Wednesday, February 23, 2011

பாம்பன் சுவாமிகள் - பகை கடிதல்!

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்!



திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும் ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன் முதல்மயிலே, கொணர்திஉன் இறைவனையே

திரு=செல்வம்; என்ன செல்வம்?
திரு வளர் சுடர் = வளர்ந்த சுடர்; வளர்கின்ற சுடர்; வளரும் சுடர்
இப்படி, எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வம் எது?

செல்வம்-ன்னா செல்வம், செல்வோம், செல்வோம் அல்லவா? செல்வம் தேயும் அல்லவா? இன்னிக்கே இல்லீன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா!
அது எப்படி செல்வம் வளர்ந்து கொண்டே இருக்கும்! திரு வளர் சுடர் என்கிறாரே பாம்பன் சுவாமிகள்? என்ன செல்வத்தைச் சொல்லுறாரு? = நீங்காத செல்வம்!
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்! அது என்ன நீங்காத செல்வம்?

எம்பெருமானே நம்மை விட்டு நீங்காத செல்வம்!
மற்ற எதுவாயினும், தாயே ஆயினும் நீங்க வல்லது! இந்தப் பிறவிக்கு ஒரு தாய்! ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் கூட வரும் ஒரே தாய்! அதுவே நீங்காத செல்வம்! தேயாமல் வளர் செல்வம்! = முருகச் செல்வம்!

அதான் "திரு" என்று மந்திரப் பூர்வமாக, இந்தத் துதியின் துவக்கத்தில் திருவை வைக்கிறார்! கூடவே இறைவனைச் சுடராக வைக்கிறார்! = அருட் பெருஞ் ஜோதி!

ஒளிக்குப் பேதம் ஏது?
சிவன், பெருமாள், முருகன், கணபதி, அம்பிகை, அல்லா, பிதா-சுதன்-பரிசுத்த ஆவி, இயேசுநாதப் பெருமான், தீர்த்தங்கரர், மகாவீரர், புத்தர் என்று சொல்லிப் பாருங்கள்! ஆட்கள் தனித்தனியாக அணி பிரிவார்கள்!
ஆனால் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் என்று சொல்லிப் பாருங்கள்! அனைவருக்கும் ஏற்புடைத்தாகவே இருக்கும்!

பரிபூர்ண இருள் என்று ஒன்று இல்லவே இல்லை! எத்தனை இருட்டிலும், கொஞ்சம் கண் பார்க்கப் பழகிய பின், சிறு ஒளியாவது தென்படும்!
அது போல், எத்தனை துன்பத்திலும், இறைவன் சிறிதாவது தென்படுவான்! அதுவே ஒளியின் பெருமை! அதனால் தான் பல இலக்கியங்கள் உலகத்தை வைத்தே துவங்கினாலும், அதோடு கூடவே ஒளியையும் சேர்த்து வைத்தே துவங்குகின்றன!

உலகம் உவப்ப பலர் புகழ் ஞாயிறு = திருமுருகாற்றுப்படை
திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும் = சிலப்பதிகாரம்
வையம் தகளியா, வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய சுடராழியான் அடிக்கே = ஆழ்வார் அருளிச் செயல்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், அலகில் சோதியன் = பெரிய புராணம்

இப்படித் தோற்றமாய் நின்ற சுடரையே, பாம்பன் சுவாமிகளும் துவக்கத்தில் வைக்கின்றார்!

திரு வளர் சுடர் உருவே = முருகச் செல்வம் சுடராய் ஒளி வீ்சும் உருவே
சிவை கரம் அமர் உருவே = சிவையாகிய உமை அன்னையின் கரத்தில் தவழும் உருவே
அரு மறை புகழ் உருவே = மறைகள் புகழும் உருவே
அறவர்கள் தொழும் உருவே = அறமே உருவான சான்றோர்/அறவர் தொழும் உருவே

இருள் தபும் ஒளி உருவே = தபு-ன்னா மறைந்து போதல்! (சினிமா நடிகையின் பெயர் அல்ல :) இருள் தபும் = இருளைப் போக்கும் ஒளி உருவே
என நினை எனது எதிரே = என்று ஒளி வண்ணமாக என் முருகனை நினைத்த மாத்திரத்தில், எனது எதிரே...அவன்!

குரு குகன் முதல் மயிலே = குருவான குகப் பெருமானின் முதலான மயிலே!
அது என்ன முதல் மயில்? ஏதாச்சும் ஓட்டப் பந்தயத்தில் மயிலார் முதலில் வந்தாரா என்ன? :)
வியாபாரத்தில் முதல் போடுகிறோமே! அது போல்...நம்மை ஆட்கொள்ளும் வியாபாரத்தில் முருகன், மயிலையே முதலாக வைக்கின்றான்!

முதலை வைத்துத் தான் பல செயல்களை நிகழ்த்த முடியும்! உழைப்பவர்க்கு கூலி கொடுக்க முடியும்!
முன்பு சூரனை அழித்தாலும், ஆணவம் மட்டுமே அழித்து, அவனை அழிக்காது, மயிலாய் தன்னிடமே இருத்திக் கொண்டதைப் போல, நம்மையும், நம் பாவங்களை மட்டுமே அழித்து, நம்மை அழிக்காது ஆட்கொள்வான்! இந்த நம்பிக்கை நமக்கு வருவதற்குத் தான், இந்த வியாபாரத்தில், மயிலை முதலாய் வைக்கிறான் முருகன்! அதான் குருகுகன் முதல்மயிலே!

கொணர்தி உன் இறைவனையே = உன் இறைவனை வேகமாகக் கொணர்ந்து, என் முன்னே நிறுத்து! முருகனை முன்னே நிறுத்து!

Sunday, February 13, 2011

முருகன்: அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து

200ஆம் பதிவின் பழனித் திருப்புகழைக் கண்டு, இந்தப் பதிவின் பாடலையும், ஒலிச் சுட்டியோடு அனுப்பி வைத்த திரு.பிரகாசம் ஐயா அவர்களுக்கு என் முருக நன்றிகள்!
பல முறை, தானாகவே முன் வந்து, பல திருப்புகழ்ப் பாடல்களின் ஒலிக்குறிப்பை முருகனருள் வலைப்பூவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றால்...
இந்த வலைப்பூ, அன்பர்களின் மத்தியில் எத்தனை அன்பைப் பெற்றிருக்கு-ன்னு நல்லாவே தெரிய வருது!

அதை நல்ல முறையில் கட்டிக் காத்து,
பொங்கு நீர் புரந்து பாயும் பூம்பொழில் அரங்கமாக,
என்றும் முருக மணம் கமழும் சோலையாக,
அடியார்கள் அவனுக்காக இளைப்பாறும் முருக இடமாக...
இதை நடத்திச் செல்ல வேண்டும் என்றும் முருகனருள் குழுவினைப் பிரார்த்தித்து...இதோ!



கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!


இந்தத் திருப்புகழைப் பாடுபவர்: பாண்டிச்சேரி திரு சம்பந்த குருக்கள்

தேவாரப் பண்ணிசை மிகச் சிறப்பாகப் பாடக் கூடியவர்! திருச்செங்கோட்டில் பெண் எடுத்துள்ளார்! சென்ற ஆண்டு சிவராத்திரி தினத்தில் இரவு முழுதும் திருச்செங்கோடு திருமலையில் தேவாரப் இசையை மிகச் சிறப்பாகப் பாடினார்! அப்போது ஒரு நண்பர் கொடுத்த CDயில் இருந்து இவர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களைப் பிரதி எடுத்து வைத்து, இது இடப்படுகின்றது!

அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ...... இளையோனாய்

அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று

அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்


அவனியில் பிறந்து, குழந்தை போல் தவழ்ந்து, பின்பு நடந்து, உளறி, பேச்சு வந்து, இளமை முறுக்கு பெற்று, விதம் விதமாய் வளர்கிறோம்...

சிவகலைகள் ஆகமங்கள், மிகவு மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து ...... துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையால் உழன்று

திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்


16 சிவகலைகள், ஆகமம், மறையோதுபவர்களை நினைக்காது, சில பெண்கள் பால் ஆசை மிஞ்சிப் போய்....அவர்கள் வேண்டும் வரை சிரித்து பின்பு புறக்கணித்து...அதனால் கவலையால் உழன்று திரிகிறேன்! தேவையா? உன் அடியில் சேர்த்து விடேன்!

மவுன உபதேச சம்பு, மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர்

மன மகிழவே அணைந்து, ஒருபுறம் அதாக வந்த

மலைமகள் குமார துங்க ...... வடிவேலா

மாணிக்கவாசகருக்கு, விரலை மட்டுமே காட்டி, மவுன உபதேசம் செய்த சம்பு (ஈசன்), பிறையைக் கட்டி வைத்துள்ளான் சடையில்!
தும்பைப் பூ போல் உள்ள வெண்சடையில், அதுவும் வெளீர் என்றே ஒளிர்கிறது!

அந்தச் சிவபெருமான் மனம் மகிழ, அவனை ஒரு பக்கம் இடித்துக் கொண்டு இருக்கிறாய் = அப்பா பிள்ளையாய்!
மலைமகள், எங்கள் உமையன்னையை இன்னொரு புறம் இடித்துக் கொண்டு இருக்கிறாய் = அம்மா பிள்ளையாய்!
இப்படி நடு நின்ற நடுவே! வடிவே! வடி வேலவா!

பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா

பரமபதம் ஆய செந்தில், முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!

பவனி வர ஆசைப்படும் முருகனே! அதற்காகவே மயிலின் மீது திகழ்கிறாயோ?
வேகமாகப் பறக்காது, தாவும், அதனால் மெல்ல பவனி வரலாம் என்று தானோ?

மயில் தாவும் போது, வேண்டுமென்றே காலைத் தரையில் ஊன்றுகிறாயே! அதனால் காலில் உள்ள வீரக் கழல் சல் சல் சல் என்று பழநி மலைப் படிகளின் மீது அதிருகிறதே முருகா! கொஞ்சம் அடங்குடா! இம்புட்டுச் சத்தம் போடாதே! அடியார்கள் நாங்கள் மலைப்படிகளில் நடந்து செல்கிறோம் அல்லவா?

ஹேய் முருகா!
பரமபதம் தான் என் பிறந்தவீடு! ஊருக்கே அங்கு தான் மோட்சம்!
ஆனால் உன்னை நான் கைப்பிடித்தேன்! = என் முருகன் எனவே உகந்தேன்!
செந்திலே என் புகுந்தவீடு!
அதனால் உன் செந்திலே என் பரமபதம்! பரம பதம் ஆய செந்தில்...
ஐயா, பழனி மேல் "அமர்ந்த" பெருமாளே!
பழனிமலை மேல் "நின்று" இருக்கும் உன்னை,
"அமர்ந்த" முருகா என்கிறாரே அருணகிரி! உனக்குப் புரிகிறதா?

Wednesday, February 09, 2011

பழனி அமிர்தம்



பக்தர் மனம்மகிழ பழனி மலை மீதில்
சக்தி மகன் நின்றான் – அவர்
சித்தம் குளிர்ந்திடவே அனைத்தும் தரும் அரசன்
ஆண்டிக் கோலம் கொண்டான்

சின்னஞ் சிறுகுழந்தை போலக் கோபங் கொண்டு
வண்ண மயிலில் வந்தான்
தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்க்கென
தனிய னாக நின்றான்

பஞ்ச அமிர்தத்தை தந்து வணங்கி நின்றால்
அஞ்சல் என்று அருள்வான் – தனை
விஞ்சும் அமிர்தம் இந்த உலகில் இல்லை யென்று
உணர அவன் மகிழ்வான்!


--கவிநயா

சுப்பு தாத்தா காவடிச் சிந்தில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP