Sunday, October 28, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 10

"புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்தோட!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!
ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

“இந்தப் பகுதியில் கொடிய விலங்குகளிடமிருந்தும், விஷப் பூச்சிகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் சுவாமிகள்.

என்னைத் தாக்க வரும் புலிகளும், நரிகளும், சிறிய நரிகளும், நாய்களும், எலிகளும், கரடிகளும் என்னைக் கண்டதும் உன் அருளால் என்னைத் தாக்காமல் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அவை ஓட வேண்டும்!

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்து ஓட!

விஷ ஜந்துகளான தேள்களும் பாம்புகளும் செய்யான் எனப்படும் பெரும்பூரான்களும், சிறுபூரான்களும், கொடிய விஷங்களையுடைய பற்களால் கடித்து உயர் அங்கங்களான தலை, மார்பு போன்ற அங்கங்களில் விஷம் ஏறியிருந்தாலும் அவை எளிதுடன் இறங்க நீ அருள வேண்டும்!

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!

ஆளை உருத் தெரியாமல் குலைக்கும் குஷ்டம் முதலிய பெரு நோய்களும் (ஒளிப்பும்), சுளுக்கு முதலான சிறு நோய்களும், ஒற்றைத் தலைவலியான ஒரு தலை நோயும், வாயு தொடர்பான வாத நோய்களும், குளிர் நோயான சயித்தியமும், கை கால்கள் இழுக்கும் வலிப்பு நோயும், பித்தத்தால் உண்டாகும் மனநோய் முதலியவையும், வயிற்று வலியான சூலை நோயும், எலும்பை உருக்கும் க்ஷய நோயும், குன்ம நோயும், உடற்சோர்வு என்னும் சொக்குநோயும், அரிக்கும் சிரங்கும், கை கால் குடைச்சலும், சிலந்தி நோயும், குடலில் வரும் சிலந்தி நோயும், விலாப்புறங்களில் வரும் பக்கப்பிளவையும், தொடையில் படரும் வாழையும், கடுவன் படுவன் முதலிய நோய்களும், கை கால்களில் வரும் சிலந்தியும், பல் குத்து நோயும், பல்லில் வரும் அரணையும், இடுப்பில் வரும் பெரிய அரையாப்பு என்னும் கட்டிகளும், எல்லாப் பிணிகளும் என்னைக் கண்டால் நில்லாது ஓடும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்!

ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

(தொடர்ந்து பேசுவார்கள்)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் October 28, 2012 11:21 PM  

அருமை... தொடர்கிறேன்...

Geetha Sambasivam November 09, 2012 8:49 AM  

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி கொடர்ந்தோட!//

இனி தொடர்ந்தோட எனத் திருத்திவிடுங்கள் குமரன். நன்றி. :)))))

குமரன் (Kumaran) November 09, 2012 11:45 AM  

:)

நன்றி அம்மா. திருத்திவிட்டேன்.

Unknown November 19, 2012 5:09 AM  

நன்றி உங்கள் சமயப்பணி தொடா்ந்துபயணிக்க எல்லாம்வல்ல இறைவன் உங்களை காத்து அருள்வாராக.

Unknown November 19, 2012 5:09 AM  

நன்றி உங்கள் சமயப்பணி தொடா்ந்துபயணிக்க எல்லாம்வல்ல இறைவன் உங்களை காத்து அருள்வாராக.

குமரன் (Kumaran) November 19, 2012 7:08 PM  

நன்றி Sri Kala.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP