Sunday, November 07, 2010

கந்த சஷ்டி 3 - தமிழ்ச் சினிமாவில் "திருப்புகழ்"!

"அருணகிரிநாதர்" என்றொரு தமிழ்ப் படம்!
TMS அவர்களே அருணகிரியாக.. முழு நீளத்துக்கும் நடிச்ச படம்!


வாரியார் சுவாமிகள், சீர்காழி, எம்.எஸ்.வி போன்றவர்களும் திரையில் தோன்றியுள்ளார்கள்!
ஆனால் "முழு நீளத்துக்கும்" முருகத் திரையில் தோன்றும் நற்பேறு TMS-க்கு மட்டும் தான் வாய்த்தது!

படத்தில் அருணகிரியின் முழுக் கதையும் "ஒருவாறு" சொல்லி இருப்பார்கள்!

ஆனாலும் இன்னும் செவ்வியாகச் சொல்லி இருக்கலாம் என்பது என் தோழனின் கருத்து!
இன்னொரு படம் எடுத்து அருணகிரியை முழுக்கச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டு!

ஆனால் சுட்டிச் சுட்டி ரோபோ காலத்தில் அருணகிரியெல்லாம் சாத்தியம் ஆகுமா என்ன? :)
ஆகும்! சாத்தியம் ஆகும்!
சத்தியம் என்றுமே சாத்தியம் ஆகும்!

பக்த ராமதாசு என்ற படத்தில், யாருமே எதிர்பாராத நாகார்ஜூனா நடித்துச் சாத்தியப்படவில்லையா என்ன?
அன்னமய்யா என்ற படமும் அதே நாகார்ஜூனாவால் பெரும் வெற்றி பெற்றதே!

மாலவன் சொத்து மருகனுக்கே அல்லவா! வேங்கடவன் வெற்றி போல் வேலவனின் வெற்றியும் என்றும் சாத்தியமே!
தேவை: தகுந்த முனைப்பும், வெறுப்பு கலவாது அனைவரும் விரும்புமாறு வழங்கிடும் முறையும், எடுத்துக் கொண்ட பொருளின் நிறையும் மட்டுமே!



அருணகிரிநாதர் படத்தால் ஒரு சில திருப்புகழ்ப் பாடல்கள் மிகவும் பிரபலமாயின!
"முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற முதல் திருப்புகழ்
= அந்தப் படத்தால் தான், தமிழ்நாட்டில் பலரையும் சென்று அடைந்தது!

TMS செய்த முருகத் தொண்டுகளில் இது முக்கியமான ஒன்று!

வாயில் நுழையாத வேகத் தமிழை
அனைவர் வாயிலும் நுழைய வைத்துக் காட்டினார் TMS!

அந்தப் படத்தால், எத்தனை பேர் போட்டி போட்டுக் கொண்டு திருப்புகழை மனப்பாடம் செய்தார்கள்!!

அதற்கு முன்பும், அதே பாட்டை ஓதுவார்களும் பாடினார்கள் தான்! ஆனால் மக்களைச் சென்றடையவில்லை!
நீட்டி முழக்கும் இசையாக மட்டுமே அந்தத் திருப்புகழ் முன்பு ஓதப்பட்டு வந்தது! அதைக் கம்பீர இசையாக மாற்றிக் காட்டியது இந்தத் திரைப்படம்!

இன்றும் தமிழ்நாட்டில்..
முருகன் பரவலாக பறந்து வருகிறான் என்றால் = அதற்குத் திரைப்படங்களின் பங்கு மகத்தானது! 

ஒரு கட்டத்தில், முருகன் படங்கள் போல், வேறெந்த திரைப்படங்களும், திரைப்படப் பாடல்களும் அப்படி உருவாகவில்லை!
70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்! அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:)

1. கந்தன் கருணை
2. தெய்வம்

3. திருவருள்
4. துணைவன்

5. வருவான் வடிவேலன்
6. யாமிருக்கப் பயமேன்
7. முருகன் அடிமை

8. கந்தர் அலங்காரம்
9. சஷ்டி விரதம்

10. வேலும் மயிலும் துணை 
11. மனிதனும் தெய்வமாகலாம்
12. வேலுண்டு வினையில்லை
13. திருவிளையாடல் - partly
14. ஸ்ரீ வள்ளி - old & new
15 ...& அருணகிரிநாதர் - 
etc etc main movies... & other lil' scenes in so many films!:)

இன்னிக்கும் பலருக்கு...
மனத்திலே, முருகன் மாயம் செய்கிறான் என்றால்...
= சிறு வயதில் பார்த்த, இந்தச் சினிமாக்களின் பங்கு மிக மிக உண்டு!

கே.பி.சுந்தராம்பாள் அம்மா & சீர்காழி-டி.எம்.எஸ்
ஏ.பி நாகராஜன்-கே.சங்கர்
தேவர் ஃபிலிம்ஸ் என்று அத்தனையும் ஒன்று சேர்ந்த மகத்தான கால கட்டம்!
சினிமாவில் பக்திப் பாடல்கள்-ன்னா..
அது முருகன் பாடல்கள் தான் என்ற நிலை அப்போது!:)


இதுவே..
தமிழ்க் கடவுள்-ன்னா = அது முருகன் மட்டுமே...
என்ற "தோற்றத்தையும்" சேர்த்தே உருவாக்கியது= சினிமாவின் சக்தி அப்படி! :)




சொல்லப் போனால் "தமிழ்க் கடவுள்" என்ற பதம் எந்த இலக்கியத்திலும் நேரடியாகச் சொல்லப்படவில்லை!
பண்டைத் தமிழ்ப் பண்பாட்டில் இறையியல் தொன்மத்தைக் காட்ட வந்த சொல் அஃது!

தொல்காப்பிய கால கட்டத்திலேயே திருமாலும் முருகனும் - இருவரும் தமிழ்க் கடவுளே! கொற்றவையும் கூட..
இருவருமே தமிழர்களின் அக-புற வாழ்வில் ஊறி இருந்ததைக் காட்டும் சங்க இலக்கியம் = மொத்த தொகுப்பும் இங்கே!

தமிழ்க் கடவுள்-ன்னா, அது முருகன் மட்டுமே என்ற தோற்றத்தையும் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கியது சினிமாவின் சக்தி! :)
"இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்திலே"...என்று ஏபி நாகராஜனின் "வெறும்" வசனமே "தரவு" ஆகியது! :)

மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்.. தொல்காப்பியத் தமிழ் உலகம்..
*முன்னை மரபின் பெரும்பெயர் முதல்வ= திருமால்
*அரும் பெறல் மரபின் பெரும் பெயர் = முருகஇதெல்லாம், சினிமாவின் முன் எம்மாத்திரம்??
அட, தொல்காப்பியம் பெரிதா, சினிமா பெரிதா?? :)




தேவர் பிலிம்ஸ் = இதுக்கு ஒரு முக்கியக் காரணம்!
சிறந்த இயக்குநர்களான (என் அபிமான) ஏ.பி. நாகராஜன் & கே. சங்கர் = மற்றொரு காரணம்!
எம்.ஏ. திருமுகம் & ஆர். தியாகராஜன் போன்ற இயக்குநர்களையும் சொல்லி ஆகணும்!

இவர்கள் அனைவரும், ஒரு தலைமுறைக்கே, "முருக அலை" கொண்டு சேர்த்தவர்கள்! சினிமா (எ) மந்திர மயக்கத்தில் நாமும் கட்டுண்டோம்!

இதில் பலவும், "புராணக் கதைகள்" தான் (உண்மை அற்றவை);
தமிழ்க் கடவுளாம் முருகனின்,"தமிழ்த் தன்மையை" உணர்த்தாது= சம்ஸ்கிருத புராணங்களின் அடிப்படையில் அமைந்த "கதைகளே"!

எனினும், காட்சியின் பிரம்மாண்ட விரிவால், சினிமா மூலமாக, முருகனைக் கொண்டு சென்றது!
சினிமா வாகனம், மயில் வாகனத்தை விட வேகம் அல்லவா?:))


நமக்கு, மெய்யான சங்கத் தமிழ்த் தரவுகள், அதிகம் தெரியாது!

முதலாம் ஒளவை= அதியமான் காலம்; 2nd AD
அவ எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
அப்படீன்னா, Jesus க்கு அப்பறம் தான், முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))
இந்த "Logic" எல்லாம் சினிமா முன் = செல்லாது; செல்லாது:)

சங்கத் தமிழ் முருகன் = நடுகல் தொன்மம்! 
பூர்வ குடிகளின் தொன்மம்!
அதுவொரு அரும் பெரும் மரபு; "இயற்கை வழிபாடு"! அவ்வளவே!

இதர "புராணக் கதைகள்" = வடமொழி ஆதிக்கத்தால் வந்தவை;
= வீரபாஹூ!
(பாஹூ = தோள்; சுந்தர பாஹூ = அழகிய தோளன்); |
கஜபாஹூ (கயவாகு) -ன்னு ஒரு சிங்கள மன்னனைச் சிலப்பதிகாரம் சுட்டும்;

ஆனா, வீரபாஹூவை -> வீரபாகு -ன்னு ஆக்கி, அவனைத் "தமிழ் வீரன்" -ன்னு காட்டிக் கொண்டு இருக்கிறோம்!
சம்ஸ்கிருத புராணத்தை வைத்தா, "தமிழ்க் கடவுள்"-ன்னு நிலைநாட்டுவது?:))
ஐயகோ முருகா!:(
-----------

திருவிளையாடல் கதையும் இப்படியே! = "கொங்கு தேர் வாழ்க்கை" எனும் எழிலார் சங்கத் தமிழின் மேல் ஏற்றப்பட்ட "பொய்ப் புராணம்"!

பொண்ணு கூந்தலை மோப்பம் புடிச்ச "செண்பகப் பாண்டியன்" வரலாற்றிலேயே இல்லை:)
நக்கீரர் காலத்துப் பாண்டியன் = நன்மாறன் (இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்)

“அ முதல் ஹ” = 48 சம்ஸ்கிருத எழுத்து; அவையே 48 சங்கப் புலவர்கள் ஆச்சாம் (கபிலர்/பரணர்...)
அவங்களோட, சிவபெருமானே 49-வதா, சங்கத்தில் உட்கார்ந்தாராம்! சொல்லுறது: அதே “தருமி-திருவிளையாடல்” தான்!:)

So..., சங்கப் புலவர்களுக்கே 
= சம்ஸ்கிருத எழுத்து தான் மூலம்? புரியுதோ?:(

Proof: திகழ்தரு அகார ஆதி , ஹாகாரம் ஈறாச் செப்பிச்
புகழ் தரு நாற்பத்து எட்டு, நாற்பத்து எண் புலவர் ஆகி

சங்க மண்டபம் உண்டாக்கித், தகைமை சால் சிறப்பு நல்கி,
அங்கு அமர்ந்து இருத்திர் , என்ன இருத்தினான் அறிஞர் தம்மை!
(- சங்கப் பலகை கொடுத்த படலம்; தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்)

அடக் கொடுமையே! ஒரு சைவத் "தமிழ் இலக்கியமே", தனக்கு வடசொல்லு தான் மூலம்-ன்னு சொல்லுதே!:(

இங்கு வந்தமர்ந்து, தமிழில் "பாண்டித்யம்" பெற்று, இங்கேயே மாற்றி எழுதும் சில தமிழ் "வாத்திகள்"!
அதை உணராது... "இழிவையே பெருமை" -ன்னு, நாமும் "இலக்கியம்" பேசிக் கொண்டு வாழ்கிறோம்!

Let mythology be mythology! No issues!
But to mix it on living Tamizh Poets & harming Tamizh = A Big NO!

இதே, ஒரு வடமொழி இலக்கியத்திலாச்சும், நம்ம தமிழ் போய் "ஏத்தி" இருக்கா?

அ முதல் -ன் வரை 30 எழுத்து; இந்த முப்பது  தான் முப்பது-முக்கோடி தேவர்கள் ஆச்சு!
ஆய்த எழுத்து தான் "ஆயுத மோகினி - விஷ்ணு பகவான்" ஆச்சு -ன்னு நாம ஏத்தி இருக்கோமா?

ஏன், தமிழுக்கு மட்டும் இப்படியொரு நிலைமை?:(
* "மதி மயக்கம்" கூடத் தீர்ந்து விடும்
* "மத மயக்கம்" - தீரவே தீராது!


(குறிப்பு:  மேற்சொன்னவை அவரவர் மனசாட்சிக்கான கேள்விகளே!

நாம, இயக்குநர்களைக் குறை சொல்ல முடியாது; So called "தமிழ் இலக்கியத்தில்" உள்ளதைத் தானே, படமாக எடுக்கிறார்கள்?
தமிழ் இலக்கியத்தில், "புராணத்தை" நுழைத்தது, அவர்கள் பிழை அல்லவே!)

நாம சினிமாவில் திருப்புகழ் என்ற பேசுபொருளுக்கு வருவோம்!
= அது தானே இந்த ஆண்டு சஷ்டிப் பதிவுகளின் மையப் பொருள்!

1. TMS = அருணகிரிநாதர் படத்தில், (பலப்பல திருப்புகழ்கள்)
2. வாணி ஜெயராம் = யாமிருக்கப் பயமேன் படத்தில், பாதி மதி நதி (சுவாமிமலைத் திருப்புகழ்)

அருணகிரிநாதர் படத்தில் வந்த ஒரு அழகிய திருப்புகழைப் பார்ப்போமா?

இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! அப்படியே கால்கள் தானாக நடனமிடும் திருப்புகழ்!
இந்தத் திருப்புகழக்கு என் முருகன் கால்களே நடனமாடிய போது, நம் கால்கள் எம்மாத்திரம்?

* திருப்புகழ் முதலில் தோன்றிய தலம் = திருவண்ணாமலை! = முத்தைத் தரு!
* ஆனால் அதோடு அப்படியே நின்று விட்டது! சும்மா இரு, சொல் அற!
* பின்பு வயலூர் சன்னிதியில் தான் முழு மூச்சாகத் துவங்கியது! = கைத்தல நிறை கனி!
* அப்படியே விராலி மலையில் வளர்ந்து, திருச்செந்தூர் வந்து சேர்ந்தது!

செந்தூர் வந்த சேர்ந்த அருணகிரி, அப்போ தான் முதன் முறையாக, அவன் செந்தில் செம்மேனியைச் சேவிக்கிறார்!
ஆளை விழுங்கி விடும் அழகன் அவரையும் விழுங்கி விட்டான்!

சேயோனின் அரவணைப்பில் மனம் துள்ளுகிறது அருணகிரிக்கு! கால்கள் துள்ளுகின்றன! வாயும் துள்ளுகிறது! வாய் மணக்கும் தமிழும் துள்ளுகிறது!

அருணகிரி முன்னழகை மட்டும் தானே பார்த்தார்! உற்சவ மூர்த்தியின் பின்னே வரப் பணிக்கின்றான் முருகன்!
= முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்!
புறப்பாட்டில் பின்னே வந்த அருணகிரிக்கு, தன் துள்ளும் நடனக் கோலத்தைக் காட்டி, மகிழ்விக்கின்றான் செந்திலான்!

அவர் பாட, அவன் ஆட, 
அவனுள் நான் ஆட,
என் முருகனின் நடனம்
இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்....சினிமாவில் திருப்புகழை...


தண்டை அணி வெண்டை, அங் கிண்கிணி சதங்கையும்,
தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே - நின்
தந்தையினை முன் பரிந்து, இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே


கால்களில் தண்டை ஒலிக்க...வெண்டை என்னும் வீரக் கழல் ஒலிக்க... சதங்கை, கிண்கிணி ஒலிக்க...சிலம்புகள் ஒலிக்க...
இப்படி தொம் தொம் என்று ஆடும் நடனத்தில், பல ஒலிகளும் கொஞ்சுகின்றன!
உன் அப்பாவாகிய ஈசனை வணங்கும் கோலத்தில் கருவறைக் காட்சி கொடுக்கும் செந்தில்-அம்-பதியானே! நீ இன்பம் பெற்ற மகிழ்ச்சியில் ஆடும் அன்பு....என்னையும் ஆட்டுவிக்கிறதே!

கண்டுற கடம்புடன், சந்த மகுடங்களும்,
கஞ்ச மலர் செங்கையும், சிந்து வேலும்,
கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்,
கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?


இதைக் கண்டு....
உன் கடம்ப மாலை ஆட....திருமுடி மகுடம் ஆட....தாமரைக் கைகள் ஆட, சிந்து வேல் ஆட....
கண்கள் ஆட, முகம் ஆட...சந்திர நிறம் போல் ஒளிரும் உன் மேனி ஆட...
என் கந்த வேளே.....கண்ணாளா.....என் கண் குளிர....இது அத்தனையும் என்னை வந்து சந்திக்குமா? சந்திக்குமா? சொல்லுடா!

புண்டரிகர் அண்டமும், கொண்ட பகிரண்டமும்,
பொங்கி எழ, வெங்களம் கொண்ட போது,
பொன்கிரி எனச் சிறந்து, எங்கினும் வளர்ந்துமுன்,
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்


தாமரையில் தவம் செய்யும் பிரம்மனின் உலகம் ஆட....மற்ற உலகங்களும் சேர்ந்து ஆட....
நீ போருக்குப் புறப்பட்ட போது பொங்கிய மகிழ்ச்சி போல், இன்று ஆட்டமும் மகிழ்ச்சி பொங்க...
பொன் மலை என்னும் செந்தூர் கந்தமாதான பர்வதத்தில் வளரும் வேலா...
உன் ஆட்டத்தை, அதோ அந்த ஆட்ட நாயகன் - குடமாடு கூத்தன் - திருமாலும் (பிரமன் தந்தை) பார்த்து மகிழ...ஆடல் வல்லான் உன் அப்பனும் பார்த்து மகிழ...

கொண்ட நடனம் பதம், செந்திலிலும் என்றன்முன்,
கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே!
கொங்கை குற மங்கையின் சந்தமணம் உண்டிடும்,
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!!


நீ ஆடும் இந்த நடனப் பதங்கள்....செந்தூரில் மட்டுமா? என் மனத்திலும் கொஞ்சி நடனம் செய்யும் கந்தவேளே!
குற மங்கையான அந்தப் பேதைப் பெண்ணின் மார்பில் வீசும் சந்தன அழுக்கையும் உண்டவா, எனைக் கொண்டவா!
கும்பமுனி அகத்தியன் கும்பிடும் தமிழ்க் கடவுளே! முருக வேளே!

என் ஆசை தீர ஆடு!
உன் ஆசை தீர ஆடு!
நம் ஆசை தீர ஆடு!

தண்டை அணி வெண்டை அங் கிண்கிணி சதங்கையும்
தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே
....முருகா!
என்னுள் நீ ஆட, உன்னுள் நான் ஆட, நம்முள் நாம் ஆட....என் முருகவா...ஆடுக ஆடுகவே!


படம்: அருணகிரிநாதர்
வரிகள்: அருணகிரி
இசை: ஜி.ராமனாதன்
குரல்: TMS

Saturday, November 06, 2010

கந்த சஷ்டி 2: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

இரண்டாம் நாள் சஷ்டிப் பதிவான இன்று, ஒரு சூப்பர் ஹிட் சினிமாப் பாடலைப் பார்ப்போமா? சினிமாவில்-திருப்புகழ் என்பதை நாளை பார்ப்போம்! ஓக்கே-வா? :)

மருதமலை முருகன்

நேற்று சுவாமி மலை முருகன்! இன்று மருத மலை முருகன்!
அது நான்காம் படைவீடு! இது ஏழாம் படைவீடு!
படைவீடுகள் மொத்தமே ஆறு தான் என்றாலும் தேவர் ஃபிலிம்ஸார், பாச மிகுதியால் தாங்களாகவே அப்படிச் சொல்லிக் கொள்வது! :)
ஐந்தாம் படைவீடான குன்று தோறாடல் -அதிலேயே மருதமலையும் வந்து விடும்!


கொங்கு மணித் திருநாட்டின் மருத மலையானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளது! கோவைக்குச் சுமார் 15 கிமீ மேற்காக, ஜிலுஜிலு என்று இருக்கும் மலை! கச்சியப்பரின் பேரூர் புராணத்திலும் இந்த மலை சொல்லப்படும்! பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து வழிபட்ட மலை!

சரீ...அது என்ன "மருத" மலை?
மலை-ன்னாலே "குறிஞ்சி" தானே? எப்படி "மருதம்" ஆகும்?

மருத மரங்கள் அதிகம் உள்ள மலையாதலால் மருத மலை! மருத மரம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! வாசனை மிக்கது!
Myrtle என்று ஆங்கிலத்திலும், அர்ஜூன மரம் என்று வடமொழியிலும் சொல்லப்படும்! மல்லிகா-அர்ஜூனம் என்று ஆந்திரத்தில் உள்ள சிவபெருமான் கோயிலும் இதே மருத மரங்கள் நிறைந்த வனம் தான்!
மருத மரம்

நீட்டு நீட்டான இலை! வெண்மையும் ஊதாவும் கலந்த அழகிய மருதப் பூக்கள்! கொத்துக் கொத்தாய்ப் பூக்கும்!
எங்கள் கிராமத்திலும் இந்த மரத்தைப் பார்த்து இருக்கேன்! தீபாவளி நோன்புக்கு - (கேதார கெளரி நோன்பு) இதைப் பறித்துத் தான் அம்மா கலசம் நிறுத்திப் பூசை செய்வார்கள்! நாம மருதமலைக்கு வருவோம்...

பச்சைப் பசேல் என்ற மருதமலையின் அழகே அழகு! திருமலை-திருப்பதி போல் அவ்வளவு பெரிய மலை இல்லை, சிறு குன்று தான்! Approx 800 steps! எனவே நடந்தே செல்லலாம்! நடந்து சென்றால் தான் பசுமையின் குளிர்ச்சி தென்படும்!

தான்தோன்றி விநாயகரை வணங்கிப் படியேறும் முன்னால், மூன்று விதமான கற்களைக் காணலாம்! ஆலய நகைகளைத் திருடிய கள்வர்களை, குதிரையின் மேல் சென்று துரத்தி, காலத்துக்கும் கல்லாய்ப் போகுமாறு முருகன் சபித்ததாக ஒரு கதை உண்டு! :) என் முருகனுக்குச் சபிக்கத் தெரியுமா என்ன? :)

திருடர்களை அவன் சபித்தான் என்றால், என்னை ஆயுசுக்கும் திருடிக் கொண்டானே! அவனை நான் சபிக்கட்டுமா? :)
"டேய் பாவி...என் அசடா, கசடா, கந்தவேளே...உன் தன்னோடு உறவேல் எனக்கு! அந்த உறவு ஒழிக்க ஒழியாது! என்னை இப்படி ஆழித் துரும்பெனவே அலைகழிக்கிறாயே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு எனக்கு ஆயிரம் பல்லாண்டு! நீயும்-நானுமாய் நமக்குப் பல்லாண்டு பல்லாண்டு! :)"


பாம்பாட்டிச் சித்தரால் பிரபலம் அடைந்த மலை மருதமலை!

பாம்பு பிடிப்பதை வழக்கமாகக் கொண்டவர் பாம்பாட்டிச் சித்தர்; "வெறும் பாம்பைப் பிடிக்கிறாயே, உடல் பாம்பை (குண்டலினி) பிடித்து அடக்கப் பார்" என்று சட்டை முனி இவருக்கு யோக நெறியைக் காட்டினார்!

ஒரு நாள், தாகம் தாளாமல் இங்குள்ள மருத மருத்தின் கீழே வீழ்ந்த போது, அதிலிருந்து ஊற்றாய்ப் பாய்ந்து தாகம் தணிவித்தான் தணிகையான்!
அன்றிலிருந்து இங்கேயே தங்கி, முருகனின் புதிய உருவச் சிலையை உருவாக்கி, பாம்புகளோடு தானும் ஆடி, அவற்றையும் ஆட்டுவித்து, முருகனை வழிபட்டவர் பாம்பாட்டிச் சித்தர்!

ஆலயம் 12-13ஆம் நூற்றாண்டு! திருமுருகன் பூண்டி ஆலயத்தில், மருதமலைக்கான கல்வெட்டுகளைக் காணலாம்! ஆலயக் கருவறை பெரிது கிடையாது! சிறிய மண்டபம் தான்! ஆனால் அதிலுள்ளவன் பெரியவன்! பெரிய கள்வன்! உள்ளம் கவர் கள்வன்!

பழனி மலையானைப் போலவே கொஞ்சும் தோற்றம்! ஆனால் அவனை விட இவன் இன்னும் உயரம் = ஆறடி! என்னைப் போலவே! :)
பழனிக்கும் மருதமலைக்கும் ஒரே வேறுபாடு = மருதமலையானுக்குத் தலைப்பாகை உண்டு! ஒரு சிறு குடுமியும் உண்டு! பழனியில் வெறும் மொட்டை தான்! :)

கையில் தண்டம் மட்டுமே! வேலை மார்பில் தாங்கி நிறுத்தி உள்ளார்கள்! இன்னொரு கை இடுப்பில்!
பொடி புனை நெற்றி! காந்தக் கண்கள்!
கூரிய நாசி! கொவ்வைச் செவ்வாய்!
பரந்த மார்பு! வளைந்த இடுப்பு!
அதற்கும் கீழே.....
இக பர வளைவு! மணக்கும் கோவணம்! :)
கருவறை முழுக்க என்னவனின் வாசனை தான்! அந்த நீறின் வாசனையில் நிரம்பி...கிறங்கி...ஐயோ முருகாஆஆஆ!!!


பாம்பாட்டிச் சித்தர் செய்த முருக வடிவத்துக்கு முன்னமேயே, வேல் வடிவில் இயற்கையாக முருக வழிபாடு இருந்தது இங்கே!
ஆதி மூலத்தானம் என்று இன்றும் அதைக் காணலாம்! நடுகல் போல் முருக வடிவம் இருக்க, அருகில் என்னைப் போலவே உயரமாக வள்ளி, சற்றே குள்ளமாக தேவானை அம்மை! :)

மருதமலைக்கு பின்புறம் அதே மலையில் இன்னொரு ஆலயம், அனுவாவி முருகன் ஆலயம்! இங்கே பெருமாளும்-அனுமனும் உண்டு!
ஆலய முகப்பு வளைவிலேயே இதைக் காணலாம்! ஆனால் ஏனோ பலர் இங்கே செல்வதில்லை!

மருதமலையின் மறுபுறம் ஏறி இறங்கினால் அனுவாவி! ஆனால் காட்டுப் பாதை! இயற்கை அழகும் மயிலும் யானையும் கொஞ்சும்!
கோவையில் இருந்து நேரடியாகவும் செல்லலாம்! அதுவே வசதியானதும் கூட!

மருதமலையைக் காட்டிலும் அனுவாவி மலை நடுவாந்திர அழகு!
பச்சை மா மலை போல் மேனியின் நடுவே, வெள்ளை ஆலயம் பளிச்-சென்று தெரியும்! வெளிப் பூச்சுக்கள் இல்லாத இயற்கை!
அடுத்த முறை சென்றால் மிஸ் பண்ணாதீங்க! மேலே படத்தைப் பாருங்க! அந்த அழகுக்கு, உங்கள் கால் உங்களைத் தானே இழுத்துச் செல்லும்!


இன்றைய பாட்டுக்கு வருவோமா?
= உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி! தேவர் ஃபிலிம்ஸ்! குன்னக்குடி இசையில்...
மருதமலை முருகனைச் சிறப்பித்து என்றே வந்த படம்! சீர்காழி-குன்னக்குடி இருவருமே படத்தில் தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் தோன்றி, மருதமலை முருகனைப் பற்றிப் பேசுமாறு ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! முருக வெறியர் என்று கூடச் சொல்லலாம்! :)
நல்ல குரல் வளம் அவருக்கு! அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, அவருக்குத் தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க, வெறும் பாடகர் AVM ராஜன், பெரும் பாடகர் ஆகி விடுகிறார்!

ஒன்று வந்தால் இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்! ஆனால் முருக அன்பர்கள்??
AVM ராஜன் முருகனையும் எளிமையையும் விடவே இல்லை! பழசை மறக்கவில்லை! ஆனால் அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்!

முன்பு கோவிலின் வெளியே பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி, புதுக்காரி ஆகி விட்டாள்! சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி ஆகி விட்டாள்! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!
முருகன் Vs ஆசை என்று வந்து விட்டால், முருகனா முக்கியம்? தத்தம் ஆசை தானே முக்கியம்?? :)

முருகனையே எண்ணிக் கைப் பற்றியவனுக்கும், பண முதலின் எண்ணிக்கை பற்றுபவளுக்கும் உறவு முறிந்ததா?
முருகன் முறிப்பானா என்ன? அவன் மனது வைத்தால்....நடவாதனவும் நடந்திடாதா என்ன? இசையாதனவும் இசைந்திடாதா என்ன? பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
என்று அத்தனையும் TMS-இன் கணீர் சொத்து! சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை-என்று பாடி இருப்பாங்க! சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்! முத்துத் திருப்புகழைச் செப்பி விட்ட அருணகிரி முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை-என்று கம்பீரமாக இழுப்பார்!

இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்...உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என்ன....நம்மையெல்லாம் "அதிகாரம்" செய்பவனா முருகன்? அல்லவே!
இது திருக்குறள் அதிகாரம்-சிலப்பதிகாரம் போல, அந்த அதிகாரம்! ஒவ்வொன்றும் நமக்காக முருகன் பார்த்துப் பார்த்துச் செய்யும் அதி-காரம் இல்லா அதிகாரம்!
அவனே எனக்குப் பதியான பதிகாரம்! கதிகாரம்! விதிகாரம்! என் உடலுக்கும் உள்ளத்துக்குமான அதிகாரம்!


பாடலை இங்கே கேட்டுக் கொண்டே படியுங்கள்!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே! - உந்தன்
வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி - அவன்
மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - உன்
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!


படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

Friday, November 05, 2010

கந்த சஷ்டி 1: தமிழ்ச் சினிமாவில் "திருப்புகழ்"!

இதோ....இனிய தீபாவளியும், நோன்பும் முடிஞ்சி, கந்த சஷ்டி துவங்கி விட்டது! (Nov-6-21010)!

ச"ஷ்"டி என்று இருப்பதால், இது பகல் பத்து/இராப் பத்து போல் தமிழ் விழாவாக இல்லாமல் இருக்கலாம்!
ஆனால் "கந்த" என்று இருப்பதால், என் முருகனின் விழாவே தான்! முருகன் இருப்பதால் தமிழும் கூடவே இருக்கும் தான்!

பதிவு எழுதத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் முருகனருளில் சஷ்டிப் பதிவுகளைத் தவற விட்டதில்லை!
சில காரணங்களினால், இந்த ஆண்டு தவற விட்டு விடுவேனோ-ன்னு ஒரு அச்சம்! அஞ்சு முகம் தோன்றில்??
மருத்துவ மனையிலும் மயிலான் தோன்றி விட்டான்!

அவனைத் தவிர ஒன்றை விட முடியும்....
அவனைத் தவற விட முடியுமோ?

சஷ்டிப் பதிவுகள் - வெறும் பாட்டாக மட்டும் கொடுக்காமல், ஒவ்வொரு நாளும் ஒரு படைவீடு-ஒரு பாடல் என்றெல்லாம் முன்பு கொடுத்திருந்தோம்!
இந்த ஆண்டு என்ன செய்யலாம்? திருப்புகழைத் தரலாமா? அதுவும் ஜனரஞ்சகமாக! சினிமாவில் வந்த சில திருப்புகழை?

சில திரையிசைத் திருப்புகழும், சில திரையிசை முருகன் பாட்டுமாய்...
கதம்பமாய்க் கடம்பனுக்கு...இந்த ஆண்டும், இதோ....சஷ்டிப் பதிவுகள்!



திருப்புகழைச் சுவைக்கலாமா? அது என்ன அவ்வளவு சுவையாகவா இருக்கும்?

அவன் இதழ்ச் சுவை தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :)
ஆனால் அதை விடவும் அதிக சுவை ஒன்னு இருக்கு! ஆகா....என்னாது அது?

உனக்குப் பிடிச்ச பெருமாள் கோயில் பொங்கலா? லட்டா? அதிரசமா?
திருக்கண் அமுதா? சாற்றமுதா? அக்கார அடிசிலா? சுகியமா?
ததியோதனமா? தேன் குழலா? திருப்பாவாடைச் சோற்றமுதா? ஹிஹி!

என் முருகனின் இதழைக் காட்டிலும் சுவையானது = தமிழ்ச் சுவை!
கனியிடை ஏறிய சுளையும், முற்றல் கழையிடை ஏறிய சாறும்
இனியன என்பேன் எனினும், தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!

வெறும் தமிழுக்கே இவ்வளவு சுவையென்றால், வேலன் தமிழுக்கு?
இனியனின் இதழ்ச் சுவையோடு கூடிய இன்-தமிழ்ச் சுவை = இனியது கேட்கின், இனியது சுவைக்கின்!
இந்த ஆண்டு சஷ்டிப் பதிவுகளின் மையப்பொருள்(Theme) = தமிழ்ச் சினிமாவில் திருப்புகழ்!


யாமிருக்க பயம் ஏன்? என்றொரு தமிழ்ப் படம்! எம்.எஸ்.வி-வாலி கூட்டு!

ஜெய்கணேஷ், கே.ஆர்.விஜயா, ஃபடாபட் ஜெயலட்சுமி, ராஜேஷ், மனோரமா என்று பலரும் நடித்த படம்!
"யாமிருக்க பயமேன்" என்றே சுசீலாம்மாவும் தன் தேன் குரலால் பாடி இருப்பாங்க! "திரை அருட் செல்வர்" கே.சங்கர் அவர்கள் இயக்கிய படம்!

இந்தப் படத்தில் திருப்புகழா? அதுவும் ஒரு சூப்பர் பெண் குரலில்?

திருப்புகழ்-ன்னாலே அவ்வளவு சீக்கிரம் புரியாதே, செந்தமிழில்-ன்னா இருக்கும்? சந்தம் வேறு "தொம் தொம்" என்று வந்து, நம் தமிழ் உச்சரிப்பையே சோதித்துப் பார்க்குமே!
ஆனால் இந்தப் பாடல் அப்படி அல்ல! மிகவும் எளிமையான-அழகான திருப்புகழ்! சினிமாவுக்கேற்ற திருப்புகழ்! :)
அறுபடை வீடுகளில் எனக்கு மிகவும் பிடிச்சவன் - இதழ்க் கோட்டோரம் கள்ளச் சிரிப்பழகன் - சுவாமி மலை முருகன் - அவன் மீதான திருப்புகழ்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யின் கை வண்ணத்தில், வாணி ஜெயராம் குரலில்,
அருணகிரியின் தமிழ் எப்படி ஒரு நதி போல நெளிகிறது? பார்க்கலாமா - பாதி மதி நதி!

படம்: யாமிருக்கப் பயமேன்
குரல்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.வி
வரி: அருணகிரிநாதர்

திருப்புகழ்: பாதிமதி நதி
தலம்: சுவாமிமலை



பாதி மதி நதி போது மணி சடை
நாதர் அருளிய குமரேசா!
பாகு கனி மொழி மாது குற மகள்
பாதம் வருடிய மணவாளா!

பாதி மதியும், கங்கை நதியும் சடையில் சூடிய ஈசன்! அவன் அருளிய குமரேசா!
பாகு+கனி இரண்டின் இனிமையும் கொண்ட ஒரு பேதைப் பெண்!
முருகன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, தன் வாழ்வாக ஏற்றுக் கொண்ட ஒரு பேதை! அவளின் பாதம் வருடியவா! என் மணவாள முருகா!

அவள் பாதங்களை எதுக்கு முருகன் பிடிச்சி விடணும்?
இது போல நக்கீரர் முதற்கொண்டு யாருமே சொன்னதில்லையே! அருணகிரி மட்டும் ஏன் இப்படி அடிக்கடி பாடுறாரு?

பொதுவா ஆண்கள் கால்களைப் பெண்கள் தான் பிடிச்சி விடுவாங்க! சினிமாவில் அப்படித் தான் காட்டுவாய்ங்க! ஆண்களோ பெண்ணின் வேறு பாகங்களை அல்லவா வருடுவாங்க? :)

ஏன் முருகன் மட்டும் அங்கெல்லாம் பிடிக்காம, அவ காலை மட்டும் அடிக்கடி தொடுகிறான்?
என் முருகனுக்கு இந்த மேட்டரில் விவரம் போதாதோ? :) நைட் லைஃப்-ன்னா என்னான்னே அவனுக்குத் தெரியாதோ? :)
இதோ, அப்பறமா படிச்சிப் பாருங்க, அந்தக் காரணத்தை!


காதும் ஒரு விழி காகம் உற அருள்
மாயன் அரி திரு மருகோனே!
காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழிபட அருள்வாயே!

பொதுவா பல நேரங்களில், சக தோழிகளிடம் கூட, முகத்தைப் பார்க்காது, "வேறு எங்கோ" பார்த்துப் பேசுவது தான் பலரின் வழக்கம்! :)
ஒரு பெண்ணின் மார்பகத்தைப் பார்ப்பது என்பது முற்றிப் போய்.....தெருவோரக் காமத்தால் (Roadside Romance), அவளைச் சீண்டவே நினைத்தவன் ஒருவன்!

ஆனால் சீண்ட முடியவில்லை! ஏன்-ன்னா கணவனும் அருகில் இருக்கிறான்!
ஆசை துடிக்கிறது! காகமாய் மாறி, ஏதோ பட்சணத்துக்காக "அறியாமல் கொத்துவது" போல், அவள் மார்பை அறிந்தே கொத்துகிறான் அந்த ஆண்மகன்!

யார் இந்த யோக்கிய சீலன்? அசுரனா?? = சேச்சே! தேவன்!
தேவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரனின் சீமந்த புத்திரன் = ஜெயந்தன்!

இதைக் கண்ட இராகவன், வெகுண்டு, புல்லையே பாணமாகக் கிள்ளி எறிய, அதுவே சக்கரமாகச் சுழன்று துரத்த, தப்ப முடியாமல், அவள்-அவன் பாதங்களிலேயே வந்து வீழ்கிறான்!
ஒரு கண்ணை மட்டும் புல்லினால் துளைத்து, காமத்தின் ஊற்றுக் கண்ணைத் துளைக்கிறான் இராகவன்! = காதும் ஒரு விழி, காகம் உற, அருள் மாயன் அரி, திரு மருகோனே!

இதை எதுக்கு இங்கு அருணகிரி குறிப்பிட்டுச் சொல்லணும்? இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?? :)

* அன்று....அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கும் ஒரு விழி போனது!
* இன்று........தேவர்களின் இளவரசன் ஜெயந்தனுக்கும் ஒரு விழி போனது!
எம்பெருமானுக்கு தேவ-அசுர பேதங்கள் கிடையாது!
எம்பெருமான் அனைவருக்கும் பொது! அவரவர் செயல்களே தேவ-அசுரத்தனத்தை நிர்ணயிக்கின்றன!

* அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனை, "பிரகாலதாசுரன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = "பிரகலாதாழ்வான்"!
* தேவ குலத் தலைவன் மகனை, "ஜெயந்த தேவன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = காகா-அசுரன்!

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்!
அப்படியான எந்தை மாயனின் மருகோனே! என் முருகோனே! காலன் எனை வந்து அணுகாமால், உனதிரு காலில் வழிபட அருள்வாயே!

காலன் வந்த போது தான் ஜெயந்தன் (எ) காகாசுரனுக்குக் காலில் விழத் தோன்றியது!
ஆனால் காலன் எனை அணுகும் முன்பே, காமம் அணுகட்டும்! உன் திருவடிக் காமம் அணுகட்டும்! உனதிரு காலில் வழிபட அருள்வாயே!
பேதையின் காலை வருடிய மணவாளா! உனதிரு காலில் வழிபட அருள்வாயே!



ஆதி அயனொடு தேவர் சுரர் உல(கு)
ஆளும் வகையுறு சிறை மீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே!

பிரம்மன் முதலான தேவர் கூட்டம் சிறையில் வாடிய போது, அவர்களை சிறை மீட்டு வந்தவனே! என் கந்தவனே!
ஆடும் மயிலில் ஏறி, ஆடாது அசங்காது வா முருகா! அமரர் சூழ வர, வரும் வரதா!

சூதம் மிக வளர் சோலை மருவிடு
சுவாமி மலை தனில் உறைவோனே!
சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே!!

மணம் மிக்க சோலைகள் மருவிக் கொஞ்சும் காவிரி ஆற்றங்கரையில், சுவாமி மலையில் உறையும் சுவாமியே!
சுவாமிக்கும் நாதனான சுவாமி நாதப் பெருமாளே! ஏரகம் நீங்கா இறைவனே!

அன்று சூரன் உடல் அற இரண்டாக்கி, சேவல்-மயிலாக்கி, மாயத்தால் உண்டான கடலை வற்றச் செய்து,
வேலை விட்டவா! என்னைத் தொட்டவா! உன் திருவடிக் காமத்தை எனக்கு அருள்வாயே!



என்னாங்க எளிமையான திருப்புகழ் தானே? கே.ஆர்.விஜயாவே ஈசியாப் பாடுறாங்க-ல்ல? :)

சினிமாவில் அல்லாமல், பக்தர்கள் குழுவாகப் பாடுவதாகவும் இந்தப் பாட்டு இருக்கு! ஏ.எஸ்.ராகவன் அவர்கள் தலைமையில், திருப்புகழ் அன்பர்கள் சேர்ந்து பஜனை போல் பாடுவது இங்கே:


பாதி மதி நதி
போது மணி சடை
நாதர் அரு ளிய
-ன்னு ஒரு நதி ஓடி வரும் சந்தம் போலவே இருக்கு பாருங்க!
பாதி மதி நதி! இதான் நம்ம அருணகிரியின் தமிழ்!


இந்தப் பாட்டு முன்பு இணையத்தில் இல்லை! Youtube-இலும் இல்லை!
அடியார்கள் பொருட்டு, எனக்கு இதை வலையேற்றித் தருமாறு என்னுயிர்த் தோழனைக் கேட்டேன்!
அவனோ, என்னிடம் பதிலுக்கு வேறென்னமோ ஒன்னு குடு-ன்னு கேட்டான்! போடா என்று முட்டிக் கொண்டது :)

இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று நான் சொல்ல...
இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று அவன் சொல்ல...

அடியார்கள் முதலில், அப்புறம் தான் உன் சொந்த வேலை என்று நான் சொல்ல...
இல்லை...என் சொந்த வேலை தான் முக்கியம் என்று அவன் சொல்ல...

கோ.இராகவனிடம் கோபித்துக் கொண்டே தூங்கி விட்டேன்...
கோ.இராகவனிடம் சிரித்துக் கொண்டே கனவில் கேட்டேன்...
மறுநாள் காலை....விழித்த கணம்....கணினியைத் திறக்க....
Youtube-இல் Youravi-க்கென்றே இந்த பாடல் தரவேறி இருக்கு! :)

சொந்த வேலை முக்கியம் என்று சொன்ன தோழனின்
கந்த வேலை கண்ட களிப்பில்....
மீண்டும் தொலைபேசியில் சீண்டல் தொடங்க...

அதை...இன்று...இந்தத் திருப்புகழில் எண்ணிப் பார்க்கின்றேன்!
இரு நிலம் மீதில் எளியனும் வாழ....எனது முன் ஓடி வர வேணும்!
எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ!

Thursday, November 04, 2010

ஷஷ்டி விரதம்

முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.




முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.



விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.






விரத பலன்




ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.





ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ





செவ்வாய்க்கிழமை, அங்காரகனுக்கு உரிய நாள். அங்காரகனின் மூலக் கடவுள் முருகன் என்பதால், இந்தத் தோஷம் [செவ்வாய் தோஷம்] உள்ளவர்களும், பொதுவாகவே முருக பக்தர்களும், அங்காரகனின் கடுமையிலிருந்து விடுபட 'செவ்வாய்க்கிழமை விரதம்' முருகனுக்கென நேர்ந்து கொள்வார்கள்.


மற்றபடி சஷ்டி விரதத்தில் சொல்லியிருப்பது போலவே ஒரு பொழுது மட்டும் உணவுண்டு, முருகனுக்கான தோத்திரங்களைப் படிப்பதன் மூலம் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

எத்தனை வாரங்கள் வேண்டுமானாலும் தொடரலாம்.

நன்றி : வி.எஸ்.கே

Monday, October 18, 2010

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

ஆன்மீகத்தைப் போயும் போயும், "சினிமாத்தனமாக" எழுதுவதாக முன்பெல்லாம் ஒரு அன்பான குற்றச்சாட்டு உண்டு, என் மீது! :)
ஆனால் இந்தக் குறிப்பிட்ட சினிமாப் பாட்டு போல், நான் தமிழாய் நேசிக்கும் அருணகிரியின் திருப்புகழ் கூட என்னைக் கசிய வைத்ததில்லை!

* எத்தனையோ திருப்புகழ் உண்டு! = நாத விந்த கலாதீ நமோநம, முத்தைத் தரு பத்தித் திருநகை, பாதி மதி நதி போது மணி சடை, கலை மேவும் ஞான பிரகாசா, அயெனனவாகி அரியெனவாகி...
* எத்தனையோ கந்த கவசங்கள் உண்டு! = கந்த சஷ்டிக் கவசம், சண்முக கவசம், ஸ்கந்த குரு கவசம்...

* எத்தனையோ நல்ல மரபு இசைப் பாடல்கள் உண்டு = பெ.தூரன், தண்டபாணி தேசிகர், ரமணி அம்மாள், முருகனைப் பாடவென்றே பிறந்த சீர்காழி கோவிந்தராஜன், TMS, கே.பி. சுந்தராம்பாள்!!!
* மெல்லிசையில் கூட சுசீலாம்மா, வாணி ஜெயராம் பல அழகிய முருகன் பாடல்களைப் பாடி உள்ளனர்! (முருகனருள் வலைப்பூவின் வலப்பக்கம் பாருங்கள்)

ஆனால்,
ஆனால்,
ஆனால்....
எந்தச் சந்தப் பாடலும், இந்தக் கந்தப் பாடல் போல் கசிய வைக்குமோ?

MS ராஜேஸ்வரி என்பவர் பாடியது! இன்றைய பல பேருக்கு. இவர்கள் யார் என்று கூடத் தெரியாது! ஆனால் இந்தப் பாட்டு???

எனக்கு மிகுந்த தாபமாக இருக்கும் போது, இந்தப் பாட்டில் உள்ள ரெண்டே வரி தான் மனதிலும் வாயிலும் ஓடிக்கிட்டே இருக்கும்!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

என் முருகனோடு பேசுவது போலவே இருக்கும்!
அவன் சட்டையை உலுக்கி, டேய் முருகா முருகாஆஆஆ என்று அவனை இரு கன்னத்திலும் அறைந்து,
அறைந்த கையோடு அவன் கையும் கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து கொள்வது போலவே இருக்கும்!

இன்று அதே ரீங்காரத்தில்....நான்.....இதோ!



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
வரி: வாலி



எல்லாருக்கும் தெரிந்த தகவல், குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
இதை வாலியா எழுதினார் என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு! இப்படிச் சாகா வரம் பெற்ற பாடலாகி விட்டதே!

இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி, குழந்தைக் குரல் பாட்டுக்கென்றே சொந்தமானவர்!
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா, மண்ணுக்கு மரம் பாரமா, படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு போன்ற பாடல்கள் பிரபலமானவை! ஆனால் அக்காலக் குழந்தைப் பாடகரான இவர் பாடிய இக்கால இன்னொரு பாட்டும் மிகவும் பிரபலம் = நான் சிரித்தால் தீபாவளி!


முருகா...என் கண்ணாளா...
நான் உன் சட்டையை உலுக்கிக் கேட்கட்டுமா?
கையால் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
இதழாலும் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
உன் தோளில் சாய்ந்து கொண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே கேட்கட்டுமா?

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

Saturday, October 16, 2010

குன்றெங்கு இருந்தாலும்....!


குன்றெங்கு இருந்தாலும்

சென்றங்கு அருள்பவனே
என்றென்றும் எம்மனதில்
குன்றாது நிற்பவனே
ஆறுமுக ஆண்டவனே!
என்னப்பன்
ஆறுமுக ஆண்டவனே!

எம் எண்ணத்தை
ஒன்றாக்கி
அதையே நான் குன்றாக்கி
வைத்துள்ளேன் நீ குடிகொள்ளவே!
வேலா!
நீ இங்கு குடிகொள்ளவே!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

நானென்ற ஒன்றிங்கு
இல்லாமல் செய்திட்டாய்!
நீயன்றி வேறொன்றாய்
ஏதொன்றுமில்லாமல்
எனையே நீ ஆட்கொண்டாயே!
முருகா!
எனையே நீ ஆட்கொண்டாயே!

அன்னையாய் நீயிருந்து
அன்பை ஊட்டுவித்தாய்!
அப்பனாய் நீயிருந்து
அறிவை ஊட்டுவித்தாய்!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!
வேலா!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

எம் சிந்தை ஒருபொழுதும்
உமை அகலாதிருக்கும் வண்ணம்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
இப்பொழுதும் எப்பொழுதும்
முப்பொழுதும்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!

உயிரெழுத்து, மெய்யெழுத்து
எல்லாமாய் நீயிருக்க
வெறும் எழுத்தாய் நானிங்கு
உன் பாதச் சரண் தேடினேன்!
முருகைய்யா!
உன் பாதச் சரண் தேடினேன்!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

(இதை இயற்றியவரும் ஒரு நாமக்கல் கவிஞர்(!?)தான்.)
---------------------------------------------------------------
ஒரு கொசுறுச் செய்தி!
ஒரு ஆங்கிலேய முருக பக்தர் "முருக தாஸ்" கந்த புராணத்தை தன்னோட தளத்தில்அழகா (ஆங்கிலத்தில்தான்) பதிவு செஞ்சி வெச்சிருக்கார்! நீங்களும் படிச்சிப் பாருங்க!

Thursday, October 07, 2010

உனைப் பாடும் "தொழில்"!

இந்தப் பதிவு, நாமக்கல் சிபி என்னும் சிபி அண்ணாவை, முருகனருளில் வாழ்த்தும் பொருட்டு, தாமே பெற வேலவர் தந்ததினால்...

முருகனருள் வலைப்பூவை முதன் முதலில் 2006-இல் துவக்கியவர் இவரே! = அவரே நாமக்கல் சிபி!

அப்பறம் தோழன் இராகவன், குமரன், TRC, VSK, வாத்தியார் ஐயா எல்லாம் இணைய...
அப்பறமா வந்து சேர்ந்த வந்தேறியும் "கந்தே"றியும் தான் அடியேன்! :)

பணி நிமித்தமோ என்னவோ சிபிக்கு! ஆளு பிஸியாகி விட்டார்! இந்தப் பக்கமே வரதில்லை :)
1. இனி, அப்பப்ப வந்து, முருகனருளில் பதிவிடவும்
2. சிபி சேர்ந்துள்ள புதிய அலுவலகத்தில், பணியில் சிறந்து, வளர்ச்சி காணவும்...
முருகனருள் அன்பர்கள் அனைவரும், கூடி இருந்து குளிர்ந்தேலோ வாழ்த்திடுவோம்!

பாடும் பணியே பணியாய் அருள்வாய்! - உனைப் பாடும் "தொழில்"!




பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்! சுட்டி இதோ!

குரல்: TMS
வரிகள்: தமிழ் நம்பி
இசை: VR மாணிக்க விநாயகம்

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!
முருகா! முருகா! முருகா! முருகா!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே - அன்பு
கருணையில் உருவான அற்புதமே!
சிற்பச் சிலையாக நிற்பவனே - வெள்ளைத்
திருநீறில் அருளான விற்பனனே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)

அமுதம் இருக்கின்ற பொற்குடமே - இயற்கை
அழகு வழிகின்ற எழில் வனமே!
குமுத இதழ் விரிந்த பூச்சரமே - உந்தன்
குறுநகை தமிழுக்கு திருவரமே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)

Tuesday, September 28, 2010

வை+ணவ முருகா வருகவே! வாராதிருக்க வழக்குண்டோ?

பல சமயங்களில் மனம் பேதலிக்கும் போது, நமக்குன்னே இருக்கும் ஒரு ஜீவன், இங்கே, இப்போது வந்தால், எவ்வளவு இதமா இருக்கும்?
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே! தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!

-
இப்படியெல்லாம் ஏக்கம் வந்தால், அப்போது என் நெஞ்சில் ஓடும் பாட்டு.......இது தான்!

இந்த முருகன் பாட்டை எழுதியவர் ஒரு "வைணவர்"!
அப்படி-ன்னு உலகம் முத்திரை குத்தி வச்சிருக்கு!
வை+நவமோ, வையாத+நவமோ...
இந்த வைணவத்தை என் முருகன் தழுவிக் கொண்டான்!

அந்தக் கதை அங்கே! அந்தப் பாடல் இங்கே!




பேராதரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!!

சேரா நிருதர் குல கலகா,
சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்

தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன் திருமுகத்தைப்


பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா

வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்


வாரா திருக்க வழக்கு உண்டோ?
வடிவேல் முருகா வருகவே


வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே!!



பாடல்: திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்
பாடியது: பகழிக் கூத்தர்

வைணவன் என்று சிலர், இகழிக் கூத்தனாய் இகழ்ந்தாலும்,
வை+நவா என்று அவன், பகழிக் கூத்தனை அணைத்துக் கொண்டான்!

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே!
தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!
வாரா திருக்க வழக்கு உண்டோ? வடிவேல் முருகா வருகவே!!
பாரா திருக்க அறுமுகம் ஏன்?
பேதையைப் பார்க்க வருகவே!!

Tuesday, September 14, 2010

வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

அரோகரா!! அரோகரா!! அரோகரா!! அரோகரா!!
அரோகரா!! அரோகரா!!

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக ...... மலராறும்
அரோகரா!!

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
அரோகரா!!

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
அரோகரா!!

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் (இது விராலிமலை திருப்புகழ்)



அரோகரா!!

முருகா! முத்துக்குமரா!! வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

எண்ணங்கள் ஈடேற எங்களுள்ளம்தான் மகிழ
எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்,
பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்
பாபம் தீர உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

மலர்களெல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
மலர்கள் எல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ,
சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ
சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண,
இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண
இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
நாங்கள்----பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்,
பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்
விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
கும்பாபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பூர்ண அபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
அரோகரா!அரோகரா!!அரோகரா!!! அரகரோகரா!!!




......... சொல் விளக்கம் .........

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ...
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ...
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும்,

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ...
சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு
தோள்களையும்,

நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...
நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ... முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ...
பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும்,
இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,

ஆராயும் நீதி வேலும் மயிலும் ...
நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும்,

மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ...
ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ...
மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும்
(மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன்.

***

திரு. பித்துக்குளி முருகதாஸ் ஐயாவும் குழுவினரும் பாடிய இந்தப் பாடலையும் வரி வடிவத்தையும் அனுப்பிய திரு. பிரகாசம் ஐயாவிற்கு நன்றி.

Monday, August 23, 2010

அந்தோணி முத்து! என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி!

இந்த நாளில், முருகனருளில் ஒரு அஞ்சலி!
ஊனங்கள் பல இருந்தும், வானங்கள் தொட முடியும் என்பதற்கும்...
எவ்வளவு தோண்டினாலும், தன்னம்பிக்கை சுரக்கச் சுரக்க, சுரக்கும் என்பதற்கும்...
என் கண் முன்னே எடுத்துக்காட்டாய் நின்றவர்...
அந்தோணி முத்து அண்ணா!

இளம் வயதில், அவர் மறைந்த செய்தி, என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!


இப்பத் தான், நானும் மதுமிதா அக்காவும், சென்னை புழலேரியில், இவர் வீட்டிற்குச் சென்று பார்த்தாப் போல இருக்கு! இளையாராஜா இசையில் உச்சி வகிடு எடுத்து-ன்னு பாடக் கேட்டாப் போல இருக்கு!

காலன்றி, மேல்கொண்டு, தவழ்ந்து தவழ்ந்தே அவர் எங்களை உபசரித்த விதம்...
இல்லத்துக்கு வருவோரை முகத்தாலேயே எப்படி மனங்குளிர வரவேற்கலாம் என்பதை நண்பர்களை விட இவரிடத்தில் தான் தெரிந்து கொண்டேன்!

என்னவொரு முனைப்பு, தன்னார்வம், சுய சம்பாத்தியம், பொது முனைப்பு!
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்! - இந்தக் குறளுக்கு உரை = அந்தோணிமுத்துவின் வாழ்வு!

இதோ, அந்தோணி அண்ணன் பற்றிய இசை இன்பப் பதிவு!
அவருக்குப் பிடிச்ச சிவரஞ்சனி பாட்டு பத்தி அவரே எழுதின பதிவு இங்கே!

ஊரெல்லாம் ஓரோர் பேர் சொல்லி என்னை அழைக்க...நீங்கள் மட்டும் "விஷ்ணு" என்று எதற்கு அழைத்தீரோ? அறியேன்!
ஆனால் இதோ உங்கள் "விஷ்ணுவின்" துதிகள்! - பிதாவே, இவர் மனத்தை சொஸ்தம் பண்ணி ஆற்றும்! இணையடி நீழலில் ஆற்றும்!

என் முருகா.....அந்தோணிமுத்து அண்ணாவின் ஆவி குடி இருக்க...ஆவி-நன்-குடி அருள்வாய் தானே?
Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46
Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.
Funeral Mass offered at 11.00 a.m. on August 23, 2010, at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.



ஆவி குடி இருக்க - ஆவினன் குடி! இதுவே இந்த வார முருகனருள் பாடல்! சீர்மிகு சீர்காழியின் குரலில்...இதோ


ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி - அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
(என் ஆவி குடியிருக்கும்)

பாவங்களைப் போக்கும் பால் காவடி
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி
(என் ஆவி குடியிருக்கும்)

சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி
(என் ஆவி குடியிருக்கும்)

நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப்பொற் கழலடி
(என் ஆவி குடியிருக்கும்)

Tuesday, August 03, 2010

குவா குவா! குகா குகா! - ஊமைச் சிறுவன் கதை!

குழந்தை பிறக்கலையே என்ற கவலை ஒரு சிலரை வாட்டினால், குழந்தை பிறந்தும்......ஒரு சிலரைக் கவலை தொத்திக் கொள்ளும்!
ஒரு ஜீவன் உலகை எட்டிப் பார்ப்பதை வைத்துத் தான், எத்தனை எத்தனை இன்ப உணர்ச்சிகள், துன்ப உணர்ச்சிகள்! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர..."நான்" என்றே இருந்த மனிதன், "நாம்" என்று திசை மாறுகிறான்! :)

தாமிரபரணிக் கரை ஊரான ஸ்ரீவைகுண்டம் என்னும் அழகிய தலத்தில் ஒரு சைவ வேளாளக் குடும்பம்! சண்முக சிகாமணிக் கவிராயர்-சிவகாம சுந்திரி அம்மை!
குடும்பமே தமிழ்ப் புலமையிலும் முருகனிலும் தான் நடந்து கொண்டிருந்தது! அந்த வீட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு சத்தம்...குவா-குவா! குகா-குகா!

குமரகுரு என்று பேரிட்டுக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குழந்தைக்கு, பதி்லுக்குக் கொஞ்சத் தெரியவில்லை!
"அம்மா, அப்பா" என்று அழைத்தால், அதைக் கேட்க, ஏங்கும் காது!
ஆனால் "மா, பா" என்று அழைத்தாலே போதும், அதாவது நடக்காதா என்று ஏங்கியது மனம்! - குழந்தைக்குப் பேச்சு வரவில்லை!

அட, எல்லாக் குழந்தையும் முதல் ஆண்டிலேயே பேசி விடுகிறதா என்ன? அதன் போக்கில் விட்டுப் பார்ப்போம் பார்ப்போம் என்று பார்த்தது தான் மிச்சம்.....கேட்க ஒன்றும் மிச்சமே இல்லை! ஐந்து ஆண்டுகள் கழித்துத் தெரிந்தது...குழந்தை "ஊமை"!



இந்த "ஊமை" என்கிற சொல்லே பிடிக்கலை! அது என்ன "ஊமை ஊரைக் கெடுக்கும்" என்று பழமொழி? நல்லாவே இல்லை! வேறு ஏதாச்சும் நல்ல சொல் உள்ளதா?

பார்வையற்றோர், காது கேளாதோர் என்பது போல்...வாய் பேசாதோர் என்று அழைப்பது ஓரளவு மரியாதையாக இருக்கும்!
விழிப்புலனர்கள், செவிப்புலனர்கள், வாய்ப்புலனர்கள் என்று அழைக்கலாமோ? Physically Handicapped-ஐ விட, Physically Challenged என்பது போல், இது பிடிச்சிருக்கு!

நடுங்கிப் போன குமரகுருவின் பெற்றோர் மருத்துவரை நாடினர்!
பிறவிப் பலனாய் வாய்த்ததை பிற மருத்துவர் தீர்க்க முடியுமா? பிறவி மருத்துவன் அல்லவா தீர்க்க முடியும்!
யார் அவன்? = என்னை...செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

மடியேறிய குழந்தையுடன் படியேறினாள்! முருகன் படியேறினாள்! காதலன் வீட்டுப் படி இல்லை என்று ஆனாலும், முருகன் வீட்டுப் படி இல்லை என்று ஒருநாளும் ஆகுமா?

அந்தச் செந்தூர் வீட்டுப் படியிலேயே படியாய்க் கிடந்தனர் பெற்றோர்!
படியாய்க் கிடந்து, உன் பவளவாய் காண்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்!
இங்கோ, படியாய்க் கிடந்து, மகன் பவளவாய் பேசக் காண்பேனே என்று ஆயிற்று பெத்த வயிறுப் பாசுரம்!

திருச்செந்தூர் தரையிலே வளர்த்தி விட்ட குழந்தை, முருகனருள் முன்னிற்க, வாய் அசைக்கத் தொடங்கியது! அலை அசைக்கும் திருச்செந்தூரில் வாய் அசைக்க, வந்து சேய் அசைக்க, கண்டு தாய் அசைக்க, தமிழ் அசைக்கத் தொடங்கியது!

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய்...

என்று கந்தர் கலி வெண்பா பிறக்கத் துவங்கிற்று! பிள்ளைக் கலி தீர வந்த குழந்தை, கந்தர் கலியைப் பாடத் துவங்கிற்று!

(புத்தேள் = இறைவன்; தேறு அரிய = தெளிய முடியாத; பழமறை = பழமையான மறைகள்;
தேமேவு = இறைவனை சார்ந்த; நாதமும் = நாத தத்துவம்; நாதாந்தம் = விந்து தத்துவம்
நவை = குற்றம்; போதமும் காணாத போதம் = அறிவால் அறிய முடியாத இறைவன்!)


சிறுவனுக்கு முன்பு வாய் மூடி இருந்தாலும், அவன் செவி மூடவில்லை போலும்!
தந்தை சண்முக சிகாமணிக் கவிராயரின் தமிழை, வீட்டில் கேட்டுக் கேட்டே வளர்ந்த குழந்தை, இன்று பாட்டு பாட்டே என்று பாடத் துவங்கி....பையன் குமரகுரு, சில நாளில், குமரகுருபர சுவாமிகள் ஆனார்!



துறவு கொள்ளும் முன், தன் குருவான தருமபுர ஆதீனத்தின் சொற்படி, பல தலங்களுக்குச் சென்ற குமரகுருபரர்...
* மதுரையில் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடினார்!
* வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழைப் பாடினார்!
* தில்லையில் சிதம்பரக் கோவை பாடினார்!
* பின்பு துறவு பூண்டு, காசிக்குச் சென்று, சகலகலாவல்லி மாலை பாடினார்!
பிள்ளைத்தமிழ் நூல்களில் எல்லாம், இவரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, இலக்கிய வளத்துக்காகப் பெரிதும் கொண்டாடப்படுகிறது!

தில்லையில், பல சைவ அன்பர்கள், இவரிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோள் வைத்தனர்!
தமிழில் உள்ள யாப்பருங்கலக் காரிகை என்னும் பிற்காலத் தமிழ் இலக்கண நூல்! அதில் சமணக் கருத்துக்கள் உள்ள உதாரணச் செய்யுள்கள் இடம் பெறுவதாக அவர்கள் கருதியதால், அதை மாற்றி, அந்நூலின் இலக்கணங்களுக்குச் சைவ விஷயமாகச் செய்யுள் அமைத்துத் தர வேண்டினார்கள்! குமரகுருபரர் முதலில் தயங்கினாலும், பின்னர் எழுதித் தந்தது தான் சிதம்பரச் செய்யுள் கோவை!

இவர் வாழ்வில், சிங்கத்தின் மேலேறிச் சென்று, டில்லி பாதுஷா ஒளரங்கசீப் மன்னரைச் சந்தித்ததாகவும், இந்துஸ்தானி மொழியிலேயே பேசி, அவரிடம் கொடைகள் பெற்று, காசியில் குமரகுரு மடம் அமைத்ததாகவும் சொல்லுவார்கள்!

ஆனால் இது வரலாற்றில் எவ்வளவு தூரம் நிற்கும் என்று தெரியவில்லை!
ஆனானப்பட்ட ஒளரங்கசீப் சிவாலயத்துக்கு நன்கொடை அளித்தாரா? அவர் சிசியா (Jiziya) என்னும் மத வரியைப் போடாமல் விட்டாலே போதும் என்று இருந்த காலம்! அதனால், இப்படியான அதீத சமயப் புனைவுகள் தேவை இல்லை!

மேலும், திருமலை நாயக்கர் முன்னிலையில், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியதாகவும் இன்னொரு குறிப்பு உண்டு! ஆனால் நாயக்கரோ 1659-லேயே மறைந்து விட்டார்! ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்ததே அப்போது தான்!
அப்படி இருக்க, அதற்கு முன்னரே நாயக்கர் முன்னிலையில் பாடி, உடனே காசி யாத்திரையும் சென்று, டில்லி பாதுஷாவைச் சந்தித்தார் என்பதும் ஒட்டாது!

எனவே, டில்லி பாதுஷா என்று குறிப்பிட்டாலும், அது தாரா ஷிகோ-வாக இருக்க வாய்ப்புண்டு!
இவரே ஷாஜகானின் மூத்த வாரிசு! நல்ல சமயப் பொறையாளர்! இவரிடம் குமரகுருபரர் மான்யம் வாங்கி இருக்கலாம்! பின்னாளில், அண்ணன் தாரா ஷிகோ ஒரு முஸ்லீமே அல்ல என்று அறிவித்த ஒளரங்கசீப், தாராவை ஓட ஓட விரட்டி, காட்டிக் கொடுக்க வைத்து, கொன்றது எல்லாம் வரலாற்றுப் பிரசித்தம்!

எனவே, குமரகுருபரர் போன்ற நல்-அடியவர் கதைகளில், ஒட்டாமல் இருக்கும் விஷயங்களைத் திருத்தி எழுதுவது, நாளைய தலைமுறைக்கு நன்மையே பயக்கும்! இதை இன்றைய சமயப் பெரியவர்கள், எதிர்ப்பு என்று எண்ணாது, புரிந்து கொள்ள வேணும்!


காசியில் இன்றும் குமரகுரு மடம் உள்ளது! அங்கே மடம் அமைத்துத் தங்கி, வடகாசியில் தென்மொழித் தொண்டாற்றி வந்தார் குமரகுரு!

இந்துஸ்தானி/இந்தியிலும் புலமை கொண்டவர் ஆதலால், அம்மொழிகளிலும் உபன்னியாசம் நிகழ்த்துவார்! அப்போது ஆற்றியது தான் கம்பராமாயணச் சொற்பொழிவு! = கேட்டவர் துளசிதாசர்! பிறந்தது துளசி ராமாயணம்!

வடமொழி ஆதிக்கம் மிகுந்த அந்தக் காலக் கட்டத்திலேயே, பெருமாள் கோயில்களில்...
* தமிழ்ப் பாசுரங்கள் ஓதி முன்னே செல்ல,
* தமிழை அந்த இறைவனே பின் தொடர,
* அதற்குப் பின்னர் தான் வடமொழி வேதங்களையே ஓதி வந்தனர்!
இந்தக் காட்சிகளைக் கண்ட குமரகுருபரர் மிகவும் லயித்துப் போய்,
இது போன்ற ஒரு நிலை, தில்லையில் வராதா, தமிழ் கடவுளான முருகன் கோயில்களில் தமிழ் என்று முன் செல்லுமோ என்று ஏங்கினார்! அப்போது அவர் வாய் விட்டுப் பாடியது தான் - "பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங் கொண்டலே!!"

காசியிலேயே குமரகுருபரர் நெடுநாள் வாழ்ந்து, தமிழ்த் தொண்டாற்றி, பின்னர் சிவனடியைச் சேர்ந்தார்!
அன்னாரின் பிள்ளைத் தமிழ் = பிள்ளையின் மீதும், தாயின் மீதும்!
* ஒன்று முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்!
* இன்னொன்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!
இரண்டுமே தமிழ் இலக்கியத்தின் விலைமதிக்க முடியாத பெருஞ்சொத்து! அரசு குமரகுருபரர் நினைவாக வெளியிட்ட அஞ்சல் தலை இதோ!



சரி, எதுக்கு இன்னிக்கி குமரகுருபரர் பற்றி மாதவிப் பந்தலில் பதிவு-ன்னு பாக்கறீங்களா? அவர் குருபூசை-நினைவு நாள் ஏதாச்சும்? இல்லை!
கீழே Youtube காணொளியைப் பாருங்க! - தாய்ப்பால் கொடுத்தாள்! தமிழ்ப் பால் கொடுத்தான்!!


தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி - தனிக்கருணைத்
தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்!
வாய்ப்பால் `நான்பாடும் பழந்தமிழில் - பாடத் தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்!!

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்! - பல்
முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான் - கலை
ஞானக்கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


ஆங்கார சக்தி என்னும் ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு கந்தன் வந்தான்!
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வந்தகலி தீர்ந்ததென்று கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்!
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வரிகள்: கண்ணதாசன்
குரல்: ராதா ஜெயலட்சுமி (ராதா ஜெயலட்சுமி பாடிய இதர திரைப்பட முருகன் பாடல்கள், இதோ! ; மனமே முருகனின் மயில் வாகனம் என்ற பாட்டு மிகவும் பிரபலமானது!)
இசை: கே.வி. மகாதேவன்
படம்: ஆதிபராசக்தி

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP