Monday, February 27, 2012

முருகா முருகா வாடா!


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டு மகிழுங்கள்! நன்றி தாத்தா!

முருகா முருகா வாடா - சின்ன
முத்துக் குமரா வாடா!
கந்தா கடம்பா வாடா - எங்கள்
கார்த்தி கேயா வாடா!

சின்னஞ் சிறு அடி எடுத்து – முருகா
சித்திரம் போல் நடந்து வாடா!
வண்ண மணி ஒலித்திடவே – நீயும்
வண்ண மயில் ஏறி வாடா!

சந்தத் தமிழ் பாட்டுனக்கே – செல்லமே
கேட்க நீயும் ஓடி வாடா!
சங்கத் தமிழ் தந்தவனே – எங்கள்
சங்கடங்கள் தீர்க்க வாடா!

நானிருக்கும் நாள் வரைக்கும் – முருகா
நாடி உனை வணங்கிடணும்!
தேனிருக்கும் உன் பெயரே – தினமும்
என் நாவில் தவழ்ந்திடணும்!

--கவிநயா

Tuesday, February 14, 2012

வள்ளி எந்தப் பக்கம்? தெய்வானை எந்தப் பக்கம்?


முருகனை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் போது உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்கிறதா? இல்லையா? ம்… அப்படியென்றால் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் போல் இருக்கிறது.

வள்ளி வலது பக்கம்; தெய்வானை இடது பக்கம். அதாவது முருகனுக்கு. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம்.

வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலர் இருக்கிறதாம். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலராம். வடிவேல் முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.

வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதனால், முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவன் இருபத்தி நான்கு மணி நேரமும் அகலாத துணையாய் இருப்பான்.

சன் டி.வி. தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் தேச.மங்கையர்க்கரசி அவர்கள் சொன்ன தகவல்.


--கவிநயா

படத்துக்கு நன்றி: trinethram-divine.com

Tuesday, February 07, 2012

காவலுக்கு வேலுண்டு! ஆடலுக்கு மயிலுண்டு!

அன்பர்களுக்கு இனிய தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!!

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!



இன்றைய பாடல் = சீர்காழி சினிமாப் பாடல்! கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மனிதனும் தெய்வமாகலாம் என்ற சிவாஜி-செளகார் ஜானகி படம்! பல இனிய முருகன் பாடல்கள் இந்தப் படத்தில்...

இன்பத் தமிழ்க் குமரா, வெற்றிவேல் வெல்லுமடா போன்ற பாடல்கள்!
ஆனால் சீர்காழி பாடிய இந்தப் பாடல், Hit பாடல்! - kaavalukku vel undu, aadalukku mayil undu!


காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா!
(காவலுக்கு)

நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா!
(காவலுக்கு)

ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!
(காவலுக்கு)

தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ
(காவலுக்கு)

ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!
(காவலுக்கு)

திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ
............நீ தாலேலோ



படம்: மனிதனும் தெய்வமாகலாம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP