Wednesday, November 16, 2011

ஆதாரம் நின்திருப் பாதாரம்!

இந்தச் செவ்வாயில், செவ்வாயன் சேயோனின் எளிமையான பாட்டு ஒன்னு!

பொதுவா...TMS சினிமா/பின்னணிப் பாடகர்-ன்னு பலரும் அறிவாங்க!

ஆனா....அவர் ஒரு சிறந்த கச்சேரிப் பாடகர் (மரபிசை) என்பது சிலர் மட்டுமே அறிவாங்க! தமிழிசை/ கர்நாடக மேடைக் கச்சேரிகளிலும் கொடி கட்டியவர் TMS!
அப்படியான ஒரு பாட்டு, இந்தச் செவ்வாய் முருகனருளில்!

New York விட்டு வெகு தொலைவு வந்திருக்கேன்...
ஒருவன் ஊருக்கு வந்துவிடு, போதும் அங்கு இருந்தது-ன்னு என்னைக் கூப்பிடுகிறான்!
முருகவா....ஆதாரம் நின்திருப் பாதாரம்!


ஆதாரம் நின்திருப் பாதாரம் - இந்த
அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?
(ஆதாரம்)

ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் - போற்றும்
போதனே சுவாமி நாதனே, என்றும்
(ஆதாரம்)

பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ
பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ
கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ
கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே
(ஆதாரம்)

Tuesday, November 01, 2011

6) பழமுதிர்சோலை: எனது முன் ஓடி வரவேணும்!

வாங்க மக்கா!
நேற்றே பஞ்சமியும்,சஷ்டியும் ஒரே நாளில் வந்து விட்டதால், நிறைவுப் பகுதியான 6ஆம் பதிவை, இன்று இடுகிறேன்!

கந்த சஷ்டி முடிந்த திருமண நாள் அல்லவா! என் முருகனுக்கு முதலிரவு!:)
மிக இனிமையான பாடல் ஒன்னு...
பழமுதிர்சோலைப் பாடல்! பார்ப்போமா? நாலே வரி தான்!

நேற்று சஷ்டி அதிகாலையில், நியூயார்க் ஆலயத்தில், பாடச் சொல்லி அழைத்திருந்தார்கள்! இதே பாடலையே அங்கும் பாடினேன்! அதன் ஒலித்துண்டு கீழே! கேட்டுக்கிட்டே வாசிங்க!:)






அகரமும் ஆகி, அதிபனும் ஆகி, அதிகமும் ஆகி - அகமாகி
அயன் என ஆகி, அரி என ஆகி, அரன் என ஆகி - அவர்மேலாய்


எழுத்துக்களில் = அகரம் போல் முதல் நீ! மக்களில் = தலைவன் போல் முதல் நீ! வரம் தருவதில் அதிகம் நீ! என் அகமும் நீ!
படைத்தலில் = அயன் (பிரமன்) நீ! காத்தலில் = அரி (திருமால்) நீ! அழித்தலில் = அரன் (சிவன்) நீ! முத்தொழில் மூவர் மேலும் உன் குணம், மணம் வீசுகின்றது!

இகரமும் ஆகி, எவைகளும் ஆகி, இனிமையும் ஆகி - வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ, எனது முன் ஓடி - வரவேணும்!!


இங்குள்ளதும் நீ! எங்குள்ளதும் நீ! இனிமையும் நீ...இப்படி நீயாக நீ இருந்தவாறு வரும் திருமுருகா!
இந்த நிலத்தில், உனக்காகவே நான் வாழ்கிறேன்...எனக்காக என் முன்னே ஓடி வர மாட்டியா? வாடா!

மகபதி ஆகி, மருவும் வலாரி, மகிழ் களி கூரும் - வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூசை, மகிழ் கதிர்காமம் - உடையோனே


வேதங்களின் பதி நீ! வலாரி என்னும் அசுரனைக் கொன்றவன் இந்திரன்! அவன் படைகளைச் சிறை மீட்டுத் தந்து, அமராவதியை மகிழ்வித்தவனே!
அந்தியன் என்ற பூர்வகுடி வனவேடன், உன்னை ஈழத்தின் கதிர்காமத்திலே வைத்துப் பூசை செய்தானே! அதில் மகிழும் முருகவனே!
(ஈழத்தில் செல்வச்சன்னிதி மற்றும் கதிர்காமத்தில் பிராமணர் அல்லாதோர் பூசகராக உள்ளனர்! கதிர்காமத்தில் விளங்கும் பூசகரை கப்புறாளை என்றும் செல்வச்சன்னிதி பூசகரை கப்பூகர் எனவும் அழைப்பர் - நன்றி: கானா பிரபா)

செககண சேகு, தகுதிமி தோதி, திமி என ஆடும் - மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை, மலை மிசை மேவு - பெருமாளே!!


தகதிமி தகதிமி என்று விதம் விதமான தாள கதியில், மயிலோடு ஆடுபவனே!
செல்வ வளங்கள் நிறைந்த பழமுதிர்சோலை! அந்தச் சோலைமலையில் மேவும் பெருமானே! என் கண்ணாளா!
-----------------------------------------

* 2011 சஷ்டிப் பதிவுகள்



முன்பு பதிவிட்ட, பழமுதிர் சோலை ரகசியங்களைப் பார்ப்போமா?

பழமுதிர்-ச்-சோலை ன்னு சொல்லாதீங்க! "ச்" வராது!
பழம் உதிர் சோலை = பழங்கள்...உதிர்ந்த சோலை, உதிர்கின்ற சோலை, உதிரும் சோலை என்னும் அழகிய வினைத் தொகை!
நம் வினையும் தொகைந்து விடும் முருக வினைத் தொகை!

பழமுதிர் சோலை ஆலயம்


* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார் திருமுருகாற்றுபடையில்!

* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!

* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்களின் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!

* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!

* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!

* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!

* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே!
மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!

* மாமன் திருமால் கீழே, காட்டில்! மருகன் முருகன் மேலே, மலையில்!

சோலைமலை, அழகர் கோயில்!


* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்!
இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?

* பலரும் அறிந்த பழமுதிர் சோலை திருப்புகழ்-கள்
- அகரமும் ஆகி அதிபனும் ஆகி,
- சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல்

* இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே - என்று பழமுதிர்சோலையில் தான் முருகாற்றுப்படை முடிகிறது!

திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!
இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!

வாடா முருகா! என் முன்னே...ஓடி வாடா....எத்தனை காலம் ஏங்குவேன்? முருகாஆஆஆ!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP