Thursday, May 27, 2010

பித்துக்குளி - ஜிரா எழுதும் பதிவு - சிந்திக்கிலேன்!

முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ் வரிசையில், "பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்" என்ற Fast Beat கண்ணன் பாட்டைப் பார்த்தோம் அல்லவா? அதே அலைவரிசையில், பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களை, முருகனருள் வலைப்பூவிலும் தொடர்ந்து காண்போம்! வாருங்கள்!


 
இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்! 
1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான் 
2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார்
இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்! 
இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்... இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்... 
3. தோழன் இராகவன் (எ) ஜிரா... 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகா! 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாறா! 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா! :) 

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பல்லாண்டு பல்லாண்டு! 
  மகரந்தம் என்றும், இனியது கேட்கின் என்றும்...முன்னொரு காலத்தில் பல பதிவுகள் வாரி வழங்கிய கைகளால்...... இராகவன் கைகளால்...
ரொம்ப நாள் கழிச்சி...இன்றைய முருகனருள் பதிவு எழுதப்படுகிறது! இனி... இராகவன் கரம்; என் கரம்... இடையே பித்துக்குளிக்கு மட்டும்!
 
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்! - எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்! நாம் நிறைய தவறு செய்திருக்கிறோம். குற்றம் செய்திருக்கிறோம். ஆண்டவன் நமக்கும் வாழ்வளிப்பானா என்று என்றைக்காவது ஐயம் ஏற்பட்டால் இந்தக் கந்தர் அலங்காரப் பாடலைப் படியுங்கள், உண்மை விளங்கும். 

நாம் புகழாததால், நாம் வணங்காததால், நாம் நினைக்காததால் ஆண்டவன் நம்மை ஒரு போதும் தண்டிக்கப் போவதில்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை வணங்காதவரைத் தண்டிக்க அவர் இரண்டாந்தர எஜமானன் இல்லை. அவர் அனைவருக்கும் பொது. நல்லவருக்கு ஆன அதே இறைவனே தீயவனுக்கும். இருவரையும் வாழ்விக்க வேண்டிய கடமை ஆண்டவனுக்கு உண்டு. 

போருக்குப் போகிறான் சூரன். அவனது முகம் கடுகடுவென இருக்கிறது. செக்கச் சிவந்து இரத்த நிறத்தில் இருக்கிறது. கண் பார்வையில் அனல் பறக்கிறது. முருகனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற வெறியோடு போகிறான். போர்க்களத்தில் முருகனும் நிற்கின்றார். முருகனைப் பார்த்த சூரனுக்கு வியப்பு. பின்னே. புன்னகை தவழ குளிர் முகத்தோடு வந்து நின்றால்? 

கச்சியப்பர் சொல்கின்றார். "முழு மதியன்ன ஆறுமுகங்களும் முந்நான்காகும் விழிகளின் அருளும் வேறுள படையி சீரும் அணிமணி தண்டையார்க்கும் செழுமலரடியும் கண்டாண்". 
 ஆக சூரனுக்குத் தான் முருகன் மேல் ஆத்திரம். ஆனால் முருகனுக்கோ சூரன் மேல் அன்பு. குளிக்காமல் போவதால் ஆறு நம் மீது கோவிக்குமா? நாம் குளிக்கப் போனால் நம்மைத் தூய்மைப் படுத்துவது ஆறு. அப்படித்தான் முருகக் கடவுளும். நாம் வணங்கினால் நம்மை வாழ்விப்பார். நாம் வணங்காமல் போனால் நம்மை கோவிக்கவே மாட்டார். 

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்று உணர்த்தும் தத்துவம். இது தமிழுக்கு மட்டுமே உரியது.

சரி......பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்? எனக்கு என் முருகன் ஞாபகம் வருவான்! :) அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :) மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :)) பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு! இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்! நல்ல கர்நாடகப் பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, கூட்டான பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, அழகாகப் பாடிக் காட்டியவர்!

இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது! Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு ராகத்தில் போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல? சில பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :) 

ஆனால் நம்ம பித்துக்குளியாரின் காவடிச் சிந்தைக் கேட்டுப் பாருங்க! "சுருட்டி" ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :) சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன்! = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்! அன்பே...உன்னைச் சிந்திக்கவே இல்லை....ஒருநாளும்! அன்பே...உன்னைச் சேவிக்கவே இல்லை....ஒருநாளும்!

இந்தப் பாடல் = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்... அருணகிரிநாதர், தம் வாயாலும் மனத்தாலும் அலங்காரம் செய்து பார்த்த கந்தர் அலங்காரப் பாடல்! - இதை முருகதாஸ் எப்படி Handle பண்றாரு? * திருப் பரங்கிரி தனில் உறை, சரவண பெருமாளே-ன்னு, திருப்புகழை Hum பண்ணி ஆரம்பிக்கறாங்க திருமதி. பித்துக்குளி - தேவி சரோஜா! 
* அடுத்து, சிந்திக்கிலேன்ன்ன்ன்ன்ன் என்று ஏன்ன்-கறாரு, ஏங்கறாரு பித்துக்குளி! - கந்தர் அலங்காரம்
* கந்தர் அலங்காரத்தில் இருந்து மீண்டும் திருப்புகழுக்குத் தாவறாங்க! ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு! கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில்!


சிந்திக்கிலேன், நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில் வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்,
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே!!!

சிந்திக்கிலேன் = முருகா உன்னைப் பற்றி உள்ளத்தில் கொஞ்சமும் சிந்திக்கவில்லை 
நின்று சேவிக்கிலேன் = உன்னை "நின்று" சேவிக்கவில்லை! "நின்று" வணங்கவில்லை 
தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் - அணிமணி தண்டை அணிந்த உனது செந்தாமரைப் பாதங்களை நான் கண்டு வழிபடவில்லை 
ஒன்றும் வாழ்த்துகிலேன் - ஒருமுறையாவது உனது பெயரைச் சொல்லியும் புகழைப் பாடியும் வாழ்த்தவில்லை 

மயில் வாகனனைச் சந்திக்கிலேன் - மயில் மீது அமர்ந்த ஐயனே உன்னைத் தேடி வந்து சரணடையவில்லை 
பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் - பொய்யை நிந்தித்து உண்மையே பேசி வாழவில்லை. (பொய்யா விளக்கே விளக்கு என்கிறார் வள்ளுவர். அத்தோடு பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த.) 
புந்திக் கிலேசமும் - அறிவில் ஏற்படும் துன்பமும் 
காயக் கிலேசமும் - உடலில் ஏற்படும் துன்பமும் 
போக்குதற்கே - தீர்வதற்கே! 

முருகா, உன்னைப் புகழ்ந்து ஒன்றும் சொல்லாது போனாலும், உன்னை வணங்காது போனாலும், உனது புகழைப் பாடாது போனாலும்... உடலால், மனதால் அடையும் துன்பங்களைக் களைந்து, எங்களைக் காக்கின்ற உன் கருணைக்கு அளவுண்டோ! 

சிந்திக்கிலேன் = சரி! அது என்ன "நின்று" சேவிக்கிலேன்?
சொல்லுங்க பார்ப்போம்!  "நின்னாத்" தான் சேவிக்க முடியுமா? நடந்தோ, உட்கார்ந்தோ, படுத்தோ, மனசாலயே சேவிக்க முடியாதா? தரையில் உருண்டு, அங்கப் பிரதட்சிணம் செய்து, படுத்து எல்லாம் சேவிக்கிறாங்களே! ஏன் அருணகிரி, "நின்று" சேவிக்கிலேன் என்பதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லுறாரு? சொல்லுங்க பார்ப்போம்! 

பின்னூட்டத்தில் நீங்கள் "நின்று" பேசிய பின், நாளைக்கி இங்கு செல்லுங்கள்! அங்கே விடை உண்டு! முருகக் கொடை உண்டு! மயிலின் நடை உண்டு! தடைக்குத் தடை உண்டு! 

அன்புடன், கோ.இராகவன் Ref: http://iniyathu.blogspot.com/2005/12/blog-post.html

அன்பே...உன்னைச் சிந்திக்கவே இல்லை....ஒரு நாளும்! 
அன்பே...உன்னைச் சேவிக்கவே இல்லை....ஒரு நாளும்! அன்பே, உன்னை "நின்று" சேவிக்கிலேன்! முருகாஆஆஆ!

Tuesday, May 18, 2010

எம்.ஜி.ஆர்-முருகன் பாட்டு! கந்தனுக்கு மாலையிட்டாள்!

சிவாஜி படத்தில் முருகன் பாட்டு இருக்கு-ன்னு பலருக்கும் தெரியும்!
படம் = கந்தன் கருணை! வெற்றிவேல், வீரவேல்-ன்னு, சிவாஜி வீரவாகு போல் Walking Style காட்டுவாரு! இதோ அந்தப் பதிவு!
ஆனால், எம்.ஜி.ஆர் படத்தில்? எம்.ஜி.ஆர், முருகன் பாட்டு பாடி இருக்காரா என்ன?

அட, பாட்டு என்ன? எம்.ஜி.ஆர் முருகனாவே வேஷங் கட்டியிருக்காருப்பா!
ஒரே ஒரு பாட்டுக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முருகனாக நடிக்க, ஜெயலலிதா வள்ளியாக நடித்தார்!
இதைத் தேர்தல் போஸ்டர்களில் கூடச் சிலர் பார்த்திருக்கலாம்! படம் = தனிப் பிறவி!

இன்னொரு படம் = உழைக்கும் கரங்கள்!
நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே-ன்னு பாட்டு வருமே! அந்த எம்.ஜி.ஆர் படம்!
அதில் கந்தனுக்கு மாலையிட்டாள்-ன்னு ஒரு முருகன் பாட்டு!
அதை வாணி ஜெயராம் மிக நேர்த்தியாகப் பாடி இருப்பாய்ங்க! வீணை இசையோடு காதல் இசை!

நடிகை பவானி பரதநாட்டிய நடனக் கலைஞர்! எம்.ஜி.ஆர் மேல் அதீத அன்பும் காதலும் கொள்வார்! எம்.ஜி.ஆரும் அன்பு செலுத்துவது போல் இருக்கும்! ஆனால் அது ஏனோ காதலாக மலராது! அப்புறம் எம்.ஜி.ஆர் லதாவைக் கரம் பிடிப்பார்!
எம்.ஜி.ஆரும்-லதாவும், பவானி வீட்டிலேயே அடைக்கலம் கொள்வார்கள்! அன்று முதல் இரவு!

அவர்கள் முதலிரவுக்கு வேண்டிய அனைத்தையும் பவானியே செய்ய வேண்டிய இக்கட்டான நிலைமை! பாவம்...அவள் மனம் பதபதைக்கும்!
இருப்பினும் பழைய காதலன் மேல் உள்ள மாறா அன்பால் அதையும் செய்வாள்! தம்பதிகளை முதலிரவு அறைக்கு அனுப்பி விட்டு, இவள் மட்டும் தனி அறையில்...

தேவனைத் தேடிச் சென்றேன்....தேவியுடன் அவனிருந்தான்!
வீணையுடன் நானிருந்தேன்....விதியை எண்ணிப் பாடுகின்றேன்!
கதியாய் "விதியாய்"...வருவாய் குகனே!

உள்ளத்தை இழந்தவள், உயிரை இழந்தவள் அல்லவா?
இனி ஒன்றுமே இல்லை என்று எல்லாமே இழந்தவளுக்கு...
இனி ஏது அடைக்கலம்? = முருகன் மட்டுமே அடைக்கலம்!
கந்தனுக்கு மாலையிட்டாள்! கந்தனுக்கு மாலையிட்டாள்!



கந்தனுக்கு மாலையிட்டாள்
கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே
கவிதை சொன்னாள் காதல் குயில்!

சொக்கருடன் மீனாட்சி
சொக்கி நிக்கும் திருக்காட்சி
காண வந்த கண்கள் ரெண்டும்
காதலுக்கு ஒரு சாட்சி!

பூவோடு பொட்டும் தந்தேன்!
ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே
தாலி கட்டும் நடக்க கண்டேன்!

தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப் பாடுகின்றேன்!

வரிகள்: கவிஞர். முத்துலிங்கம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: வாணி ஜெயராம்
படம்: உழைக்கும் கரங்கள்

உன் கையும் உண்டு, இனி "என் மெய்த் துணையே"! முருகாஆஆஆஆஆ!

Tuesday, May 11, 2010

மனசை மயில் வாகனமாய் மாற்றுவது எப்படி?

முருகனருள் வலைப்பூ அன்பர்களே...
அழகனின் அழகிய பாடல்களின் தொடர்ச்சியாக...
இன்னிக்கு ஒரு எளிமையான, இனிமையான பாட்டு!
நாலே வரி தான்!
ஆனா மனசு பூரா ஓடிக்கிட்டு இருக்கு! :)


பொங்கி வரும் வீணை இசையோடு, பார்க்கறீங்களா?
இதோ:
கேட்க மட்டுமான ஒலிச்சுட்டி இங்கே!

மனமே முருகனின் மயில் வாகனம் - என்
மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் - என்
குரலே செந்தூரின் கோவில் மணி - அதில்
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி! 



குரல்: ராதா ஜெயலட்சுமி
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: MSV
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை
ராகம்: இந்தளப் பண்/ஹிந்தோள ராகம்

MSV இந்தளப் பண்ணில் கையே வைக்காம, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் பண்ணாம, அப்படியே ராகத்தைக் கொடுத்துட்டாரு போல!
அருமையாப் பாடி இருக்காங்க ராதா ஜெயலட்சுமி! செளகார் ஜானகி வீணை வாசிக்கறது தெரியுது!
பாடும் நடிகை யாரு-ன்னு தெரியலை! அழகா நளினமா இருக்காங்க!
மனம் எப்படி முருகனின் வாகனம் ஆகும்? 
மனத்தின் வேகம் போல, வேற ஒன்னும் இல்லை! Rocket-இல் செயற்கைக் கோள் விட்டாக் கூட, நிலவில் போய் இறங்க கொஞ்சம் நாளாவும்! ஆனால் மனம் அடுத்த நொடியில் போய், நிலவில் சேவல் கொடி பதிக்கும்! :)

ஆனா மனம் அது மட்டும் தான் செய்யுமா? வேற பலான பலான விடயம் கூடச் செய்யும்! அமலா, பாவனா, இலியானா வீட்டுக்கு எல்லாம் கூடப் போய் வரும்! :)

அப்படி அலை பாயுற மனசு! ஆனா அதை மயில் வாகனமா ஆக்கிட்டா?

மயில் மேல வேற யாராச்சும் ஒருத்தரு ஏறுவாங்களா?
அவன் ஒருத்தன் மட்டும் தானே ஏறுவான்! அவனுக்கே நான்! அவனுக்கே நான்! 

மற்றாரும் பற்றில்லேன்! நானே அவனோட மயில்!
சூரனை மயிலாய் மாற்றியது எல்லாம் அப்புறம் தான்!
அதற்கும் முன்பே முருகனுக்கு மயில் வாகனம் உண்டு!
நானே அவனோட ஆசை மயில்!
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் = இதுக்கு என்னா சொல்றது!
வெட்கமா இருக்கு! பேசாம கீழே இருக்குற படத்தைப் பார்த்துக்கிடுங்க :)

ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்!
* என் மேனி, வெளியிலும் அவனுக்குத் தான் = மயிலாக
* என் மேனி, உள்ளேயும் அவனுக்குத் தான் = ஆ+லயமாக = அவன் லயமாக!

மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்!
 முருகனோடு, உள்ளேயும், வெளியேயும், அவனுடனேயே இருப்பேன்!
அகலகில்லேன்! அகலகில்லேன்!

என் குரலே செந்தூரின் கோவில் மணி!
என் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
முருகனருள் வலைப்பூவில் ஒலிக்கும் இனி!

Monday, May 03, 2010

TMS: முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு!

இந்தப் பாடல் முருகருளில் இம்புட்டு நாள் வராதது தான் வியப்பு!
அதனாலென்ன?
எப்போது எதை வெளிப்படுத்த வேணும் என்று நம்மைக் காட்டிலும் நன்மை காட்டும் முருகனுக்கு அல்லவா தெரியும்!
அந்த அருள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது மட்டுமே பேதைக்குத் தெரியும்!

ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...




இந்தப் பாட்டைப் படிக்கும் போதும், பாடப் பக்கம் நின்று கேட்கும் போதெல்லாம்...
அதுவும் TMS குரலில்...
இந்தச் செவ்வாயில், செவ் வாய் மணக்க, சேயோனை...இதோ...கேட்டுக்கொண்டே வாசியுங்கள்!

குரல்: TMS
வரிகள்: எம்.பி. சிவம்
இசை: டி.கே. புகழேந்தி

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!

உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)


என்றுமே கைவிடாமல் ஆளுவான்


ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
என் ஐயா...என் ஐயா...
இனியும் நான் உன்னைக் கூப்பிடாது, நீ என்னைக் கூப்பிட்டுக் கொள்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP