Sunday, October 30, 2011

5) திருத்தணி: திருப்புகழ் "நெருப்பு"!

சஷ்டி: 5ஆம் நாள் & 6ஆம் நாள்! அடுத்து 7ஆம் அறிவா-ன்னு கேக்காதீக:)

இன்று பஞ்சமி-சஷ்டி இரண்டுமே வந்து விடுவதால்...பல தலங்களிலும் இன்றே கந்த சஷ்டி - சூர சங்காரம் ஆகி விடுகிறது!
வாங்க, ஓடுவோம்...இன்னிக்கி காலை-மாலை-ன்னு 2 பதிவாப் போடணும்! போடா, என்னை நீ ரொம்பவே படுத்தற, லூசு முருகவா!:)

திருத்தணிக்குத் தானே ஓடப் போறாம்? ஆமாம்!
ஆனா ஐந்தாம் படை வீடு அது மட்டுமே அல்ல! இன்னும் முருகனின் பல குன்றுகளும் சேர்த்தே 5ஆம் படைவீடு = குன்றுதோறாடல்!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே!



இந்தத் திருப்புகழும் நாலே வரி தான்! அப்படியே கப்-ன்னு பிடிச்சிக்கோங்க!

சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்...சினமாகச்

சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும்,
திருப்புகழ் நெருப்பென்(று)...அறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும்
நிசிக்கரு அறுக்கும்...பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்
நிறைப்புகழ் உரைக்கும்...செயல் தாராய்!

சினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும்
சிரித்து எரி கொளுத்தும்...கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும்...பெருமாளே!!


பொருள்:
சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும் = நல்ல அடியவர்களை.....சினப்போரை முடிக்கும், பகைப்போரைக் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்...சினமாக = கொல்வோரை அச்சினமே கொல்லும்!

சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும் = நல்ல அடியவர்களை.....சிரித்து நகையாடுவோர் தமக்கும், பழித்துப் பகையாடுவோர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்(று)...அறிவோம் யாம் = திருப்புகழே நெருப்பாய் மாறும்! அறிவோமாக!

நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும் = நல்ல அடியார்க்கு.....நினைத்ததை அளிக்கும், அவர்கள் மனத்தையும் உருக்கும்!
நிசிக்கரு அறுக்கும்...பிறவாமல் = நடுநிசி இருள் போல இருக்கும் கர்ப்ப வாசத்தை அறுக்கும்!

நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும் = நெருப்பையும் எரிக்கும்! மலையையும் உடைக்கும்!
நிறைப்புகழ் உரைக்கும்...செயல் தாராய்! = அப்படியான நிறைந்த உன் திருப்புகழைப் பாடும் செயல் தாராய்!

சினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும் = சினங் கொண்ட உடலை சங்காரம் செய்து, பல உடல் மாமிச மலைகளை
சிரித்து எரி கொளுத்தும்...கதிர்வேலா = ஒரு சிரிப்பினாலேயே கொளுத்த வல்ல கதிர்வேலா! நகை ஏவிய நாதா!

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து = தினைப்புனப் பெண், குறமகள், எங்கள் வள்ளியின் மார்பிலே அழுந்திச் சுகித்து இருக்கும் முருகவா...
எண் திருத்தணி இருக்கும்...பெருமாளே!! = நான் எண்ணுகின்ற திருத்தணி மலை மேவும் பெருமானே!




முன்பு பதிவிட்ட, திருத்தணி இரகசியங்கள்!

* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.
இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!:)

குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை!
திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
"பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!


ஆனால் உபன்னியாசகர்களும், புலவர் பெருமக்களும், as usual, தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர்.
நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்!
குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்!
ஆனா நாமளோ, எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)

திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)

குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :)
பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!


* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்!
ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே!

ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(

அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,
இங்கு வந்து தான்,
நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,
வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!

களவு மணமாவது? கற்பு மணமாவது?
களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!

வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்!
சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!



* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே! தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா!
இங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது! சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர்! ஆனால் தணிகையே தனித்து நின்றது! வென்றது! :)

இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று தணிகை "ஸ்தல புராணம்" சொல்லுவார்கள்!

* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்!
உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!

* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்!
முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!

அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி!
அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல!

* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!

* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது!
மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு! சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்! -ஆனால் முடியவில்லை!
ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!

* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!

* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:
- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,
- எத்தனை கலாதி,
- சினத்தவர் முடிக்கும்,
- அதிரும் கழல் (குன்று தோறாடல்)

திருத்தணி முருகப் பெருமானும்-தேவியரும்!
(மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)



* திருத்தணியில், முருகனுக்கு எதிராக மயில் அல்ல! யானை வாகனம் தான்! அதுவும் யானை, முருகனைப் பார்த்தபடி இல்லாமல், திரும்பிப் பார்த்தபடி இருக்கும்!
கருவறையில் மயில் இல்லாக் குறையைப் போக்க, உற்சவ முருகனுக்கு மிகப் பெரிய மயில் வாகனம் உண்டு!

* அறுபடை வீடுகளில், திருத்தணியில் மட்டுமே சூரசங்காரம் கிடையாது!
சினம் தணிந்த இடம் அல்லவா? எதுக்கு இன்னோரு முறை சங்காரம்?:))

புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே!
- முருகா!

4) சாமிமலை: காமத்தில் அழுந்தி!!

சஷ்டி: 4ஆம் நாள்
வாங்க, இன்னிக்கி எங்கே ஓடணும்? மலை ஆனால் மலை இல்ல! அது எந்த இடம்?
= சுவாமி மலை! போவோமா?
சின்னப் பாட்டு தான்! நாலே வரி! கருப்பூரம் மாதிரி கப்-ன்னு பிடிச்சிக்கோங்க:)




காமியத்து அழுந்தி இளையாதே
காலர் கைப் படிந்து...மடியாதே


"ஓம்" எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம்...அருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா
ஏரகத்து அமர்ந்த...பெருமாளே!!



பொருள்:
காமியத்து அழுந்தி இளையாதே = அதீத ஆசை/காமங்களில் அழுந்தி அழுந்தி இளைத்துப் போகாமல்
காலர் கைப் படிந்து...மடியாதே = கடைசியில், காலனாகிய எமனின் கைக்குள் சிக்கி மடிந்து போகாமல்

ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி = "ஓம்" என்னும் உனக்கும் எனக்குமான உறவுச் சொல்! அதில் அன்பு மிகவும் ஊறி ஊறி
ஓவியத்தில் அந்தம்...அருள்வாயே = ஒரு ஓவியத்தின் நேர்த்தியைப் போல், என் வாழ்வின் பயனை எனக்கு அருள்வாயே!

தூமமேய்க் கணிந்த சுகலீலா = வாசனை மிக்க அகில் புகை, அதையே உன் உடம்பில் நகை போல் அணிந்துள்ளாயே, என் முருகவா!
சூரனைக் கடிந்த கதிர்வேலா = சூரனை அழித்து விடாது, அவனைக் கடிந்து மட்டுமே கொண்ட வேலவா!

ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா = பொன் மலையான மேருவின் உயரத்துக்கு பறக்கவல்ல மயில் வீரனே!
ஏரகத்து அமர்ந்த...பெருமாளே!! = திரு-ஏரகம் என்னும் சுவாமிமலையில், அன்று அமர்ந்து, இன்று நிற்கின்ற என் முருகப் பெருமானே!



சாமி மலை இரகசியங்களைப் பார்ப்போமா?
அது என்னாங்க சாமி மலை? குழந்தை மலை தானே அது?
சிவபெருமான் தானே சாமி?
அந்த சாமிக்கு = நாதன் தானே, சாமி-நாதன்?
அப்படீன்னா சாமிநாத மலை-ன்னு தானே சொல்லோணும்?:)

இளைய வயது பிருகு முனிவர், பிரணவ மந்திரத்தை சதா ஜெபித்து ஜெபித்து, அவர் தலையில் பிரணவ அக்னி கிளம்பியது.
சிறியவர்கள் எல்லாம் பிரணவ ரகசியம் அறிந்து கொள்வதா என்று பயந்து போன சிவபெருமான், அந்தப் பிரணவாக்னியைத் தம் கையால் அணைத்து விட்டார்.
இந்தச் செயலால், பிரணவம் அவருக்கும் சற்றே மறந்து போனது!

பின்னாளில், பிரம்மன் செருக்கினை அடக்குவது போல ஒரு காட்சியை உருவாக்கி,
தந்தைக்குப் பிரணவப் பொருளினைத் தெளிய உரைத்தது முருகக் குழந்தை!

எல்லாரும் பிரணவத்துக்குப் பொருள் சொன்னான், பொருள் சொன்னான் என்று தான் சொல்கிறோமே தவிர,
அந்தப் பிரணவத்துக்கு என்ன பொருளைச் சொன்னான்? என்று சொல்கிறோமா? ஹிஹி!
பிரணவம் என்றால் என்ன? = http://madhavipanthal.blogspot.com/search/label/MeaningOfOm

இளையவர் அறிவதா என்று நினைத்த சிவனாருக்கு, இளையனாரே பொருள் சொல்ல வேண்டி வந்தது!
சிவனார் மனம் குளிர, உபதேச மந்திரம், இரு செவி மீதிலும் பகர்ந்தான்!
இப்படிச் சாமிக்கே சாமியானவன் சாமிநாதன்!
அந்தச் சாமி நாதனின் மலையானதாலே, அது சாமி மலை! (சுவாமி மலை)!

மேற்சொன்ன எல்லாம் சம்ஸ்கிருத புராணங்கள்... தமிழ் அல்ல!:)
திருவேரகம் என்பதே பண்டைத் தமிழ்ப் பெயர்!
பின்னாளில், ஹிந்து மதம்/ சம்ஸ்கிருதம், தமிழில் கலந்த பின்.. மக்கள் வழக்கில் சாமி மலையானது!

* சரி, திருவேரகம் = திரு+ஏர்+அகம் என்றால் என்ன? ஏன் இந்தப் பெயர்? சொல்லுங்க பார்ப்போம்

* சுவாமி மலையில் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் மலையே கிடையாது!
மலை என்பதே "பொய்"; ஏன்டா முருகா, பிரணவம் சொன்ன வாயால் பொய் சொல்லுற?:))

ஹா ஹா! அப்பறம் எப்படி சுவாமி "மலை" ஆச்சு?

சுவாமி மலை என்பது செயற்கையான ஒரு குன்று போல் அமைப்பு!
கொஞ்சம் உயரமான தளம் கொடுத்து, அறுபது படிக்கட்டுகள் வைத்துக் கட்டி இருக்காங்க! = இந்து ஆண்டுகளான பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுகளைக் குறிக்க!

* முருகப் பெருமானின் வாகனமாக இங்கு மயில் கிடையாது! 
பிணிமுகம் என்ற யானை தான்! கோயில் முகப்பிலும் அதுவே இருக்கு!

* கீழ்த் தளத்தில் ஒரு பிரகாரம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.
முப்பது படிக்கட்டுகள் ஏறி நடுவால இரண்டாம் பிரகாரம். மலையைச் சுற்றி வருவது போல்.
மீண்டும் முப்பது படிக்கட்டுகள் ஏறினால் மூன்றாம் பிரகாரம். முருகன் கருவறையைக் கொண்டது!

* சுவாமிமலை, காவிரி பாயும் மிகவும் அழகிய ஊர்! பச்சைப் பசேலென திருவலஞ்சுழி என்னும் பிள்ளையார் கோயிலும் அருகில் தான்!
குட காவிரிக்கு வட பாலார், திருவேரகத்தில் உறைவா என்று பாடுகிறார் அருணகிரி!


* சுவாமி மலை, ஆலயத்தின் உற்சவச் சிற்பங்கள் செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற ஊர்!

Investment Casting/Lost Wax Casting என்று சொல்லப்படும் மெழுகினால் உருக்கி ஐம்பொன் சிலைகளைச் செய்யும் ஆச்சாரி/நகாசு வேலைகள் இங்கு சிறப்பு.
ஸ்தபதிகள் நடத்தும் கொல்லர் உலைக் கூடங்கள் நிறைய! வீட்டிற்கும் அழகிய சிறு சிற்பங்கள் செய்து கொடுக்கிறார்கள்!

காவிரிப் படுகைக் களிமண்ணின் சிறப்பு!
கைரேகையைக் கூடத் துல்லியமாகப் பிரதி எடுக்க வல்ல மண் என்பதால், உலோகச் சிற்பங்கள் அத்தனை அழகாக அமைகின்றன!

* ராஜன் கலைக் கூடம் இன்று ராஜன் என்னும் தலித் ஒருவரால் நடத்தப்படுகிறது!
பரம்பரை பரம்பரையாக இல்லாது, ஆர்வம் உள்ளவர் அனைவருக்கும் உலோகச் சிலை வடிக்கும் கலையைச் சொல்லிக் கொடுக்கிறார் ராஜன்.

புதிய வர்த்தக உத்திகள் கடைப்பிடிப்பதால், பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் உண்டு! மரபு அறிவோடு, புதிய தொழில் நுட்பமும் சேர்ப்பதால், வேலை நேர்த்தியும் அட்டகாசம்!

ஜீயர்கள் பலர், திவ்யதேச வாகனங்கள் எல்லாம் செய்ய, இவர் குழுவைத் தான் நியமித்துள்ளனர்!
தலித் ஒருவர் உருவாக்கிய பெருமாளின் திருவுருவங்கள் தான், பல ஆலயக் கருவறைகளை அலங்கரிக்கின்றன!

எதிர்ப்புகள் குறைந்து போய், இன்று பல புதிய ஆலயங்களில், சாமி சிலைகள் செய்ய சுவாமிமலை ராஜனையே பலரும் நாடுகிறார்கள்!
திருமணமே செய்து கொள்ளாமல், இறைத் திரு உருவங்கள் செய்தே பணியாகக் கொண்டுள்ளார் ராஜன்! - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


* நக்கீரர், பழமுதிர் சோலையில் எப்படி வேடுவர்கள் முருகனைப் பூசை செய்ததைக் காண்பித்தாரோ,
அதே போல் சுவாமி மலையில், அந்தணர்கள் பூசை செய்வதைக் காட்டுகிறார்!

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்து உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று

என்பது திருவேரகத்துத் திருமுருகாற்றுப்படை!

* சுவாமி மலையைப் போலவே, தில்லி வாழ் தமிழர்கள், தில்லியில் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி உள்ளார்கள்!
 மலை மந்திர் என்பது லோக்கல் பெயர். உத்தர (வடக்கு) சுவாமி மலை என்பது சிறப்புப் பெயர்!

* பிரபலமான சில சுவாமி மலைத் திருப்புகழ்ப் பாடல்கள் இதோ:
- பாதி மதி நதி, போது மணி சடை,
- காமியத்து அழுந்தி இளையாதே,
- சரண கமலாலயத்தில்,
- செக மாயை உற்று,
- மருவே செறித்த குழலார் மயக்கின்

இதில் எனக்கு மிகவும் பிடித்தது, வாணி ஜெயராம் பாடும் பாதி-மதி-நதி பாடல். எம்.எஸ்.வி இசையில் மிகவும் அருமையாக இருக்கும்!
இலக்கண இசையாகவோ, அருணகிரியின் வழக்கமான சந்த இசையாகவோ இல்லாமல், மெல்லிசையாக இருக்கும்!
சூத மிக வளர் சோலை மருவிடு சுவாமி மலை தனில் உறைவோனே!

* ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்ற அம்மா-அப்பாவின் மணிவிழாவின் போது, அனைவரும் சிதம்பரம், திருக்கடவூர், சுவாமி மலைக்கும் சென்று வந்தோம். அப்போ, பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தப் பயணக் குறிப்பு, மாதவிப் பந்தலில், வெகு விரைவில்! :)

சூதம் மிக வளர், சோலை மருவிடு, சுவாமி மலை தனில் உறைவோனே! - என் முருகவா!!

Saturday, October 29, 2011

3) பழனி: வசன மிக வேற்றி...மறவாதே!

சஷ்டி 3ஆம் நாள்:
வாங்க, பழனி மலைக்குப் பொடிநடையாப் போய் வருவோம்!

மூன்றாம் படைவீடு = மலையின் கீழே இருக்கும் திருவாவினன்குடிக் கோயில் தான்!
ஆனா, மலை மேல ஒருத்தன், Show காட்டிக்கிட்டு, கவர்ச்சியா நிக்குறானா...
So, என்னவன் நிர்வாண அழகுல மயங்கி, மேலுள்ள ஆலயமே செம ஹிட் ஆயிருச்சி:))



இந்தத் திருப்புகழ் மிக எளிமையானது! நாலே வரி! எங்கே...கேட்டுக்கிட்டே பாடுங்க & படிங்க பார்ப்போம்...

வசன மிக வேற்றி...மறவாதே
மனது துயர் ஆற்றில்...உழலாதே
இசை பயில் சடாட்ச...ரமதாலே
இகபர செளபாக்யம்...அருள்வாயே


பசுபதி சிவாக்யம்...உணர்வோனே
பழநிமலை வீற்று...அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி...மிகவாழ
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!!



பழனியாண்டவர் (மூலவர் - ராஜ அலங்கார ஓவியம்),
சின்னக்குமாரர் (உற்சவர் - புகைப்படம்)


பொருள்:


வசன மிக வேற்றி...மறவாதே = உன் பேரையே, வசனமாய் உருப்போட்டு உருப்போட்டு
மனது துயர் ஆற்றில்...உழலாதே = மனசைத் துயரம் என்னும் ஆற்றில் மிதக்க விடாது செலுத்துவேன்!

இசை பயில் சடாட்ச...ரமதாலே = இசையாய் இனிக்கும் "சரவணபவ" என்னும் சடாட்சரம் (திருவாறெழுத்து) - அதையே சொல்லுவேன்!
இகபர செளபாக்யம்...அருள்வாயே = இகம்-பரம் (இம்மை-மறுமை) இரண்டிலும் இன்பம் கொடுடா, என் முருகா!!

பசுபதி சிவாக்யம்...உணர்வோனே = பசு-பதி-பாசம் என்னும் சைவ ஆகமத்தை உணர்ந்தவனே
பழநிமலை வீற்று...அருளும் வேலா = பழனி மலை மேல் வீற்றிருக்கும் வேலவா!

அசுரர் கிளை வாட்டி...மிகவாழ = அசுரரைக் கிளையோடு (குடும்பத்தோடு) வாட்டினாயே!
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!! = அமரரைச் சிறையில் இருந்து மீட்டினாயே!


பழனி ரகசியங்களைப் போட்டு உடைப்போமா? உம்ம்ம்...பழனியாண்டவர் உருவச் சிலையே ஒரு தெய்வ ரகசியம் தானே?

பழனி என்பது ஒரு படைவீடே கிடையாது!
திருவாவினன்குடி என்பது தான் அறுபடை வீட்டுள் ஒன்று!
திரு+ஆ+இனன்+குடி = இலக்குமி, காமதேனு, சூரியன் ஆகியோர் வணங்கிய தலம்! ஆவினர்கள் என்னும் சிற்றரசர்கள் ஆண்ட குடி என்றும் சொல்லுவர்.

இந்தப் படை வீடு, மலையின் கீழ் உள்ள ஆலயம்!
= குழந்தை வேலாயுத சாமி என்று இறைவனுக்குப் பெயர்.
கோபமாக, மயில் மேல் அமர்ந்த குழந்தைக் கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறான். சரவணப் பொய்கையும் உண்டு.


பின்னாளில் சித்த புருஷரான போகர், தண்டபாணி சிலை வடித்த பின்னர், மலை மேல் உள்ள ஆலயம் பிரபலமாகி விட்டது.
தண்டாயுதபாணியும் அழகும் பேரழகே!
ஆனா, அடுத்த முறை பழனி செல்லும் போது, மேலே உள்ள குழந்தையும் கண்டு, கீழே படைவீட்டில் உள்ள குழந்தையையும் கண்டு வாருங்கள்!

* பழனி என்றால் முதலில் எது? பஞ்சாமிர்தமா? முருகனா?? :)
சிறிய விருப்பாச்சி என்னும் வாழைப்பழங்களால் செய்வதே பஞ்சாமிர்தம்.
எல்லா வாழைகளும் போட முடியாது. நீர்ப்பதம் குறைவாய் உள்ள வாழை தான் ரொம்ப நாள் கெடாமல் தாங்கும்.
சர்க்கரை, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கற்கண்டு, நெய், ஏலக்காய் - இவ்வளவு தான்! இதுக்கு மேல் ஆப்பிள், ஆரஞ்சு-ன்னு கண்டதையும் சேர்க்கக் கூடாது!:)

* கொடைக்கானல் மலையில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் ஆலயமும், பழனிக்கு உட்பட்டதே!
கொடைக்கானல் மலைகளில் இருந்து இறங்கும் போது, பழனி மலையின் அழகையும், கோயிலின் தூரப் பார்வையும் கண்டு களிக்கலாம்!

* முருகனுக்கு உரிய கடம்ப மலர், பூத்துக் குலுங்கும் தலம் பழனி!

* சித்தபுருஷர் போகர் பெருமானின் நிர்விகல்ப சமாதி அமைந்த தலமும் இதுவே!
அடுத்த முறை ஆலய வளாகத்துள் இருக்கும் போகர் குகைக்குச் சென்று வாருங்கள்! மரகத லிங்கம், நவ துர்க்கை என்று அவர் வழிபட்ட மூர்த்திகளும் சமாதியில் உள்ளன




காலங்கி நாதரின் சீடர் போகர்!
தன் குரு தீர்க்கதரிசனத்தால் பின்னாளில் நோய்கள் மலியும் என்று சொன்னதால், பாஷாணம் என்னும் ஒன்பது விஷங்களை மருந்தாகக் கலந்து, பழனியாண்டவர் சிலையை வடித்தார், தன் சீடர் புலிப்பாணி உதவியுடன்!
பாஷாண உருவத்தின் மேல்....அளவாகத் தீர்த்தமாட்டப்படும் பாலில், மருந்துப் படிமங்கள் படிந்து, நோய் தீர்க்கும் என்பது சித்தரின் மருத்துவக் கணக்கு!
Perkin-Elmer Atomic Absorption/Adsorption என்று Spectrometer வைத்து ஆய்வு செய்த பின்னர் கூட, பழனி முருகனின் மூலக் கூற்றை இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை!

பேராசைப் பெருமகன்களாலும், அரசியல்-பணக் காரணங்களாலும், கணக்கே இல்லாமல் பால் குட அபிடேங்கள்! பழனியாண்டவர் சிலையைச் சேதார நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டனர் நம்ம ஆட்கள்!
சித்தரின் மருத்துவக் கணக்கு, பால் கணக்கால், அடிபட்டுப் போகிறது. பாவம், போகரே இதை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்! ஒரு மாதத்தில் 700 குளியல்களா?

போதாக்குறைக்கு, போகரின் பூசை முறையில் இல்லாத அந்தணர்கள்/அர்ச்சகர்கள் தான் இன்றைய கருவறைக்குள் நுழைவு!
பாஷாணம் சுரண்டிக் களவாடப்பட்டது என்று சொல்வார் கூட உண்டு!

இத்தனை உயர மூர்த்திக்கு, இத்தனைக் குடம் தான் அபிடேகம் போன்ற Work Instruction-கள் தான் ஆகமம். ஆறு காலப் பூசை, ஆறாறு குட முழுக்காட்டு என்று வரையறுக்கும். ஆனால் அதையெல்லாம் மீறிப் பேராசை பட்டதால் இன்று பழனிக் குழந்தை, கால்கள் எல்லாம் சூம்பிப் போன நிலையில், ஓடாய்த் தேய்ந்து நிற்கிறான்!
அர்ச்சகர்களே, அபிடேகத்தின் போது, கையைக் கிழித்துக் கொள்வோமோ, என்று பயந்து பயந்து செய்யும் நிலைமை!

பழனியில், அதிகாலை விஸ்வரூப அலங்காரத்தில், என்னவனைக் கண்டு கண் கலங்கியவர்களில் நானும் ஒருவன்.
யாரும் அதிகாலை விஸ்வரூம் பார்த்து விடாதீர்கள். பையன் எந்த அலங்காரமும் இன்றித் தனியாகத் தெரிவான்! குச்சி போல் மெலிந்த கோலம் கண்டு மனமே ஒடிந்து விடும்!

அவர்களே, நமக்கு அதிகம் காட்டாது, பரபரவென்று முடித்து விடுகிறார்கள்!
ராஜ அலங்காரம், ஆண்டிக் கோலம், அந்தண அலங்காரம் என்று அலங்கரித்த முருகனையே கண்டு வாருங்கள்!




* மலைக்குச் செல்ல நான்கு பாதைகள் உண்டு
யானைப்பாதை சிரமம் இல்லாதது. வயதானவர்களும் செல்லலாம். படிகள் கம்மி.
தீர்த்தப் பாதை, ஆலய நீர்த் தேவைக்கு மட்டும்.
ரோப்-கார் என்னும் இழுவை ரயில் ஒரு தனி அனுபவம் தான்! ஆனால் மலையை அனுபவிக்க முடியாது, நொடிகளில் ஏறி விடும்! ரயிலில் கூடப் பொது வழி, சிறப்பு வழி-ன்னு நம்ம தர்ம-நியாயங்கள்! :)

மொத்தம் 697 படிகள் தானே! படிகளில் ஏறிச் செல்லுங்கள்!
அதன் அழகே தனி!
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் படிகளில் செல்லும் போது தான் கிடைக்கும்!

அடிவாரம் பாத விநாயகரை வணங்கி, பாதி வழியில் இடும்பனை வணங்கி, சிவ கிரி-சக்தி கிரியைக் கண்டு, இடும்பனுக்கு உள்ள தனி மலையைக் கண்டு, பழனியின் வயல்வெளிகளைக் கண்டு, சண்முக நதியின் ஓடும் அழகைக் கண்டு.....இதெல்லாம் ரோப்-காரில் கிடைக்காது!

வேண்டுமானால், ரோப்-காரில் ஏறுங்கள்; இறங்கும் போதாவது படிகளில் வாருங்கள்!
ஏறுதலை விட இறங்குதல் எளிது! மூச்சு முட்டாது, வயதானவர்க்கும் எளிது!



* நகரத்தார்கள் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு, பழனி ஆலயத்துக்கும், பழனிப் பாத யாத்திரைக்கும்.
பங்குனி உத்திரம் தான் மிகப் பெரும் விழா! காவடிக் கடல்! அடுத்து தான் தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி எல்லாம்!

* பழனி ஆலயம், வருமானத்தில், தமிழ்நாட்டின் திருப்பதி!
இதற்கு மேல் நான் ஒன்னும் சொல்லலை! கல்லூரி, சித்த மருத்துவமனை - இதாவது நடக்கிறதே! மகிழ்ச்சி!

TTD, தெலுங்கு இலக்கியங்களை எல்லாம் டிஜிடைஸ் செய்து முடித்து விட்டு, அடுத்து ஆழ்வார் பாசுரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக் கொண்டார்கள்! சமூக முகாம்கள், தலித் கோவிந்தம், சுவடி ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, நீர் ஆதாரங்கள் என்று ஒரு தெலுங்கு நிறுவனம் தமிழ் வளர்ச்சி செய்யட்டும்!
எங்கள் அருணகிரியையும் டிஜிடைஸ் செய்யுங்க-ன்னு அவங்களிடம் போய்க் கேக்க முடியுமா? நம்ம கிட்டத் தான் அறநிலையத் துறை பாத்து பாத்து கவனிக்கும் பழனி ஆலயம் இருக்கே! :(

* தமிழர்கள் மட்டுமன்றி, கேரளாவில் இருந்தும் பல பக்தர்கள் வந்து செல்லும் தலம் பழனி!
மலையாள அறிவிப்புப் பலகைகளைப் பழனியில் காணலாம்! சேரமான் கட்டிய கோயில் அல்லவா!



* நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி பற்றித் தான் பேசுகிறார். பழனி பற்றியோ, மலைக்கோயில் ஆலயம் பற்றியோ பேசவில்லை!
தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று
- என்று பாடுகிறார்!
அறுபடை வீடுகளுள், மிக அதிக விவரணங்கள்/வரிகள் ஆவினன்குடியை பற்றித் தான் வருகிறது!

* அருணகிரியார் மிக அதிகமாகப் பாடிய தலம் பழனித் தலம்.
மொத்தம் 97 திருப்புகழ்கள் ஆவினன்குடி மீது! பிரபலமானவை இதோ:
- நாத விந்து கலாதீ நமோ நம
- சிவனார் மனங்குளிர
- தகர நறுமலர்
- திமிர உததி
- வசனம் மிகவேற்றி மறவாதே

* பழனியாண்டவர் கைகளில் வேல் இல்லை! தண்டம் என்னும் கம்பு மட்டுமே!
வேல் தோள்களில் தான் சார்த்தி வைக்கப்பட்டு இருக்கும்!


* பழனி மலை என்பது மொத்தம் இரண்டு மலைகள்!
சிவ கிரி = பழனியாண்டவர் இருப்பது!
சக்தி கிரி = இடும்பன் மலை

13 அடி உயர இடும்பன் சிலை உள்ள சிறு ஆலயம்.
இரு மலைகளும் அருகருகே தான்! இடும்பன் மலைக்குச் சென்றால் இடும்பனையும் காணலாம்! பழனி மலையை, அதன் பசுமையை, விதம் விதமான கோணங்களில் புகைப்படம் எடுக்கவும் சரியான Spot!

* எப்போதுமே என்னை கை நீட்டி அடிக்காத அப்பா, என்னை முதல் முறையாக அடித்த இடம் பழனி மலை தான்! :)
பழனியில் உள்ள கடையில் முருகனின் ஆறுபடை வீட்டுப் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொன்றிலும் ஒன்னொன்னு கேட்டிருக்கேன்! விலை அதிகம்!

பஞ்சாமிர்தம், தின்பண்டம், குட்டிப் பொம்மை, சொப்பு-ன்னு எதுக்கும் மசியாமல், அந்த ஆறு முருகன்கள் தான் வேண்டும் என்று நான் அடித்த லூட்டிக்கு, விழுந்த பளார், இன்னும் ஞாபகம் இருக்கு! :))

பழனி மலை-முருகனுக்கு அரோகரா!
என் காதல் அழகனுக்கு அரோகரா!
அவன் அழகான இடுப்புக்கு அரோகரா!
அவன் ஒயிலான உடம்புக்கு அரோகரா!!

Friday, October 28, 2011

2) திருச்செந்தூர்: ஆண்மைக்கார முருகன்!

சஷ்டி: 2ஆம் நாள்!
வாங்க திருச்செந்தூர் திருப்புகழுக்கு ஓடலாமா?:)
இந்தப் பாட்டும் ஓடற பாட்டு தான்! வேகமா ஓடும்!
தினமும், சின்னச் சின்னத் திருப்புகழ்-ன்னு நேத்திக்கி சொன்னேன்!
ஆனா திருச்செந்தூர்-ன்ன வுடனேயே....அளவில்லா அன்பால், அளவே இல்லாமப் பாடிட்டாரு அருணகிரி!
செந்தூருக்கு மட்டும் 4வரி, 8வரிப் பாட்டே இல்ல! பெரிய பாடல்கள் தான்! இந்தப் பாட்டைப் பழகிக்குவோம் வாங்க! சூப்பர் சந்தம்!

அருணகிரிக்குத் திருச்செந்தூரில் தான், தன் அப்பாவைப் போலவே முருகன் நடனமாடிக் காட்டினான்! பாட்டும் அதே மெட்டில் தான் இருக்கு! = முந்து தமிழ்!

அது என்ன "முந்து தமிழ்"?
= எல்லா மொழிக்கும் ஓட்டப் பந்தயம் நடக்குது! அதுல தமிழ் முந்துது:)

தேக்கநிலை இன்றி, முந்திக்கிட்டே இருந்தாத் தான், உயிர்கள் உருவாகும்! விந்து விந்து, முருகவேள் "முந்து"!
வடமொழி முந்தவில்லை! பிந்தி விட்டது!
ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன், சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!

ஆனா, தமிழ், ஒரு சாராருக்குள் மட்டும் அடங்கி விடாமல், பழம்பெருமையில் மட்டுமே தங்கி விடாமல் முந்திக்கிட்டே இருக்கு!
அதான் "முந்து தமிழ்"-ன்னு துவங்குறாரு!



முந்துதமிழ் மாலை கோடிக்கோடி
சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர் மனைவாசல் தேடித்தேடி...உழலாதே

மொழிகளுள் முந்திச் செல்லும் தமிழிலே, பாமாலைகள் கோடிக் கோடி!
அதையெல்லாம் சந்தத்தோடு பாடிப்பாடிப் பாடணும்!
அதை விட்டுட்டு, அழகான பொண்ணுங்க வீட்டு வாசலைத் தேடித்தேடி உழன்றேன்; (இனி உழல மாட்டேன்!)


செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அநுகூலப் பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது...வருவாயே???

சிவப்பான சின்ன கால்! பெரிய தோகை = மயிலுக்கு!
தெறிப்பான, வீரமான, அனுகூலமாப் பார்வை அந்த மயிலுக்கு!
அந்த மயில் மீது ஒயிலாக...என் முருகவா...நீ எப்போடா என் கிட்ட வருவ???



அந்தண் மறை வேள்விக் காவல்கார
செந்தமிழ்ச் சொல் பாவின் மாலைக்கார
அண்டர் உபகாரச் சேவல்கார...முடிமேலே

வேள்வியைக் காக்கும் காவல் காரனே
தமிழையே சூடிக்கொள்ளும் மாலைக் காரனே
அமரர்களுக்கு உதவும் சேவல் காரனே, (சேவல் கொடியவனே)!!


அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார
குன்று உருவ ஏவும் வேலைக்கார
அந்தம் வெகுவான ரூபக்கார...எழிலான

வணங்குவோர் எல்லாருக்கும் நேசக் காரனே!
குன்றை அழிக்க (குன்றாய் மாறிய தாரகாசுரன்), வேலை ஏவிவிட்ட "வேலைக்" காரனே!
முடிவே இல்லாத அழகை உடைய ரூபக் காரனே!


சிந்துர மின்மேவு போகக்கார
விந்தை குறமாது வேளைக்கார
செஞ்சொல் அடியார்கள் வாரக்கார...எதிரான

தேவானை மேவி விரும்பும் போகக் காரனே!
குறவஞ்சி வள்ளியின் மெய்க் (உடம்புக்) காவலனே! வேளைக் காரனே!
சிறப்பான மொழிகளைப் பாடும் அடியவர்கள், அன்புக் காரனே!


செஞ்சமரை மாயு மாயக்கார
துங்கரண சூர சூறைக்கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார...பெருமாளே!

எதிர்த்தும் வரும் பகைவரை மாய்க்கும் மாயக் காரனே!
போரில் சூரனைச் சூறையாடிய, சூறைக் காரனே!
செந்தில் எனும் செந்தூர் நகரில் வாழும்...என் முருகவா...
நீயே என் பெண்மைக்கு, ஆண்மைக் காரன்! வாடா முருகவா, எப்போது வருவாயோ?



From yester year posts.....





முன்பு பதிவிட்ட, திருச்செந்தூர் ரகசியங்கள் இதோ:

* சூரசங்காரம், பலரும் நினைத்துக் கொள்வது போல், திருச்செந்தூரில் நடக்க வில்லை!
அது நடந்த இடம் = தமிழ் ஈழத்தில் உள்ள ஏமகூடம்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!

செந்தூரில் போருக்கு முன்னரே மயனால் கட்டப்பட்ட ஈசனின் ஆலயம்!

அங்கே....சூரனை அழித்த மனக்கேதம் தீர, கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன்!
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!



திருச்செந்தூர் கோவிலின் முதல்மூர்த்தி யார் தெரியுமா? = முருகன் இல்லை! சிவபெருமான் தான்! :)
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனை லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்!


திருச்செந்தூருக்கு இதுவரை செல்லாதாவர்கள் வசதிக்காக இதோ ஒரு சிறு வர்ணனை!
அப்படியே மனத்திரையில் விரித்துக் கொள்ளுங்கள் என் விரிஞ்சனை!

* கையில் ஜபமாலை, இன்னொரு கையில் சத்தி என்னும் ஆயுதம்!
* முன்கையில் ஒரு தாமரைப்பூ....
* அதை இடப்பக்கம் உள்ள ஈசனுக்கு அர்ச்சிக்கும் போது...
* நாம் திரண்டு வந்து நிற்பதைப் பார்த்து....கொஞ்சம் இருங்க வந்துடறேன்...என்பது போல், நம்மைத் திரும்பிப் பார்த்துச் சிரிக்கும் முகம்! So Romantic Pose!:)
* கையில் வேல் இல்லை! அவன் தோளிலே தாங்கி நிறுத்தியுள்ளார்கள்!



முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்!
அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன! கருவறைக்குள் எட்டிப் பார்த்தால், சிவலிங்கம் தெரியும்!
அப்பாவை மந்திரப் பொருள் கேட்டு மிரட்டிய பிள்ளை, இங்கே பணிவே உருவாக, அப்பாவுக்குப் பூசை செய்கிறது! என்ன பணிவு என்ன பணிவு! டேய் செல்லம்.... :)


மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று!
திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது).
கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்!

ஆலயத்தில் சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! செந்து+இல்=செந்தில்!
பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!

கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம்! ஒருமுகம்! சிரிமுகம்!
சிறு பாலகன் ஆதலால், அதே உசரம் தான்! ஆளுயரம் இல்லை!

தலைமாலை சூடி, மணி முடி தரித்து,
வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து,
வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
கையிலே தாமரைப் பூ பிடிச்சி நிக்கும் ஸ்டைல்!!

உருண்ட முகத்தில் கரிய விழிகளும், கூரிய நாசியும்,
திருப்பவளச் செவ்வாயுமாய்...
தோள்களில் வெற்றி மாலை தவழ,
அதிலே அடியேன் உயிரும் சேர்ந்தே தவழ...


என் மணவாளா...முருகவா! உன் கருவறைப் படியாய் இருந்து, உன்னை எப்பவும் பாத்துக்கிட்டே இருப்பேன்!


செந்தூர் மூலவரைப் பார்த்தாச்சு! உற்சவர்? = மொத்தம் 4 உற்சவர்கள்!
= சண்முகர், ஜெயந்திநாதர், குமார விடங்கர் (மாப்பிள்ளை முருகன்), அலைவாய்ப் பெருமாள்!

நிலைக் கண்ணாடியும் ஒரு உற்சவரே!
சூரசங்காரம் முடிந்து, சண்முகர் திரும்புகையில், கண்ணாடி முன்னே முருகனை நிறுத்தி,
அந்தக் கண்ணாடியில் தோன்றும் நிழல் உருவத்துக்கு, அபிடேகம் (திருமஞ்சனம்) செய்யப்படும்!
= நிழல்நீராட்டு, சாயாபிஷேகம்!


முக்கிய உற்சவர் = சண்முகப் பெருமான்!
டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட!

ஊரெல்லாம் கந்தசஷ்டி 6 நாள் நடைபெற, இங்கு மட்டும் 12 நாள் நடக்கும்!
7 ஆம் நாள், தேவானைத் திருமணம், பின்பு மூன்று நாட்கள், கொலு மண்டபத்தில் ஊஞ்சல் காட்சி!
மும்மூர்த்திகள் வடிவங்களாகவும் அலங்காரம் நடைபெறும்!
பிரம்மன், ஈசன், திருமால் போல் வேடமிட்டுத் தோன்றுவான் முருகன்!




மூலவர் கிழக்கு பார்த்து இருப்பதால், அந்தப் பக்கம் கடல் என்பதால், கோபுரம் மேற்கில் இருக்கும்! அது பூட்டியே தான் இருக்கும்!
ஆண்டுக்கு ஒரு நாள் திறப்பதே வழக்கம்! நாழிக் கிணறு, வள்ளிக் குகை, சண்முக விலாச மண்டபம், கடற்கரை என, அழகு கொஞ்சும் செந்தூர்!


செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று!
செந்தூரான் புட்டமுது, சிறுபருப்புப் பொங்கல், கருப்பட்டியும்-பனங்கிழங்கும் புகழ் மிக்கவை
!

Thursday, October 27, 2011

1) திருப்பரங்குன்றம்: தந்தியின் கொம்பைப் புணர்வோனே!

முருகனருள் வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்!
தீபாவளி, அமாவாசை நோன்பு (கேதார கெளரி) முடிந்து...
இதோ கந்த சஷ்டி விழா துவங்கி விட்டது!

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பொருளில் (Theme) சஷ்டி இடுகைகள் இடுவது வழக்கம்!
* 6 நாளும் = தமிழ்ச் சினிமாவில் முருகன்
* 6 நாளும் = அறுபடை வீடு- குறிப்புகள்
என்று முந்தைய ஆண்டுகளில் பார்த்தோம்! இந்த ஆண்டு என்ன?

எனக்குத் தனிப்பட்ட சில நெருக்கடிகள்.....
அதனால், அதிகமாயும் இல்லாது, அதே சமயம், என் முருகனுக்கு குறைவாயும் இல்லாது...
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு படைவீட்டுத் திருப்புகழை இடுகிறேன்!
* 6 நாளும் = 6 படைவீட்டுத் திருப்புகழ்கள்!

மிக எளிமையான, சின்னத் திருப்புகழாப் பார்த்து இடுகிறேன்! மனப்பாடம் செய்து கொள்ள, இது அருமையான வாய்ப்பு!
வாங்க ஓடலாமா....முதல் படைவீட்டுக்கு? என்ன ஊரு அது?



திருப்பரங்குன்றம்!

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்று உற்று உனைநாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றில் பெருமாளே!

என்ன...எளிமையான பாட்டு தானே!
எட்டா வரி அல்ல! எட்டே வரி!
மனப்பாடம் பண்ண எளிது! ரொம்பச் சந்தமோ...நாலு நாலா பத்திகளோ இல்லாம, ஒரே பத்தியில்...முத்தைத் தரும் பத்தியான பாடல்!



பொருள்:

சந்ததம் பந்தத் தொடராலே = எப்பவும், பந்த பாச மயக்கத்தால், அன்பு எனும் அலையில் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறேன்!
சஞ்சலம் துஞ்சித் திரியாதே = தூக்கத்திலும் துன்பப்பட்டுத் திரிகிறேன்!

கந்தன் என்று உற்(று) உனைநாளும் = கந்தாஆஆஆ ன்னு உன்னோடு உறவாடி
கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ = மனசாற, உடம்பாற...நான் உன்னைப் பார்க்கணும்!
அந்த ஆழ்மனசு அன்பை உனக்குக் குடுத்து, உறவாடணும் போல இருக்கு, முருகா!

தந்தியின் கொம்பைப் புணர்வோனே = ஐராவதம் என்னும் யானை (தந்தி) வளர்த்த கொழு கொம்பு = தேவானை அம்மை! அவளைப் புணர்வோனே (சேர்வோனே)
சங்கரன் பங்கிற் சிவைபாலா = சங்கரன் பங்கிலே சங்கரி! அவன் சிவன்-ன்னா இவள் சிவை! அதனால் நீ சிவ-பாலன் & சிவை-பாலன்!

செந்திலங் கண்டிக் கதிர்வேலா = செந்தில்(திருச்செந்தூர்), கண்டிக் கதிர்காமம் ஆகிய புகழ் மிக்க ஊர்களில் உள்ளவனே!
தென்பரங் குன்றில் பெருமாளே = தென் மதுரையில்...பரங்குன்றம்...அதில் விளங்குகின்ற பெருமானே!


எந்த ஊருக்கும் இல்லாத பெருமை = மதுரைக்கு உண்டு!
அறு படையிலே, இரு படைகளைக் கொண்டது!
* முதல் படைவீடு = திருப்பரங்குன்றம்
* கடைசிப் படைவீடு = பழமுதிர் சோலை
இப்படிப் படைவீடுகளைத் துவக்கியும் முடித்தும் வைக்கிற பெருமை = மதுரைக்கு உண்டு!

என் இங்கித மணவாளா, முருகா...
உனக்கு நான், எனக்கு நீ...
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு...

உன்னோட இந்தப் படத்தையே, வாழ்த்துப்படமாக, ஈராண்டுக்கு முன்பு அனுப்பி வைச்சேனே! திருப்பரங்குன்ற முருகா....அதற்கு ஈடாக, எனக்கு நீ தந்தது இது தானோ?
தந்தியின் கொம்பைப் புணர்வோனே!
என் காதலை நீயும் புணர்வாயே!

(சஷ்டி - முதல் நாள் - நிறைந்தது)


From yester year posts.....
* 2007 சஷ்டிப் பதிவுகள்
* 2008 சஷ்டிப் பதிவுகள்
* 2009 சஷ்டிப் பதிவுகள்
* 2010 சஷ்டிப் பதிவுகள்



முன்பு பதிவிட்ட, திருப்பரங்குன்ற ரகசியங்கள் இதோ:
திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில்!
குகைக்குள்ளே கருவறை என்பதால் சுற்றி வர முடியாது! மேலே விமானமும் இல்லை!
பல கோயில்களில் முருகன் நின்ற நிலையிலேயே இருக்க...இங்கு மட்டுமே அமர்ந்த நிலையில் முருகன்!

* முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க...
* கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்க...
* மறுபுறம் நாரதர்.....திருமாலின் சார்பாகப் பெண் கொடுக்கும் பாவனையில்!
(இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு)

மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள்!
விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை நோக்கினால் விநாயகர், அசுவினி குமாரர்கள், அமரர்கள் என்று பலரும் உண்டு!
மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையில் உள்ளார்கள்! இப்படிச் சுற்றம்சூழ திருமணக்கோலமாகக் கருவறை உள்ளது!

* இங்கு முருகனுக்கு அபிடேகம் (திருமுழுக்கு) கிடையாது! அனைத்து அபிடேகங்களும் திருக்கை வேலுக்கே!

* திருப்பரங்குன்ற மூலவர் சிவபெருமானே! விழாக்களிலும் நந்தியின் கொடியே ஏற்றப்படும்!



* கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்களையும் ஒரு சேரக் காணலாம்!
எலி, நந்தி, மயில் என்று மூன்றும் முன்னிற்கும்!
அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும்....அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்! எல்லாமே குட்டிக் குட்டிக் குறுகலான குடைவரைகள் தான்!

* சிவபெருமான் = பரங்கிரி நாதராய் எழுந்தருளியுள்ளார்! அம்மை = ஆவுடை நாயகி. திருப்பரங்குன்றத்து ஈசனைச் சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் பாடியுள்ளனர்!
* திருப்பரங்குன்றத்தில் பவளக்கனிவாய்ப் பெருமாளும் உண்டு! அழகருக்குப் பதிலாக, மீனாட்சி திருமணத்தில் இவரே கலந்துகொண்டு, அன்னையை, ஈசனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது!

* நக்கீரர் திருமுருகாற்றுப்படையைச் செய்ததும் இங்கு தான்!




* திருமாலின் விழிநிறைப் புதல்வியர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி! முருகனை மனதார விரும்பினர்! அவனை அடைய வேண்டிச் சரவணப் பொய்கையில் தவம் இருந்தனர்!
ஆனால், அவதார நோக்கம் நிறைவேறிய பின்னரே, தான் அவர்களை மணக்க முடியும்-ன்னு சொல்லி, பிறவியெடுத்துக் காத்திருக்கச் சொல்லி விட்டான் முருகன்!

அதன்படி...அமிர்தவல்லி, அமரர் தலைவன் இந்திரனின் ஊரிலே, கற்பகச் சோலையில் தோன்றி, ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்படுகிறாள்!
சுந்தரவல்லி, தினைப்புனத்தில் வள்ளிக்குழியில் பிறந்து, வேட்டுவ நம்பியால் வளர்க்கப்படுகிறாள்! முருகனையே எண்ணியெண்ணி வாழ்வில் நடந்தே தேய்கிறாள்!
தேவானை தேவ முறைமையோடு வளர, வள்ளியோ மானிடப் பிறவியாய்...முருகனே பித்தாகி, அவனே அவனே என்று உழல்கிறாள்!

சூர சங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான்! சரவணப் பொய்கையில் முன்னர் தாம் கொடுத்த வாக்கின் படியே, தேவானை அம்மையைப் பரங்குன்றில் மணக்கிறார்.
அவ்வண்ணமே, வள்ளி அம்மைக்கு கீழிறங்கி வந்து, பொய்க் காதல் நாடகங்கள் ஆடி, வள்ளியை வேட்டு, திருத்தணிகையில் மணம் புரிகிறார்
.
இருவர் காதலையும் போராடிப் பெற்றே மணமும்-மனமும் களிக்கின்றான் முருகன்!
முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு!

* பரங்குன்ற மலைமேலும் ஆலயம் ஒன்று உள்ளது. இஸ்லாமிய தலம் ஒன்றும் உள்ளது.
அல்-சிகந்தர் என்றும் செகுந்தர் என்றும் சி-கந்தர் என்றும் கொண்டாடுகிறார்கள்.
முருகனின் தோழராகக் கருதப்படுகிறார். கதிர்காமத்தில் காணப்படுவதும் இவரே!
ஆனால் அண்மைக் காலங்களாக, கார்த்திகை தீபத்தின் போது, மதப் பிரச்சனைகள் கிளம்புகின்றன. இத்தனை ஆண்டு கால ஒற்றுமையை ஊதி அணைப்பதும் தகுமோ?

* திருப்பரங்குன்ற ஆலயத்தில் இருப்பது முருகனே அல்ல! அது ஒரு சமணத் தெய்வம், (அ) ஜேஷ்டா தேவி! இறைவனின் முகத்தில் பெண் சாயல் தெரிகிறது என்று ஒரு பிரச்சனையும் கிளம்பியது.

தரமுள்ள ஆதாரங்கள் ஏதுமின்றி, திருப்பதி-திருமலையில் இருப்பது முருகன் தான் என்று முன்பு கிளப்பி விட்டதைப் போலவே, பரங்குன்றத்து இறைவன் முருகன் அல்லன் என்றும் கிளப்பி விடப்பட்டது.
குகைகள் எப்பமே சமணர்கள் தான் சமைப்பார்கள், எனவே இது சமணத் தலம் என்று வீண் வாதங்கள் எழுந்து அடங்கின. இது பற்றி ponniyinselvan.in-இலும் சில இழைகள் ஓடின!

* திருப்பரங்குன்றின் பிரபலமான திருப்புகழ்கள் சில இதோ:-
- கருவடைந்து பத்துற்ற திங்கள்
- சந்ததம் பந்தத் தொடராலே
- மன்றல் அம் கொந்து மிசை
- உனைத் தினம் தொழுதிலன்


Monday, October 10, 2011

நாளை வருமென்று நம்பலாமா?

கீதையில் ஓரிடத்தில் கண்ணன் இவ்வாறு கூறுவான்: இறக்கும் தருவாயில் என்னை நினைப்பவருக்கு நான் மோக்ஷம் தருகிறேன்.

மேலோட்டமான பொருள் என்ன? இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் செய்வோம் இறக்கும்போது கண்ணனை நினைப்போம். நமக்கு மோக்ஷம்.

ஆனால் இதில் இரு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று: இறப்பு எப்போது வரும் என்று தெரியாது. இன்னொன்று வாழும்போது செய்யாத ஒன்றை இறக்கும் தருவாயில் செய்வது முடியாத ஒன்று. பரிட்சைக்குப் படிக்காமலேயே சென்று தேறி விடவேண்டும் என்று நினைப்பவரின் செயலை ஒத்தது. நன்கு படிதாலுமே சமயத்தில் காலை வாரி விட்டுவிடுகிறது:-))

இந்த இரு காரணங்களுக்காக நாம் பரம்பொருளை இன்றே, இப்போது நினைக்க ஆரம்பிக்க வேண்டும். நாளை என்ற ஒன்றை நம்பலாகாது. ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய் என்று ஔவை கூறியதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

மதுரை ஜி எஸ் மணியின் அருமையான பாடல். முதலில் பாடலைப் பார்த்துவிடுவோம்.

நாளை வரும் என்று நம்பலாமா?
நாளை வரும் என்று நம்பலாமா?
குகன் தாளைப் பணிந்தருள் பெறவேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா?

வேலைப் பிடித்த கந்தவேளை மனமுருகிக்
காலை மாலை ஒருவேளையும் துதிக்காமல்
நாளை வருமென்று நம்பலாமா?
குகன் தாளைப் பணிந்தருள் பெறவேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா?

அழகான வாலிபம் அணங்குடனே தீரும்
திரண்டு வரும் நேரம் கவலை பல சூழும்
திருமுருகன் நாமம் நினைக்க நேரமில்லை
மறுபிறவி என்பது எங்கோ தெரியவில்லை

நாளை வரும் என்று நம்பலாமா?
குகன் தாளைப் பணிந்தருள் பெறவேண்டாமா?

வேல் – வேல் என்ற ஆயுதம். வேள் – அழகன். வேலிருப்பதால்தான் அவன் வேள். வேல் என்பது புறக்கண்ணுக்குத் தெரியும் வேல் என்ற ஆயுதத்தை மட்டும் குறிக்காது தகப்பன் சுவாமி என்று பெயர் இலங்கும்படி ஆழ அகலக் கற்றவன் வேலன் என்பதையும் உள்ளடக்கியதாகப் படுகிறது.
ஸ்தூல வேல் திருமேனி அழகையும், சூட்சும வேல் (வேலின் தத்துவம்) திருவுள்ளத்தின் அழகையும் காட்டுகின்றன. வேலாம்படையின் முன் மற்றவை எல்லாம் நூலாம்படை என்று சில வார்த்தைகளில் வேலின் சிறப்பு பற்றிக் கவிஞர் வாலி தன் தமிழ்க்கடவுள் (கந்தபுராணம் புதுக்கவிதை வடிவில்) நூலில் கூறுகிறார்.

பகற்பொழுது காலையில் தொடங்கி மாலையில் முடிகிறது. முழு தினமும் கந்தனைப் பற்றி எண்ணாது இயந்திர வாழ்வின் நடைமுறைகளில் கழிந்து போனாலும் நாளின் தொடக்கத்தில் அல்லது முடிவில் மட்டுமாவது கந்தனை நினைவிற்கொள்ள வேண்டும்.

வாலிபத்தில் அவன் நினைவு இருப்பதில்லை. பிறகு கவலைகள் சூழ்ந்து கொண்டுவிடுகின்றன. அப்படியானால் கந்தனை நினைப்பதற்கு எதுதான் சரியான நேரம்? இப்போதே ஆரம்பித்து விடவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

மறுபிறப்பென்பது எங்கோ தெரியவில்லை என்று வருவது விசேஷம். குகனின் அனுக்ரஹத்தால் மறுபடி பூவுலகில் மானிடப் பிறப்பெடுத்துக் கந்தன் பற்றிய பிரக்ஞை இருக்கும் பட்சத்தில் ஜென்மம் முழுதும் அவன் புகழ் பாடிக் களிக்கலாம். இல்லாத பட்சத்தில்? சுவர்க்கமே கிடைத்தாலும் அர்ச்சாவதார ரூபங்கள் கண்டு பாடிக் களிக்கும் ஆனந்தம் கிட்டாது. அதனால்தான் எங்கோ தெரியவில்லை என்று பாடினார். ‘அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரத்துளானே’, ‘மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று தொண்டரடிப் பொடியும் அப்பரும் பாடியதன் பொருள் இப்போது கொஞ்சம் புரிகிறது.

ஆகவே நாளை வரும் என்று நம்பாமல் இப்போதே குகன் தாளைப் பணிந்தருள் பெறுவோம்.

இந்தப் பாடலை சுதா ரகுநாதனின் குரலில் இங்குக் கேட்டு மகிழுங்கள். பாடலைக் கேட்க இன்னுமொரு சுட்டி.

Tuesday, October 04, 2011

அரஹரோஹரா!



அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா கந்தா அரஹரோஹரா
அரஹரோஹரா குமரா அரஹரோஹரா
அரஹரோஹரா வேலா அரஹரோஹரா

பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா

காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோஹரா
கால்கடுக்க ஆடிவந்தோம் அரஹரோஹரா
வேலெடுத்து நீ வரணும் அரஹரோஹரா
வேதனைகள் தீர்த்திடணும் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

கண்மணியே கனியமுதே அரஹரோஹரா
கனிந்தநெஞ்சிற் கினியவனே அரஹரோஹரா
(ஞானப்)பழமுன்னைத் தேடிவந்தோம் அரஹரோஹரா
பழவினைகள் விரட்டிடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

பலவாறாய் உனையிங்கு அரஹரோஹரா
பாசமுடன் அழைத்தோமே அரஹரோஹரா
பச்சைமயில் மீதேறி அரஹரோஹரா
இக்கணமே வந்திடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)


--கவிநயா

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP