Monday, May 27, 2024

ஈழத்து வேல்! வெல் எனும் வேல்!

முருகனருள் அன்பர்களுக்கு ஆண்டுதோறுமான வணக்கம்!

இன்று தோழன் ஜி.ரா (எனும்) கோ. இராகவனின் பிறந்தநாள்! (May 27).
வாழ்த்துவோம், முருகனருளில் ஊழ்த்துவோம், ஆழ்த்துவோம்!
மகிழ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா.
உடல் நலனும் உள்ள நலனும் உறவேலோ ரெம்பாவாய்!




வேல் என்பது ஓர் ஆயுதம், போர்க்கருவி.
அதை வைத்துக் கொண்டு யாரேனும் விளையாடுவார்களா?

ஆனால், முருகன் விளையாடுவதாகப் பாடல்கள் உள்ளன.
திருப்புகழ் முதலான பழம் பாடல் மட்டுமல்ல..
சினிமாப் பாடலில் கூட, வேலோடு விளையாடுவதாகவே வருகிறது!
வேலோடு விளையாடும் முருகைய்யா - என் 
வாழ்வோடும் விளையாட வந்தனையா?

’வெல்’ என்பதே... ’வேல்’ என்ற ஆதிநீடல்.
  • ’வெல்’ எனும் வினைச்சொல்லே, 
  • ’வேல்’ எனும் பெயர்ச்சொல் ஆகிறது!

தமிழில் பல பெயர்ச் சொற்களும், வினை புறத்துப் பிறந்தவையே.
தமிழர் பண்பாட்டில், வினையே ஆடவர்க்கு (பெண்டிர்க்கும்) உயிரே!
அப்படி, வினை வழியாகவே தோன்றிய அன்றாடப் பெயர்கள் பலப்பல.
  • உண்பதால் உணவு (உண்)
  • வடுப்பதால் வடை (வடு)
  • பொரிப்பதால் பொரியல் (பொரி)
  • வறுப்பதால் வறுவல் (வறு)
  • கூட்டுவதால் கூட்டு (கூட்டு)
  • மசிப்பதால் மசியல் (மசி)
  • தொகைப்பதால் தொகையல் (தொகு)
  • துவைப்பதால் துவையல் (துவை)
இப்படிச் செயல் செய்யும் வினையடிகளை வைத்தே,
தமிழ்ப் பெயருருவாக்கத்தில், 
பல பெயர்கள் உருவாகின, உருவாக்கப்படுகின்றன, உருவாக்கப்படும்.
இவ் வினைகள் தான் தமிழ் இலக்கண அடிப்படையான வினையடிகள்.


வேலும் வினையடியும்:

சில வினையடிகளை (வினை+அடி) எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். சான்று: படிப்பு (படி+ப்+பு), படிப்பதால் படிப்பு.
ஆனால் சில வினையடிகளைக் கண்டுபிடிப்பது கடினம். 
சான்று: விற்றல் (வில்+தல்), கற்றல் (கல்+தல்).

ஏனெனில், இன்று யாரும் ’வில்’ என்ற அடிப்படை வினையால் பேசுவதில்லை;
* ’வாங்கு’ என்று சொல்கிறோம், 
* ஆனால் ’வில்’ என்று சொல்வது அரிதிலும் அரிது. 
’வித்துரு’ என்று பேச்சு நடையாகவோ, 
’விற்பனை செய்’ என்று தொழிற்பெயராகவோ தான் பேசுகிறோம்.
இதனால், ’வில்’ என்ற அடிப்படை வினையடியே மறந்து போய் விட்டது.



போலவே, ’கல்’ என்ற அடிப்படை வினையும்.
’இளமையில் கல்’ என்றால் ஓரளவு புரிந்து கொள்வார்கள்.
ஆனால் ’கணிதம் கல்’, ’தமிழ் கல்’ என்று யாரும் பேசுவதில்லை.
’கணிதம் படி’, ’தமிழ் படி’ என்று பேச்சு வழக்கு மாறி விட்டது.

அதே போல் தான், ’வெல்’ என்ற வினையடியும்.
இன்று ’வெற்றி பெறுக’, ’வென்று வருக’ என்றெல்லாம் சொல்கிறோம்.
ஒரு சிலர் ‘வெல்க’ என்று வியங்கோள் வினையாகப் பேசுகிறார்கள்.
ஆனால் ’வெல்’ என்று நேரடியாக, ஏவல் வினையாகப் பேசுவதில்லை.
இந்த ‘வெல்’ என்ற வினை தான், ஆதி நீண்டு, ‘வேல்’ என்று பெயர் ஆகிறது.

வெற்றிவேல் என்பது ஒரு வகை மிகைச்சொல்/இரட்டைச் சொல். 
வேல் என்றாலே வெற்றி தான். 
வேலுக்கு முன் தனியாக வெற்றி என்பதே தேவையில்லை.

இப்படி வெற்றியைக் குறிக்கும் ஒன்றோடு விளையாடுதல்,
நம் ஆதிகுடி முன்னோர்களான, நிலத் தலைவர்கட்கு இயல்பு தானே!
குறிஞ்சிக் குன்றக் குறவனான முருகனின் கையாயுதம் வேல்.
வீர விளையாட்டு, வெற்றி விளையாட்டு குறிப்பதே வெல் எனும் வேல்.

முருகனுக்கும் மூத்தது வேல்!
முருகனுக்கும் முன்பே வழிபாடு பெற்றது வேல்!


ஒரு காலத்தில், சிலை வழிபாடு தோன்றியிராத போது..
சங்கத் தமிழின் ஆதிகுடி நடுகல் வழிபாட்டில்
வேல் தான் முதன்மை பெற்று, வழிபாட்டைப் பெற்றது.

நிலத்தின் தலைவர்களான, ஆதிகுடி முன்னோர்கள் நினைவாக
நடுகல் எழுப்பிய போது, சுற்றிலும் வேல்படைகளும் எழுப்பப்பட்டன.
முன்னோன் பயன்படுத்திய வேல், பூசனைப் பொருள் ஆகிற்று.
”நீத்த கணவன் தீர்த்த வேலின்” என்பது தொல்காப்பிய வரி.

கற்சிலை, உலோகச் சிலை செய்யும் தொழில்நுட்பம் உருவாகாத காலத்தில்
முருகனைக் குறிக்க/வழிபட - நடுகல் & வேலையே பயன்படுத்தினார்கள்.
பின்பு, நடுகல்லில் முருக முன்னோனின் ஓவியம்/உருவம் எழுதப்பட்டது.
அதுவே பின்னாளில் படிப்படியாக, உருவ வழிபாடு எனும் நிலை அடைந்தது.

அப்போது கூட, முருகனுக்கு இயற்கையான மனித உருவம் மட்டுமே.
ஆறு முகம், பன்னிரண்டு கை, பதினெட்டு கண்ணெல்லாம் கிடையாது.

இன்றும் வேல் வழிபாட்டைச் சில தொன்மையான தலங்களில் காணலாம்.
தமிழ்நாட்டை விடவும், ஈழத்தில்.. வேல் வழிபாடு என்பது சற்று அதிகம்!

செல்வச் சந்நிதிக் கருவறை (வேல்வழிபாடு)

அன்னதானக் கந்தன் என்ற மனிதநேயம் மிக்க ஊர் ஒன்று ஈழத்தில் உளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆற்றங்கரைத் தலமான செல்வச் சந்நிதி.
அங்கு, முருகன் உருவ வழிபாடே கிடையாது. வேல் வழிபாடு தான்.


போலவே, இன்றைய பணம் கொழிக்கும் ஈழத்து நல்லூர்க் கோயிலிலும்,
ஆதியில் வேல்வழிபாடு தான் இருந்தது; எளிமை மிக்க ஆதிகுடிப் பூசை.

பின்னாளில் தான் ஆறுமுக நாவலர், சம்ஸ்கிருத ஆச்சாரங்களைச் சேர்த்து,
ஷண்முகம் போன்ற பூநூல் உருவங்களை வடித்து, கோயிலுள் புகுத்தினார்.
விநாயகர், தெய்வயானை/தேவஸேனா போன்ற யாவும் பிற்சேர்க்கையே.

எனினும் நல்லூர் முருகனின் ஆதிக் கருவறையில், வேல் மட்டுமே மூலநிலை!

இன்று ஆரியம்/சம்ஸ்கிருதமாய்ப் பலதும் உள்நுழைந்து விட்டாலும் கூட,
நல்லூர் உலாவின் ஒரு நாளில் மட்டும்,
வேலை வீதி வெளிக் கொண்டு வருவர்.
அப்போது, வேலின் இரு பக்கமும் சிலை உருவங்களை வைத்தாலும் கூட,
நடுவில் முருகன் மட்டும், உருவம் இல்லாமல், வேல் வடிவில் காணலாம்!

நல்லூர்க் கருவறை (மூலத்தானம்)
நல்லூர்க் கந்த வேல் - தமிழ் வழி
நல்லூர் ஷண்முகன் - ஆரிய வழி

அதே போல் மலேசியப் பத்துமலையிலும், வேல் வழிபாடு தான் முதலில்.
இன்று தான், சம்ஸ்கிருத/பிராமணீய மயமாக மாறிப் போய் விட்டது.
தமிழ் வழிபாடு நீங்கி, சம்ஸ்கிருத பூஜைகள் பெருகிப் போய் விட்டன.
தொடர்பே இன்றி, அனுமன்/ராமன் சிலைகள் பத்துமலையில் வந்து விட்டன.

தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் என்னும் தலமும்
ஆதிகுடி நடுகல் மற்றும் வேல் வழிபாடு தான்.
உருவமே சரியாகத் தெரியாமல், நடுகல் அடையாளங்கள் தான் இருக்கும்.
ஆனால், அலங்காரம் செய்து, உருவம் போல் ’ஜோடி’த்து இருப்பர்.
அடுத்த முறை திருப்போரூர் செல்லும் போது, உற்றுக் கவனித்துப் பாருங்கள்.


இப்படித், தொன்மம் மிக்க வேல் வழிபாடு, இன்று அருகி விட்டது.
மக்களும் தமிழ்த் தொன்மம் அறியாததால், 
அலங்கார ஆடம்பர ஆரிய ஜோடனைகளில் மயங்கிப் போய் நிற்கிறார்கள்.
தமிழ் இறையியலில், சம்ஸ்கிருத/ஆரியம் அதீதமாய்க் கலந்து விட்டது.
இது போல் பதிவுகள் வாயிலாகத் தான், சற்றேனும் உண்மை சொல்ல முடியும்.
மதம் கடந்து, முருகனைத் தமிழாய்க் காண்போம்!


குறிஞ்சிக் குறவன் முருகனைப் போலவே,
முல்லை ஆயன் திருமாலுக்கும் வேல் உண்டு!

வெட்சி x கரந்தை ஆநிரைப் போரில், வேல் கொண்டு வெல்வதே மாயோன்.
இது முல்லைநில வாழ்வியல். குறிஞ்சி/முல்லை - இரண்டுக்குமே வேலுண்டு!

“வெட்சி தானே குறிஞ்சியது புறனே” என்பார் தொல்காப்பியர்.
”கானத்து நீள்வேல் மறவர், வெட்சி” என்பது புறப்பொருள் வெண்பா மாலை.
”கூர் வேல் கொடுந்தொழிலன்” என்றும்
”வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்றும்
அதான் ஆண்டாளும், ஆயன் திருமால் கையில் வேல் தந்து பாடுகிறாள்.

ஆதிகுடித் தமிழ் மக்களின் புறத்திணை அடையாளம், வேல்!
வெல் என்பதே வேல்; வெற்றியைக் குறிக்க வந்ததே வேல்.
வீர விளையாட்டு, வெற்றி விளையாட்டு குறிப்பதே தமிழினத்தின் வேல்.

அந்த வெற்றியைப் பேரிலேயே வைத்துள்ள வெல்/வேல்/வேலவன், முருகன்.
அவன் வேலோடு விளையாடுவதில் வியப்பில்லை தானே!
வாருங்கள், பிறந்தநாள் பாடலுக்குள் சொல்வோம்.. ”வேலோடு விளையாடும்”.


குரல்: பி. சுசீலா
வரிகள்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: வேதா
படம்: சித்ராங்கி

பாடல், ஆபேரி ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளது.
வாராய் நீ வாராய் என்ற பழைய பாடலும்,
எங்கேயோ பார்த்த மயக்கம் என்ற தனுஷ்-நயந்தரா புதிய பாடலும்
இதே ராகமான ஆபேரியில் தான் அமைந்துள்ளன.

மன்னனின் தம்பியான இளவரசனை 
ஒரு நேர்ச்சியில் (விபத்தில்) இருந்து காப்பாற்றும் இளம்பெண், 
அவன் இளவரசன் என்றே அறியாமல், 
அவன் மீது காதல் கொண்டு கனிவு காட்ட, 
கனிவை மட்டும் பெற்றுக் கொண்டு, 
அவன் அவளை முதலிரவுக்கு முன்பே நீங்கி விடுகிறான். 

வெறுமையில் வாடும் அவள், 
முருகனிடம் முறையிட்டுக் கொண்டு, 
சிக்கல்கள் தீர்ந்து, அவனை மீள அடைவதே இக் கதை.

AVM ராஜன் & புஷ்பலதா நடிப்பில் இணையர்கள், 
வாழ்விலும் இணைந்து வாழ்விணையர் ஆனார்கள். 
அப்படி ஆன பின் நடித்த படம் இது.



வேலோடு விளையாடும் முருகைய்யா - என் 
வாழ்வோடும் விளையாட வந்தனையா?

குறவள்ளி மணமாலை தனைச் சூடினாய் - தேவ 
குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய் - என்ன 
குறைகண்டு எனக்கிந்த நிலை காட்டினாய்? - நீ 
குடிகொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய்?

(வேலோடு விளையாடும் முருகையா)

உறவு தந்த நீ,
பிரிவு தந்து மனம்
உருகச் செய்தல் சரியா? - இரு

உயிர் கலந்த பின், 
துணை இழந்த பெண்
உலகில் வாழ்தல் முறையா? - நான்

மணந்த நாதனை
அடைந்து இல்லறம்
மகிழும் காலம் வருமா? - வாழ்வு 
மலரும் நாளும் வருமா? வருமா?

முருகா!


வேலோடு விளையாடும் தமிழ் ஆதிகுடி முருகன்
மகிழும் காலத்தை மனமகிழ்ந்து அருளட்டும்.
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி, இப்பதிவு அமைவோம்.
வேலோடு விளையாடும் முருகைய்யன் வாழியே!

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP