Thursday, November 07, 2013

திருச்செந்தூரின் கடலோரத்தில்!

மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-08)!
இன்றைய பாட்டாய் = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
(ஏற்கனவே இட்ட பாடல் தான்; ஆனா ஒவ்வொரு சட்டியின் போதும், இதை இடுவது வழக்கம், அம்புட்டுதேன்:)

ஆனா, அதுக்கு முன்னாடி...
சூர சங்காரம் என்று "கதை"; அது எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?


முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் "சொல்லப்படுவது" திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சட்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?




அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார்.
விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.

கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க,
வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!

தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை!
எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.

சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான்.
எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது.
முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.

மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார்.
பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.

பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து,
தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!

தூது செல்லும் வீரபாகு முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை!
தேவ இளவரசன் "ஜெயந்தனைத்" தான் முதலில் போய்ப் பார்க்கிறான்!
ஜெயந்தனுக்கு ஆறுதல் சொல்கிறான் வீரபாகு!
அவனுடன் இருக்கும் மற்ற அமரர்களுக்கும் படைபலத்தைச் சொல்கிறான்;

பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான்!
ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடா உள்ளத்தால் தூது முறிகிறது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.

முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார்.
ஈழத்தில், 
ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.

பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.

வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக,
கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.

கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது.
சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிகிறார்கள்!

முருகனின் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, அசுர குலமே மூழ்கிப் போகிறது;
வெற்றித் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றார்.

இப்படிச் சூரனை அழித்த மனக்கேதம் தீர்க்க, முருகன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் முருகன்.

இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க,
சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!

ஆக, "கதைப்படி", சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் தான்! 
ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? 
யாரேனும் அறியத் தாருங்கள்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!

திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!

இது ஈழத்துக்கும், முருகனுக்குமே உள்ள தொடர்பு....



இன்றைய சட்டிப் பாடல்...
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!

படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்



திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!


அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!



இந்தச் சட்டி விரதம் துதிப்போர்க்கு....
வல்வினை போம்! துன்பம் போம்!

நம்பியவர் வந்தால்,
நெஞ்சுருகி நின்றால்
...

3 comments:

Kavinaya November 11, 2013 9:31 PM  

கந்த புராணக் கதைக்கும், அருமையான பாடலுக்கும் நன்றி கண்ணா.

Unknown November 28, 2020 6:49 AM  

பாடல் முடிவில் (வருவாய் அருள் தருவாய் முருகா...) என்று தான் அப்பாடல் முடியும்

Unknown November 28, 2020 6:54 AM  

சூரபத்மனை சம்ஹாரம் என்றான் (சூரனை திருத்துதல்) செய்தது மாப்பாடு என்ற பகுதியில்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP