Saturday, February 07, 2009

தைப்பூசம்: குத்துப் பாட்டு=கிளிக் கண்ணி+காவடிச் சிந்து!

அன்பர்கள் அனைவர்க்கும் தைப்பூச வாழ்த்துக்கள்! வடலூர் வள்ளல்பிரான் இராமலிங்கப் பெருமகனுக்குத் தைப்பூச ஜோதி தரிசனம்! பழனியில் பாத யாத்திரை! மலேசிய பத்துமலை மற்றும் நாகை-சிக்கலில் திருவிழா! இப்படிப் பல சிறப்புகள்!
தைப்பூசம்-ன்னா என்னாங்க? எதுக்குத் தைப்பூசம்?

முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தான் தைப்பூசம்!
தாராகாசுரனை மலையில் வேலெறிந்து வீழ்த்திய நாள் என்றும் சிலர் சொல்வார்கள்!
தைப்பூசமான இன்று (Feb-8-2009) மேல் மருவத்தூரிலும் பெருவிழா! மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும், வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள்! அது வரை மதுரை ஆலயத்தில் பூசைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்!

இன்னிக்கு-ன்னு பார்த்து, ஒப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கும் (சம்ப்ரோக்ஷணம்) நடைபெறுகிறது இன்னொரு சிறப்பு! இதோ சுட்டி!

முருகனருள் வலைப்பூவில், இந்தச் சிறப்பு நாளில், ஒரு சிறப்புப் பாட்டைப் பார்க்கலாமா? கிளிக் கண்ணி+காவடிச் சிந்து! = வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும்-என்ற பாட்டு!



கண்ணி என்றால் என்ன? அது என்ன கிளிக் கண்ணி? கிளியைப் போல் உருண்டையா உருண்டையா கண் உள்ள பெண் தான் கண்ணியா? :)

ஹிஹி! கண்ணி-ன்னா ஒரு வித மாலை! பெரிய மாலை இல்லை! குட்டி குட்டியா, சிறுசா தொடுக்கப்படும் மாலை!
வளைவாகத் தொடுத்து, இறைவனின் கைகளில் வளை போலவும், கால்களில் சிலம்பு போலவும், தலையில் தலைமாலை போலவும் அலங்கரிப்பார்கள்!
பொதுவாகப் பெருமாள் கோயில்களில் இந்தக் கண்ணிகள் வளை வளையாகத் தொடுத்து, திருவடிகளில் அணிவிக்கப்படும்!

அது பூமாலை! அதே போல ஒரு பாமாலை!
கண்ணி = இரண்டு இரண்டு வரிகளாகத் தொடுக்கப்படும் சின்னச் சின்ன பாட்டு! மிகவும் எளிமையாக கிராமிய மெட்டில் இருக்கும்! அதனாலேயே எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! பராபரக் கண்ணி கேள்விப்பட்டு இருப்பீங்களே? யார் எழுதியது சொல்லுங்க பார்ப்போம்!

இந்தப் பாடல் கிளிக் கண்ணி! கிளியை நோக்கி முருகனின் காதலி பாடுகிறாள்!
எழுதியவர் பெயர் தெரியலை (அனானி)! ஆனால் அருமையா இருக்கு!
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, அவன் குறுநகை போதுமடி! கிளியே, அவன் குறுநகை போதுமடி!

அந்தக் கண்ணியை இசையோடு பாட முடியுமா? அதுவும் காவடிச் சிந்து மெட்டில்?
* ஆட்டத்தின் போது களைப்பு தெரியாமல் இருக்க துள்ளலா பாடுவது காவடிச் சிந்து! நாலு நாலு வரியா வரும்!
* ஆட்டமாய் இல்லாமல், அமைதியான கிராமிய இசையாய் பாடுவது கண்ணி! இரண்டு இரண்டு வரியாய் வரும்!

அந்த இரண்டு வரியை, நடுவில் உடைத்து, நாலு வரியாக்கி, கண்ணியைக் காவடிச் சிந்து மெட்டில் பாடுறாங்க! கேட்டு கிட்டே படிங்க!
காவடிச் சிந்தின் குத்தாட்டத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி, கண்ணிப் பாட்டின் மெட்டிலே, இதோ காவடிச் சிந்து மெட்டு!
அருணா சாய்ராம்: (My choice for this song)

நித்ய ஸ்ரீ


* சுதா ரகுநாதன் பாடுவது!
* குன்னக்குடி வைத்யநாதன் - வயலின்
* வீணை இசையில்!


வள்ளிக் கணவன் பேரை,
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே,
ஊனும் உருகுதடி!


மாலை வடி வேலவர்க்கு, வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே - கிளியே, உள்ளமும் கிறுக்காச்சுதே!


காட்டுக் கொடி படர்ந்த, கருவூரின் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி - கிளியே, வேலன் என்னும் பேரோனடி!


கூடிக் குலாவி மெத்த, குகனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி - கிளியே, வெகு நாளின் பந்தமடி!


மாடுமனை போனாலென்ன? மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, குறுநகை போதுமடி!

எங்கும் நிறைந் திருப்போன்! "எட்டியும் எட்டா திருப்போன்"!
குங்கும வர்ணனடி - கிளியே, குமரப் பெருமானடி!


பாட்டு எப்படி இருந்திச்சி மக்கா?
நல்ல பாட்டை யாருக்காச்சும் டெடிகேட் செய்யறது பண்பலை வானொலியில் வழக்கமாப் போச்சு! இந்தப் பாட்டை நம் கூடல் குமரனுக்கு டெடிகேட் செய்கிறேன்!
குமரப் பெருமானடி! கிளியே, குமரப் பதிவனடி! கிளியே, குமரப் பதிவனடி! :))

தைப்பூச முருகனுக்கு அரகரோகரா!!! பத்துமலை பழனிமலை முருகனுக்கு அரகரோகரா!!!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP