Tuesday, September 27, 2011

9ராத்திரி-01: ஆறுபடைவீடும் ஒரே பாட்டில்!

இது ஒன்பதிரா (எ) அன்னையின் நவராத்திரி நேரம்! அந்த அன்னையின் வேலேந்தி தோளேந்தும் என் மன்னவன் வீட்டிலே, பாட்டு இல்லாமலா?

முருகன் ஆண்மகன் - அவனுக்கு ஏது நவராத்திரி என்று கேட்டால்...

அந்த முருகனுக்கு நான் உண்டு, எனக்கே நவராத்திரி! அவன் யுவராத்திரி-ன்னு வச்சிக்க வேண்டியது தான்:)




* அறுபடை வீடுகளும் ஒரே பாட்டில் வரும், சிலவே சில பாடல்களில், இதுவும் ஒன்று!
* இன்னொன்னு = சொந்தக் கவிதை, ஆறுபடைக் காவடிச் சிந்து, இங்கே!

படம்: குமாஸ்தாவின் மகள்
இசை: குன்னக்குடி
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: பூவை செங்குட்டுவன்

இதை வலையேற்றித் தந்த நண்பர் பெங்களூர் குமரன் - கூமுட்டை (on twitter @kuumuttai) அவர்கட்கு, என் இனிய நன்றி!:)


எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
(எழுதி எழுதி)

திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும்!
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும்!
(எழுதி எழுதி)

பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
வள்ளிக் கணவன் முருகன் பெயரைப் பாடச் சொல்லி அருள் கூறும்!
வண்ணக் கவிதை பாடப் பாட, வாழ்வும் வளமும் தேடி வரும்!
(எழுதி எழுதி)

பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து, குமரன் அருளைப் பாடி வரும்!
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து, பேரும் புகழும் சேர்த்து விடும்!
(எழுதி எழுதி)


அறுபடை முருகன்கள் ஒரு சேர நிற்கும் அழகு!!!

Monday, September 19, 2011

சீக்கிரமாய் வா!


முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா!
பக்தர்க் கருளும் சக்திக் கொழுந்தே
சரவண பவனே வா!

வண்ண மயிலேறி வாகாய் அமர்ந்து
சின்னக் குமரா வா!
சின்னக் குழந்தை வடிவில் ப்ரணவ
பொருள் சொன்னவனே வா!

விண்ணும் மண்ணும் வியந்தே போற்றும்
வடிவே லவனே வா!
கண்ணும் மனமும் கசியத் துதித்தோம்
கண்ணின் மணியே வா!

கன்னல் தமிழில் கவிதை சொல்வேன்
செல்லக் குமரா வா!
மின்னல் போலே எம்மைக் காக்க
விரைந்தே நீயும் வா!

சொல்லும் கவியில் சொல்லாய் பொருளாய்
சுவையாய் அமைவாய் வா!
கல்லும் கனியும் தமிழின் சுவையில்
கனிந்தே நீயும் வா!

சரவண பவனே சண்முக குகனே
சடுதியில் இங்கே வா!
சங்கரன் மகனே சங்கடம் தீர்க்க
சீக்கிரமாய் நீ வா!


--கவிநயா

Sunday, August 21, 2011

கிருத்திகைபதிவு



மாலோன் மருகன் மன்றாடி மைந்தன் என்றபடி மாமனுக்கும்
 மருகனுக்கும் உகந்த நாள் இது.மாலுக்கு சிறப்பான கோகுலாஷ்டமியும்,மருக​னுக்கு உகந்த கிருத்திகையும் சேர்ந்த நாள் இது.அருணகிரிநாதர்முத​ல் தொடங்கி தமிழ்த்தியாகய்யா பாபனசம் சிவன் வரை இருவரையும் சேர்த்து பாடாதவரே கிடையது.மாலும் மருகனும்  ஒருவர்தான் என்பதை நமக்கு உணர்த்தும் நாள்

ஊத்துகாடு வேங்கடகவி கண்ணனின்மீது பல மனதைக் கவரும் பாடல்களைப்பாடியுள்ளார்.ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அருமையான பாடல் முருகனின் மீது பாடியுள்ளார் வழக்கம்போல் தமிழ் அருவிபோல் கொட்டுகிறது. சொற்களின் அணிவரிசையும் அடுக்கு வரிசையும் அபாரம். பாட்டைப் பார்ப்போம்

ராகம்: ஷண்முகப்பிரியா    தாளம் :ஆதி

பல்லவி

வரமொன்று தந்தருள்வாய் வடிவேலா
எங்கள் மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா அந்த....(வரமொன்று)
அனுபல்லவி
பரமென்ற சொல்லுக்கொரு பொருளே
பரத்தில் பரமென்ற சொல்லுக்கொரு பொருளே
இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடுப்பொருளே
பலபொருள் கேட்டுன்னை அது இது என்னாது
பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த........(வரமொன்று)
சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டு அவை புளித்துப் புளித்து போச்சே
ஏனென்றால் உந்தன் புன்னகை முகம்கண்டதாலாச்சே
இன்னும் உலகம் ஒரு இன்பம் என்றது எப்படியோ மறந்துபோச்சே
உன் ஏறுமயில் நடனம் கண்டலாச்சே
முன்னும் மனம் உருக முருகா முருகா என்று மோகமீறி தலைசுற்றலாச்சே
சொல்லவந்த மொழிகூட மறந்துதான்போச்சே
எதோ பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே
அந்தரங்கம் போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே
புனிதமான அறுபடை வீடுடையாய் புகுமதக் களிறு நடையுடையாய்
இனித்த நறும் எக்கலவை எதிலும் இனித்த விளைதினை சுவையுடையாய்
எனக்கு ஒரு பதம் தந்தருளும் மண மணக்க வரும் தமிழ் அருளடையாய் 
அன்னயினும் சிறந்ததான அருளோடு நிறைந்ததான அறுமுகவடிவே.....(வரமொன்று)

 வேங்கடகவி வாழ்ந்த காலமோ 1700 -௧765. ஆனால் அந்த கொஞ்சும் தமிழைப் பாருங்கள் எவ்வளவு எளிமை. இப்போதுள்ள பேச்சுத்தமிழ்போலவே இருக்கும் பொருள் விளக்கமே தேவையில்லை சரளமான வரிகளும், அடுக்கு வரிசைகளும், வார்த்தை வண்ணஜாலங்களும். அதில்மிகையாக இருக்கும் அவரது கோரிக்கையும், பக்தியும், மெய்சிலிர்க்கவைக்கும் சங்கீதமும், மனதை கவரும் வண்ணம் இருக்கிறது.எனக்கு பிடித்த இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் அதுவும் குறிப்பாக கேஆர்ஸ்க்கு.

 இனி பாட்டை பார்த்து கேட்டு ரசியுங்கள்.  மறைந்த திரு. மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் ஒரு 5 மணித்துளிகள் ஷண்முகப்பிரியா ராகத்தை பிழிந்து ரசமாக கொடுத்துவிட்டு பின்பு கீர்த்தனையை தன் மதுர குரலில் தேனைக் குழைத்து ரசிக்கும் வகையில் வழங்கியுள்ளார். இந்த கிருத்திகை நன்னாளில் முருகனின் ஆசிபெற்றுச் செல்லுங்கள்



Tuesday, August 09, 2011

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ? - வருவான் வடிவேலன்!

இன்னிக்கி முருகனருளில், எனக்கே எனக்கான பாட்டு!
திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ?
இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ?


(நானும் என்-அவனும்! same color too..)

வருவான் வடிவேலன்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
அறுபடை வீடு மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, கதிர்காமம் என்று பல நாடுகளுக்கும் சென்று எடுத்த படம்!
அதில் தான் இந்தப் பாட்டு! வாணி ஜெயராம்-இன் வார்த்தெடுத்த குரலில்...!

புராணப் படம் அல்ல! ஆனா, முருகனை மையமாக வைத்து, இன்றைய வாழ்விலே நடக்கும் ஒரு கதை!
முருகனே குழந்தை உருவத்தில் வந்து, வளர்ந்து, சொற்பொழிவு செஞ்சி, மாயோன் அன்ன மாயங்கள் செய்து...பல பேரின் வாழ்வைச் சீராக்கும் கதை!



அவளுக்கு இயற்கையிலேயே இறையன்பு ஒரு சுத்து கூடுதலாப் போயிருச்சி!
இதனாலோ (இல்லை) வேறு என்ன புரிதலினாலோ, கொண்டவன் அவளைச் சீண்டுவதில்லை! கேலி பேசுறான்!
நாள் முற்ற முற்ற, விவாகரத்துக்கு ஓலையே அனுப்பிகிறான்! என்ன செய்வாள்?

அவனுக்கே ஒப்புவித்து விட்டவள்! விவாகரத்தை ஏற்க மறுக்கிறாள்!
மனதால் கொண்ட கணவனுக்கே, தன்னையும் கொடுத்து, அவர்களுக்குள் பிறக்கும் பிள்ளைக்கு "வடிவேலன்" என்று பேர் வைப்பேன்!
= கங்கணம் கட்டிக் கொள்கிறாள்! நடக்கற காரியமா இது? = வருவானா வடிவேலன்?

இவ இப்படின்னா... இன்னொருத்தி.... தன் உயிராய் வைத்து இருக்கும் கணவனுக்குக் கண் பார்வையில்லை! எத்தனையோ இடம் பார்த்தாகி விட்டது! = இனி ஒன்னுமே இல்லை!

ஈழத்துக் கதிர்காமம் சன்னிதியில் கையேந்திக் கெஞ்சுகிறாள்!
இனி ஒன்னுமே இல்லை-ன்னாலும்.....
அவன் ஒருவன் மட்டும் உண்டு தானே?
உண்டு தானே? = என் முருகன், எனக்கு என்னிக்குமே உண்டு தானே!!!

பாடலைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! இதோ!!!



நீயின்றி யாருமில்லை விழி காட்டு- முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு!
நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு - நீ
ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு!


அருளே அருளே, உலகம் உனதல்லவா
அறிவும் பொருளும், யாவும் நீயல்லவா!

(நீயின்றி யாருமில்லை)

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ? - மாமி
இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ?

கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ? - நாங்கள்
கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ?


காசி விசாலாட்சி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
காஞ்சி காமாட்சி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
அங்கயற் கண்ணி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
அடி அபிராமி, நீ உனது மகனிடம் சொல்வாய்!


(என்ன மாயமோ, காதல் கணவன்....கண் கொண்டு பார்க்கிறான்!
அவள் முருகன் அவளைக் கைவிடவில்லை!)

கண்டேன்! கண்டேன்! கண்டேன்!
முத்துக் குமரன், பக்திச் சரவணன், வைத்திய நாதனைக் கண்டேன்!
முடியுடை மன்னன், திருமுடி அருகே, கொடியுடைச் சேவலைக் கண்டேன்!
கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும் தோகையைக் கண்டேன்!
கோலம் மாறிட, ஞானக் கண்களும், ஊனக் கண்களும் கொண்டேன்!


வீடு நமக்குண்டு = அறுபடை வீடு!
வேதம் நமக்குண்டு = முருகனின் பாதம்!
விருந்து நமக்குண்டு = கந்தனின் நாமம்!
மருந்து நமக்குண்டு = வைத்திய நாதம்!


ஐயா, முருகய்யா! ஐயா, முருகய்யா!
ஐயா, முருகய்யா! ஐயா, முருகய்யா!


படம்: வருவான் வடிவேலன்
குரல்: வாணி ஜெயராம், சீர்காழி
வரி: கண்ணதாசன்
இசை: MSV



திரையருட் செல்வர் என்று புகழப்பட்ட K.சங்கர் இயக்கிய அருமையான படம் = வருவான் வடிவேலன்! பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம்!
ஜாய்ஃபுல் சிங்கப்பூர் கலர்ஃபுல் மலேசியா போன்ற பிரபல பாடல்கள் எல்லாம் இந்தப் படத்தில் தான்!

வாணி ஜெயராமின் வார்த்தெடுத்த குரலுக்கென்றே வந்த படமோ-ன்னு கூடச் சொல்லலாம்!
வருவான் வடிவேலன் - தணிகை வள்ளல் அவன் - அழகு மன்னன் அவன்-ன்னு வரும் துவக்கப் பாடலைக் கேட்டால் தெரியும்...தோழன் இராகவனுக்கு மிகவும் பிடித்த பாடல்!

பத்துமலை திரு முத்துக்குமரனை - என்னும் பாடல்...கூட்டாக...MSV, சுசீலாம்மா, சீர்காழி, TMS, LR Eswari என்று பலரும் சேர்ந்து பாடுவது!
இன்று நாம் அறிந்த Batu Caves (எ) மலேசியப் பத்துமலையில் படமாக்கப்பட்ட பாடல்!

இந்த மலைக்கு..... அம்மா-அப்பாவோடு இரண்டு ஆண்டுக்கு முன்பு சென்றிருந்த போது... I had to play a trick on my murugan...



மதியம்.....கோயில் நடை சாத்தும் நேரம்! நல்ல மழை வேறு!

அம்மா அப்பாவால் வேகமாக ஏற முடியவில்லை! 300 படிகள்! மழையில் வழுக்குது வேறு!
நான் மட்டும் ஓடோடிச் சென்று, சன்னிதியில் திருப்புகழ் பாட....அர்ச்சகரால் நடைசாத்த முடியலை...அதற்குள் அம்மா அப்பா மெல்ல வந்து விட்டார்கள்!

தரிசனம் ஆன பிறகும், நடை சார்த்தாமல், அர்ச்சகர் ஏனோ தாமதிக்க... நான் அவரிடம் உண்மையைச் சொல்லி, மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்!
ஆனால் அவரோ... இன்னொரு முறை பாடமுடியுமா தம்பி?-ன்னு கேட்க...

பத்துமலை மூலத்தானத்து முருகனுக்கு உருவமில்லை! வேல் தான்!
ஆள் மயக்கும் அழகோ....அலங்கார ஒப்பனையோ ஒன்னுமே இல்லை!
கற் காரைக்கு இடையே, உருவான வடிவேல்! என்னவன் கைவிடேல்!!

வாழ்வின் முக்கியமான காலகட்டம் அந்தத் தருணம்... அப்போ எனக்கு முருகன் மேல் ஆயிரம் கோவம்...
அம்மா-அப்பாவுக்குச் சொல்லாம ஏதோ தப்பு பண்ணுறோமோ-ன்னு மனசில் ஒரு எண்ணம்! தப்பில்லை-ன்னு அதே மனசும் சொல்லுது;

இந்தச் சூழலில், அர்ச்சகரோ, பாடச் சொல்றாரு...
அம்மா அப்பாவைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, கண்ணில் தண்ணி தண்ணியா ஊத்துது!
ரெண்டு கையுமே தாளமாக்கி, ஒலி எழுப்பி, அந்தத் திருப்புகழைப் பாட... குறை தீர வந்து குறுகாயோ? பேதை கொண்டேன் கொடிதான துன்ப மையல் தீர,  குறை தீர வந்து குறுகாயோ?

முருகனின் வேலில் இருந்து, சிவந்த நூலினைக் களைந்து, தாளந் தட்டும் என் கையைப் பிடித்துக் கொண்டார் ஓதுவார்...
அந்தக் காப்புக் கயிற்றைக் கட்டி விட...
வேலின் மேலிருந்த மாலையை எடுத்து, எனக்கே எனக்காய்ச் சூட்ட...

முருகா...
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்!
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்!


விழியில் பெருகுவதை அவரே துடைத்து விட...
அம்மா-அப்பா ஒன்றுமே புரியாமல் விழிக்க...
தீபம் காட்டி...திருநீறு குடுத்து...நடையைச் சார்த்தாமல்...
நான் சொன்ன திருப்புகழையே, பேப்பரில் எழுதித் தரச் சொல்லி...அவரும் பாடத் துவங்கினார்! - "விறல் மாரன் ஐந்து"

அம்மா என்னை மெல்ல இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்!
நானோ என் கையில் கட்டப்பட்ட சிவப்புக் காப்பினையே பார்த்துப் பார்த்து...

மயிலும் செங்கையும் ஆறிரு திண்புயக்
கவியின் சங்கமி இராகவ புங்கவன்
அகமும் கண்டருள் வாய்-என அன்பொடு...
வரவேணும் முருகா வரவேணும்.....வந்துனை எனக்குத் தரவேணும்!
இரு நிலம் மீதில் எளியனும் வாழ.....
எனது முன் ஓஓஓஓடி வர வேணும்!


"வருவான்" வடிவேலன்!

Tuesday, August 02, 2011

ஆண்டாள் பாசுரம்! - முருகனுக்கு!!

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! - from me & murugan :)

இவள் உறுதியே..............என் முருகனிடம் என் உறுதி!

இவள் தோழமை.............உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே...இடுக்கண் களைவது எனக்கு! எற்றைக்கும் இவளே தோழி!


என்னாது, ஆண்டாள் முருகன் மேல பாட்டு பாடி இருக்காளா?

மறந்தும் புறம் தொழா-எல்லாம் கிடையாதா? ha ha ha! நான் ஒன்னும் சொல்லலை! நீங்களே பாருங்க! - இது தமிழ் அர்ச்சனைப் பாடல்!

சுசீலாம்மாவின் குரலில், இதோ:

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி!


பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று குணில்ஆ எறிந்தாய் கழல் போற்றி!


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின்கையில் "வேல்" போற்றி!

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம், இரங்கு ஏல்-ஓர் எம்பாவாய்!!!



இப்போ தெரியுதா? ஏன் "முருகன்" பாசுரம்-ன்னு சொன்னேன்-ன்னு! இது "வேல்" பாசுரம்! :)

யோவ், கண்ணன் கையில் எங்கேய்யா வேல் வந்துச்சு?
இதுக்கு முன்னாடியும், முதல் திருப்பாவைப் பாட்டில், "கூர் வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்-ன்னு தான் பாடினா!
ஒரு வேளை கந்த-கோபன் அப்படிங்கறதைத் தான் நந்த-கோபன்-ன்னு பாடிட்டாளோ?:))

இந்தப் பாசுரத்துக்குப் பொருள் சொல்லும் ஆசார்யர்கள், இந்த "வேல்" கட்டம் வந்த போது, என்ன சொல்லுறாங்க-ன்னு பார்க்க குறுகுறு-ன்னு இருக்கு-ல்ல?:) பார்ப்போமா?

போற்றி, வாழி, பல்லாண்டு - இவை ஒரு பொருட்சொற்கள். அடிபோற்றி-தாளால் உலகம் அளந்த அசவு தீரவேணும் என்றபடி.
(வேல்போற்றி) = வெறுங் கையைக் கண்டாலே போற்றி என்னுமவர்கள், வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி என்னாது ஒழிவாரோ?
அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!


ஏய் முருகா, உனக்கு இளமையான மாமி போன்றவள்....என் தோழி கோதை!
உன் பால் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்னா, அதுக்கு அவ தமிழ் தான் காரணம்!

அவளுக்கு ஆய்ச்சியர்களின் முல்லைப்பூ-ன்னா ரொம்ப உசுரு!
அப்படியே மருக்கொழுந்தும் செண்பகமும்!
மாலை கட்டி அழகு பாக்கவே பொறந்தவ அவ!
கொத்து கொத்தா அவளுக்குப் பூ குடுக்கலாமா, நாம ரெண்டு பேரும்?

அவளுக்கு நல்ல பரிசா வாங்கிட்டு வாடா.....கொண்டு போய் குடுத்துட்டு, நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வாழ்த்திட்டு வரலாம்...
எனக்கு வாங்கிக் குடுத்தியே.......வைரம் பதித்த வாட்ச் - அதே போல, ஆனா உன் பேர் செதுக்காத வாட்ச் ஒன்னு அவளுக்கும் குடுப்போமா?

Happy Birthday Kothai - From, me & murugan!
அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!

Thursday, July 28, 2011

சேவற்கொடியோன்!


முருகன்அவன் நாமம் சொல்லிப் பாடுவோம் – மனம்
உருகஉருக கந்தன் பாதம் நாடுவோம்!
நீலமயில் மீதில் அவன் ஏறுவான் – நம்
உளம்மகிழ நொடியில் முன்னே தோன்றுவான்!

ஆடிஅவன் வரும் அழகைப் பார்க்கணும் - நாம்
கூடிநின்று அவன் புகழைப் பாடணும்!
தேவியர்கள் இருவருடன் அருளுவான் - நமைத்
தாயெனவே காப்பதிலே மகிழுவான்!

வேலைக் கண்டால் வேதனைகள் ஓடுமே – ஒரு
சோலை போல வாழ்க்கையெல்லாம் ஆகுமே!
நாவற் பழம் தந்தவனை நாடுவோம் – அந்த
சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!

--கவிநயா

பிகு. படத்தைப் பெரிதுபடுத்தி(க்ளிக்கி)ப் பார்க்கத் தவறாதீர்கள்!

Monday, July 25, 2011

ஆடிக் கிருத்திகை: சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!!

இன்று ஆடிக் கிருத்திகை! (Jul 25, 2011) - முருகன் தலங்களிலே பெரு விழா!

* தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம்

இன்று, உருவாய் அருவாய்...அறுவராகி ஒருவன் ஆனவன்!
இன்று, வாசனை மிக்க ஒரு பாடலையும் காண்போம்! = என்ன படம்?

பாடலை வலையேற்றித் தந்த தோழன் இராகவனை எண்ணிக் கொண்டு...
சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!! - கந்தர் அலங்காரம்


சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம் - பச்சை
நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்
திருநீறின் தத்துவம் தந்தை என்போம் - அதில்
திகழும் குங்குமத்தை அன்னை என்போம்!
(சந்தனம் மணக்குது)

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்
திருமார்பில் ஒளிவீசும் கவசம் இட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
(சந்தனம் மணக்குது)

விரலுக்கு மோதிரம் பவளத்திலே - கையில்
விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே
தங்கத் திருப்பாதம் வணங்கும் போது
பெறுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது!
(சந்தனம் மணக்குது)

மயில்மீது மன்னனை இருக்க வைத்து
ஏழுசுரம் பாடும் கிங்கிணிச் சலங்கை கட்டி
வெற்றி வேலுடன் சேவல்கொடி ஏற்றிவைத்து
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
(சந்தனம் மணக்குது)

படம்: கந்தரலங்காரம்
இசை: குன்னக்குடி
குரல்: சீர்காழி - டி.எல்.மகாராஜன்
வரி:



ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, இங்கே...நியூஜெர்சி கோயிலிலே, முருகன் பவனி வரும் காட்சி!
"மறந்தும் புறம் தொழாதவர்களாக" சித்தரிக்கப்படும், நெற்றியில் நாமம் தரித்த வைணவ நம்பிகள், என் ஆசை முருகனின் கைங்கர்யத்திலே, சிரித்தபடி வரும் காட்சியையும் கண்டு களிக்கலாம்! :)

Sunday, July 24, 2011

ஆடிக் கார்த்திகைத் திருநாள்












இன்று(25/07/2011) கிருத்திகைத் திருநாள்.முருகனுக்கு விருப்பமான திருநாள்.பதிவு போட அருள்கூர்ந்த முருகனுக்கு நன்றி.எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகன். கந்தன் மீது ஒரு உணர்ச்சி மிக்க பாடல்
பாடலைப் பாடியவர் மறைந்த மாமேதை திரு. சோமு அவர்கள்.பாமரனையும் கர்நாடக சங்கீதத்தை அனுபவிக்கச் செய்தவர் அவர்.உள்ளம் உருகும் வண்ணம் அவர் முருகனின் மீது பாடிய பாடல்கள் பல.அதில் ஒன்றுதான் கீழே வரும் பாடல். பாடலை படித்து, பார்த்து, கேட்டு ரசித்து ஆடிகிருத்திகயையின் நாயகனான திருத்தணி முருகனின் அருளைப் பெற அவன் தாள் போற்றுவோம்


  ராகம் : சிந்துபைரவி    தாளம் ஆதி

பல்லவி

எதைச் செய்ய மறந்தாலும்
தமிழ் முருகனை துதி செய்ய மறாவாதே... (எதை...)


அனுபல்லவி

விதிசெய்யும் சதிக்கிடையில் முருகனை துதி செய்தால்
மதி தருவான் உயர் நிதி தருவான் மனமே....(எதை....)


சரணம்

தேவர் துயர் தீர்த்த தேவ சேனாதிபதி
மூவரில் அவன் முக்கண்ணனின்  புதல்வன்
ஆவதும் அழிவதும் அவன் அருள் இன்றில்லை
அவனை மறந்தால் உண்டு அவனியில் பெரும்தொல்லை (எதை>>>.)
......)







Tuesday, July 19, 2011

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!

ஓர் அலுவல் காரணமாக ஆம்ஸ்டர்டாம் வந்துள்ளேன்! - இது என் தோழன் முன்பிருந்த ஊர்! Croeselaan கடந்து செல்லும் போதெல்லாம் பழைய நினைவுகள்! ஏனோ தெரியல, வண்டியை நிப்பாட்டி அந்தப் பழைய இடங்களை, இறங்கிப் போய் பார்க்கத் தோனுது!

(தோழனுக்காக முன்பு எழுதியது.....)
பச்சைமா மலைபோல் சாலட்
பவளவாய் கென்டக்கி சிக்கன்
அச்சுதா அஞ்சப்பர் குழம்பே
ஆயர் தம் அன்னபூர்ணா

இச்சுவை தவிர யான்போய்
மெக்டொனால்ட்ஸ் ஃபாஸ்ட்ஃபுட் உண்ணும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
ஆம்ஸ்டர் டாம் நகருளானே!! :))



இன்றைய செவ்வாய் - முருகனருளில் சீர்காழி பாடல்!



முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச்சொரிந்தே மனம் பாடி வரும்
(முதல்)

சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
(முதல்)

முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன்
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்!
(முதல்)

Thursday, July 14, 2011

ஏறுமயில் ஏறிவிளை ஆடும் முகம் ஒன்றே!

இன்றைக்கு, முருகனருளில், அனைவருக்கும் தெரிந்த அழகான பாட்டு! = ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

யார் எழுதியது? = நம்ம அருணகிரி தான்! திருப்புகழில் வரும் பாடல்!
ஆனா, திருப்புகழ்ச் சந்தம் எதுவுமே தளும்பாத "அமைதியான" பாடல்!

இதுவே கடைசித் திருப்புகழ் எனச் சொல்லப்படுவதும் உண்டு!




அது என்ன "ஏறு மயில் ஏறி"? மயில் ஏறி-ன்னு சொன்னாப் போதாதா?
ஏறு மயில்-ன்னா, யாரோ ஏறிய மயில் மீது, முருகனும் ஏறுகிறானா?
மயில் என்ன Subway Trainஆ? பலரும் ஏற, பின்னாடியே நாமும் ஏற? :)))

அட, ஏறு = காளை மாடு-ன்னு ஒரு பொருள் இருக்குல்ல?
ஏறு தழுவுதல்-ன்னு சொல்றோம்-ல்ல? (ஜல்லிக் கட்டு)

அப்ப ஏறு மயில்=காளை மயிலா?
அது எப்படிய்யா ஒரு காளை, மயிலாகும்? அருணகிரி ஆரம்பிக்கும் போதே தகாரறு பண்றாரா என்ன? ஹிஹி! இல்லை!

ஏறு-மயில் = வினைத் தொகை! ஏறின - ஏறுகின்ற - ஏறும் மயில்!
ஏறு-மயில் = உம்மைத் தொகை! ஏறும், மயிலும்!

முருகன் மயில் மேலும் ஏறுவான்,அவங்க அப்பாவின் வாகனம், காளை மீதும் ஏறுவான்!
சின்ன பய புள்ள-ல்ல! வீட்டுல இருக்குற கார், பைக்-ன்னு ஒன்னு விடாம எல்லாத்து மேலேயும் ஏறுகிறது!
அதான்....ஏறி "விளையாடும்"-ன்னு சொல்றாரு! ஏறிப் "பறக்கும்"-ன்னு சொல்லலை பாருங்க! :)

அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்! அதுனால அப்பன் வாகனமும் சுப்பனுக்கு அடங்கிருச்சி:)
அண்ணாவின் எலி வேலைக்கு ஆவாது!
அம்மாவின் சிங்கம்-ன்னா பயமோ என்னவோ கொழந்தைக்கு!
மாடு+மயில் மேல மட்டும் ஜாலியா ஏறி விளையாடுது! :)

* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்
* ஏறு(எருது) + மயில்=இரண்டிலும் ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(உயரமான) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(போர்) = போர் வாகன மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஆண்) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்=அது சென்று கொண்டிருக்கும் போதே...அதன் மீது தாவி ஏறுவான்! ஓடுற பஸ்ஸில் ஏறும் இளவட்டம் போல! :)


சொல்லித் தருகிறார்! கூடவே பாடலாம்...கேட்டுக்கிட்டே படிங்க...

madhavipanthal.podbean.com

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

ஓடும் மயிலில், ஓடி ஏறி, விளையாடும் ஒரே முகமும்...
ஞானியான அப்பாவுடனேயே பிரணவ ஞானம் பேசும் ஒரே முகமும்...

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

கஷ்டங்களைச் சொல்லி அழும் அடியார்கள் வினைகளைத் தீர்க்கும் ஒரே முகமும்...
தாரகன் என்னும் மாய அரக்கனின் மலையைப் பொடியாக்கி, வேல் பிடித்து நிற்கும் ஒரே முகமும்...

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
போரில் வந்த சூரனை, மற்ற அசுரர்களை வதைத்திட்ட ஒரே முகமும்...

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
மாறிலா வள்ளி என்னும் பேதையை, உணரவும்-புணரவும், ஆசையுடன் வந்த ஒரே முகமும்...

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

அருணாசலம் என்னும் திரு-அண்ணாமலையில் கோயில் கொண்ட கம்பத்து இளையனாரே! என் கந்தனே!
ஒரே முகங்களால் பலவும் செய்து, ஆறுமுகமாகவும் ஆகி நிற்கிறாய்!
ஆறுமுகம் ஆன பொருள் = நீ தான்!
 நீ அருள வேண்டும் = எதை? = ஆறுமுகம் ஆன பொருளை = உன்னை!


எதை அருள வேண்டும்? = உணவு, உடை, இடம் | பணம், புகழ் | காமம், சுகம் - இதெல்லாமா? இல்லை! இல்லை!

"நீ" அருள வேண்டும்=உன்னையே அருள வேண்டும்!
ஏங்கியே வாழும் பேதைக்கு, உன்னைக் கொடுப்பாயா?
ஆறுமுகமான பொருளை (உன்னை) எனக்கு அருள்!


உன் மடியில் தலை வச்சிப் படுத்துக்கிடவா?
உன் முகத்தைப் பாத்துக்கிட்டே.....உன் மூச்சின் நிழலில்.....நானும் நீயும்.....
வாழும் காலம் யாவும்,
மடியில் சாய்ந்தால் போதும்....
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா?


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.....
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு!


மகாராஜபுரம் சந்தானம் குரலில்:


சுதா ரகுநாதன் குரலில்:


எல்லாத்தையும் விட, எனக்குப் பிடிச்சது: இளையராஜா இசையில், குத்துப் பாட்டில், என் முருகனுக்குக் குத்துங்கடே:)))
தம்பிப் பொண்டாட்டி படத்தில்...மின்மினி, பிரசன்னா, ஸ்வர்ணலதா பாடும் - இதோ - குத்து Style - ஏறுமயில் ஏறி விளை ஆடும் முகம் ஒன்றே!

--------------

Thursday, July 07, 2011

முருகன்: கடவுள் பேர்சொல்லி, காணாமல் போகின்ற...

முருகனருள் அன்பர்களே, வெளிநாட்டுப் பயணமா வந்திருக்கேன்! சில காரணங்களால் இரவெல்லாம் வலி!
ஆறுதலுக்குத் தோழனை அழைக்க எண்ணி, செல்பேசியில் தட்ட, என் mp3 தொகுப்பில் கைதவறி இந்தப் பாடல் அழுந்தி விட்டது! வருகின்றான் முருகன் வருகின்றான்...ன்னு அலற...

என் முருகனே, வந்து...வந்து...வலியெலாம் விரட்டி...மெத்த்த்த்தென்று கால் பிடிச்சி விட்டாப் போல...ஒரு ஈரத்தில் அப்படியே தூங்கி விட்டேன்...

TMS பாடியது! நான் சொல்வதற்குப் பதிலா, நீங்களே இந்தப் பாடலைக் கேளுங்க! பொருள் வீறினால், உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போகும்! - வருகின்றான் முருகன் வருகின்றான்!!



வருகின்றான் முருகன் வருகின்றான்! - இந்த
வையத்தினை மாற்ற...வாழும் வழி கூற...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

பெறுகின்ற பொருளாலே பெருமானையே மறக்கும்
பித்தரின் தலைமேலே பிரம்பால் அடித்திடவே
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

துன்பத்தில் அவன்பாதம் நாடிவிட்டு - அவன்
துணையாலே வாழ்வெல்லாம் தேடிவிட்டு
இன்பத்தில் அவன்நாமம், தன்னை மறக்கின்ற
ஈனரைப் பதம் பார்க்க, இன்றே தான் விரைந்து...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

கடவுள் பெயர்சொல்லி...பொருள்சேர்த்து - பின்பு
காணாமல் போகின்ற சிறியோரை,
அடையாளமே இன்றி அழித்திடவே - வெகு
ஆவேசமாய்க் கடம்பைக் கையோடு கொண்டு...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

குரல்: TMS
வரி: ?
தொகுப்பு: "முருகா என்றழைக்கவா"


இன்று, போலி குருக்களைக் கைக்கொண்டு, தன் பாவத்தை போயும் போயும் இன்னொரு பாவியா கரைக்க முடியும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாது....

மாய மந்திர வித்தைகளுக்கும், குறி சொல்லுதற்கும், ஆரவார யோகம்-குண்டலினி-ன்னு வணிகத்தை அரங்கேற்றும் ஆன்மீக வணிகர்களை....ஒரே வரியில் என்ன சொல்லுறார் பாருங்க...

கடவுள் பெயர்சொல்லி...பொருள்சேர்த்து - பின்பு
காணாமல் போகின்ற சிறியோரை....
இது தான் நாட்டு நடப்பில், கண்ணெதிரே காணும் உண்மை! குதிரை மீதிருந்தும் விழும் உண்மை! பகுத்தறிவே திருநள்ளாறு போனாலும், தோற்கும் உண்மை!

சுய-நலத்துக்காக, குறுக்கு வழியில் மோட்சம் கிடைக்காதா, துன்பம் விலகாதா-ன்னு போலி குருக்களிடம் போவானேன்? நோவானேன்??
அன்பால் தடவித் தரும் இனிய குரு...அவனே இருக்கும் போது...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

உண்டியலில் எந்த ஆழ்வாராவது காசு போட்டு இருக்காரா? இல்ல, உண்டியல் காசால் பாவம் தான் கரையுமா?
கண்ணிலே தான் ரெண்டு சொட்டுத் தண்ணி இருக்கே! பாலைவனத்திலும் அந்தத் தண்ணி வத்தாதே! அதால் கரையாததா, காசால் கரையப் போகுது?

முருகாஆஆஆ என்று வலியில் சிந்தும் அந்த விழித்துளி மலர்கள்!
என்னவனுக்கு என் ஈரம்! வருகின்றான் முருகன் வருகின்றான்!!

Saturday, July 02, 2011

ஆயில்யன் திருமணம் - அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

ஆயில்யன் அண்ணாச்சியின் திருமணம் இன்று! (Jul-03-2011)!
முருகனருளில், இன்று ஆயில்யன் சிறப்புப் பாடல்!!


திருவாரூர் கமலாலயம் குளக்கரையில், மணப்பந்தலின் கீழ்,
கவின்மிகு இல்லறத்தில் மகிழத் துவங்கும்
அனு-ஆயில்யன்
தம்பதிகளை

வாழ்த்துவோம், மக்கா! வாங்க, வாங்க!
முருகனருளால் நீடு பீடு வாழ்க! நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

ஆயில்யன் முருக பக்தர்! முருகனருள் வலைப்பூவின் நெடுநாள் வாசகர்!
அவர் திருமணத்துக்கு நானும்-என்னவன் முருகனும் மகிழ்வுடன் வந்து வாழ்த்துகிறோம்! :)



பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்);
அதில் ஒரு நடனக் காட்சி. மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
பாட்டை விட ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், சுசீலாம்மா ஆஆஆ என்று இழுப்பாங்க பாருங்க, அது இன்னமும் சூப்பர்!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
- இது தான் அந்த நடனம் + பாடல்!
சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க...


சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா


அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் !
"உனக்கே என்னை விதி"யென்ற இம்மாற்றம், நாங்கடவா வண்ணமே நல்கு!

அச்சோ! 10:00 மணி ஃபிளைட் பிடிக்கணும் பிரேசிலுக்கு!
ஆல்ரெடி லேட்டு! ஓடு......
இந்தக் கல்யாணப் பதிவின் பின்னூட்டங்களைக் குமரன் அண்ணா கொஞ்சம் பாத்துக்கோங்க! :) Bfn!

Sunday, June 19, 2011

வள்ளி - உனக்காகவே பிறந்த முருகன்!

வள்ளியின் பாதங்களை, முருகன் 'வருடி விடுவதாக' அருணகிரி மட்டுமே அடிக்கடி பாடுவாரு! வேறு யாரும் சொன்னதில்லை! ஏன்?
* ஏன்-ன்னா அருணகிரியின் மனம் பேதை மனம்!

அவருக்கு நிறுவனக் கட்டுகள் கிடையாது!
பெருமாளே-ன்னும் திருப்புகழில் முடிப்பாரு! வள்ளியின் காலைத் தொட்டான் முருகன்-ன்னும் பாடுவாரு! இப்படி யாருமே செய்ததில்லை!

//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா// - திருப்புகழ்
முருகன் இவ்வாறு செய்வதாக, கற்பனை பண்ணிப் பார்க்கும் போது...என் மனம் நினைத்தாலே இனிக்கும்!

பொதுவா புருசன் காலைப் பொண்டாட்டி பிடிச்சி விடுவதாகத் தான், சினிமாவில் காட்டிக் காட்டி, நம்மூருல பழக்கம்!
திருமகள் "இதோ திருவடிகள்" என்று இறைவனைக் காட்டிக் கொடுப்பதற்காக அந்தப் பக்கம் அமர்ந்திருந்தால், அவளையும் கால் பிடித்து விடுபவளாக நம் சினிமா ஆக்கி விட்டது!:)

அம்மி மிதிக்கும் போது, "என் குலத்தை நீ தான் தாங்கணும்"-ன்னு, ஒரே ஒரு முறை மட்டும், பெண்டாட்டி காலைப் புருசன் பிடிப்பான் என்று தத்துவம் பேசுவாங்க! :)
அதுக்கு அப்புறம் பிடிச்சா "ஆண்மைக்கு" இழுக்கு-ன்னு சமூகம் பேசும்! பொண்டாட்டி தாசன்-ன்னு வேற பட்டம் கட்டும்! :)

ஆனால் சேயோனாகிய முருகப் பெருமான், அடிக்கடி வள்ளியை ஏன் பாதத்தில் தொடணும்? ஆம்பளைப் பசங்க வேற என்னமோவெல்லாம் தானே தொடுவாய்ங்க? :)
இதழ், கன்னம், அதுக்கும் கீழே, அப்படி இப்படி-ன்னு இருப்பதை விட்டுட்டு...என் முருகனுக்கு "அதுல" எல்லாம் வெவரம் போதாதா? :)))




வள்ளி, மாயோன் திருமாலின் மகள்! அவளுக்கு வைணவம் தான் பொறந்த வீடு! அப்போதே முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!
ஆனால் உடனே முருகனை மணக்க முடியவில்லை! தவம் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது! பூவுலகக் காதலால் தான் ஆட்கொள்ளப் படுவாள் என்றும் சொல்லப் பட்டது! என்ன செய்வாள் பேதை? :(

வைணவக் கொழுந்தானவள், நம்பியின் மகளாகப் பிறக்கிறாள்! உலகத்தையே அளந்த மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
எதற்கு காத்திருப்பு என்று தெரியாமலேயே, பாவம் அவளுக்குக் காத்திருப்பு!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூட முன்பு பேசியதில்லை!

இப்படி, தான் பார்க்காத ஒரு முருகனுக்காக,
வீட்டில் பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்!
சில சமயம் வீரமாய் விரட்டவும் விரட்டினாள்! :)

* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* முருகன் வருவானா இல்லையா = தெரியாது...
* இருப்பினும், அவன் அந்தமில் சீர்க்கு அல்லால் "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!

அவன் காதலிலேயே, அவள் ஆழ்ந்து இருந்தாள்! - Hymns Of The Drowning!

காடு மேடு எல்லாம், குகைகள் தோறும், கால் தேயத் தேய, மனமும் தேயத் தேய அலைந்து திரிந்தவள் வள்ளி!
அதனால் தான் முருகப் பெருமான், அந்தத் தேய்ந்த போன வள்ளிப் பாதங்களைப் பிடித்துக் கொண்டான்! பிடித்து இன்னும் வருடிக் கொடுக்கிறான்!

இவள் எனக்காகவே மேலுலகில் நடந்து தேய்ந்தாளே, பின் அங்கிருந்து கீழே வந்து-வளர்ந்து, தினைப்புனத்தில் நடந்து நடந்து தேய்ந்தாளே! ஹைய்யோ!
நடந்த கால்கள் நொந்தவோ
இடந்த மெய் குலுங்கவோ?

//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா//
இராமனின் பாதுகைக்கு "பாதுகா பட்டாபிஷேகம்"-ன்னு சொல்லுவாய்ங்க!
ஆனால் காதல் பாதங்களுக்கு, காதல் முருகன் செய்யும், இந்தப் பாதுகா பட்டாபிஷேகம், எந்தப் பாதுகா பட்டாபிஷேகத்துக்கும் ஈடாகாது!

பாதம் வருடிய மணவாளா! பாதம் வருடிய மணவாளா!



ஸ்ரீ வள்ளி என்றொரு படம்!
அதற்கும் முன்பே KB சுந்தராம்பாள்-SG கிட்டப்பா மேடை நாடகம் மூலமாக...மிகப் பிரபலமான வள்ளித் திருமணக் கதை!

ஆனால் படமாக வந்த போது மெகா ஹிட்! காயாத கானகத்தே என்ற பாட்டும் இதில் தான்!
TR மகாலிங்கம் முருகனாக நடிக்க-ருக்மிணி தேவி வள்ளியாக நடித்தார்! AVM என்ற நிறுவனத்துக்கு மாபெரும் முதல் வெற்றி!

ஆனால் பல நாள் கழித்து, சிவாஜி முருகன்-பத்மினி வள்ளியாக நடிக்க, இன்னொரு படமும் வந்தது! அது அவ்வளவு ஹிட் ஆகவில்லை! முன்பு முருகனாக நடித்த TR மகாலிங்கம், இதில் நாரதர்:)
படத்தில் சுசீலாம்மா, சீர்காழி, TMS, சந்திரபாபு எனப் பலரும் பாடியுள்ளனர்! இனிமையான பாடல்கள்! அதில் ஒன்று...இன்று முருகனருளில்...


வலையேற்றித் தந்த தோழன் இராகவனுக்கு நன்றி!

உனக்காகவே பிறந்த அழகன்
உனக்காகவே பிறந்த முருகன்

உனக்காகவே பிறந்த அழகன்
திரு உருவான மால் மருகன் - வேல் முருகன்

நினைத்தாலே உள்ளமும் கனியாதா - செந்தமிழ்
நிதியான பதியோடு மகிழ் வாய்த்ததா!
இணையற்ற வீரன் குமாரன் - திரு முருகன்
உனக்காகவே பிறந்த முருகன்!

படம்: ஸ்ரீவள்ளி
வரிகள்: ?
குரல்: TR மகாலிங்கம்
இசை: ஜி.ராமநாதன்


முருகா.....உனக்காகவே பிறந்த ஜீவனை உன்னிடமே சேர்த்துக் கொள்!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு!

Friday, June 17, 2011

அழகு மயில் ஏறி...


அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் – நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் – அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!

பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் – அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!

அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் – அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் – அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!


--கவிநயா

என் மனசில் நினைச்சு எழுதிய ராகத்திலேயே சுப்பு தாத்தாவும் பாடித் தந்திருக்கார்! மிக்க நன்றி தாத்தா!



படத்துக்கு நன்றி: http://my.opera.com/Tamil/albums/showpic.dml?album=196902&picture=5521553

Tuesday, June 14, 2011

அபகார நிந்தை - ஆறுதல் திருப்புகழ்!

வீண் அபவாதத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, ஆறு தலையால் ஆறுதல் கொடுத்து, ஆற்றும் ஆற்றுப்படை எது?

நக்கீரரின் திருமுருகு ஆற்றுப்படையா? = இல்லை!
இது திருப்புகழ் ஆறுதல்! அவனே தன் கரத்தால், மெல்ல மெல்ல வருடிக் கொடுத்து, ஆற்றுப்படுத்துவது!

ஆமாம்! இந்தத் திருப்புகழ் மிகவும் மனமுருக்கும் திருப்புகழ்!

மிகவும் நொந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற அருணகிரி, முருகனால் காப்பாற்றப்பட்டு, சில பாடல்களைப் பாடத் துவங்கி இருந்தார்!
அந்த வேளையில் தான் என்னவோ, அவரின் பாசமே உருவான அக்கா = ஆதி, இளம் வயதிலேயே மரணம் அடைந்தார்!

* தனக்கு மணமாகா விட்டாலும், தம்பிக்கு முதலில் மணமுடித்து, அவன் காம வேள்வியைக் கட்டுப்படுத்த எண்ணியவர்!
* அப்போதும் அடங்காத தம்பி, குடும்பத்தையும் கவனிக்காது போகவே, தான் ஓடாய் உழைத்து, அவன் மனைவியையும் காத்தவர்!
* நோய் பீடித்த தம்பியை, தாய் போல் அரவணைத்துக் காத்தவர்!

* அப்போதும் காமம் அடங்காத தம்பி, அன்று சிரித்த கணிகையரால் இன்று ஒதுக்கப்பட்ட போது துடிதுடித்தான்! அடக்க முடியவில்லை! கதறினான்!
* அவன் படும் பாட்டைக் கண்டு, மனம் அடக்கத் தெரியாத தொழுநோய்த் தம்பிக்கு, "வா", என்று தன்னையே தரத் துணிந்தவர்!
* இந்த ஒரு வார்த்தை தான் அவனை ஒட்டு மொத்தமாய் புரட்டிப் போட்டது!

தாயினும் மேலான ஆதி அக்கா! தன் தாய் = முத்தை அவன் சரிவரக் கண்டதில்லை! அந்த முத்து = இந்த ஆதி!
'முத்தை'த் தரு பத்தித் திருநகை...என்று தாயாகவே துவங்கியது திருப்புகழ்...

அந்த அக்கா தான் இப்போ மரணமுற்றுக் கிடக்கிறார்கள்! இவனோ இப்போது அருணகிரி"நாதர்" ஆகி விட்டான்!
இருந்தாலும் இவனுக்கு உடைத்துக் கொண்டு வருகிறது!
ஊர் அரசல் புரசலாக ஏசுகிறது - இவள் வாழ்வு இப்படிப் பாழாய்ப் போனதற்கு இந்த அருணகிரி'நாதரே' காரணம்!!!

அதை எண்ணியெண்ணி அவன் தலம் தலமாகத் திரிய ஆரம்பிக்கின்றான்!
பழனியில் ஒரு பாலகன்!
அவன் தான் இவன் மனத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்கிறான்!
மனத்தை ஒருமைப்படுத்த, கையில் ஜபமாலையும் கொடுக்கிறான்! செபமாலை தந்த சற் குருநாதா என்று பாடுகிறார் அருணகிரி...பழனி மலையில்!

அபகார நிந்தை பட்டு - நான் உழலாதே
...முருகா...
செபமாலை தந்த சற் குருநாதா



தலம்: பழனி
வரிகள்: அருணகிரிநாதர்

அபகார நிந்தை பட்டு.....உழலாதே
அறியாத வஞ்சரைக்......குறியாதே

உபதேச மந்திரப்..............பொருளாலே
உனைநான் நினைந்தருள்.......பெறுவேனோ?

இபமா முகன் தனக்கு......இளையோனே
இமவான் மடந்தை........உத்தமி பாலா

செபமாலை தந்த சற்......குருநாதா
திருவாவி னன்குடிப்........பெருமாளே!


மிகவும் எளிமையான திருப்புகழ்! பொருளே சொல்லத் தேவையில்லை! அவனே பொருளாக ஆகி விட்டான்!
இபமா முகன் = யானை முகன்; இமவான் மடந்தை = இமவான் பெண்ணான பார்வதி

திருவாவினன்குடி என்பது தான் உண்மையான படைவீடு! இது பழனிமலைக்கு கீழே உள்ள ஆலயம்!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கணும் என்ற மக்களின் பேச்சு வழக்கால், பின்னாளிலே மலை மேல் போகர் ஒரு ஆலயம் அமைக்க...,
அந்த ஆண்டிக் கோலச் சிலையாலும் கதையாலும், மலைமேல் உள்ள ஆலயம் மிகுத்த புகழைப் பெற்று விட்டது!

இருப்பினும், பழனி செல்லும் போது, கீழேயுள்ள திருவாவினன்குடி ஆலயத்தையும் தரிசித்து வாருங்கள்!
மயில் மேல் காலை மடித்து, ஒயிலாய் அமர்ந்த என் முருகனைக் கண்ணாரக் கண்டு வாருங்கள்!

அபகார நிந்தை பட்டு - நான் உழலாதே
செபமாலை தந்த சற் குருநாதா
முருகா.....அபகார நிந்தையில் ஆறுதல் கொடு! அணைத்துக் கொள்!

Sunday, June 12, 2011

'வைகாசி விசாகன்!'

'வைகாசி விசாகன்!'

விசாகப் பெருமானே! வினையெல்லாம் தீர்ப்பவனே!
மயில்மீது வருபவனே! மனமகிழச் செய்பவனே!
வேதத்தின் மூலமே! வாழ்வளிக்கும் தெய்வமே!
உயிர்மேவும் அழகனே! உள்ளமெலாம் நிறைபவனே!


மேலான தெய்வமே! மெய்ப்பொருளாம் பிரணவமே!
மலையேறி வருபவர்க்கு மங்களங்கள் அளிப்பவனே!
வேலிருக்க வினையில்லை எனவென்முன் வருபவனே!
மலையிருக்கு மிடமெல்லாம் முருகனென அருள்பவனே!


சிவனாரின் நுதலினிலே பொறியாக வந்தவனே!
சரவணத்தில் குழந்தையென தவழ்ந்திங்கு உதித்தவனே!
புவியினிலே பல்வேறு அற்புதங்கள் செய்பவனே!
கரங்குவித்துத் தொழுபவரைக் கரையேற்றிக் காப்பவனே!


நாடிவரும் அடியவரின் துயரெல்லாம் தீர்ப்பவனே!
நானிலத்தில் மிக்காரும் ஒப்பாரு மிலாதவனே!
ஓடிவந்து அருளிடவே உனையன்றி யாரிங்கு!
மானென்னும் குறவள்ளி பதம்பணியும் மலைக்குகனே!


கோடிக்கோடி பக்தர்களின் குலதெயவம் நீதானே!
கோடிசூரியர் ஒளிசேர்ந்து குன்றின்மேல் திகழ்பவனே!
வேடிச்சி கரம்பிடிக்க வனத்தினிலே அலைந்தவனே!
தேடியுனைச் சரணடைந்தோம் தென்பழனி யாண்டவனே!


சூரனவன் செருக்கடக்கச் செந்தூரில் நின்றவனே!
சீறிவரும் வேல்விடுத்துச் சேனைகளை யழித்தவனே!
கூர்வேலால் சூரனவன் மார்பினையே பிளந்தவனே!
ஏறிவரும் பக்தர்களைக் காத்தருளும் குஞ்சரனே!


ஈராறு விழியாலே கருணையினைப் பொழிபவனே
இருக்கின்ற தொல்லையெல்லாம் தீர்ந்திடுமே நின்னருளால்
ஓராறு முகத்தினிலே மலர்கின்ற புன்சிரிப்பால்
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் சேவகனே!


கண்ணிரண்டும் நின்னடியே காண வேண்டும்!
காலிரண்டும் நின்மலையே ஏற வேண்டும்!
தொண்டென்றும் நானுனக்கே செய்ய வேண்டும்!
நாவினிக்க நின்புகழைப் பாட வேண்டும்!


அன்னைதந்தை யானவனே! அறுமுகனே! அன்பனே!
ஏதுபிழை செய்தாலும் நீயெனையே பொறுத்திடணும்!
கன்னித் தமிழ்த் தெய்வமே! கந்தனே!நீ
காலமெலாம் என்னருகில் கைவேலுடன் வரவேணும்!


தெய்வானை இடமிருக்கக் குன்றத்தில் அருள்பவனே!
வள்ளித்தாய் வலமிருக்கத் திருத்தணியில் திகழ்பவனே!
மெய்ப்பொருளை உரைத்திடவே ஏரகத்தில் அமர்ந்தவனே!
பிள்ளைப் பிராயத்திலே பழனியிலே நின்றவனே!


அலைவாயில் அருகினிலே அருளுமெங்க ளழகனே!
பழமுதிர்ச் சோலையினிலே பக்தர்களைக் காப்பவனே!
கலையாத கல்வியும் குன்றாத செல்வமும்
நிலையாக நீயெமக்குத் தந்திடவே தாள்பணிந்தோம்!
******************


வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

முருகன் பிறந்தநாள்! - கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்..

இன்று என் ஆசைத்திரு முருகனுக்குப் பிறந்தநாள்! (Jun 13-2011 வைகாசி விசாகம்)
Happy Birthday da, MMMMMMuruga! :)
இனிய பிறந்தநாளில் இனியது கேட்டு, உனக்கு என்றும் பல்லாண்டு பல்லாண்டு!

ஒவ்வொரு ஆண்டும் மூன்று பிறந்தநாட்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! - முருகன், தோழி கோதை, ..... !
முருகன் 'பிறவான் இறவான்' என்கிற வசனம் உள்ளதால், அவன் 'உதித்த' நாள் என்றும் கொள்ளலாம்! எதுவானாலும் என்னவனுக்கு "Happy" Birthday!:)

வைகாசியில் வரும் விசாக நட்சத்திரத்தில் உதித்ததால், விசாகன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு!
அருவமும் உருவும் ஆகி, அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!!!

அந்த விசாக-விசால மனத்தவனுக்கு, என் மேல் மட்டும்...அப்பப்போ ஊடல் வரும்! போடா-ன்னு எனக்கும் கோவம் வரும்!
அந்த நேரம் பார்த்து, சில பேர் என்னிடம் வந்து கேட்பாய்ங்க! - "முருகன்-ன்னு ஒருத்தரு இருக்காரு-ன்னு நல்லாத் தெரியுமா? இதெல்லாம் கற்பனை தானே?"

ஹா ஹா ஹா!
கற்பனை என்றாலும்...கற்சிலை என்றாலும்...
கந்தனே என் சொந்தனே!
ஊடலும் உனக்கே,
கூடலும் உனக்கே,
ஆவியும் உனக்கே,
நான் மொத்தமாய் உனக்கே!





கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை என்றாலும்)

அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
(கற்பனை என்றாலும்)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே
(கற்பனை என்றாலும்)

குரல்: TMS
வரிகள்: வாலி


திருச்சி ரயில் நிலையம்! வண்டியில் உட்கார்ந்து கொண்டு இருந்தவர் பிரபல பாடகர் TMS! அவரிடம் இளைஞர் ஒருவர் தயங்கித் தயங்கித் தான் எழுதிய பாட்டைக் காட்டுகிறார்!
பாட்டைப் பார்த்தவுடனேயே TMS-க்கு பிடித்து விட்டது! ஏன்-னா பாட்டிலேயே சந்தமும் இருக்கு! அங்கேயே மெல்லிதாய்ப் பாடிப் பார்க்க....கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...
இளைஞர், கவிஞர், வாலி.....பலருக்கும் அறிமுகமாகி, பெரும்புகழ் பெற்றார்!

வைகாசி விசாகம், இன்னும் இரண்டு பேரின் பிறந்தநாளும் கூட!
* ஒரு குழந்தை = முத்தமிழ் முருகன்
* இன்னொரு குழந்தை = அத்தமிழில் வேதம் செய்த மாறன் - நம்மாழ்வார்!
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முருகா.....
என் மேல ரொம்ப கோவப்படாதே-ன்னா?
நான் நினைப்பதும் நீ நிகழ்வதும்.....நின் செயலாலே! கரெக்ட்டு தான்!
ஆனா இதையும் தெரிஞ்சிக்கோ...
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே!

நான் உன் கண்களின் வழியாகவே! = கண்களின் வார்த்தைகள் புரியாதோ? காத்திருப்பேன் என்று தெரியாதோ? Happy Birthday Honey! :)

Sunday, June 05, 2011

காதல் காவடிச் சிந்து! - முருகன் நடையழகு!

மாதவிப் பந்தல் பதிவுக்கு எதிர்ப் பதிவு இது! :)

பொதுவாக, இறைவனை வீதியுலாவுக்கு எழுந்தருளப் பண்ணும் போது, சிற்சில சமயம், நடையழகு காட்டப்படும்!
1. சிம்ம கதி = சிங்க நடை
2. கஜ கதி = ஆனை நடை
3. அஸ்வ கதி = புரவி நடை
4. ஹம்ஸ கதி = அன்ன நடை
5. சர்ப்ப கதி = அரவு நடை

* துவக்கத்தில் சிம்மம் போல் உதறிப் புறப்படுதல்,
* மெல்ல யானை போல் நடந்து,
* பின்பு குதிரை வேகம்!
* திரும்பி வரும் போது, களைப்பால் அன்ன நடை!
* கடைசியில், பாம்பு புற்றுக்குள் போகும் போது, தலையைப் படக்-ன்னு எட்டிப் பார்த்து, மொத்தமும் சுருட்டிக்கும்! அது போல் கருவறைக்குள் படக்-ன்னு புகுதல்!
= இதுவே நடையழகு!

இதெல்லாம் தோளில் சுமந்து வரும் போது மட்டுமே சாத்தியம்; தேரிலோ, வண்டிச் சகடையிலோ வைத்து இழுத்து வரும் போது சாத்தியப்படாது!

ஒரு சில வைணவத் தலங்களில் மட்டுமே, இந்தத் தோளில் கதி போட்டு, உலா வருவதைக் கவனித்துள்ளேன்! அதுவும் நாட்டியம் ஆடி ஆடி அழைத்து வரும் அழகு! மற்ற வைணவக் கோயில்களும் கூட நடையழகு கிடையாது! வெறும் சகடை தான்!

சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் கொஞ்ச நேரம் தோளில் லேசாக ஆட்டினாலும், உடனே சகடைக்கோ, தேருக்கோ மாற்றி விடுவார்கள்! நடையழகு பூரணமாக இருக்காது!
திருவாரூரில் அஜபா நடனம்; திருவண்ணாமலையில் அதே போல! ஆனால் அங்கும் சகடையில் ஏற்றி விடுவார்கள்! ஈசன் = நடன நாயகன் அல்லவா! ஆனால் என் முருகன்?


இதைப் பார்க்கும் போதெல்லாம் மனசு அடிச்சிக்கும்! என் முருகனுக்கு இப்படிப் பண்ண மாட்டாங்களா, பண்ண மாட்டாங்களா-ன்னு!

முன்னால் கும்பலாய் தமிழ் ஓதி வர,
இறைவன் தமிழுக்குப் பின்னால்!
வடமொழி சொல்றவங்க சொச்சம் பேரு, இறைவனுக்கும் பின்னாடி கொஞ்சமாய் ஓதி வருவாங்க!

இவருக்கே இம்புட்டு கெத்து-ன்னா, என்னவன் முருகன் = மாப்பிள்ளை!
அவனுக்கு எம்புட்டு கெத்து இருக்கும்! போங்கடா! :) என் முருகனும் இப்படியெல்லாம் தோளிலே ஆடி ஆடி வரும் நாள் வரும்! தமிழ் ஓதி வரும் நாள் வரும்!

அது வரை, நான் உன்னை நடையழகு செய்விக்கிறேன்-டா, Darling Muruga! Come on Honey, Letz dance! :)



* காவடிச் சிந்து ஒன்னை இன்று அவசரம் அவசரமாய் எழுதினேன்!
* படம் ஒருவன் பிறந்தநாளுக்கு வரைந்தது!
* அத்தனையும் இங்கே என் முருகனுக்கே இட்டு.....இதோ...காதல் காவடிச் சிந்து :)

(தந்தனத் தன, தந்தனத் தன,
தந்தனத் தன, தந்தனத் தன
- என்ற மெட்டிலான காவடிச் சிந்து)

வண்ண மயில் தோகை ஒன்று, முன்ன மாகப் பின்னி வைத்து
அங்கும் இங்கும் ஆடிஆடி நோக்குதே - கந்தன்
அழகு மயில் என்னை உற்றுப் பாக்குதே!

நெற்றி மேலது நீலச் சுட்டியும், பேசும் வாய்மொழி வெல்லக் கட்டியும்
விட்டுவிட்டு என்னை வந்துச் சீண்டுதே - கைகள்
தொட்டுத்தொட்டுக் கொஞ்சி என்னைத் தீண்டுதே!
(1)
------------------------------------------------------------

பழனி மலையதும், சாமி மலையதும், தணிகை மலையதும், சோலை மலையதும்
வாடி வாடி என்று என்னைக் கூவுதே - பரங்
குன்றும் செந்தூர் அலையும் காலை நீவுதே!

ஆறு ஊர் படை, வீடு மீதினில், நானும் அவனொடு, சேர்ந்து வாழ்ந்திட
ஆசை ஆசை என்று என்னை ஏவுதே - உள்ளம்
பாகில் ஊறும் பாலைப் போலப் பாவுதே!
(2)
------------------------------------------------------------

கந்தன் வந்தெனைக் கூட்டிச் செல்வேன், காலம் முழுவதும் காத்து நிற்பேன்
சொல்லி என்தன் மூச்சையும் முகர்ந்தனன் - சொக்கி
ஈர இதழில் இன்பத் தமிழைப் பகர்ந்தனன்!

வேலும் ஆடிட, மயிலும் ஆடிட, சேவற் கொடியும் சேர்ந்து ஆடிட
வேகம் வேகம் ஆக வேலன் கூடினன் - என்னுள்
வேண்டி வேண்டி என்னென்னமோ தேடினன்!
(3)
------------------------------------------------------------

தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன
ஆடி ஆடி மேனி யெல்லாம் வேர்த்தனன் - ஐயன்
தாவித் தாவித் தாகம் எல்லாம் தீர்த்தனன்!

மரகதத் திரு, மயில் அணித் திரு, மாயவன் தன், மகள் எனக்கொரு
காதலோடே ஆசை நடை நடந்தனன் - நான்
காணும் முன்னே வாசலைக் கடந்தனன்! ஐயோ

காணும் முன்னே வாசலைக் கடந்தனன்! (4)
------------------------------------------------------------

காணும் முன்னே வாசலைக்க-டம்பன் அந்தப் பாவி மீண்டும்
வேணும் என்றே வாசலை அடைந்தனன்!! - நீ
வேணும் என்றே என்னையும் அடைந்தனன்!! - முருகன்

வேணும் என்றே என்னையும் அடைந்தனன்!!

முருகா!.......

Thursday, June 02, 2011

ML வசந்தகுமாரி - குமரன் வரக் கூவுவாய்!

இசைக் குயில் எம்.எல்.வி! MLV - Madras Lalithangi Vasanthakumari! இவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது!

கர்நாடக இசை, சினிமா இசை என்று பல துறைகளில் முத்திரை பதித்தவர்! ஒரு காலத்தில் (இன்றும்)  MLV-இன் திருப்பாவை ஆடியோ கேசட்டுகள் விற்றுச் சக்கை போடு போட்டன!

MLV - நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்! இன்றைய முன்னணிக் கலைஞர்களான சுதா ரகுநாதன், A.கன்னியாகுமரி போன்றவர்களின் குருவும் கூட!
கண்ணன் மேல் உள்ள புரந்தரதாசரின் கன்னடக் கீர்த்தனைகளை இசை உலகில் பரவச் செய்ததில் பெரும் பங்கு MLV-க்கே!

மணமகள் படத்தில் பாரதியாரின் "சின்னஞ் சிறு கிளியே" பாடி, குறுகிய காலத்தில் மிகப் பிரபலம் ஆனவர்!
அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு படத்தில், "அய்யா சாமி" பாடலைப் பாடியதும் இவரே!  ராஜா தேசிங்கு படத்தில் இவர் பாடிய "பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே" பாட்டு தான் நாளடைவில் பரதநாட்டியப் பாட்டாக மாறி விட்டது! :)

இன்று முருகனருளில்...
MLV-இன் முருகான முருகன் பாட்டு - குயிலே, உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்....

தமிழ்க் கடவுள் என் முருகனுக்கு எதுக்குய்யா "நமஸ்காரம்"? :) ஆனாலும் பாடல் அருமை!
மிகவும் அபூர்வமான பாட்டு! எம்.எல்.வி இளமைக் காலப் பாட்டு - சர்ச்சைகளுக்கு உள்ளான மனிதன் திரைப்படத்தில் இருந்து...




குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் - நீ
(குமரன் வரக் கூவுவாய்)

மலை மாங்கனிச் சோலையிலே
மதுவாய் எனையே பிழிந்த
(குமரன் வரக் கூவுவாய்)

வருவார் வருவார் என்றே
வழி பார்த்தே விழி சோர்ந்தே
மாரன் கணைகள் அல்லால்
வீரன் வரக் காணேனே!
(குமரன் வரக் கூவுவாய்)

தருவார் மலர்க்கை என்றே
தவித்து ஏங்கி வாடுறேனே!
தருணம் மகிழ்ந்தே வந்தென்
தாகம் தனைத் தீர்ப்பாரோ?
(குமரன் வரக் கூவுவாய்)

படம்: மனிதன் (ரஜினி படம் அல்ல; பழைய படம்)
இசை: SV வெங்கட்ராமன்
வரி: ?
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: யமுனா கல்யாணி

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP