Friday, August 14, 2009

ஆடிக் கிருத்திகை! கும்மாளப் பாடல்! வேல்முருகா, வேல்முருகா, வேல்!

பெங்களூர் ரமணியம்மாள்-ன்னு கேள்விப்பட்டிருக்கீக தானே? குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாடலைப் பாடியவர்!
மேடைக் கச்சேரிகள் மட்டுமே பாடும் கிளாசிக்கல் பாடகர் என்றாலும் கூட, எல்.ஆர். ஈஸ்வரியை ஞாபகப்படுத்துவது போல் பாடக் கூடியவர்!
அந்த அளவுக்கு ரமணி அம்மாளின் பாடல்களில் குத்தும், கும்மாளமும், குதூகலமும் துஞ்சும்! கொஞ்சும்! மிஞ்சும்! :)

அது போல ஒரு சூப்பர் பாட்டைத் தான் இன்னிக்கிப் பார்க்கப் போறோம்!
நீங்கள் வாருமே பெருத்த பார் உளீர்-ன்னு துவங்குமே! அந்தப் பாட்டு!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!-
ன்னு வரிக்கு வரி வரும்!
கேட்டு இருக்கீயளா? கேட்கலீன்னா, இன்னிக்கி கேட்டே ஆகணும்! :))

இதுக்கு ட்யூன் போட்டது யாரு தெரியுமா? சதா மற்ற பாடகர்களிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீர விமர்சகர் சுப்புடு! :))
ஒரு முறை இவர் பர்மாவில் போய்க் கொண்டிருந்த போது, அந்தப் படகோட்டி பாடிய பாடலின் மெட்டு, இந்த நக்கீர விமர்சகருக்கே மனதில் பதிந்து விட்டது!
அந்த மெட்டை ரமணி அம்மாளிடம் சுப்புடு கொடுக்க, அம்மாள் அதில் தன் பாட்டை இட்டுக் கட்டி நிரப்ப, ஒரு அபூர்வ முருகன் பாடல் உருவானது!



இன்னிக்கி ஆடிக் கிருத்திகை! (Aug-14-2009)! ஐந்தாம் படைவீடான திருத்தணிகையில் மிகவும் விசேடம்!
"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்" என்னும் படிக்கு,
ஊரறிய உலகறிய, ஒரு பேதையைக் கரம் பற்றிய கல்யாணத் திருநகரம் தான் திருத்தணிகை!

வள்ளியை முருகன் மணந்த தலம் திருத்தணி! இதை ஏன், அதுவும் திருத்தணியிலேயே, பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(
* களவு மணமாவது? கற்பு மணமாவது?
* களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
இனி திருத்தணிகை என்றாலே வள்ளித் திருமணம் தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!



தினைப் புனத்திலே விளைந்த காதல் மணத்துக்கு, அந்தத் தினை அளவு தான் மதிப்பா?......என்று எவரும் கேட்டு விடாத படிக்கு...
பெற்றோர் முன்னும், மற்றோர் முன்னும், பெண்-மானத்தையும், தன்-மானத்தையும் காத்துக் கொண்டான் எங்கள் பெருமகன் முருகன்!

வள்ளியின் தவம் தான் எத்தனை எத்தனை காலம்? பெருமாள்-திருமகளின் திரு மகளான இவள், முருகனையே மணக்க வேண்டி, காலமெல்லாம் கல் போல் அல்லவா காத்துக் கிடந்தாள்?
பிறவி எடுத்தே மணக்க வேண்டும் என்ற நிலை வந்த போது, அதற்கும் தயங்கவில்லை! நம்பி ராசனுக்கு மகவாய்த் தோன்றி, நம்பிக் கொண்டிருந்தாள்!

இத்தனைக்கும் முருகன் அவளை ஏற்றுக் கொள்வானா என்று கூட அவளுக்குத் தெரியாது!
அப்படிக் காதலில் வீழ்ந்தவள் தான்! உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் முருகனே என்றிருப்பேன்!

இத்தனைக்கும் முருகனை நேரில் பார்த்தது கூட இல்லை! அவனும் அவளுடன் ஏதும் பேசியதும் இல்லை!
ஆனாலும், கனவிலும் கற்பனையிலுமே, அவனுடன் பேசிப் பேசிக் காதலை வளர்த்தாள்!
அவன் வருவானா என்று கூடத் தெரியாமல், அளி ஒத்த மேகங்காள், ஆவி காத்து இருப்பேனே!

பார்க்காத முருகனுக்காக, பார்த்த மாப்பிள்ளையை விரட்டிய வீராங்கனை வள்ளி! :)
மானிடர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்னும் படிக்கு, அரங்கனுக்கு ஒரு கோதை போல், முருகனுக்கு ஒரு கோதையே பேதையே = வள்ளி!

அந்தக் காதல் வேள்வியின் தீ, தீந்தமிழனை அவளிடமே இட்டுக் கொண்டு வந்தது!
குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர
குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ?


குறுகினான்! வந்து உருகினான்! அவளைப் பருகினான்! அவளுள் பெருகினான்!
கனிந்தது தணிந்தது தணிகையில்!

* தணிகையில் தான் என் முருகனுக்கு இரண்டுமே தணிந்தது!
* அன்று கோபம் தணிந்தது! இன்று தாபம் தணிந்தது! :)
* இப்படி, ஒரு தனி கை வேலனுக்கு, இரு தணிகை = அது திருத் தணிகை!



அருமையான பாடல் வரிகளைப் பார்க்கலாம் வாங்க! வேல்முருகா, வேல்முருகா, வேல்! - பாடலை இங்கு கேளுங்கள்! - கேட்டுக் கொண்டே பதிவைப் படியுங்கள்!

நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!
நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!

பஜனை செய்யலாம்...பாடி மகிழலாம்!
முருகனைப் பாடலாம்...வள்ளியைப் பாடலாம்!
கண்ணனைப் பாடலாம்... மீராவைப் பாடலாம்!

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே!

சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
*****************************************

அலைகடல் வளந்தொடுத்து
எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

அடைபெறுவ(து) என்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்!
முக்தி அடையலாம்! சித்தி ஆகலாம்!!
முருகனைப் பாடினால்...முக்தி அடையலாம்!
சிவனைப் பாடினால்...சித்தி அடையலாம்!!


வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
***************************************

எம படர் தொடர்ந்(து) அழைக்க
அவருடன் எதிர்ந்(து) இருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம்! - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்!
முருகனைப் பாடினால்...எமனுடன் பேசலாம்!
சிவனைப் பாடினால்...எமனை எதிர்க்கலாம்!!


வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!


உள்ளத்திலே...இன்ப வெள்ளத்திலே...
முருகன்....மெல்லத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை... அள்ளிக் கொடுத்த புனை...
வள்ளிக்(கு) இசைந்த மண வாளனாம்!

சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!

********************************************************

வேதத்திலே...திவ்ய கீதத்திலே...
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
உங்கள் உள்ளத்திலே...முருகன் தோன்றுவான்!
ஒவ்வொருவர் பக்கத்திலே...முருகன் தோன்றுவான்!


அவன் பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால்
உங்கள் பக்கத்திலே முருகன் தோன்றுவான்!


சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!


வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! எங்கப்பனுக்கு அரோகரா!
சிவ பாலனுக்கு அரோகரா! வடி வேலனுக்கு அரோகரா!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!


வெற்றி வேல் முருகனுக்கு.....அரோகரா!


வள்ளி வேல் முருகனுக்கு அரோகரா!
வயலூர் முருகா-என்னை வாரிக் கொள்! உன்னிடம் வாரிக் கொள்!
செந்தூர் முருகா-என்னைச் சேர்த்துக் கொள்! உன்னிடம் சேர்த்துக் கொள்!

வரமனம் இல்லையா?


திருத்தணியில் ஒவ்வொரு கிருத்திகை நாளும் சிறப்பு நாளாகும். ஆடிக்கிருத்திகைதான் மிகவும் விசேஷமானது. அன்று முதல் மூன்று நாட்களுக்கு சரவணப் பொய்கையில் தெப்ப உற்சவம் நடைபெறும்.இந்த மூன்று நாட்களிலும் சுமார் 12 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.அன்று பூக்காவடி, பால்காவடி ஆகிய பிரார்த்தனைகளை செலுத்துகின்றனர்.
சூரபத்மனோடு போரிட்டு முடித்த பின்பு சினம் தணிந்து இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதால் இங்கு சூரசம்ஹார விழா கொண்டாடப் படுவதில்லை


தேவர்கள் பயம் நீங்கிய இடமும் இது தான். முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடமும் இதுதான். அடியவர்கள் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றை தணிக்கும் இடமாதலால் தணிகை என்று பெயர்க் காரணமும் உண்டு


திருத்தணியில் முருகனை வழிபட்டவர்கள் சிவபெருமான், திருமால், ராமர்,பிரும்மன், சரஸ்வதி,
அடியார்களைப் பொருத்தவரை அருணகிரிநாதருக்கு சும்மாஇரு என்று உபதேசம் செய்தவரே முருகந்தான். அவரும் இங்கு முருகன் மீது 63 பாடல்கள் பாடியுள்ளார். முத்துஸ்வமி தீக்ஷதரும் தனது முதல் பாடலான "ஸ்ரீ நாதாதி குரு குஹோ " என்ற பாடலை இயற்றியது திருத்தணிகையில்தான்.தீவிர முருக பக்த்தரான அவர்தனது ஒவ்வோரு கீர்த்தனையிலும் " குரு குஹ" என்ற முத்திரையை பதித்துள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியாரும் கந்தபுராணத்தில்"உலகில் மலைகள் பல இருந்தாலும் சிவபெருமான் கயிலாயத்தில் விரும்பி இருப்பதுபோல முருகந்திருத்தணி மலையை மிகவும் விரும்பி அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கிறான்" என்று சிறப்பித்து கூறியுள்ளார். மற்றும் பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வடலூர் ராமலிங்கஸ்வாமிகள், கந்தப்பையதேசிகர் ஆகியோரும் வழிபட்ட இடம் இது.
இங்கு முருகனின் பிரசாதமாக திருநீறு குங்குமம் அளித்தாலும் முருகனுக்கு அபிஷேகம் முடிந்து பின்னர் அவர் மார்பு மீது சாத்தப்படும் திருமேனிப் பூச்சு என்னும் சந்தனம் முருகன் சந்நிதியில் வழங்கப்படும். இச்சந்தனத்தை உட்கொள்ளுபவர்கள் நோய்கள் பலவும் தீரப் பெறுவர்.
முருகனுக்கு இணயான தெய்வமோ திருத்தணிகைக்கு சமமான தலமோ இல்லை என்றே சொல்லாம்.மற்ற படை வீடுகள் எல்லாம் மதுரையைச் சுற்றியே இருக்கும் போது இது ஒன்றுதான் தொன்டை மண்டலத்தில் இருக்கும் ஒரே படை வீடு.
தணிகை மலை துரையைப் பற்றி பெங்களூர் ரமணி அம்மாள் பாடுவதை கீழே கேட்டும் கண்டும் அனுபவியுங்கள்


-






ராகம்:யமுனா கல்யாணி தாளம்: ஆதி

பல்லவி

வரமனம் இல்லையா முருகா
வரம் தர மனமில்லையா? என்னிடம்....வரம்தர

அனுபல்லவி

பிறவிப் பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே
பிறைசூடன் மைந்தா குறை தீர்க்கும் குமரா....வரம் தர

சரணம்

வாழ்க்கை எனும் கடலிலே முழ்கியே தவிக்கிறேன்
காத்திடவா என்றே அழைத்தேனே
கந்தா குமரா கதிர்வேலா என்னிடம்..... வரமனம்



இந்த வருடம் ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது கிருத்திகை இது.இந்த வாரம் திருத்தணிகைக்கு குடும்பத்துடன் சென்றுமுருகனை வணங்கி விட்டு வந்தேன்.இந்தபாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அது சரி பிறைசூடன் யார்? ஓ ஸ் அருணின் குரலில் கேட்டுதான் பாருங்களேன்...


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP