Saturday, November 15, 2008

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 2

"கந்தன் கருணை" [கவிதைத் தொடர்] - 2
[ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்]


காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்


தம்பிகள் இருவரும் அழிந்ததினால்
தமையனும் கோபம் மிகக் கொண்டான்
தானே போருக்குச் சென்றிடவே
சூரனும் வாளை எடுத்துவிட்டான்

அருமைமகனும் அருகில் வந்தான்
தன்னை அனுப்பிடக் கேட்டுக்கொண்டான் [காலையில்]

தனயன் இருக்கையில் தந்தை செல்லல்
முறையல்லவெனவே பணிந்துநின்றான்
சிறுவனை அழித்திடச் சிங்கமிங்கு
செல்வது தவறென வாது செய்தான்

மதிகெட்ட அரக்கன் மனமகிழ்ந்தான்
மகனை வாழ்த்தி அனுப்பிவைத்தான் [காலையில்]

மாயப்போரினில் வல்லவனாம்
பானுகோபனும் தேரேறி
போர்க்களம் வந்து நின்றிருந்தான்
அரக்கர்படையும் மகிழ்ந்ததுவே

தன்னைப் போருக்கு அனுப்பவென
வீரவாகுவும் வேண்டிநின்றான் [காலையில்]

அனைத்தும் அறியும் எழில்முருகன்
'அப்படியே!' என அனுமதித்தான்
தினவுடைத் தோளன் வீரவாகுவும்
பூதப் படைகளுடன் எழும்பிவந்தார்

கொடியதோர் போரினில் பானுகோபன்
வாகுவை வாளால் வீழ்த்திவிட்டான் [காலையில்]

தலைவனை இழந்த பூதங்களும்
செய்வது அறியா நிலையடைந்து
தாறுமாறாகச் சிதறியதுவே
அரக்கர்படைகளும் மகிழ்ந்தனவே

கந்தன் கண்மலர் திறந்தான்
பூதகணங்களும் உயிர்பெற்றார் [காலையில்]

மறைந்தே தாக்கும் கொடுமரக்கன்
பானுகோபனை அழித்திடவே
மீண்டும் வீரவாகு எழுந்துநின்றார்
முருகனின் அருளால் கதை முடித்தார்

அரக்கர் கூட்டம் அயர்ந்ததுவே
வருத்தம் மிகுந்தே சென்றதுவே [காலையில்]

உற்றமும் சுற்றமும் அழிந்ததினால்
உறவும் அற்றுப் போனதினால்
செய்வது எதுவென திகைத்திருந்தான்
சூரனும் மயங்கித் தத்தளித்தான்

வந்தது சிறுவன் அல்லன்
எனும் தெளிவினை சூரன் பெற்றான் [காலையில்]

அழகிய மனையாள் அழுதுற்றாள்
கணவனைக் காத்திட முறையிட்டாள்
வேலனைப் பணிதல் நலமென்றாள்
மாங்கல்யம் காத்திட வேண்டிநின்றாள்

மனைவியைக் கருணையாய்ப் பார்த்தான்
அவள் கரங்களைப் பற்றி உரைத்திட்டான் [காலையில்]

எவரும் இல்லா ராச்சியத்தை
எவர்க்கென நானும் ஆளுவது
அனைவரும் இருக்கும் பொழுதினிலே
இதைச் சொல்ல ஏனுன்னால் முடியவில்லை

வீரனின் மரணம் வீரன்கையில்
அதை விடுவது முறையல்ல எனச் சொன்னான் [காலையில்]

போர்க்களம் ஏறி சூரன்வந்தான்
புதுபலம் கொண்டது அரக்கர்சேனை
“யாரடா என்னை எதிர்ப்பதிங்கு?”
இடியினைப்போலே முழங்கிட்டான்

வந்தான் முருகன் அவனெதிரே
கண்கள் கூசிடும் பேரொளியாய் [காலையில்]

கண்டவர் வியக்கும் எழில்தோற்றம்
அவன் கருணைக்கடலின் அவதாரம்
கையினில் வேலினைத் தாங்கி நின்றான்
கனியிதழ் புன்னகை பூத்துநின்றான்

என் முருகன் இவனே இவனே
என் தலைவனும் இவனே இவனே [காலையில்]

கடும்போர் செய்தான் கொடுஞ்சூரன்
கணைகளை அனுப்பித் தாக்கிட்டான்
கடைக்கண் பார்வை பட்டதுமே
கணைகளும் பொடியாய்ப் போனதம்மா

சூரன் வியந்தான் பயந்தான்
வானத்தில் ஏகி மறைந்தான் [காலையில்]

விண்வெளி சென்றிட்ட சூரபத்மன்
மேகத்தில் நின்று கணை தொடுத்தான்
பார்த்திட்ட முருகன் முறுவல் செய்தான்
வேலினை எடுத்து விண் விட்டான்

சூரனைத் தேடிய சூர்வேலும்
மேகத்தைக் கிழித்துச் சென்றதங்கே [காலையில்]

வான்வழி மறைத்த கூர்வேலின்
போரினைத் தாங்கிட முடியாமல்
இத்தரை மீதினில் சூர் வந்தான்
கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான்

தனிவேல் அவனைத் துரத்தியது
கடலினை வற்றிடச் செய்ததுவே [காலையில்]

தேரினை இழந்த சூரரக்கன்
ஆயுதமின்றி நின்றிடவே
அவனைக் கொல்லுதல் பாவமென்று
நாளை வந்திட அருள் செய்தான்

கந்தன் கருணையின் வடிவம்
அவன் என்னுடை குலத்தின் தெய்வம் [காலையில்]

கொடுஞ்சூர் அரசன் தலைகவிழ்ந்தான்
தனிமரமாகத் திரும்பிச் சென்றான்
வாளால் அறுத்தவன் மனத்தையங்கு
வாளாய் அறுத்தது தீவினையும்

அறஞ்செயின் முருகன் அருள்பெறலாம்
மறஞ்செயின் அவனே அழித்திடுவான் [காலையில்]

வேதனை தன்னைத் தாக்கிடவே
போனதும் கண்முன் ஆடிடவே
உறக்கம் இழந்தான் சூரசுரன்
மறுநாள் போருக்குத் தயாரானான்

அணையும் விளக்காய் அவன்வந்தான்
அணைக்கும் கரமாய் அழகன் நின்றான் [காலையில்]

எதிர்வந்த கணையெல்லாம் துகளாக
இளையவன் வியக்கும் போர்புரிந்தான்
இதுவரை ஆடிய ஆட்டத்தினை
விரைவாய் முடித்திட அருள்கொண்டான்

வேலை எடுத்தான் வேல்முருகன்
சூரன்மேல் விட்டான் சுந்தரனே [காலையில்]

காற்றெனப் பறந்தது கூர்வேலும்
மாற்றிதற்கில்லை எனும் படியாய்
கூற்றுவன் கணக்கையும் முடித்திடவே
கூர்வேல் சீறிப்பாய்ந்ததுவே

மரமாய்ச் சூரன் மாறிநின்றான்
மாமரம் துளைத்தது கூர்வேலும் [காலையில்]

இருபுறம் மரமும் பிளந்திடவே
சூரன் விழுந்தான் நிலத்தினிலே
சேவலும் மயிலுமாய்த் தானெழுந்தான்
வேலவன் சேவடி வந்தடைந்தான்

அழித்தல் இங்கே நடக்கவில்லை
ஒன்றே இரண்டாய் ஆனதுவே! [காலையில்]

சேவலைக் கொடியாய்த் தான்கொண்டான்
மயிலை வாகனம் ஆக்கிநின்றான்
வானவர் பூமழை பொழிந்தனரே
கொடுஞ்சூர் அழிந்ததில் மகிழ்ந்தனரே

வேல்வேல் வேல்வேல் வேல்வேல்
எனும் முழக்கம் விண்ணைப் பிளந்ததுவே [காலையில்]

தேவரை விடுதலை செய்தானே
தேவேந்திரனும் மனம் மகிழ்ந்தானே
அழகனை அரசனாய் முடிசூட
இந்திரன் பணிந்தே நின்றானே

அரசன் இவனே இவனே- இவன்
இந்திரனை அரசாக்கினானே [காலையில்]

நன்றிக்கடனைச் சொல்லிடவே
இந்திரன் தன்மகள் தந்தானே
தாயும் தந்தையும் அருள்வழங்க
பரங்குன்றில் திருமணம் கொண்டானே

தெய்வானை என்னும் திருமகளை
முருகன் துணையாய்க் கொண்டானே [காலையில்]


காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்
***************************************************

[இத்துடன் "கந்தன் கருணை" முதல் பாகம் நிறைவடைந்தது. புதுப் பொலிவுடன், வித்தியாசமான நடையில், இரண்டாம் பாகம் திங்கள் முதல் தொடரும்! இதனை எழுத எனக்கு ஊக்கம் அளித்த என் துணைவிக்கு இந்த நேரத்தில் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

2 comments:

S.Muruganandam November 23, 2008 8:46 PM  

கந்த புராணம் கவிதை நடையில் அருமை VSK ஐயா. இன்னும் தொடருங்கள்.

Sudha February 09, 2009 6:47 AM  

Arpudam! Good job Ragavan.

Best Regards
Sharmila

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP