Monday, November 16, 2015

சின்னச் சின்ன முருகன்!

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்!



சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்

எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!

கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்

கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்

தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!

சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்

சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்

தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!

கந்தனென்று நானழைக்க வருவான், அவன்

பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்

ஆறுமுகமாகி வந்த ஒருவன்!

அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்

இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!



வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்

சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!

ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்

கூறும் அடி யார்கள் வினை களைவான்!



--கவிநயா

Monday, August 31, 2015

திரு முருகா!


திரு முருகா, அருள் தரும் முருகா

அருள் முருகா, திரு மால் மருகா

(திரு முருகா)



நீல மயில் மீதில் ஏறி வரும் முருகா

வேலைக் கையில் ஏந்திப் பகை அறு முருகா

(திரு முருகா)



ஆறு மலர் மீதினிலே தவழ் முருகா

ஆறு முக மாகி வந்து அருள் முருகா

ஆறெ ழுத்து மந்தி ரத்தில் உறை முருகா

ஓமெ ழுத்தின் உட் பொருளை உரை முருகா

(திரு முருகா)


--கவிநயா

Monday, July 27, 2015

பச்சை மயிலோடு பழகுபவன்!

 

பச்சை மயிலோடு பழகும் வடிவேலவனே
இச்சை கொண்டழைத்தேன் அருகே வருவாய் குகனே!
(பச்சை)

நச்சுப் பாம்பணிந்த பிச்சாண்டியின் மகனே
பட்சம் கொண்டெந்தன் பக்கம் வா குகனே
அச்சம் தவிர்த்தெனக்கு அபயம் தந்திடுவாய்
சிட்சித் தருளிடவே சீக்கிரம் வந்திடுவாய்!
(பச்சை)

மெச்சி உனைப் பாட முத்தமிழ் தந்திடுவாய்
கெச்சை ஒலித்திடவே இக்கணம் வந்திடுவாய்
பிச்சி உமையாளின் பேறு பெற்ற திருமகனே
உச்சி முகர்ந்துன்னை அணைத்திட வருவாய் குகனே!
(பச்சை)


--கவிநயா 

 

Monday, July 13, 2015

மெல்லிசை மன்னர், "தெய்வத்திரு" MSV..

இப்ப தான் மருத்துவமனையில் இருந்து, என்னை இல்லம் கொண்டாந்து சேர்க்கிறான் நண்பன்..
வீட்டுக்கு வந்ததும், இணையத்தில், MSV மறைந்துவிட்டார் எனும் செய்தி:(

மெல்லிசை மன்னரும், திரையிசைச் சக்கரவர்த்தியுமான = MSV!


என்னவா முருகா, அப்பா பெருமாளே
பணிவே உடலான இந்த "மெல்-இசையை",
உன் பத மலர் நீழலில் ஆழ்த்தி, அமைதியும்+அன்பும் கொடு!

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் MSV புகழ் பாடுங்களே!

தேவனை, இவரைப் பாருங்கள்; இவர் இசை தன்னை வாங்கிக் கொள்ளுங்கள்!
--

தமிழ்த் தாய்க்கு இசை தந்த மெல்லிசை மன்னவா,

தமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..
எழாதாரும், உன் இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்!
அழிவு உன்னை அண்டாது! வாழி நீ..


கையில் Drips கட்டி உள்ளதால், ஒரு கையால் அதிகம் எழுத முடியலை.. மன்னிக்கவும்! பிறிதொரு நாள், MSV-முருகன் பாடல்களை இங்கு கிழமை தோறும் இடுகிறேன்;
இப்போதைக்கு.. இந்தப் பாடல் = வருவான் வடிவேலன்; வரிகள்: http://muruganarul.blogspot.com/2013/07/varuvaanvadivelan.html



MSV-யை இழந்து வாடும், அவர் மகன்களுக்கும்/மகள்களுக்கும்
மூன்று தலைமுறை மெல்லிசை ரசிகர்களுக்கும்
முக்குயில்கள், சுசீலாம்மா + ஜானகி + வாணி ஜெயராமுக்கும்
என் தனிப்பட்ட அளவில்.. தோழன் இராகவனுக்கும், நண்பர் இராம் அவர்களுக்கும் (MSV Times நெறியாளர்).. நெஞ்சார்ந்த இரங்கல்!


முருகா,
நீயும் ஒரு முறை, எங்கள் MSV-யைப் பணிந்து, வணங்கிக் கொள்!
இசைத்திரு MSV, இன்று.. தெய்வத்திரு MSV ஆகிவிட்டது..

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!
--

*Various Murugan Songs of MSV
http://muruganarul.blogspot.com/search/label/MSV?m=1

*Various Kannan songs of MSV
http://kannansongs.blogspot.com/search/label/MSV?m=1

Monday, June 29, 2015

காப்பாற்ற வா!

கந்த வடிவேலா காப்பாற்ற வாவா
செந்தில் வடிவேலா சீக்கிரமாய் வாவா!

ஆறுமுக வேலனுன்னை
அண்டியவர் கோடியுண்டு
வண்டுவிழி வள்ளியுடன் வாவா, முருகா
தேவயானை தேவியுடன் வாவா!

பக்தர்களைக் காக்கவென்று
பச்சை மயில் ஏறிக் கொண்டு
சக்திசிவ பாலகனே வாவா, எங்கள்
வெற்றிவடி வேலவனே வாவா!

வேதனைகள் தீர்க்கவென்று
வேலெடுத்து ஏந்திக் கொண்டு
மாலவனின் மருமகனே வாவா, எழிற்
கோலமயில் ஏறியிங்கு வாவா!

கான இருள் விரட்டி விட்டு
ஞானந் தர வேண்டுமென்று
தந்தைக் குபதேசித்தவா வாவா, எங்கள்
சிந்தையிலே வந்து அருள் தாதா!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2011/09/arumughan.html


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP