ஈழம் - கதிர்காமம் - ரமணி அம்மாள்!
ஈழத்தில் இன்று பலவும் முடிந்து விட்ட கோலம்! ஆனால் இன்னும் முடியாது முகாம்களில் தவிக்கின்ற கோலமும் கூட!
* முன்னது...கடந்த காலம் = உயிர் கடந்த காலம்!
* பின்னது...நிகழ் காலம் = உயிர் நிகழும் காலம்!
இருக்கும் இந்த உயிர்களையும், கடந்த காலமாய் ஆக்கி விடாது...
ஐ.நா-வின் அண்மைய ஈழ முயற்சிகள் பலன் அளிக்க வேணுமாய்...
பரமனையும் முருகனையுமே வேண்டிடுவோம்!
முருகனுக்கு ஆறு வீடுகள் இருப்பது போல், முகாம்களில் இருப்பவர்களுக்கும் வீடுகள் உள்ளன அல்லவா?
அவர்கள் எல்லாம், தம் ஒரு வீடு திரும்ப, ஆறு வீடு முருகன், மனம் வைத்தே ஆக வேண்டும்! மனம் வைத்தே ஆக வேண்டும்!!
வீடேறி வந்து நின்று, வேண்டியவர்களால் விரட்டப்பட்டால் அல்லவோ, வீட்டின் அருமை தெரியும்! அந்த அருமையைத் தெரிந்து கொள் என் முருகா!
இன்று முருகனருள் வலைப்பூவில்...
ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்=ஈழத்து முருகன்!
ரமணி அம்மாள் பற்றியும், அவர் முருகன் பாடல்கள் பலவும் அவ்வப்போது முருகனருள் வலைப்பூவில் இட்டு வந்துள்ளேன்!
* அம்மனுக்கு ஒரு பெண் பாடகர் = எல்.ஆர்.ஈஸ்வரி என்றால்,
* முருகனுக்கு ஒரு பெண் பாடகர் = ரமணி அம்மாள்!
மரபு இசை நுணுக்கம் உள்ளவர்! அதே சமயம் மக்களோடு மக்களாக எளிமையாக, கும்மாளமாகப் பாடக் கூடியவர்! கே.பி.சுந்தராம்பாள் போலவே வெங்கலக் குரல் அம்மாளுக்கு! கூடவே நம்மையும் பாட வைப்பார்!
திரைப்படங்களிலும் எம்.எஸ்.வி/குன்னக்குடி இசையில் பாடியுள்ளார்!
வேல் முருகா வேல் முருகா...வேல்ல்ல்ல்ல்ல்-ன்னு இவர் உச்ச கட்டத்தில் பாடும் போது, மைக் செட்டே அதிரும்! குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாட்டைத் தெரியாதவங்க இருக்க முடியாது! அவ்வளவு சிறப்பு!
ரமணி அம்மாள் பாடிய ஈழம்-கதிர்காமப் பாடல் தான் இன்றைய பதிவு!
கதிர்காமம், ஈழத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ளது! எப்படி தமிழ்நாட்டில் திருச்செந்தூர் உள்ளதோ, அதே போல! ஆனால் கடலோரத்தில் இல்லை! கடலுக்குச் சற்று அருகே!
தமிழ்ப் பகுதிகளின் தென் கிழக்கு மாகாணத்தின் வால் பகுதியில் கடைசியாக ஒட்டிக் கொண்டு இருக்கும் ஊர்! இதைச் சுற்றிலும் சிங்களப் பகுதிகள் தான் அதிகம்!
முருகன் என்று நாம் பரவலாகச் சொன்னாலும், மொத்தம் மூன்று மதங்கள் சங்கமிக்கும் "புதிரான-புனிதமான" இடம் தான் இந்தக் கதிர்காமம்!
* தமிழ் = முருகன்!
* பெளத்தம் = "கதிர"தேவோ என்னும் மக்கள் வீரன்; போதி சத்துவர்-மகா சேனா ஆகியோரின் காலடி பட்டதாகச் சொல்வோரும் உண்டு!
* இஸ்லாம் = அல் கதிர் என்னும் இறைத் தூதர் மற்றும் வீரர் இஸ்கந்தர்; இருவரும் ஞான ஊற்றினைத் தேடிய இடம், அல் கதிருக்குத் தான் அகப்பட்டது என்பது வழக்கு; அதான் "கதிர்"காமம்!
இந்த மூன்று ஆலயங்களும் ஒன்று சேர்த்தே, "கதிர்காம தேவளே" என்று தற்போது அழைக்கப்படுகிறது!
கதிர்காமத்தை ஒட்டி ஏழுமலைகள்! ஆனால் முருகன் மலை மீது இல்லை!
முல்லைத் தெய்வமாக, காடும் காடு சார்ந்த இடத்தில் வசிக்கின்றான்! :)
குன்று இருக்கும் "இடம் எல்லாம்" குமரன் இருக்கும் இடம் என்று ஒரு நயத்துக்குச் சொன்னாலும்...இதோ...இந்தக் குறிஞ்சித் தெய்வம், கதிர்காமத்து முல்லைக் காட்டில்!
அருகில் மாணிக்க கங்கை ஆறு பாய்கிறது! இயற்கை அழகு கொஞ்சும் இனிய தொட்டிலில் தான், நம் அழகன் முருகனும் இளைப்பாறுகிறான்!
இந்த மூன்று மதங்களின் மக்கள் மட்டும் அல்லாமல், வேட்டா (வேட) என்ற பழங்குடி இனத்தவருக்கும் இதுவே கோயில்! இவர்களே இலங்கையின் ஆதி குடிகள்!
வள்ளிமலை வேடர்கள்-வள்ளியின் கதை போலவே தான் இவர்களின் கதையும்! இவர்களின் முருகனின் பெயர் = "கந்தே யாகா"= மலைகளின் ஆவி! தங்கள் குலப் பெண்ணான வள்ளியின் புகுந்த வீடே இவர்களின் கதிர்காமம்!
மற்ற இந்து ஆலயங்களில் இருப்பது போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல் வழிபாடும் கிடையாது!
பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித் திரையும் தான் கருவறை!
அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே மூலவர்!
கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!
அவரவர் விழாக்களில் அது புறப்பாடும் கண்டருள்கிறது! பெளத்தர்களும் தங்கள் கிரி விஹாரத்தில் இதை எழுந்தருளப் பண்ணிப் பூசிக்கிறார்கள்!
முருகன் திரையில் இருக்க, திரைக்குப் பின்னுள்ள யந்திரத்துக்கு, ஒரு இஸ்லாமியர் பூசை செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! ஆகா!
புத்த பிக்குகள் முருகனின் திரைச்சீலைக்கு முன்னால் அமர்ந்து பூசிப்பதையும் மனக் கண்ணால் பாருங்கள்! ஆகா!
* "கதிர்காமத் தேவன்" யார்? தமிழ் முருகனா? பெளத்த தேவனா? இஸ்லாமிய இஸ்கந்தரா? = யாருக்கு வேணும் அதெல்லாம்?
* ஒரு இஸ்லாமியர் என்னவாய் நினைத்துக் கொண்டு, அந்தத் திரையின் முன்னால் நிற்பார்? = யாருக்கு வேணும் அதெல்லாம்?
அவன், என்றுமே "அவன்" தான்!
அவன் முன், யார் என்ன நினைத்துக் கொண்டு நின்றாலும், அவர்கள் அடியவர்களே! - வாழ்க சீர் அடியாரெல்லாம்!
இதோ...ரமணி அம்மாளின் பாடலைக் கேட்டுக் கொண்டே, கதிர்காமத்து பதிவைப் படியுங்கள்! கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே!!
madhavipanthal.podbean.com
ஆடு மயிலே கூத்தாடு மயிலே!
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே!
அருகினில் நின்று அருள் புரியும் குகன் - கந்தன்
அருமையாய் அந்தரங்கத்து இருக்கும் குகன்
கருவிழி வள்ளிமானுக்கு உகந்த குகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!
(ஆடு மயிலே)
துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் - கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!
(ஆடு மயிலே)
மனமது கனிந்திடில் மருவும் குகன் - கந்தன்
கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் குகன்
தனதென தான் பரிந்து பேசும் குகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!
(ஆடு மயிலே)
அருகினில் நின்று அருள் புரியும் குகன் - கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முருகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!!!
(ஆடு மயிலே)
மேலே சொன்ன தகவல் பலவும், படித்தும், கேட்டும், உணர்ந்தும் எழுதியதே! இது வரை நான் கதிர்காமம் சென்றதில்லை....
கால்களால் சென்றதில்லையே தவிர, மனத்தால் பல முறை சென்றுள்ளேன்! எங்கள் வள்ளியைச் சொல்லும் காடும் கழனியும் அல்லவா!
தன்னை ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, அவனுக்காகவே தன் வாழ்வை அமைத்துக் கொண்டவள்!
பார்க்கவே பார்க்காத...பார்த்தாலும் ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாத ஒருவனுக்கு...ஒருத்தி, இப்படிக் காதலாய் நின்று விட்டாளே!
என் பால் நோக்காயே ஆகிலும், உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால், வேறு அகம் குழைய மாட்டேனே!!
இது...ஒரு கால்...ஒருதலைக் காதல் ஆகி இருந்தால்???
ஐயோ!
எப்படியும் வள்ளி அவனிலே வாழ்ந்திருப்பாள்!
ஆனால் முருகன் தான் தன்னிலே தாழ்ந்திருப்பான்!
கதிர்காமம் பாடல் பெற்ற தலம்! அருணகிரியார் பதினான்கு திருப்புகழ்களாகப் பாடியுள்ளார்!
திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்!
மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!
காண், காண் என்று வரிக்கு வரி காணச் சொல்கிறாரே! ஐயோ! கதிர்காமக் கந்தனை நான் காணும் நாள் எந்த நாளோ???
கதிர்காமம் அழைத்துச் செல்வதாக, முன்பு கா.பி அண்ணாச்சியும் மற்றும் ஸ்வாதியும் சொல்லி இருந்தார்கள்!
எவரும் ஏற்காத என்னைக் கதிர்காமத்து என் முருகனே ஏற்கட்டும்!
வனமுறை வேடன் அருளிய பூஜை - மகிழ் கதிர்காமம் உடையோனே!
இருநிலம் மீதில் எளியனும் வாழ - எனது முன் ஓடி, வரவேணும்!
கதிர்காமத்துறை கதிர்காமத்துரையே, என் முருகா...
எனது முன் ஓடி வரவேணும்!
பேதையை ஏற்க வரவேணும்!
9 comments:
எவரும் ஏற்காத என்னைக் கதிர்காம முருகனே ஏற்கட்டும்!::)
அருமை!
முருகர் கிடைத்து விட்டாரா
எங்கே ஒளிஞ்சிக்கிட்டு இருந்தாராம்!
//நரசிம்மரின் நாலாயிரம் said...
முருகர் கிடைத்து விட்டாரா
எங்கே ஒளிஞ்சிக்கிட்டு இருந்தாராம்!//
:)
அழிலும் தொழிலும் உருக் காட்டான்!
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்!!
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று போகானால்...
அருமை அருமை அரிய பாடலோடு
//கானா பிரபா
அருமை அருமை அரிய பாடலோடு//
வாங்க கா.பி.
எப்போ போறோம்? அதைச் சொல்லுங்க! :)
ஆடு பாம்பே மெட்டுல பாடியிருக்காங்க போல. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு. கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் குகனாம். :-)
//குமரன் (Kumaran) said...
ஆடு பாம்பே மெட்டுல பாடியிருக்காங்க போல//
அதே! புன்-நாக-வராளி!
//பாட்டு ரொம்ப நல்லா இருக்கு//
எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு, குமரன்! மயில் எப்படியெல்லாம் அவனைத் தாங்குது-ன்னு ஒவ்வொனா வருது பாருங்க!
எழுதினதும் ரமணி அம்மாளே தான்-ன்னு நினைக்கிறேன்!
//கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் குகனாம். :-)//
என்னை நோக்கிச் சிமிட்டுவான்-ல்ல? :)
அதான் அந்த வரிகளை Bold செய்திருந்தேன்!
புகைபடங்களுக்கும் , புதிய தகவல்கலுக்கும் (எனக்கு)
நன்றி
"கண்டி, கதிர்காம முருகா " னு கமல்(தெனாலி) சொன்னதுக்கு இன்னிக்கி தானுங்கோ மூலப்பொருள் விளங்குது
Post a Comment