Wednesday, May 27, 2015

கந்தன் வந்தான், கந்தன் வந்தான், வள்ளிமலை மேலாக!


முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்கும் + குழுவினர்க்கும், நெடுநாள் கழித்து நெஞ்சார்ந்த வணக்கம்!



வள்ளிமலை = என் உள்ள மலை!
எங்கள் வடார்க்காடு மாவட்டத்திலேயே உள்ளது; வடுக நாட்டு எல்லை!

அறுபடைவீடுகள் போல் அதிக ஆரவாரம் இன்றி, ஆன்மீக வணிகம் இன்றி..
அவள்-அவன், சங்கத் தமிழ்க் காதலாய்..
"அவள் பாதம் வருடிய மணவாளா" என்று..
கோயிலை விட.. மலையும், குகையும்,  புனமும், முகடும்..அவங்க உயிர்க்காதலை உரசி உரசிப் பேசும்!

வாரியாரே, கோயில் பணி என்ற பேரில், அதிகம் கட்டடம் கட்ட அஞ்சி, மலையும் குகையுமாயே விட்டு விட்ட தலம்!
வள்ளி, மாயோனின் செல்ல மகள் என்பதால், தீர்த்தம்+சடாரியும், அவள்-அவன் சந்நிதியில் உண்டு; ஆங்கு, பார்ப்பனரல்லாத பூசகர் தான்!

அந்த வள்ளிமலைப் பாடலை இன்று தருகின்றேன்; சினிமாப் பாடல் தான்:)
ஆனால் சுவையான பாடல்; வரலாற்றுச் சிறப்பு மிக்கது!

இன்று May 27!
தோழன் இராகவன் (எ) ஜிரா பிறந்தநாள்  -  Happy Birthday Ragava!
அவன் உடல்-உள்ள நலம் வேண்டி..
உங்கள் வாழ்த்து வேண்டி, ஆசி வேண்டிப் பணிகின்றேன்.




தமிழ்ச் சினிமாவில்..
இசையமைப்பாளர்கள் கூட்டு சேர்ந்து இசையமைத்த சிற்சில படங்கள் உண்டு!
இயக்குநர்கள் கூட்டு சேர்ந்து, இயக்கிய சிற்சில படங்களும் உண்டு!

ஆனால், இசையமைப்பாளர்கள் & இயக்குநர்கள்?
"இருவருமே" கூட்டு சேர்ந்து, அளித்த படங்கள், மிகவும் சொற்பம்!
அவற்றுள் ஒன்று.. தெய்வத் திருமணங்கள் என்ற படம்!
3 இசையமைப்பாளர்கள் + 3 இயக்குநர்கள்

மீனாட்சி கல்யாணம்  =  இசை: KV மகாதேவன்,    இயக்கம்: P. நீலகண்டன்
வள்ளித் திருமணம்    =  இசை: GK வெங்கடேஷ்,  இயக்கம்: K.காமேஸ்வர ராவ்
திருமால் திருமணம்  =  இசை: MSV                      இயக்கம்: கே.சங்கர்

ஆனால் பாடல்கள் + வசனம் = கண்ணதாசன் ஒருவர் மட்டுமே!
பாடலைப் பார்ப்போமா?
என் மனங் கவர் ஸ்ரீதேவி, வள்ளியாய் நடித்த காட்சிகள்.. In my fave Violet dress:)


படம்: தெய்வத் திருமணங்கள்
வரி: கண்ணதாசன்
குரல்: S. ஜானகி
இசை: GK வெங்கடேஷ்



கந்தன் வந்தான், கந்தன் வந்தான்..
வள்ளிமலை மேலாக..
துள்ளி வரும் வேலாட..

புள்ளி மயில் வேலன் - அவன் மங்கை உமை பாலன்
பூஞ்சிட்டுக் பெண்ணிடத்தில் காதல் கொண்ட சீலன்
பொன்னழகு மின்னலிட வெற்றி கொண்ட வீரன்!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

ஆறு பதினாறு, வடிவேலன் வரலாறு
ஐந்து படை வீடு கொண்டான் - பேர் கொண்டான்
மேலும் ஒரு வீடு - நான் காண வேண்டும் வேலா
ஆசை ரொம்ப நாளாய் - அதைத் தீர்த்து வைப்பாய் வேலா

செந்தூரின் போர் வீரனே - என்
செந்தூரம் உன் கையிலே!
சேவல் கொடி போட்டு - உன்
திருமுகத்தைக் காட்டு!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

மை எழுதும் கண்ணில், உன்
மெய் எழுதிப் பார்த்தேன்
மந்திரத்தின் குருநாதனே! நாதனே!

மஞ்சள் முக வள்ளி - என்றும் உன் பெயரைச் சொல்லி
ஆடுகிறாள் துள்ளி - அவள் கொள்வதில்லை பள்ளி..

சிங்கார வடிவேலனே - என்
சிங்காரம் உனக்கல்லவா!
இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி!
இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

குறிப்பு:
இதே போல், இந்தப் படத்தில், S. ஜானகி பாடிய நாட்டுப்புறப் பாட்டு..
வள்ளி ஆலோலம் பாடுவதாய் - "வெத்தலைக் கிளியே, சொல்லாதே வெளியே, ஓடி வா, ஓடி வா" என்ற பாட்டு மிக்க அழகானது.

*சுசீலாம்மாவும் பாடியுள்ளார்கள், MSV இசையில், அதி அற்புதமான பாடல், "வானமும் பூமியும் ஆலிங்கனம்"
*வாணி ஜெயராமின், "திருமாலே.. சீராரும் மணிவண்ணா", KV மகாதேவன் இசையில், Super Hit பாடல்!
*"தங்கம் வைரம் நவமணிகள்" என்ற பாடலும் வாணி ஜெயராம் தான், பாலமுரளி கிருஷ்ணாவுடன் இணைந்து!

பாடகர் நட்சத்திரப் பட்டாளம், நடிகர் நட்சத்திரப் பட்டாளம், இயக்குநர் பட்டாளம்.. என்று மெய்யாலுமே இந்தப் படம் ஒரு கல்யாண வீடு தான்!


வாரியார், மிகவும் நேசித்த தலம் = வள்ளிமலை!

அவரைக் கால தாமதம் செய்து, அரியலூர் இரயிலில் செல்ல விடாது, இரயில் விபத்திலிருந்து காத்துக் குடுத்த தலம் = வள்ளிமலை!
இதை வாரியாரே பலமுறை சொல்லுவார், "முருகன் பணிக்காக, வள்ளியை நொந்து கொண்டேன்; ஆனால் காப்பாற்றியதென்னவோ, அவள் தான்"


வாரியாரின் சொந்த ஊரான வேலூர்-காங்கேய நல்லூரில் இருந்து, எங்கள் கிராமத்தைத் தாண்டித் தான், குப்பு ரெட்டித் தாங்கல் வழியாக, வள்ளிமலைக்குப் போகணும்.

தெலுங்கு நாட்டின் எல்லை என்பதால், தமிழோடு, தெலுங்கும் அதிகம் உண்டு;

குப்பு ரெட்டித் தாங்கலில் தான் அத்தை-மாமா சில காலம் தங்கியிருந்தார்கள், கிராம நிர்வாக அதிகாரியாக! (VAO)
அப்போ, சிறுபிள்ளை இரகசியக் காதலாய், எனக்குப் பிடித்துக் கொண்ட வள்ளிமலைக் காதல்.. இன்னும் இறங்கலை; என்றும் இறங்காது!

வாரியார், மிக அதிகமான காட்சிகளில் "நடித்த" ஒரு சினிமா= துணைவன்!
அதன் காணொளியும் தருகிறேன்; சும்மா கண்டு மகிழுங்கள்:)




வள்ளிமலைக்குச் செல்ல வேண்டிய நேர்த்திக் கடன் ஒன்னு இருக்கு!
சேர்ந்து செல்லணும்!
வள்ளி வாழ்ந்து புழங்கிய இடங்களைக் காணணும்!


முருகன் எ. குறிஞ்சி நிலப் பையனுக்காகவே..
நடையாய் நடந்து, பாதம் தேய்ந்த வள்ளி - பாதம் வருடிய மணவாளா!

அவன் ஏற்றுக் கொள்வானா? என்று கூடத் தெரியாது..
பேசவும் இல்லாது, பார்க்கவும் இல்லாது..
வந்த பல ஆணழக-மணாளர்களை விலக்கி,
அவன் ஒருவனுக்காகவே வாழ்ந்து முடிந்த வள்ளி!

அவள், முருகனை விட உயர்ந்தவள்/பெரியவள்! - பெரிதினும் பெரிது கேள்!

Once again,
Happy Birthday Ragava! மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, May 26, 2015

கந்தனென்று சொல்லச் சொல்ல...


பாகேஸ்வரி ராகத்தில் சுப்பு தாத்தா பக்தியுடன் பாடியது... மிக்க நன்றி தாத்தா!



கந்தனென்று சொல்லச் சொல்லக் கவலைகள் இல்லை, அந்தக்
கந்தன் அருள் பெறுவதுவே வாழ்க்கையின் எல்லை!
(கந்தனென்று)

சிந்தனையில் கந்தனை வை
கந்தனையே வந்தனை செய்
கந்தனன்றி சொந்தமில்லை பந்தமுமில்லை, அவன்
கஞ்ச மலர்ப் பாதமன்றி தஞ்சமுமில்லை!
(கந்தனென்று)

கவலைகளை விட்டு விடு
கந்தனடி பற்றி விடு
ஆறெழுத்து மந்திரத்தை நாளும் சொல்லிடு, அந்த
ஆறுமுகன் துணையிருப்பான் நீயும் நம்பிடு!
(கந்தனென்று)

திருப்புகழின் நாயகனாம்
தீயுதித்த ஷண்முகனாம்
விருப்புகளை அவனிடத்தில் தந்து விட்டாலே, நம்மை
வேல் கொண்டு காத்திடுவான் வாழ்க்கை எல்லாமே!
(கந்தனென்று)


--கவிநயா 

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP