முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ் வரிசையில், "பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்" என்ற Fast Beat கண்ணன் பாட்டைப் பார்த்தோம் அல்லவா?
அதே அலைவரிசையில், பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களை, முருகனருள் வலைப்பூவிலும் தொடர்ந்து காண்போம்! வாருங்கள்!
இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்!
1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான்
2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார்
இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்!
இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்...
இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்...
நாம் புகழாததால், நாம் வணங்காததால், நாம் நினைக்காததால் ஆண்டவன் நம்மை ஒரு போதும் தண்டிக்கப் போவதில்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை வணங்காதவரைத் தண்டிக்க அவர் இரண்டாந்தர எஜமானன் இல்லை. அவர் அனைவருக்கும் பொது. நல்லவருக்கு ஆன அதே இறைவனே தீயவனுக்கும். இருவரையும் வாழ்விக்க வேண்டிய கடமை ஆண்டவனுக்கு உண்டு.
போருக்குப் போகிறான் சூரன். அவனது முகம் கடுகடுவென இருக்கிறது. செக்கச் சிவந்து இரத்த நிறத்தில் இருக்கிறது. கண் பார்வையில் அனல் பறக்கிறது. முருகனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற வெறியோடு போகிறான். போர்க்களத்தில் முருகனும் நிற்கின்றார். முருகனைப் பார்த்த சூரனுக்கு வியப்பு. பின்னே. புன்னகை தவழ குளிர் முகத்தோடு வந்து நின்றால்?
ஆக சூரனுக்குத் தான் முருகன் மேல் ஆத்திரம். ஆனால் முருகனுக்கோ சூரன் மேல் அன்பு. குளிக்காமல் போவதால் ஆறு நம் மீது கோவிக்குமா? நாம் குளிக்கப் போனால் நம்மைத் தூய்மைப் படுத்துவது ஆறு. அப்படித்தான் முருகக் கடவுளும். நாம் வணங்கினால் நம்மை வாழ்விப்பார். நாம் வணங்காமல் போனால் நம்மை கோவிக்கவே மாட்டார்.
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்று உணர்த்தும் தத்துவம். இது தமிழுக்கு மட்டுமே உரியது.
சரி......பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு என் முருகன் ஞாபகம் வருவான்! :) அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))
பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு!
இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
நல்ல கர்நாடகப் பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, கூட்டான பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, அழகாகப் பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!
Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு ராகத்தில் போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
சில பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியாரின் காவடிச் சிந்தைக் கேட்டுப் பாருங்க! "சுருட்டி" ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)
சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன்! = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்!
அன்பே...உன்னைச் சிந்திக்கவே இல்லை....ஒருநாளும்!
அன்பே...உன்னைச் சேவிக்கவே இல்லை....ஒருநாளும்!
இந்தப் பாடல் = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்...
அருணகிரிநாதர், தம் வாயாலும் மனத்தாலும் அலங்காரம் செய்து பார்த்த கந்தர் அலங்காரப் பாடல்! - இதை முருகதாஸ் எப்படி Handle பண்றாரு?
* திருப் பரங்கிரி தனில் உறை, சரவண பெருமாளே-ன்னு, திருப்புகழை Hum பண்ணி ஆரம்பிக்கறாங்க திருமதி. பித்துக்குளி - தேவி சரோஜா!
* அடுத்து, சிந்திக்கிலேன்ன்ன்ன்ன்ன் என்று ஏன்ன்-கறாரு, ஏங்கறாரு பித்துக்குளி! - கந்தர் அலங்காரம்!
* கந்தர் அலங்காரத்தில் இருந்து மீண்டும் திருப்புகழுக்குத் தாவறாங்க! ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில்!
சிந்திக்கிலேன், நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில் வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்,
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே!!!
சிந்திக்கிலேன் = முருகா உன்னைப் பற்றி உள்ளத்தில் கொஞ்சமும் சிந்திக்கவில்லை
நின்று சேவிக்கிலேன் = உன்னை "நின்று" சேவிக்கவில்லை! "நின்று" வணங்கவில்லை
தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் - அணிமணி தண்டை அணிந்த உனது செந்தாமரைப் பாதங்களை நான் கண்டு வழிபடவில்லை
ஒன்றும் வாழ்த்துகிலேன் - ஒருமுறையாவது உனது பெயரைச் சொல்லியும் புகழைப் பாடியும் வாழ்த்தவில்லை
மயில் வாகனனைச் சந்திக்கிலேன் - மயில் மீது அமர்ந்த ஐயனே உன்னைத் தேடி வந்து சரணடையவில்லை
பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் - பொய்யை நிந்தித்து உண்மையே பேசி வாழவில்லை. (பொய்யா விளக்கே விளக்கு என்கிறார் வள்ளுவர். அத்தோடு பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த.)
புந்திக் கிலேசமும் - அறிவில் ஏற்படும் துன்பமும்
காயக் கிலேசமும் - உடலில் ஏற்படும் துன்பமும்
போக்குதற்கே - தீர்வதற்கே!
முருகா, உன்னைப் புகழ்ந்து ஒன்றும் சொல்லாது போனாலும், உன்னை வணங்காது போனாலும், உனது புகழைப் பாடாது போனாலும்...
உடலால், மனதால் அடையும் துன்பங்களைக் களைந்து, எங்களைக் காக்கின்ற உன் கருணைக்கு அளவுண்டோ!
சிந்திக்கிலேன் = சரி!
அது என்ன "நின்று" சேவிக்கிலேன்?
சொல்லுங்க பார்ப்போம்! "நின்னாத்" தான் சேவிக்க முடியுமா?
நடந்தோ, உட்கார்ந்தோ, படுத்தோ, மனசாலயே சேவிக்க முடியாதா?
தரையில் உருண்டு, அங்கப் பிரதட்சிணம் செய்து, படுத்து எல்லாம் சேவிக்கிறாங்களே! ஏன் அருணகிரி, "நின்று" சேவிக்கிலேன் என்பதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லுறாரு? சொல்லுங்க பார்ப்போம்!
பின்னூட்டத்தில் நீங்கள் "நின்று" பேசிய பின், நாளைக்கி இங்கு செல்லுங்கள்!
அங்கே விடை உண்டு!
முருகக் கொடை உண்டு!
மயிலின் நடை உண்டு!
தடைக்குத் தடை உண்டு!
சிவாஜி படத்தில் முருகன் பாட்டு இருக்கு-ன்னு பலருக்கும் தெரியும்! படம் = கந்தன் கருணை! வெற்றிவேல், வீரவேல்-ன்னு, சிவாஜி வீரவாகு போல் Walking Style காட்டுவாரு! இதோ அந்தப் பதிவு! ஆனால், எம்.ஜி.ஆர் படத்தில்? எம்.ஜி.ஆர், முருகன் பாட்டு பாடி இருக்காரா என்ன? அட, பாட்டு என்ன? எம்.ஜி.ஆர் முருகனாவே வேஷங் கட்டியிருக்காருப்பா! ஒரே ஒரு பாட்டுக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முருகனாக நடிக்க, ஜெயலலிதா வள்ளியாக நடித்தார்! இதைத் தேர்தல் போஸ்டர்களில் கூடச் சிலர் பார்த்திருக்கலாம்! படம் = தனிப் பிறவி!
இன்னொரு படம் = உழைக்கும் கரங்கள்! நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே-ன்னு பாட்டு வருமே! அந்த எம்.ஜி.ஆர் படம்! அதில் கந்தனுக்கு மாலையிட்டாள்-ன்னு ஒரு முருகன் பாட்டு! அதை வாணி ஜெயராம் மிக நேர்த்தியாகப் பாடி இருப்பாய்ங்க! வீணை இசையோடு காதல் இசை! நடிகை பவானி பரதநாட்டிய நடனக் கலைஞர்! எம்.ஜி.ஆர் மேல் அதீத அன்பும் காதலும் கொள்வார்! எம்.ஜி.ஆரும் அன்பு செலுத்துவது போல் இருக்கும்! ஆனால் அது ஏனோ காதலாக மலராது! அப்புறம் எம்.ஜி.ஆர் லதாவைக் கரம் பிடிப்பார்! எம்.ஜி.ஆரும்-லதாவும், பவானி வீட்டிலேயே அடைக்கலம் கொள்வார்கள்! அன்று முதல் இரவு!
அவர்கள் முதலிரவுக்கு வேண்டிய அனைத்தையும் பவானியே செய்ய வேண்டிய இக்கட்டான நிலைமை! பாவம்...அவள் மனம் பதபதைக்கும்! இருப்பினும் பழைய காதலன் மேல் உள்ள மாறா அன்பால் அதையும் செய்வாள்! தம்பதிகளை முதலிரவு அறைக்கு அனுப்பி விட்டு, இவள் மட்டும் தனி அறையில்...
உள்ளத்தை இழந்தவள், உயிரை இழந்தவள் அல்லவா? இனி ஒன்றுமே இல்லை என்று எல்லாமே இழந்தவளுக்கு... இனி ஏது அடைக்கலம்? = முருகன் மட்டுமே அடைக்கலம்! கந்தனுக்கு மாலையிட்டாள்! கந்தனுக்கு மாலையிட்டாள்!
கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்!
சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி காண வந்த கண்கள் ரெண்டும் காதலுக்கு ஒரு சாட்சி!
பூவோடு பொட்டும் தந்தேன்! ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன்!
மனமே முருகனின் மயில் வாகனம் - என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் - என் குரலே செந்தூரின் கோவில் மணி - அதில் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
குரல்: ராதா ஜெயலட்சுமி வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு இசை: MSV படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை ராகம்: இந்தளப் பண்/ஹிந்தோள ராகம்
MSV இந்தளப் பண்ணில் கையே வைக்காம, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் பண்ணாம, அப்படியே ராகத்தைக் கொடுத்துட்டாரு போல! அருமையாப் பாடி இருக்காங்க ராதா ஜெயலட்சுமி! செளகார் ஜானகி வீணை வாசிக்கறது தெரியுது! பாடும் நடிகை யாரு-ன்னு தெரியலை! அழகா நளினமா இருக்காங்க!மனம் எப்படி முருகனின் வாகனம் ஆகும்? மனத்தின் வேகம் போல, வேற ஒன்னும் இல்லை! Rocket-இல் செயற்கைக் கோள் விட்டாக் கூட, நிலவில் போய் இறங்க கொஞ்சம் நாளாவும்! ஆனால் மனம் அடுத்த நொடியில் போய், நிலவில் சேவல் கொடி பதிக்கும்! :)
ஆனா மனம் அது மட்டும் தான் செய்யுமா? வேற பலான பலான விடயம் கூடச் செய்யும்! அமலா, பாவனா, இலியானா வீட்டுக்கு எல்லாம் கூடப் போய் வரும்! :)
அப்படி அலை பாயுற மனசு! ஆனா அதை மயில் வாகனமா ஆக்கிட்டா?
மயில் மேல வேற யாராச்சும் ஒருத்தரு ஏறுவாங்களா? அவன் ஒருத்தன் மட்டும் தானே ஏறுவான்! அவனுக்கே நான்! அவனுக்கே நான்!
மற்றாரும் பற்றில்லேன்!
நானே அவனோட மயில்! சூரனை மயிலாய் மாற்றியது எல்லாம் அப்புறம் தான்! அதற்கும் முன்பே முருகனுக்கு மயில் வாகனம் உண்டு! நானே அவனோட ஆசை மயில்!
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் = இதுக்கு என்னா சொல்றது! வெட்கமா இருக்கு! பேசாம கீழே இருக்குற படத்தைப் பார்த்துக்கிடுங்க :)
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்!
* என் மேனி, வெளியிலும் அவனுக்குத் தான் = மயிலாக
* என் மேனி, உள்ளேயும் அவனுக்குத் தான் = ஆ+லயமாக = அவன் லயமாக!
இந்தப் பாடல் முருகருளில் இம்புட்டு நாள் வராதது தான் வியப்பு! அதனாலென்ன? எப்போது எதை வெளிப்படுத்த வேணும் என்று நம்மைக் காட்டிலும் நன்மை காட்டும் முருகனுக்கு அல்லவா தெரியும்! அந்த அருள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது மட்டுமே பேதைக்குத் தெரியும்!
இந்தப் பாட்டைப் படிக்கும் போதும், பாடப் பக்கம் நின்று கேட்கும் போதெல்லாம்... அதுவும் TMS குரலில்... இந்தச் செவ்வாயில், செவ் வாய் மணக்க, சேயோனை...இதோ...கேட்டுக்கொண்டே வாசியுங்கள்!
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே! அவர் குடும்பம் தழைத் தோங்குமே! சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான்! அன்பு பெருகி அருள் புரிவான்! அந்தக் கருணை உருவான குருபரன் என்றுமே கைவிடாமல் ஆளுவான்!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே! பகை மாறி உறவாடுமே! சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி மேன்மை உயர்வாகுமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
என்றுமே கைவிடாமல் ஆளுவான்
ஐயன் முருகனைக் கூப்பிட்டு... ஐயன் முருகனைக் கூப்பிட்டு... என் ஐயா...என் ஐயா... இனியும் நான் உன்னைக் கூப்பிடாது, நீ என்னைக் கூப்பிட்டுக் கொள்!
கந்தன் கருணையில், பலரும் பார்த்து இருப்பீங்க! நடிகர் திலகம் சிவாஜி நடந்து காட்டும் ஸ்டைலை! :) அந்தப் படத்தில் ஹீரோ என்ன தான் முருகனாக (சிவகுமார்) இருந்தாலும், Focus என்னமோ வீரவாகு மேலத் தான் விழும்! All Bcoz of Sivaji! :)
வீரவாகு அப்படித் தான் நடந்தாரோ, தெரியாது! ஆனால் சிவாஜி நடந்து காட்டுவது, ஒரு அணிவகுப்பு-ன்னா என்ன என்பதைக் கண் முன்னே கொண்டாந்து நிறுத்தும்!
அட, இப்படியெல்லாம் கூட யாராச்சும் நடப்பாங்களா என்ன? இதெல்லாம் ஓவர் ஆக்டிங் என்று சிலர் பேசலாம்! ஆனா, யாராச்சும் சிகெரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பாங்களா-போன்ற கேள்விகள் மட்டும் வரவே வராது! யாரு அட்ஜஸ்ட் பண்ணிக்கறாங்களோ அவிங்கள தான் உலகம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லும்! கேள்வியெல்லாம் இது போன்ற ஆட்களை நோக்கித் தான் :)
சிவாஜி ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்! அட, உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் இவர்கள் எதிர்பார்ப்போ?
முன்பே சஷ்டிப் பதிவில் பார்த்தது போல்.....சூரசங்காரம் நடந்த இடம் திருச்செந்தூர் அல்ல! தமிழ் ஈழத்தில் உள்ள ஏமகூடம் என்ற இடமே அது! செந்தூர் என்பது படைவீடு (Battle Camp) மட்டுமே! சூரனுக்கு எதிரான தேவர் படைகளைத் திரட்டி, போர் துவங்கும் முன்னால், அணி வகுப்பைப் பார்வையிடுகிறான் சேனாபதி!
எந்தச் சேனாபதி? கந்தச் சேனாபதியா?
தேவ சேனாபதி என்னவோ = முருகன் தான்! ஆனால் முருகச் சேனைக்கும் ஒரு சேனாபதி உண்டு = அவன் தான் வீரவாகு!
யார் இந்த வீரவாகு? * முருகன் = அன்னையவள் கரம் படாது, நேராகத் தந்தையவர் கண்ணில் தோன்றியவன்! * வீரவாகு = தந்தையவர் கரம் படாது, நேராக அன்னையவள் காற்சிலம்பில் தோன்றியவன்!
தந்தையின் கண்களில் இருந்து, ஆறு முருகன்கள் தோன்றிய அதே வேளையில்... அன்னையின் காற் சிலம்பு வெடித்து, அதில் நவ சக்திகள் என்னும் ஒன்பது சக்திகள் தோன்ற, அதில் முதல்வன் இந்த வீரவாகு! விநாயகருக்குப் பதிலாக, முருகன்-வீரவாகு தான் அண்ணன்-தம்பி என்று உறவாய்க் கூடச் சிலர் கொள்வதுண்டு!
வீரபாகு, முருகனைப் போலவே அழகன்! ஆற்றல் மிக்கவன்! இவனைப் பற்றிய சங்கத் தமிழ்ப் பாடல்கள் உள்ளனவா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும்! தமிழ்க் கடவுளான குறிஞ்சிக் கடவுளைப் பற்றி ஆர்வம் உடையோர்கள், வீரவாகுவைப் பற்றிச் சற்றே முயன்று பார்த்துச் சொல்லலாமே! முருகாற்றுப்படை நக்கீரரிடமிருந்தே கூடத் துவங்கிப் பார்க்கலாம்!
முருகனைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் போல், வீரவாகு பற்றி தனிக் குறிப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை! ஆலயங்களில் கூட இடும்பனுக்கு உண்டு! ஆனால், வீரவாகு-க்கு தனியான சன்னிதிகள் அவ்வளவாக இல்லை! திருச்செந்தூரில் முன் மண்டபத்தில் வீரவாகு வாயிற் காப்போனாக இருப்பான்-ன்னு நினைக்கிறேன்! சுவாமிமலையில் இலக்குமியாகிய திருமகள் சன்னிதிக்கு அடுத்து, வீரவாகு சன்னிதி உண்டு! முருகன், பால முருகனாய் வளர்ந்து வரும் போது, வீரவாகுவும் அங்ஙனமே வளர்ந்து வந்தான்! சொல்லப் போனால், முருகனின் வீர தீரச் செயல்களுக்கு முன்னமேயே, வீரவாகுவின் வீரம் தான் முதலில் பேசப்படுகிறது!
நாரதரின் வேள்வியில் உதித்த ஆடு, ஊருக்கே உலை வைக்க, அதை வீரவாகுச் சிறுவனே முதலில் அடக்கி, முருகனிடம் சேர்ப்பிக்கிறான்! இந்த ஆடே முருகனின் முதல் வாகனமாக ஆகின்றது!
முருகன், திருமாலின் புதல்வியருக்குத் தோன்றி, அவர்களை மணங் கொள்ள இசைந்து, வாக்கு கொடுக்கும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்! முருகன், ஈசனின் வேலாயுதத்தை, அன்னையின் கையால் பெற்றுக் கொள்ளும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!
போருக்குச் செல்லும் வழியில், தாருகன் பெரும் மலையாக நின்று தடுக்கிறான்! வீரவாகு தான் முதலில் எதிர்க்கச் சென்று, அசுரர்களின் மாயத்தில் மாட்டிக் கொள்ள... அதன் பின்னரே முருகன் கிரெளஞ்ச மலைக்கு வந்து, மலைமாவு சிந்த வடிவேல் எறிகிறான்! மலைச்சிறையில் இருந்து வீரவாகுவை மீட்டு எடுக்கின்றான்! பின்னர் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து, சிவபூசை செய்யப்படுகிறது! தேவதச்சன் அமைத்த மயிலாசனத்தில் அமர்ந்து, சூரனின் முழுக் கதையினையும், தேவ குரு சொல்லக் கேட்கின்றான் முருகன்! அதன் பின்னரே, வீரவாகுவைத் தன் தூதுவனாக அசுரனிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு ஆகின்றது!
இங்கு தான் வீரவாகுவின் பல சாகசச் செயல்கள் பேசப்படுகின்றன! கிட்டத்தட்ட இராமாயணக் கதைக் களன் போலவே இருக்கும்! வீரமகேந்திரபுரத்தில் நுழைந்த வீரவாகு, முதலில் சந்திப்பது, சிறையில் இருக்கும் ஜெயந்தனைத் தான்! ஏன்-னு தெரியலை! ஜெயந்தன் இந்திர குமாரன்! அவனுக்கு ஆறுதல் கூறி, முருகன் உன்னை விடுவிக்க வருவான் என்று நம்பிக்கை ஊட்டுகின்றான்! பின்னரே அசுர சபைக்குச் செல்கின்றான்! சபையேறி வந்தவனைக் கண்ணியம் கூட தராமல் நடத்துகிறது படித்த சூர உள்ளம்!
ஆனால் முருகனருள் முன்னிற்காதோ! இதய ஆசனத்தில் முருகன் இருக்க, மதியாதார் வாசலிலும் ஆசனம் தோன்றுகிறது! தூது பேசுகிறான் வீரவாகு! காதற்ற ஊசியில் நூல் நுழையுமோ? கடும் நெஞ்சில் நூலோர் சொல் நுழையுமோ?
தூது தோல்வியில் முடிகிறது! வீரவாகுவைச் சிறைப்பிடிக்க ஆணையிடுகிறான் சூரன்! வீரவாகுவோ தன்னை அடக்க வந்த சூரனின் மகன் வச்சிரவாகுவைக் கொல்கிறான்! சதமுகன் முதலான பிற படைவீரர்களையும் கொன்று... அத்தாணி மண்டபத்தை அழித்து, தூதின் தோல்வியில் தளர்ந்து, செந்தூர் முருகனிடமே மீண்டு வருகின்றான்!
போர், ஈழத்தில், ஏமகூடத்தில் துவங்குகிறது! பல அசுர மாயங்கள் அரங்கேறுகின்றன! சூரனின் மகன் பானுகோபன், மாயாயுதம் எறிந்து, வீரவாகுவை நன்னீர்க் கடலில் மூழ்கடிக்கிறான்! அப்போது தான், முருகன் வீரவாகு மேல் வைத்த பாசம் தெரிய வருகிறது! வீரவாகு வீழ்ந்தான் என்னும் போது தான், கோபமே கொள்ளாத நம்ம Cool Guy முருகனும், ஊரறிய முதலில் கோபப்படுகிறான்! வீரவாகுக்கு என்னவாயிற்றோ என்று அப்படி ஒரு பதைபதைப்பு! என் முருகா - ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும் - என்பது உன்னளவில் மட்டும் என்னிக்குமே உண்மை தான் முருகா! மாயாயுதம் தகர ஞானாயுதம் எறிந்து, தன் அன்பனை மீட்டெடுக்கிறான் முருகன்! பத்தாம் நாள் போரில், மாயத்தால் எங்கும் இருட்டாக்கி, அதே நன்னீர்க் கடலுக்குக் கீழே சென்று, மாமரமாய்....மரத்துப் போய் நிற்கிறான் சூரன்! பிடிவாதம்! அதுவும் தலைகீழாக! வேர்கள் மேலே! கிளைகள் கீழே!
அப்போது தான்...........வேலால் வெஞ்சூர் பிளந்து, மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறான், ஐயன் முருகன்! முருகனின் ஆணையால், மொத்த வீரமகேந்திரபுரத்தையும், கடலில் மூழ்கடிக்கிறான் வருணன்!
செந்தூர் திரும்பி, மீண்டும் சிவபூசை நடக்கிறது! * கையில் செபமாலையுடன் இன்றும் செந்தூர் முருகனைக் கருவறையில் காணலாம்! * அந்த முருகனுக்குக் காவலாக, வீரவாகுவை இன்றும் அர்த்த மண்டபத்தில் காணலாம்! இது தான் வீரவாகு-வின் சுருக்கமான கதை! :) என் முருகனுக்கு வேண்டியவர்கள் எல்லாம், எனக்கும் வேண்டியவர்கள் அல்லவா! அவர்கள் நலத்தை இங்கு முருகனருளில் சொல்ல வைத்த முருகனருளை எனக்கு ரொம்பவே பிடிக்கும்! :)
இதோ, நடிகர் திலகம் சிவாஜியின் அந்த வீரவாகு பாடல்!!
வெற்றிவேல்! வீரவேல்! சுற்றிவந்த பகைவர் தம்மைத் தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்! ஞான சக்திவேல்!
ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்! அசுரர் தம்மை அஞ்சவைத்த வீரவேல்! மோதி அந்தக் குன்றழித்த சக்திவேல்! முவர் தேவர் வாழ்த்தவந்த வெற்றிவேல்! (வெற்றிவேல்...வீரவேல்)
வணக்கம் மக்களே! இன்னிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! வெளிய வெயில் காய்ஞ்சாலும் உள்ள படபட-ன்னு குளிருது! :) அதனால், இந்தச் செவ்வாய்க்கு....ரொம்ப எழுதாமல்...
ஒரு அபூர்வமான பாட்டு முருகனருளில்! கிட்டத்தட்ட சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டு-ன்னே சொல்லீறலாம்-ன்னு நினைக்கிறேன்! நீங்களே கேட்டுப் பாருங்க! சுசீலாம்மாவின் ஆரம்ப காலக் குரல்!
பாட்டில் நாதசுரமும் இருக்கு! இருந்தாலும் சுசீலாவின் குரல் நாதசுரத்துக்குப் பொருந்தி வருது - ஜானகியை விட! :) இது பற்றிய கேள்வி ஜானகி-சுசீலா பதிவில் இருக்கு! :)
வைகறைப் பொழுதில் விழித்தேன் - அந்த வடிவேல் முருகனை நினைத்தேன் நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் - அவன் நினைவில் காலத்தைக் கழித்தேன்! (வைகறைப் பொழுதில்)
திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் - அதை தினமும் மனத்தால் சுவைத்தேன் - என் தேவைகள் யாவையும் உரைத்தேன் - அவன் திருவருள் தந்தான் களித்தேன்! (வைகறைப் பொழுதில்)
உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் - பக்தி உணர்வில் ராகத்தை வளர்த்தேன் ஓம் எனும் மந்தரம் படித்தேன் - அவன் கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்! (வைகறைப் பொழுதில்)
சூடிடும் குறிஞ்சி மலராவான் - அவன் ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் - மெய் அருள் வரும் ஞானக் களியாவான் - என்றும் அவனே வாழ்வுக்கே உயிராவான்! (வைகறைப் பொழுதில்)
சின்ன வயசில், ஊரில் மார்கழி மாசம் போது, இந்தப் பாட்டைத் தான் வைகறைப் பொழுதில் மொதல்ல போடுவாங்க! திருப்பாவை ஒலிக்க விடுவதற்கு முன்பு, இந்தப் பாட்டு தான் ஒலிக்கும்! ஏன்-ன்னா சவுண்ட் சர்வீஸ் அண்ணா (பாஸ்கர்-ன்னு நினைக்கிறேன்) ஒரு தீவிர முருக பக்தர்! :)
நானும் "வைகறைப் பொழுதில் விழித்தேன்"-ன்னு கேட்டுக்கிட்டே தான் விழிச்சி இருக்கேன்! அப்பறம் தான் திருப்பாவை! யாரோ ராகமாப் பாடுவாங்க ஸ்பீக்கர்-ல! ஒரே லைனை பத்து வாட்டி இழுப்பாங்க! அது அவ்ளோ நல்லா இருக்காது சுசீலாம்மா பாடுவதைப் போல்! :) இருந்தாலும் திருப்பாவை ஆச்சே! எப்படி வுட்டுக் கொடுக்கறது? மனசு வராதே! விதியே-ன்னு முப்பது பாட்டும் ஸ்பீக்கர்-ல்ல கேட்டுக்கிட்டே, கோயிலடி-கிணத்தடி-மஞ்சக் காப்பு அரைக்கிறது போல வேலையெல்லாம் முடிச்சி இருப்பேன்!
ஐயமாரு, அவிங்க வீட்ல தனி வாளியில் பொங்கியாந்த பொங்கலை, எனக்குத் தனியாக் கூப்புட்டுக் கொடுப்பாரு! பெருமாள் சாப்பிடாம அவரு சாப்பிட மாட்டாரு! ஆனா என்னைய மட்டும் சாப்பிடச் சொல்வாரு! சின்ன புள்ள ஒத்தை ஆளா மஞ்ச அரைச்சிருக்கேன்-ல்ல? :) நானும் பெருமாள் சாப்புட்டாரா-ன்னா சென்ட்டி எல்லாம் அப்போ பார்த்ததில்லை! நல்ல புள்ளையா, பசியிலும் குளிரிலும் சுடச்சுட எறங்கும்! :)
Btw, திருப்பாவை முப்பதும் சுசீலாம்மாவும் தன் ஸ்டைலில் பாடி இருக்காங்க! யாராச்சும் சுட்டியோ, தகவலோ கொடுங்களேன்! புண்ணியமாப் போவும்!
சரி...என் முருகன் பாட்டுக்கு வருவோம்! நான் பேச்செடுத்தாலே பொறந்த வீட்டு பெருமாள் பேச்சு வந்துருது-ல்ல? :) இந்தப் பாட்டில் தேன் தேன்-ன்னு வருது, கவனிச்சீயளா? இப்படி சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டே தேனாகி... பின்பு காலமெல்லாம் தித்திக்கும் பாடல்களைத் தந்தது!
நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன்! அவன் நினைவில் காலத்தைக் கழித்தேன்! அவன் நினைவில் காலத்தைக் கழித்தேதேதேதேன் - என்பதில் தான் எத்தனை "தேன்"!!! செல்வமே முருகாஆஆஆ!
திருப்புகழ் பாடல்கள் முதன்முறையாகப் படிக்கும் போது கடினமாக இருப்பது போல் தோன்றும். அவையே இசைவாணர்கள் பாடக் கேட்டால் எளிமையாக இருப்பது போல் தோன்றும். அவ்வகையிலான ஒரு பாடல் இது.
பதிவு எழுத வந்த புதிதில் (2005 நான்காவது காலாண்டில்) கால்கரி சிவா அண்ணா இப்பாடலின் எம்பி3 அனுப்பினார். அதனை இன்று தான் ஜிமெயிலில் கண்டெடுத்து இங்கே இட முடிந்தது.
கலை மேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் கடலேறிப் பல மாய வாதிற் பிறழாதே பதி ஞான வாழ்வைத் தருவாயே மலை மேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் குமரேசா சிலை வேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் பெருமாளே
பாடலின் பொருளை எஸ்.கே. ஐயாவோ இரவிசங்கரோ தந்தால் மிக நன்றாக இருக்கும். இரவியின் எதிரே ஒரு மின்மினி ஆடுவதைப் போல் இப்பாடலுக்குப் பொருள் தர விழைகிறேன். அவர்கள் வந்து இன்னும் அழகான பொருள் தருவார்கள்!
மலை மேவு மாயக் குறமாதின் - வள்ளிமலையில் வாழும் வியப்பூட்டும் அழகை உடைய குறப்பெண்ணான வள்ளியம்மையின்
மனம் மேவும் வாலக் குமரேசா - மனத்தில் நிலையாக வீற்றிருக்கும் என்றும் இளையவனான குமரேசா!
சில பாடல்களில்... கமல்-ஸ்ரீதேவி தனியாத் தெரிவாங்க! ஆனா அந்த Romance-இல் என் முருகன் தெரிவானா? :)
இந்தப் பாட்டைக் கேளுங்க, பதில் உங்களுக்கே தெரிஞ்சிடும்!
இதில் கமலும்-ஸ்ரீதேவியும் ஸ்டைலாகச் சொடுக்கிச் சொடுக்கி ஆடுவது...
எனக்கென்னவோ...
தினைப்புனத்தில் முருகனும்-வள்ளியும் ஆடுவது போலவே இருக்கும்! அப்படித் தான் கற்பனை பண்ணிக்குவேன்! :)
அப்போ சென்னைக்கு வந்த புதுசு; தண்ணிப் பஞ்சம் வேற;
கீழே இருந்து மாடிக்கு, தண்ணிக் குடம் சுமப்பதற்குள், என் bend-u கழண்டுரும்:)
அப்பல்லாம் வானொலிப் பாட்டு தான், புள்ளைக்கு உற்சாகம்!
வீட்டில் ஒரு Sharp Tape Recorder;
பள்ளி ஆசிரியர் வாங்கிக் குடுத்தது; அப்பா, காசெட்டில் (TDK 45 , 60 and 90), "உள்ளம் உருகுதைய்யா" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு;
எல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதே வச்சா, கோவம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!:)
சின்னப் புள்ள எனக்கோ, "வடிவேலன் மனசு வைச்சான்" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை! (TMS க்காக மட்டுமில்லை; but for Sridevi also:)))
ஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது,
நான் Record+Play Button, சேர்த்து அழுத்தி விட,
அது "உள்ளம் உருகுதையா" மேல் பதிஞ்சி போயிரிச்சி;
அவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு;
பாட்டி தான் ஒன்னும் புரியாம..
"வடிவேலன் மனசு வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா? எதுக்கு கொழந்தைய அடிக்கற? -ன்னு... அப்பவே, என் "முருக பக்தியை" மெச்சினாங்க:)) தாயில்லாமல் நானில்லை!
எம்.ஜி.ஆர் பாட்டு இல்லீங்க! இது கமலஹாசன் நடித்த படம்!
ஹீரோவான பிறகு, ரஜினி வில்லனாக நடித்த படமும் கூட!
மருத்துவமனையில் இருந்த போது, அருகிலேயே உள்ள வாகினி ஸ்டூடியோவுக்கு, ரஜினி தானே விரும்பிச் சென்று, ஒரு சீனில் சான்ஸ் கேட்டு நடித்த படம்! தேவர் ஃபிலிம்ஸ் படத்தின் மதிப்பு அப்படி!
இளவரசியான ஸ்ரீதேவியை, இசைக் குழுவின் கமல் காதலிக்க... ஸ்ரீதேவியின் அப்பா-சமஸ்தான மகாராஜா, ரவுடி ரஜினியை ஏவி விடுவார்!
ஆனால் ஸ்ரீதேவி தன் உள்ளம் பொங்க அழுது....காதலை வெளிப்படுத்த, ரஜினி மனம் மாறி, வாழ்த்தி விட்டுப் போய் விடுவார்!
இதில் வரும் கமல்-ரஜினி சண்டைக் காட்சிகளில்,
நீண்ட நாள் கழிச்சி, மறுபடியும் இரு தரப்பு ரசிகர்கள்.....நிஜமாலுமே சண்டை போட்டுக் கொண்டார்களாம்! அப்போவெல்லாம் பதிவுலகம் என்பது இல்லை போல! :)
அன்னக்கொடி சின்ன இடை! அம்மாடியோ என்ன நடை! அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த? சிரிச்சேன்...ரசிச்சேன்! சிரிச்சேன்...ரசிச்சேன்!
இந்நேரமாக் கண்ணுறங்கேன்!என்னென்னமோ கொண்டுவந்தேன்! அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்! அதுதான்...இதுதான்! அதுதான்...இதுதான்! :)
(வடிவேலன்) இது முருகன் பாட்டு தானா? முருகனருளில் போடலாமா?
அதுவும், செவ்வாய்க் கிழமை அதுவுமா?
என் முருகனின் "செவ்"வாய் இனிமைக்குக் கிழமை ஏது? எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்! So,
அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்!
My Darling Boy Muruga! - அதுதான்...இதுதான்! :)
பாட்டு நல்லா இருந்திச்சா? :) எண்பதுகளில், TMS-சுசீலாம்மா ஜோடி சேர்ந்து பாடுவது....அதுவும் இளைய தலைமுறை கமல்-ஸ்ரீதேவிக்கு என்பது அபூர்வம்! அதில் இது ஒன்னு!
சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு! இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள்! கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது! நாதசுரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாசிப்பு அப்படி!
"சிங்கார வேலனே தேவா" = இதைப் பாடுவது ஜானகியா? சுசீலாம்மாவா? சந்தேகமே இல்லை! "Melody Queen of the South" எனப்படும் ஜானகியே தான்! * சரி, இந்தப் பாட்டை ஏன் சுசீலாம்மா பாடவில்லை? * ஜானகி = "Melody Queen of the South" என்றால், சுசீலாம்மா = "Music Queen of the South" ஆச்சே? * ஜானகி = "இன்"னிசை அரசி! சுசீலாம்மாவோ = "இசை" அரசி! * அப்பறம் ஏன் இதைச் சுசீலாம்மா பாடவில்லை? யார் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்-ன்னு நினைக்கறீங்க? சொல்லுங்க பார்ப்போம்! :) இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, வாரீகளா? பார்க்கலாமா?
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்! - "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"! இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம் நாதசுரத்தில், இப்போதைய மெட்டில்! நம்ப முடியலை-ல்ல? :)
பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி வரவழைக்கப்பட்டார்! தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்! தகப்பனுக்கு வர வேண்டிய புகழை, தகப்பன்-சாமி தட்டிச் சென்று விட்டான்! :)
ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை! பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா? அத்தனை நேர்த்தி! எப்போ? = 1960-களில்! கீ-போர்ட் வந்து கீச் கீச் என்னாத கால கட்டம்! :) சரி, இவ்வளவு கனமான, கர்நாடக இசை மலிந்த ஒரு பாட்டுக்கு... அதுவும் ஆபேரி ராகமாம்...(நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்டராபேரி, கையில் எப்பமே இருக்கும் ப்ளாக்பேரி தான்! :)
இப்படி ஒரு நுணுக்கமான மரபு இசைக்கு, எப்படி ஜானகியைத் தேர்வு செய்தார் இசையமைப்பாளர்? இத்தனைக்கும், இதற்கு முன்பு ஜானகி அவர்கள், அவ்வளவா கனமான பாடல்களைப் பாடியதும் இல்லை! அப்போது தான் அவர்கள் சினிமாப் பயணமே ஆரம்பம்! கனரக மரபிசைப் பாடல்கள் - அதுவும் வேகமா - சாம்பிளுக்கு இதோ: * சுசீலாம்மா = மன்னவன் வந்தானடி தோழி, மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன, இரவும் நிலவும் வளரட்டுமே.. * ஜானகி = சிங்கார வேலனே தேவா, சங்கராபரணம்-சாமஜ வர கமனா (கீச் கீச் நிறையவே உண்டு :) * வாணி ஜெயராம் = ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே!
ஜானகி அவர்கள் பாடிய மரபிசை - சின்னத் தாயவள், சுந்தரன் ஞீயும் சுந்தரி ஞானும்...போன்ற பாடல்கள் எல்லாம் இனிமை தான்! சந்தேகமே இல்லை! ஆனால் அந்தப் பாடல்கள், மன்னவன் வந்தானடி போல் "கனரகம்" இல்லை!
அப்படி இருக்க, "சிங்கார வேலனே தேவா"-என்னும் கனரகத்துக்கு, ஜானகி எப்படித் தேர்வானார் என்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கிட்டா மலைச்சிப் போயிருவீக! :) இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, நாதசுரத்துக்கு-ன்னே ஈடு கொடுக்கக் கூடிய குரல்களைப் பல விதமா ஆய்வு பண்ணாராம்! ஏன்-ன்னா நாதசுரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அம்புட்டு கனம்! அந்த சப்தத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனம் யாருக்கு இருக்கு?
பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்து, ஜானகி தான் நாதசுரத்துக்கென்றே மிகவும் இயைந்து பொருந்தினாராம்!
ஆந்திர அரசின் பி.சுசீலா விருதைப் பெறும் முதல் கலைஞர், எஸ்.ஜானகி
உம்ம்ம்ம்...என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டதோ தெரியாது! ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் பாடலை, "மன்னவன் வந்தானடி" பாடிய சுசீலாம்மா பாடினால் எப்படி இருந்திருக்கும்?-ன்னு கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை! :) பின்னாளில், நாதசுரத்துக்கும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதைத் தில்லானா மோகனாம்பாளில்...சுசீலாம்மா நிரூபித்துக் காட்டினார் = "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன"?
அதற்காக ஜானகி அவர்களை இந்தப் பாடலுக்கு தோது இல்லை-ன்னு சொல்ல வரலை! நல்லாத் தான் பண்ணி இருக்காங்க! ஆனா ஜானகிக்கு எப்பமே ஒரு "கிக்"கான மெல்லீலீலீய குரல்! அது நாதசுரத்துக்கு ஈடு கொடுக்க வல்லது-ன்னு "சொல்லப்பட்ட காரணம்" தான், எனக்குச் சட்டு-ன்னு பிடிபடலை! அப்படிப் பார்த்தா, எல்.ஆர்.ஈஸ்வரி தான் நாதசுரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய Best Choice! :)
மத்தபடி, காதல் பாட்டு-ன்னு வந்துச்சி-ன்னா, எப்பமே நான் ஜானகியின் பரம விசிறி-ன்னு பல பேருக்கு, குறிப்பா கண்ணன் பாட்டு வலைப்பூ வாசிச்சவங்களுக்கு நல்லாவே தெரியும்! Coz of that "kick"! :)
மேகம் கருக்குது, நிலாக் காயும் நேரம், பட்டுப் பூவே மெட்டுப் பாடு, இஞ்சி இடுப்பழகா, கொடியிலே மல்லியப்பூ, தாலாட்டுதே வானம் - இப்படிச் சதா சர்வ காலமும் ஜானகியைக் கேட்ட நான்...உம்ம்ம்... Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But am always so? முருகா! சரி...சரி...சுசீலாவா?-ஜானகியா? இந்தச் சிக்கல்-ல நுழையும் முன்னாடி, சிக்கல் சந்நிதிக்குள்ளாற நுழைவோம் வாருங்கள்! முருகன் ஊருலாத் திருமேனி (உற்சவர்) = சிங்கார வேலன்....கொள்ளை அழகு! வடித்த சிற்பி யாரோ?
இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்! சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை! படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்....தெரியும்! சந்தனக் காப்பை முகத்தில் வழித்து விடும் போது... அந்த இடது பக்க இதழோரமா..... Two Lips-My Tulips....அப்படியே குவிச்சி என்னை என்னமோ பண்ணும்! :)
சிக்கல் சிங்கார வேலர்
(பெரு காதல் உற்ற தமியேனை நீ நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே! பெருவாழ்வு பற்ற அருள்வாயே! உனக்"கே" என்னை அருள்வாயே! வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக், கனாக் கண்டேன்!)
இக்கோவிலின் மூலமூர்த்தி முருகன் அல்ல! சிவனார் தான்! பல புகழ் பெற்ற முருகன் கோயில்களிலும் இப்படியே - திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உட்பட! இறைவன் = நவநீத ஈஸ்வரர் (வெண்ணெய்ப் பிரான்)! இறைவி = வேல் நெடுங் கண்ணி! சூர சங்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் காணலாம்! என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது!
சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்! For a change, முதலில் தெலுங்கில் கேட்போமா? :)
செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர் சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா சிங்கார வேலனே தேவா - அருள் சீராடும் மார்போடு வாவா!
சரி...நாதசுரத்துக்கு ஈடுகொடுக்க வல்லவர்-ன்னு...ஆய்வு எப்படியோ இருக்கட்டும்.... அப்போது தான் திரைப் பயணத்தை ஆரம்பித்த ஜானகி அவர்களுக்கு, முருகன் கொடுத்த அழகிய Lift என்றே இதைக் கொள்ள வேணும்! இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது! படத்தில் ஜெமினி-சாவித்ரி பாடல் காட்சி:
அனைத்து முருகனடியார்களையும் அணைத்து, இதோ, பங்குனி உத்திரம் அன்று.....முருகனருள் 150ஆம் பதிவு!
முருகனருள் வலைப்பூக் குழுவின் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்! இங்குள்ள முருகனடியார்கள் மட்டுமன்றி, அடியவர், அடியவர் அல்லாதார் அனைவரையும் வணங்கி, இந்தச் சிறப்புக் காவடிப் பதிவைத் துவங்கிடுவோம்!
ஒரு நூறு கடந்து, இரு நூறு எதிர் கொள்ள, இரு,நூறு என்று இடுகைகளை எண்ணி,
ஒரு நூறும், இரு நூறும், என்னில் அவன், முன் ஊற, அவனில் நான், நான் ஊற, ஐ நூறு, துயர் அறு நூறு,
ஒரு நூறும் + அரை நூறும் திரு முருகன் திரு நீறே! இன்று அவனின் திரு நூறே!
காவடிகளில் பல காவடிகள் உண்டு! பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடியாம்! சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்!
ஆனால் கவிக் காவடி கேள்விப்பட்டு இருக்கீங்களா? கவிதை எழுதி , இரண்டு பக்கமும் தொங்க விட்டு வரும் காவடியா? :) இல்லையில்லை! இது கவி-நயா என்ற அக்கா எழுதிய கவி-காவடி!
இந்தக் காவடிச் சிந்தை, பல மாதங்களுக்கு முன்பே எழுதி, இங்கு பதிவிட அனுப்பி இருந்தார்! ஆனால் என் நிலைமை என்ன நிலைமையோ, அப்போது விட்டுப் போனது! விட்டுப் போனதை விட்டு விடுவானா என் முருகன்? விட்டுப் போனதைத் தொட்டுக் கொண்டு விட்டான் இன்று!
இதோ கவிநயா அக்கா எழுதிய காவடிச் சிந்து, முருகனருள் வலைப்பூவின் 150ஆம் பதிவாக... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கவிதை வேல் முருகனுக்கு அரோகரா! மீனா அவர்களின் குரலில்... கேட்டுக்கிட்டே படிங்க... நன்றி மீனா!
மயில் மீதினில் ஏறியே வருவான் - அவன் துயர்களைக் களைந்தெறிந் தருள்வான் - ஆறு முகங்கொண்ட முருகன்-அவன், அழகன்-என மனங்-குழைந்திட வருவான் இன்பம் தருவான்!
காவடி தூக்கியே ஆடு - அவன் காலடி பணிந்தே பாடு - நம் பாவங்களைக் பொடியாக்கிடும் தூயன்-அவன் திருவடிகளை நாடு தினம் நாடு!
ஆறு படை வீடு பாரு - அது ஆறு தலைத் தரும் கேளு - கந்தன் சரவணபவ எனும்-மந்திரம் வினைகள்-களை திரு-மந்திரம் கூறு நாளும் கூறு!
செந்தமிழ்க் காவலன் அவனே - நாமும் சிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன முருகன்-அவன், அழகன்-அவன், குமரன்-அவன், கந்தன்-பதம் பணிவோம் பணிந்து மகிழ்வோம்!! வாழ்க்கையின் பாரத்தை... இன்முகத்துடன், பாட்டமும், ஆட்டமுமாய்ச் சுமந்து விட்டால்.....பாரம் தெரியாது! பாசம் தெரிந்து விடும்! = இது தான் காவடி! எளிய மக்கள், மெத்தப் படித்த நமக்கு உணர்த்தும் பாடக் காவடியே பால் காவடி!
சரி, முதன் முதல்...காவடி எப்போ எடுத்தாங்க? அந்தக் கதை........முருகனருள் - 100 ஆம் பதிவில் இருக்கு! இதோ! முதல் காவடி எடுத்தது இடும்பன் தான்! இது பற்றி புராணக் குறிப்புகள் தான் இருக்கே தவிர, இலக்கியக் குறிப்புகள் அவ்வளவா இல்லை!
* நாட்டு மக்கள், நம் கந்தனை, காலாற, காவடி எடுத்து வழிபடும் வழக்கம் பற்றி... சங்க இலக்கியங்களில் காணவில்லை! * பின் வந்த சிற்றிலக்கியங்களிலும் அவ்வளவாகக் காணவில்லை! * சந்தம் செய்யவே பிறந்த நம் சொந்தக் கவியான அருணகிரியும், ஏனோ காவடிச் சிந்தில் போட்டாரில்லை!
பிற்கால இலக்கியங்களில் இல்லாவிட்டால், தமிழ்க் கடவுள் தான் இல்லையென்று ஆகி விடுமா? காவடி தான் இல்லையென்று ஆகி விடுமா?
பெரும்பாலும் பண்டைய நாட்களில் தல யாத்திரைக்கு எளிய கிராம மக்கள் நடந்து தான் போவாங்க! இன்னிக்கும் சில பேரு அப்படிப் பாத யாத்திரை போறாங்க! அப்போ, வழியில் களைப்பு தெரியாம இருக்க பாடப்படும்/ஆடப்படும் பாடல் = வழிநடைச் சிந்து! காவடியும் சேர்த்து வச்சிக்கிட்டு ஆடினால் = காவடிச் சிந்து!
கிராம மக்களே பாடுவதால், ரொம்ப கடினமான சொற் செட்டு எல்லாம் இல்லாமல் எளிமையாக இருக்கும்! இதன் துள்ளல், மக்களிடையே மிகவும் பிரபலம் ஆகியது! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியங்களிலும் தலை தூக்க ஆரம்பித்தது! இசைக் கச்சேரிகளிலும் நுழைந்து கொண்டது!
தமிழ் இலக்கியத்துக்கு, எளியோரின் இந்த வழிநடைச் சிந்தை கொண்டு வந்தவர் கலியன் என்னும் திருமங்கை ஆழ்வார்! இது பற்றி இங்கே! ஆனால், இது வழிநடைச் சிந்தாக இருந்ததே தவிர, காவடி ஆடும் சிந்தாக மாறவில்லை!
கடைசியில்...19ஆம் நூற்றாண்டு, சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்... தெலுங்குக் குடும்பத்தில் பிறந்து, தமிழ்க் கடவுளுக்கு உரித்தான காவடியை, பாட்டுக்கும் மேடைக் கச்சேரிக்கும் கொண்டு வந்தவர்!
சென்னிக்குளம் முருகன், கழுகுமலை முருகன் - இவிங்க ரெண்டு பேர் மேலேயும் இவரு போட்ட காவடிச் சிந்துப் பாட்டுக்கள் எக்கச்சக்கம்! இன்னிக்கும் கச்சேரிகளில் காவடிச் சிந்து-ன்னா இவரு பாட்டு தான்! அப்படியே ஊத்துக்காடு வேங்கட கவி, பாரதியார், பாபநாசம் சிவன் போன்றோரும் கொஞ்சம் கொஞ்சம் பாடி...இன்று புஷ்பவனம் குப்புசாமி வரை.......காவடி தொடர்கிறது!
ஈழம், சிங்கை, மலேயா, பர்மா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் ராச்செஸ்டர், லண்டன், பாரீஸ்...இன்னும் பாரெல்லாம் பரவி ஆடுகிறது! முருகனருள் வலைப்பூ...
பாடல்களுக்கான வலைப்பூ என்ற ஆரம்பப் பரிணாமத்தையும் தாண்டி, * இலக்கியம், சமூகம், ஆய்வுகள், * புதிர் விளையாட்டுகள், * ஆலய நிகழ்வுகள்/தகவல்கள், * பொதுச் சேவைக்கான இடம்...(குழந்தைகள், முதியோர், மருத்துவம், கல்வி முனைப்புகள்-தொடர்புகள்) என்று பலப்பல முகங் காட்டி இந்த முருகனருள் பரவ வேணும்! - உங்கள் ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும் தாருங்கள்!
முருகனருள் = பல்கிப் பெருகி, ஆயிரம் முகங்களாக மலர்ந்து, பல்லாண்டு பல்லாண்டு, அவன் அடியார்கள் கூடும் இடமாக இருக்க வேணும்!
இருநிலம் மீதினில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ! Reference: இதர காவடிப் பதிவுகள்:
முருகனருள் வலைப்பூ 150-ஐ தொடும் நல்வேளையிலே... மங்களகரமாக இங்கு ஒரு திருமணம்! அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை! * பேரழகுப் பெட்டகமான மயிலார், முருக மா பிள்ளையை, முருக மாப்பிள்ளையாக்கி, பறந்தடித்துக் கொண்டு வர... * நிகழும் திருவள்ளுவராண்டு 2041, பங்குனித் திங்கள் பதினைந்தாம் நாள் (29-Mar-2010), உத்திர நட்சத்திரம் கூடிய பங்குனி உத்திர நன்னாளிலே...
* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, * அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, செந்தில் மா நகரும் சிறப்புடனே தாம் வாழ, * ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட * ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற, * எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், * காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,
இது போல ஒரு பத்து பாசுரம் இருக்கு! அதை முருகனருளான மாதவிப் பந்தலில் அப்பறமா இடுகிறேன்! இப்போ கல்யாணப் பந்தல்-ல கூடுவோம்! அப்பறமா மாதவிப் பந்தல்-ல கூடுவோம்! :) இன்னும் சில மணி நேரத்தில் முருகனருள்-150 உதிக்கப் போகிறது! இப்போது சிற்றஞ் சிறுகாலே! உலகம் உவப்ப பலர் புகழ் ஞாயிறு.....பதிவு கண்டாங்கு!
முருகனருள்-150, கவிநயா அக்காவின் காவடிச் சிந்து என்று முன்னமே முடிவாகி விட்டது! பங்குனி உத்திரம் அன்னிக்கி இட, ஷைலஜா அக்காவும் ஒரு பாட்டு எழுதி அனுப்பி இருந்தார்! சபாஷ் சரியான போட்டி! :)
பங்குனி உத்திரம் = முருகனுக்குத் திருமண நாள் ஆகையாலே... கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டு, ஷை-அக்காவின் கவிதையை, கல்யாணக் கவிதையா, மாற்றி விட்டேன்! அக்காவும், பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிச்சிட்டாங்க! அப்படித் தானே-க்கா? :)
சில வரிகளை மட்டுமே கல்யாணத்துக்கு ஒட்டி வருவது போல் மாற்றம் செஞ்சேன்! அக்காவின் வைர வரிகளில் எல்லாம் கை வைக்கவில்லை! மாங்கல்யத் தங்க வரிகளில் மட்டுமே தங்க வைத்தேன்:)
* அப்போ, கண்ணன் பாட்டு-99: அடியேன் எழுதிய கவிதையை, ஷைலஜா அக்கா பாடித் தந்தாங்க! * இப்போ, முருகனருள்-149: அக்கா எழுதிய கவிதையை, அடியேன் பாடித் தருகிறேன்!
நன்றிக்...கடன் பல தீர்த்து.........கந்தன் என்னை அழைத்துக் கொள்ளட்டும்! இதோ...பாடலும்...இசையும்...சிறப்புப் பதிவுமாய்... முருகனருள்-149!
[தடை நீங்கி....திருமண உறுதியும் அறிவிப்பும்]
திருச்செந்தூர் என்ன வெகு தூரமா? - உன் திருவடி அன்றி வேறு பரிகாரமா? ஒருச்செந்தூர் அங்கே நம் மனத்தோரமா உனக்கும் எனக்கும் திருக் கல்யாணமா!!!
[திருமணம் - திருமாங்கல்யம் - அம்மி மிதித்தல்]
வாள்கொண்ட கண்ணுக்கு மை தீட்டினேன் - உன்னை வரவேற்கச் செவ்வாழைக் கை நீட்டினேன்! ஆட்கொண்டு மாங்கல்யம் தனைப் பூட்டினாய் - என்னை கைப்பற்றிக் கால்பற்றிச் சுகம் கூட்டினாய்! [முதல் இரவு - பாலும் பழமும்]
பால்தந்து உனக்கென்னைத் தேர் ஆக்கினேன்! பழம்தந்துன் பழந்தோல்வி நேர் ஆக்கினேன்! தோள்தந்து துயில்காண விரைந்து ஓடினேன்! தமிழ்தந்துன் திருமார்பில் கரைந்து ஆடினேன்!
[எந்நாளும்...]
காதல்கொண்டார் சொல்லும் சொல் என்னவோ? - என் வேதமும் நீ அன்றி வேறென்னவோ? சாதல் வந்தால் கூட கவலை இல்லை! - என் சங்கீதம் நீயன்றி வேறு இல்லை!!! முருகா! முருகா! முருகா! முருகா! உன் கையை நீநீநீட்டி.......என் கையை ஈஈஈட்டிக் கொள்! தாவிப் படரக் கொழு கொம்பு இல்லை! கொழு கொம்பு வேண்டேன்! கந்து தனையே வேண்டினேன்!
கந்தா...கை நீநீநீட்டி கையைப் பற்றிக் கொள்! தனிக் கொடியை, தணி-கைக் கொடியைச் சுற்றிக் கொள்! உன் கையும் உண்டு, எனக்கொரு மெய்த் துணையே! முருகாஆ! கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை முந்துற மாதவிப் பந்தல் பகர்ந்து என் அந்தமும் ஆவியும் நீயே நீயெனச் செந்தூர் அவனிடம் சென்று சேர்மினே!
இன்று கிருத்திகை திருநாள் . சிங்கை வந்து இரண்டு நாள்தான் ஆகிறது .முருகனருளில் பதிவு போட்டு பலநாட்கள் ஆகிறது . முருகன் அருளால் மலை போல வந்த துன்பம் நீங்கி உடல் நலம் பெற்றது. இந்தப் பாடல் தான் காணிக்கை. விரிவான பதிவு தொடரும்