Monday, November 09, 2009

அழகென்ற சொல்லுக்கு முருகா...


முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)





***

சேந்தனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. தினமும் காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லும் போது அவனை அவனுடைய பள்ளியில் விட்டுவிட்டுச் செல்வேன். இந்த மார்கழி வந்தால் அவனுக்கு மூன்று வயது நிறைகிறது. கூடுந்தில் (Van) ஏறியவுடன் 'பாபா. முருகா கீத் பஜே. முருகா கீத் பஜே' (அப்பா. முருகா பாட்டு வேணும். முருகா பாட்டு வேணும்) என்று தொடங்கிவிடுவான். அவன் பள்ளியை அடையும் வரை அவனும் சேர்ந்து பாடிக் கொண்டு வருவான். மற்ற நேரங்களில் நான் 'அழகென்ற சொல்லுக்கு' என்றால் அவன் 'முருகா' என்று சேர்ந்து பாடுகிறான்.

அந்த வயதில் அவன் அக்காவிற்கு ஹனுமான் சாலீஸா பிடித்திருந்தது. இப்போது 'எந்தப் பாட்டைப் போட்டாலும் சரி' என்று இருக்கிறாள்; இவனும் அப்படி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன். :-)

Monday, October 19, 2009

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -4

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -4
"மனவேடன் காதல்"
'நம்பிராஜன் கூற்று:'

'தினையெல்லாம் முத்திப்போச்சு! அறுவடைக்கு நாளாச்சு!
அதுவரைக்கும் காவல் காத்த ஆசைமகளும் வீடு வந்தாச்சு!
கலகலப்பா காட்டுக்குப் போன புள்ள, காலடியைச் சுத்திச் சுத்தி
வளையவந்த சிறு புள்ள, இப்பல்லாம் ஏனிப்படி பேசாம குந்திகிடக்கா?


துறுதுறுன்னு வேலையெல்லாம் பக்குவமா செய்யிறவ,
பித்துப் பிடிச்சாப்புல மூலையில சாஞ்சு கிடக்கா!
ஆரோடும் பேசவில்லை! சாப்பாடும் செல்லவில்லை!
தினைப்புனத்தைப் பாத்தபடி ஆர் வரவோ தேடியிருக்கா!

ஏன்னு கேக்கப்போனா ஏதுமவ பேசவில்லை!
எம்மகளைப் பாக்கறப்ப பெத்த மனசும் தாங்கவில்லை!
என்ன செஞ்சா தீருமின்னு குறி கேட்டுப் பாக்க வேணும்!
மலைக்காட்டு முனி வந்து மக மேல குந்திகிச்சோ!
வேப்பமரப் பேயொண்ணு எம்மவளைப் புடிச்சிருச்சோ!

ஆத்தாளை அனுப்பிவைச்சு என்னவின்னு கேக்கச் சொன்னேன்! தனக்கொண்ணும் தெரியலைன்னு திரும்பி வந்து கை விரிக்கா!
எங்கசாமி மலைக்குமரன் அருள் கேட்டு வளி கேட்டு அப்படியே செஞ்சிறணும்! இனிமேலும் தாங்கிடவே என்னால முடியலியே!'

என்றிவ்விதம் யோசித்து,
தேவராட்டி, வெறியாட்டாளன்
இருவரையும் வரவழைத்து,
நடந்த கதை சொல்லிவைத்து
குறி சொல்லக் கேட்டிருந்தேன்.

அகில்புகையும் மணமணக்க, உடுக்கையொலி உரக்கொலிக்க,
பம்பையொலி பாரதிர, வெறியாட்டன் வேகமதைக் கூட்டிநின்றான்.
ஆவேசப் பாட்டெடுத்து அழைத்ததுமே அருள்முருகன் அவன்மேலே அருள்செய்து அருள்மொழியால் உரைத்திட்டான்!

'தினைப்புனத்தில் நின்மகளை யாம் வந்து கைபிடித்தோம்!
விரைவிலங்கு வந்திருந்து நின்மகளை மணம் செய்வோம்!
அலங்காரப் பூசைகளும், அபிசேக ஆராதனையும்
அளவின்றி எமக்காக நீயுடனே செய்துவிடு!'

அமுதமொழி கேட்டிட்ட ஆனந்தம் கண்மறைக்க
அப்படியே பூசைகளும் அழகனுக்காய்ச் செய்திருந்தேன்.
ஆனாலும் மகள் நிலையில் மாற்றமேதும் தெரிந்திடாமல்,
செய்வதென்ன இனியென்று கைபிசைந்து தவித்திருந்தேன்!

'காட்டினிலே கண்டெடுத்து காதலுடன் வளர்த்தமகள்,
தாபத்தால் தவிப்பதனைப் பார்த்திடவோ மனமில்லை!
நாட்டமுடன் நான்வணங்கும் வேலனவன் வந்திருந்து,
சீக்கிரமாய் என்மகளின் தாபத்தைத் தீர்க்கவேணும்!'

'மனவேடன் கூற்று':

'வள்ளிக்கு வாக்குரைத்து வந்திட்ட நாள்முதலாய்,
அவள் நினைவே எனை வாட்டித் துயரதிகம் செய்கிறது!
மீண்டுமந்த மான்விழியைக் காணாமல் இருந்திடவோ
மனமிங்கு நிலையின்றி பரிதவித்து அலைகிறது!

தினைப்புனத்தில் தேவியவள் திருமுகத்தை மீண்டுமொரு
தடவையேனும் பாராமல் என்னாலும் இயலவில்லை!'
என வாடி, தாபத்தால் தினைப்புனத்தைத் தேடிவந்து,
தேவிநின்ற குடிசைவாசல் மரத்தடிக்கு மீண்டும் சென்றேன்!

காட்டுக்குடிசையதில் காற்றுமட்டும் தானிருக்கக்,
காதலியைக் காணாமல் கந்தனிவன் தவித்திட்டேன்.
கால்போன இடமெல்லாம் காதல்மகள் தடம்தேடி
காட்டுவழி நடந்தங்கோர் சிற்றூரை அடைந்திருந்தேன்!

காட்டுவேடன் தலைவனவன் நம்பிராஜன் வீடடைந்து நள்ளிரவில்
ஆருமில்லா வேளையினில் இங்குமங்கும் அலைந்திருந்தேன்
வெளிப்பட்ட பெண்ணொருத்தி வனத்திலெனை வள்ளியுடன்
கண்டிருந்த நினைவங்கு வந்திடவே ஆவலுடன்
அவளிடத்தில் "ஆசைமகள் எங்கே?" என்றேன்!

'நின்னைக் காணாத் தாபத்தால் தன் தேகம் தான் மெலிந்து,
ஊனுமின்றி உறக்கமின்றி எம் தலைவி வாடுகிறாள்!
இப்போதே நீர் சென்று தாபத்தைத் தணித்திடுக!
என்னோடு வந்திடுக!' எனச் சொல்லி அழைத்துச் சென்றாள்!

கண்ணெதிரே யான் கண்ட காட்சியினைச் சொல்லிடவும்
நெஞ்சமும் பதறிடுது,.... இப்போது நினைத்தாலும்!
உடல்மெலிந்து, ஊனிளைத்து, கண்ணிரண்டும் பஞ்சடைந்து,
காதல்மகள் கட்டிலினில் களைப்பாகப் படுத்திருந்தாள்!

தாவியவள் பக்கலிலே தயவாக யானமர,
தளிர்க்கொடியாள் கண்விழித்து, மழையெனவே நீருகுத்தாள்.

'நள்ளிரவில் நீரிங்கு வந்ததனை என்னுடைய சோதரரும்
கண்டிட்டால் தாளாக்கோபத்தால் தாறுமாறு செய்திடுவார்!
இனிக் கணமேனும் உமைவிட்டு கன்னியெந்தன் உயிரிங்கு நில்லாது!
கனிவோடு எனைக் கொண்டு கடிந்தேக வேண்டுகிறேன்!'

என்னுமவள் சொல் கேட்டு, அப்படியே அல்லியளைக்
கொடியெனவே அள்ளிக்கொண்டு,
யானிருக்கும் தணிகைமலை வந்தடைந்தேன்!

களவு மணமா கந்தனுக்கு?
'நம்பிராஜன் கூற்று ':

சேவலின்னும் கூவவில்லை! செங்கதிரும் தெரியவில்லை!
கருக்கலிலே வந்தென்னை 'கொடிக்கி'[வள்ளியின் தாய்] அன்று எழுப்பிவிட்டாள்.
'என்னவொரு அவசரமாய் நீயென்னை எழுப்பலாச்சு?' என வியந்து நான் கேட்க, கண்ணீரும் கம்பலையுமாய் எனைப் பார்த்து கதறிட்டாள்.

'கள்ளன் வந்து நம் மகளைக் கவர்ந்திங்கே சென்றாராம்.
கண்டவர்கள் சொன்னாங்க! கட்டிலிலும் ஆளில்லை!

அக்கம்பக்கம் அனைத்திடமும் தேடியிங்கு பார்த்துவிட்டேன்!
அருமைமகளைக் காணவில்லை!' என்று சொல்லி கண்ணீர் வீட்டாள்!

'யானிருக்கும் இடத்தினிலே தைரியமாய் உள்நுழைந்து
என்மகளைக் கொண்டுசெல்ல எவருக்கிங்கு துணிச்சலாச்சு!
இப்போதே படைதிரட்டி யானவரைத் தேடிடுவேன்!'
எனச் சொல்லி கூட்டமாக மகளைத் தேடப் புறப்பட்டேன்.

கண்ணுக்கெட்டிய தொலைவரையும் எவரையுமே காணாமல்
தளர்ந்தங்கோர் சோலையதைக் கண்டவுடன் அதை நாடிச் சென்றேன்.
ரத்தம் கொதிக்கவைக்கும் காட்சியொன்றை யான் கண்டேன்!
மரத்தடியில் என் மகளும் முகம்தெரியா வேறெவனும்
சல்லாபம் செய்திட்ட காட்சியது!

'ஆரடா நீ? கொன்றிடுவேன் யானுன்னை!
விட்டுவிடு என் மகளை' எனவங்கே நான் பாய,
என்மகளும் அவன் பின்னே ஒளியக் கண்டேன்!


'வனவள்ளி கூற்று':

ஆத்திரமும் கண்மறைக்க, அறிவொழிந்து என் தகப்பன்,
என் சொல்லைக் கேளாமல் எங்கள் மேல் பாய்ந்து வந்தான்.
அச்சத்தால் நடுநடுங்கி, உடலெல்லாம் பதைபதைக்க,
அழகனவன் பின்னாலே கோழிக்குஞ்சாய் ஒளிந்துகொண்டேன்.

'ஆயிரம் வீரரொடு ஆயுதத்தை கைக்கொண்டு, அப்பனிங்கு வருகின்றான்! தப்பித்துச் செல்வதுவும் இயலாதென நினைக்கின்றேன்.
ஏதேனும் செய்தென்னைக் காத்திடுக!' எனச் சொன்னேன்!
என்னவனும் அழகாக எனைப் பார்த்து முறுவல் செய்தான்.

'அஞ்சாதே இளமானே! அவரெமக்குச் சமமாகார்!' எனச் சொல்லி
என்னவனும் விழிமலரைத் திறந்தங்கு கோபமாக விழித்திட்டார்
ஏவிவிட்ட கணைகளெல்லாம் வளைந்துவிட்ட நாணலதாய்
குமரவேளின் காலடியில் பணிந்தங்கு குவிந்தன!

அருகிருந்த சேவலதை அமரர்தலைவன் பார்த்திடவே,
உயர்வான சேவலதும் ஓங்கியொரு கூவல் செய்ய,
அப்பனோடு கூடிவந்த அத்துணைப் படைகளுமே
அச்சத்தால் நடுநடுங்கி, அப்படியே அழிந்து போயின!

மாண்டுபட்ட தகப்பனவன் திருமுகத்தைப் பார்த்திருந்து,
வருத்தத்தால் கண்ணீர் விட்டேன்!

அங்குவந்த நாரதனும், அண்ணலவன் முகம் பார்த்து,
'பெற்றவரைக் கொன்றுபோட்டு, கன்னியை நீர் கவருவதும்
முறையல்ல' எனச் சொல்ல, 'என் மனையாட்டி பெருமையினை
உலகறியச் செய்திடவே, யாமிங்கு இது செய்தோம்! அஞ்சவேண்டா!' எனவுரைத்து,

'நீயே அவர்களை எழுப்பிடுக!' எனச் சொல்ல,
'எழுந்திடப்பா என்னப்பா! என்னை நீயும் மன்னியப்பா!'
என நானும் சொல்லுகையில், எல்லாரும் உயிர் பெற்றார்!


'நம்பிராஜன் கூற்று':

உறக்கத்தில் எழுந்தாற்போல் விழித்தங்கு காணுகையில்,
மலைக்காட்டுத் தெய்வமகன் குமரவேளைக் கைதொழுதேன்!

மணவாளன் இவனென்றே மனதுக்குள் அறிந்ததுமே,
மதிமயங்கி யான் செய்த பிழையெல்லாம் புரிந்திடவே
'மன்னித்தருள்க!'வென முருகனவன் அடிபணிந்து,
'வேடர்மகள் உமக்கெனவே பிறந்திட்ட தெய்வமகள்!

மணமுடிக்க நும்மவர்க்கு முழுதான உரிமை இருக்க,
கள்ளன்போல் கவர்ந்திங்கு சென்றதுவும் எமக்கிழுக்கு!
குலப்பெருமை குறைந்திடாது இப்போதே எம்மகளை
எமக்களித்து அருளிடுக! எம்மோடு வந்திருந்து
முறையாக எம்மகளை எம்மூரில் மணந்திடுக!'

எனச் சொல்லி வேண்டிநின்றேன்!
அழகனவன் 'அப்படியே ஆகுக!' என்றான்!
அனைவருமே மகிழ்ந்திருந்தார்!

எம்மூரை அடைந்தவுடன், அனைவரையும் ஒருக்கூட்டி,
அழகான பந்தலிட்டு, ஆனையெல்லாம் முழங்கிடவே
என்மகளை திருக்குமரன் கைகளிலே ஒப்படைக்க,
இனிதாகத் திருமணத்தை நாரதரும் நடத்திவைத்தார்!



வானினின்று மலர்மாரி தேவரெல்லாம் பூச்சொரிய,
வான்மேகம் குளிர்ந்திருந்து மென்தூறல் தெளித்திருக்க,
சந்தனத்தின் மணமங்கு மலைக்காடு தாங்கிநிற்க,
தென்றலது
அதையெடுத்துப் பாங்காகக் கொண்டுவர,
தீ
வளர்த்து மந்திரங்கள் நாரதரும் நவின்றிருக்க,
ஐம்பூத சாட்சி
யாக வடிவேலன் வள்ளிக்குறத்தியின்
வலதுகையைப் பற்றிக் கொண்டான்!

'மனவேடன்':

அங்கிருந்து புறப்பட்டு, அருந்துணைவி கூடவர,
தணிகைமலை சென்றடைந்து தெய்வானை முன் சென்றேன்.

அமிர்தவல்லி, சுந்தரவல்லி எனத் திருமாலின் பிறப்பிரண்டும்,
பலகாலம் தவமிருந்து,இருவேறு இடம் வளர்ந்து,
கூடிவந்த நேரமதில் குமரனெனைத் தானடைந்த மகிழ்வினிலே,

இருவருமே அன்புகாட்டும் விதமாக ஆரத் தழுவிக்கொண்டார்!

ஞானமெனும் ஒரு சக்தி இடப்புறத்தில் தெய்வானை!
இச்சையெனும் ஒருசக்தி வலப்புறத்தில் வள்ளியென,
அழகுமயில் மீதமர்ந்து தனிவேலைக் கையிலேந்தி
அண்டிவரும் அடியவர்க்கு அருள் வழங்கி வருகின்றோம்!...............

மனவேடன் சொல்லி முடித்தான்! மகிழ்ச்சி பொங்க அருள் செய்தான்! தெய்வமகள், வனவல்லி இருவருமே மனமகிழ்வுடன் உடனிருந்தார்!

கூடிநின்ற அனைவருமே குமரவேளை வாழ்த்தி நின்றார்!

அருளிடும் கந்தனின் கதையிதுவே
அதையே சிறியேன் சொல்லிவந்தேன்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருளி
அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்

கந்தனின் கருணைப் பெருவெள்ளம்
தடையின்றி அனைவர்க்கும் கிட்டிடுமே
[காலையில்]

கதையினைப் படித்தவர் மிகவாழி!
கேட்டவர் அனைவரும் தான் வாழி!
அன்பினை நாளும் யாம் வளர்த்து
நல்லறம் பெருகிட வேண்டிடுவோம்!

கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கார்த்திகை மைந்தா! கருணை செய்வாய்!!

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் நிறைவு செய்தேன்!

முருகனருள் முன்னிற்கும்!!
வேலும் மயிலும் துணை!
கந்தன் கருணை வெல்க!
******************** சுபம் *********************


எங்கள் நண்பர் திரு. ராமச்சந்திரன் [சித்ரம்] தனது ஒரு கவிதையை இந்த சஷ்டி நன்நாளில் திருமுருகனுக்கு அர்ப்பணிக்க வேண்டி அனுப்பியதை இங்கு பதிகிறேன்.

"கரை கண்ட முருகன்!"

கண்ணான முருகனைக் காணவா
கரைகண்ட முருகனைத் தேடவா
திகட்டாத நின் அருளை வேண்டவா
தினை மா மருகனைப் பாடவா

ஆறு குன்று கண்ட ஆறுமுகா
அசுரர் குலம் களைத்த வேல்வீரா
சங்கடங்கள் தீர்க்கவல்ல சரவணபவா
சஷ்டியில் வந்தெனக்கு அருள்வாயா!!

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -3"

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -3
"மனவேடன் காதல்"


'வனவள்ளி கூற்று':

'ஆபத்துக்குப் பாவமில்லை! விருந்தினரை உபசரித்தல் வேட்டுவரின் பண்பாகும்!' எனச்சொல்லி எனைவளர்த்த என் தாயின் சொல் நினைந்து,
பக்கத்தில் அமர்ந்தபடி பட்டுக் கையெடுத்து பக்குவமாய்த் தைலம் தடவி பாங்காகப் பிடித்துவிட்டேன்!

'இதமாக இருக்குதடி பெண்ணே! இன்னும் கொஞ்சம் மேலமுக்கு!' என்றவரைப் பொய்க்கோபத்துடன் பார்த்துவிட்டு,
'போனால் போகிறது! பாட்டைக்குச் செய்ததென எண்ணிக்கொள்வோம்!' என நினைத்து இன்னும் கொஞ்சம் பலமாக, இதமாகக் கால் பிடித்தேன்!


'மனவேடன் கூற்று':

மனக்கள்ளி குறவள்ளி மெல்லிய தன் கையெடுத்து, இதமாகப் பிடித்துவிட என்னையே நான் மறந்துபோனேன்!

'தினையருந்தும் நேரமாச்சு! எழுந்திருங்க பாட்டையா!' என்றவளின் குரல்கேட்டு சட்டென்று எழுந்திருந்தேன்.
வட்டிலிலே தினையிட்டு வட்டமாக அதைக் குழித்து, நடுவினிலே தேன் விட்டு, சிந்தாமல் சிதறாமல் மாவோடு கலக்கின்ற மலர்க்கரத்தைப் பார்த்ததுமே மையல் கொண்டேன்!

குழைத்திட்ட தினைமாவை உருண்டையாக உருட்டியவள் என்கையில் வைத்திடவே ஆவலுடன் நான்விழுங்க.........???
தொண்டையிலே சிக்கியது உள்ளேயும் செல்லாமல், வெளியினிலும் வாராமல் இடையினிலே பந்தாக கதவடைத்து நின்றிடவே,
விக்கலொன்று வெளிக்கிட்டு மேல்மூச்சை அடைத்திருக்க, கண்கள் செருகியதால் கைகாட்டி ஜாடையாக தண்ணீர்! தண்ணீர்! எனச் சைகைசெய்தேன்!

பட்டுக்கையெடுத்து பைங்கிளியாள் குறத்திமகள் என் தலையில் தட்டிவிட்டு நீரெடுக்கச் சென்றாள்.
சென்றிட்ட வேகத்தில் விரைவாகத் திரும்பியவள் 'நீரெல்லாம் என்ன செய்தீர் நீர்? ஒரு சொட்டும் காணவில்லையே!' எனப் பதறினாள்.

'மலையருவி உண்டிங்கு பக்கத்தில்! சுனையொன்று அதனடியில்! சுவையான நீருண்டு! நீருண்டு தணிந்திடவே! சென்றுவாரும் சீக்கிரமாய்!' என அல்லிமகள் படபடத்தாள்.

'நீயும் கூட வந்திட்டால் சுகமாக இருக்குமே!' என நான் சொன்னதுமே,
'காட்டானை அலையுமிடம்! காரிகை நான் வரமாட்டேன்! நீரே சென்றுவருக!' என்றவளும் பகர்ந்திருந்தாள்!

'வழிதெரியா இடத்துக்கு வயதான கிழவனென்னைத் தனியாக அனுப்புதலும் முறையல்ல! ஆனை ஓட்டும் மந்திரமும் இங்கெனக்குத் தெரியுமடி! பயமின்றி என்னோடு நீதுணையாய் வந்துவிடு!' என்றவுடன்,
அரைமனதாய்ச் சம்மதித்து, என்கையைப் பற்றியவள் எனையிட்டுச் சென்றிட்டாள்!
தணிகைமலைத் தாகமின்னும் தணியாத யானுமவள் தளிர்க்கரத்தைப் பற்றியே மலையருவிப் பக்கலில் சென்றோம்.
இதமான குளிர்த்தென்றல் மிதமாக வீசிவர, மலையருவி நீர் தெளித்து திவலைகளும் முகத்தில்பட,
கன்னிமகள் பனிமலர்ப்பூம் பாவையென மிளிர்ந்திருக்க, பேரழகைப் பருகியபடி நீரமுதை நான் பருகினேன்!

'வனவள்ளி கூற்று':

தாகம் தணிந்தவுடன் தணிகைமலை வேலவனின் திருப்புகழைக் கேட்டிடவே ஆவலுடன் அங்கமர்ந்தோம்.
குரலெடுத்து கணீரென குமரனவன் திருப்புகழைக் காதார நான் கேட்க சுதியோடு அவர் பாட,
எனை மறந்து கண்மூடி நானிருந்த வேளையினில், கரமொன்று சூடாக என்மீது பட்டிடவே திடுக்கிட்டுக் கண்விழித்தேன்!

முதியவரின் கரமொன்றென் வளைக்கரத்தைப் பற்றிநிற்க, வந்திட்ட கோபத்தில் வெடுக்கென்று உதறிவிட்டு சட்டென்று யானெழுந்தேன்!

தள்ளிவிட்ட வேகத்தில் தண்ணீரில் அவர் விழுந்தார்! காப்பாற்றிட வேண்டியெனைக் கரங்கூப்பி முறையிட்டார்!
கைபிடித்து வெளியெடுத்து கரையினிலே அமர்த்திவிட்டு குடிசை நோக்கி நான் விரைந்தேன்!
'அண்ணா வரணும்!' எனவொரு குரலும் பின்னாலே ஒலித்திடவே என்னவென பார்க்குமொரு ஆவலினால் முகம் திருப்ப,
காட்டானையொன்று துதிக்கையை வீசிவந்து காதுமடல் படபடக்க எனைநோக்கி ஓடிவர கன்னி நான் படபடத்தேன்!!!!!!

ஒற்றையானை ஓடிவந்தால் ஓடிச்சென்று தப்பிக்கும் உபாயம் சொல்லித்தந்த உணர்வங்கு ஓங்கிவர,
வழிமறைத்து நின்றிருக்கும் ஆனைதாண்டிச் செல்லுதலும் இயலாதே எனவறிந்து, 'காத்திடுக! காத்திடுக' எனவவரைக் கூப்பிட்டேன்!

'ஆனை கண்டு பயம் வேண்டா! விரட்டுகின்ற வழி தெரியும்! ஆனாலும் அதற்கு முன்னால்
நீயெனக்கு சத்தியமாய் ஒருவார்த்தை சொல்லவேண்டும்!'
என்றவரின் சொல்கேட்டு எரிச்சலும் கோபமும் இணைந்தங்கே என்னுள் பிறக்க, 'சத்தியம் செய்வதற்கு நேரத்தைப் பார்த்தீரே!
சீக்கிரமாய் ஆனையதை விரட்டுதற்கு வழி பாரும்! ' என்றிட்ட என் கூவல் காதுகளில் விழாததுபோல், கையிரண்டும் மார்மீது குறுக்காகக் கட்டியபடி,

'சீக்கிரமாய்ச் சத்தியம் செய்தால்... "நானுன்னை மணப்பேன்".... எனச் சத்தியம் செய்திட்டால் ஆனையிங்கு சென்றுவிடும்! சீக்கிரமாய்ச் சொல்லிவிடு' என்றார் பாட்டையா!
ஆனைபயம் மனக்கதவை ஆழமாகப் பதிந்துவர, 'அப்படியே செய்கின்றேன்! யானும்மை மணப்பதற்கு சத்தியமும் செய்கின்றேன்' என்றதுமே,
'அண்ணா! செல்!' எனவந்த முதியவரும் ஒரு சொல்லைச் சொன்னதுமே, மந்திரத்தால் கட்டுண்டதுபோல ஆனை விலகிச் சென்றதங்கே!


'மனவேடன் கூற்று':

ஆனையது சென்றதுமே அல்லிமகள் எனைவிட்டு தழுவிநின்ற தளிர்க்கரத்தைச் சட்டென்று விலக்கிவிட்டு,
எட்டிநின்று எனைப்பார்த்துக் கைகொட்டிக் கலகலவெனவே சிரித்தபடி, 'ஏய்ச்சுப்புட்டேனே தாத்தா! ஏய்ச்சுப்புட்டேனே!' என்றாள்!

'யானும்மைக் கைபிடிப்பேனெனக் கனவினிலும் எண்ணவேண்டா! ஆனைபயத்தில் சொன்ன சொல்லும் ஆனையோட போயே போச்சு!' என்றவளைப் பார்த்தபடி,
'அண்ணா! வரணும்!' என மீண்டும் யான் சொல்ல, ஆனையங்கு வந்திடவே அழகுமகள் என் தோளில் அல்லியென துவண்டு வீழ்ந்தாள்!

'அறியாமல் சிறுபிள்ளை யான் செய்த பிழை பொறுத்து ஆனையதை விரட்டிடுக! சொன்னபடி கேட்டிடுவேன்! மணந்திடவே சம்மதிப்பேன்'
என்றவளின் சொல்கேட்டு, 'அண்ணா! செல்!' என்றதுமே, ஏளனமாய் எனைப் பார்த்து ஆனையங்கு அகன்றதுவே!

'என்னவொரு மந்திரத்தைச் சொல்லியிங்கு செய்தீரோ இந்த மாயம்! எத்தனையோ அதிசயங்கள் நீரிங்கு செய்கின்றீர்!
எனக்கதனைச் சொல்லிடுவீர்' என்றவளின் சொல்லழகில் மெய்ம்மறந்து யானுமங்கு குறவள்ளி காதினிலே மந்திரத்தைச் சொல்லிநின்றேன்!

வள்ளிக்கண்ணாள் தள்ளி நின்றாள்! இரக்கமுடன் எனைப் பார்த்தாள்! 'காடழைக்கும் நேரத்தில் காதலியா உமக்கு வேண்டும்?
காதவழி சென்றுவிடும் காரியத்தை யான் செய்வேன்!' எனச் சொல்லிச் சிரித்தபடி,
'அண்ணா! வரணும்!' என ஓங்கிக் குரல் விடுத்தாள்!

ஓடிவந்த ஆனையங்கு உத்தமியாள் அருகடைந்து "என்ன?"வெனக் கேட்பதுபோல் ஏறிட்டு அவளைப் பார்க்க,
'வயதான இவர் செய்யும் குறும்பிங்கு தாங்கவில்லை! வயற்காட்டைத் தாண்டியொரு வழிமீதிவரை விட்டிடுக!' என வேண்டி நின்றாள்!

வரம்தந்த சாமியையே புறந்தள்ளும் பொல்லாத இந்தப்பெண் பொய்யள் மட்டும் அல்லள், கள்ளியும் கூடத்தான் என மகிழ்ந்து[!] அண்ணனவன் முகம் பார்த்தேன்!

'யானிங்கு செய்வதற்கு இனிமேலும் ஏதுமில்லை! நீயாகப் போகிறாயா? நான் வந்து முட்டிடவோ!' என்பதுபோல் எனைப்பார்த்த அண்ணனவன் குறிப்பறிந்து, கால்தெறிக்க ஓடினேன்!
காதல்மொழிக் குறத்தியவள் கைகொட்டிச் சிரிக்கின்ற வளையோசைச் சத்தமங்கு பின்னாலே கேட்டுவர,

காதவழி சென்றபின்னர் காலார தரையமர்ந்து அடுத்தென்ன செய்வதென அமைதியாகச் சிந்தித்தேன்!

வேறென்ன வழி இனிமேல்?....
********************************
'வனவள்ளி கூற்று':

நடந்ததெல்லாம் நானெண்ணி வாய்விட்டுச் சிரித்தபின்னும், வனவேடன் திருமுகமே மனக்கண்ணில் மிளிர்கிறதே!

மாயமென்ன செய்துவிட்டான்! ஏனவனை மறக்கவில்லை! ஏனிந்தக் குழப்பமென சிந்தித்து அமர்ந்திருக்க,
கையினிலே கூடையுடன், மறுகையில் கோலேந்தி, வாய்மணக்கும் தாம்பூலம் செந்தூரமாய்ச் சிவந்திருக்க
மலைகுறத்தி எனைநோக்கி, குறிசொல்லுமொரு மலைக்குறத்தி ஒயிலாக நடந்து வந்து, 'மனம்விரும்பும் மணவாளன் மடிதேடி வரப்போகும் குறியொண்ணு சொல்லவந்தேன்! இடக்கையைக் காட்டென்றாள்'!
'குறி சொல்லியின் கூற்று':

காடுமலை வனமெல்லாம் எங்க பூமி அம்மே!
கந்தனெங்க குலதெய்வம் காத்திடுவான் அம்மே!
கோலெடுத்து கைபாத்து குறிசொல்லுவேன் அம்மே!
சொன்னகுறி தப்பாது பொய்யொண்ணும் கிடையாது அம்மே!

பூமியிலே பொறந்தாலும் நீ தேவமக அம்மே!
சாமியின்னு கும்பிடலாம் தங்கக்கையி அம்மே!
மலைக்குமரன் மனசுக்குள்ள குடியிருக்கான் அம்மே!
வலைவீசி தேடுறே நீ வந்திடுவான் அம்மே!

இதுக்கு முன்னே நீயவனைப் பாத்திருக்கே அம்மே!
வேசம்கட்டி வந்திருந்தான் புரியலியா அம்மே!
வந்தவனை விரட்டிப்புட்டே அறியாத பொண்ணே!
மறுபடியும் வந்திருவான் சத்தியமிது அம்மே!

கைப்புடிச்சு கூப்புடுவான் மறுக்காதே அம்மே!
தைமாசம் கண்ணாலம் குறிசொல்லுது அம்மே!
வந்தாரை வாளவைக்கும் சாமியவன் அம்மே!
சொந்தமாக்கித் தூக்கிருவான் தங்கமே அவன் உன்னை!

வாக்குசொன்னா தப்பாது வரங்கொடுத்தா பொய்க்காது
நாவெடுத்து நான் சொல்லும் குறியிங்கு அம்மே!
கஸ்டமெல்லாம் தீருமடி களுத்துமாலை ஏறுமடி!
இஸ்டம்போல எல்லாமே சுகமாகும் அம்மே!


'வனவள்ளி கூற்று':

குறிசொன்ன குறத்தியவள் சொன்ன சொல்லில் மனம்மகிழ்ந்து, கழுத்துமாலை ஒன்றெடுத்து கைகளிலே கொடுத்துவிட்டேன்!
எனை வாழ்த்திப் பாடிவிட்டு அவள் சென்ற பின்னாலே, நடந்ததெல்லாம் நினைத்திருந்து மனதுக்குள் அசைபோட்டேன்!

'வந்திருந்தான்' எனச் சொன்ன சொல்லங்கு வாளாக மனக்கதவை அறுத்தங்கு வாட்டிடவே, 'அறியாத சிறுமகளாய் அநியாயக் கோபம் கொண்டு, ஆசையுடன் வந்தவரை ஏசிவிட்டுத் துரத்தினேனே!
மீண்டுமெனைக் கண்டிடவே வருவானோ வடிவேலன்?' என்றெண்ணிக் கலங்கையிலே, வந்தானே வளைச்செட்டி!

'கைப்பிடிச்சு வளையடுக்க, கன்னிக்கெல்லாம் மணமாகும்! ராசியான வளைக்காரன்! சோசியமும் சொல்லிருவேன்!'
மான்போல நீயிருக்க மச்சானும் தேடிவர கைமுழுக்க வளையடுக்கக் கையைக் கொஞ்சம் காட்டு தாயி!
'
என்று சொல்லி கட்டிவைத்த மூட்டையினைக் கவனமாகப் பிரித்தபடி, கட்டாந்தரையினிலே அவனமர்ந்தான்!
உரிமையொடு வலக்கையை ஆதரவாய்ப் பற்றியவன், உள்ளங்கை ரேகை கண்டு உதட்டினிலே முறுவலித்தான்!

'கல்யாண ரேகையொண்ணு கச்சிதமா ஓடுதிங்கு! கட்டப்போகும் மணவாளன் கிட்டத்தில் தானிருக்கான்!
கைநிறைய வளையடுக்கி கன்னி நீ வீடு போனா, கட்டாயம் அவன் வந்து கலியாணம் கட்டிடுவான்!'

என்றங்கே சொல்லியபடி கை முழுதும் வளையலிட்டான்! வளைக்காரன் கைபட்டு வல்லிக்கொடி நான் சிலிர்த்தேன்!
'இந்தமுறை ஏமாற நானிங்கு விடமாட்டேன்! வந்திருக்கும் வளைக்காரர் ஆருன்னு சொல்லிடுங்க!'

என்று சொன்ன மறுகணமே வளையல்செட்டி தான் மறைந்தான்! வடிவேலன் எதிரில் நின்றான்! வஞ்சிநான் மெய்சிலிர்த்தேன் !

'திருமாலின் மகளாக எமக்காகப் பிறந்திட்ட அழகான கன்னியுன்னை உரிய நேரம் வந்திருந்து முறையாக மணம் முடிப்போம் எனச் சொல்லி அனுப்பிவைத்தோம்!
சொல்லெடுத்துக் கொடுக்கின்ற சுந்தரவல்லி நீயும், பூவுலகில் வள்ளியென நம்பிக்கு மகளாகப் பிறந்திருந்தாய்!
நினைவேண்டி யாமிங்கு வனவேடம் தரித்திருந்து நின்மேனி எழிலெல்லாம் கண்ணாரக் கண்டு களித்தோம்!

'வனவேடன், வேங்கைமரம், வயோதிகனும் யாமேதான்! வஞ்சியுன்னைக் கண்டிடவே பலவேடம் யாம் தரித்தோம்!
வேழமுகன் என்னண்ணன் கரியாகி எதிர் வந்தார்! கன்னியுனைச் சீக்கிரமே கலியாணம் செய்திடுவோம்!
இச்சைக்கு அதிபதியாய் என்றுமுன்னைத் தொழுதிருந்து இச்சகத்தில் இணையில்லாப் புகழோடு யாமிருப்போம்!
கவலையின்றி இல்லம் சென்று காத்திருப்பாய் எமக்காக!'

எனச் சொல்லி மறைந்துவிட்டான்! கன்னி நான் மூர்ச்சையானேன்!

இனி என்ன?

***********************
[நாளை வரும்!]


"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 2"

"கந்தன் கருணை" [இரண்டாம் பாகம்] - 2
"மனவேடன் காதல்" - 2
'மனவேடன் கூற்று'

நலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்லை! நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, " ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ! காடுமலை வனமெல்லாம் சொந்தமிங்கு எங்களுக்கு!

இம்மென்றால் ஆயிரம் பேர் இப்போதே வந்திருந்து, 'ஏதுமறியாப் பெண்ணிவளை ஏதுசெய்ய எண்ணினாயடா?' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்!" எனச் சொல்லிச் சிடுசிடுத்தாள்!

பசியங்கு வாட்டுகின்ற வேளையிலும் பத்தினியாள் பனிமுகத்தில் படர்ந்துவிட்ட செம்மையதைக் கண்டு யானும் மனத்துள்ளே மகிழ்ந்திடினும், கருமுகத்தில் படர்ந்திட்ட செம்மையது காட்டுகின்ற வண்ணக் கலவையதை மேலும் சற்றுக் கண்டிடவே எட்டியவள் கைபிடித்தேன்!

"யாருமில்லா வேளையிலே மரத்தடியில் நீ கிடக்க, மேனியெலாம் சிராய்த்திடவே செங்குருதி வெளிக்காட்ட கருந்தோலில் அரும்புகின்ற காயத்தைக் குறைத்திடவே மருந்தொன்று வைத்திருக்கேன்! மாதரசி மடி வாடி! "எனச்சொல்லி ஆதரவாய் அவள் கையைப் பற்றியதும் அவள் சினந்தாள்!

வெடுக்கென்று தன்கையை உதறியவள் எனைப் பார்த்து, ' காட்டினிலே பிறந்தவள் நான்! காயமெனக்குப் புதிதில்லை! என் குருதி காணுவதும் இதுவல்ல முதல் தடவை! உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள்! "எல்லாரும் வாங்க" என்றாள்!

தூரத்தே வேட்டுவரும் ஓடிவரும் ஒலிகேட்டு, கண்நிறைந்த காதலியைக் கண்களினால் பார்த்தபடி, பற்றிநின்ற கைகளையும் விட்டிடாது அப்படியே மரமாகி நின்றிருந்தேன்.. வேங்கை மரமாகி நின்றிருந்தேன்.... செவ்வல்லிக் கைகளையும் கிளைகளினால் வளைத்தபடி!

'வனவள்ளி இசைக்கிறாள்!'

நானிட்ட ஓலமதைக் கேட்டுவந்த சோதரரும் ஆதரவாய் எனைநோக்கி 'நடந்ததென்ன கூறு' என்றார்!
'கானகத்தே தனியளாக நானிருந்த வேளையினில் வனவேடன் வேடம்கொண்டு வஞ்சகன் ஒருவன் வந்தென்னை வம்புகள் செய்தான்

நானழைத்த குரல்கேட்டு நீவிரிங்கே வருகின்ற ஒலிகேட்ட வனவேடன் மரமாகி எனை வளைத்தான் பாரண்ணா!' என்றேன்!
மரக்கிளைகள் எனைவளைக்க நானிருந்த கோலம் கண்ட நண்பான சோதரரும் தமக்குள்ளே பார்த்தபடி வாய்விட்டுச் சிரிக்கலானார்!

'அக்கரையில் யாமிருக்க எமைப்பார்க்க நீவேண்டி அக்கரையாய்ச் சொன்னதிந்தக் கதையினை நாம் நம்பமாட்டோம்
ஆளிங்கு மரமாதல் அவனியிலே கண்டதில்லை! அடுக்கடுக்காய் பொய் சொல்லும் துடுக்கான பெண்ணரசி!

யாமிருக்கும் இவ்வனத்தில் வேறொருஆள் வருவதுவும் இயலாத செயலென்றே இன்னமும் நீ உணர்ந்திலையோ
வேடிக்கை செய்யவிது நேரமல்ல! வேலை மிகவிருக்கு!' என்றபடி அன்புடனே எனைத் தழுவி விடைபெற்றுச் சென்றிட்டார்!

பொய்யுரைத்தேன் எனச் சொன்ன சொல்லதுவைத் தாங்கிடாமல் மீண்டுமெனைக் கிள்ளிப் பார்த்தேன்.
உணர்வின்னும் அப்படியே உள்ளபடி தானிருக்கு! கனவெதுவும் காணவில்லை! கண்டதுவும் கனவில்லை.

மரமாகிப் போனவனின் மதிமுகமும் நினைவில் வர மறைக்கவொண்ணா நாணத்துடன் மரக்கிளையைத் தடவிவிட்டேன்!
மரம் அங்கு மறைந்து போச்சு! மனவேடன் மீண்டும் வந்தான்! வில்லொன்றைத் தாங்கியவன் முகவடிவைப் பார்த்தவுடன் நாணத்தால் மிக வேர்த்தேன்!

பொய்யளென எனைச் சுட்டிய கள்ளனிவன் எனும் நினைப்பு மனத்தினிலே பொங்கிவர மறுபடியும் கோபமங்கு முகத்தினிலே துளிர் விட்டது!
'ஆரடா நீ? ஏனிப்படிச் செய்திட்டாய்? அவப்பெயரை எனக்களித்து நீ மறைந்து செல்லலிங்கு மறவர்க்கு அழகாமோ?

மறுபடியும் நானவரை அழைத்திட்டால் என் செய்வாய்? எனச் சிடுசிடுத்து கோபவிழி விழித்திட்டேன்!
கலகலவென அவன் சிரித்த சிரிப்பெந்தன் கோபத்தை எரிகின்ற நெருப்பினிலே விறகள்ளிப் போட்டாற்போல் மிகுதூட்டியது!

'செய்வதையும் செய்துவிட்டு சிரிப்பென்ன சிரிப்பு! நம்பியாளும் காட்டினிலே எதனை நம்பி நீயிங்கு வந்தாய்?
சீக்கிரத்தில் சொல்லாவிடின் பேராபத்து விளையுமுனக்கு' என்றவனைப் பார்த்தபடி கடுமையாக முகம் மாற்றிச் சீறினேன்!

'கோபத்திலும் கூட நீ இன்னமும் அழகாய்த்தானிருக்கிறாய்! கருமைநிற முகவடிவில் செம்மை படர்வதும் சிறப்பாய்த்தானிருக்கிறது' என்றவன் சொன்னதுமே நாணமும் கூடச் சேர்ந்து இன்னும் செம்மையானேன்!
கண்களைச் சற்று தாழ்த்தியபடி, முகத்தில் சற்று அச்சம் படர 'சோதரர்மார் எனைத்தேடி வருகின்ற வேளையிது! சீக்கிரத்தில் அகன்றுவிடு' என்றேன்!

'மனவேடன் கூற்று':

சினந்தவளின் முகவடிவில் நான் மயங்கிப் போனேன்! சிந்தையெலாம் சுழன்றிடவே அன்புடன் அவளை நோக்கி,

'தேடிவந்த மானொன்று திசை தவறி இவ்வழி வந்தது!
காயாத கானகத்திருக்கும் கண்கவர் மான் அது!
இங்குமங்கும் சென்று மேயாத மான் அது!
கண்டவர் எல்லாம் வியக்கும் பேரெழில் மான் அது!
அண்டவந்து எவருமே கைபிடிக்க இயலாப் புள்ளி மான் அது!
கைக்கெட்டும் அருகினில் இருப்பதுபோல் போக்குக் காட்டி, கிட்டவரின் கிட்டாத மான் அது! புள்ளிமானொன்றை கண்டனையோ, கன்னியிளமானே!' என்றேன் ஓரக்கண்ணால் அவளை அளந்தபடி!

'மானொன்றும் காணவில்லை; மயிலும் நான் காணவில்லை! கன்னியிளமானென்று எனை நீ சீண்டுவதும் முறையில்லை!
தேடிவந்த புள்ளிமானைத் தேடி நீ சென்றுவிட்டால் எல்லாமும் நலமாகும்; நின்னுயிரும் பிழைத்துவிடும்' என்றாள் அந்த மானும், மருண்ட தன் கண்களை இங்குமங்குமாய் ஓடவிட்டபடி!

மனதுக்கினியாளுடன் இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி, 'மானுனக்குப் பிடித்திருந்தால் வேணுமென்று சொல்லிவிடு!
அதைவிடுத்து மானில்லை இங்கு என பொய்யுரைத்தல் சரியன்று! மானொன்று இங்குவந்த அடையாளம் நான் கண்டேன்!

சற்று முன்னர் நின் அண்ணன்மார் பொய்யள் என நினைப் பழித்த சேதியெல்லாம் கேட்டிருந்தேன்! என்னிடமும் அதே கள்ளம் சொல்லாதே பெண்ணே' என்றேன் முறுவலுடன்!

கோபமின்னும் அதிகமாக, செவ்விதழ்கள் துடிதுடிக்க, ஆத்திரத்தில் மார்பின்னும் படபடக்க அல்லிமகள் கவண் கையெடுத்தாள்!

உரிமையுள்ள சோதரர் எனைச் சொன்னால் பொறுத்துக்கொள்வேன்! முன்பின்னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு? ஆருமில்லா ஆளென்று நினைத்தனையோ? அல்லது வெறுங்கையளென எண்ணினாயோ!

கையிலுண்டு கவண்கல்லு! விட்டெறிந்தால் முகம்தெறிக்கும்! நில்லாதே என் முன்னே! தேடிவந்த புள்ளிமானை நீயும் தேடிப்போ' எனப் படபடத்தாள்!

'கண்மயங்கி விழுந்தவளைக் காப்பாற்ற வந்தவர்க்கு நீ கொடுக்கும் கவண்கல் மரியாதை அழகாய்த்தான் இருக்கிறது!

கோபம் கொள்ளாதே மடமானே! செல்லுகிறேன் இப்போதே' எனச் சொல்லி, கருணை காட்டி மனதிலிடம் பெற்றிடலாம் எனுமெண்ணம் நிறைவேறா ஏக்கத்துடன் அங்கிருந்து அகன்றேன்!


மனவேடன் இனி என் செய்வான்?
*********************************
"மனவேடன் கூற்று":

'என்ன பிழை செய்துவிட்டோம்? ஏனிப்படி எண்ணியதும் நிகழவில்லை?' எனும் நினைப்பு மனதிலோட, அண்ணனவன் நினைவில் வந்தான்! நினைத்தவுடன் முன்னும் வந்தான்!

'கன்னி பிடிக்கும் அவசரத்தில் சொல்லாமல் சென்றிட்டாய்! கன்னி கிடைக்கவில்லை! கவண்கல்தான் பரிசுனக்கு!' எனச் சொல்லிச் சிரித்தவனின் காலடியில் நான் விழுந்தேன்!

'கைத்தலத்தில் கனிவைத்து கருணையொடு காக்கின்ற தெய்வமே! நினை மறந்து சென்றதுவும் என் பிழையே! மன்னித்து எனக்கருள வேண்டுகிறேன்!
நின்கையில் கனியிருப்பதுபோல், என்கையில் கன்னி கிடைத்திட அருள் செய்யப்பா!' எனத் தொழுதேன்! 'அப்படியே ஆகுக!' என்றான் அண்ணல்!

'அழைக்கின்ற நேரத்தில் அண்ணா நீ வரவேணும்' என்னுமெந்தன் வேண்டலுக்கு 'அப்படியே அழைத்திடுவாய்! வந்திடுவேன் தப்பாமல்' என்றண்ணன் ஆசிகூறி மறைந்தான்!

'வேடனாக வந்ததிலே கை பிடித்த சுகமன்றி, வேறு பலனொண்ணும் காணவில்லை! மீண்டுமந்த வேடமிட்டு கல்லடியைப் பெறவேண்டாம்!
தனியாளாய்த் தனித்திருக்கும் கன்னியிவள் கைபிடிக்க, அவளருகில் செல்லவேண்டும்! அடுத்ததெல்லாம் அண்ணன் கையில்!

நரைதிரையும், நடுங்குகின்ற கைகளுமாய் முதியவனாய்ச் சென்றிட்டால் முத்தழகி கருணை கொள்வாள்!' எனவெண்ணி வேடம் கொண்டேன் வயோதிகனாக!

"வனவள்ளி கூற்று":

'கவண்வீசிக் கவண்வீசி கைகளுமே வலிக்கிறது! காத்திருந்த சோதரரும் காட்டுவழி சென்றுவிட்டார்!
கூடவந்த தோழியரும் கண்ணினின்று மறைந்துவிட்டார்! தனியளாய் வாடுதலே தலைவிதியாய்ப் போனதிங்கு!

ஆறவமர்ந்து கதைத்திடவோ ஆதரவாய் ஆளில்லை! ஏது செய்வேன்? என்னழகா! நின்னையுமே காணவில்லை!
பரண்மேலே நின்றிட்டு கால்களுமே நோகிறது! கீழிறங்கி அமர்ந்திடுவோம்' என்றெண்ணித் தரை வந்தேன்!

'ஈதென்ன! ஏதோவோர் ஆளரவம் கேட்கிறதே! அழகனவன் முருகவேளின் அருட்பெருமை பாடிவரும் குரலோசை கேட்கிறதே!
ஆதரவாய்க் கேட்டிடவே அருகழைத்துப் பார்த்திடுவோம்!' எனவெண்ணி ஆசையுடன், 'ஆரது அங்கே?' எனக் குரல் விடுத்தேன்!

வந்தவொரு உருக்கண்டு வாயெல்லாம் பல்லாச்சு! வயோதிகரைப் பார்த்ததுமே மனசெல்லாம் லேசாச்சு!
தள்ளாடும் வயதினிலே தடியொன்றை ஊன்றியவர் தள்ளாடி வருதல்கண்டு, கைபிடித்துத் தாங்கி நின்றேன்!

'நடுங்குகின்ற கைபிடித்த என்கையும் நடுங்குவதேன்? நரம்பினிலே இதுவென்ன புத்துணர்ச்சி பரவிடுது?
நரைகண்ட தலைமுடியும் தாடியுடன் அலைகிறது! இருந்தாலும் இருகண்ணில் இதுவென்ன பேரொளியாய்?

குரலோசை குழறலாக வந்தாலும் என்மனத்தை ஏனிங்கு இப்படியது பிசைகிறது? என்னவிது மாயம்?' என்றெண்ணிக் கலங்கினேன்!
என்னுணர்வு என்னைவிட்டு எங்கேயோ போவதினை மெல்ல மெல்ல யானுணர்ந்து வந்தவரை வரவேற்றேன்.

'சொந்தவூர் செல்லவெண்ணி வழிதவறிப் போனீரோ? காட்டுவழி வந்ததென்ன? காரணத்தைச் சொல்லிடுக' வெனக் கேட்டேன்.
'காடுமலை சுற்றிவரும் கானகத்துக் கிழவன் யான்! கால்போன போக்கினிலே காததூரம் வந்திருந்தேன்! கால்வலியை மறப்பதற்குக் கந்தன் புகழ் பாடிவந்தேன்'

என்றவரும் சொல்லிடவே, 'காரியங்கள் ஏதுமில்லாக் கிழவரிவர் துணைகொண்டு மாலைவரை ஓட்டிடலாம்' எனக் களித்தேன்!

'வெகுதொலைவு நடந்ததனால் மூச்சிங்கு இளைக்கிறது! வெறும் வயிற்றில் இருப்பதனால் வயிறிங்கு பசிக்கிறது!
புசிப்பதற்கு ஏதுமுண்டோ? பெண்மானே சொல்லிடுவாய்!' என்றவரின் குரல் கேட்டு துணுக்குற்றேன் ஓர் கணம்!

'சென்றவனும் மானென்றான்! வந்தவரும் மானென்றார்! என்னவின்று மான்வேட்டை நாளோ!' எனும் நினைப்பு வந்தவுடன் வேடனவன் திருமுகமும் மனக்கண்ணில் நிழலாட,
'வந்த களைப்பு தீர்ந்திடவே நீரருந்தி நீரும் உணவருந்திச் சென்றிடலாம்! சுவையான தினைமாவும் கலந்துண்ண தேனுமுண்டு!' எனச்சொல்லி முறுவலித்தேன்!

'சுந்தரியாள் நீயெடுத்து கைகளினால் உருட்டியதை என்கையில் வைத்திட்டால் சுகமாகத் தானிருக்கும்'
எனச் சொல்லி எனைப் பார்த்து இளித்திட்ட வயோதிகரின் முகவடிவைப் பார்த்ததுமே, சரியான வம்புக் கிழவரிவர் எனத் தெளிந்தேன்!

'காலலம்பிக் கைகழுவ நீரிங்கு வைத்திருக்கேன்! விரைவாக வந்திங்கு மரத்தடியில் அமர்ந்திடுக!
தினைமாவும் தெளிதேனும் வட்டிலிலே எடுத்தாறேன்' எனச்சொல்லி கலயத்தைக் கையெடுக்க குடிசைக்குள் நான் நுழைந்தேன்!


மனவேடன் [வயோதிகர்] கூற்று:

திரும்பியவள் வருவதற்குள், திரட்டிவைத்த நீரையெல்லாம் குறும்பாகத் தரையினிலே கொட்டிவிட்டு, குறுக்காகக் கால்நீட்டி மரத்தடியில் நான் சாய்ந்தேன்.

'களைப்பதிகம் ஆனதினால், கால்நீட்டிப் படுத்தீரோ! தேனமுது உண்டிடவே சற்று எழுந்து வந்திடுங்க! என்றவளைக் களைப்பாக நான் பார்த்தேன்!

'தொலைதூரம் நடந்ததனால் கால் சற்று குடைகிறது! கன்னிமான் நீ கைதொட்டு சற்றமுக்கி விட்டிருந்தால் கால்வலியும் பறந்தோடும்!
வேற்றாளைத் தொடுவதுவோ என்றஞ்சி மயங்காதே! வயதான கிழவனிவன் கால்தொட்டால் குற்றமில்லை' எனச் சொன்னேன்!


கிழவரின் அடுத்த நாடகம் என்ன?
*****************************

[நாளை வரும்!]

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

சென்ற ஆண்டு கந்தர் சஷ்டியின் போது எழுதிய "கந்தன் கருணை என்னும் இந்தத் தொடர் கவிதையை இதே போலவே தொடருங்க என நண்பர் ரவி சொல்லி இருந்தார்.
ஆனால், ஏதோ ஒரு உந்தலில் வேறுவிதமாக எழுத எண்ணம் வந்தது. அதைத்தான், 'புதுப்பொலிவுடன்' எனச் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சியை இந்த ஆண்டு இங்கு அளிக்கிறேன்.
முருகனருள் முன்னிற்கும்.

முதல் பாகம் - 1
முதல் பாகம் - 2


"மனவேடன் காதல்!"

அழகிய திருத்தணி மலை! அதன் மீது முருகப்பெருமான் வலப்புறம் வள்ளியுடனும், இடப்புறம் தெய்வானையுடனும் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.
அடிபணிந்து தொழுது நின்றேன்.
முருகன் அன்புடன் எனைப் பார்த்து முறுவலித்தான். 'என்ன?' என்பதுபோல் கண்
சிமிட்டினான்.
"சூரனை வதைத்து அன்னை தேவசேனாவை மணந்தது வரை எழுதிவைத்தேன். வள்ளி அம்மையாரை தாங்கள் மணம் செய்த கதையைத்
தங்கள் திருவாக்கினாலே கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றேன் பணிவுடன்!
முருகன் சிரித்தான்!
"அதற்கென்ன! நானும் வள்ளியுமே சொல்கிறோம். கேட்டுக்கொள்!" என்றான்.
"முதலில் நான்தான் சொல்வேன்!" என தெய்வானை அம்மையார் முன்வந்தார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் துள்ளிக் குதித்தேன்!
அவர்கள் சொன்ன கதையை இங்கே பதிகிறேன்.
***********************************************

'மணமகள் கூற்று':

"பரங்குன்றான் பெருங்கருணை!"

கத்திவரும் சேவலது கொத்தவரும் பாம்பையெல்லாம் கொத்திக் கொத்திப் போடுது!
சீறிவரும் வேலதுவும் சீறிவரும் கொடும்பகையை சீறிப்பாய்ஞ்சு சிதைக்குது!
பறந்துவரும் மயிலதுவும் பறந்துவரும் கணைகளையும் பறந்துபறந்து மாய்க்குது!
கூடவரும் பூதப்படை கொடியவராம் அரக்கர்களை கொன்று சாய்த்துக் குவிக்குது!
என்னவனாம் முருகப்பன் கண்ணசைவில் கடிந்துவரும் பகையெல்லாம் பனியாக விலகுது!
மன்னவனாம் கதிர்காமன் மக்களையே காத்திடவே மனமிசைந்து வருகிறான்!
மனத்துள்ளே நிலைகொண்ட மகராசன் மனத்தினிலே மகிழ்ச்சி பொங்கச் செய்கிறான்!
சினமெல்லாம் தணிந்தபின்னே தேவியென்னைக் கைப்பிடித்து எனக்கிங்கே அருள்கிறான்!

'மனவேடன் கூற்று':

சினமெல்லாம் தணிந்திடவே வந்து நின்றேன் தணிகைமலை!
வருகின்ற அடியார்க்கு கேட்டவரம் தந்தபடி நின்றேன் சிலையாகி!
தெய்வயானை துணையிருக்க தமிழமுதம் பொங்கிவர களித்தேன் சிலநாளை!
என்நிலையை, ஏகாந்தம் குலைத்திடவே நாரதனும் வந்தான் எனைநாடி!

'வள்ளிமலை என்னுமொரு காட்டினிலே மலைக்குறத்தி உனையெண்னிப் பாடுகின்றாள்!
கள்ளமிலா உள்ளத்துடன் கன்னியவள் பரண்நின்று கவண்வில்லை வீசுகிறாள்!
கந்தனவன் சொந்தமென வருவானென வேட்டுவச்சி மனம்வெதும்பி வாடுகிறாள்!
உண்ணவில்லை! உறக்கமில்லை! உன்னையெண்ணிக் காடுமலை ஏறியவள் தேடுகிறாள்!

இப்போதே நீசென்று 'எண்ணத்தை மனம் நிறைக்கும்' கன்னியவள் துயர் தீரு!
தப்பாமல் நினக்கெனவே தவமிருக்கும் தனியாளின் தாகத்தைத் தணித்துவிடு!
தணிகைமலை அமர்ந்திருக்கும் நீயெழுந்து இப்போதே தவிக்கின்ற அடியாளைச் சேர்ந்துவிடு!'
எனச்சொன்ன நாரதனைக் கனிவோடு பார்த்திருந்து, கனிமொழியாள் முகம் பார்த்தேன்!

ஏறெடுத்து எனைப்பாரா ஏந்திழையாள் இப்போது நேரெடுத்து எனைப் பார்த்தாள்!
விழிமலரில் காதலுடன் விளக்கவொண்ணா பேரெழிலாள் எனைநோக்கி இது பகர்ந்தாள்!
"எல்லாம் அறிந்திருந்தும் எனைநோக்கிப் பார்க்கின்ற மர்மத்தை என்ன சொல்வேன்!
அங்கே தவமிருக்கும் மங்கைநல்லாள் என்னவளின் தங்கையென அறியாத கள்வனோ நீ!

யாமிருவர் நினைவேண்டி தவமிருந்த அன்றொருநாள் எமக்களித்த வரமின்று மறந்தனையோ!
தட்டாமல் இப்போதே தேவரீர் நீர் சென்று தங்கையினைக் கூட்டிவருக!
ஞானத்தின் வடிவழகாய் நாயகியாள் நானிருக்க, இச்சைக்கு வள்ளியென விதித்தவரே!
மோனத்தை வேலாக்கி ஆணவத்தை மயிலாக்கி அன்பரசு செய்கின்ற மன்னவரே!
' என்றாள்!

தனிவேலைத் தங்கவிட்டு, தங்கமகள் தெய்வானை தன்னிடத்தில் விடைபெற்று எழுந்தேன் நான்!
வனவேடன் வேடமிட்டு வனத்தினிடை செல்லுதலே நலமென்று நினைத்தந்த வேடம்பூண்டேன்!
காதல்மனம் கடிந்தேக, தாபமிங்கு பெருக்கோட தனிவேடனாய்த் தனியாளாய் நடந்தேன்!

காதலனைக் காணாமல் கனிமொழியாள் வருந்துகின்ற காட்சியினிக் காண்போம்!

அங்கே!....
'வனவள்ளி மனநிலை!'

வனவேடன் தலைவனிவன் நம்பிராஜன் என் தகப்பன் காடுநிலம் உழுகையிலே கண்டெடுத்தான் எனையங்கு.

மகளில்லாக் குறைநீங்க மகாதேவன் தந்தானென மகளாக வளர்க்கின்றான் குறையொன்றும் இல்லாமல்.

தினைப்புனத்தைக் காப்பதற்கே கவண்கல்லை கைதந்து பரண்மீதில் நிற்கின்றேன் மனமங்கு செல்லவில்லை.

ஆலோலம் பாடியிங்கு ஆரவாரம் செய்திருந்து நாடிவரும் புள்ளினத்தை நான் விரட்டிப் பாடினாலும்

நான் விரும்பும் மணவாளன் மலைக்குமரன் வாராமல் மனம்தவித்து வாடுகிறேன் கண்ணிரண்டால் தேடுகிறேன்.

மகிழ்ந்தென்னைக் கூட்டிடவே மலையரசன் தானென்று மகராசன் வருவானோ மனமள்ளிப் போவானோ?

தேடியவன் வருகின்ற திசைபார்த்து திசைபார்த்து கண்ணிரண்டும் பூத்ததுதான் கண்டதிங்கு பலனடியோ!

கீழிறங்கி கால்நடந்து காட்டுவழி மலைவழியே காதலனைத் தேடியிங்கு கால்கடுக்க நடக்கின்றேன்.

குத்துகின்ற முள்ளெதுவும் பாதத்தில் உறைக்கவில்லை பத்துகின்ற வெயிலதுவும் பாவியுடல் எரிக்கவில்லை.

கால்தவறி இடறிவீழ்ந்து மலைச்சரிவில் உருளுகின்றேன் கண்மயங்கி நாவறண்டு நினைவொழிந்து சரிகின்றேன்!

'மனவேடன் கூற்று':

'காடுமலை ஏறி, களைச்சு விழுந்தெழும்பி ஆற அமரத் தேடித்திரிந்தடைந்தேன் மரவடி .!

கண்ணை மூடிக் களைப்பின் அலுப்பினிலே அயர்ந்தே போனேன் சில நொடி! எழுந்து பார்த்த பின்னே உணர்ந்தேன்! ஆதரவாய் தடவிக்கொடுக்கும் ஒரு கரம்!
என்னை அணைத்தபடி தன்னுள் புதைத்தபடி அன்பாய் மறுகரம்!
கற்கள் உரசியதால் பாசி வழுக்கியதால் அங்கங்கே தேகத்தில் அடி!
அந்த வலியெல்லாம் தகர்த்து எறிவதற்கோ வந்தது இந்த அன்புப் பிடி?!!
"யாரது" எனக் கேட்க வலுவின்றிக் கொஞ்சம் மெளனித்து இருந்தேன்!

எழுப்பினால் மயக்கம் கலைந்து விலகிடுவாளோ என அஞ்சி மடிவைத்திருந்தேன்!

'வனவள்ளி கூற்று':

பசியின் களைப்பினில் பஞ்சணைத் துயிலினில் கண்ணை மூடிக்கிடந்தேன்!
"துயிலை விட்டெழுந்தால் விட்டுப்போய் விடுமோ இந்த மஞ்சம் என ஏங்கியது எனது நெஞ்சம்!

விழிக்க விருப்பமின்றி கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு கிடந்தேன் சில கணங்கள்!!
"பசியின் களைப்பினிலோ பாவை நீயும் களைத்தே போனாய் என்று
காதருகே வந்து தேனாய் ஒழுகி நின்று கேட்டது அந்தக் குரல்!

கொஞ்சம் விழித்தபடி அந்தக் கைகள் பிடித்தபடி அண்ணாந்து முகம் பார்த்தேன்!
கருணை பொழியும் அந்தக் கண்களினிலே பொங்கும் முகவழகில் வேர்த்தேன்!

'என்ன சொல்வதென்று ஏதும் அறியா வண்ணம் 'சுற்றும் முற்றும் அங்கு பார்த்தேன்!
'தடவிக்கொடுத்த படி தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரவோ?' எனக் கேட்டவுடன் பொங்கும் நீரென கண்ணில் நீர் வார்த்தேன்!

"அன்பை அறியா இந்தப் பேதைஉலகம் என்று எண்ணித்தானே தனியே வாழ்ந்தேன்!
காடே சுகமென்று இங்கு வந்து சேர்ந்தேன்! "அன்பால் அணைக்கின்றாயே!! யாரோ நீயென்று விழிகள் விரியக் கேட்டேன்!! ??


'மனவேடன் கூற்று' :

காடுமலை எனதரசு! நானலையும் மலைக்காடு! நாரியவள் நலிந்தங்கு மரத்தடியில் துயிலுகிறாள்!

மூடிநின்ற கண்களுக்குள் முழுமனதின் வேதனைகள் கொத்தாகப் படர்வதினால் விழியங்கு உருள்கிறது!

பொத்திவைத்த சோகமெலாம் மொத்தமாக விதிர்விதிர்த்து மூச்சுக்காற்று வழியாக முன்னெழும்பித் தவிக்கிறது!

பொங்குமுலைத் தனமெல்லாம் நெஞ்சினிலே கொண்ட துயர் தூக்கித் தூக்கிப் போடுவதால் தானாகக் குதிக்கிறது!

ஏதேதோ கனவுகளும் மனம் வதைத்துப் போடுவதால் மெல்லியலாள் மேனியெலாம் மேல்நோக்கி எழும்பிடுது!

சொல்லவொணா சோகமதை நெஞ்சினிலே தாங்கியவள் சோர்ந்தயர்ந்து தூங்கினாலும் நினைவலைகள் அவளையிங்கு தூங்கவிடச் செய்திடாத அவலத்தால் விசும்புதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை!

ஆதரவாய் அருகமர்ந்து அன்புடனே மடியெடுத்து மேல்துண்டை மெல விசிறி மேனியிலே துளிர்க்கின்ற வேர்வையதைத் துடைத்து விட்டேன்!

கையசைவில் காற்றுவர மேலிருந்த மரக்கிளையும் மெல்லியதோர் தென்றலதை மெதுவாக இதம்வீசி மங்கையிவள் வெப்பத்தை சற்றாகத் தணித்ததுவே!

மேகத்தை வரவழைத்து குளிரூட்டி பொழிந்திடவே மனதாலே பணித்திடவே, மெதுவான சாரலது இதமாகப் பொழிந்திடவே செவ்விதழ்கள் நனைந்ததினால் நாவெழுந்து வெளிக்கிட்டு நல்லதரம் நனைத்திருந்தாள்!

சில்லென்று பொழிகின்ற மெல்லியதோர் தூறலினால் மேனியிலே சிலிர்ப்பலைகள் சட்டென்று எழுந்துவர பட்டென்று கண்விழித்தாள்!

மேல்நோக்கி விழிதிறந்து மெல்ல அவள் பார்க்கையிலே காடுவனம் கடந்திட்ட கன்னியிவள் வள்ளியவள் கண்பார்வை எனைத் தாக்க வேலனிவன் மெய்ம்மறந்தான்!


‘வனவள்ளி கூற்று’:

புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து ஏதும் சொல்லவில்லை அவனும்!

'உண்ட பின்னே பெண்ணே! பேசிக்கொள்வோம் என்றான்!..

"பசி ஆற்றும் செயல் நன்மை மகிழ்ந்தேன் அதனால் நானும்

"யாரோ என்று சொன்னால் உண்பேன்" என்றேன் நானும்!

'பசி வந்தால் பெண்ணே பத்தும் பறக்கும்' என்பர்.

பசித்த பின்பும் கூட பிடிவாதம் விட மறுத்தாய்!' என்றே சொல்லிச் சிரித்தான்!.

வந்த சிரிப்பை வாயுள் அடக்கிக்கொண்டே கேட்டேன்!

'எதுவும் பறக்காதிங்கே!!...யாரோ நீங்கள்?!!' என்றேன்!.

"அன்பைத் தேடும் அன்பை நானும் நாடி வந்தேன்!

இறைவன் தந்த பந்தம் என்றே உன்னைக்கொண்டேன்!

பிரியா வரம் ஒன்றே நானும் வாங்கி வந்தேன்!

உனக்காய் வாழும் நாளில் என்னை முழுதாய்த் தருவேன்! “

என்றே சொல்லி முடித்தான்!!

ஏதோ ஏதோ எண்ணம் வந்து என்னுள் பரவ சின்ன வயதில் கேட்ட வரங்கள் சிரிப்பை எழுப்ப ‘மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்!!

அங்கே என்னைத் தொலைத்தேன்! பழங்கள் ஒரு கையில் பச்சிலைகள் மறுகையில்!!

‘பசியைத் தீர்க்கும் பரிவும் நோயைத் தீர்க்கும் குணமும் கொண்ட இவனே எந்தன் உயிரின் வரமாய் உணர்ந்தேன்!

உள்ளில் பொங்கிய உணர்வினை மறைத்து, யாரிவன் என்னும் உண்மையினை அறிந்திடவே பொய்யாகக் கோபத்தை முகத்தினிலே வரவழைத்து சினந்தவனைப் பார்த்தேன்!

சினந்தவள் செய்ததென்ன?
**********************************************
[நாளை வரும்!]


Sunday, October 18, 2009

ரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்! - சஷ்டி 2

ரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்! [சஷ்டி-2]


திருமுருகன் உருவினில்தான் எத்தனையெத்தனை வடிவங்கள்
தீப்பொறியில் புறப்பட்டான் கங்கைமடி தவழ்ந்திட்டான்
சரவணத்தில் சேர்ந்தங்கு ஆறுகமலத்தில் மலர்ந்திட்டான்
கார்த்திகப் பெண்டிரின் முலைப்பால் குடித்திருந்தான்
அன்னையவள் அணைப்பினிலே ஆறுமுகன் எனத் திகழ்ந்தான்
முன்னைவினை தீர்த்திடவே முருகனென அவதரித்தான்

ஒருபழத்தை வேண்டியே ஆண்டியாகக் கோலம் கொண்டான்
குறும்பாக அவ்வைக்குச் சுட்டபழம் வேண்டுமா என்றான்
அறிவிழந்த பிரமனையே சிறையிட்டுச் செயல் புரிந்தான்
குருவாகி அப்பனுக்கே பாடம்சொன்ன சுப்பனானான்
தனிவேலைத் தாங்கியந்த சூரனையும் அழித்திட்டான்
மயிலேறும் முருகனாகத் திருவருளும் புரிந்திட்டான்

தேவர்குறை தீர்த்திருந்து தெய்வானையை மணமுடித்தான்
மூவருக்கும் மேலான சேனாபதியாய்த் திகழ்ந்திருந்தான்
குன்றுதோறும் கோயில்கொண்ட குமரனாக அருள்புரிந்தான்
சென்றந்தத் தினைப்புனத்தில் வள்ளியைத்தேடி அலைந்திருந்தான்
வேடனாக வேங்கைமரமாக விருத்தனாக வளைச்செட்டியாக
வேடங்கள் பலதாங்கி வேலனாக வள்ளியை மணம் கொண்டான்

எத்தனையோ வடிவங்கள் அத்தனையும் அவனுருவே
இத்தரையில் எனக்காக அவன்கொண்ட வடிவங்கள்
எவ்வுருவில் வந்தாலும் திருவருளுக்கோர் குறைவில்லை
மன்னுயிரைக் காத்திடவே அவனென்றும் பிறழ்ந்ததில்லை
அவரவர்க்குப் பிடித்தவண்ணம் அவ்வுருவைக் காட்டிடுவான்
ஆனாலும் அவனென்றும் குழந்தையென மகிழ்ந்திருப்பான்

குருவாகி வந்தவனும் குழந்தையாகிச் சிரித்திருந்தான்
திருவருளைத் தந்தவனும் குழந்தையெனக் கைக்கொட்டினான்
எல்லாமும் தந்தவனே குழந்தையெனைக் கொஞ்சச் சொன்னான்
நல்லோர்கள் ஆசியிலே நான் மகிழ்வேன் எனச்சொன்னான்
குழந்தைக் குமரனிவன் கொஞ்சிடவோர் தயக்கமில்லை
ஆசிவழங்கிடவோ அருளுக்கோர் பஞ்சமில்லை

எடுப்பதுவும் கொடுப்பதுவும் குழந்தைக்கு மிகப்பிடிக்கும்
கொடுப்பவனே எடுக்கச் சொன்னால் எனக்கதிலே மகிழ்வுதானே
பாலமுருகன் இவனையே மடியிலிட்டுக் கொஞ்சிடுவேன்
நாளுமிவனைச் சீராட்டி நல்லாசிகள் தந்திடுவேன்
ரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தினிலே!

கொடுத்திடும் குழந்தையைக் கொஞ்சியே மகிழ்ந்திடுவேன்!

முருகனருள் முன்னிற்கும்!

“முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்!” - சஷ்டி பதிவு!

“முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்!


முன்னிற்கும் முருகனருள் என்றைக்கும் காத்திருக்கும்

தன்னிச்சை இல்லாது நிகழ்வனைத்தும் பார்த்திருக்கும்

வருவானே வடிவேலன் வள்ளலென வழங்கவே

தருவானே பெறுவானே தடையின்றி அனைத்தையுமே!



இறையிலர் எனச்சிலர் பகர்வதும் கேட்டேன்

முறையிலா மொழியென நின்னால் புரிந்தேன்

வரையிலா அன்பினை வற்றாது வழங்கும்

ஒருமுகம் கண்டதில் இறையெது தெளிந்தேன்!



நினைத்திடும் பொழுதெலாம் களிப்பினைத் தந்திடும்

இனித்திடும் கணங்களைத் தந்ததும் நீயே

இனித்தினம் நினைத்திட வைத்திடும் வண்ணம்

எனக்குளே இனிப்புடன் விதைத்ததும் நீயே!



அன்புடன் அழைத்ததும் அருகமர்ந்து கொண்டதும்

இன்புறும் மொழிகளை எளிதெனச் சொன்னதும்

என்புடல் உருகிட எண்ணங்கள் தந்ததும்

இன்றுயான் நினைக்கினும் சிலிர்த்திட வைக்குதே!



அருள்மிகு தோற்றம் அன்புரை பொழியும்

குழந்தையாய்ச் சிரித்து களிப்புறும் தேற்றம்

தருவதைத் தெளிவாய்த் திகட்டா வண்ணம்

அருளிடும் அன்பினில் எனைக்கரைய வைத்தாய்!



இருந்திடும் நொடிகள் ஒருசிலவாயினும்

அருந்திடும் அமுதினை வார்த்துநீ நின்றாய்

பருகிடும் பாலனின் தாயவள் பரிவினைக்

குழந்தையாய் வந்தே தாயுமாய் நின்றாய்!



படித்தது போதும் பயிற்சியில் முயல்வாய்

பிடித்ததில் பிடித்ததைப் பயனுறச் செய்வாய்

கொடுத்திடமட்டுமே அன்னைக்குத் தெரியும்

எடுப்பது ஒன்றே இங்கு யாம்செய்யும் வேலை!



ஏதிலார் குற்றம் இங்குனக்கு வேண்டாம்

தீதிலா மொழிகளை தினமும் பயில்வாய்

ஓதுதல் முடித்து உணருதல் செய்வாய்

காதலால் கசிந்து தாயவள் வருவாள்!



இயக்கம் நிகழ்வதும் இறையவள் செயலே

தயக்கம் இன்றியே தாளினைப் பணிவாய்

மயக்கம் விடுத்து மனநிறை கொள்வாய்

செயலின்விளைவை அவளிடம் விடுவாய்!



புரிந்ததில் புரிந்தது மிகமிகக் கொஞ்சம்

உரைத்திடும் மொழிகளில் உணர்ந்ததும் கொஞ்சம்

வருந்திடும் பயிருக்கு வளமெனப் பாய்ந்தாய்

இருந்திடும் நாட்களை நிறைவாகச் செய்தாய்!



எண்ணிடும் போதினில் மனமும் மகிழ்ந்திடும்

இன்னருள் தருபவன் அவனே இறைவன்

மண்ணினில் மாந்தரில் அப்படிச் சிலரும்

இருப்பதனாலே வான்மழை பொழியுது!



காண்பன யாவையும் நின்னில் நிறையே

கண்டதும் இங்கே கனிவின் எழிலே

கண்டதைச் சொல்லிடக் கலக்கம் இல்லை

விண்டதைப் பகிர்வதே களிப்பின் எல்லை!



சொன்னதைச் சொல்வது சொல்லிட இனிக்குது

சொன்னதை நினைப்பது சுகமாய் இருக்குது

சொன்னதை உன்னுதல் இத்தனைச் சுகமெனில்

சொன்னதைச் செய்வது பேரருள் தருமே!



சொன்னதில் சிலதே சொல்லிட வைத்தது

இன்னமும் சொல்லிட இறையருள் வேண்டும்

சொன்னதில் பிழைகள் இருந்திடக் கூடும்

முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்!

**************************

Thursday, October 08, 2009

சிக்கல் சிங்காரா! சீறி எழும் கடலைத் தணிப்பாய் தணிகாசலா!


சிக்கல் சிங்காரா ரூப மயில்மணி குமரா
சீறி எழும் கடலினைத் தணிப்பாய் தணிகாசலா

(சிக்கல் சிங்காரா)

கடலின் நீல நிறத்தைப் பார்த்து
சீற்ற அலைகள் தாக்குவதேனோ
பல அவுணர்கள் உயிரைக் குடிக்க
அண்ட அவலையைத் தடுப்பாயா மயூரா

(சிக்கல் சிங்காரா)

படைத்த நீயே காப்பதை மறந்தாயா முருகா
பச்சைப் புயல் வீசிப் பட்டுப் போக விடுவாயா
ஆவினன்குடி அழகா அமைதி கொள்ளச் செய்வாய்
ஆறிரு கண்களில் ஆறுதலாய் வருவாய்

(சிக்கல் சிங்காரா)

ஆழிப்பேரலை மீண்டும் வந்து தாக்காமல் இருக்க வேண்டும் என்று சித்ரம் அவர்கள் சிக்கல் சிங்கார வேலனை வேண்டி எழுதிய பாடல் இது.

Friday, October 02, 2009

மகிழ வரங்களும் அருள்வாயே வயலூரா...


மதுர கவி பாடி நான் அழைத்தால்
மகிழ வரங்களும் அருள்வாயே
வயலூரா...

மனதில் உனை நிறுத்தி மருகோனை
மகிழ் கதிர் காமம் உடையேனே
மால் கொண்ட வீரா மணிமறா
மகிழ வரங்களும் அருள்வாயே
வயலூரா...

மருமல்லி பூக்களின் அலங்காரம்
மன்றத்தின் தென்றலும் தாலாட்டும்
மருகி உருகி நெகிழ்ந்து அழைத்தால்
மகிழ வரங்களும் அருள்வாயே
வயலூரா...

சித்ரம் என்ற பெயரில் நம் பதிவுகளில் பின்னூட்டம் இடும் சித்ரா இராமசந்திரன் இந்தப் பாடலை எழுதி முருகனருளில் இடும் படி சொல்லி அனுப்பியிருக்கிறார். அவரின் முதல் பாடல் இதோ முருகனருளில் இன்று வந்திருக்கிறது. இன்னும் தொடர்ந்து நிறைய வரும்.

Wednesday, September 30, 2009

உன்னையும் மறப்பதுண்டோ



உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?

கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா
எண்ணத்தின் ஒளிச்சுடரே
எண்ணத்தின் ஒளிச்சுடரே
உன்னை எப்படி நான் மறப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?

பொன் பொருள் மறந்திருப்பேன்
இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா
என்னுயிர் ஆன உன்னை
என்னுயிர் ஆன உன்னை
மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?

நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன்
வடிவேல் ஏந்திய உனை மறந்தால்
நான் ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன்?
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?

பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்

நன்றி : கோ.கணேஷ்

Friday, August 14, 2009

ஆடிக் கிருத்திகை! கும்மாளப் பாடல்! வேல்முருகா, வேல்முருகா, வேல்!

பெங்களூர் ரமணியம்மாள்-ன்னு கேள்விப்பட்டிருக்கீக தானே? குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாடலைப் பாடியவர்!
மேடைக் கச்சேரிகள் மட்டுமே பாடும் கிளாசிக்கல் பாடகர் என்றாலும் கூட, எல்.ஆர். ஈஸ்வரியை ஞாபகப்படுத்துவது போல் பாடக் கூடியவர்!
அந்த அளவுக்கு ரமணி அம்மாளின் பாடல்களில் குத்தும், கும்மாளமும், குதூகலமும் துஞ்சும்! கொஞ்சும்! மிஞ்சும்! :)

அது போல ஒரு சூப்பர் பாட்டைத் தான் இன்னிக்கிப் பார்க்கப் போறோம்!
நீங்கள் வாருமே பெருத்த பார் உளீர்-ன்னு துவங்குமே! அந்தப் பாட்டு!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!-
ன்னு வரிக்கு வரி வரும்!
கேட்டு இருக்கீயளா? கேட்கலீன்னா, இன்னிக்கி கேட்டே ஆகணும்! :))

இதுக்கு ட்யூன் போட்டது யாரு தெரியுமா? சதா மற்ற பாடகர்களிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீர விமர்சகர் சுப்புடு! :))
ஒரு முறை இவர் பர்மாவில் போய்க் கொண்டிருந்த போது, அந்தப் படகோட்டி பாடிய பாடலின் மெட்டு, இந்த நக்கீர விமர்சகருக்கே மனதில் பதிந்து விட்டது!
அந்த மெட்டை ரமணி அம்மாளிடம் சுப்புடு கொடுக்க, அம்மாள் அதில் தன் பாட்டை இட்டுக் கட்டி நிரப்ப, ஒரு அபூர்வ முருகன் பாடல் உருவானது!



இன்னிக்கி ஆடிக் கிருத்திகை! (Aug-14-2009)! ஐந்தாம் படைவீடான திருத்தணிகையில் மிகவும் விசேடம்!
"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்" என்னும் படிக்கு,
ஊரறிய உலகறிய, ஒரு பேதையைக் கரம் பற்றிய கல்யாணத் திருநகரம் தான் திருத்தணிகை!

வள்ளியை முருகன் மணந்த தலம் திருத்தணி! இதை ஏன், அதுவும் திருத்தணியிலேயே, பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(
* களவு மணமாவது? கற்பு மணமாவது?
* களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
இனி திருத்தணிகை என்றாலே வள்ளித் திருமணம் தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!



தினைப் புனத்திலே விளைந்த காதல் மணத்துக்கு, அந்தத் தினை அளவு தான் மதிப்பா?......என்று எவரும் கேட்டு விடாத படிக்கு...
பெற்றோர் முன்னும், மற்றோர் முன்னும், பெண்-மானத்தையும், தன்-மானத்தையும் காத்துக் கொண்டான் எங்கள் பெருமகன் முருகன்!

வள்ளியின் தவம் தான் எத்தனை எத்தனை காலம்? பெருமாள்-திருமகளின் திரு மகளான இவள், முருகனையே மணக்க வேண்டி, காலமெல்லாம் கல் போல் அல்லவா காத்துக் கிடந்தாள்?
பிறவி எடுத்தே மணக்க வேண்டும் என்ற நிலை வந்த போது, அதற்கும் தயங்கவில்லை! நம்பி ராசனுக்கு மகவாய்த் தோன்றி, நம்பிக் கொண்டிருந்தாள்!

இத்தனைக்கும் முருகன் அவளை ஏற்றுக் கொள்வானா என்று கூட அவளுக்குத் தெரியாது!
அப்படிக் காதலில் வீழ்ந்தவள் தான்! உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் முருகனே என்றிருப்பேன்!

இத்தனைக்கும் முருகனை நேரில் பார்த்தது கூட இல்லை! அவனும் அவளுடன் ஏதும் பேசியதும் இல்லை!
ஆனாலும், கனவிலும் கற்பனையிலுமே, அவனுடன் பேசிப் பேசிக் காதலை வளர்த்தாள்!
அவன் வருவானா என்று கூடத் தெரியாமல், அளி ஒத்த மேகங்காள், ஆவி காத்து இருப்பேனே!

பார்க்காத முருகனுக்காக, பார்த்த மாப்பிள்ளையை விரட்டிய வீராங்கனை வள்ளி! :)
மானிடர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்னும் படிக்கு, அரங்கனுக்கு ஒரு கோதை போல், முருகனுக்கு ஒரு கோதையே பேதையே = வள்ளி!

அந்தக் காதல் வேள்வியின் தீ, தீந்தமிழனை அவளிடமே இட்டுக் கொண்டு வந்தது!
குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர
குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ?


குறுகினான்! வந்து உருகினான்! அவளைப் பருகினான்! அவளுள் பெருகினான்!
கனிந்தது தணிந்தது தணிகையில்!

* தணிகையில் தான் என் முருகனுக்கு இரண்டுமே தணிந்தது!
* அன்று கோபம் தணிந்தது! இன்று தாபம் தணிந்தது! :)
* இப்படி, ஒரு தனி கை வேலனுக்கு, இரு தணிகை = அது திருத் தணிகை!



அருமையான பாடல் வரிகளைப் பார்க்கலாம் வாங்க! வேல்முருகா, வேல்முருகா, வேல்! - பாடலை இங்கு கேளுங்கள்! - கேட்டுக் கொண்டே பதிவைப் படியுங்கள்!

நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!
நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர்!

பஜனை செய்யலாம்...பாடி மகிழலாம்!
முருகனைப் பாடலாம்...வள்ளியைப் பாடலாம்!
கண்ணனைப் பாடலாம்... மீராவைப் பாடலாம்!

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே!

சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
*****************************************

அலைகடல் வளந்தொடுத்து
எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

அடைபெறுவ(து) என்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்!
முக்தி அடையலாம்! சித்தி ஆகலாம்!!
முருகனைப் பாடினால்...முக்தி அடையலாம்!
சிவனைப் பாடினால்...சித்தி அடையலாம்!!


வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
***************************************

எம படர் தொடர்ந்(து) அழைக்க
அவருடன் எதிர்ந்(து) இருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம்! - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்!
முருகனைப் பாடினால்...எமனுடன் பேசலாம்!
சிவனைப் பாடினால்...எமனை எதிர்க்கலாம்!!


வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!
சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!


உள்ளத்திலே...இன்ப வெள்ளத்திலே...
முருகன்....மெல்லத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை... அள்ளிக் கொடுத்த புனை...
வள்ளிக்(கு) இசைந்த மண வாளனாம்!

சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா! வெற்றிவேல் முருகா!

********************************************************

வேதத்திலே...திவ்ய கீதத்திலே...
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
பஜனை நாதத்திலே...முருகன் தோன்றுவான்!
உங்கள் உள்ளத்திலே...முருகன் தோன்றுவான்!
ஒவ்வொருவர் பக்கத்திலே...முருகன் தோன்றுவான்!


அவன் பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால்
உங்கள் பக்கத்திலே முருகன் தோன்றுவான்!


சொல்லுங்கோ...
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா!


வேலனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! எங்கப்பனுக்கு அரோகரா!
சிவ பாலனுக்கு அரோகரா! வடி வேலனுக்கு அரோகரா!
வேல்முருகா வேல்முருகா வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்!


வெற்றி வேல் முருகனுக்கு.....அரோகரா!


வள்ளி வேல் முருகனுக்கு அரோகரா!
வயலூர் முருகா-என்னை வாரிக் கொள்! உன்னிடம் வாரிக் கொள்!
செந்தூர் முருகா-என்னைச் சேர்த்துக் கொள்! உன்னிடம் சேர்த்துக் கொள்!

வரமனம் இல்லையா?


திருத்தணியில் ஒவ்வொரு கிருத்திகை நாளும் சிறப்பு நாளாகும். ஆடிக்கிருத்திகைதான் மிகவும் விசேஷமானது. அன்று முதல் மூன்று நாட்களுக்கு சரவணப் பொய்கையில் தெப்ப உற்சவம் நடைபெறும்.இந்த மூன்று நாட்களிலும் சுமார் 12 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.அன்று பூக்காவடி, பால்காவடி ஆகிய பிரார்த்தனைகளை செலுத்துகின்றனர்.
சூரபத்மனோடு போரிட்டு முடித்த பின்பு சினம் தணிந்து இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதால் இங்கு சூரசம்ஹார விழா கொண்டாடப் படுவதில்லை


தேவர்கள் பயம் நீங்கிய இடமும் இது தான். முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடமும் இதுதான். அடியவர்கள் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றை தணிக்கும் இடமாதலால் தணிகை என்று பெயர்க் காரணமும் உண்டு


திருத்தணியில் முருகனை வழிபட்டவர்கள் சிவபெருமான், திருமால், ராமர்,பிரும்மன், சரஸ்வதி,
அடியார்களைப் பொருத்தவரை அருணகிரிநாதருக்கு சும்மாஇரு என்று உபதேசம் செய்தவரே முருகந்தான். அவரும் இங்கு முருகன் மீது 63 பாடல்கள் பாடியுள்ளார். முத்துஸ்வமி தீக்ஷதரும் தனது முதல் பாடலான "ஸ்ரீ நாதாதி குரு குஹோ " என்ற பாடலை இயற்றியது திருத்தணிகையில்தான்.தீவிர முருக பக்த்தரான அவர்தனது ஒவ்வோரு கீர்த்தனையிலும் " குரு குஹ" என்ற முத்திரையை பதித்துள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியாரும் கந்தபுராணத்தில்"உலகில் மலைகள் பல இருந்தாலும் சிவபெருமான் கயிலாயத்தில் விரும்பி இருப்பதுபோல முருகந்திருத்தணி மலையை மிகவும் விரும்பி அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கிறான்" என்று சிறப்பித்து கூறியுள்ளார். மற்றும் பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வடலூர் ராமலிங்கஸ்வாமிகள், கந்தப்பையதேசிகர் ஆகியோரும் வழிபட்ட இடம் இது.
இங்கு முருகனின் பிரசாதமாக திருநீறு குங்குமம் அளித்தாலும் முருகனுக்கு அபிஷேகம் முடிந்து பின்னர் அவர் மார்பு மீது சாத்தப்படும் திருமேனிப் பூச்சு என்னும் சந்தனம் முருகன் சந்நிதியில் வழங்கப்படும். இச்சந்தனத்தை உட்கொள்ளுபவர்கள் நோய்கள் பலவும் தீரப் பெறுவர்.
முருகனுக்கு இணயான தெய்வமோ திருத்தணிகைக்கு சமமான தலமோ இல்லை என்றே சொல்லாம்.மற்ற படை வீடுகள் எல்லாம் மதுரையைச் சுற்றியே இருக்கும் போது இது ஒன்றுதான் தொன்டை மண்டலத்தில் இருக்கும் ஒரே படை வீடு.
தணிகை மலை துரையைப் பற்றி பெங்களூர் ரமணி அம்மாள் பாடுவதை கீழே கேட்டும் கண்டும் அனுபவியுங்கள்


-






ராகம்:யமுனா கல்யாணி தாளம்: ஆதி

பல்லவி

வரமனம் இல்லையா முருகா
வரம் தர மனமில்லையா? என்னிடம்....வரம்தர

அனுபல்லவி

பிறவிப் பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே
பிறைசூடன் மைந்தா குறை தீர்க்கும் குமரா....வரம் தர

சரணம்

வாழ்க்கை எனும் கடலிலே முழ்கியே தவிக்கிறேன்
காத்திடவா என்றே அழைத்தேனே
கந்தா குமரா கதிர்வேலா என்னிடம்..... வரமனம்



இந்த வருடம் ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது கிருத்திகை இது.இந்த வாரம் திருத்தணிகைக்கு குடும்பத்துடன் சென்றுமுருகனை வணங்கி விட்டு வந்தேன்.இந்தபாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அது சரி பிறைசூடன் யார்? ஓ ஸ் அருணின் குரலில் கேட்டுதான் பாருங்களேன்...


Friday, July 17, 2009

ஆடிக்கிருத்திகை

இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்

பக்தர் கூட்டமெல்லாம்"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.
ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி

பல்லவி

திருத்தணி முருகன் திருவருள் புரிவான்
திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)

அனுபல்லவி

அறுபடை வீட்டின் நாயகனே
குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)

சரணம்


குறுநகை புரிந்திடும் அருள்முகமும்

பரிவுடன் உதவும் பன்னிருகரமும்

வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்

என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)

Wednesday, June 24, 2009

சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே


நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் - முருகா (நீல)

நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா (நீல)

வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
வேழ முகம் படைத்தோன் சோதரனே
வேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே (நீல)




பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

Wednesday, June 17, 2009

சிவசண்முகனுக்கு ஈடு யாரும் இல்லை!!


சுவாமிமலை எங்கள் சுவாமிமலை சிவ
சண்முகனுக்கு ஈடு யாரும் இல்லை (சுவாமிமலை)

சப்தங்களின் தொடக்கம் பிரணவமாம்
சாரம் தெரியாமல் திகைத்தனராம்
சத்தியலோகத்து பிரம்மனுமே
சரவணன் கையாலே சிறைப்பட்டான் (சுவாமிமலை)

சங்கரன் செவியினில் உமைபாலன்
சாற்றும் உபதேசன் ஓம் நாதம்
சாமிமலை தகப்பன் சாமிமலை
சன்னிதி வந்தவர்க்கு ஏது குறை (சுவாமிமலை)




பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்

Wednesday, May 27, 2009

திருப்பரங்குன்றத்திலே ஜிரா - with ரவி & சிலுக்கு:)

திருப்பரங்குன்றத்திலே முருகன் தானே? சிலுக்கு எப்படி?

என்னய்யா நடக்குது இங்கிட்டு?:)

பிறந்த நாள் அதுவுமா என் தோழன் ஜிரா என்னும் ஜி.ராகவன், 
ஒரு பரங்குன்றின் மேல், பலத்த போதையில் மலையேறிக்கிட்டு இருந்தாரு! 
புதுச் சொக்கா, புது IPod! பிறந்தநாள் பரிசுகள் பளபளக்க, 
IPod-இல் ஒரு செம கிக்கான ரொமான்டிக் பாட்டு!

"நடவிஞ்ச மயூராலு ஒச்சின மோமு ஒக்கடே!
ஈசருகி பாக மொழி செப்பின மோமு ஒக்கடே!"

ஏறும் மயில் ஏறி, விளையாடு முகம் ஒன்றே!
ஈசருடன் ஞான மொழி பேசு முகம் ஒன்றே!

மேலும் வாசிக்க: http://madhavipanthal.blogspot.com/2009/05/gira-silk-smitha.html




Saturday, May 09, 2009

ஷண்முக நாயகன் தோற்றம்!



அகத்திய முனிவர் அருளிய இந்தப் பாடல்கள் மிகவும் சந்த நயத்துடன் கூடியது. சிறுவயதில் இருந்தே அன்னையாரால் அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரை பாடுவதற்கு அடியேன் மிகவும் விரும்பும் பாடல்கள் இவை. அண்மையில் இப்பாடல்களை திரு. வெ. சுப்பிரமணியன் அவர்கள் மின் தமிழ் குழுமத்தில் இட்டார்கள். அதனை இங்கே முருகனடியார்கள் பாடிப் பயன் பெறும் வகையில் பதிகின்றேன்.

ஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம் (ஷண்முக) (1)

ஆனந்த மாமலர்ச் சோலையிலே-மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக) (2)

பக்குவமாம் தினைக் காட்டினிலே- அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே -அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக)(3)

தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே-அவர்
சுற்றிச் சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே-தவ
ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக)(4)

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே-பொருள்
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே-தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக)(5)

வேதாந்த தத்துவ ஸாரத்திலே-அலை
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலி யோகத்திலே-பர
மாத்ம ஜீவாத்ம வைபோகத்திலே (ஷண்முக)(6)

அன்பர்க்கு இயற்றிடும் சேவையிலே-உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே-காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக)(7)

நண்ணும் இயற்கை அமைப்பினிலே-ஒளி
நட்சத்திரங்கள் இமைப்பினிலே
விண்ணில் விரிந்துள நீலத்திலே-மயில்
மேல்வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக)(8)

தேகவிசாரம் மறக்கையிலே-சிவ
ஜீவவிசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே_கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே- (ஷண்முக)(9)

மானாபிமானம் விடுக்கையிலே- தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே-குரு
நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக)(10)


ஆடிவரும் நல்ல நாகத்திலே-அருள்
ஆறெழுத்தின் ஜெபவேகத்திலே
கோடிவரம் தரும் கோயிலிலே-தன்னைக்
கூப்பிடுவார் மனை வாயிலிலே (ஷண்முக)(11)

ஸித்தரின் ஞான விவேகத்திலே- பக்தர்
செய்திடும் தேனபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே-அதன்
உட்பொருளாம் சிவ ஜோதியிலே (ஷண்முக)(12)

அன்னைமடித்தலப் பிள்ளையவன்
சச்சிதானந்த நாட்டினுக் கெல்லையவன்
பண்ணும் ஏகாக்ஷர போதனவன்-மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக)(13)

செல்வமெல்லாம்தரும் செல்வனவன் -அன்பர்
சிந்தைகவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும்செஞ்சேவல் பதாகை உயர்த்திய
வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக)(14)

சேர்ந்தவருக்கென்றும் சகாயனவன் -இன்பத்
தூயனவன் அன்பர் நேயனவன்
சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன் (ஷண்முக)(15)

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால்-வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய்-வந்த
விந்தைகொள் ஞானக்குழந்தையவன் (ஷண்முக)(16)

முத்தொழிலாற்றும் முதற்பொருளாம்--ஆதி
மூல சதாசிவ மூர்த்தியவன்
இத்தனி உண்மை மறந்தவனைச் -சிறை
இட்டவனாம் பின்னர் விட்டவனாம் (ஷண்முக)(17)

வள்ளி தெய்வானை மணாளனவன் -மண
மாலைகொள் ஆறிருதோளனவன்
அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகழ்
ஆகம நான்மறை அந்தமவன் (ஷண்முக)(18)

கோலமுடன் காலை மாலையிலும்-இரு
கோளங்கள் வானில் வரப்புரிவான்
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே-எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் (ஷண்முக)(19)

பேர்களெல்லாம் அவர் பேர்களன்றோ -சொல்லும்
பேதமெல்லாம் வெறும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால்-வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் (ஷண்முக)(20)

கும்பமுனிக்கருள் நம்பியன் -அன்பு
கொண்ட கஜானனன் தம்பியவன்
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின்புறும்
ஜோதியவன் பரம் ஜோதியவன் (ஷண்முக)(21)

Sunday, April 26, 2009

மனமிரங்கு மயில் வாகனா பன்னிரண்டு கண்களில் ஒரு கண்ணின் கடைக்கண் வையப்பா

இன்று கிருத்திகை. ஆனால் மனம் மிக கனத்துடன் இருப்பதால் பதிவை விரிவாக போட முடியவில்லை. என் அண்ணன் மகளின் கணவர் நுரையீரல் வலுவிழந்து மூச்சுவிடமுடியாமல் அப்போல்லோ மருத்துவ மனையில் தீவிர சிகித்ஸை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வயது 40தான் ஆகிறது. அவருக்காக அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப முருகனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நல்ல உள்ளங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
-

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP