Friday, December 28, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 12




"காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்! ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!
அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!

கந்தனின் திருநாமங்களைப் பாடிய அடிகளார் அந்தத் திருப்பெயர்களைப் பாடியதோடு மட்டும் இல்லாமல் அன்பின் மிகுதியால் ஆடியதையும் சொல்கிறார்.

கருமையான தலைமுடியை உடைய கலைமகள் என் நாவில் நன்றாய் வீற்றிருப்பதால் நான் உன்னைத் தொடர்ந்து பாட முடிகின்றது!

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என் நா இருக்க யான் உனைப் பாட!

என்னை எப்பொழுதும் விடாமல் அருகிலேயே இருக்கும் என் தந்தையான முருகப்பெருமானை நான் பாடினேன்! அந்தப் பரவசத்தில் ஆடினேன் ஆடினேன் ஆடினேன்!

எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன்! பரவசமாக
ஆடினேன் ஆடினேன்!

திருவாவினன்குடியில் வாழும் குழந்தை வேலாயுதச் சுவாமியான உனது விபூதியை அன்புடன் நான் நெற்றியில் அணிந்து கொள்ள, பாசவினைகளின் பற்றது நீங்கி, உன் திருவடிகளைப் பெற உனது அருள் கிடைக்கும்!

ஆவினன்பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன் அருளாக!

வேலாயுதனே! அன்னமும் சொர்ணமும் போன்ற பலவித செல்வங்களும் நீ அன்புடன் என்னைக் காத்து அடியேன் சிறப்புடன் வாழும்படி அருள் புரிவாய்!

அன்புடன் இரக்ஷித்து அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!"

“மயில் வாகனத்தை உடையவனே வாழ்க வாழ்க! வடிவேலை ஏந்தியவனே வாழ்க வாழ்க! மலையில் வாழும் குருவே வாழ்க வாழ்க! மலைக்குறவர் திருமகளான வள்ளியுடன் நீடூழி வாழ்க வாழ்க! சேவற் கொடி வாழ்க வாழ்க! என் வறுமைகள் எல்லாம் நீங்க நீ வாழ்க வாழ்க!

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்!
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க!

எத்தனை எத்தனையோ குறைகளையும் பிழைகளையும் அடியேன் செய்திருந்தாலும் என்னைப் பெற்றவளான வள்ளியம்மையும், என்னைப் பெற்றவனும் குருவுமான நீயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! அது உங்கள் கடமையும் ஆகும்! பிள்ளை என்று அன்பாய் என் மேல் பிரியம் வைத்து, மைந்தன் இவன் என்று என் மேலும் உன் அடியவர்கள் மேலும் மனம் மகிழ்ந்து அருளி, நீயே தஞ்சம் என்று உன் அடியவர்கள் தழைத்து வாழ அருள் செய்வாய்!

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்!
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே!
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என் மீது மனம் மகிழ்ந்து அருளி
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

(தொடர்ந்து பேசுவார்கள்)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP