Showing posts with label மருதமலை. Show all posts
Showing posts with label மருதமலை. Show all posts

Saturday, November 06, 2010

கந்த சஷ்டி 2: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

இரண்டாம் நாள் சஷ்டிப் பதிவான இன்று, ஒரு சூப்பர் ஹிட் சினிமாப் பாடலைப் பார்ப்போமா? சினிமாவில்-திருப்புகழ் என்பதை நாளை பார்ப்போம்! ஓக்கே-வா? :)

மருதமலை முருகன்

நேற்று சுவாமி மலை முருகன்! இன்று மருத மலை முருகன்!
அது நான்காம் படைவீடு! இது ஏழாம் படைவீடு!
படைவீடுகள் மொத்தமே ஆறு தான் என்றாலும் தேவர் ஃபிலிம்ஸார், பாச மிகுதியால் தாங்களாகவே அப்படிச் சொல்லிக் கொள்வது! :)
ஐந்தாம் படைவீடான குன்று தோறாடல் -அதிலேயே மருதமலையும் வந்து விடும்!


கொங்கு மணித் திருநாட்டின் மருத மலையானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளது! கோவைக்குச் சுமார் 15 கிமீ மேற்காக, ஜிலுஜிலு என்று இருக்கும் மலை! கச்சியப்பரின் பேரூர் புராணத்திலும் இந்த மலை சொல்லப்படும்! பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து வழிபட்ட மலை!

சரீ...அது என்ன "மருத" மலை?
மலை-ன்னாலே "குறிஞ்சி" தானே? எப்படி "மருதம்" ஆகும்?

மருத மரங்கள் அதிகம் உள்ள மலையாதலால் மருத மலை! மருத மரம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! வாசனை மிக்கது!
Myrtle என்று ஆங்கிலத்திலும், அர்ஜூன மரம் என்று வடமொழியிலும் சொல்லப்படும்! மல்லிகா-அர்ஜூனம் என்று ஆந்திரத்தில் உள்ள சிவபெருமான் கோயிலும் இதே மருத மரங்கள் நிறைந்த வனம் தான்!
மருத மரம்

நீட்டு நீட்டான இலை! வெண்மையும் ஊதாவும் கலந்த அழகிய மருதப் பூக்கள்! கொத்துக் கொத்தாய்ப் பூக்கும்!
எங்கள் கிராமத்திலும் இந்த மரத்தைப் பார்த்து இருக்கேன்! தீபாவளி நோன்புக்கு - (கேதார கெளரி நோன்பு) இதைப் பறித்துத் தான் அம்மா கலசம் நிறுத்திப் பூசை செய்வார்கள்! நாம மருதமலைக்கு வருவோம்...

பச்சைப் பசேல் என்ற மருதமலையின் அழகே அழகு! திருமலை-திருப்பதி போல் அவ்வளவு பெரிய மலை இல்லை, சிறு குன்று தான்! Approx 800 steps! எனவே நடந்தே செல்லலாம்! நடந்து சென்றால் தான் பசுமையின் குளிர்ச்சி தென்படும்!

தான்தோன்றி விநாயகரை வணங்கிப் படியேறும் முன்னால், மூன்று விதமான கற்களைக் காணலாம்! ஆலய நகைகளைத் திருடிய கள்வர்களை, குதிரையின் மேல் சென்று துரத்தி, காலத்துக்கும் கல்லாய்ப் போகுமாறு முருகன் சபித்ததாக ஒரு கதை உண்டு! :) என் முருகனுக்குச் சபிக்கத் தெரியுமா என்ன? :)

திருடர்களை அவன் சபித்தான் என்றால், என்னை ஆயுசுக்கும் திருடிக் கொண்டானே! அவனை நான் சபிக்கட்டுமா? :)
"டேய் பாவி...என் அசடா, கசடா, கந்தவேளே...உன் தன்னோடு உறவேல் எனக்கு! அந்த உறவு ஒழிக்க ஒழியாது! என்னை இப்படி ஆழித் துரும்பெனவே அலைகழிக்கிறாயே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு எனக்கு ஆயிரம் பல்லாண்டு! நீயும்-நானுமாய் நமக்குப் பல்லாண்டு பல்லாண்டு! :)"


பாம்பாட்டிச் சித்தரால் பிரபலம் அடைந்த மலை மருதமலை!

பாம்பு பிடிப்பதை வழக்கமாகக் கொண்டவர் பாம்பாட்டிச் சித்தர்; "வெறும் பாம்பைப் பிடிக்கிறாயே, உடல் பாம்பை (குண்டலினி) பிடித்து அடக்கப் பார்" என்று சட்டை முனி இவருக்கு யோக நெறியைக் காட்டினார்!

ஒரு நாள், தாகம் தாளாமல் இங்குள்ள மருத மருத்தின் கீழே வீழ்ந்த போது, அதிலிருந்து ஊற்றாய்ப் பாய்ந்து தாகம் தணிவித்தான் தணிகையான்!
அன்றிலிருந்து இங்கேயே தங்கி, முருகனின் புதிய உருவச் சிலையை உருவாக்கி, பாம்புகளோடு தானும் ஆடி, அவற்றையும் ஆட்டுவித்து, முருகனை வழிபட்டவர் பாம்பாட்டிச் சித்தர்!

ஆலயம் 12-13ஆம் நூற்றாண்டு! திருமுருகன் பூண்டி ஆலயத்தில், மருதமலைக்கான கல்வெட்டுகளைக் காணலாம்! ஆலயக் கருவறை பெரிது கிடையாது! சிறிய மண்டபம் தான்! ஆனால் அதிலுள்ளவன் பெரியவன்! பெரிய கள்வன்! உள்ளம் கவர் கள்வன்!

பழனி மலையானைப் போலவே கொஞ்சும் தோற்றம்! ஆனால் அவனை விட இவன் இன்னும் உயரம் = ஆறடி! என்னைப் போலவே! :)
பழனிக்கும் மருதமலைக்கும் ஒரே வேறுபாடு = மருதமலையானுக்குத் தலைப்பாகை உண்டு! ஒரு சிறு குடுமியும் உண்டு! பழனியில் வெறும் மொட்டை தான்! :)

கையில் தண்டம் மட்டுமே! வேலை மார்பில் தாங்கி நிறுத்தி உள்ளார்கள்! இன்னொரு கை இடுப்பில்!
பொடி புனை நெற்றி! காந்தக் கண்கள்!
கூரிய நாசி! கொவ்வைச் செவ்வாய்!
பரந்த மார்பு! வளைந்த இடுப்பு!
அதற்கும் கீழே.....
இக பர வளைவு! மணக்கும் கோவணம்! :)
கருவறை முழுக்க என்னவனின் வாசனை தான்! அந்த நீறின் வாசனையில் நிரம்பி...கிறங்கி...ஐயோ முருகாஆஆஆ!!!


பாம்பாட்டிச் சித்தர் செய்த முருக வடிவத்துக்கு முன்னமேயே, வேல் வடிவில் இயற்கையாக முருக வழிபாடு இருந்தது இங்கே!
ஆதி மூலத்தானம் என்று இன்றும் அதைக் காணலாம்! நடுகல் போல் முருக வடிவம் இருக்க, அருகில் என்னைப் போலவே உயரமாக வள்ளி, சற்றே குள்ளமாக தேவானை அம்மை! :)

மருதமலைக்கு பின்புறம் அதே மலையில் இன்னொரு ஆலயம், அனுவாவி முருகன் ஆலயம்! இங்கே பெருமாளும்-அனுமனும் உண்டு!
ஆலய முகப்பு வளைவிலேயே இதைக் காணலாம்! ஆனால் ஏனோ பலர் இங்கே செல்வதில்லை!

மருதமலையின் மறுபுறம் ஏறி இறங்கினால் அனுவாவி! ஆனால் காட்டுப் பாதை! இயற்கை அழகும் மயிலும் யானையும் கொஞ்சும்!
கோவையில் இருந்து நேரடியாகவும் செல்லலாம்! அதுவே வசதியானதும் கூட!

மருதமலையைக் காட்டிலும் அனுவாவி மலை நடுவாந்திர அழகு!
பச்சை மா மலை போல் மேனியின் நடுவே, வெள்ளை ஆலயம் பளிச்-சென்று தெரியும்! வெளிப் பூச்சுக்கள் இல்லாத இயற்கை!
அடுத்த முறை சென்றால் மிஸ் பண்ணாதீங்க! மேலே படத்தைப் பாருங்க! அந்த அழகுக்கு, உங்கள் கால் உங்களைத் தானே இழுத்துச் செல்லும்!


இன்றைய பாட்டுக்கு வருவோமா?
= உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி! தேவர் ஃபிலிம்ஸ்! குன்னக்குடி இசையில்...
மருதமலை முருகனைச் சிறப்பித்து என்றே வந்த படம்! சீர்காழி-குன்னக்குடி இருவருமே படத்தில் தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் தோன்றி, மருதமலை முருகனைப் பற்றிப் பேசுமாறு ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! முருக வெறியர் என்று கூடச் சொல்லலாம்! :)
நல்ல குரல் வளம் அவருக்கு! அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, அவருக்குத் தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க, வெறும் பாடகர் AVM ராஜன், பெரும் பாடகர் ஆகி விடுகிறார்!

ஒன்று வந்தால் இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்! ஆனால் முருக அன்பர்கள்??
AVM ராஜன் முருகனையும் எளிமையையும் விடவே இல்லை! பழசை மறக்கவில்லை! ஆனால் அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்!

முன்பு கோவிலின் வெளியே பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி, புதுக்காரி ஆகி விட்டாள்! சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி ஆகி விட்டாள்! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!
முருகன் Vs ஆசை என்று வந்து விட்டால், முருகனா முக்கியம்? தத்தம் ஆசை தானே முக்கியம்?? :)

முருகனையே எண்ணிக் கைப் பற்றியவனுக்கும், பண முதலின் எண்ணிக்கை பற்றுபவளுக்கும் உறவு முறிந்ததா?
முருகன் முறிப்பானா என்ன? அவன் மனது வைத்தால்....நடவாதனவும் நடந்திடாதா என்ன? இசையாதனவும் இசைந்திடாதா என்ன? பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
என்று அத்தனையும் TMS-இன் கணீர் சொத்து! சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை-என்று பாடி இருப்பாங்க! சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்! முத்துத் திருப்புகழைச் செப்பி விட்ட அருணகிரி முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை-என்று கம்பீரமாக இழுப்பார்!

இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்...உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என்ன....நம்மையெல்லாம் "அதிகாரம்" செய்பவனா முருகன்? அல்லவே!
இது திருக்குறள் அதிகாரம்-சிலப்பதிகாரம் போல, அந்த அதிகாரம்! ஒவ்வொன்றும் நமக்காக முருகன் பார்த்துப் பார்த்துச் செய்யும் அதி-காரம் இல்லா அதிகாரம்!
அவனே எனக்குப் பதியான பதிகாரம்! கதிகாரம்! விதிகாரம்! என் உடலுக்கும் உள்ளத்துக்குமான அதிகாரம்!


பாடலை இங்கே கேட்டுக் கொண்டே படியுங்கள்!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே! - உந்தன்
வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி - அவன்
மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - உன்
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!


படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP