித்து உயர் அங்கங்களான தலை, மார்பு போன்ற அங்கங்களில் விஷம் ஏறியிருந்தாலும் அவை எளிதுடன் இறங்க நீ அருள வேண்டும்!

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!

ஆளை உருத் தெரியாமல் குலைக்கும் குஷ்டம் முதலிய பெரு நோய்களும் (ஒளிப்பும்), சுளுக்கு முதலான சிறு நோய்களும், ஒற்றைத் தலைவலியான ஒரு தலை நோயும், வாயு தொடர்பான வாத நோய்களும், குளிர் நோயான சயித்தியமும், கை கால்கள் இழுக்கும் வலிப்பு நோயும், பித்தத்தால் உண்டாகும் மனநோய் முதலியவையும், வயிற்று வலியான சூலை நோயும், எலும்பை உருக்கும் க்ஷய நோயும், குன்ம நோயும், உடற்சோர்வு என்னும் சொக்குநோயும், அரிக்கும் சிரங்கும், கை கால் குடைச்சலும், சிலந்தி நோயும், குடலில் வரும் சிலந்தி நோயும், விலாப்புறங்களில் வரும் பக்கப்பிளவையும், தொடையில் படரும் வாழையும், கடுவன் படுவன் முதலிய நோய்களும், கை கால்களில் வரும் சிலந்தியும், பல் குத்து நோயும், பல்லில் வரும் அரணையும், இடுப்பில் வரும் பெரிய அரையாப்பு என்னும் கட்டிகளும், எல்லாப் பிணிகளும் என்னைக் கண்டால் நில்லாது ஓடும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்!

ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Sunday, October 21, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 9



ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!

"இந்தப் பகுதியில் மந்திரதந்திரங்களினால் கேடு உண்டாகாத வண்ணம் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் தேவராய சுவாமிகள்.

ஒருவரை அழிக்க நினைத்து அவரைப் போல் மாவினாலும் மரத்தினாலும் பாவை என்னும் சிறு உருவங்களைச் செய்து அவற்றில் மந்திரத்தை உருவேற்றி அவற்றை யானைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்திலும் புற்றுகள் நிறைந்திருக்கும் இடத்திலும் புதைத்து வைப்பார்கள். யானையின் காலடியில் மிதிபட்டும் புற்றுகளில் இருக்கும் கரையான்களால் உண்ணப்பட்டும் அந்த பதுமைகள் மற்றவர்களால் கண்டெடுக்கப்பட்டு மாற்று மந்திரம் செய்யப்படும் முன்னர் உருக்குலையும்; அப்படி நேர்ந்தால் யாரை அழிக்க நினைத்து அப்பாவைகளைப் புதைத்து வைத்தார்களோ அவர்களின் அழிவு உறுதியாகும் என்பது சூனியம் வைப்பவர்களின் நம்பிக்கை.

அப்படி யானை அடியினில் வைக்கப்பட்ட அரும்பாவைகளும்

ஆனை அடியினில் அரும்பாவைகளும்

காட்டுப்பூனையின் முடி, தலைச்சன் பிள்ளைகளின் எலும்பு, நகம், தலைமுடி, நீண்ட முடியுடன் கூடிய மண்டை போன்றவற்றுடன் பாவைகளும் பல கலசங்களும் மந்திர உருவேற்றப்பட்டு ஒருவரின் அழிவை விரும்பி அவரது வீட்டில் புதைத்து வைக்கப்படும். அப்படி வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வஞ்சனையும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியம் என்பது ஒருவகை சூனிய மந்திரச் சாத்திரம். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட மந்திர தந்திரங்கள் ஒட்டியச் செருக்குகள். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட பாவைகள் ஒட்டியப் பாவைகள். அந்த ஒட்டியச் செருக்கும், ஒட்டியப் பாவையும், கூடவே புதைக்கப்பட்ட காசும் பணமும், பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் குருதியில் கலந்த சோறும், அந்த ஒட்டியச் சாத்திரம் கூறும் மந்திர மையும், மனம் கலங்கித் தனி வழியே போகும்படி செய்யும் மந்திரமும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்

உன் அடிமையான என்னைக் கண்டவுடனே நடுங்கி அழிந்து போகும் படி நீ அருள் செய்ய வேண்டும்!

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!

அடுத்த பகுதி பாடு"

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!
காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டலறி மதி கெட்டு ஓட!
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!

"எதிரிகளும் கூடவே இருந்து குழி பறிக்கும் வஞ்சகர்களும் உயிரைப் பறிக்க வரும் எம தூதர்களும் அழிந்து போகும்படி அருள் செய்ய வேண்டுகிறார்.

எதிரிகளும் வஞ்சகர்களும் மனம் திருந்தி வந்து என்னை வணங்கிட வேண்டும்!

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!

காலனின் தூதர்களான எம தூதர்கள் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்!

காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!

அவர்கள் என்னைக் கண்டால் அஞ்சி நடுங்க வேண்டும்! பயந்து புரண்டு ஓட வேண்டும்! வாய் விட்டு அலறி புத்தி கெட்டு ஓட வேண்டும்!

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டு அலறி மதி கெட்டு ஓட!

மனம் திருந்தாத பகைவர்களையும் வஞ்சகரகளையும் இந்த காலதூதர்கள் கொண்டு வரும் பாசக் கயிற்றால் படியினில் முட்டும்படி கட்ட வேண்டும்! அவர்கள் உடல் உறுப்புகள் எல்லாம் கதறிடக் கட்ட வேண்டும்! அவர்கள் கால் கைகள் எல்லாம் முறியும் படி கட்டி உருட்ட வேண்டும்! அவர்கள் விழிகள் பிதுங்கும்படி முட்ட வேண்டும்! அவர்கள் செதில் செதிலாக உதிர்ந்து போகும் படி அவர்களை நீ செகுக்க வேண்டும்!

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!

அழகனே! சூரனின் பகைவனான அழகனே! கூர்மையான உன் அழகான வேலால் அவர்களைக் குத்த வேண்டும்! பகலவனின் எரிக்கும் தணல் போல நீ அவர்களைப் பற்றி எரிக்க வேண்டும்! அவர்கள் வெருண்டு ஓடும் படி உன் வேலை விட வேண்டும்!

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!

அடுத்த பகுதியை பாடு நண்பா!"

(தொடர்ந்து பேசுவார்கள்)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP