Monday, November 12, 2018

கந்தன் வருவான்


கந்த சஷ்டித் திருநாள் வாழ்த்துகள்!


கற்றுக் கொண்ட பாடமெல்லாம் மறந்து போகுது
கந்தா உந்தன் அழகில் சிந்தை கிறங்கிப் போகுது
பச்சை மயில் கண்டால் மனசு மயங்கிப் போகுது, அதில்
பாலவேலன் பவனி வரும் காட்சி தோணுது
(கற்று)

ஆண்டிக் கோலம் கொண்டாலும் அழகு கொஞ்சுமே, எந்த
அணிகலனும் இல்லாமலே மதனை விஞ்சுமே
ஆறுமுக விழிகளிலே கருணை பொங்குமே, அவனை
அண்டித் தொழும் பக்தருக்கு அருளைப் பொழியுமே
(கற்று)

மாம்பழத்தைத் தோற்று வந்தான் மக்களுக்கெனவே
பழனி மலை இருந்து நமக்கு அருள் புரிந்திடவே
பாசமுடன் அழைத்து விட்டால் ஓடி வருவான், கந்தன்
பச்சை மயில் மீதில் ஏறிப் பறந்து வருவான்
(கற்று)



--கவிநயா

Sunday, May 27, 2018

முருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்!

முருகனருள் அன்பர்கட்கு முருகுத்தமிழ் வணக்கம்!

திருப்போருர் முருகன் பற்றிச் சிலருக்குத் தெரிஞ்சிருக்கும், குறிப்பா சென்னை மக்களுக்கு! வெறும் போரூர் அல்ல! திருப்போரூர்:)

அவன் 'நீதி முருக'னாம்; முருகன் எப்படிய்யா நீதிபதி ஆவான்? கீழ்க் Courtஆ? மேல் Courtஆ? Supreme Courtஆ? செனீவா International Courtஆ?
எந்த Court ஆனாலும், தீர்ப்பைத் தனி மனிதன் மதிக்கலைன்னா தான் வம்பு; ஒரு மாநிலமே மதிக்கலீன்னா, ஒன்னுஞ் செய்ய முடியாது! கொஞ்சமா மதியுங்களேன்? என்று நீதிமன்றமே கெஞ்ச வேண்டியது தான்:)

நீதி தழைக்கின்ற போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!
- இதான் வெண்பாவின் ஈற்று வரிகள்; முதல் வரிகளையும் பாருங்க!

ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
"நீதி தழைக்கின்ற" போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!

அதென்ன "நீதி தழைக்கின்ற" முருகன்? நான் சொல்லப் போவதில்லை; நீங்களே சொல்லுங்க:)


இன்று May 27!
தோழன் இராகவன் (எ) ஜிரா பிறந்தநாள்  -  Happy Birthday Ragava!
அவன் நலம் வேண்டி..
உங்கள் வாழ்த்து/ஆசி வேண்டிப் பணிகின்றேன்.
வைகாசி மாதத்தில் வந்து உதித்தோன் வாழியே!
வைகைநகர் கொற்கைதனில் வைகுநலன் வாழியே!
செய்காசி நகரைவிடச் செம்புனிதன் வாழியே!
செழுந்தமிழே ஆறோடும் பொருநைமகன் வாழியே!
தைகாசில் புத்தாண்டு தமிழென்றான் வாழியே!
தைத்தருளும் உறவுநலம் கைக்கொண்டான் வாழியே!
மெய்காசில் மனமுருக மணமுருகன் வாழியே!
பெருகுதிகழ் சீராவின் பிறந்ததினம் வாழியே!


பிறந்தநாள் பரிசாக, இந்த அழகு கொஞ்சிடும் பாடல்!
அரிய பாடல்!
நாமக்கல் கவிஞர், நம் முருகன் மேல் எழுதிய பாடல்!
அவருக்கே உரிய இரண்டடி இரண்டடிச் சந்தங்களாய், இதோ!



முருகன் என்ற சிறுவன் வந்து முணுமுணுத்த சொல்லினால்
முன் இருந்த எண்ணம் யாவும் பின்னம் உற்றுப் போனதே!

அருகு வந்து மனம் உவந்தே அவன் உரைத்த ஒன்றினால்
அடிமை என் மனத்து இருந்த அச்சம் அற்றுப் போனதே!

இளமை அந்த முருகன் வந்து என்னோடு என்று சொல்லவே
என்னுளத்து இருந்த பந்தம் ஏதுமற்றுப் போனதே!

வளமை உற்ற இளமை பெற்று வலி மிகுந்தது  என்னவே
வந்ததே சுதந்திரத்தில் வாஞ்சை என்ற ஞானமே!

அழகன் அந்த முருகன் வந்து என் அருகு  இருந்த போதிலே
ஐம்புலன்களுக்கு ஒடுங்கி அஞ்சி அஞ்சி அஞ்சி நான்

பழமை என் உடற்கண் வைத்த பற்று யாவும் அற்றதால்
பாரில் என்னை யாரும் கண்டு பணியுமாறு செய்ததே!

அன்பன் அந்த முருகன் வந்து அழைத்து இருத்தி என்னையே
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று அகம் குழைந்து சொன்னதால்

துன்பம் மிக்க அடிமை வாழ்வில் தோய்ந்து இருந்த என் மனம்
சோகம் விட்டு விடுதலைக்கு மோகம் முற்று விட்டதே!


அன்பன் அந்த முருகன் வந்து
அழைத்து இருத்தி உன்னையே
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று
அகம் குழைந்து சொன்னதால்..
Happy Birthday Ragava! - From முருகன் & வள்ளி!


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP