Monday, May 27, 2013

100) சொல்லாத நாளில்லை (காவடிச் சிந்து)

முருகனருள் வலைப்பூவில், இது என் 100ஆம் பதிவு;

(May 27) இன்று, தோழன் இராகவனின் பிறந்த நாளும் கூட!

"பிறந்த நாள் வாழ்த்து" - என்பதாகத் தான், ரெண்டு நாளுக்கு முன்னாடி, இந்தக் காவடிச் சிந்தை, முருகன் மேல் எழுதி வைச்சேன்;
ஆனால்... TMS அவர்களின் இறுதிச் சேதி கேட்ட பின், "சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா"- என்றே சொல்லத் துடிக்கிறேன்!

TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....

முருகா!


"முருகனருள்" = இந்தக் குழு வலைப்பூவில் மட்டுமே = 100 பதிவுகள் இட முடியும் -ன்னு, நான் நினைச்சிக் கூடப் பார்த்தது இல்லை;
என்னையும் ஒரு பொருட்டாய், இங்கே இருக்க வைத்த, "முருகனருள்" சக உறுப்பினர்களுக்கு நன்றி!

இது நாள் வரை, என் எழுத்தையும் ஒரு பொருட்டாய் வாசித்த வாசகர்களுக்கு நன்றி!
உங்களுக்கு, அடியேன், சொல்லால் செய்த பிழைகள் ஏதாச்சும் இருந்தா, என்னை மன்னித்து அருள்க!

முருக வாசகம் = இதய வாசகம்!
*இதயத்தில் இருந்து வந்த சொற்களை,
*இதயத்தில் இருந்தே அணுகுமாறு கேட்டுக்கறேன்;
(சமயத்தில் இருந்தோ, சார்பில் இருந்தோ அணுகினாலும் பரவாயில்லை; என் தலை தாழ்ந்த மன்னிப்பையும் ஏத்துக்குமாறு கேட்டுக்கறேன்)

இந்தப் பாட்டைக், காவடிச் சிந்து மெட்டில் பாட முடியும்;
ஆனா, பாட எனக்கு வலுவில்லை இன்று! முருகனே பாடிக் கொள்ளட்டும்;

(ஆறுபடை வீட்டையும், ஒரே வரியில் அடக்க ஆசை; ஆனா முடியலை; இரண்டு வரி ஆயிருச்சி...)


"சொல்லாத நாளில்லை"  முருகா - உன்போல்
பொல்லாத ஆளில்லை முருகா - ஐயா
சொல்லாத சொல்லுள்ளும், சொல்லிய சொல்லுள்ளும்
தள்ளாது நிப்பவன் நீயே - என்னைத்
தள்ளாது நிப்பவன் நீயே!   (1)

உலகெலாம் உள்ளவன் ஒருவன் - எந்தன்
உளமெலாம் உள்ளவன் ஒருவன் - ஐயன்
உருவாயும் அருவாயும், உளதாயும் இலதாயும்
கருவினில் வரும்கந்தக் காரன் - என்
கனவினில் வரும்சொந்தக் காரன்!   (2)

குறிஞ்சி நிலத்திலே குரவன் - குன்றக்
குரவையின் கூத்துக்கு மறவன் - அவன்
பரங்குன்றச் செந்தூரன் , பழனிச்சாமி மலையன்
தணிகை-யன் சோலையில் சிலையன் - தமிழ்ப்
பசிக்கு-அவன் பால்தரும் முலையன்!    (3)

இராகவன் மனசில்வாழ் பிள்ளை - உமைப்
பாகவன் பெற்றசெங் கிள்ளை - தமிழ்த்
தாகவன் மோகவன், நட்புக்கு வாகவன்
இராகவன் கூப்பிட்டால் வருவான் - எனக்குச்
சேகவன் முருகனைத் தருவான்!   (4)

(end of kavadi chinthu)
Happy Birthday Ragava!


"சொல்லாத நாளில்லை" - சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே - செந்தமிழாலே!

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலா நின்திருப் புகழினை நான் பாட
அரகர - சிவசுத - மால்மருகா என
அனுதினம் - ஒருதர - மாகிலும் உன்னைச்...........
(சொல்லாத நாளில்லை)

 

தொகுப்பு (Album): முருகா, நீ வர வேண்டும்
வரிகள்: கோவைக் கூத்தன்
குரல்: ஏழிசை மன்னர், TMS (எ) Thoguluva Meenatchi Soundararajan 
Link: All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP