Tuesday, December 28, 2010

முருகன்-ஆண்டாள் சினிமாப் பாட்டுக்கு அன்றே எதிர்ப்பு!

இந்த செவ்வாய் - Dec 28, பலரும் வெறுத்த முருகன் பாட்டு! பல எதிர்ப்புகள் கிளம்பிய சினிமாப் பாட்டு!......என்ன முருகன் பாட்டின் மேல் வெறுப்பா?

ஆமாம்! அது முருகன்-முதலிரவுப் பாட்டு என்பதால்! :)
ச்சீ! தெய்வத்துக்கு முதலிரவா? அதை சினிமா வேறு எடுத்துக் காட்டுவதா?

பாடலின் வரிகளைப் பலருக்குப் பிடிக்கவில்லை! "காமம்" தூக்கலாக இருக்கும் பாட்டா முருகனுக்கு?
பாவம், என்ன செய்வார் கண்ணதாசன்? தோழி கோதையே துணை! அவள் "அன்புத் துணிவே துணை"!

ஆண்டாள் சொன்ன வரிகளை, அப்படியே ஆண்டார் பாட்டில்!
யார் வெறுத்தார்களோ, அதுவே பெரிய ஹிட்-ஆகி, படத்துக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தது, சிறிது நாளில்!
அன்று பிடிக்காதவர்கள், இன்று புரிந்து கொண்டார்கள்! அன்று வெறுத்தவர்கள், இன்று விரும்பிக் கொண்டார்கள்! - முருகனருள்!

இந்த மோன நாளான Dec-28 இல்...மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு...முருகா!



படம்: கந்தன் கருணை
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
வரி: கண்ணதாசன்



மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!
(மனம் படைத்தேன்)

மத்தள மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க
கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் - அந்த
கனவுகள் நனவாக உறவு தந்தாய்!
(மனம் படைத்தேன்)

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் - தோழீ
தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்!
(மனம் படைத்தேன்)

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்
சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் - இரு
கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்!
(மனம் படைத்தேன்)


சுசீலாம்மா, மிகவும் கிறங்கிப் பாடிய அழகிய பாடல்! அழகன் முருகன் பாடல்!

இந்தப் பாட்டு - தோழி கோதையின் கனவு போலவே அமைந்திருக்கும்! அப்படியே நினைத்து எழுதியதாக, கண்ணதாசன் பல பேட்டிகளில் சொல்வார்! = தோழீ, தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்!

மத்தள ஓசையும் (தவில் ஓசை) நிறைய ஒலிக்கும் பாட்டில்!
* மத்தள மேளம் முரசொலிக்க, வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க = மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
* கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் = கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்!

அன்று ஆவி காத்தது போல், இன்றும் ஆவி காத்து அருள்!
மனம் படைத்தேன்....உன்னையே நினைப்பதற்கு...முருகா!

Thursday, December 23, 2010

பழமுதிர் சோலையிலே தோழி! - ஜெய்சங்கர், ஜமுனா!

இந்தச் செவ்வாயில் விட்டுப் போன பதிவு, ஆனால் அவன் பேர் என் செவ் வாயில் விட்டுப் போகுமா? இதோ, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!


அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்...பாட்டு தெரியும் தானே? அந்தப் படத்தில் இருந்து ஒரு முருகன் பாடல்! பார்க்கலாமா?

குழந்தையும் தெய்வமும் என்ற படம்! ஜெய்சங்கர், ஜமுனா நடிச்சது! குட்டி பத்மினி பாடுற பாட்டு ஞாபகத்துக்கு வந்திருக்குமே?

கல்லூரிக் குறும்பில் தொடங்கி, கல்யாணம் ஆகி, பெண்ணின் அம்மாவால் குழந்தைகளைப் பிரிந்து, ஒரு குழந்தை தனியே வளர்ந்து.....
அது நாட்டியம் கற்கும் இடத்தில், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒரு காதலா?

நடன ஆசிரியை யாரை நோக்கிப் பாடுகிறார் - முருகனையா? ஜெய்சங்கரையா? :) நீங்களே கேளுங்கள்! சுசீலாம்மா பாடும் அழகிய பரதநாட்டியப் பாடல்களில் இதுவும் புகழ் பெற்ற பாடல்!





பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி - அவன்
அழகுத் திரு முகத்தில் இளைய நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

கன்னி விழி வேலைக் கண்ட வடி வேலன்
தன்னை மறந்தானடி - நானும்
தஞ்சம் புகுந்தேனடி!

வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி - நானும்
சொல்லப் புகுந்தேனடி!
(பழமுதிர் சோலையிலே தோழி)

ஆறு முகவேலன், ஆசை மனதோடு
ஏறு மயிலாக, மாறி வருவேனோ?
வண்ண மலரும், கன்னி இதழும்,
தந்த உறவு, என்ன பெறுமோ?

நிலவிலே...அழகிலே...உறவிலே...
நெருங்கி நெருங்கி மயங்குமோ?
(பழமுதிர் சோலையிலே தோழி)

படம்: குழந்தையும் தெய்வமும்
குரல்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
வரி: வாலி


பி.கு: கவிநயா அக்கா, இப்பல்லாம் நான் பதிவே எதுவும் போடுறதில்லை-ன்னு குறைபட்டுக்கறாங்க! :) நான் என்னத்த சொல்ல! என் தோழன் இராகவன் கூடத் தான் பதிவே போடுறதில்ல!
முருகா, நீயே நியாயத்தைக் கேளுடா! பந்தல்-ல்ல பல்சுவை நகைச்சுவை கூட்டி ஆன்மீகம் எழுதுனாத் தான் பதிவா? அதான் என் சொந்தச் சரக்கை எல்லாம் குறைச்சிக்கிட்டு, சினிமாப் பாட்டு மட்டும் உனக்கு முருகனருள்-ல்ல போடறேன்-ல்ல? கவி-க்கா கிட்ட எடுத்துச் சொல்லு! அவுங்க கூட சேர்ந்து நீயும் பந்தலில் பதிவு போடு-ன்னு கட்சி மாறினே...பிச்சிருவேன் பிச்சி! :)

Tuesday, December 14, 2010

பித்துக்குளி - ஈழத் திருப்புகழ் - முருகனா? பெருமாளா?

இன்றைய செவ்வாய்க் கிழமை, ஒரு எளிமையான...ஆனால் மிக அழகான திருப்புகழைப் பார்க்கப் போறோம்!
அதுவும் பித்துக்குளி முருகதாஸ் பாடப் பாடக் கேட்பது...சுகமோ சுகம்! வாடும் மனசுக்கு நிதமே இதம்!



பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :) அப்பறமா முருகதாசின் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :) மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :)

பித்துக்குளி முருகதாஸ்! இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு! :)
இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக இசைப் பாடல்களை, இழு இழு-ன்னு இழுக்காம, பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி / நாதநாமக் கிரியை-ன்னு கர்நாடக இசையில் போடறது தப்பே இல்லை! ஆனா காவடியின் ஜீவனான அந்த "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியாரின் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)
பித்துக்குளியாருக்கு இப்போ வயசு 95 இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

"நான்" என்ற சொல்லே அவர் வாயில் வராது! "அடியேன்"! இல்லீன்னா தன்னையே கூட "அவன்"-ன்னு தான் சொல்லிப்பாரு! :)
தத்துவத்தால் வைணவம் பிடிச்சிப் போய், அடியேன், அடியேன்-ன்னு சொல்லிக்கிட்டாலும், முருகன் தான் மனத்துக்கு இனியான்! அவரும் என்னையப் போலத் தானோ? :)

திருப்புகழ் பாடல்கள் பலவும், தன் ஸ்டைலில் பாடி இருக்கார்! ஆழ்வார் பாசுரங்களும் அப்படியே! ஆனால் மிகவும் ஹிட்டானது என்னவோ, கார்த்தி-கேயா கலியுக வரதா & அலைபாயுதே கண்ணா பாட்டுக்கள் தான்! சினிமாவிலும் பாடி உள்ளார் - நாடறியும் நூறுமலை! குன்னக்குடி இசையில், தெய்வம் படத்துக்காக!

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் திளைத்தவர்!
ஆனால்....சுமார் அறுபது வயதில்....
உடன்பாடும், தேவி சரோஜா என்ற அம்மையாரை மணம் செய்து கொண்டார்!

முதலில் சாஸ்திரோத்காரமான மடங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும்,
கண்ணன் அருளால், எதிர்ப்புகள் அடங்கின!
தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, "கண்ணன்-ராதா கல்யாணம்" பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" (வெண்ணைய்) தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப் பையன்!
அடிபட்ட பெரியவரோ, பெருமாள் பக்தர்-மகா ஞானியான பிரம்மானந்த பரதேசியார்! அவரு நெற்றியில் இரத்தம் வடிய...

"அடேய்.....நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? சும்மா போற என் மேல் கல்லு எறியற? ஒரு நாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போற பாரு!"-ன்னு சொல்லி வைக்க...

* அப்படியே ஆகி, பித்துக்குளியாகி,
* கண்ணன்-முருகனில் நம்மையும் பித்துக்குளியாக்கும்,
பித்துக்குளி முருகதாசர் திருவடிகளே சரணம்!!!


ஈழத்து ஆலயங்கள் - கதிர்காமம் கீழே..
(சொடுக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்)


கதிர்காமம், ஈழத்தின் கீழே.....தென் கிழக்குக் கோடியில் உள்ளது!
எப்படித் தமிழ்நாட்டில் திருச்செந்தூர் உள்ளதோ, அதே போல கதிர்காமம்! ஆனால் கடலோரத்தில் இல்லை! கடலுக்குச் சற்று அருகே!

கதிர்காம முருகன் என்று நாம் பரவலாகச் சொன்னாலும்...
மொத்தம் 3 மதங்கள் = இந்து மதம், இஸ்லாம், பெளத்தம் என்று சங்கமிக்கும் "புதிரான-புனிதமான" இடம் இது! அதன் தகவல்கள் பற்றி முன்னர் இட்ட பதிவு, இங்கே!

நாம பாட்டுக்கு வருவோமா? கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ, சொடுக்குங்கள்!
குறிப்பாக, சேர்ந்து பாடும் கட்டமான, பாட்டின் கடைசியைத் தவற விடாதீர்கள்!



பாடல்: திருமகள் உலாவும் (திருப்புகழ்)
வரி: அருணகிரிநாதர்
குரல்: பித்துக்குளி
தலம்: ஈழம் - கதிர்காமம்

திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!
செக தலமும் வானும், மிகுதிபெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!

மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!

அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!!

இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!
இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு தன விநோதப் பெருமாளே!!


பாட்டைப் பிரிச்சி மேயலாமா? :)


பொதுவா, அருணகிரி, பல திருப்புகழையும் "பெருமாளே"-ன்னு தான் முடிப்பாரு! ஆனா, இந்தத் திருப்புகழில் மட்டும்....
வரிக்கு வரி, பெருமாள் காண், பெருமாள் காண்-ங்கிறாரு! = இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?:))

பெரும்+ஆள் = பெருமாள்!
"திருமால்" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் "பெருமாள்" என்றாகி விட்டது!
சேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்!

ஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்?
பொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், "பெருமாள்" என்றாகி விட்டார்!

இந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது!
அப்படி இருக்க....
தன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் "பெருமாள்" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்?

* "ரஹீம்" என்றால் கருணை-ன்னு பொருள்! கருணையே உருவான கந்தனை, "முருக ரஹீம்"-ன்னு நாம வரிக்கு வரி பாடுவோமா? :)
* "பிள்ளையார்" என்றால் இளையவர்-ன்னு பொருள்! இளைய முருகனை "பிள்ளையாரே"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா? :)

ஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு? :)

ஏன்னா அருணகிரியின் "அடி மனசு" அப்படி! அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு!
மார்கழி மாதப் பதிவுகளில் சொல்லுறேன்! நீங்களும் முடிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்க! இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம்! சூப்பர் பாட்டு, கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? :)


திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!

பொதுவா நான்கு கைகள் உடைய திருமால் = தெய்வம்!
ஆனா ரெண்டே கைகள் இருந்தா? = மனிதன்!

"இரு புய" முராரி = இரண்டு கை கண்ணன்!
அவன் தெய்வம் அல்ல! மனிதன்!

நல்லதும் செய்து காட்டுவான்! தவறும் செய்து காட்டுவான்!
ஆனால் தவறுக்கான பொறுப்பையும் சேர்த்தே ஏற்றுக் கொள்வான்!
தான் தெய்வம் என்று சொல்லித் தப்பிக்காது...
அதற்கு கழுவாய் செய்வது எப்படி-ன்னு நடந்தும் காட்டுவான்!

காலம்பு வாங்கி, பாலாழி பாய்ந்தான் "பாதகன்" = கண்ணன்!
நம்மைத் "தெய்வ" நிலைக்கு உயர்த்த...
தெய்வம் "மனித" நிலைக்கு, "பாதகனாய்", தாழ்ழ்ழ்ழ்ழ்ந்து போகிறது!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்: 50)

பிறவா-இறவா இறைவன் = அவதாரமாக, பிறப்பதும்-இறப்பதும் இந்தக் "கருணையால்" தான்!
"கருணை" என்பது ஒருவருக்குப் புரிந்தால், பா.பா.பா-வைப் புரிந்து கொள்ள முடியும்! (அதாங்க, பாலாழி பாய்ந்த பாதகன்)

சும்மா ஒரு எடுத்துக்காட்டு-க்கு வீரேந்திர சேவாக்-கை வச்சிக்குவோம்!
தான் பந்து வீசும் போது, எதிரே இருப்பவன் அடிக்கும் ரன்னில், பாதி என் கணக்குக்கு அப்பறமா ட்ரான்ஸ்ஃபர் ஆயிறணும்! - இப்படி ஒரு வரம் வாங்கி வந்தால் எப்படி இருக்கும்? :)) வாலி வாங்கிய வரம் அப்படி!

நண்பன் என்று ஏற்றுக் கொண்ட சுக்ரீவன்,...
இதோ கொஞ்ச நேரத்தில் சாகப் போகிறான்!
அப்போ நண்பன்-ன்னு சொன்னவனை, இப்போ கழட்டி விட்டுறலாமா? :)

ஹிஹி! ஆனா வாலியின் முன்னால் போனா??? எவ்ளோ தான் வீரம் காட்டினாலும் வரமும் பேசுமே! சரி, முன்னாடி போகாமல், மறைஞ்சி இருந்து கொன்னா? அய்யய்யோ, அது மகா பாவம்!
தப்புத் தப்பா வரம் வாங்கியது பாவம் இல்ல! ஆனால் இது பாவம்! ஏன்-ன்னா செய்யறது ராகவன் ஆச்சே! உம்ம்ம்ம்....என்ன பண்ணலாம்?

சரி, நண்பனுக்காகப் பாவமும் செய்வோம்!
ஆனால்..ஆனால்....
அதை ஒளிக்காது மறைக்காது, தெய்வம்-ன்னு நியாயப் படுத்தாது......

பாவத்தை ஏற்றுக் கொள்வோம்! கழுவாய்-க்கு நடந்தும் காட்டுவோம்!
* அதே வாலி, வேடன் ஜராவாய் வந்து, இவன் உயிரையே முடிப்பான்!
* இவனும், மானம் பார்க்காது, அதை ஊரறிய ஏற்பான்! = இது தான் "இரு புய" மனிதன்! நால் கரக் கடவுள் அல்ல!

அருணகிரியின் கற்பனை வளத்தைப் பாருங்க!
இந்தப் பாதகனின் "இரண்டு புயங்களில்" தான், காதலிக்கு மிகுந்த ஆசையாம்! அவனின் ரெண்டு கைகளையும் "தழுவ" வில்லையாம்! "உலாவு"கிறாளாம்!
திருமகள் "உலாவும்" + "இரு புய" முராரி = ஒரு காதலி, மொத்தமாய் நம்ம கையில் "உலாவு"றா-ன்னா என்ன அர்த்தம்? :)
இதுக்கு மேல சொல்ல முடியாது! சென்சார் :) அவ்ளோ ஆசை! காதல் :)

திருமகள் உலாவி விளையாடும், ரெண்டு கை "மனிதன்" கண்ணன்!
பா.பா.பா-வின் "ஆசை மருமகன்" என்ற பேரை வாங்கிக் கொண்டவன் முருகன்!
* மருக நாமப் பெருமாள் காண் = "முருக" நாமம் அல்ல! "மருக" நாமம்!
அந்த மருகப் பெருமாளைக் காணுங்கள்! காணுங்கள்!

செக தலமும் வானும், மிகுதி பெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!

செகதலமும் = பூமி; வானும் = வானம்
மிகுதி பெறு பாடல் = வானும் மண்ணும் போற்றும் தமிழ்ப் பாடல்

தெரி தரு குமாரப் பெருமாள் காண் = அந்தத் தமிழைத் தந்த குமரப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!

மருவும் அடியார்கள் = அவனையே சுற்றி வரும் அடியார்கள்
மனதில் விளையாடு = அவங்க மனத்தில் விளையாடும் முருகன்

மரகத மயூரப் பெருமாள் = மரகதப் பச்சை போல் மயில்! அந்த மயிலேறு பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!!

மணி = மாணிக்கம்; தரளம் = முத்து;
மாணிக்க கங்கை ஆற்றிலே, இரத்தினங்களை அள்ளி வீசி, அலைகள் ஆர்ப்பரிக்க...அணி அருவி சூழ....

மருவு கதிர்காமப் பெருமாள் காண் = எங்கள் ஈழத் தமிழனான, கதிர்காமப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத, வீரப் பெருமாள் காண்!

அரு வரைகள் நீறு பட = கிரவுஞ்ச மலை பொடிப் பொடியாக
அசுரர் மாள = மலையைச் சுற்றி நின்ற அசுரர்கள் எல்லாம் அழிய
அமர் பொருத = போர் செய்த
வீரப் பெருமாள் காண் = எங்கள் வீரப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!



அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குருநாதப் பெருமாள் காண்!!

அருணகிரியின் சொல்லாட்சி, கற்பனைக்கு இதுவும் ஒரு சாட்சி!
சிவபெருமான், நடனமாடும் போது, தன்னுடைய தலை கலையாமல் இருக்க, என்னமோ செய்கிறாராம்? என்னது? அரவு = பாம்பு; பிறை = சந்திரன்;

பாம்பு -Ribbon போட்டுக் கட்டி,
பிறை -Hair Pin-ஐ குத்தி,
அரவு பிறை வாரி....விரவு சடை வேணி = செஞ்சடை சீவிக் கொள்ளும் பிரான்! :)

அமலர் குருநாதப் பெருமாள் காண் = அந்தச் சிவனார், அமலன்=குற்றம் நீங்கியவர்! அவருக்கே தகப்பன் சாமியான எங்கள் குருநாதப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!

இரு வினை இலாத = நல்-வினை/தீ-வினை என்று இரண்டு செயல்களுமே, நமக்கு உலகத்தோடு பந்தம் ஏற்படுத்தி விடும்! ஆனால் முருகனுக்கு?
இரண்டு வினைகளும் இல்லாதவன்! சூரனை......கிளையோடு, ஊரோடு அழித்த வினைகள் எதுவுமே முருகனை அண்டாது! அசுரர் குடி கெடுத்த ஐயா வருக!

* முருகன் = வினைகளைக் கடந்தவன், கடவுள்!
* கண்ணன் = வினைகளின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்பவன், மனிதன்! - வானுறையும் தெய்வத்துள் "வைக்கப்பட்டவன்"!

தரு வினை விடாத = வினை ஆற்றினால் விளைவு விளையும்! நம் வினைகளுக்கு, பதில் வினைகளைத் தருவார்கள், பொறுப்பில் உள்ள இமையவர்கள் / கிரகங்கள் முதலானோர்! அவர்கள் குலேச = குல+ஈச; அந்த இமையவர் குல ஈசனான பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!



இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு-தன விநோதப் பெருமாளே!!

சிலை=வில்! இலகு சிலை வேடர் = ஆற்றல் மிக்க வில்லுடைய வேடர்!
கொடியின் அதி பார = அந்த வேடர் குலக் கொடி!

* அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் = ஆண்டாள்
* வேடர் குடிக்கொரு சந்ததியாய் = வள்ளி

இருவருமே, அவர்கள் காதலனை, முன்னே பின்னே, பார்த்தது கூட இல்லை!
தங்கள் காதல் "ஏற்றுக் கொள்ளப்படுமா"-ன்னு கூட இருவருக்குமே தெரியாது! ஆனாலும்.....
உள்ளத்து உண்மையோடு, அவனுக்கென்றே வாழ்ந்தவர்கள்!
மருந்தாம் என்று தம்-மனத்தே வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்....

கொடியின் அதி பார = அந்த வள்ளிக் கொடி!
இரு தன = அதில், அதி பாரமான இரு மார்பகங்கள்! :)

ஹைய்யோ...முடிக்கும் போது, என்னைக் கிளுகிளு விளக்கம் சொல்ல வைக்கிறாரே இந்த அருணகிரி! அருணையடிகளே, மேடைக்கு வரவும்! :))

ஒரு கொடியில், எப்பமே, அது தாங்கும் அளவேயான கனிகளே பழுக்கும்!
ஆனால் ஒல்லியான வள்ளிக் கொடியிலோ....?
அதிக பாரமான இரு மார்புக் கனிகள்! :)
எதனால் இந்தப் பாரம்? அவள் மெல்லிய-ஒல்லியானவள் தானே?
ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, அவனையே தம்-மனத்தே வைத்துக் கொண்டு வாழ்ந்தவள்...
அவன் புரிஞ்சிக்கிட்டான்! அவளை ஏற்றுக் கொள்ள வந்துட்டான்! - என்று தெரிந்தால், என்ன ஆகும் அந்தப் பேதைக்கு?

இயற்கை என்ன கொடுத்ததோ, அதுவே ஆகும்! = உன்னித்து எழுந்த என் தடமுலைகள்!
ஊன் இடை, ஆழி சங்கு உத்தமர்க்கு என்றே = உன்னித்து எழுந்த என் தடமுலைகள்!

அதனால் வந்த "திடீர்ப் பாரம்" தான் இது!
அவன் ஏற்றுக் கொண்டான் என்று கண்ட மாத்திரத்தில், இப்படி ஒரு "விநோதமா" இந்தப் பேதைக்கு? = இயற்கை விநோதம்!
ஹேய், இதுக்கு மேலச் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு முருகா! :)


* கொடியின் அதி பார...இரு தன வினோதம்! = அந்த விநோதப் பெருமாளைக் காணுங்கள்! காணுங்கள்!
* மருக நாமப் பெருமாள் காண் = அந்த மருக-முருகப் பெருமாளை.... என் ஆசை முருகனை......எல்லாரும் காணுங்கள்! காணுங்கள்! முருகாஆஆஆ!

Sunday, December 12, 2010

முருகா இங்கே வா வா!

"அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா"-ன்னு எப்பவோ வெட்கத்தை விட்டுக் கத்தி பாடியிருக்கோம்-ல்ல? :)
அது போல கவிநயா அக்கா ஒரு பாட்டு எழுதி இருக்காங்க! அதை இன்னிக்கி முருகனருளில் போடுறேன்!

இந்தப் பாட்டை யாரு கிட்ட பாடப் போறீக? எந்தக் குழந்தை? = கந்தக் குழந்தை! :)




சின்னச் சின்ன முருகா
சிங்கார முருகா
வண்ண எழில் முருகா வாடா
வந்து அன்பு முத்தம் ஒன்றெனக்கு தாடா

செல்லச் செல்ல முருகா
செந் தமிழின் தலைவா
பண்ணில் உன்னைப் பாடுகிறேன் வாடா
வந்து பாச முத்தம் ஒன்றெனக்கு தாடா

சின்னச் சிலம் பொலிக்க
‘கல்கல்’ என்று சிரிக்க
துள்ளித் துள்ளி என்னிடத்தில் வாடா
வந்து வெல்ல முத்தம் ஒன்றெனக்கு தாடா

எண்ண மெல்லாம் இனிக்க
உள்ள மெல்லாம் களிக்க
வண்ணமயில் ஏறி இங்கு வாடா
வந்து வாய் மணக்க ஆசை முத்தம் தாடா

Monday, December 06, 2010

கண்ட நாள் முதலாய்...நட்பு or காதல் பெருகுதடி??

கண்ட நாள் முதல் என்னும் அழகிய தமிழ்த் திரைப்படம்! இந்த வார இறுதியில், மீண்டும் 50-ஆவது முறையாய், ஆர்வத்தோடு பார்த்து முடித்தேன்! :)
பிரசன்னா-லைலா, ரெண்டு பேருமே நட்புக் கோழிகளான சண்டைக் கோழிகள்!
ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கொள்வது மட்டுமே வாடிக்கை! = இவர்களுக்குள் காதல்???
சேச்சே, நட்பு காதலாய்ப் பூக்குமா என்ன? அதுவும் சண்டையே வாடிக்கையாய்ப் போன இந்த நட்பு?

பூக்கும்! முருகனருள் தவழும் போது...



சரி, அதை விடுங்க!

நட்பு எப்படிங்க காதல் ஆகலாம்?
அது தவறு இல்லையா? அசிங்கம் இல்லையா?
நேற்று வரை நட்பு-ன்னு சொல்லிட்டு...
இன்னிக்கி காதல்-ன்னு சொன்னாக்கா, அதுல Trust எப்படிங்க வரும்? :)

உம்...நல்ல கேள்வி!
வெறுமனே நட்பில்...காதல் வராது!
ஆனால்...ஆனால்...ஆனால்...

அதீத நட்பு...காதலாய்த தான் மலரும்! எப்படீங்கறீங்களா?

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் = நட்பு
ஆனால், தானே உடுக்கையாய் மாறி விட்டால்??? = காதல்!

ஆடையை இழக்கும் போது, துளியும் தாமதிக்காமல், கை, தாமே சென்று ஆடையைப் பற்றும் அல்லவா?
ஐயோ! அவனுக்கு ஆடை கொடுப்போம் என்ற வரை நினைப்பது = நட்பு!
கொஞ்சம் மணித்துளி வித்தியாசமாச்சும் தேவைப்படும் ஆடை கொடுக்க!

அந்தக் கொஞ்சம் மணித்துளி கூடத் தாங்க மாட்டாது....
ஐயோ! அவனுக்கு ஆடை போகிறதே என்ற மாத்திரத்தில், தன்னையும் அறியாமல், ஓடிச் சென்று...
அவனுக்கே ஆடையாகி விட்டால்??? நட்பு -> காதல் ஆவது இங்கே தான்!

இரண்டுமே இடுக்கண் களைவது தான்! ஆனால்
* ஆடை கொடுப்பது = நட்பு
* ஆடை ஆவது = காதல்


* நட்பில் = அவனுக்கு"ம்"!
* நட்பு அதீதமாகிய காதலில் = அவனுக்"கே"!

கதியாய் விதியாய் வருவாய் அவ"னே"!
கதியாய் விதியாய் வருவாய் குக"னே"!!


படத்துக்கு வருவோம்! பிரசன்னா-லைலா நட்பு (அ) சண்டை!
இது காதலா?? அது அவர்களுக்கே தெரியாது!
அதனால் தான் கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி என்று இவர்கள் பாடாமல், பின்னணிப் பாடலாக மட்டும் ஓடுகிறது!

அவளுக்கு, அவனின் நண்பன் ஒருவனையே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு ஆவதும்,
அவளும் சிரித்தபடியே, வழக்கமான வயசுப் பொண்ணு போல் ஜாலியாய் ஒப்புக் கொள்வதும்,
மாப்பிள்ளைக்குப் பெண்ணை, நிச்சயத்துக்குப் பின் பிடிக்காமல் போவதும்,

சீண்டிய தோழனைச் சிந்தையில் வைத்திருந்தாலும்,
அப்படி அவன் சிந்தையில் இருக்கிறான் என்பதே தெரியாமல்...
இப்போதும் அவனுடன் சண்டை போடுவதும்...

சண்டை முடிந்து, நட்பு மலர்ந்தாலும்,
அதில் சண்டையின் சாயல்கள் அவ்வப்போது எழுந்தாலும்...
கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை, திடீரென மனம் மாறி, ஒப்புக் கொள்வதும்...

அந்தத் தருணம் தான் = ஆடை நழுவும் நேரம்!
சிந்தையில் இருந்த "ரகசிய சிநேகிதன்"...
அவனுக்காக நெஞ்செல்லாம் துடிதுடித்துப் போய்...
அவனுக்கே ஆடையாகி விட்டால்???

நட்பு -> காதல் ஆனது இங்கே தான்!
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி! கையினில் வேல் பிடித்த...கருணை முருகாஆஆஆ!



கண்ட நாள் முதல் - திரைப்படத்தில் பாடலைக் கண்டு/கேட்டுக் கொண்டே மேலும் வாசியுங்கள்...




கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி!
கையினில் வேல் பிடித்த, கருணைச் சிவ பாலனை!
(கண்ட நாள் முதலாய்)

வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்
வந்து, சுகம் தந்த, கந்தனை, என் காந்தனை!
(கண்ட நாள் முதலாய்)

நீல மயில் தனை, நெஞ்சமும் மறக்கவில்லை!
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை!
கோலக் குமரர், மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்!
குறுநகை தனைக் காட்டி, நறுமலர் சூட்டி விட்டார்!
(கண்ட நாள் முதலாய்)

படம்: கண்ட நாள் முதல்
குரல்: சுபிக்ஷா, பூஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
வரி: என்.எஸ்.சிதம்பரம் (முரளீதரா, நினைத்த போது நீ வர வேண்டும் போன்ற பாடல்களை எழுதியவர்)

ராகம்: மதுவந்தி
தாளம்: ஆதி


இன்னும் சில பாடகர்களின் குரலில்...

* சுதா ரகுநாதன் - கர்நாடக இசையில்..

* GNB ஸ்டைலில் - அவர் மாணவர் தஞ்சாவூர் கல்யாணராமன்

* ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்...அகிலா


என்னாங்க, பதிவு பிடிச்சி இருந்துச்சா? :)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் = நட்பு

உடுக்கை இழந்தவன் மெய்மேல் ஆங்கே
உடுக்கை ஆவதாம் = காதல்


கண்ட நாள் முதலாய்...
கந்த நாள் முதலாய்...
கருணை முருகன் அருள்-காதல்ல்ல்ல்ல் பெருகுதடீடீடீடீ!

Thursday, December 02, 2010

சுவாமிமலை

சுவாமிமலை பற்றி நான் புதிதாக எதுவும் எழுதி விடப் போவதில்லை. இது என் அனுபவங்களை ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சியே. மேலும் தந்தைக்கு உபதேசிக்கும் தத்துவம் பற்றி எனக்குத் தோன்றிய சில விஷயங்களையும் எழுதியுள்ளேன்.

முதன்முதலாக எப்போது சென்றேன் என்பது நினைவில் இல்லை. இது வரை எத்தனை முறை சென்றிருக்கிறேன் என்பதும் நினைவில் இல்லை. எல்லாம் அவனருள்.

பொங்கல், தீபாவளி விடுமுறைகளின்போது மாமா பையன்களும் நானும் கும்பகோணத்தில் இருந்து மிதி வண்டியிலேயே சென்று விடுவோம். அப்போதெல்லாம் தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு அவ்வளவாகக் கிடையாது. புதிதாக வரும் திரைப்படங்களின் மேலும் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததில்லை.

விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். கொஞ்சம் போலக் காசு வசூலாகும். இரண்டு மூன்று வாடகை மிதிவண்டிகள். ஒரு மிதிவண்டிக்கு மூவராகக் கிளம்பி விடுவோம். நாங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கும்பகோணம்-தாராசுரம்-வளையப்பேட்டை-மாங்குடி-சுவாமிமலை வழிதான். போக்குவரத்து அதிகமிருக்காது. வழிதோறும் சோலைகள். பணி, கல்வி காரணங்களுக்காகக் கடல் கடந்து எத்தனையோ வெளி நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவம் இருப்பினும் அந்த இளவயது பயண அனுபவம் தந்த சுகமே வேறு.

ஓரிரு சமயங்களில் நடந்தே கூட சென்றிருக்கிறேன். பாதை தெரியும். இலக்கும் தெரியும். கோவில் நெருங்க நெருங்க நடந்து வந்த துன்பமெல்லாம் மறைந்து போகும்.

இது அறுபடை வீடுகளில் ஒன்று (நான்காவது). பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உபதேசித்த ஸ்தலம். இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமிநாதன் தகப்பன் சுவாமி என்ற பெயர் பெற்றவர்.

இப்போதைக்குப் பிரணவத்தை விட்டுவிடுவோம். முடிந்தால் வேறொரு சமயத்தில் ஒரு பதிவு போடுகிறேன் அதைப் பற்றி.

தந்தைக்கு உபதேசித்தல் என்பது ஒரு பெரிய தத்துவம். நம்மை விடப் பெரியவருக்கு உபதேசம் செய்வது என்பது நம் நடைமுறை வழக்கில் பொதுவாக இல்லாத ஒன்று. அப்படியே நாம் சொல்வதாக இருந்தாலும் ஒரு ஆலோசனை வடிவத்தில்தான் அதை நாம் முன்வைப்போம். உபதேசிக்க என்றுமே துணிந்ததில்லை.

இந்த இடத்தில் சுவாமிநாதனை விட்டுவிடுங்கள். நாம் நிறையப் புரிந்து கொள்ள வேண்டியது தகப்பன் சுவாமியிடம் இருந்துதான். யார்ரா இவன், சுவாமிமலை பற்றி எழுதுமிடத்தில் சிவனைப் போற்றி எழுதுகிறானே. இவனுக்கு ஒரு கூடை எலுமிச்சம் பழம் வாங்கி அனுப்பினால் என்ன என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஒரு விஷயம் நமக்குத் தெரியாத பட்சத்தில் அதைத் தெரிந்து வைத்துள்ள வேறொருவரிடம் இருந்து கற்பது தவறே இல்லை. சிவன் வாய்பொத்தி நிற்பது முருகனுக்கு அடங்கி நிற்பது என்கிற பொருளில் நாம் இதைப் பார்க்கக் கூடாது. இவன் என்ன சின்ன பையன், நமக்குத் தெரியாததா என்ற எந்த விதமான முன்முடிவுகளும் இல்லாமல் சொல்ல வரும் விஷயத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற தத்துவத்தின் குறியீடு அது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயம் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் முக்கியம். நம்மை விட வயதில் குறைந்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த வித ஈகோவும் பார்க்காமல் நாம் நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை இந்த ஸ்தலம் நமக்கு உணர்த்துகிறது.

இதைச் சொல்லும்போதே

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்ற குறளும் ஞாபகம் வராமல் இல்லை.

இந்தத் தத்துவத்தின் நீட்சியாக ஒரு சீனப் பழமொழியும் ஞாபகம் வருகிறது.

உனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ளும்வரை நீ முட்டாளாக இருக்கிறாய் அந்த விஷயத்தைப் பொருத்தவரை. எனக்குத் தெரியவில்லை, விளங்க வையுங்கள் என்று கேட்கும் தருணம் முதல் புத்திசாலி ஆகிறாய். எவ்வளவு நாட்கள் முட்டாளாக இருக்கவேண்டும் என்பது உங்கள் கையில்தான் (வாயில்?) உள்ளது.

இந்தத் தத்துவத்திற்கு இன்னொரு முகமும் உண்டு (dimension). பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலில் பிரம்மன் ஈடுபடுவது ஏற்புடையதன்று. இது நம் எல்லோருக்குமே பொருந்தும். ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள நாம் அதன் அடிப்படை விஷயங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பிரம்மன் போலக் கஷ்டப் பட வேண்டி வரும்!

பெயர்தான் சுவாமிமலையே தவிர மலையொன்றும் கிடையாது. ஏகப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் இந்த ஸ்தலத்தில் விளக்கப்படுவதால் இந்த ஸ்தலத்தின் சிறப்பைக் கூறும் பொருட்டு, இவ்விடத்தை மலை (உயர்ந்த என்ற பொருளில்) என்று அழைப்பதில் தவறே இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

வேலன் போல ஒரு ஞானக்கொழுந்து பிள்ளையாக வாய்க்கும் பட்சத்தில் அவன் சொல்வதைக் கேட்க யாருக்குத்தான் மனமில்லாமல் போகும்? இந்தத் தருணத்தில் பட்டிணத்தார் படத்தில் வரும் ஒரு பாடல் (பாடல் மருதகாசி, இசை ஜி. ராமநாதன் , பாடியது டிஎம்எஸ், பெண் குரல் யாரென்று தெரியவில்லை) ஞாபகம் வருகிறது. பட்டிணத்தார் சிறந்த சிவபக்தர். குழந்தை இல்லாதது குறித்து அவரும் அவர் மனைவியும் முறையே சிவனுக்கும், உமைக்கும் நிலவைத் தூது விடுவர் குழந்தை வரம் வேண்டி.

அதில் ஒரு இடத்தில்

…கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
நிலவே...

வேலன் தந்தை என்று இங்குக் குறிப்பிடுவது மிக விசேஷம். வெறும் ஓசை நயத்திற்காகக் (பாலன், வேலன்) குறிப்பிடப்பட்ட ஒரு விஷயமாக இல்லாமல் ஞானக் கொழுந்தான வேலன் போன்ற ஒரு பையன் உங்களுக்கு உண்டு, அது போல உங்கள் பக்தனுக்கும் ஒரு குழந்தையை வரமாக அளிக்க வேண்டும் என்று சிவனிடம் எடுத்துச் சொல்லுமாறு நிலவை வேண்டுகிறார் பட்டிணத்தார்.

வேலன் போன்ற ஒரு பாலனும் (புத்திசாலி) சிவன் போன்ற ஒரு தந்தையும் (நல்ல விசயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்பவர்) அமைந்துவிட்டால் அந்தக் குடும்பம் பெரும் பேறு பெற்று விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஆலயம் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ளது (ஆறு கிமீ). சுவாமிமலைக்குப் போகும் பட்சத்தில் பக்கத்திலேயே இருக்கக் கூடிய திருவலஞ்சுழி (ஸ்வேத விநாயகர்), பட்டீஸ்வரம் (துர்க்கை), திருசக்திமுற்றம் கோவில்களையும் தரிசித்து விடுங்கள்.

மற்றபடி திருக்கோவிலின் அமைப்பு பற்றித் தெரிந்து கொள்ள இந்த சுட்டியை சொடுக்குங்கள்.

மேலும் அதிக விவரங்களுக்கு இந்த தினமலர் இணைப்பைப் பாருங்கள்.

எல்லாம் வல்ல முருகன் அருள் நமக்குக் கிட்டட்டும்!

Tuesday, November 30, 2010

வேலய்யா வடிவேலய்யா எங்கள் வேலய்யா

இசையில் கிடைக்காத இன்பம் எது?
நமக்கு பிடிச்ச இசையில் நம்ம கந்தனை பாடக் கேக்கும் சுகம் இருக்கே!

இசை போல் இன்பத்தைத் தருபவன்
கண்டவரெல்லாம் இச்சை கொண்டேங்கும்
அந்த பழனி மலை ஆண்டவனை
இந்தப் பாடலைக் கேட்போம் வாருங்கள்

-------------------------------------------------------

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

கோல மயில் மீதமர்ந்த சண்முக நாதா
கூறும் ஆறு படை வீட்டின் முருகன் நீயய்யா!
ஆலம் உண்ட சிவன் மகனே அழகு தெய்வமே முருகா
அகிலம் போற்றும் வள்ளி மணாளா முருகா
அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ முருகா
அன்பு கொண்டு அருள் புரிவாய் நீ

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

உன்னை எந்தன் கண்குளிரக் காணும்போதிலே
என் உள்ளத்திலே ஆனந்தம் பொங்குதே
அன்னை போல காப்பவன் என்று பாடும்
பேசுவதும் உன்னையல்லவா
நான் உன்னருளே வேண்டுகின்றேன்
முருகா உன்னருளே வேண்டுகின்றேன்
முருகா உன்னருளே வேண்டுகின்றேன்

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா
உன்னைத் தினமும் போற்றிடும்
என்னைப் பாரய்யா
ஓங்கு புகழ் கொண்ட தெய்வமே
பழனி ஆண்டவா!
குன்றுகள் தோறும்
கோயில் கொண்ட எங்கள் குமரய்யா

வேலய்யா வடிவேலய்யா
எங்கள் வேலய்யா
வேலய்யா வடிவேலய்யா

Sunday, November 28, 2010

ஓமென்று நினைத்தாலே போதும்.....!

முருகா குமரா என்ற பெயர் கேட்டாலே
எங்கிருந்தாலும் ஓடி வரும் நம்ம ஜீராவைப் போலத்தான் குமரனும்!
ஓம் என்று நினைத்தாலே போதும், நம்மைத் தேடி வருவான் கந்தன்
என்று சூலமங்களம் சகோதரிகள் பாடும்
இந்தப் பாட்டை கேட்டு இன்புறுங்கள்.

(ஜீரா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)



ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்
ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்

சிவ பெருமான் விழியின் சுடரானவன்
சரவணத் திருப்பொய்கை மலரானவன்
சிவ பெருமான் விழியின் சுடரானவன்
சரவணத் திருப்பொய்கை மலரானவன்
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன்
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன்
தினம் துதி பாடும் உலகினுக்கு ஒளியானவன்

ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்

திருநீறை அணிவோரின் குறை கேட்பவன்
நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன்
திருநீறை அணிவோரின் குறை கேட்பவன்
நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன்
மறவாமல் தொழுவோரின் நலம் காப்பவன்
வண்ண மயில் மீது வளம் வந்து அருள் சேர்ப்பவன்

ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்

பால் ஓடும் முகம் காட்டிச் சிரிக்கின்றவன்
பழம் என்னும் அருள் ஊட்டிக் களிக்கின்றவன்
வேல் ஆடும் கரம் நீட்டி அணைக்கின்றவன்
இன்ப நினைவாகி மனமெங்கும் இனிக்கின்றவன்

ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்

Tuesday, November 23, 2010

பார்வையைப் பறித்த முருகன்! - PB ஸ்ரீனிவாஸ், P சுசீலா!

பார்வையற்றவள் அவள்!
அவளுக்குப் பார்வை போனது யாராலே? = முருகனாலே!

ஐயோ! என் முருகனா பார்வை பறிப்பவன்?
பன்னிரு விழியான், உன்னிரு விழியைப் பறித்துக் கொண்டானா?




"இருக்கவே இருக்காது! அவன் மூவிரு முகமும், முகம் பொழி கருணையும், அப்படிச் செய்யவே செய்யாது! கண்ணைப் பறித்த கந்தன் என்று ஒரு போதும் ஆக மாட்டான்!"

"அது எப்படிடீ அடிச்சி சொல்லுற? அவன் குடும்பத்தில் இது போல் நடந்துள்ளது, தெரியுமா உனக்கு?"

"அவன் அப்பா வேண்டுமானால், சுந்தர மூர்த்தி நாயனாரின் கண்ணைப் பறித்துத் திருப்பிக் கொடுத்தார்! ஆனால் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் இவன்! பாடம் சொல்ல மட்டும் மாட்டான்! அதன்படி நடப்பவனும் கூட! என் முருகனை அவசரப்பட்டு அப்படியெல்லாம் சொல்லி விடாதீர்கள்...."

"அடியே சங்கரீ! அதுக்கு ஏன்டீ நீ இப்படி பதறுகிற? உன் சந்தோஷத்தையும் பறிச்சவன் தானே அந்தத் திருப்பரங்குன்ற முருகன்? அது போல, இவள் கண்ணைப் பறிச்சிட்டான்-ன்னு வச்சிக்கோயேன்! இப்படிச் சொல்லுறது நான் இல்லடீ! தமிழ்நாடே போற்றும் கவியரசரான கண்ணதாசன்!"

"ஆகா! கண்ணதாசனா சொல்றாரு? போதையில் பேதை பாடியாதாகப் பாடி இருப்பாரு நம்ம கவிஞர்! என்ன தான் சொல்றாரு, என் முருகனை?"

"என் கண்கள் இரண்டை எடுத்து, கையோடு கொண்டானடி! " - இதான் அவரு பாட்டு!

"ஓகோ! இதானா! நான் என்னமோ ஏதோ-ன்னு பயந்தே போயிட்டேன்! இதுக்குப் பொருள் அப்படி இல்லடீ! நான் சொல்லட்டுமா? "சாந்தி" என்ற ஒரு திரைப்படம்; சிவாஜி, தேவகி, எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி எல்லாம் நடிப்பாங்க! பீம்சிங் இயக்கம்! அதுல கதாநாயகி பார்வை இல்லாதவள்! அவ பாடுறது தான் இந்தப் பாட்டு!

கண்கள் இரண்டை, வேலென எடுத்து, கையோடு கொண்டானடி! - என்று கதாநாயகி பாடுகிறாள்! = எனக்கு ஏன் கண் இல்லை தெரியுமா? என் வேல்விழியை அவன் வேல் ஆக்கிக் கொண்டான்!

வேல்விழி-ன்னு சொல்றோம்-ல்ல? அப்படீன்னா விழி யாருக்குச் சொந்தம்? வேலை உடையவனுக்குத் தான் "வேல்விழி" சொந்தம்? அதான் என் கண்ணே, அவன் வேலாகி விட்டது! அவனுக்கு நானாகி விட்டேன்! இதுல என் முருகனைக் குறை சொல்ல என்ன இருக்கு?".....



இது தான் கவிஞர் கண்ணதாசனின் கற்பனைத் தமிழூற்று!

அப்போது விழி-இல் விழியாள்...
இப்போது வேல் விழியாள் ஆனாள்!

பேதைக்கு அவன் தந்த காதல் மருந்தால்,
தன் கண்ணை, வேலாய் அவனுக்கே கொடுத்து,
அவன் கையிலேயே தங்கி விட்டாள் பேதை!

பாட்டைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!


செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு சேதியை நான் கேட்டேன்!
சேவல் கூவும் காலை நேரம், பாடலை நான் கேட்டேன்!
(செந்தூர்)

கண்கள் இரண்டை, வேலென எடுத்து, கையோடு கொண்டானடி!
கன்னி என் மனதில், காதல் கவிதை, சொல்லாமல் சொன்னானடி!
(செந்தூர்)

ஊர்வலம் போனவன், ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி!
வாராமல் வந்தவன், பாவை உடலை சேராமல் சென்றானடி!
(செந்தூர்)

நாளை வருவான் நாயகன், என்றே நல்லோர்கள் சொன்னாரடி!
நாயகன் தானும் ஓலை வடிவில், என்னோடு வந்தானடி!
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து, வாசலில் வருவேனடி!
மன்னவன் என்னை மார்பில் தழுவி, வாழ்-எனச் சொல்வானடி!
வாழ்-எனச் சொல்வானடி!
(செந்தூர்)

படம்: சாந்தி
குரல்: PB ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: MS.விஸ்வநாதன்

Sunday, November 21, 2010

என் வாழ்வின் பொருளதனை யார் வந்து சொல்வார்


தெரு நாய் கண்டெடுத்த
தெங்கொன்றைப் போலே
எவரேதும் பயன்காணா
என் வாழ்வை ஏன் தந்தாய் ?

என் வாழ்வின் பொருளதனை
யார் வந்து சொல்வார் - முருகா
நீயன்றி வேறெவர்தான்
நான் கேட்டுத் தருவார்?

ஊழ்வினை தீர்க்கத்தானே
உனைநாடி வந்தேன் - முருகா
என்வினை சேர்க்கநீயும்
உறவொன்றை ஏன்தந்தாய்?

பற்றுக்கள் யான்வெறுத்து
நின்பதம் சேரவந்தால் - முருகா
என்கையினிலே திருவோட்டை
ஏனய்யா நீதந்தாய்?

பாசங்கள் அகலவென
ஞானத்தை யான்கேட்டால் - முருகா
பாசத்தை விதைத்தோர்
வேஷத்தை ஏன்கொடுத்தாய்?
உறவென்ற ஓடதனை
உடைத்திடவோர் வழியில்லை - முருகா
எனைநீயும் ஆட்கொண்டு
அருள்தரவே மனமிலையோ?


பிணையென்றும் உறவென்றும்
இல்லாத நிலையாக - முருகா
உனைமட்டும் நினைந்துருகும்
மெய்யான பொருளாக - முருகா
எனைநீ மாற்றி விடு! - முருகா
நின்பதமலர் தந்துவிடு!


Thursday, November 11, 2010

கந்த சஷ்டி 7: தாவணிக் கனவுகள்!

ஹேய்! சஷ்டி முடிந்து என்ன விருந்து கொடுக்கலாம்? இந்தக் கனவு, அவன் கிட்ட இருந்து ஏதோ சேதி வேற கொண்டாந்திருக்கே! என்ன சேதி, என்ன கனவா?
சேச்சே! அதையெல்லாம்...வாயால் சொல்ல வெட்கமா இருக்கும்! பாடத் தான் ஈசியா இருக்கும்! So, பாட்டுல படிச்சித் தெரிஞ்சிக்கோங்க! :)

கயல் உண்கண் யான் இரப்ப, துஞ்சிற் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன் மன்

- (குறள் 1211 - கனவு நிலை உரைத்தல்); கனவு காண்பதில் உள்ள நிம்மதியை வள்ளுவர் சொல்கிறார் பாருங்கள்...
If my fish eating eyes, close in sleep, at my lament...
I could fully relate my sufferings to My Beloved...

ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கிறேன்! அதன் பெயர் கூடல்...

என் கண்களைத் துணியால் இறுக்க மூடிக் கொண்டேன்!
கை நிறைய கோல மாவை எடுத்துக் கொண்டேன்!
அவன் வீட்டு முற்றத்தில், ஒரு வட்டம் வரைய ஆரம்பிக்கிறேன், கண்களை மூடிக் கொண்டு!

வட்டம் தொடங்கிய இடத்திலேயே, முடிவும் வர வேண்டும்!
அப்படி வட்டம் கூடினால் அவனும் என்னைக் கூடுவான்! ஆகா!

ஐய்யய்யோ! ஒரு வேளை வட்டம் கூடா விட்டால்?

"பயப்படாதே டீ! அவனை எண்ணும் போதெல்லாம் ஏன் உடல் இப்படிப் பதறுகிறது உனக்கு?
பத்து முறை அதே போல் வட்டம் போடு! அதில் இரட்டைப் படையாய் வந்து வட்டம் கூடினால், அவனும் உனக்குக் கூடுவான்! என்ன சரியா? வட்டம் போடுகிறாயா?"

ஆகா! இது வெறும் விளையாட்டா? அல்ல! விதியின் விளையாட்டு!
என்ன விதி? = அவனுக்கு என்னை "விதி"!

அவனுக்கு என்னை "விதி" என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!
என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேராது! சேராது!! இது சத்தியம்!

ஐயோ, யாரடா இது? வட்டம் போட விடாமல் என்னை ஒரு கை தடுக்கிறதே!
அப்பா பெருமாளே, ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே! என்னை அவனுக்கென்றே சேர்ப்பித்து விடு! சேர்ப்பித்து விடு!

மீண்டும் வட்டம் போடத் துவங்குகிறேன்!
ஐயோ மீண்டும் ஒரு கை தடுத்துப் பிடிக்கிறதே! யார் இது? முருகாஆஆஆ!

"ஹேய்! என்னைத் தெரியலையா உனக்கு? எண்ணிக்கை வட்டம் போடுகிறாயா பேதை நெஞ்சே?
என்னை எண்ணிக் கை பற்றி விட்டாயே!
எண்ணிக்கை வட்டம் வேறு தேவையா?"

ஆகா! யார் குரல் இது?
எனக்கு மிகவும் பழக்கமான குரல் போல் இருக்கே! என் ஏக்கங்களைச் சொல்லக் கூடத் தேவை இல்லாமல்...அவனே வந்து விட்டானோ?

அவனோடு கூட்டமாக இன்னும் பல பேர் வந்து விட்டார்களே! வந்து என் அப்பா கிட்ட என்னென்னமோ பேசறாங்களே! ஒரே கோஷமா இருக்கே! ஏதோ ஓதறாங்களே! டும் டும் டும் என்று சத்தம் கேட்குதே! என்னென்னமோ நடக்குதே!

எங்கு திரும்பினாலும் ஒரே வேலும் மயிலுமா இருக்கே! திடீர்-ன்னு இத்தனை வேல் எங்கிருந்து முளைச்சிது? நான் காண்பதெல்லாம் கனவா? நனவா?


சந்தேகமே இல்லை! நனவே தான்!......என்னை அவன் தொடும் போது கூசுதே!
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்! - தோழீ நான்!


வாரண மாயிரம் சூழ வலம் செய்து
ஏரகன் முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(1)


(ஏரகம்=திருவேரகம்=சுவாமிமலை!
ஏரக முருகன் தந்தைக்கே பாடம் சொன்னவன் ஆதலாலே, என்னைத் தாய்-தந்தையரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவான்! அதனால் தான் எனக்கு ஏரக முருகன்!
*திருப்பரங்குன்றம்=அசடு
*திருச்செந்தூர்=உஷ்ணம்
*பழனி=முறைப்பு
*திருத்தணி=இளைப்பு
*பழமுதிர்சோலை=களைப்பு
*சுவாமிமலை மட்டுமே சிரிப்பு!
சுவாமிமலை முருகன் - அந்த இதழ்க் கோட்டோரம், சந்தனக் காப்பை வழித்தெடுத்தால் தெரியும்,
கள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே!)


நாளைத் திருமணம் அதற்கென்றே நாளிட்டு
பாளைக் கமுகுடன் பசும் வாழைப்-பந்தல் கீழ்
வேளைப் போதினில் வேல்முருகன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(2)


தோணியன் ஈசரோடு தேவர் குழாம் எல்லாம்
வேணியன் எந்தை வேங்கடவன் மகள்பேசி
காணியல் கூறைச் சீலையொடு மாலையும்
வாணியள் சூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(3)

(சீர்காழித் தோணியப்பர் எனப்படும் சிவபெருமான் தலைமையிலே, அனைவரும் வந்திருந்து,
எந்தை தந்தையாம், சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அண்ணலிடம், என்னைப் பெண் கேட்க...
காண அழகுடைய அரக்குச் சிவப்பான கூறைச் சீலையைக் கொடுத்து,
ஈசனின் மானசீக மகளான வாணி, நாத்தனராக மாலை சூட்டி, என்னை அழைத்துச் செல்ல...)


நால்திசை நாரங்கள் கொணர்ந்து நனிநல்கி
வேல்முறைச் சான்றோர் வேதமாம் தமிழ்ஓதி
சேல்விழி் மைந்தன் சேந்தனோடு என்தன்னை
ஆல்மரக் காப்பிடக் கனாக் கண்டேன் - தோழீ நான்!
...(4)

(நாரம்=தண்ணீர்; ஜீவநதிகளின் நீர்க் கொண்டு,
வேல்முறை வேளாண்மைச் சான்றோர்கள் தமிழ் மந்திரங்களை ஓத,
பந்தக்காலில் உள்ள ஆலமரத்துக் காம்பிலே கட்டிய மஞ்சக் காப்பினை எடுத்து,
எங்கள் இருவருக்கும் காப்பு கட்ட...)


கதிரொளித் தீபம் வரிசைகள் பலவேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையின் சங்கத் தமிழ்வேள் மண்டபத்துள்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்!
...(5)

மத்தளம் கொட்ட நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம் மாதவிப் பந்தல் கீழ்
மைத்துனன் முருகன் திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் - தோழீ நான்!
...(6)


(மாதவிப் பந்தல் என்னும் செண்பகக் கொடிகளின் கீழே, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க,
மைத்துனன்-மச்சான் என்று நான் ஆசையோடு அழைக்கும் முருகத் திரு நம்பி,
துளசி மாடம் பொருந்திய, சக்கரம், சங்கு, தண்டு, வாள், வில் துலங்கும் ஐம்படைத் தாலியைக் கழுத்திலே கட்டி,
என் கைத்தலம் பற்றி, என்னை அவனுக்கென்று ஆக்கிக் கொள்ள...)


வாய்நல்லார் மாறன் தமிழ்ஓதி மந்திரத்தால்
சேய்வேண்டி நாணல் படுத்துப் பரிதிவைத்து
சீர்வளர் மயில் அன்னான் மயிலாள் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(7)

(அரையர்கள், தமிழ் வேதமான திருவாய்மொழியை, மாறன் மறையை
- "நல்ல கோட்பாட்டு உலகங்கள் முன்றினுள்ளும் தான் நிறைந்து,
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே"
என்று ஓத - நாணல் பரப்பி - அகில் குச்சிகளால் வேள்வி ஓம்பி
என் கைப்பிடித்து - இரு மயில்கள் நடந்து வருவது போல், ஒயிலாகத் தீவலம் வர...)

இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்!
...(8)


வரிசிலை மன்மதன் அண்ணன்மார் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
கரிமுகத்து இளையோன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(9)

(உலகம் அத்தனைக்கும் கிளர்ச்சி ஊட்டும் மன்மதனோ, என் சொந்த அண்ணன்; நாரணத் தந்தையின் மானசீக மகன்
ஆனால் திருக்கை வேலின் காதல் முன்னால், கரும்பு வில்லின் காமம் நிற்குமோ?
தொலைவில் இருந்து அம்பெய்த முடியாமல், அருகில் வந்து,
முருகனின் மைத்துனன் ஆனதாலே, பொரி முகம் தட்டி,
என்னை யானைமுகத்தான் தம்பியிடம் ஒப்புவிக்க..)

குங்குமம் இட்டு குளிர்ச் சாந்தம் எனக்கிட்டு
மங்கலக் குடதீபம் கையேந்தி மனைக்குள்ளே
அங்கவனோடு நான் உடன்சென்று இல்வாழ
முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்!
...(10)

(நித்ய சுமங்கலிப் பொட்டிட்டு, சாந்தும் இட்டு,
காமாட்சி அம்மன் விளக்கைக் குடத்தில் வைத்து,
பத்திரமாக முருக மனைக்குள் புக...பின்பு முருக நம்பியும் எனக்குள் புக...
மருந்தாய் என்றும் மனத்துள்ளே, அவனை வைத்து இருப்பேனே,
பெருந்தாள் உடைய முருகனை, பிரியாது என்றும் இருப்பேனே!)

கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தலின் பேதை சொல்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் முருகனின் சேவடிச் சேர்வரே!




திருமணத்தோடு கூடிய சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன!

Wednesday, November 10, 2010

கந்த சஷ்டி 6: திருச்செந்தூரின் கடலோரத்தில்? ஈழத்தின் கடலோரத்தில்?

மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-11)! முருகன் (Sanskrit சுப்ரமண்யன்), சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் சொல்லப்படுவது திருச்செந்தூர் கடற்கரை! 

ஒவ்வோர் ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன? 
இலக்கியங்கள் சொல்வது என்ன? 
சூர சங்காரம் எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
சு + பிராமண்யன் = சுப்ரமண்யன்!
(சிறந்த பிராமணத்துவம் பெற்றவன்)

அம்மையப்பனிடம் வேல்/ஆயுதங்கள் வாங்கிய சுப்ரமண்யன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறான். 

விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி. 
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க, வீரபாஹூத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். 

ஆனால், வீரபாஹூவும், சுப்ரமண்யனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்! 

தாரகன் சுப்ரமண்யனோடு, நேரடியாக மோதவில்லை! எனினும் சுப்ரமண்யன், கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிக்கப் படுகிறான். 

அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர். சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது. சுப்ரமண்யன் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான். 

மன்னி ஆற்றங்கரையில், ஈஸ்வரனாகிய சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் சுப்ரமண்யப் பெருமான். ஈசனும் சுப்ரமண்யன் முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், சுப்ரமண்யனைச்  செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் சுப்ரமண்யன். அதன் பின்னரே வீரபாஹூவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது! 

தூது செல்லும் வீரபாஹூ முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை! சிறைப்பட்ட தேவ இளவரசனான, இந்திரனின் மகன், சுப்ரமண்ய அணுக்கன் ஜெயந்தனைத் தான் முதலில் போய்ப் பார்க்கிறான்! 
ஜெயந்தனுக்கும் சுப்ரமண்யனுக்கும் அப்படியென்ன அணுக்கம்? என்று கதையில் சொல்லப்படவில்லை! 

பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான் வீரபாஹூ! ஆனால் அசுரனின் மறுப்பால் தூது முறிகிறது. அப்போது ஏற்பட்ட கைக்கலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாஹூவால் கொல்லப்படுகிறார்கள். 

வீரபாஹூ திருச்செந்தூர் திரும்பி, சுப்ரமண்யனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான். இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார் சுப்ரமண்யன். 
ஈழத்தில், ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது. பானுகோபன் என்னும் சூரனின் மகனை முதலில் சுப்ரமண்யன் முறியடிக்கிறார்.
ஈழத்து வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக, கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான். 

கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது. சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரன் ஒருவனை மட்டும் அழிக்காமல், சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிக்கப்படுகிறார்கள்! 

சுப்ரமண்யன் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும், தூங்கும் குழந்தைகள் உட்பட, கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது. 

வெற்றித் திருமகனாய், சுப்ரமண்யன் திருச்செந்தூர் திரும்புகின்றார். ஆனால் இப்படிச் சூரனின் குடும்பம், குலம், நாட்டு மக்கள் யாவரையும் தாமே அழித்த மனக்கேதம் தீர்க்க, சுப்ரமண்யன் மனம் எண்ணுகிறது! 
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் சுப்ரமண்யன். 

இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர்க் கருவறையில் காண்பது! கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்! ஆக, சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் இருந்து தான்! ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது! திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் (சுப்ரமண்யன்) ஆலயங்களிலும், ஏனைய ஆற்றுப்படை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!



இன்றைய சஷ்டிப் பாடல்... = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! 

சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது! 
படம்: தெய்வம் குரல்: சீர்காழி, TMS வரிகள்: கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் 
தினமும் கூடும் தெய்வாம்சம்! 

அசுரரை வென்ற இடம் - அது 
தேவரைக் காத்த இடம் 
ஆவணி மாசியிலும் - வரும் 
ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம்! 
அன்பர் திருநாள் காணுமிடம்! 

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், 
தலையா கடல் அலையா? 
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், 
குமரனவன் கலையா? 

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று 
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று 
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று 
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று 
(சாதி பார்த்து, ஆலய நுழைவு மறுத்த வரலாறு, திருச்செந்தூருக்கு உண்டு)
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று 
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு! 

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா 
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா 
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் 
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!
இது வரை சஷ்டிப் பதிவுகளுக்கு, வந்திருந்த முருக அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி! 


சஷ்டியில் நிறைந்தருள்வாய்




"சஷ்டியில் நிறைந்தருள்வாய்!"

[புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக' மெட்டில் பாடிப் பாருங்க!]

கந்தனுன் கருணையை எந்தனுள் எண்ணிடக்
கண்ணீர் பெருகிடுதே - முருகா
என்மனம் உருகிடுதே
வந்தனை செய்திடும் வகையினை அறியேன்
என்னையும் காத்தருள்வாய் - முருகா
ஏழையை ஆட்கொள்ளுவாய்


நிந்தனை செய்திட்ட பிரமனைச் சிறையினில்
அன்றுநீ தள்ளியவா

முந்தையென் வினைகளும் முற்றிலும் தீர்ந்திடப்
பதமலர் தந்தருள்வாய்
[கந்தனுன் கருணையை]

பழம்வேண்டி நீயும்
மயிலேறிச் சென்று
வலம்வந்தாய் உலகை
இளம்வயதில் அன்று

பழம் இல்லையென்று
சினம்நீயும் கொண்டு
மலைமீது நின்று
சிலையானாய் அன்று

பழம்நீ என்றே, பழநியாய் ஆனாய், மலைமகள் குமரா நீ
அழுதிடும் பக்தரின், அடுதுயர் நீங்கிட, அடைக்கலம் தருவாயே
[கந்தனுன் கருணையை]

ஆறுமலை நின்று
ஆறுதலைத் தந்து
ஆறுமுகம் என்றே
ஆடிவரும் கந்தா

ஆறுநாளும் நின்னை
சோறுதண்ணி இன்றி
ஆரவாரத் தோடே
காவடிநான் எடுப்பேன்

அறுபடை வீட்டினில், அமர்ந்திடும் முருகா, என்குறை தீர்த்தருள்வாய்
சூரனை வென்றிட்ட, ஆறுமுகக் குமரா, சஷ்டியில் நிறைந்தருள்வாய்!
[கந்தனுன் கருணையை]

"முருகனருள் முன்னிற்கும்!"

இயற்றியவர் : திரு வி.எஸ்.கே (VSK)

Tuesday, November 09, 2010

கந்த சஷ்டி 5: சினிமாவில் திருப்புகழ்!

ஐந்தாம் நாள் சஷ்டிப் பதிவில்...கொஞ்சம் வித்தியாசமாக...
சினிமாவில் திருப்புகழ் என்பதற்குப் பதிலாக...
சினிமாவில் அருணகிரியின் மற்ற பாடல்கள் என்று பார்க்கலாமா?

சினிமாவில் சில திருப்புகழ்களைப் சென்ற பதிவுகளில் பார்த்தோம் அல்லவா? திருப்புகழ் மட்டும் தானா அருணகிரியார் பாடியது?
கந்தர் அலங்காரம்? அனுபூதி? வேல் விருத்தம்? மயில் விருத்தம்? இவை சினிமாவில் வந்துள்ளதா?

அருணகிரி அருளிய நூல்கள், ஆறுமுகனைப் போலவே, மொத்தம் ஆறு!
1. திருப்புகழ்
2. கந்தர் அந்தாதி
3. வேல்-மயில்-சேவல் விருத்தம்
4. திருவகுப்பு
5. கந்தர் அனுபூதி
6. கந்தர் அலங்காரம்

இவற்றில் சில வரிகள், அருணகிரிநாதர் படத்திலேயே வந்துள்ளன! ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?



முதலில் கந்தர் அலங்காரம்!

நான் பொருள் சொல்லத் துவங்கி, சென்ற Dec-2009இல் பாதியிலேயே நின்று போனது!
அதோடு சேர்த்து நானும் நின்று போயிருக்க வேண்டும்!
ஆனால் ஏதேதோ நடந்து, எப்படியோ தொடர்ந்து கொண்டிருக்கிறேன்!
நான் எங்கே நினைத்தாலும், அங்கே என்முன் வந்து நிற்பான், என் முருகன்!

பாடலை இங்கே கேட்டுக் கொண்டே வாசிக்கவும்!
குரல்: TMS
இசை: ஜி.ராமனாதன்
வரி: அருணகிரி
படம்: அருணகிரிநாதர்

செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே

செம்மை நிறக் கோபம் கொண்ட சின வடிவேல்...திருமுகம்...
அடியவர்களின் பாரம் தாங்கும் பன்னிரு தோள்...
தாமரையில் தேன்துளியும் முத்தும் சிதறும் திருச்செங்கோடு என்னும் ஊர்...
அந்த செங்கோட்டுக் குமரன் எப்படித் தெரியுமா?
நான் எங்கே நினைப்பினும், அங்கே என் முன் வந்து தோன்றுவானே!

என்னவொரு நம்பிக்கை, பிடிமானம் பாருங்கள்! எங்கே நினைத்தாலும் அங்கே வந்து தோன்றுவானாம் என் முருகன்!
அதுவும் எப்படி? சும்மா அசரீரியா குரல் எல்லாம் கொடுக்க மாட்டானாம்! கனவில் தோன்ற மாட்டானாம்! = "முன்" வந்து தோன்றுவான்! முன் "வந்து" தோன்றுவான்!

* நான் பூசை அறையில் நினைப்பேன் = என் முன் வந்து தோன்றுவான்!
* நான் படுக்கை அறையில் நினைப்பேன் = என் முன் வந்து கிள்ளிச் சீண்டுவான்!
* நான் பாத்ரூமில் கூட நினைப்பேன் = ஹேய், உன் மேல் வாசனையா இருக்கு-ன்னு சொல்லுவான்!
* நான் Subway Train-இல் நினைப்பேன் = கம்பி மேல் தாங்குவது போல் என் மேலும் தாங்குவான்!

* நான் அலுவலகத்தில் நினைப்பேன் = அவ கூட மொக்கை போட்டது போதும்! என்னை வந்து கவனி-ன்னு சொல்லுவான்!
* நான் வீட்டினில் நினைப்பேன் = எல்லாம் நல்லா இருக்குடீ! ஆனா உன் காரம் தான் தூக்கலா இருக்கு-ன்னு சொல்லுவான்!
* நான் ஓய்வாக உறங்குவேன்! அப்போ நினைப்பேனா? தெரியாது! ஆனால் அவன் மடி, என் தலையைத் தாங்கிக் கொண்டிருக்கும்! அவன் கரம் என் மார்பைத் தட்டிக் கொண்டிருக்கும்! நான் என்னையும் அறியாமல் அவனுள் கலந்து...முனகி முனகி...முருகா முருகா...

எங்கே நினைப்பினும் அங்கே என் முன்-வந்து எதிர் நிற்பனே
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்!!!


இதோ...
அலங்காரத்தைத் தொடர்ந்து திரையிசை...முருகன் பாமாலை என்னும் தொகுப்பில் (album) இருந்து...
இந்தப் பாட்டை முதன்முதலாகக் கேட்ட போது, எனக்கு-ன்னே சுசீலாம்மா பாடி இருக்காங்களோ-ன்னு நினைச்சிக்கிட்டேன்!

காலைத் தனிமையிலும், இரவுத் தனிமையிலும் = தனி மயில்!
அவனொடு நான்! கூடவே இந்தப் பாடல்!
ஒரு நாளும் தவறவே தவறாது! கேட்டுப் பாருங்கள்! நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!

எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு! - அதில்
எப்போதும் இல்லை ஒரு குறைவு!!
முருகா...எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு!

இனிக்கும் சுவைக் கனிக்கும் மேலான உறவு!
இதயத்திலே பெருகி எழும் காதல் உறவு!
(எனக்கும் உனக்கும்)

வனக்குறத்தி வள்ளியிடம் கள்ள உறவு!
தேவ இனத்தவள் குஞ்சரி மண உறவு!
தனக்கு உயிர் உடலாகத் தங்கும் உறவு - இந்தத்
தாரணியைக் காத்திருக்கும் தேவன் உறவு!
(எனக்கும் உனக்கும்)

மனக்கவலை மறக்க வைக்கும் வேலன் உறவு - நல்
மகிழ்ச்சி அங்கு இருக்க வைக்கும் கந்தன் உறவு
மணமலர் போல் இருக்கும் இன்ப உறவு
திரு-மால் மருகன் வேல் முருகன் அன்பின் உறவு!

முருகா...
எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு!
அதில் எப்போதும் இல்லை ஒரு குறைவு!
I Love You Murugaaaaa!
Want to be with you, Will be with you.....forever!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP