Thursday, February 21, 2008

மாசி மகம்: முருகா என்றதும் உருகாதா மனம்?

மாசி மகம் என்பது பொதுவாக ஒரு நீராடல் விழா! இந்த ஆண்டு, இன்று!(Feb 21, 2008).
இந்த நீராடல் விழா பழந்தமிழ் வழக்கமாக இருக்கலாம் என்று இராம.கி ஐயாவும் தன் நட்சத்திரப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் கண்ணுற்றால் கூட, இது சைவ-வைணவ ஒற்றுமை விழாவாகவே எடுக்கப்படுகிறது!
மாசி மகம் அன்று செய்யப்படும் நீராடலுக்கு (தீர்த்தவாரி),
சைவ-வைணவ ஆலயங்களில் இருந்து ஊருலா மூர்த்திகள் (உற்சவர்கள்),
குளம்/நதி/கடல் கரைகளுக்கு தத்தம் வாகனங்களில் கொண்டு வரப்படுவது வழக்கம்!

அனைத்து ஆலய பக்தர்களும் பேதமில்லாமல், அடுத்தடுத்து நின்று கொண்டு செய்யும் தீர்த்தவாரிக் காட்சி, கண் கொள்ளாக் காட்சி தான்!
சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதும் இன்றும் குடந்தை (கும்பகோணத்தில்) காணலாம்!

பின்னர் இருவரும் சேர்ந்து மாலை-பரிவட்டங்களைத் தமிழவேள் முருகப் பெருமானுக்கு அளிப்பர்!
இப்படிச் சீராட்டிச் சீராட்டி, மக நீராட்டி நீராட்டிச் சமய ஒற்றுமை வளர்க்கும் திருவிழா இந்த மக நீராடல்!



* திருச்செந்தூர் மாசித் திருவிழா மிகவும் புகழ் பெற்ற ஒன்று!

* கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குத்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர், என்று பெருமாளும் ஈசனும் ஒன்று கூடி எழுந்தருளும் வழக்கம் உண்டு!

* சென்னை மெரீனாக் கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளுவது இன்றும் வழக்கம்!

* சைவம்-வைணவம் தாண்டி, முகம்மதிய அன்பர்களும் சில தலங்களில் கலந்து கொள்கிறார்கள்! ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு வரும் போது, முஸ்லீம் பெருமக்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது!

* எங்கள் கிராமம் வாழைப்பந்தலில், செய்யாற்றங்கரையில் எழுந்தருளும் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு, ஊர் மாதா கோவிலில் இருந்து பட்டும், பன்னீரும், ரோஜா மாலைகளும் தரப்படும்!

மாசி மகம் அன்று எல்லாருக்கும் பொதுவில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறதா என்ன? அதுவும் இங்கே அமெரிக்கக் கடுங்குளிரில்? :-)
ஆனால் முருகா என்று வாய் விட்டு அழைக்கும் போது, மனம் கரைகிறது அல்லவா! கண்கள் பனிக்கிறது அல்லவா! அப்படிக் கரைந்து நீராடுவதாக எண்ணிக் கொள்ள வேண்டியது தான்!

மனத்து ஈரமும், கண் ஈரமும் வரவழைக்கும் ஒரு எளிமை இனிமையான பாட்டை, மாசி மகத்தன்று, முருகனருள் வலைப்பூவில் கேட்டு மகிழ்வோம்!
T.N. ராமையா தாஸ் எழுதிய ஒரு சில பாடல்களில் இது மிகவும் புகழ் பெற்ற பாடல்-அதிசயத் திருடன் என்ற படத்துக்காக! இன்னொன்று மாயா பஜார் - கல்யாண சமையல் சாதம்! :-)

முருகா என்றதும் உருகாதா மனம்...மோகன குஞ்சரி மணவாளா
பாடலை இங்கு கேட்கலாம், TMS அவர்களின் குழையும் குரலில்! யூட்யூப் அசைபடம் கீழே!


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா

(உருகாதா)

முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா

(உருகாதா)

மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

(உருகாதா)

ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
தினமும் பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

(உருகாதா)

வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: டி.எம்.எஸ்
இசை: K. பிரசாத் ராவ்
படம்: அதிசயத் திருடன்




Thursday, February 14, 2008

உருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

இன்று கிருத்திகைத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். இன்று அவனைப் பாடி பஜிக்க வேண்டும் .எப்படி. மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான். பாபநாசம் சிவன் சொல்லியபடி செய்தால் அவன் எட்டுவான்.முருகனை பாடவேண்டும். எந்த முருகன் திருமால் மருகன், முக்கண்ணன் மகன்,குஹன், பன்னிருகையன் ஆறுமுகன். இப்படியெல்லாம் அழைக்கப்படுபவன்.

இப்படி நினைத்து பாடினால் முருகனுடன் திருமாலையும் சிவனயும் சேர்த்து வணங்கும் பயனும் வரும். அது மட்டுமா அவனை நினந்து உருகாத நெஞ்சத்தில் ஒரு நாளும் வராதவன்.
ஆனால் உத்தமமான திருத்தணியில் கருப்பொருளாய்இருக்கும்
அவனை கருத்தில் வைத்து பஜித்தால் நிச்சயம் நெஞ்சகத்தில் வருவான் .
அவன் என்ன திருத்தணியில் மட்டும்தான் இருப்பானோ? இல்லை இல்லை செந்திலாண்டவனும் அவன்தான் சிக்கில் சிங்கார வேலனும் அவன்தான்.

தாமரை இதழ் போன்ற கால்களை உடைய சிவபாலன் அவன்.கண்பதற்கு எளியவன் அல்லன் அவன், ஆனால் எள்ளிற்குள் எண்ணை இருப்பது போலும், மலருக்குள் மணம் இருப்பதுபோலும் மறைந்திருந்தாலும் எங்கும் நிறைந்தவன். சரி அப்படியென்றால் அவனை அண்டவே முடியாதா. யார் சொன்னது தூய அன்பிற்கு கட்டுப்படுவான். நம்ப வேண்டுமானால் வள்ளிக்கதையைப் பாருங்கள். வேடுவர் குலத்தில் பிறந்த அவளுடைய அன்பிற்கு இரங்கி தன் உள்ளத்தை பறி கொடுத்து திருத்தணியில் அவளை திருமணம் புரிந்தான்.

அவன் சிலை வடிவில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறானே அதனால் தூங்குகிறானோஎன்றுஎண்ணவேண்டாம். அவனுக்கு
தூக்கமே கிடையாது. அடியவர்களுக்கு அருள் புரிய எப்போதும் காத்துக்கொண்டு இருக்கிறான். நாம்தான் நம்முடைய அவனைப் பற்றிய சிந்தனையே இல்லாத நிலையான தூக்கத்திலிருந்து எழுந்து அடியவர்கள் மனத்தில் விளையாடும் கார்த்திகை பெண்களால்
நேர்த்தியாய் வளர்ந்த குழந்தையான குமரனை, பழந்தமிழுக்கு தெய்வமான அழகனை, கந்தனை, முருகனை நினைத்து
பாடிப் புகழ வேண்டும்.
சிவனின்காலத்தால் அழியாத பாடல் இதோ

ராகம் ஜோன்புரி தாளம் ஆதி

பல்லவி

முருகனைப் பஜி மனமே-திருமால்மருகனைப் பஜி மனமே வடிவேல்

முக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை (முருகனை)

அனுபல்லவி

உருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாதஉத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து (முருகனை)

சரணம்

செந்தில் நாதனை அரவிந்த பாதனை

சிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை (முருகனை)

எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்-குறவள்ளி அன்பிற்குள்ளம் பறிகொடுத்த விருத்த வேடத்தனை (முருகனை)

பழந்தமிழ்த் தெய்வக் கந்தனருள் இழந்தறங்காதே-துயில்எழுந்து அடியர் மனதில் தவழ்ந்து விளையாடும் குழந்தை (முருகனை)

பாடலைதிருமதி சுமதி சுந்தர் பாடுவதை <"இங்கே கேட்கலாம்"> ">

Monday, February 04, 2008

037. பத்துமலைத் திரு முத்துக்குமரனை

ஒரு பாடல் இசையமைக்கப்பட வேண்டும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட படக்காட்சிக்கு. படக்காட்சியின் நீளம் கிட்டத்த பத்தரை நிமிடங்கள். அந்தப் படக்காட்சியும் மலேசிய பத்துமலை முருகன் கோயில் திருவிழாவில் எடுத்தது. ஆகவே காட்சிகள் ஒழுங்குக்குள் வராமல் இருக்கும். தேங்காய் உடைப்பார்கள். சூடம் காட்டுவார்கள். காவடி தூக்குவார்கள். அலகு குத்துவார்கள். நடுநடுவே கதாநாயகனும் நாயகியும் கூட்டத்தில் தென்படுவார்கள். இப்படி ஒரு படச்சுருளை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்தார் இயக்குனர் சங்கர். சொன்ன வேலையைச் செய்வார் என்ற நம்பிக்கை.

மெல்லிசை மன்னரும் மலைக்கவில்லை. கவியரசர் கண்ணதாசனின் தமிழ் உதவிக்கு இருக்கையில் என்ன கவலை? பாடல் பிறந்தது. மெட்டும் போட்டாகி விட்டது. ஆனால் யார் பாடுவது? பத்தரை நிமிடங்களுக்கு? சரி. ஒருவர் பாடினால் அலுத்து விட்டால்? அறுமுகனைப் போற்றி ஆறுபேர் பாடினால்? ஆம். மெல்லிசை மன்னர், டீ.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரம்ணியம்மாள், இசையரசி பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி ஆகிய அறுவரும் பாடிப் பதிவானது பாடல். படச்சுருளுக்கு மிகப் பொருத்தமாக.

வருவான் வடிவேலன் என்ற திரைப்படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. மக்களின் பேராதரவைப் பெற்று அந்தத் திரைப்படம் பெருவெற்றியைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார். இயல்பிலேயே மெல்லிசை மன்னர் முருகபக்தராம். இந்தப் பாடலில் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.



சீர்காழி கோவிந்தராஜன்
பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்
தன்னை மறந்திருப்போம்

பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம்


டி.எம்.சௌந்தரராஜன்
சேவற்கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பரும் வேல் குத்தி ஆடிடும் மோகத்தைத் தந்தவன்டி
தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே
அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்


எல்.ஆர்.ஈசுவரி
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
அரோகரா அரோகரா
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி

சீர்காழி:
முருகா முருகா முருகா முருகா
எல்.ஆர்.ஈசுவரி
கையளவு வேலைக்கூட கன்னத்திலே செருகி
எங்கள் கந்தன் பேரை மனதிலெண்ணி கசிந்து கண்ணீர் பெருகி

டி.எம்.சௌந்தராஜன்
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி............முருகா
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி
டி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்து

வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா

பி.சுசீலா
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப்பூசம் நடத்துகிறோமய்யா
வானத்தில் உன்னொளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு


டி.எம்.சௌந்தரராஜன்
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பொன்னாய்க் குதிப்பதும் முருகனடி
மலைப்புகழாய்க் குவிப்பதும் முருகனடி
பி.சுசீலா
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணையைப் பொழிவதும் முருகனடி
சீர்காழி கோவிந்தராஜன்

தண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி


மெல்லிசை மன்னர்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
எங்கள் பரம்பரை காத்திட நின்று விட்டான்
ஆனந்த தரிசனம் காணுகிறோம்
அவன் அழகிய தேரினை வணங்குகிறோம்
ஞாலத்து தேசிகன் மார்பினிலே
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்
நவமணி மாலைகள் சூட்டுகிறோம்


அனைவரும்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா


பெங்களூர் ரமணியம்மாள்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் (கோடிக் கணக்கில்
வாடிய பயிரை தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் (வாடிய பயிரைத்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
இடம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா (இடம் தெரியாமல்
வரம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே (வரம் தெரியாமல்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா


பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பெங்களூர்: முருகா சண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா
சீர்காழி: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
பி.சுசீலா: கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா
அனைவரும்: திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மைக் காவலா
பெங்களூர்: தெய்வானைக் காவலா
அனைவரும்:
வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா

இந்த அருமையான பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் விரும்பினேன். ஆனால் பாடலின் நீளம் அதை வலையேற்ற விடாமல் தடுக்கிறது. ஆனால் பாடலை மெயிலில் அனுப்ப முடியும். பாடலைக் கேட்க விரும்புகிறவர்கள் gragavan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடலனுப்பவும். பாடலை நான் அனுப்புகிறேன்.

இந்தப் பாடலுக்குப் படமும் போட்டால் நன்றாக இருக்குமே! அதுவும் நான் இந்தக் கோயிலுக்குச் சென்ற பொழுது எடுத்த படங்களை இங்கே கொடுத்தால்! இதோ கொடுக்கிறேன். பத்துமலை முருகன் கோயிலில் நான் சமீபத்தில் அறுபடை வீடுகளில் கூட அனுபவிக்காத ஒரு ஆனந்த அனுபவத்தைக் கண்டேன். மலேசியத் தமிழர்களே இந்தத் திருக்கோயிலை இப்படியே சிறப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.

பத்துமலை முருகனின் பேருருவம். அளவிட முடியாத அருளுடையானுக்கு மனிதர்களால் அளவிட முடிந்த உயரத்தில் திருவுருவம்.


அதே முருகன். ஆனால் பின்புலத்தில் மலையோடும்...முன்புலத்தில் மக்களோடும் மண்டபங்களோடும்.


திருக்கோயிலுக்கும் வாழ்விற்கும் உயர்த்தி விடும் படிக்கட்டுகள்.


வரையேறி வருவோரை வரவேற்கும் வடிவேலன்.


அதே வரவேற்பு. ஆனால் குகையின் முகப்புத் தோற்றத்தோடு.


பத்துமலை முருகன் குடிகொண்ட கருவரை. இங்கு புகைப்படும் எடுப்பது அனுமதிக்கப்படுகிறது. அது சுற்றுலாத்தலம். அதனால் அப்படி என்று சொல்கிறவர்கள் பண்டரீபுரத்திலும் படமெடுக்க அனுமதிக்கப்படுகிறது என்ற தகவலைச் சொல்ல விரும்புகிறேன்.


பத்துமலை முருகன் தங்கப்பத்து அலங்காரத்தோடு.


உள்ளே எழுந்திருக்கும் மற்றொரு முருகன் கோயில்.


வள்ளி தெய்வானையுடம் அமர் சோலை. அது மலேசியப் பத்துமலை எனும் சோலை.


அன்புடன்,
கோ.இராகவன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP