Friday, April 15, 2011

வள்ளலார் சினிமாப் பாடல்! - உள்ளொன்று வைத்து...



ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!

பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!

தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!!

ராகம்: பிலஹரி
நாதசுரம்: காருக்குறிச்சி அருணாசலம்

வரி: வள்ளலார் (திருவருட்பா - தெய்வமணி மாலை)
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
படம்: கொஞ்சும் சலங்கை


21 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) April 15, 2011 10:41 PM  

:)

முருகா!

நிர்மலராஜ் April 15, 2011 11:36 PM  

வணக்கம்.
நான் சிறுவயதில் கேட்ட ஒரு பாடல் "தணிகை மலை படிகள் எல்லம் திருப்புகழ் பாடும், அங்கே தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்".
இது யார் பாடியது என்று தெரியவில்லை, ஆனால் என் நெஞ்சில் நீங்காது நின்று விட்டது.

இதன் சுட்டி (link) உங்களிடம் இருந்தால் தர முடியுமா, அல்லது எப்படி / எங்கே பதிவிறக்கம் செய்வது?

நிர்மலராஜ் April 15, 2011 11:37 PM  

Thanks in advance for any answers you might give!!!

Lalitha Mittal April 16, 2011 12:04 AM  

குமரன், இந்தப்பாட்டில் வரும் ''உண்முகச்சைவமணி''என்ற சொற்களைப்பற்றி எனக்குப் பல ஆண்டுகளாக இருந்த ஐயத்தை இங்கு குறிப்பிட்டு விளக்கம் அறிந்துகொள்ள உதவுவதற்காகத்தான் இன்று முருகன் உங்களை இந்தப்பாட்டைப் பதிவிட வச்சிருக்கான் என்று எனக்குத் தோணறது! 'தெய்வத்தின் குரல்'[7 ]இல் பக்கம் 878 இல் ''உள்முகத்தெய்வமணி''என்ற தலைப்பில் பரமாச்சாரியார் எழுதியுள்ளதை இங்கு சுருக்கமாக க் கொடுக்கிறேன்:



'' ஈசனுக்கு திசைக்கொன்றாக ஒருமுகம்;அது போக மேலே பார்க்க ஒன்று -அதுதான் 'ஊர்த்வமுகம்'.ஆறாவது 'அதோமுகம்'



மேலேயுள்ள ஆகாசம் 'பரவெளி;அதைபார்க்கிற ஈசனின் ஐந்தாவது முகத்துக்கான மூர்த்தியை'பரமசிவன்' என்கிறோம் .



ஆறாவது முகமான 'அதோமுகம்' கீழே பார்க்கும் முகம்;அதாவது கண்மட்டத்துக்குக் கீழே ஹ்ருதயத்துக்குள் பார்க்கும் முகம் .



இந்த உள்முகம் மற்ற ஐந்து முகங்களோடு சேர்ந்து ''ஆறுமுகனாக உண்டான

சுப்பிரமணிய சுவாமியை ராமலிங்க ஸ்வாமிகள் 'உள்முகத்தெய்வ மணி'என்று நம்முடைய ஹ்ருதய அந்தரங்கத்தில் இருக்கிற தெய்வ ரத்தினமாகச் சொல்லி இருக்கிறார்''.





இங்கு பெரியவா பலமுறை உள்முகத்தெய்வமணி என்று குறிப்பிட்டிருப்பதால் அதுதான் சரியான சொல்லாயிருக்குமின்னு எனக்குப் படறது;இதை உறுதி செய்ய முடியுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) April 16, 2011 12:23 AM  

@நிர்மல்ராஜ்
எனக்கும் சீர்காழியின் அந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும்! தண்டை இசை பின்னாடி ஒலிக்க, மயில் அசையறாப் போலவே இருக்கும்!

தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் - அங்கே
தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்!

குலுங்கி வரும் தென்றல் அங்கே இசை முழக்கும் - திருக்
குமரன் பேரைச் சொல்லிச் சொல்லி நம்மை மயக்கும்!
-ன்னு வரும்!

ஒலி வட்டு என்னிடம் தேடிப் பார்த்து, முழுப்பாடலையும் குமரன் அண்ணாவைப் பதிவிடச் சொல்கிறேன்!
முருகனருள் என்னும் இந்த வலைப்பூ முருகனுக்கு அல்ல! உங்களைப் போல அடியவர்க்கே! அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!

இந்த வலைப்பூ என்னும் சோலையில் நீங்கள் காலாற உலாவி வாருங்கள்! மயில்கள் இந்தச் சோலைப் பதிவுகளிலும் நாட்டியம் ஆடும்! :)

Prasad April 16, 2011 10:07 AM  

முருகா முருகா முருகா!

குமரன் (Kumaran) April 16, 2011 6:53 PM  

நிர்மல்ராஜ், நீங்கள் சொல்லும் பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அது யூட்யூபில் இருக்கிறது. பிரகாசம் ஐயாவும் எம்பி3 அனுப்பியிருக்கிறார். விரைவில் வரிகளுடன் இடுகிறேன்/றோம்.

இராஜராஜேஸ்வரி April 18, 2011 9:18 AM  

மயில்கள் நடமிடும் அழ்கான பதிவுச்சோலைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) April 18, 2011 12:49 PM  

@லலிதாம்மா
உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லச் சற்றே தயக்கமாக இருந்தது! :)

காஞ்சி மகாப் பெரியவர் அவர்களும் கேள்வியில் இருப்பதால், பதிலைக் கண்டு சில நண்பர்கள் கோவித்துக் கொள்ள வாய்ப்புண்டு! :)
இருப்பினும் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு! மேலும் நம் வள்ளலார் என்பதாலேயே துணிந்து சொல்ல முனைகிறேன்!

காஞ்சிப் பெரியவர் அவர்களின் எளிமை, அனுட்டானம் இவற்றின் மீது எனக்கு என்றுமே மிகுந்த மதிப்புண்டு!
ஆனால் அதனாலேயே அது தான் ஆதாரம்/ஆய்வு என்று ஆகி விடாதல்லவா? தெய்வத்தின் குரல் நூலில், இது போல், இன்னும் சில முரண்களைக் காணலாம்! அவை பெரியவரின் "கருத்து" மட்டுமே! ஆய்வல்ல என்ற நோக்கிலே புரிந்து கொண்டால், நண்பர்கள் வீண் "கசப்பு" கொள்ள மாட்டார்கள்!:) பாடலைப் பார்ப்போம்!
-----------------------

இந்தப் பாடல் - திருவருட்பா, முதல் திருமுறையிலேயே வந்து விடுகிறது! தெய்வமணி மாலை என்பது பெயர்! சென்னை கந்த கோட்டத்து முருகப் பெருமானை வியந்து பாடியது!

திருவொற்றியூரில் இருந்து தினமும் கால்நடையாக, தலையைக் குனிந்தவாறே, இதைக் காதலுடன் பாடிக் கொண்டு வருவது வழக்கம்! ஆரம்ப காலத்தில் முருகன் பால் அப்படி ஒரு ஈர்ப்பு வள்ளலாருக்கு!

உள்பக்கமா திரும்பி இருக்கும் சிவனின் ஆறாவது தலையான அதோமுகம் - அந்த "உள்பக்கத் தலை தான் உள்முகத் தெய்வமணி" என்பது காஞ்சிப் பெரியவர் அவர்களின் துணிபாக இருக்கலாம்! ஆனால் அதற்கான தரவுகள் இல்லை!

//இங்கு பெரியவா பலமுறை உள்முகத்தெய்வமணி என்று குறிப்பிட்டிருப்பதால் அதுதான் சரியான சொல்லாயிருக்குமின்னு எனக்குப் படறது;இதை உறுதி செய்ய முடியுமா//

காஞ்சிப் பெரியவர் பல முறை குறிப்பிட்டு இருந்தாலும், வள்ளலாரும் பலமுறை குறிப்பிடுவதால், பாடலை எழுதிய வள்ளலாருக்கே பாட்டில் அதிக உரிமை அல்லவா?

ஒரே ஒரு முறை மட்டும் உள்முகச் சைவமணி என்று பாடியிருந்தால் கூட, எழுத்துப் பிழை/அச்சுப் பிழையாகி விட்டது-ன்னு சொல்ல வாய்ப்புண்டு! ஆனால் வள்ளலார் வரிக்கு வரி பாடுகிறார்! மொத்தம் 31 முறை, "உள்முகச் சைவமணி", "உள்முகச் சைவமணி" என்றே முடிக்கிறார்! எனவே அது காஞ்சிப் பெரியவர் சொல்வது போல் "உள்முகத் தெய்வமணி" ஆறாம் தலையாக இருக்க வாய்ப்பில்லை! அது உள்முகச் சைவமணியே! = தண்முகத் துய்ய மணி, உண்முகச் சைவமணி, சண்முகத் தெய்வமணியே!

* கருணைமுகத் தூய மணி!
* (வெளிமுகமாய் இல்லாமல்) உள்முகமாக வளரும் சைவமணி!
* சண்முகா! என் தெய்வ மணியே!!

Kannabiran, Ravi Shankar (KRS) April 18, 2011 4:07 PM  

வரலாறும் சேர்த்துப் பொருத்திப் பார்த்தால் இது ஏன்-ன்னு புரிந்து விடும்:

வள்ளலாருக்கு, சைவ சமயத்தில், அப்போது காணப்பட்ட பல குறைகளை நீக்கி, அதைச் செழிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஆரம்பத்திலேயே இருந்தது!

திருமடங்களும், பலரும் வெளிமுகமாகவே சாதி-சடங்கு-ஆளுமை, தங்களுக்கு உட்பட்டே மற்ற எந்த நெறியும்/கருத்தும் என்ற வளையத்துக்குள் சுழன்றபோது....
அது மேன்மைகொள் சைவநெறிக்கு நாளடைவில் ஊறாகி விடுமோ என்ற அச்சம், எனவே வெளிமுகப் பூச்சாக இல்லாமல், "உள்முகச் சைவமாக" தழைக்க வேண்டும் என்ற பேராவல் வள்ளலாருக்கு!

அதான் உள்முகச் சைவமணியே, உள்முகச் சைவமணியே என்று அடிக்கு அடி பாடுகிறார்! (வள்ளலாரின் நிலைப்பாடு பிடிக்காமல், அவரையே தள்ளி வைத்து விட்டது தனிக்கதை...)

இந்த பாடலை முழுக்கப் பார்த்தால் கூட இந்த "உள்முகச் சைவமணி" புரிந்துவிடும்! சடங்கு-வானவர் பூசை போன்ற சம்பிரதாயங்களை எல்லாம் வள்ளல் பெருமான் மறுக்கிறார்! அவர் கண்டது "உள்முகச் சைவம்"!

வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர் தமை
மதித்திடுவது அன்றி மற்றை...
வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும் மதியேன்!


தள்ளரிய சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!

மேலும் அத்வைத நெறியினையும் குற்றம் சொல்லியே செல்கிறார் வள்ளலார்! அப்படியிருக்க, காஞ்சி முனிவர் எப்படி இப்படிப் பொருள் கொண்டார் என்பது வியப்பே!

நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
நன்மை தீமைகளும் இல்லை!
நவில்கின்றவாகி ஆந்தரம் இரண்டினும் ஒன்ற
நடுநின்றது என்று வீண்-நாள்

போம்பிரம நீதிகேட்போர் பிரமையாகவே
போதிப்பர் சாதிப்பர்தாம்

புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
போந்திடில் போகவிடுவார்!

தாம்பிரிவில் சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
-----------------------

ஆக, "உண்முகச் சைவமணி" என்பதே சரி! அது அச்சுப் பிழை அல்ல!

அதை ஆறாம் தலையைக் குறிக்க வந்த உள்முகத் தெய்வமணி என்று மாற்றிப் போடுவதற்குப் போதுமான முகாந்திரங்கள்/தரவுகள் இல்லை என்றே சொல்ல முடியும்!

காஞ்சிப் பெரியவர், ஒரு நயத்துக்கு வேண்டுமானால் அப்படிச் சொல்லி இருக்கலாமே தவிர....
31 முறை, "உள்முகச் சைவமணி" என்றே வள்ளலார், கந்த கோட்டத்து முருகத் திருவிடம் உருகி நிற்கின்றார்!

We surely have the right to differ with Vallalar's views!
But we dont have the right to alter his views or change the lines that represent his views!
- If this simple understanding prevails, there wud be no grievances for anyone :) Sadly today, even at his Vadalur Sabai, ppl have introduced ritualistic poojas to the Jothi Dharisana vazhipaadu, that he envisaged! :(

வள்ளலார் சத்தியதரும நெறி வாழ்க!
அருட்பெருஞ் சோதி! தனிப்பெரும் கருணை!!

Kannabiran, Ravi Shankar (KRS) April 18, 2011 10:42 PM  

@லலிதாம்மா
//இதை உறுதி செய்ய முடியுமா?//

என்ன தான் தன்னளவில் பக்தி சார்ந்து இருப்பினும், ஒரு தகவல் என்று வரும் போது, "உறுதி செய்ய முடியுமா?" என்று கேட்ட லலிதாம்மாவுக்கு அடியேன் மிக்க நன்றி!
அவருக்குத் தகவலை உறுதி செய்யும் பொருட்டு என்றாலும், அனைவருக்கும் வள்ளலார் நெறியை எடுத்தியம்பும் வாய்ப்பாக இதை எண்ணி வணங்கிக் கொள்கிறேன்!

S.Muruganandam April 19, 2011 3:34 AM  

இப்பாடலைப்பற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு. வள்ளலார் எதிர்மறையாக ( முடியாது, ஆகாது) பேசுபவர்களைப் பார்த்து எதிர்மறையாக பேசாமல் நேர்மறையாக பேசவும் என்று கூற அவ்வாறு தாங்கள் பாட முடியுமா? என்று அவர்கள் கேட்க எழுதிய பாடல் இது இதில் வேண்டும் என்றுதான் வருமே தவிர வேண்டாம் என்று வராது.

Lalitha Mittal April 19, 2011 11:06 PM  

''மெய்ப்பொருள் '' காண முயல்கின்றேன்; என்குருவின் மேலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை என் திறந்த மனத்தை சற்று மறைப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில் வேறு யாரவது,உன் வாதத்துக்கு எதிர்வாதம் செய்ய yaaraavathu வருகிறார்களா என்று ஏக்கத்துடன் காத்திருப்பதும் உண்மை;"வள்ளலாருக்கே --அதிக உரிமை"???வள்ளலாருக்கே முழு உரிமை!

Kannabiran, Ravi Shankar (KRS) April 20, 2011 4:49 AM  

@லலிதாம்மா
//என்குருவின் மேலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை என் திறந்த மனத்தை சற்று மறைப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில்//

ஆகா! குரு நம்பிக்கை அப்படியே இருக்கட்டும்! இருக்க வேண்டும்! இது வெறும் "சொல்" ஆய்வு மட்டும் தானே!-ம்மா! Academics & Spirituality are different! Truthful seeking prevades in both!

//வேறு யாரவது,உன் வாதத்துக்கு எதிர்வாதம் செய்ய yaaraavathu வருகிறார்களா என்று ஏக்கத்துடன் காத்திருப்பதும் உண்மை;"//

:))
ரசித்தேன்! நானும் காத்திருக்கிறேன்! போதுமா? :)

Anonymous April 20, 2011 6:59 AM  

ப்பாடலைப்பற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு. வள்ளலார் எதிர்மறையாக ( முடியாது, ஆகாது) பேசுபவர்களைப் பார்த்து எதிர்மறையாக பேசாமல் நேர்மறையாக பேசவும் என்று கூற அவ்வாறு தாங்கள் பாட முடியுமா? என்று அவர்கள் கேட்க எழுதிய பாடல் இது இதில் வேண்டும் என்றுதான் வருமே தவிர வேண்டாம் என்று வராது.

It doubtless diminishes the divinity of the poem.

A divine poem should not be composed or sung out of ego.

If a song is composed only as a challenge to prove one's power of composition, it is not a divine song.

If it was indeed done as you said, Kailashi, it diminishes Vallaalaar also.

Disappointment because I have long thought this Tamil saint had annihilated his ego.

-Amalan

Anonymous April 20, 2011 7:21 AM  

Vallalaar cinemaap paadal

The title is amusing.

A glorious Tamil saint and his HYMNS which brought forth coruscating bakthi up in the minds of the devotees of Lord Murugan - there are millions of them worldwide - are thus introduced. :-(((

Does Kumaran think I should come to this Saint via Tamil cinema ?

But, thank God, I did come to this famous hymn through one of the ardent devottees of this saint Smt Ilampirai Manimaran.

You can listen to her, if you r lucky enough, reciting this hymn in public stages before she begins her devotional discourses, closing her eyes with folded hands. The audience, which more often than not, comprised people from different religions, are taken back to know a hymn exists in Tamil for Murugan that runs the risk of quetioning whether their religion has such devotional fervor. Such was her voice; such was her passion; and such was her bhakti.

It was a sort of her prayer at the beginning. But that was many decades ago. Now I don't know whether she still follows this interesting habit.

I like this saint although I am not a Muruga devotee. He is unique in many respects that should be explained by Kumaran and others. Let me read.

Cinema, like sex, levels all: here it levels saints. :-((((


Next I am waiting to read about an aazhwaar hymn popularised by a Tamil film in a love duet of a famous hero and heroine. Is there one? Why not come up with that Kumaran. I am your fan, dont u see?

Amalan

Kannabiran, Ravi Shankar (KRS) April 20, 2011 3:41 PM  

@அமலன்
:))))))

//Disappointment because I have long thought this Tamil saint had annihilated his ego//

அமலன், "வள்ளலாருக்கு ஈகோ"-ன்னு பேசுவதற்கு முன்பு, அடிப்படைத் தகவல்களைக் கைக்கொண்டு உரையாடுதலே நலம்!

கைலாஷி ஐயா சொன்னது ஒரு Myth என்ற அளவில் மட்டுமே! எதிர்மறையாக "வேண்டாம்" என்னாமல், "வேண்டும்" என்று பாடிய அதே வள்ளலார் தான், "இல்லை, இல்லை"-ன்னு எதிர்மறையாக அதே பாட்டிலேயே பாடுகிறார்! "உண்டு உண்டு"-ன்னும் பாடுகிறார்! அதுக்கு என்ன சொல்வீங்க? :)

நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
நிலன்உண்டு பலனும்உண்டு
நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
நெறிஉண்டு நிலையும் உண்டு

உளம்எனது வசம்நின்றது "இல்லை"என் தொல்லைவினை
ஒல்லை விட்டிடவும் "இல்லை"
உன்பதத்து அன்பு "இல்லை" என்றனக் குற்றதுணை
உனைஅன்றி வேறும்"இல்லை"
இளையன் அவனுக்கருள வேண்டும் என்று உன்பால்
இசைக்கின்ற பேரும் "இல்லை"
ஏழையவனுக்கு அருள்வதேன் என்று உன் எதிர்நின்று
இயம்புகின்றோரும் "இல்லை"!

//If a song is composed only as a challenge to prove one's power of composition, it is not a divine song//

Is that your pronounced "Judgement"? :)
அப்படிப் பார்த்தால் அருணகிரியார் எழுதிய பல பாடல்களை என்ன-ன்னு சொல்வீங்க? ஒரு குறிப்பிட்ட சாரார் வாதம் செய்ய வரும் போதோ, இல்லை இப்படி எழுத முடியுமா என்று வினவும் போதோ, அடியவர் குழாமில் இருப்போரும் உணர வேண்டி, இப்படி பல அருளாளர்கள் பாடல் செய்துள்ளார்கள்! அவர்கள் எல்லாம் ஈகோ பிடிச்சவர்களா? :)

மேலும் "ஈகோ" என்பதே ஏதோ தகாத சொல்லும் அல்ல! அது வள்ளலாருக்கு இருக்கவே கூடாது என்ற நம் எதிர்பார்ப்பை அவர் மீது ஏன் திணிக்க வேண்டும்? ஜோதியில் ஒன்னும் தெரியாது, பூச்சி தான் பறக்கும்-ன்னு சொன்னா, அதை மறுத்து வள்ளலார் எழுதினா, "பார்த்தியாடா, இதைக் கூட இவருக்குத் தாங்க முடியலை! இவர் என்ன துறந்தவரு? சரியான ஈகோ!"-ன்னு வம்படிக்கத் தான் உதவும்! :)

அதனால் அவசரப்பட்டு, அங்கும் இங்கும் சொல்லப்படும் Myth-களை மட்டுமே வாசித்து, அருளாளர்களைச் சொல்லாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்! "மெய்ப்பொருள்" காண்பது அறிவு! Suffice Data, before Speak!

சிவகுமாரன் April 23, 2011 3:18 PM  

தெய்வமணி மாலை என்னும் இந்த திருவருட்பா எனக்கு மிகவும் பிடித்த பாவகை. இதே பா வகையில் அறுமுகன் அருள்மாலை எழுதி இருக்கிறேன். படித்துப் பார்த்து தங்கள் அனுபவத்தை பகிருங்களேன்.
http://arutkavi.blogspot.com/2011/04/blog-post_22.html

Anonymous November 10, 2011 11:37 AM  

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Anonymous October 02, 2023 1:39 PM  

https://youtu.be/zQJAXCaLfFg?si=Hh1ENkOsMUeUlrEg

rajaguru March 20, 2024 4:50 AM  

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய
திருவருட்பா பாடல்கள்
6 திருமுறைகள்

vallalar songs

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP