முருகனருள் 149: உனக்கும் எனக்கும் கல்யாணமா!!!
முருகனருள் வலைப்பூ 150-ஐ தொடும் நல்வேளையிலே...
மங்களகரமாக இங்கு ஒரு திருமணம்!
அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!
* பேரழகுப் பெட்டகமான மயிலார், முருக மா பிள்ளையை, முருக மாப்பிள்ளையாக்கி, பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2041, பங்குனித் திங்கள் பதினைந்தாம் நாள் (29-Mar-2010), உத்திர நட்சத்திரம் கூடிய பங்குனி உத்திர நன்னாளிலே...
* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, செந்தில் மா நகரும் சிறப்புடனே தாம் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,
* எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய்,
* காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,
* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்...
* சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு விண்ணப்பம்!

ஆகா! யாருப்பா தம்பதிகள்? யாருக்கும் யாருக்கும் கல்யாணம்? :)
வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து-ன்னு, தோழி கோதையின் கனவு எல்லாருக்கும் தெரியும்! ஆனால்...ஆனால்...இதோ....பின்வரும் பாட்டை எங்காச்சும் படிச்சிருக்கீங்களா-ன்னு பாருங்க? :)
இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்,
நன்மெட்டி நாண் பூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!
இது போல ஒரு பத்து பாசுரம் இருக்கு! அதை முருகனருளான மாதவிப் பந்தலில் அப்பறமா இடுகிறேன்!
இப்போ கல்யாணப் பந்தல்-ல கூடுவோம்!
அப்பறமா மாதவிப் பந்தல்-ல கூடுவோம்! :)

இன்னும் சில மணி நேரத்தில் முருகனருள்-150 உதிக்கப் போகிறது!
இப்போது சிற்றஞ் சிறுகாலே!
உலகம் உவப்ப பலர் புகழ் ஞாயிறு.....பதிவு கண்டாங்கு!
முருகனருள்-150, கவிநயா அக்காவின் காவடிச் சிந்து என்று முன்னமே முடிவாகி விட்டது!
பங்குனி உத்திரம் அன்னிக்கி இட, ஷைலஜா அக்காவும் ஒரு பாட்டு எழுதி அனுப்பி இருந்தார்! சபாஷ் சரியான போட்டி! :)
பங்குனி உத்திரம் = முருகனுக்குத் திருமண நாள் ஆகையாலே...
கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டு,
ஷை-அக்காவின் கவிதையை, கல்யாணக் கவிதையா, மாற்றி விட்டேன்!
அக்காவும், பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிச்சிட்டாங்க! அப்படித் தானே-க்கா? :)
சில வரிகளை மட்டுமே கல்யாணத்துக்கு ஒட்டி வருவது போல் மாற்றம் செஞ்சேன்!
அக்காவின் வைர வரிகளில் எல்லாம் கை வைக்கவில்லை!
மாங்கல்யத் தங்க வரிகளில் மட்டுமே தங்க வைத்தேன்:)
* அப்போ, கண்ணன் பாட்டு-99: அடியேன் எழுதிய கவிதையை, ஷைலஜா அக்கா பாடித் தந்தாங்க!
* இப்போ, முருகனருள்-149: அக்கா எழுதிய கவிதையை, அடியேன் பாடித் தருகிறேன்!
நன்றிக்...கடன் பல தீர்த்து.........கந்தன் என்னை அழைத்துக் கொள்ளட்டும்!
இதோ...பாடலும்...இசையும்...சிறப்புப் பதிவுமாய்...

முருகனருள்-149!
[தடை நீங்கி....திருமண உறுதியும் அறிவிப்பும்]
திருச்செந்தூர் என்ன வெகு தூரமா? - உன்
திருவடி அன்றி வேறு பரிகாரமா?
ஒருச்செந்தூர் அங்கே நம் மனத்தோரமா
உனக்கும் எனக்கும் திருக் கல்யாணமா!!!
[திருமணம் - திருமாங்கல்யம் - அம்மி மிதித்தல்]
வாள்கொண்ட கண்ணுக்கு மை தீட்டினேன் - உன்னை
வரவேற்கச் செவ்வாழைக் கை நீட்டினேன்!
ஆட்கொண்டு மாங்கல்யம் தனைப் பூட்டினாய் - என்னை
கைப்பற்றிக் கால்பற்றிச் சுகம் கூட்டினாய்!

[முதல் இரவு - பாலும் பழமும்]
பால்தந்து உனக்கென்னைத் தேர் ஆக்கினேன்!
பழம்தந்துன் பழந்தோல்வி நேர் ஆக்கினேன்!
தோள்தந்து துயில்காண விரைந்து ஓடினேன்!
தமிழ்தந்துன் திருமார்பில் கரைந்து ஆடினேன்!
[எந்நாளும்...]
காதல்கொண்டார் சொல்லும் சொல் என்னவோ? - என்
வேதமும் நீ அன்றி வேறென்னவோ?
சாதல் வந்தால் கூட கவலை இல்லை! - என்
சங்கீதம் நீயன்றி வேறு இல்லை!!!
முருகா! முருகா! முருகா! முருகா!
உன் கையை நீநீநீட்டி.......என் கையை ஈஈஈட்டிக் கொள்!
தாவிப் படரக் கொழு கொம்பு இல்லை!
கொழு கொம்பு வேண்டேன்! கந்து தனையே வேண்டினேன்!
கந்தா...கை நீநீநீட்டி கையைப் பற்றிக் கொள்!
தனிக் கொடியை, தணி-கைக் கொடியைச் சுற்றிக் கொள்!

உன் கையும் உண்டு, எனக்கொரு மெய்த் துணையே! முருகாஆ!

கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தல் பகர்ந்து என்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் அவனிடம் சென்று சேர்மினே!


